புதன், 9 ஜூலை, 2025

ஜூலை 9 - அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் - நிறுவன நாள்


நமது தேசம் அன்னியர் ஆட்சியின் கீழ் இருந்த காரணத்தால் இந்த தேசத்தின் மாணவர்களுக்கு நமது பெருமையும் புகழும் மறந்தே போய்விட்டன. மீண்டும் இந்த பாரதம் தேசம் உலகின் குருவாக விளங்க வேண்டும் எனில் இன்றைய மாணவர்கள் தேச பக்தியுடனும் தேச ஒற்றுமையுடனும் விளங்க வேண்டும். அதற்கான ஏற்பாடு அரசாங்கத்தின் சார்பில் செய்யப்படவில்லை.1948 -ம் ஆண்டு முதல் மாணவர்களிடத்தில் தேசபக்தியை வளர்க்க தேவையான முயற்சிகளை சில தலைவர்கள் முன்னெடுத்தனர். அந்த வகையில் உலகின் மிகப்பெரிய மாணவர் இயக்கமான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ பி வி பி) ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும் 1949 ஜூலை 9இல் தான் முறைப்படி பதிவு செய்யப்பட்டது . அந்த ஆண்டே நாடு முழுவதும் இந்த இயக்கம் பரவியது.

1948 -ம் ஆண்டு அக்டோபர் முதலே தமிழகத்தில் இந்த இயக்கத்தின் பணிகள் துவக்கப்பட்டது. இன்று இந்த இயக்கம் உலகின் மிகப்பெரிய மாணவர் இயக்கமாக திகழ்கிறது. அறிவு , ஒழுக்கம், ஒற்றுமை - என்ற தாரக மந்திரம் ஏபிவிபி-ன் கொள்கை. சுவாமி விவேகானந்தர் கூறிய ஆன்மிகம் மற்றும் தேசபக்தி சிந்தனையுடன் செயல்பட்டு வரும் இயக்கம் ஏபிவிபி. 3 மில்லியன் எண்ணிக்கையை விட அதிகமான உறுப்பினர்களை கொண்டுள்ள ஒரே பெரிய மாணவர் இயக்கம் ஏ பி வி பி தான். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 9-ஆம் நாள் ஏபிவிபி நிறுவப்பட்ட நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தேசிய மாணவர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த இயக்கம் ஆரம்பித்து 71 வருடங்கள் ஆகிவிட்டன. "மாணவர் சக்தியே தேசிய சக்தி" என்னும் பிரதான முழக்கத்தோடு கடந்த 71 வருடங்களாக வெற்றி நடை போட்டு வருகிறது ஏபிவிபி. தேசிய புனரமைப்பு மற்றும் தேசத்தை கட்டமைத்தல் இவைதான் ஏ பி வி பி-யின் லட்சியம். இந்த இயக்கத்தின் ஓங்கி ஒலிக்கும் சுலோகம் "இன்றைய மாணவர்கள் இன்றைய குடிமகன்கள்". இதனடிப்படையில் உயர்கல்வித் துறையில் குறிப்பாக கல்லூரி மாணவர்களிடத்தில் தேசபக்தியை வளர்த்து வருகிறது. இதன் மூலம் நாட்டிற்கு தேவையான தேசப்பற்றுள்ள இளைஞர் சக்தியை உருவாக்கி வருகிறது. தேச பக்தி என்பது வெறும் பேச்சில் மட்டும் அல்ல செயலிலும் இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப இந்த மாணவர் இயக்கம் பல்வேறு சமுதாயப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. ஏபிவிபி-ன் களம் கல்லூரி வளாகங்கள் தான். இதன் செயல்பாட்டாளர்கள் மாணவர்கள் மற்றும் வழிநடத்துபவர்கள் ஆசிரியர்கள்.

பிரிவினைவாத சக்திகள் இந்த தேசத்துக்கு எதிராக செயல்படும் போதெல்லாம் அங்கு ஏபிவிபி வலிமையோடு எதிர்த்துப் போராடி வந்துள்ளது. "இந்த தேசம் ஒன்றுபட்ட தேசம்" "இந்த தேசம் நம் அனைவருக்கும் தாய்" -இத்தகைய உன்னதமான லட்சியத்தோடு தேசிய உணர்வை மாணவர்களின் மனதில் விதைத்து வருகிறது. இதன் மூலம் இந்த பாரத தேசத்தை நேசிக்கின்ற போற்றுகின்ற மதிக்கின்ற நல்ல குடிமகன்களை ஏபிவிபி உருவாக்கித் தந்து கொண்டிருக்கிறது. தேசபக்தி உள்ள ஒவ்வொரு ஏபிவிபி மாணவனும் இந்த தேசத்திற்காக தியாகம் செய்ய தயாராக இருப்பான். தனது வாழ்நாளில் தனது நேரத்தை தேச வளர்ச்சிக்காக ஒதுக்கித்தர வேண்டும் தியாகம் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த உணர்வு ஒவ்வொரு ஏபிவிபி மாணவன் இடத்திலும் காணமுடியும். கல்வி நிலையங்களில் மாணவர்களுக்காக ஏபிவிபி பரிந்து பேசம் மாணவர் நலனுக்காக போராடவும் செய்யும்.

ஏபிவிபி எந்த அரசியல் கட்சியையும் சார்ந்து இல்லை. இது ஒரு தன்னாட்சி இயக்கம். அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஆசிரியர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை கொண்ட இது ஒரு கல்வி குடும்பம். தொழில்நுட்ப மாணவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள், சட்டக் கல்வி மாணவர்கள் , ஆயுர்வேத மருத்துவ மாணவர்கள் போன்ற துறவாரியான மாணவர்களை ஒருங்கிணைக்க ஏபிவிபி-ல் பல்வேறு தளங்கள் உள்ளன. IIT போன்ற கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்களுக்காக THINKINDIA, சட்ட கல்லூரி மாணவர்களுக்காக FOTLAW, மருத்துவ கல்லூரி மாணவர்களுக்காக MEDIVISION, ஆயுர்வேத கல்லூரி மாணவர்களுக்காக JINGASA,தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்காக SETINDIA போன்ற பேரவைகள் (FORUM) மூலம் செயல்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்கள் தனது சமுதாயத்தில் உள்ள மக்களின் வாழ்வை நேரடியாக உணர வேண்டும் என்ற நோக்கத்தில் SOCIAL INTERNSHIP என்ற பெயரில் கிராம மற்றும் ஏழைமக்களை சந்தித்து அவர்களோடு உரையாடி அவர்களின் வாழ்வை பதிவு செய்யும் பயிற்சிகள் கோடை விடுமுறையில் நடத்த படுகின்றன. மாணவர்களின் படைப்பாக்கத் திறன்களை வெளிக் கொண்டு வந்து நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் TECHNICAL EXPO நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் தேசம் முழுக்க ஏபிவிபி நடத்தி வருகிறது. இதுவரை எண்ணற்ற சமுதாய தலைவர்களை, தேசிய அரசியல் தலைவர்களை ஏபிவிபி நாட்டிற்கு தந்துள்ளது. அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வெகுஜன இயக்கமாக ஏபிவிபி திகழ்கிறது என்றல் மிகை அல்ல.

தேசத்தை நேசிக்கும் மாணவர் படையை உருவாக்க ஏபிவிபி இயக்கத்தை நாம் அனைவரும் ஆதரிப்போம். தேசிய சக்தியை வலுப்படுத்துவோம்.

ஜெய் ஹிந்த் 

செவ்வாய், 8 ஜூலை, 2025

ஜூலை 8 - முன்னாள் பிரதமர் சந்திரசேகர் நினைவு தினம்

பாரதநாட்டின் எட்டாவது பிரதமராக இருந்த திரு சந்திரசேகரின் நினைவுநாள் இன்று.

சந்திரசேகரைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், எண்பதுகளின் இறுதியில் இருந்த அரசியல் நிலைமை பற்றி நாம் சற்றே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். 1984ஆம் ஆண்டு இறுதியில் அன்றைய பிரதமர் இந்திரா தனது மெய்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடெங்கும் வீசிய அனுதாப அலையினால் ராஜிவ் வரலாறு காணாத வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்தார். அவர் ஆட்சிக்காலத்தில் ராணுவத்திற்கு பீரங்கி வாங்கிய வகையில் சில அரசியல்வாதிகளுக்கு போபோர்ஸ் நிறுவனம் லஞ்சம் கொடுத்தது என்று சுவீடன் நாட்டு வானொலியில் செய்தி வெளியானது. சந்தேகத்தின் நிழல் ராஜீவின் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் படிந்தது. அதனைத் தொடர்ந்து 1989ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அதிகப்படியான இடங்களைப் பெற்று இருந்தாலும் ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கவில்லை.

ஜனதாதளம் கட்சிக்கு 143 இடங்கள் கிடைத்து இருந்தது. பாரதிய ஜனதா கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் அமைச்சரவையில் சேராமல், வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முன்வர ஜனதாதள கட்சிக்கு ஆட்சி அமைக்க குடியரசுத்தலைவர் அழைப்பு விடுத்தார். பிரதமராகும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்று சந்திரசேகர் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார். பலர் வி பி சிங்கை பிரதமராக வேண்டும் என்று கூறினர். சமரச ஏற்பாடாக தேவிலால் பெயர் முன்மொழியப்பட்டது. ஆனால் திடீர் என்று தேவிலால் வி பி சிங்கை பிரதமராக அறிவித்தார். தான் ஏமாற்றப்பட்டதாக சந்திரசேகர் நினைக்கத் தொடங்கினார்.

தனது பலத்தைக் காட்ட தேவிலால் டெல்லியில் ஒரு விவசாயிகள் ஊர்வலத்திற்கு அழைப்பு விடுத்தார். அதனை எதிர்கொள்ள வி பி சிங் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அரசு செயல்படுத்தும் என்று அறிவித்தார். இட ஒதுக்கீட்டை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சி வெடித்தது. இதற்கிடையே அயோத்தி நகரில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி குஜராத் மாநிலத்தின் சோமநாதபுரம் நகரில் இருந்து ரதயாத்திரையைத் தொடங்கினார். அந்த யாத்திரையை பிஹார் மாநிலத்தில் தடை செய்து அத்வானியையும் அன்றய பிஹார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கைது செய்தார். இதனைத் தொடர்ந்து ஜனதாதள அரசுக்கு அழைத்துவந்த ஆதரவை பாஜக விலக்கிக்கொண்டது. வி பி சிங் பதவியில் இருந்து விலகினார்.
ஒரு வருடத்திற்கும் குறைவாகவே வி பி சிங் ஆட்சி செய்ய, இன்னொரு தேர்தலுக்கு நாடு தயாராகவில்லை ஜனதாதள கட்சியின் ஒரு பிரிவு உறுப்பினர்களின் ஆதரவோடு, காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவளிக்க சந்திரசேகர் பாரத நாட்டின் எட்டாவது பிரதமராகப் பதவி ஏற்றார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா மாவட்டத்தில்  ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் 1927ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் நாள் பிறந்தவர் திரு சந்திரசேகர். அரசியல் அறிவியல் துறையில் தனது முதுகலைப் பட்டத்தை அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பெற்ற சந்திரசேகர், படிக்கும் காலத்திலேயே அரசியல் ஈடுபாட்டோடு இருந்தார். புகழ்பெற்ற சோசலிஸ்ட் தலைவர்களான  ராம் மனோகர் லோஹியா மற்றும் ஆச்சாரிய நரேந்திர தேவ் ஆகியோரின் தலைமையில் செயல்பட்டார்.

பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராகவும் பின்னர் அதே கட்சியின் உத்திரப்பிரதேச மாநில பொதுச்செயலாளராகவும் பணியாற்றினார். 1962ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். 1965ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1967ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிப்படையில் பொதுவுடைமைவாதியான சந்திரசேகர் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்க்காக குரல் கொடுத்தார். சொத்துக்கள் சில தனியார் கைகளில் குவிவதை எதிர்த்த காரணத்தால் பலநேரங்களில் அவர் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையே எதிர்க்க வேண்டி இருந்தது.

சந்திரசேகரும் அவரோடு ஒத்த கருத்துள்ள பெரோஸ் காந்தி, சத்யேந்திர நாராயண் சின்ஹா, மோகன் தாரியா, ராம்தன் ஆகியோர் இளம் துருக்கியர்கள் என்று அழைக்கப் பட்டனர். தனது எண்ணங்களை வெளிப்படுத்த சந்திரசேகர் Young Indian என்ற வாரப் பத்திரிகையை தொடங்கி அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார். பொதுவாழ்வில் இருந்து விலகி இருந்த ஜெயப்ரகாஷ் நாராயணன் அரசியலில் ஊழல் அதிகமாகி விட்டது, அதனை எதிர்க்க வேண்டும் என்று நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்கினார். லட்சியவாதியான சந்திரசேகர் அந்தப் போராட்டத்தை ஆதரித்தார்.. போராட்டத்தை எதிர்கொள்ள இந்திரா நெருக்கடி நிலையைப் பிரகடம் செய்தார். ஆளும் கட்சியில் இருந்தாலும் சந்திரசேகரும் கைது செய்யப்பட்டார்.

நெருக்கடி நிலையைத் தொடர்ந்து உருவான ஜனதா கட்சிக்கு சந்திரசேகர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஆனால் முழுமையான ஆட்சிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஜனதா ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் 1980ஆம் ஆண்டு இந்திரா பிரதமரானார். இந்திராவின் மறைவை அடுத்து நடந்த பொது தேர்தலில் அநேகமாக எல்லா எதிர்க்கட்சிகளும் தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர் சந்திரசேகர் தலைமையிலான ஜனதா கட்சி, மற்றைய சோசலிச கட்சிகளோடு இணைத்து ஜனதாதள  உருவானது. 1989ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனதா தளம் ஆட்சி அமைத்தது.

சந்திரசேகர் ஆட்சியில் இருந்த போது நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தது. நாட்டின் மதிப்பீடு பொருளாதார தர நிறுவங்களால் குறைத்து மதிப்பிடப்பட்டது. இறக்குமதியை சமாளிக்க நாட்டின் தங்கத்தை அடமானம் வைக்கும் கடினமான முடிவை சந்திரசேகர் எடுத்தார். அடுத்த பொதுத்தேர்தலை சந்திக்கலாம் என்று தீர்மானித்த ராஜிவ் ஹரியானா காவல்துறை தன்னை வேவு பார்ப்பதாக கூறி சந்திரசேகர் அரசுக்கு அளித்தது வந்த ஆதரவை விலகிக்கொண்டார். நாடு அடுத்த தேர்தலுக்கு தயாரானது. தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த ராஜிவ் தமிழ்நாட்டில் மனித வெடிகுண்டால் பலியானார். அந்த தேர்தலில் அதிகப்படியான இடங்களைப் பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க, நரசிம்மராவ் பிரதமரானார்.

1977, 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து பாலியா நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான சந்திரசேகர் 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் நாள் காலமானார்.

லட்சியத்தில் உறுதியும், கொள்கையில் பிடிப்பும், நேர்மையும் கொண்ட சந்திரசேகர் போன்ற தலைவர்களின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கட்டும். 

திங்கள், 7 ஜூலை, 2025

ஜூலை 7 - கார்கில் நாயகன் கேப்டன் விக்ரம் பத்ரா பலிதான தினம்


போர்முனையில் வெற்றி பெற்று  மூவர்ணக்கொடியை ஏற்றிவிட்டு வருவேன்,  அல்லது மூவர்ணக்கொடி சுற்றிய உடலாக வருவேன்,  எப்படியானாலும் நான் நிச்சயமாக வருவேன். 

எப்போது திரும்பி வருவீர்கள் என்ற கேள்விக்கு அநேகமாக ராணுவத்தில் பணிபுரியும் எல்லா வீரர்களும் கூறும் பதில் இதுவாகத்தான் இருக்கும். இதைத்தான் கார்கில் போர்முனைக்கு அழைப்பு வந்த நேரத்தில் கேப்டன் விக்ரம் பத்ராவும் சொன்னார். கார்கில் போரின் வெற்றிக்கு முக்கியமான காரணமான அந்த வீரனின் பலிதான நாள் இன்று.

1974 ஆம் ஆண்டு ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள பலம்பூர் என்ற நகரில் வசித்துவந்த கிரிதர் லால் பத்ரா - கமல் பத்ரா தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர் விக்ரம் பத்ரா. பள்ளியிறுதி வரை பலம்பூர் நகரில் படித்த விக்ரம் பல்வேறு விளையாட்டுகளிலும், கராத்தே போன்ற பாதுகாப்பு முறைகளிலும் சிறந்து விளங்கினார்.

சண்டிகர் நகரில் உள்ள DAV கல்லூரியில் இளங்கலை மருத்துவ அறிவியல் பட்டப்படிப்பு படிக்க சேர்ந்த விக்ரம் பத்ரா அங்கே தேசிய மாணவர் படையில் தன்னை இணைத்துக் கொண்டார். 1994ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் அவர் பங்கேற்றார். கல்லூரியில் படிக்கும் போது ராணுவத்தில் பணியாற்றுவதே தனது இலக்கு என்று முடிவு செய்தார். சண்டிகர் நகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை படிப்பில் சேர்ந்த விக்ரம் ராணுவத்தில் இணைவதற்கான தேர்வுகளை எழுதத் தொடங்கினார். 1996ஆம் ஆண்டு ராணுவத்திற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று டெஹ்ராடூன் நகரில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் சேர்ந்தார்.

ராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த விக்ரம், தரைப்படையைச் சார்ந்த ஜம்மு காஷ்மீர் துப்பாக்கிப் பிரிவில்  லெப்டினண்ட்டாகப்  பணியாற்றத் தொடங்கினார். அப்போது கூடுதல் பயிற்சிக்காக மத்தியப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள பயிற்சி நிலையங்களுக்கு அனுப்பப்பட்டார். தீவிரவாதிகள் அதிகமுள்ள காஷ்மீரின் பாராமுல்லா பகுதிகளில் அவர் பணியாற்றிக்கொண்டு இருந்தார்.
குளிர்காலத்தைப் பயன்படுத்தி இமயத்தின் சிகரங்களை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டது. பிடிபட்ட இடங்களை மீட்க இந்திய ராணுவம் களத்தில் இறங்கியது. இருபதாம் நூற்றாண்டின் இறுதி வருடங்களில் இந்தியர்களின் வீரமும் தியாகமும் கார்கில் போரில் உலகமெங்கும் தெரிய வந்தது. விடுமுறையில் இருந்த ராணுவ வீரர்கள் விடுமுறையை ரத்து செய்து உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. அப்படி வந்தவர்களில்  விக்ரம் பத்ராவும் ஒருவர். எப்போது திரும்பி வருவாய் என்று அவரின் நண்பர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்தான் இந்தக் கட்டுரையின் ஆரம்ப வரிகள்.  “போர்முனையில் வெற்றி பெற்று  மூவர்ணக்கொடியை ஏற்றிவிட்டு வருவேன், அல்லது மூவர்ணக்கொடி சுற்றிய உடலாக வருவேன், எப்படியானாலும் நான் நிச்சயமாக வருவேன்."

1999ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் நாள் 5140 என்கிற சிகரத்தை மீட்டெடுக்க விக்ரம் பத்ராவிற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. மலை உச்சியில் இருக்கும் எதிரியை மலையின் மீதேறி தாக்கி வெற்றி கொள்வது என்பது சுலபமான வேலை அல்ல. ஆனால் இந்தத் தடைகள் எல்லாம் வீரர்களுக்கு இல்லை. எந்த விதமான உயிரிழப்பும் இல்லாமல் விக்ரம் பத்ரா அந்த சிகரத்தை மீட்டெடுத்தார். " யே தில் மாங்னே மோர்" பெப்சி குளிர்பானத்தின் விளம்பர வரி இது. இன்னும் அதிகமான போர்க்களங்கள், இன்னும் அதிகமான வெற்றிகள், என் மனம் விரும்புவது அதைத்தான் என்று இந்த மகத்தான வெற்றிக்குப் பிறகு விக்ரம் கூறினார். மிக முக்கியமான வெற்றியை ஈட்டித் தந்ததைப் பாராட்டும் விதமாக விக்ரம் பத்ரா இந்திய ராணுவத்தின் கேப்டன் பதவிக்கு உயர்வு செய்யப்பட்டார்.

17,000 அடி உயரமுள்ள அநேகமாக செங்குத்தான 4875 என்னும் மலை சிகரத்தைக் கைப்பற்ற விக்ரமின் அடுத்த முயற்சி தொடங்கியது. 16,000 அடி உயரத்தில் எதிரிகள், முழுவதும் பனி மூடிய மலை. இரண்டு பக்கமும் குண்டுகள் வெடிக்க விக்ரமின் படை முன்னேறியது. குண்டடி பட்ட இந்தியப் படை வீரரை மீட்க முன்வந்த சுபேதார் ரகுநாத் சிங்கை தடுத்து நிறுத்தி உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது, மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள், நான் செல்கிறேன் என்று முன்னேறி நேருக்கு நேரான சண்டையில் எதிரிகளை கொன்று இமயத்தின் உச்சியில் இந்தியை கொடியை விக்ரம் பறக்கவிட்டார். ஆனால் இந்தக் கைகலப்பில் நெஞ்சில் குண்டு பாய்ந்து அந்த வீரர் மரணமடைந்தார்.

எந்தக் களத்திலும் நாடு முதலில், எனது சக பணியாளர்கள் அடுத்தது, கடைசியாகத்தான் எனது பாதுகாப்பு" பதவியேற்கும் நேரத்தில் ராணுவ அதிகாரிகள் எடுக்கும் உறுதிமொழி இது. அந்த உறுதிமொழியை தனது உயிரை கொடுத்து விக்ரம் உண்மையாக்கினார். அவர் கைப்பற்றிய 4875 என்கிற சிகரம் இன்று விக்ரம் பத்ரா சிகரம் என்று அழைக்கப்படுகிறது.
கேப்டன் விக்ரம் பத்ராவின் தியாகத்தைப் போற்றும் வகையில் பாரதத்தின் மிக உயரிய ராணுவ விருதான பரம வீர் சக்ரா விருது அவருக்கு அளிக்கப்பட்டது. டெஹ்ராடூனில் உள்ள ராணுவ பயிற்சி முகாமின் உணவருந்தும் கூடத்திற்கு கேப்டன் விக்ரம் பத்ராவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வீரமும், துணிச்சலும் அஞ்சா நெஞ்சமும் கொண்ட விக்ரம் தனது மனதை தன்னோடு கல்லூரியில் படித்த டிம்பிள் சீமா என்ற பெண்ணிடம் பறிகொடுத்தார். அந்த காதல் கனிந்து திருமணத்தில் முடியவில்லை, அதற்குள்ளாகவே கார்கில் போர் தொடங்கி அதில் விக்ரம் வீரமரணம் அடைந்து விட்டார். ஆனால் இன்று வரை டிம்பிள் திருமணம் செய்து கொள்ளாமல் விக்ரமின் நினைவோடு வாழ்ந்து வருகிறார்.

இன்று நாம் பாதுகாப்பாக வாழ்கிறோம் என்றால் அதற்கு விக்ரம் போன்ற வீரர்களும், அந்த வீரர்களின் குடும்பத்தினரும்தான் காரணம் என்பதை நினைவில் கொள்வோம்.

எங்கள் மண்ணில் உரிமை கோரி உலகனைத்தும் சூழினும் 
ஒரு துளியும் இடம் கொடோம் ஒரு பிடியும் மண் கொடோம் 
ஒரு குழந்தை உள்ளவரை போர்க்கொடி பறந்திடும். 

ஞாயிறு, 6 ஜூலை, 2025

ஜூலை 6. - டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜீ பிறந்தநாள்

கல்வியாளரும், கொல்கத்தா பல்கலைக்கழத்தின் முன்னாள் துணைவேந்தரும், வழக்கறிஞரும், இன்றய பாஜகவின் முன்னோடியான பாரதிய  ஜனசங்கத்தை நிறுவியவருமான திரு சியாமா பிரசாத் முகர்ஜீயின் பிறந்ததினம் இன்று.

வங்காளத்தைச் சேர்ந்த கணிதவியலாளர் திரு அஷுதோஷ் முகேர்ஜீ. கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் இயற்பியல் ஆகிய இரண்டு துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் மாணவர், கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தர், வழக்கறிஞர், கொல்கத்தா நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர். இப்படி புகழ்வாய்ந்த அஷுதோஷ் முகர்ஜீயின் மகனாக 1901  ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் நாள் பிறந்தவர்தான் டாக்டர் சியாம பிரசாத் முகேர்ஜீ.

இயல்பிலேயே படிப்பில் சூடிப்பாக இருந்த சியாம பிரசாத் வங்காள மொழியில் முதுகலைப் பட்டமும், சட்டப் படிப்பையும் முடித்தார். அதனைத் தொடர்ந்து தனது பாரிஸ்டர் பட்டத்தை இங்கிலாந்து நாட்டில் பெற்றார். 1934ஆம் ஆண்டு தனது 33ஆம் வயதில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இன்று வரை மிக இளையவயதில் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒரே அறிஞராக சியாம பிரசாத் முகர்ஜீயே ஆவார். நான்கு வருடங்கள் அவர் இந்தப் பொறுப்பை வகித்தார். இவரது காலத்தில்தான் முதல்முறையாக பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் வங்காள மொழியில் உரையாற்றினார். அந்த விருந்தினர் குருதேவ் ரவீந்திரநாத் தாகூர். முகேர்ஜியின் சேவையைப் பாராட்டி கொல்கத்தா பல்கலைக்கழகம் அவருக்கு 1938ஆம் ஆண்டு கவுரவ டாக்டர் பட்டத்தை அளித்தது.

1929ஆம் ஆண்டு தனது 29ஆவது வயதில் முகர்ஜீ வங்காள சட்ட மேல்சபைக்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினராக கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அடுத்த வருடமே சட்டமன்றங்களைப் புறக்கணிக்க காங்கிரஸ் தீர்மானிக்க, முகர்ஜியும் பதவி விலகினார். உடனடியாக சுயேச்சை உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மீண்டும் 1937ஆம் ஆண்டு தேர்தலில் சுயேச்சை உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1941 - 42 ஆம் ஆண்டுகளில் வங்காள மாநிலத்தின் நிதியமைச்சராகப் பதவி வகித்தார்.

1939ஆம் ஆண்டு ஹிந்து மஹாசபையில் தன்னை இணைத்துக் கொண்ட முகர்ஜி அந்த ஆண்டே ஹிந்து மகாசபையின் தாற்காலிகத் தலைவராகவும், அடுத்த ஆண்டு செயல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

சுதந்திரத்தை அடுத்து ஜவாஹர்லால் நேரு தலைமையில் உருவான அரசாங்கத்தில் தொழில்துறை அமைச்சராகப் பதவியேற்றார். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் உடன் நேரு 1950ஆம் ஆண்டு செய்து கொண்ட தில்லி ஒப்பந்தத்தை ஏற்காமல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அன்றய கிழக்கு பாகிஸ்தானில் இருந்த ஹிந்துக்கள் பாகிஸ்தான் கீழே நிம்மதியாக வாழமுடியாது, எனவே பாரதம் - பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளிலும் உள்ள மக்களை மதத்தின் படி மாற்றிக்கொள்வதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்று சியாம பிரசாத் முகர்ஜி கோரினார். வரலாற்றின் பக்கங்களில் இருந்து பாடம் படிக்காது, கனவுலகில் வாழ்ந்த நேரு அதனை நிராகரித்தார். ஆனால் முகர்ஜி கூறியது தான் நடந்தது. பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரான ஹிந்துக்களும், சீக்கியர்களும் அங்கே வாழ்வுரிமை இல்லாமல்தான் இன்றும் இருக்கிறார்கள். அப்படித் துன்பப்படும் சகோதர்களுக்கு உதவத்தான் மோதி அரசு குடியுரிமைச் சட்டத்தை இப்போது திருத்தி, அவர்களுக்கு பாரத நாட்டின் குடியுரிமை வழங்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது. 

நேருவோடு உருவான கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் அன்றய சர்சங்கசாலக்கான குருஜி கோல்வால்கர் அறிவுரையின் பேரில், முகர்ஜி பாரதிய ஜன் சங்கம் என்ற கட்சியை உருவாக்கினார். 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது நாடாளுமன்ற தேர்தலில் ஜன்சங் கட்சி மூன்று தொகுதிகளைக் கைப்பற்றியது.

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அதிகாரங்களை அளிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவை முகர்ஜி எதிர்த்து நாடாளுமண்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து போராடிக் கொண்டு இருந்தார். " ஒரு நாட்டில் இரண்டு அரசியலமைப்பு சட்டங்கள், இரண்டு பிரதமர்கள், இரண்டு தேசிய சின்னங்கள் இருக்க முடியாது" என்பது அவரின் போர் முழக்கமாக இருந்தது. ஹிந்து மஹாசபா மற்றும் ஜம்மு பிரஜா பரிஷத் ஆகிய கட்சிகளோடு இணைந்து ஜன்சங் 370ஆவது சட்டப் பிரிவை நீக்கக் கோரி சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்தது.
எந்தவிதமான அடையாள அட்டையைக் காட்டாமல் காஷ்மீருக்கு செல்லும் போராட்டத்தை முகர்ஜி தொடங்கினார். காஷ்மீர் மாநிலத்துக்கு உள்ளே நுழையும் போது 1953ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி முகர்ஜி கைது செய்யப்பட்டார். 1953ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி சந்தேகத்திற்கு இடமான வகையில் சிறையில் முகர்ஜி மரணமடைந்தார்.
முகர்ஜியின் மரணம் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நேரு நிராகரித்தார். 2004ஆம் ஆண்டு வாஜ்பாய் முகர்ஜியின் மரணத்திற்கு பின்னர் நேருவின் சூழ்ச்சி இருந்தது என்று குற்றம் சாட்டினார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் ஒரு கல்லூரி, அஹமதாபாத் நகரில் ஒரு பாலம், டெல்லியில் ஒரு சாலை, கோவா பல்கலைக்கழகத்தில் ஒரு உள்ளரங்க விளையாட்டு அரங்கம், ராய்ப்பூர் நகரில் இந்திய தகவல் தொழில்நுட்ப கல்லூரி என்று பல்வேறு இடங்களுக்கு சியாம பிரசாத் முகர்ஜியின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

370ஆவது சட்டப்பிரிவை நீக்கி, எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவோடு முழுமையாக இணைத்து மோதி அரசு முகர்ஜியின் பலிதானத்திற்கு மரியாதை செலுத்தி உள்ளது.  

சனி, 5 ஜூலை, 2025

ஜூலை 5 - வெற்றிகரமான முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பிறந்ததினம்

நீண்டகால அளவில் மிகுந்த லாபகரமான முதலீடு என்பது நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதுதான். எதிர்காலத்தில் எந்த துறைகள் ஏற்றமடையும் என்பதை இனம் கண்டுகொண்டு அந்தத் துறைகளில் உள்ள நிறுவங்களில் சிறந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்து போதுமான அளவு காத்திருந்தால் அதுபோன்ற லாபமான முதலீடு எதுவும் இல்லை. ஆனால் பாரத நாட்டில்  பங்குசந்தைகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். அதிகமான லாபம் தரும் முதலீடு என்பது அதற்க்கு குறைவில்லாத இழப்பையும் தரும் வாய்ப்புள்ளதால் பொதுவாகவே பாதுகாப்பை விரும்பும்  பாரத மக்கள் பங்குசந்தையில் அதிகமாக முதலீடு செய்வது இல்லை.

ஆனால் இதற்கு மாறாக மிக இளம் வயதில் பங்குசந்தையில் நுழைந்து மிகக் குறைந்த முதலீட்டை பலமடங்கு பெருக்கி, வெற்றிகரமான முதலீட்டாளராக இருப்பவர் திரு ராஜேஷ் ஜுன்ஜுன்வலா. மும்பையில் பணியாற்றிவந்த, மத்தியதர குடும்பத்தைச் சார்ந்த வருமானவரித்துறை அதிகாரி ராதேஷ்யாம் ஜுன்ஜுன்வாலாவின் மகனாக ராகேஷ் 1960ஆம் ஆண்டு பிறந்தார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த ஷெகாவத் பகுதி இவரின் பூர்வீகம். கல்வித்தகுதியில் ராகேஷ் ஒரு பட்டய கணக்காளர்.
கடந்த முப்பத்தி ஐந்தாண்டு காலமாக பங்குசந்தையில் முதலீடு செய்து வரும் ராகேஷ் சந்தையின் ஏற்ற இறக்கத்தை மிக அருகில் இருந்து பார்த்தவர். பொருளாதார தாராளமயமாக்கம், ஹர்ஷத் மேத்தா சகாப்தம், கணினிமயக்காத்தால் உருவான புது தொழில்கள், பல்வேறு பங்குச்சந்தை முறைகேடுகள் என்று சுழன்றடிக்கும் சூறாவளிக்கு நடுவே இவரது பயணம் நடைபெற்றது. 1985ஆம் ஆண்டு இவர் பங்குசந்தையில் முதலீட்டை தொடங்கும்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 150ஆக இருந்தது. இன்று அது ஏறத்தாழ 40,000 என்று உள்ளது.

படிப்பை முடித்த கையேடு பங்குசந்தையில் முதலீடு செய்ய ராகேஷ் திட்டமிட்டார். ராகேஷின் தந்தை பங்குசந்தையில் முதலீடு செய்ய இவருக்கு எந்தப் பணத்தையும் அளிக்கவில்லை. ஆனால் கூட்டுக்குடும்பம் என்பதால் உணவுக்கும், உறைவிடத்திற்கும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். முதலீடு செய்யும் பணத்தை ராகேஷே சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்றும், ஒரு வேளை பங்குச்சந்தை முதலீடு அவருக்கு லாபகரமாக இல்லை என்றால் படிப்பை கொண்டு ஏதாவது வேலைக்கு சென்று விடலாம் என்று அவர் தந்தை அறிவுரை கூறினார்.

மிகச் சிறிய அளவில் டாடா டீ, சேஷ கோவா முதலான நிறுவனங்களில் இவர் செய்த முதலீடு நல்ல லாபத்தை அளித்தது. அந்த லாபத்தையும் ராகேஷ் பங்குசந்தையில் முதலீடு செய்தார். இவரது முதலீட்டிலேயே மிகவும் லாபகரமான முதலீடு என்பது டைட்டான் நிறுவனப் பங்கில் செய்த முதலீடுதான். 2002 - 2003 காலகட்டத்தில் அந்த நிறுவனப் பங்குகள் ரூபாய் மூன்று என்ற அளவில் இருந்தது. அது இன்று ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனை ஆகிக்கொண்டு இருக்கிறது. ஏறத்தாழ ஐந்து கோடிக்கும் அதிகமான டைட்டான் நிறுவன பங்குகளை ராகேஷ் இன்று வைத்துள்ளார்.

ராகேஷும் அவர் மனைவி ரேகாவும் இணைந்து நடத்தும் Rare Enterprises நிறுவனத்தின் மூலமாக ராகேஷ் தனது முதலீடுகளை மேற்கொள்கிறார். செல்வத்தை சேர்ப்பது என்பது ஓன்று, அதனை தேவைப்படும் தகுதியான நபர்களுக்கு / சமுதாயத்திற்கு அளிப்பது என்பது மற்றொன்று. ராகேஷ் தனது செல்வத்தை பல்வேறு சமுதாயப் பணிகளுக்கும் அளித்து வருகிறார். கிராமப்புறத்தில் வசிக்கும் மாணவர்களுக்கான கல்வி, மற்றும் தகுதியான விளையாட்டு வீரர்களை உருவாக்குதல் போன்ற பணிகளுக்கு ராகேஷ் முன்னுரிமை அளித்து, அதற்கான தொண்டு நிறுவங்களுக்கு பண உதவி செய்து வருகிறார்.

செய்க பொருளை என்று வள்ளுவர் கட்டளை இட்டதுபோல பணத்தை சம்பாதிப்பதில், செல்வத்துப் பயனே ஈதல் என்ற வாக்குப்படி வாழ்ந்து வரும் ராகேஷின் வாழ்க்கை பல்வேறு பாரத இளைஞர்கள் பின்பற்ற தகுந்ததாகும். 

வெள்ளி, 4 ஜூலை, 2025

ஜூலை 4 - கனோஜி ஆங்க்ரே நினைவுநாள்

வரலாறு பதிவு செய்யப்பட்ட காலத்தில் ஏறத்தாழ 17ஆம் நூற்றாண்டு வரை உலக வர்த்தகத்திலும், உலக செல்வத்திலும் பெரும் பங்கு பாரதநாட்டிடமே குவிந்து கிடந்தது. அளவற்ற செல்வம் உலகின் பல பகுதி மக்களை இந்த நாட்டுக்கு வரவேண்டும் என்று தூண்டியது. அலையலையான அந்நியர் படையெடுப்பும் அதனை தடுத்து நின்ற வீரர்கள் வரலாறும்தான் இந்த மண்ணின் வரலாறு. அப்படி அரை நூற்றாண்டு காலம் கொங்கன் கடற்கரையை காத்து நின்று, தன் வாழ்நாளில் எந்தப் போரிலும் தோல்வியே அடையாத மராட்டிய மாவீரன் கனோஜி ஆங்க்ரேயின் நினைவுநாள் இன்று.

மராட்டிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த சத்ரபதி சிவாஜி மஹாராஜால் ஸ்வர்ணமுக் கோட்டைக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட துக்கோஜி ஆங்கிரே - அம்பாலால் தம்பதியினருக்கு 1669ஆம் ஆண்டு பிறந்தவர் கனோஜி ஆங்கிரே. பாரதத்தின் மேற்கு கடற்கரையில் இன்றய மும்பை நகருக்கும் கோவாவிற்கும் இடையே ஒரு தீவில் அமைந்து இருந்த ஸ்வர்ணமுக் கோட்டையில் தனது இளமைகாலத்தை கழித்தால் கடலும், கடல் சார்ந்த பரதவ இன மக்களின் நட்பும் கனோஜியை ஒரு கடலோடியாகவே உருவாக்கின.

சிவாஜி மஹராஜ் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய கடற்படையை கனோஜி விரிவுபடுத்தினார். தனது 19ஆம் வயதில் 150 மைல் நீளமுள்ள கொங்கன் கடற்கரையை அவற்றின் கட்டுப்பாட்டுக்கு உள்ளாகி அவரை கடற்கரையின் தளபதியாக மராத்திய அரசு நியமித்தது. அப்போது அவர் வசம் பத்து கப்பல்கள் இருந்தன.

பாரத கடலெல்லைக்குள் வரும் ஐரோப்பியரின் கப்பல்கள் எதுவாக இருந்தாலும் மராட்டிய அரசுக்கு கப்பம் செலுத்தவேண்டும் என்ற விதிமுறையை கனோஜி ஆங்கிரே உருவாக்கினார். கப்பம் செலுத்திய கப்பல்களின் பாதுகாப்பை மராட்டிய கப்பல் படை ஏற்றுக்கொண்டது. கப்பம் கட்ட மறுத்த கப்பல்கள் தாக்கப்பட்டு அவை கொள்ளையடிக்கப் பட்டன. பெரும் கடற்படை இன்னும் உருவாகாத காரணத்தால் கனோஜி கடலில் கொரில்லா தாக்குதல் முறையை கையாண்டார். மராத்தா அரசு அவரை தனது கடற்படையின் தளபதியாகவும் 26 கோட்டைகளின் பொறுப்பாளராகவும் நியமித்தது. பிரிட்டிஷ்க்காரர்கள், போர்த்துகீஸ் மக்கள், டச் கடலோடிகள் அனைவரும் கனோஜி ஆங்க்ரேயின் கட்டளைக்கு அடிபணிய வேண்டி இருந்தது. நினைத்த பொழுதில் ஐரோப்பியர்களின் கப்பல்களைத் தாக்கவும், அவற்றை பறிமுதல் செய்யவும் ஆங்க்ரேயினால் முடிந்தது.

வேகமான போர்முறைகளும், எதிர்பாராத தாக்குதல்களும் ஆங்க்ரேவை கடலின் சிவாஜி என்ற பட்டப்பெயரை பெற்றுக் கொடுத்தன.
கர்நாடகா முதல் மஹாராஷ்டிரா வரை பரவியுள்ள 1000 கிலோமீட்டர் நீளமுள்ள கொங்கன் கடற்கரையின் காவலனாக வலம் வந்த கனோஜி ஆங்கிரே 1729ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் நாள் காலமானார். ஆங்க்ரேவை எதிர்கொள்ள பிரிட்டிஷார் உருவாக்கிய கடற்படைதான் இன்று இந்திய கடற்படையாக உருவாகி நிற்கிறது.

மும்பையில் உள்ள கடற்படை தளத்திற்கும், மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரத்தினகிரியில் உள்ள துறைமுகத்திற்கும் ஆங்க்ரேயின் பெயரை சூட்டி பாரத நாடு அந்த வீரனுக்கு நன்றி செலுத்தி உள்ளது.  

வியாழன், 3 ஜூலை, 2025

ஜூலை 3 - சர்வாதிகாரத்தை எதிர்த்த தனி ஒருவன் நீதிபதி ஹன்ஸ்ராஜ் கன்னா


பாரத வரலாற்றில் ஆட்சியாளர்களால் மறைக்கப்பட்ட பக்கங்கள் என்று பல உண்டு. அதில் மிக முக்கியமானது 1975ஆம் ஆண்டு இந்த நாட்டின் சட்டதிட்டங்கள் அனைவற்றையும் கிழித்து எறிந்துவிட்டு, இந்த நாட்டை சர்வாதிகாரப் போக்கில் கொண்டு சென்ற அன்றய பிரதமர் இந்திரா அறிவித்த நெருக்கடிநிலை பிரகடனம். நீதிமன்றம் மூலமாக மக்களவை வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்திராவின் நெருக்கடி இந்தியாவின் நெருக்கடியானது. அவசரச் சட்டத்தின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டன. எல்லா எதிர்க்கட்சி தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைகள் கடுமையான தணிக்கைக்கு உள்ளானது. எந்தவிதமான எதிர்ப்பு எழுந்தாலும் அது கடுமையான முறையில் அடக்கப்பட்டது.

ஆனால் உச்சநீதிமன்றத்தில் ஒரே ஒரு குரல் நெருக்கடி நிலையை எதிர்த்து ஒலித்தது. அரசியலமைப்பு சட்டத்தின்படி எது சரி எது தவறு என்பதை அந்தக் குரல் தெளிவுபடுத்தியது. உண்மையின் பக்கத்தில் இருந்ததால் அந்தக் குரலுக்கு சொந்தக்காரருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி மறுக்கப்பட்டது. ஆனாலும் வரலாற்றைப் படிக்கும் மாணவர்களின் மனதில் அவருக்கு தனி இடம் கிடைத்தது. அந்தக் குரலின் சொந்தக்காரர் ஒரு நீதிபதி. அம்ரித்ஸர் நகரில் பிறந்த அவரின் பெயர் நீதிபதி ஹன்ஸ்ராஜ் கன்னா. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வரையறை செய்த பல்வேறு வழக்குகளில் நீதிபதி கன்னாவின்  தீர்ப்புகள் இன்றும் முக்கியமான ஒன்றாக உள்ளன.

1912ஆம் ஆண்டு அம்ரித்ஸர் நகரில் திரு ஷரப்தயாள் கன்னாவின் மகனாகப் பிறந்தவர் இவர். திரு ஷரப்தயாள் வழக்கறிஞரும், விடுதலைப் போராட்ட வீரருமாவார். அவர் அம்ரிஸ்தர் நகரின் மேயராகவும் பணியாற்றினார். தனது கல்வியை DAV பள்ளியிலும், பின்னர் கல்சா கல்லூரியிலும் முடித்தார். லாகூர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து அம்ரித்ஸர் நகரில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.
தனது நாற்பதாவது வயதில் ஹன்ஸ்ராஜ்கன்னா மாவட்ட குற்றவியல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பெரும் தொழிலதிபரான ராமகிருஷ்ன டால்மியாவை பண மோசடி வழக்கில் சிறைத்தண்டனை வழங்கினார். பஞ்சாப் உயர்நீதிமன்றத்திலும் பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட டெல்லி உயர்நீதிமன்றத்திலும் திரு கன்னா பணியாற்றினார். 1971ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக திரு ஹன்ஸ்ராஜ் கன்னா புகழ்பெற்ற பல தீர்ப்புகளை எழுதினார்.

கேசவானந்த பாரதி எதிர் கேரள அரசாங்கம் : 
எடநீர்  மடத்தின் சொத்துக்களை நிர்வகிக்க கேரள அரசு கொண்டுவந்த சட்டங்களை எதிர்த்து அந்த மடத்தின் மடாதிபதி தொடுத்த வழக்கு இது. 13 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. தனது பதவியை பலப்படுத்திக் கொள்ள இந்திரா கொண்டுவந்த பல்வேறு சட்டங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து இருந்தது. வங்கிகள் தேசியமயமாக்கம், மன்னர் மானிய ஒழிப்பு போன்றவைகளை நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்தது. அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதன் மூலம் நீதிமன்ற உத்தரவை இந்திரா ரத்து செய்தார். ஜனநாயகத்தின் இரண்டு தூண்களும் ஒன்றோடு ஓன்று முட்டிக்கொண்ட சமயம் இது.
இந்த வழக்கோடு, பல்வேறு அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள் பற்றிய விவாதங்களும் தொடுக்கப்பட்டன. அரசியலமைப்பு சட்டத்தை திருத்த அரசுக்கு அதிகாரம் உண்டா என்ற கேள்வி எழுந்தது. ஆறு நீதிபதிகள் அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் ஆறு நீதிபதிகள் அதிகாரம் இல்லை என்று தீர்ப்பு எழுதினார்கள்.

நீதிபதி ஹன்ஸ்ராஜ்கன்னா அரசியலமைப்பு சட்டத்தை திருத்த அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் ஆனால் அதே சமயம் அரசுக்கு கட்டுப்பாடற்ற அதிகாரம் கிடையாது என்றும் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைகளை அரசு மாற்ற முடியாது என்றும் தீர்ப்பு சொன்னார்.

ஆள் கொணர்வு மனு வழக்கு : 
நெருக்கடிநிலை சமயத்தில் சட்டத்திற்கு புறம்பாக பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள சிறையானவர்களின் உறவினர்களால் பல ஆள்கொணர்வு மனுகள் தாக்கல் செய்யப்பட்டன. சட்டத்தின் மாட்சிமை பற்றிய கேள்வி எழுந்தது. இதனை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு உருவாக்கப் பட்டது.
எந்த காரணமும் இல்லாமல் சிறைபிடிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் ஆள்கொணர்வு மனுவை எடுத்துக்கொள்ள தேவை இல்லை என்றும் மற்ற நான்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்க, நீதிபதி ஹன்ஸ்ராஜ் கன்னா அதனை மறுத்து தீர்ப்பு சொன்னார். "உயிர் வாழும் உரிமையை அரசின் பிடியில் அரசியலமைப்பு சட்டம் கொடுக்கவில்லை. இங்கே கேள்விக்குள்ளாகி இருப்பது சட்டத்தின் மாட்சிமை. விசாரணை இல்லாது சிறையில் அடைப்பது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது" என்று அவர் தீர்ப்பளித்தார்.

சர்வாதிகாரத்திற்கு எதிராக எழுந்த குரலை இந்திரா விரும்பவில்லை. நீதிபதி கன்னாவிற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி மறுக்கப்பட்டது. அவருக்கு இளையவரான நீதிபதி பைக் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிபதி கன்னா உடனடியாகப் பதவி விலகினார். அவருக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்தனர். ஆனால் அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை அரசிடம் இருந்து நீதிமன்றங்கள் பறித்துக் கொண்டன.

நெருக்கடி நிலை விலக்கிக் கொண்ட பிறகு 1978ஆம் ஆண்டு அவர் பணியாற்றிய உச்ச நீதிமன்றத்தின் இரண்டாம் எண் நீதிமன்றத்தில் நீதிபதி கன்னாவின் முழு உருவ ஓவியம் நிறுவப்பட்டது. உயிரோடு இருக்கும் போதே இந்தப் பெருமையை இதுவரை யாரும் அடையவில்லை.
1999ஆம் ஆண்டு பாரத அரசு நீதிபதி கன்னாவிற்கு பத்மவிபூஷண் விருது அளித்து கவுரவித்தது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களை அளித்தன.

மனசாட்சிக்கும் நீதிக்கும் உண்மையாக இருந்த நீதிபதி ஹன்ஸ்ராஜ் கன்னா 2008ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் நாள் தனது 95ஆவது வயதில் காலமானார்.