திங்கள், 23 மார்ச், 2026

மார்ச் 23 - அரசியல் வானில் ஒரு இளம்தாரகை - ஸ்ம்ரிதி இராணி பிறந்தநாள்

எந்த ஒரு நிறுவனமோ, இயக்கமோ அல்லது அரசியல் கட்சியோ நெடுங்காலம் நீடித்து இருப்பதற்கு ஒரு வழிகாட்டும் கொள்கையும் அதனால் ஈடுபட்டு அதில் தன்னை இணைத்துக் கொள்ளும் இளைஞர் பட்டாளமும், அவர்களை வழிகாட்டி அவர்களைத் தலைவர்களாக மாற்றும் மூத்த நிர்வாகிகளும் தேவை. அப்படி ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்திலும் பின்னர் பாரதிய ஜனதா கட்சியிலும் அடுத்த தலைமுறை தலைவர்களில் முக்கியமானவராக விளங்கும் ஸ்ம்ரிதி இராணி அவர்களின் பிறந்தநாள் இன்று


அஜய் குமார் மல்ஹோத்ரா - ஷிபானி பக்ச்சி தம்பதியரின் மூத்த மகளாக ஸ்ம்ரிதி 1976ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் நாள் பிறந்தார். ஸ்ம்ரிதியின் தாத்தா ஒரு ஸ்வயம்சேவக், அவர் தாயார் ஜனசங்கத்தின் உறுப்பினர். எனவே இயல்பாகவே அவருக்கு அரசியல் ஈடுபாடு இருந்ததில் வியப்பில்லை.

சாதாரண மத்தியதர குடும்பத்தில் பிறந்த ஸ்ம்ரிதி, தனது சிறு வயதிலேயே அழகுசாதனப் பொருள்களை விற்பனை செய்து பொருளீட்டத் தொடங்கினார். 1998ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பத்து போட்டியாளர்ககளில் ஒருவராகத் தேர்வானார். அதனைத் தொடர்ந்து திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடிக்க ஸ்ம்ரிதி மும்பை நகருக்கு குடியேறினார்.

ஊச் லா லா லா என்ற தொலைக்காட்சித் தொடரை தொகுத்தளிக்கத் தொடங்கிய ஸ்ம்ரிதி, ஏக்தா கபூர் தயாரித்த குன்கி சாஸ் பி கபி பஹு தி என்ற தொலைக்காட்சித் தொடரில் துளசி விரானி என்ற பாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். இந்தத் தொடரின் வெற்றி அவரை வட மாநிலங்களில் அறியப்பட்ட முகமாக மாற்றியது. அந்தக் காலகட்டத்தில் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஸ்ம்ரிதி தயாரித்து வழங்கினார்.

2003ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த ஸ்ம்ரிதி, அடுத்த ஆண்டே மஹாராஷ்டிரா மாநில இளைஞர் அணியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கபில் சிபிலை எதிர்த்துப் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை.

ஆனால் இந்த தற்காலிகப் பின்னடைவு அவரின் அரசியல் வாழ்வில் ஒரு பகுதி மட்டுமே. தனது தொடர்ந்த உழைப்பினால் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளராகவும், பெண்கள் அணியின் தேசியத்தலைவராகவும் அவரை கட்சி நியமித்தது. 2011ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் சார்பாக ஸ்ம்ரிதி இராணி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் ஸ்ம்ரிதி இராணி களமிறங்கினார்.

1967ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் அதுவரை 14 தேர்தல்கள் நடைபெற்று இருந்தன. அதில் ஒரு முறை ஜனதா கட்சியும், ஒரு முறை பாஜகவும் வெற்றி பெற்று இருந்தது. 12 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இருந்தது. அதிலும் நேரு குடும்பத்தின் சொந்த தொகுதியாக சஞ்சய் காந்தி, ராஜிவ் காந்தி, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் 1980ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக (1988 தேர்தல் தவிர ) அந்தத் தொகுதியில் வெற்றி பெற்று இருந்தனர். ராகுல் காந்தி காங்கிரஸ் வேட்பாளராக இருந்த தொகுதியில் அவரை எதிர்த்து ஸ்ம்ரிதி இராணி போட்டியிட்டார். ஒருலட்ச ஒட்டு வித்தியாசத்தில் ராகுல் அப்போது வெற்றி பெற்றார்.

ஆனால் அடுத்த ஐந்தாண்டு காலகட்டத்தில் ஸ்ம்ரிதி இராணி அந்தத் தொகுதியைச் சுற்றிச் சுற்றி வந்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். 2019ஆம் ஆண்டு மீண்டும் ராகுலை எதிர்த்து அமேதி தொகுதியில் போட்டியிட்டார். வெற்றிபெறுவது கடினம் என்பதை உணர்ந்து கொண்ட ராகுல் கேரளா மாநிலத்தின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். எதிர்பார்த்தது போல ராகுல் காந்தியைவிட ஐம்பத்தைந்தாயிரம் வாக்குகள் அதிகம் பெற்று ஸ்ம்ரிதி அமேதி தொகுதியைக் கைப்பற்றினார்.

2014ஆம் ஆண்டு அமைந்த மோதி தலைமையிலான அரசில் மனிதவள மேம்பாட்டுத்துறை, அதனைத் தொடர்ந்து செய்தித் தொடர்புத் துறையின் கூடுதல் பொறுப்பு, ஜவுளித்துறை ஆகிய துறைகளின் அமைச்சராகவும், 2019ஆம் ஆண்டில் அமைந்த அமைச்சரவையில் ஜவுளிதுறை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகவும் ஸ்ம்ரிதி இராணி பணியாற்றி வருகிறார்.

ஸுபின் இராணி என்ற தொழிலதிபரை மணந்து கொண்ட ஸ்ம்ரிதி இராணிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்திய அரசியல் வானில் 44 வயது என்பது மிக இளைய வயதுதான். இன்னும் நீண்ட கால அரசியல் வாழ்வு ஸ்ம்ரிதி இராணிக்கு உள்ளது என்பதுதான் உண்மை.

பாரத நாட்டின் சேவையில் ஸ்ம்ரிதி இரானியின் பங்கு இன்னும் வீரியமாக இருக்கட்டும் என்று ஒரே இந்தியா தளம் மனமார வாழ்த்துகிறது. 

ஞாயிறு, 22 மார்ச், 2026

மார்ச் 22 - தொழிலதிபர் T V சுந்தரம் ஐயங்கார் பிறந்தநாள்

தமிழகத்தின் முக்கியமான டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனர் திரு சுந்தரம் ஐயங்காரின் பிறந்ததினம் இன்று


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி என்ற சிறு கிராமத்தில் 1877ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி பிறந்தவர் திரு சுந்தரம் ஐயங்கார். திருநெல்வேலி ஹிந்து கல்லூரியில் படித்த அவர் சட்டபடிப்பையும் முடித்தார். அதனைத் தொடர்ந்து ரயில்வேயில் குமாஸ்தாவாகவும் பின்னர் வங்கியிலும் பணியாற்றினார். பின்னர் தொழில்துறையில் சுந்தரம் ஐயங்கார் கால்பதித்தார்.

1911ஆம் ஆண்டு தனது நிறுவனத்தை ஆரம்பித்த ஐயங்கார் 1912ஆம் ஆண்டு பஸ் போக்குவரத்தைத் தொடங்கினார். தஞ்சாவூர் - புதுக்கோட்டை வழியில் இவரது முதல் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. பேரம் பேசும் நிலைமையை மாற்றி தூரத்திற்கு ஏற்ப கட்டணம், பயணிகள் கொடுக்கும் பணத்திற்கு ஒப்புகை சீட்டு, குறிப்பிட்ட காலத்தில் கிளம்பி சரியான நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைதல் என்று அந்தக் காலத்திலேயே தரத்தில் கவனம் செலுத்தினார். டிவிஎஸ் நிறுவனத்தின் பேருந்துகள் வருவதை வைத்து கடிகாரத்தின் நேரத்தை சரி செய்துகொள்ளலாம் என்று அன்று பேசுவது இயல்பான ஒன்றாக இருந்தது.

பேருந்து போக்குவரத்தைத் தொடர்ந்து அதோடு தொடர்புடைய பல்வேறு தொழில்களிலும் டிவிஎஸ் நிறுவனம் கால்பதிக்கத் தொடங்கியது. வாகன உதிரிப்பொருள்கள், பெட்ரோல் / டீசல் விநியோகம், டயர் உற்பத்தி என்று விரிவடைந்தது. பின்னர் நாடு சுதந்திரம் அடைந்தபிறகு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்களின் விநியோக உரிமையும் டிவிஎஸ் நிறுவனத்திற்கு கிடைத்தது. எந்தவிதமான சமரசமும் இல்லாத தரக்கட்டுப்பாடு, அரசின் சட்டதிட்டங்களை மீறாத செயல்பாடு, பணிபுரியும் ஊழியர்களை குடும்ப உறுப்பினர்கள் போல நடத்துதல் என்று ஒரு உதாரண நிறுவனமாக டிவிஎஸ் நிறுவனத்தை ஐயங்கார் வார்த்தெடுத்தார். நிறுவனத்தில் கான்டீன் வசதி, தொழிலாளர்களுக்கு குடியிருப்பு, மருத்துவ வசதி, அவர்கள் பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடம் என்று அன்றய காலகட்டத்தில் எந்த தொழிலதிபரும் யோசிக்காத வசதிகளை தங்கள் தொழிலாளிகளுக்கு அவர் ஏற்படுத்திக் கொடுத்தார்.

வாகன விநியோகத்தில் ஈடுபட்ட நிறுவனம், தங்கள் வாகனங்களை விற்பனை செய்ய சுந்தரம் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தையும் உருவாக்கியது. இன்று வாகன கடன் வழங்குவதில் சுந்தரம் பைனான்ஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது. அரசு தனியார் போக்குவரத்தை அரசுமயமாக்கியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் நிறுவப்பட்டது. வீல்ஸ் இந்தியா, சுந்தரம் கிளேட்டன், டிவிஎஸ் மோட்டார்ஸ்,  என்று பல்வேறு நிறுவங்களாக அவை உருவெடுத்தன.

தாங்கள் தயாரிக்கும் பொருள்களின் தரத்திற்காக சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த நிறுவனங்கள் பல்வேறு உதிரிப்பாகங்களை ஏற்றுமதியும் செய்து வருகின்றன. டிவிஎஸ் குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் தரக் கட்டுபாட்டுக்கான டெமிங் தர விருதையும் பெற்றுள்ளன. இன்று ஏறத்தாழ 60,000கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு 8.5 பில்லியன் அமெரிக்கா டாலர் வியாபாரத்தை டிவிஎஸ் குழுமம் செய்து வருகிறது.

சுந்தரம் ஐயங்கார் அவர்களுக்கு ஐந்து மகன்களும் மூன்று மகள்களும் உண்டு. முற்போக்கு சிந்தனையாளராகவும், காந்தியைப் பின்பற்றுபவராகவும் சுந்தரம் ஐயங்கார் இருந்தார். சிறுவயதில் விதவையான தனது மகள் சௌந்தரம் அவர்களுக்கு ராமச்சந்திரன் என்பவருக்கு மறுமணம் செய்து வைத்தார், காந்திகிராம கிராமப்புற பல்கலைக்கழகத்தை நிறுவியவர்கள் இந்த தம்பதியினரே. 1955ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் நாள் சுந்தரம் ஐயங்கார் காலமானார்.

தமிழகத்தின் தொழில்வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த திரு சுந்தரம் ஐயங்கார் அவர்களின் பிறந்ததினத்தில் அவரை ஒரே இந்தியா செய்தித்தளம் போற்றி வணங்குகிறது. 

சனி, 21 மார்ச், 2026

மார்ச் 21 - ஷெனாய் மேதை பிஸ்மில்லாஹ்கான் பிறந்தநாள்

பாரதம்  ஒரு விசித்திரமான தேசம். ஏறத்தாழ இருநூறாண்டு கால ஆங்கிலேயர் ஆட்சிக்குப்பின் சுதந்திரம் அடையும்போது இந்த நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இங்கே பெரும்பான்மையாக உள்ள ஹிந்துக்களோடு இணைந்து வாழ  முடியாது என்று எண்ணிய இஸ்லாமியர்களுக்காக பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவானது. பிரிவினை பல லட்சம் மக்களைக் கொன்று, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடி அதன்மேலே  இரண்டு நாடுகள் உருவானது.

ஆனாலும் இந்தநாட்டின்மீது நம்பிக்கை கொண்டு பல லட்சம் இஸ்லாமியர்கள் இந்தியாவிலேயே தங்கிவிட்டனர். அப்படி தங்கிய இஸ்லாமியர் ஒருவர்தான் இந்தியாவின் சுதந்திரநாள் அன்றும் இந்தியா குடியரசாக மலர்ந்த நாளன்றும் மங்கள வாத்தியம் இசைத்து வலிமையான பாரதத்தை வரவேற்று வாழ்த்தினார் என்பதும் அந்த மகத்தான கௌரவத்தை அவருக்கு இந்த நாடு அளித்தது என்பதும் யாரையும் நெகிழவைக்கும் ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகும். அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் புகழ்பெற்ற ஷெனாய் இசைக்கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லாகான் அவர்கள்.

இன்றய பிஹார் மாநிலத்தில் உள்ள தூம்ரான் மாவட்டத்தில் பாரம்பரியமான ஒரு இஸ்லாமிய இசைக்குடும்பத்தில் 1916ஆம் ஆண்டு பிஸ்மில்லாகான் பிறந்தார். இவரது பெற்றோர்கள் இவருக்கு கமருதீன் என்றுதான் பெயர் சூட்ட இருந்தார்கள். ஆனால் இவரது தாத்தா ரசூல் பாக்ஸ்கான் குழந்தையைப் பார்த்த பொழுதில் பிஸ்மில்லாஹ் ( அல்லாஹ்வின் திருப்பெயரால் ) என்று மகிழ்ச்சியோடு கூவினார். அதனால் பிஸ்மில்லாஹ்கான் என்றே இவர் அழைக்கப்பட்டார்.

தனது ஆறாவது வயதிலேயே காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ஷெனாய் வித்வானாக இருந்த தனது தாய்மாமா அலி பக்ஷிகானிடம் இவர் தனது இசைப் பயிற்சியைத் தொடங்கினார். தனது இசை காசி விஸ்வநாதரின் அருள் என்பதில் பிஸ்மில்லாஹ்கான் உறுதியான நம்பிக்கை கொண்டுஇருந்தார். ஷெனாய் வாத்தியத்திற்கு இவரால் உலகப்புகழ் கிடைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

மத்தியபிரதேச அரசின் தான்சேன் விருது, சங்கீத நாடக அக்காதெமி விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை இவர் பெற்றார். இவை எல்லாவற்றிக்கும் மகுடம் வைத்தது போல 2001ஆம் ஆண்டு இந்திய அரசு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத்ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது.

சங்கீத நாடக அக்காதெமி இவர்பெயரால் உஸ்தாத் பிஸ்மில்லாஹ்கான் யுவபுரஸ்கார் என்ற விருதை 2007 ஆண்டு நிறுவியது. கலையுலகின் வளர்ந்துவரும்  இளம்கலைஞர்களுக்கான விருது இது.

காசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகமும், வங்காளத்தின் விஸ்வபாரதி பல்கலைக்கழகமும் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்துள்ளன.
முதுமையால் நோயுற்று இருந்த உஸ்தாத் பிஸ்மில்லாஹ்கான் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் நாள் காலமானார். இந்திய ராணுவத்தின் 21 குண்டு முழங்க இவரது நல்லடக்கம் நடைபெற்றது. இந்திய அரசு ஒருநாள் துக்கம் அனுஷ்டித்து. இவரது ஷெனாய் வாத்தியமும் இவர் உடலோடு புதைக்கப்பட்டது.

தனது இசையால் இந்த உலகத்தை மகிழ்வித்த உஸ்தாத் மறுஉலகிலும் தனது இசையால் புகழ்பெற்று இருப்பார்.

வியாழன், 19 மார்ச், 2026

மார்ச் 19 - இசையரசி டி.கே. பட்டம்மாள் பிறந்ததினம்

தமிழகத்தின் புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் திருமதி டி கே பட்டம்மாள் அவர்களின் பிறந்ததினம் இன்று.

காஞ்சீபுரத்தைச் சார்ந்த தாமல் கிருஷ்ணஸ்வாமி தீக்ஷிதருக்கும் காந்திமதி என்பவருக்கும் மகளாக பட்டம்மாள் 1919ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்கள் இருவருமே கர்நாடக இசை பயின்றவர்கள். மிகச் சிறு வயதிலேயே கேட்கின்ற பாடல்களைப் பாடும் திறமை இவருக்கு இருந்தது.

தனது பத்தாவது வயதிலேயே இவர் அன்றய சென்னை வானொலியில் தனது முதல் நிகழ்ச்சியை அரங்கேற்றினார். தனது பதின்மூன்றாம் வயதில் சென்னையில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் முழுமையான கச்சேரியை நடத்தினார். இசை பயிலவும், இசையுலகில் முன்னேறவும் இவர் பெற்றோர்கள் காஞ்சீபுரத்தில் இருந்து சென்னைக்கு குடியேறினர். சென்னை மட்டுமல்லாது நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களில் இவரது நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்தனர்.

அன்றய காலகட்டத்தில் ப்ராமண சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் பொதுமேடைகளில் ஆடவோ பாடவோ மாட்டார்கள். அதனை மாற்றி பரதநாட்டியத்தில் ருக்மணிதேவி அருண்டேல் போல சங்கீத மேடைகளில் முதலில் ஏறியவர் திருமதி பட்டம்மா அவர்கள்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய பாடல்கள் பல இவரால் பாடப்பட்டு பிரபலமானது. திருப்புகழ், தேவாரம் ஆகியவற்றை முறையாகக் கற்றுத்தேர்ந்து அவைகளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் பாடினார். புகழ்பெற்ற சாகித்யகர்த்தா பாபநாசம் சிவன் அவர்களிடம் இருந்து நேரடியாகப் பயின்று அவரது பாடல்களையும், மஹாகவி சுப்ரமணிய பாரதியார் பாடல்களையும் இவர் பெருமளவில் பரப்பினார். பயில்வதற்கு பாடுவதற்கும் கடினமான ராகம் தாளம் பல்லவி என்பதில் திறமைவாய்ந்தவராக இருந்ததால் இவர் பல்லவி பட்டம்மாள் என்று அழைக்கப் பட்டார்.

1940களில் பல்வேறு கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் தேசபக்திப் பாடல்களை, குறிப்பாக பாரதியார் பாடல்களை, அதிக அளவில் பாடிவந்தார். தீரர் சத்தியமூர்த்தி, ராஜாஜி, திரு.வி.க போன்ற தலைவர்கள் இவரை ”அதிகமாக தேசபக்திப் பாடல்களைப் பாட வேண்டாம். பெண்ணென்றும் பாராமல் வெள்ளையரசு சிறை வைத்துவிட்டால் என்ன செய்வாய்” என்று எச்சரித்தனர். ஆனாலும் விடாமல் தேசபக்திப் பாடல்களை மேடை தோறும் பாடிவந்தார்.

பல்வேறு திரைப்படங்களில் தேசபக்தி பாடல்களையும் ஆன்மீகப் பாடல்களையும் இவர் பாடி உள்ளார். AVM நிறுவனம் தயாரித்த படங்களில் பாரத சமுதாயம் வாழ்கவே, ஆடுவோமே பள்ளு பாடுவோமே, வெற்றி எட்டுத் திக்கும் என கொட்டு முரசே போன்ற பாரதியார் பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.

நம் நாடு விடுதலை அடைந்த 1947 ஆகஸ்டு பதினைந்து அன்று அதிகாலை (நள்ளிரவு) 12 மணிக்கு விடுதலை அறிவிப்பு வந்த பிறகு, நேருவின் பேச்சு முடிந்தவுடன் வானொலி நிலையத்தார் பட்டம்மாள் அவர்களை “ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே” பாடலைப் பாடச் செய்தனர்.

இவரது மேதைமையைப் பாராட்டி இவருக்கு சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி, கான சரஸ்வதி ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் பட்டத்தை அளித்து சிறப்பித்தது.

2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் நாள் இவர் சென்னையில் காலமானார். 

செவ்வாய், 17 மார்ச், 2026

மார்ச் 17 - விண்வெளி வீர மங்கை கல்பனா சாவ்லா பிறந்ததினம்

மனிதகுலம் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதலே விண்வெளியும், அதில் பறப்பதும் மனிதனுக்கு கிளர்ச்சியூட்டும் கனவாகவே இருந்து வந்துள்ளது. விண்வெளியில் கால்பதித்த முதல் பாரத பெண்மணி என்ற பெருமைக்கு சொந்தக்காரரான கல்பனா சாவ்லாவின் பிறந்ததினம் இன்று.  


மேற்கு பஞ்சாபில் ( இன்றய பாகிஸ்தான் ) முல்தான் பகுதியைச் சார்ந்த பனாரசிலால் சாவ்லா நாட்டின் பிரிவினையின் போது இன்றய ஹரியானா மாநிலத்திற்கு குடிபெயர்ந்தார். தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த அவர் பல்வேறு சிறு தொழில்களைச் செய்து வந்தார். சவாலான ஒரு காலகட்டத்தை அந்தக் குடும்பம் கடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நான்கு குழந்தைகளில் இளையவராக 1962ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் நாள் கல்பனா பிறந்தார். 

சிறுவயதிலிருந்தே படிப்பிலும், ஓவியம் வரைவதிலும், நடனமாடுவதிலும் சிறந்து விளங்கினார் கல்பனா. மொட்டை மாடியில் அமர்ந்தவாறு வானத்தைப் பார்த்துக்கொண்டு இருப்பதிலும், விண்மீன்களை எண்ணுவதும் அவரின் முக்கியமான பொழுதுபோக்காக இருந்தது. பள்ளிப்படிப்பை முடித்த கல்பனா 1982ஆம் ஆண்டு சண்டிகர் நகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் வான்வெளிப் பொறியியல் ( Aeronautical Engineering ) துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அன்று இந்தத் துறையில் சேர்ந்த ஒரே பெண் மாணவி கல்பனாதான். அதனைத் தொடர்ந்து மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1986ல் கொலராடோ பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முதுகலைப் பட்டமும், பிறகு 1988ல் வெண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.

கல்பனாவின் கனவு விண்வெளிப் பயணம்தான். 1995 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா, கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87இல் பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். பதினைந்து நாட்கள்  252 முறை பூமியைச் சுற்றி ஒரு கோடிக்கும் அதிகமான கிலோமீட்டர் பயணம் என்று விண்வெளியில் பறந்த முதல் பாரதப் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார். 

2003ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 அனுப்பி வைக்கப்பட்டது.கல்பனா உள்பட ஏழு விண்வெளி வீரர்கள் பல்வேறு ஆராய்ச்சிக்காக இந்த விண்கலத்தில் பயணம் செய்தனர். 16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பிப்ரவரி 1ஆம் தேதி பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது அமெரிக்காவின் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச் சிதறியது. இதில் கல்பனா சாவ்லா உட்பட 7 விண்வெளி வீரர்களும் பலியாகினர். 

பிரதமர் வாஜ்பாய் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது, அவர் பார்க்க விரும்பிய முக்கியமானவர்களில் ஒருவர் கல்பனா சாவ்லா. 
விண்ணில் இருந்து பார்த்தால் பாரதத்தின் கங்கை நதியும், இமயமலையும் எவ்வளவு அழகாகத் தெரிந்தது என்று கல்பனா பிரதமரிடம் குதூகலமாகக் கூறினார்.  

ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, விண்வெளியில் மிதந்து பாரத மக்களின் விடா முயற்சியை, எந்த சவாலையும் எதிர்கொள்ளும் நெஞ்சுரத்தை உலகெங்கும் பறைசாற்றிய கல்பனா சாவ்லாவின் இறப்பு என்பது பாரத நாட்டின் தேசிய துயரமாக அனுசரிக்கப்பட்டது. 

பாரதம் விண்ணில் ஏவிய வானிலை ஆராய்ச்சி செயற்கைக்கோளுக்கு கல்பனா என்ற பெயர் சூட்டப்பட்டது. பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் பெண்கள் விடுதி, ஹரியானா மாநிலத்தின் குருஷேத்திரா நகரில் அமைந்துள்ள கோளரங்கம், எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம், வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மௌலானா அபுல்கலாம் ஆஜாத் தொழ்ல்நுட்ப பல்கலைக்கழகம் என்று பல்வேறு கல்வி நிலையங்களின் மாணவ விடுதிகள் இன்று கல்பனா சாவ்லாவின் பெயரில் அழைக்கப்படுகின்றன. பாரதத்திலும், அமெரிக்காவிலும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் அவர் பெயரில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் சிறப்புப் பரிசுகளை வழங்குகின்றன. 

வீர தீர சாகசச் செயல்களைப் புரியும் பெண்களுக்கான பரிசு கல்பனா சாவ்லா பெயரில் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. 


இன்னும் பல ஆண்டுகளுக்கு பாரதநாட்டின் பெண்களுக்கு கல்பனா சாவ்லாவின் வாழ்வு உத்வேகம் தருவதாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை 

சனி, 7 மார்ச், 2026

மார்ச் 7 - கேப்டன் கெய்ஷிங் கிளிபோர்ட் நான்க்ராம் பிறந்தநாள்


பாரத நாட்டின் வடகிழக்கு பகுதியில் பிறந்து, தெற்குப் பகுதியில் ராணுவப் பயிற்சி முடித்து வடக்கு எல்லையில் நாட்டைக் காக்க தனது உயிரை தியாகம் செய்த கேப்டன் கெய்ஷிங் கிளிபோர்ட் நான்க்ராம் அவர்களின் பிறந்தநாள் இன்று. 1975ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி பிறந்த இவர், 1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் நாள் கார்கில் போர்முனையில் கேந்த்ர முக்கியத்துவம் வாய்ந்த 4812 என்ற சிகரத்தை தனது உயிரை பலிதானம் செய்து எதிரிகளிடம் இருந்து மீட்டெடுத்தார்.

மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் நகரைச் சார்ந்த திரு கெய்ஷிங் பீட்டர் - சைலி நான்க்ராம் தம்பதியரின் மகன் கேப்டன் கெய்ஷிங் கிளிபோர்ட் நான்க்ராம். தனது பள்ளிப்படிப்பை டான் போஸ்கோ பள்ளியிலும் பின்னர் அரசியல் அறிவியல் துறையில் பட்டப்படிப்பை தூய அந்தோனியார் கல்லூரியிலும் படித்தவர் கேப்டன் கெய்ஷிங். படிக்கும் காலத்திலேயே கால்பந்தாட்டத்திலும், குத்து சண்டையிலும் திறன் பெற்று விளங்கிய கெய்ஷிங் சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்று இந்திய ராணுவத்தில் இணைந்தார்.

பயிற்சியை முடித்த கெய்ஷிங், ஜம்மு காஷ்மீர் காலாள்படைக்கு நியமிக்கப்பட்டார். அவர் ராணுவத்தில் இணைந்த இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே இமயத்தின் உச்சியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டி, எல்லைகளை மீட்டெடுக்கும் கார்கில் போர் தொடங்கியது. இறுதியில் பாரதம் இந்தப் போரில் வெற்றி பெற்றது என்றாலும், அதற்காக நாம் கொடுத்த விலை மிக அதிகம். வீரமும் துணிச்சலும் சாகசமும் நிரம்பிய பல இளைய ராணுவ அதிகாரிகளின் பலிதானத்தால் அந்த வெற்றி ஈட்டப்பட்டது.

1999ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி இரவில் 4812 என்ற சிகரத்தை எதிரிகளிடம் இருந்து மீட்டெடுக்குமாறு கேப்டன் கெய்ஷிங்க்குக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. செங்குத்தான வழியில் ஏறித்தான் மலை உச்சியை அடைய முடியும். அதிலும் அங்கே பதுங்குகுழி அமைத்து எதிரிகள் தங்கி இருந்தனர். எந்தப் போரிலும் மலை உச்சியில் இருப்பவர்களுக்கு அனுகூலங்கள் அதிகம். பதுங்குகுழி என்பதால் விமானத்தின் மூலமான தாக்குதலும் பயன் தராது. மலையின் மீதேறி சென்ற வீரர்களுக்கு ஓன்று மட்டும் நிச்சயமாகத் தெரியும். கட்டாயமாகஉயிரோடு  திரும்பி வரப்போவதில்லை, மூவர்ணக் கொடி போர்த்திய உடலாகத்தான் திரும்புவோம் என்பதில் அவர்கள் யாருக்கும் சந்தேகமே இல்லை. ஆனால் வீரர்கள் மரணத்தைக் கண்டு அஞ்சுவது இல்லை. கெய்ஷிங் தலைமையில் ஒரு சிறு அணி முன்னேறத் தொடங்கியது.

மலைமுகட்டை நோக்கிச் சென்ற வீரர்களை தொடர்ச்சியான துப்பாக்கிக் குண்டுகளும், பீரங்கி குண்டுகளும் வரவேற்றன. மலை உச்சிக்கு அருகே செல்ல பத்து மணி நேரம் ஆனது. தொடர்ந்து வெடிக்கும் குண்டுகளுக்கு சிக்காமல் தரையோடு தரையாக ஊர்ந்து செல்ல வேண்டிய பாதை அது. மலை உச்சிக்கு மிக அருகே இருக்கும் போது, வேறு எந்த போர்முயையும் பயன் தராது நேரடியான போரைத்தான் தொடங்க வேண்டும் என்று கேப்டன் கெய்ஷிங் முடிவெடுத்தார். மழையென பொழியும் குண்டுகளுக்கு நடுவே புகுந்து தனது கையெறி குண்டுகளை வீசி எதிரிகளின் ஒரு பதுங்குகுழியை  அவர் அழித்தொழித்தார். அதோடு அங்கே பதுங்கி இருந்த பாகிஸ்தான் வீரர்களும் மரணம் அடைந்தனர்.

அடுத்த பதுங்குகுழியில் இருந்து வெளியே வந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் கேப்டன் கெய்ஷிங் மீது தாக்குதலைத் தொடங்கினார்கள். இதற்கு நடுவே அவரது வீரர்கள் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி கேந்த்ர முக்கியத்துவம் வாய்ந்த அந்த மலைச்சிகரத்தை தங்கள் வசம் கொண்டு வந்தனர். ஆனால் எதிரிகளின் தொடர்ச்சியான துப்பாக்கி குண்டுகளை தன்மீது வாங்கி கேப்டன் கெய்ஷிங் வீரமரணம் அடைந்தார்.

கேப்டன் கெய்ஷிங் கிளிபோர்ட் நான்க்ராம் அவர்களின் வீரம் இந்தப் போரில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. இருபத்தி நான்கு வயதே நிரம்பிய கேப்டன் கெய்ஷிங் அவர்களுக்கு போர்க்காலத்தில் அளிக்கப்படும் இரண்டாவது மிக உயரிய விருதான மஹாவீர் சக்ரா விருதை வழங்கி நாடு தனது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டது.

தான் ராணுவத்தில் பணியாற்றிய காலத்தில், விடுமுறைக்காக வீடு திரும்பும் கேப்டன்  கெய்ஷிங் தனது பகுதியில் உள்ள கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களை ராணுவத்தில் சேரச் சொல்லி அதற்கான தயாரிப்புகள் பற்றி வகுப்புகள் எடுப்பது வழக்கம். இன்றும் அவரது படையணியைச் சார்ந்தவர்கள் அவர் நினைவாக ஷில்லாங் நகரின் பல கல்வி நிலையங்களில் ராணுவ சேவைக்காக மாணவர்களை ஆற்றுப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

நமது எதிர்காலத்திற்காக தங்கள் நிகழ்காலத்தை பணயம் வைக்கும் ராணுவ வீரர்களுக்கு நமது நன்றிகள் உரித்தாகுக. 

சனி, 28 பிப்ரவரி, 2026

பிப்ரவரி 29 - மொரார்ஜி தேசாய்பிறந்தநாள்

காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமரான திரு மொரார்ஜி தேசாய் அவர்களின் பிறந்தநாள் இன்று.

1896ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29ஆம் நாள் குஜராத் மாநிலத்தில் பல்சார் மாவட்டத்தில் ஒரு ஆசிரியரின் மூத்த மகனாகப் பிறந்தவர் தேசாய் அவர்கள். தனது பள்ளிப்படிப்பை குஜராத்திலும், பட்டப்படிப்பை மும்பையில் முடித்த இவர் அரசு வேலையில் இணைந்தார். கோத்ரா மாவட்டத்தில் துணை ஆட்சியாளராக இருந்த இவர், காந்தியின் அழைப்பை ஏற்று பணியைத் துறந்து இந்திய விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஒத்துழையாமை இயக்கம் போன்ற போராட்டங்களில் பங்கு கொண்டு பல்லாண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். சுதந்திரத்துக்கு முன்பு பிளவு படாத பம்பாய் ராஜதானியின் வருவாய் மற்றும் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் 1952ஆம் ஆண்டு பம்பாய் ராஜதானியின் இரண்டாவது முதலமைச்சராகப் பணியாற்றினார்.

குராஜாத்தில் உள்ள சூரத் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து 1957ஆம் ஆண்டில் இருந்து ஐந்துமுறை ( இருபத்தி மூன்று ஆண்டுகள்)  வெற்றிபெற்றார். நேருவின் அமைச்சரவையில் 1958ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டுவரை நிதியமைச்சராகப் பணியாற்றினார். நேருவின் மறைவிற்குப் பிறகு பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தேசாய், கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் லால் பகதூர் சாஸ்திரியை தேர்ந்தெடுத்தால், அந்த வாய்ப்பை நழுவவிட்டார்.

சாஸ்திரியின் அகால மரணத்திற்குப் பிறகு மீண்டும் பிரதமர் போட்டியில் குதித்த தேசாய், நேருவின் மகளான இந்திரா காந்தியிடம் தோல்வியுற்றார். ஆனால் இந்திராவின் அமைச்சரவையில் 1967 முதல் 1969வரை துணைப்பிரதமராகவும், நிதியமைச்சராகவும் பணியாற்றனார்.

வங்கிகளைத் தேசியமயமாக்க இந்திரா முடிவு செய்து தேசாயிடமிருந்து நிதித்துறையை பறித்தார். ஆனாலும் துணைப்பிரதமராக பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார். அதை மறுத்து தேசாய் மந்திரிசபையில் இருந்து வெளியேறினார். அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. காங்கிரஸின் அதிகாரபூர்வ வேட்பாளருக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டி வேட்பாளரை நிறுத்தி அவரை இந்திரா வெற்றிபெறவைத்தார். கட்சி பழைய தலைவர்களை முன்னிறுத்தி சிண்டிகேட் எனவும் இந்திராவை முன்னிறுத்தி இண்டிகேட் எனவும் இரண்டானது. அதைத்தொடர்ந்து வந்த தேர்தலில் இந்திரா பெரும் வெற்றிபெற்றார்.

நேரு குடும்பத்தின் ஆட்சிக்கான அட்சாரமாக எழுபதுகளின் தொடக்கம் இருந்தது. பிரதமர் இந்திராவின் இளைய மகன் சஞ்சய் முக்கியமான அதிகாரமையமாக உருவானார். நாடெங்கும் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பமானது. அரசியலை விட்டு விலகியிருந்த லோக்நாயக் ஜெயப்ரகாஷ் நாராயணன் தலைமையில் மாணவர்கள் ஓன்று திரண்டனர். இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது. பிரச்சனைகளை சமாளிக்க இந்திரா நெருக்கடி நிலையை அறிவித்தார்.

சுதந்திரம் அடைந்து முப்பது ஆண்டுகளுக்கு உள்ளாக இந்தியா மீண்டும் தனது ஜனநாயக உரிமைகளை இழந்தது. அநேகமாக எல்லா எதிர்கட்சித் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திராவே இந்தியா என்று இந்திரா காங்கிரஸின் தலைவர்கள் கோஷமிட்ட ஆரம்பித்தனர். பத்திரிகைகள் கடுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டன. அரசை விமர்சிக்கும் எந்த செய்தியும் பிரசுரிக்கும் நிலை இல்லாமல் ஆனது.

1977ஆம் ஆண்டு திடீர் என்று இந்திரா நெருக்கடி நிலையை விலக்கிக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை அறிவித்தார். ஜெயப்ரகாஷ் நாராயணனின் வழிகாட்டலில் பெருவாரியான எதிர்க்கட்சிகள் இணைத்து ஜனதா கட்சி என்ற பெயரில் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றன. நாட்டின் நான்காவது பிரதமராக, காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமராக தனது எண்பத்தி ஒன்றாம் வயதில் மொரார்ஜி தேசாய் தேர்வானார்.

உள்கட்சி பூசலால் ஜனதா கட்சியின் ஆட்சி கவிந்தது. 1980ஆம் ஆண்டு நேரடி அரசியலில் இருந்து தேசாய் விலகிக்கொண்டார்.
வாழ்நாள் முழுவதும் உண்மையான காந்தியவாதியாக இருந்த தேசாய் மிக எளிமையான வாழ்வை மேற்கொண்டார். நீண்ட அரசியல் வாழ்வில் அவரது எதிரிகள்கூட அவர் மீது எந்தக் குற்றச்சாட்டையும் கூற முடியவில்லை.

அரசியல் வாழ்வில் இருந்து விலகிய பிறகு, தான் வசித்து வந்த வீட்டுக்கு வாடகை செலுத்த முடியாத காரணத்தால் அந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்றால் இன்றய தலைமுறையால் அதனை நம்பவே  முடியாது.

இந்திய அரசு தேசாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி மரியாதை செலுத்தியது. பாகிஸ்தான் அரசு தனது உயரிய விருதான நிஷான் ஹி பாகிஸ்தான் விருதை அவருக்கு வழங்கியது

தனது 99 ஆம் வயதில் 1995 ஏப்ரல் மாதம் 10ஆம் நாள் மும்பையில் தேசாய் காலமானார்.

இந்த நாளில் தேசாயைப் போல ஒழுக்கமானவராக இருப்போம் என்று உறுதி பூணுவோம்.