சனி, 28 டிசம்பர், 2019

ஒரு கனவின் கதை திருபாய் அம்பானி பிறந்தநாள் - டிசம்பர் 28

ஒரு நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு நிறுவனத்திற்கு என்ன பங்கு இருக்க முடியும் ? அரசாங்கங்களை உருவாக்கவும், கவிழ்க்கவும், அரசின் கொள்கை முடிவுகளை தங்களுக்குச் சாதகமாக உருவாக்கவும், கொள்கை முடிவு எடுக்கவேண்டிய அரசு அதிகாரிகளை வளைக்கவும், தங்களுக்கு தேவையான அதிகாரிகளை தேவைப்படும் பதவியில் அமர்த்தவும் ஒரு நிறுவனத்தால் முடியுமா ?


ஒருபுறம் பார்த்தால் மிக எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, ஆரம்பகாலத்தில் எதோ ஒரு வெளிநாட்டில் ஒரு சாதாரண வேலையில் தனது வாழ்க்கையைத் தொடங்கி, நூல் மற்றும் துணி விற்பனையில் நுழைந்து, தனது ஆயுள்காலத்தில் ஒரு மகத்தான வணிகசாம்ராஜ்யத்தைக் கட்டிக் காட்டிய தனிமனிதன்

மறுபுறமோ, எந்தவிதமான  நெறிமுறைகளுக்கும் அடங்காது, எல்லாச் சட்டத்தையும் தனக்கு சாதகமாக வளைத்த பேராசை படைத்த, தனக்குப் போட்டியாக வருவார்கள் என்று தோன்றிய பிற  தொழில் செய்பவர்களை அரசின் துணையோடு மீள முடியாத சிக்கல்களில் தள்ளிய இரக்கமற்ற ஒருவன்.

மற்றொருபுறம், மிகப் பெரிய அளவில்  இந்திய மத்தியத்தர மக்களை பங்குச்சந்தையில் பணம் உருவாக்க முடியும் என்று காட்டிய ஆசான்.

இப்படி பார்ப்பவர் கோணத்திற்கு ஏற்ப அமைந்த வாழ்வின் கலவைதான் திருபாய் அம்பானி. 1932ஆம் ஆண்டு பிறந்து எழுபது ஆண்டுகள் வாழ்ந்து 2002இல் மரணமடைந்த திருபாய் அம்பானியின் மிக முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் அவரது வாழ்க்கையின்  கடைசி முப்பது ஆண்டுகளில் நடந்தன, அந்தக் காலகட்டத்தில் அவர் விஸ்வரூபம் எடுத்தார்.

திருபாய் என்று அன்புடன் அழைக்கப்படும், தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி 28.12.1932 அன்று குஜராத் மாநிலம் சோர்வாத் அருகேயுள்ள குகாஸ்வாடாவில் 28 டிசம்பர், 1932 அன்று நடுத்தர வர்க்க மோத் குடும்பத்தில் ஹீராசந்த் கோர்தன்பாய் அம்பானிக்கும், ஜமுனாபென்னுக்கும் மகனாய்ப் பிறந்தார்.

ஹீராசந்த் கிராமத்தில் பள்ளி ஆசிரியராய் இருந்தார். 16 வயதானபோது, அம்பானி ஏமனுக்கு சென்று விட்டார். அங்கு 300 ரூபாய் சம்பளத்தில் ஏ.பெஸி & கோ. நிறுவனத்தில் வேலை பார்த்தார். இரண்டு வருடங்களுக்குப் பின், ஏ. பெஸி & கோ. நிறுவனம் ஷெல் தயாரிப்புகளின் விநியோகஸ்தர்களாக ஆகினர். ஏடன் துறைமுகத்தில் நிறுவனத்தின் நிரப்பும் நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்புக்கு திருபாய் அம்பானி உயர்த்தப்பட்டார். சாதாரண மனிதர்கள் படிப்படியாக உயர்ந்து தான் வேலை செய்யும் நிறுவனத்தில் முக்கியப் பதவிக்கு வரவேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் அம்பானியோ தான் இதுபோன்ற ஒரு என்னை சுத்திகரிக்கும் ஆலையை நிறுவவேண்டும் என்று நினைத்தார். கனவு காண்பதில், அதிலும் மிகப் பிரமாண்டமான கனவுகளைக் காண்பதிலும், அதனை நினைவாக்கிக் காட்டுவதிலும் அம்பானியைப் போன்ற ஒருவரை இனம் காணுவது மிகக் கடினம்.

தனது உறவினர் ஒருவரோடு இணைந்து மும்பை நகரில் பாலிஸ்டர் நூல் இறக்குமதியையும், மிளகாய் ஏற்றுமதியையும் செய்யத் தொடங்கிய அம்பானி பின்னர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தைத் தனியாகத் தொடங்கினார். தனது அண்ணன் மகனின் பெயரால் விமல் என்ற துணி விற்பனையை ஆரம்பித்தார் அம்பானி. தனது விற்பனையாளர்கள் லாபம் அடைவதை எப்போதும் உறுதி செய்ததால், அம்பானியின் தொழில் கூட்டாளிகள் இன்றும் ரிலையன்ஸ் குழுமத்தோடு இணைந்தே உள்ளனர்.

துணிக்குப் பிறகு பாலிஸ்டர் இழைகளை உருவாக்குவதிலும், அதன் பின்னர் பாலிஸ்டர் இழையின் மூலப்பொருளான பெட்ரோலியத் துறையிலும் அம்பானி கால் பதித்தார். தான் உருவாக்கும் எந்தப் பொருளுக்கும் இன்றய தேவை என்ன ? அதில் தன் நிறுவனம் எந்த அளவு பங்கு வகிக்க வேண்டும் என்று எண்ணாமல், இன்னும் பத்தாண்டுகள் இருபதாண்டுகள் கழித்து என்ன தேவை இருக்கும் என்று எண்ணி அந்த அளவு தயாரிப்புக்கான ஆலைகளை நிறுவுவது அம்பானியின் பழக்கம். அதனால்தான் ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கிய பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளது.

பெரும் வெற்றி, பெரும் பிரச்சனைகளையும் கொண்டு வருவது வாடிக்கைதான். திருபாய் அம்பானிக்கு பாம்பே டையிங் நிறுவன தலைவர் நூஸி வாடியாவிற்கும் இடையே நடைபெற்ற துணி தயாரிக்கும் துறையில் யார் முதன்மையாக இருப்பார்கள் என்ற யுத்தம் எண்பதுகளில் பெரும் புயலைக் கிளப்பியது. கட்டுமானத்துறையிலும் பொறியியல்துறையிலும் புகழ்பெற்று விளங்கும் எல் அண்ட் டி நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திருபாய் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருபாய் மீது தொடுத்த தாக்குதல்கள் எண்பதுகளில் முக்கியமான செய்திகள்.

எழுபதுகளின் நடுவில் பாரதம் தொழில் செய்ய உகந்த நாடாக இல்லை. சோஷலிச சித்தாந்தம் என்பது ஆளுபவர்களின் விருப்பமாக இருந்தது. வங்கிகள் தொழில்முனைவோருக்கு கடன் வழங்க பல்வேறு இடர்பாடுகள் இருந்த நேரம் அது. எனவே திருபாய் நேரடியாக மக்களிடம் சென்று தனது தொழிலுக்கு பங்குச்சந்தை வழியாக முதலீட்டைத் திரட்டினார். அதற்கு முன்புவரை பங்குகள் பற்றிய ஆர்வம் பொதுமக்களிடம் இல்லாமல் இருந்தது. பங்குகளில் வரும் ஈவுத்தொகை மட்டுமே முதலீட்டாளர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் பங்குகள் தங்கள் மதிப்பில் உயரும், அதனால் லாபம் வரும் என்பதைக் காட்டி பொதுமக்களைப் பங்குச்சந்தைக்கு வரவைத்ததில் திருபாய் அம்பானிக்கு பெரும்பங்கு உண்டு.

1986 ஆம் ஆண்டு திருபாய் அம்பானியை மாரடைப்பு தாக்கியது. அதனால் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வலது கை செயலிழந்து இருந்தார். மீண்டும் 2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாரடைப்பால் பாதிக்கப்ப திருபாய் அம்பானி 2002ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் நாள் காலமானார். சிறு வணிகராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி 75,000 கோடி வியாபாரம் செய்யும் குழுமத்தின் தலைவராக உயர்ந்த திருபாயின் நினைவுக்கு அஞ்சலி செலுத்த அரசியல் தலைவர்கள் உள்பட பொதுமக்கள் பலரும் குவிந்தனர்.

சர்ச்சைகளின் நாயகராகவும் சாதனைகளின் நாயகராகவும் ஒரே நேரத்தில் திகழ்ந்த திருபாய் அம்பானியை விட்டு விட்டு பாரத வரலாற்றின் தொழில் வரலாற்றை எழுத முடியாது என்பதுதான் உண்மை.