திங்கள், 22 டிசம்பர், 2014

4. ஐரோப்பாவும் ஆசியாவும்

நைனிடால் சிறையில் இருந்து ஜவஹர்லால் நேரு தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய Glimpses of World History என்கிற கடிதங்களின் மொழிபெயர்ப்பு. 

                                  ---------------------------------------------------
ஜனவரி 8 - 1931.

எல்லாமே மாறிக்கொண்டுதான் இருக்கின்றது. இந்த மாறுதல்களின் பதிவுதான் வரலாறு. இந்த மாற்றங்கள் குறைவாக இருக்குமானால், வரலாறு என்பதும் சிறியதாகத்தான் இருக்கும். 

நமது பாடத்திட்டத்தில் வரலாறு சரியான முறையில் கற்றுக்கொடுக்கப்படவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். பிறரைப் பற்றி நான் அறியேன், ஆனால் நிச்சயமாக நான் பள்ளியிலும், கல்லூரியிலும் சரியான வரலாற்றைப் படிக்கவில்லை. இந்திய வரலாற்றைப் பற்றியும், இங்கிலாந்து நாட்டைப் பற்றியும் மிகக் குறைவாகவே நான் கற்றுக்கொண்டேன். நான் படித்த குறைவான அளவிலான இந்திய வரலாறும், தவறானதாகவும், திரிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. இந்தியாவைப் பற்றிய எந்தவிதப் புரிதலும் இல்லாத ஆசிரியர்களால் அவை எழுதப் பட்டு இருந்தது. பிற நாடுகளைப் பற்றியும் மிகக் குறைவாகவே நான் படித்து இருந்தேன். கல்லூரியை விட்டு வெளியேறிய பின்னரே நான் சரியான சரித்திரத்தைப் படிக்க ஆரம்பித்தேன் என்றே கூறலாம். நீண்ட எனது சிறைவாசங்கள் நான் படிப்பதற்கு மிக உதவியாக இருந்தது. 

எனது முந்தய கடிதம் ஒன்றில் நான்  உனக்கு இந்தியாவின் மிகப் பழங்கால நாகரீகத்தைப் பற்றியும், திராவிடர்கள் மற்றும் ஆரியர்கள் வருகை பற்றியும் கூறி இருந்தேன். ஆரியர்களுக்கு முந்தய காலம் பற்றி எனக்கு சிறிதளவே தெரியும் என்பதால், அந்தக் காலம் பற்றி நான் கூறமுடியாது. ஆனால் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் மொஹஞ்சதாரோ என்ற இடத்தில ஒரு பழங்கால நாகரீகத்தை அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கண்டுபிடித்து உள்ளனர். எகிப்தில் உள்ளது போல, அங்கே பதப்படுத்தப் பட்ட சடலங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளது. அவற்றின் காலம் ஆரியர்களின் வருகைக்கு முன்னர், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர். அநேகமாக அப்போது ஐரோப்பா இருளில் மூழ்கி இருந்திருக்கும். 

இன்று ஐரோப்பா வலிமையோடு இருக்கிறது, அதன் மக்கள் மற்ற எல்லோரையும் விட நாகரீகமானவர்கள், கலாசாரமானவர்கள் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அவர்கள் ஆசிய மக்கள் அனைவரையும் கீழானவர்கள் என்று எண்ணி, இந்த கண்டத்தில் உள்ள எல்லாவற்றையும் சூறையாடிச் செல்லுகிறார்கள். காலம் தான் எப்படி மாறி உள்ளது ?

உலக வரைபடத்தைப் பார்த்தோமானால், ஐரோப்பா ஆசியா கண்டத்தை ஒட்டிக் கொண்டு இருப்பதைக் காண முடியும்.  காலம் காலமாக ஆசியக் கண்டத்தைச் சார்ந்த மக்கள் அலைகடல் என ஐரோப்பியாவிற்கு படை எடுத்துச் சென்றனர், ஐரோப்பியாவை வென்று, அங்கே தங்கள் நாகரீகத்தை நிலைநாட்டினர். அங்கே நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்தனர் என்றே சொல்லலாம்.

ஆரியர்கள், ஹுனர்கள், மங்கோலியர்கள், துருக்கியர்கள், அரபிக்கள் - இவர்கள் எல்லோரும் ஆசியாவின் எதோ ஒரு மூலையில்  கிளம்பி, ஆசியா மற்றும் ஐரோப்பியா முழுவதும் பரவினர். வெட்டுக்கிளிகள் போல அவர்களை ஆசியாக் கண்டம் உருவாக்கிக் கொண்டு இருந்தது. மிக நீண்ட  காலத்திற்கு ஐரோப்பா ஆசியாவின் காலனி நிலமாகவே இருந்தது. இன்றைய ஐரோப்பியர்கள், அந்த ஆசிய மக்களின் வம்சாவளிதான்.

உலக வரைபடத்தில் ஆசியக் கண்டம் பரந்து விரிந்து கிடக்கிறது. அதனை ஒப்பிடும்போது ஐரோப்பா அளவில் மிகச் சிறியது. ஆனால் (நிலத்தின்) அளவை வைத்து ஒரு  மனிதனையோ அல்லது நாட்டையோ அளவிடுவது என்பது மிகத் தவறான முறை. இன்று, ஐரோப்பா அதன் புகழின் உச்சியில் இருக்கிறது. ஐரோப்பாவின் பல நாடுகள் மிகச் சிறந்த புகழ் பெற்ற அறிவியல் அறிஞர்களை உலகத்திற்கு அளித்து உள்ளது. அவர்களின் கண்டுபிடிப்புகள் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கின்றன.  ஐரோப்பாவின்  அறிஞர்கள், சிந்தனையாளர்கள், இசைவாணர்கள், எழுத்தாளர்கள், நுண்கலை வல்லுனர்களைப் புறக்கணித்துவிட்டு நாம் உலகத்தின் வரலாற்றைப் பேச முடியாது.

அதைப் போலவே நாம் ஆசியாவின் பங்களிப்பையும் மறுக்கமுடியாது. உலகை மாற்றி அமைத்த சிந்தனையாளர்கள் உலகிற்கு ஆசியக் கண்டத்தின் கொடை. இன்று உள்ள மதங்களில் மிகப் பழமையான ஹிந்துமதம் நமது பாரதநாட்டில் தோன்றியது. இன்று ஜப்பான், சைனா, திபேத், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் பின்பற்றப்படும் புத்தமதமும் இந்தியாவில் தோன்றியதுதான். யூத மதமும், கிருஸ்துவமும் ஆசியாவின் மேற்க்குக் கரையில் உள்ள  பாலஸ்தீனத்தில் தோன்றியவை. முகமது நபி அரேபியாவைச் சார்ந்தவர். பார்சிகள் மதமும் இன்றைய ஈரானில்தான் ஆரம்பமானது.

கிருஷ்ணன், கௌதம  புத்தர், மகாவீரர், இயேசு கிறிஸ்து, முகமது நபி, கன்பூசியஸ் என ஆசியாவில் தோன்றிய சிந்தனையாளர்களின் வரிசை மிக நீண்ட ஓன்று. இதைப் போலவே செயல்வீரர்கள் பலரும் ஆசியக் கண்டத்தில் தோன்றி இருக்கிறார்கள்.

காலம்தான் எப்படி மாறி இருக்கிறது. இப்போது அது நம் கண் முன்னாலே மாறிக்கொண்டு இருக்கிறது. பொதுவாக வரலாறு மெதுவாகவே நடை போடும். ஆனால் இன்றோ அது மிக விரைவாக மாற்றம் அடைகிறது.

தனது நீண்ட  உறக்கத்தில் இருந்து ஆசியா விழித்துக் கொண்டு விட்டது. உலகம் முழுவதும் ஆசியாவையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருக்கிறது. உலகத்திற்கான தனது பங்களிப்பை ஆசியா தரும் காலம் நெருங்கி விட்டது என்பதை உலகம் புரிந்து கொண்டு விட்டது.