சனி, 30 மே, 2020

குரு அர்ஜன்சிங் பலிதான தினம் - மே 30


சீக்கியர்களின் ஐந்தாவது குருவும் தர்மத்திற்காக பலியான முதல் குருவுமான குரு அர்ஜன்சிங் அவர்களின் பலிதான தினம் இன்று. சீக்கியர்களின் மத நம்பிக்கைப்படி அவர்கள் குரு பரம்பரை குரு நானக்கில் தொடங்கி குரு கோவிந்த் சிம்மன் வரை பத்து குருக்களும் அதன் பிறகு குரு கிரந்த சாஹப் புத்தகம் குருவாகவும் மதித்து வணங்கப்படுகிறது.

அந்த குருபரம்பரையின் ஐந்தாவது குரு அர்ஜன் சிங். அவர் சீக்கியர்களின் நான்காவது குருவான குரு ராமதாஸின் இளைய மகனாக 1563ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் நாள் பிறந்தார். இவரது தாயார் மூன்றாவது குருவான குரு அமர்தாஸின் மகள். குரு ராமதாஸின் மறைவிற்குப் பிறகு 1581ஆம் ஆண்டு குரு அர்ஜன்சிங் சீக்கியர்களின் குருவாக நியமிக்கப்பட்டார்.

இவரது வழிகாட்டலில் பல்வேறு மக்கள் சீக்கிய மதத்தில் இணைந்தனர். சொல்லப்போனால் அன்று அது ஒரு தனி மதமாகவே இல்லை. அது ஹிந்து மதத்தின் ஒரு பிரிவாகவே இருந்தது. குரு அர்ஜன்சிங்கின் பெருமை வடநாடு முழுவதும் பரவியது.

குரு அர்ஜன்சிங் சீக்கிய மத பாடல்களைத் தொகுத்தார், அது ஆதி கிரந்தம் என்று அழைக்கப்பட்டது. அந்த நூலின் விரிவுபடுத்தப்பட்ட வடிவமே குரு கிரந்த சாஹப் என்று இன்று அழைக்கப்படுகிறது. அமிர்தஸர் நகரில் உள்ள தர்பார் சாஹப் என்று அழைக்கப்படும் பொற்கோவிலின் ஆரம்ப வடிவம் இவராலே உருவாக்கப்பட்டது.

மசந்த் எனப்படும் சீக்கிய குருக்களின் நேரடி பிரதிநிதிகளின் நியமனத்தை குரு அர்ஜன்சிங் ஒழுங்கு படுத்தினார். அப்படி நியமிக்கப்பட்டவர்கள் சீக்கியர்களின் நன்கொடைகளை வசூலித்து அதனைக் கொண்டு புது குருத்துவாராக்களை உருவாக்கவும், லங்கர் என்னும் உணவு வழங்கும் நிறுவனங்களை அவர்களே நிர்வகித்தனர். சீக்கியர்கள் தங்கள் வருமானத்தில் பத்து சதவிகிதத்தை வறியவர்களுக்கு அளிக்கவேண்டும் என்று குரு அர்ஜன் வலியுறுத்தினார்.

சீக்கியர்கள் ஒரு வலிமையான குழுவாக உருவானது முகலாய மன்னர் ஜஹாங்கீரின் கண்ணை உறுத்தியது. அவர் குரு அர்ஜன்சிங்கை கைது செய்து, அவரை இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறு கூறினார். அதனை குரு சந்தேகமே இல்லாமல் நிராகரித்தார்.

அதனால் முகலாய மன்னர் ஜஹாங்கீரின் ஆணையின்படி குரு அர்ஜன்சிங் சித்திரவதைக்கு உள்ளானார். கொதிக்கக் காச்சிய இரும்பு தகட்டில் அமரவைக்கப்பட்டு, மணலை சூடாக்கி அவர் மீது கொட்டி, பின்னர் கொதிக்கும் தண்ணீரை அவர்மீது கொட்டப்பட்டது. 1606ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் நாள் ராவி நதியில் குளிக்கச் சென்ற குரு அர்ஜன்சிங் நதியில் முங்கி தனது உயிரை தியாகம் செய்தார்.

அவருக்கு பின் அவரது மகன் குரு ஹர்கோபிந்த் சீக்கியர்களின் ஆறாவது குருவாக நியமிக்கப்பட்டார். குரு அர்ஜன்சிங்கின் பலிதானதால் சீக்கியர்கள் போராட்ட குணம் கொண்ட பிரிவாக உருவானார்கள்.

இந்த நாட்டின் தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக உயிர் கொடுத்த தியாகிகளின் தியாகத்தை மனதில் நிறுத்துவோம். தர்மத்தை காக்க நமது பங்களிப்பை அளிப்போம்.