புதன், 19 நவம்பர், 2025

நவம்பர் 19 - ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் பிறந்ததினம்

பாரதப் பெண்களின் வீரத்திற்கு உதாரணம் சொல்லவேண்டும் என்றால் அனைவரும் ஒருமித்த குரலில் கூறும் பதில் ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் என்றுதான் இருக்கும். அந்த வீரத்தாயின் பிறந்ததினம் இன்று. 


ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், 19 நவம்பர் 1828 ஆம் ஆண்டு  வாரணாசி நகரில்  ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மணிகர்ணிகா என்பதாகும். தனது நான்காவது வயதிலேயே தாயை இழந்து, தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். சிறுவயதிலேயே குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் மற்றும் கத்திச்சண்டை போன்றவற்றில் பயிற்சி பெற்று இருந்தார்.
1842 ஆம் ஆண்டு ஜான்சியின் மஹாராஜாவாக இருந்த கங்காதர்ராவ் நிவால்கர் என்பவரை மணந்து கொண்டார். அதன் பிறகு லக்ஷ்மிபாய் என்று அழைக்கப்படலானார். இவர்களுக்கு 1851ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தான், ஆனால் சில மாதங்களிலேயே அந்த மகன் இறந்துவிட்டான்.

1853 ல், மகாராஜா கங்காதர் ராவின் உடல்நிலை பலவீனமானதால், அவர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தனர். இந்தத் தத்தெடுப்பின் மீது ஆங்கிலேயர்கள் பிரச்சனை எழுப்பக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்த லட்சுமிபாய் அவர்கள், உள்ளூர் ஆங்கிலேய பிரதிநிதிகளை சாட்சியாக வைத்து இந்த தத்தெடுப்பை நடத்தினார். நவம்பர் 21 ஆம் தேதி, 1853 ஆம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் மரணமடைந்தார். அந்த காலகட்டத்தில்,  பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ‘லார்ட் தல்ஹௌசீ’ என்பவர் ஆட்சியில் இருந்தார்.

ராணி லட்சுமிபாய் அவர்கள், தத்தெடுத்த குழந்தைக்கு ‘தாமோதர் ராவ்’ என்று பெயரிட்டார். இந்துமத மரபின் படி, அக்குழந்தையே லட்சுமிபாய் அவர்களின் சட்ட வாரிசாக இருந்தது. இருப்பினும், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அந்த குழந்தையை சட்ட வாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். மறுப்பு கோட்பாட்டின் (Doctrine of Lapse) படி,  லார்ட் தல்ஹௌசீ அவர்கள் ஜான்சி அரசைப் பறிமுதல் செய்ய முடிவுசெய்தார். ராணி லட்சுமிபாய் அவர்கள், ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரிடம் சென்று ஆலோசனைக் கோரினார். அதன்பிறகு, அவர் லண்டனில் அவரது வழக்கிற்கான ஒரு முறையீட்டை மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஆங்கிலேய அதிகாரிகள், லட்சுமிபாய் அவர்களின் அரசு நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், ராணி லட்சுமிபாய் அவர்களை ஜான்சி கோட்டையை விட்டு செல்லுமாறு ஒரு ஆணை நிறைவேற்றப்பட்டதால், ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், ஜான்சியிலுள்ள ‘ராணி மஹாலுக்கு’ சென்றார். அந்நேரத்திலும், லட்சுமிபாய் அவர்கள், ஜான்சி அரசைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.

ராணி லக்ஷ்மி பாய் அவர்களை ஜான்சியை விட்டு வெளியேறி சொல்லி பிறப்பித்த ஆணை, ஜான்சியை எழுச்சியின் இடமாக மாற்றியது. ஜான்சி ராணி அவர்கள் தனது நிலையை வலுப்படுத்த தொடங்கினார். பிறரது ஆதரவை நாடிய அவர், அவரது ஆதரவாளர்களைக் கொண்டு ஒரு தொண்டர் படையை உருவாக்கினார். அவர் உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை, அதில் பெண்களும் கூட தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நடந்த கிளர்ச்சியில், ராணி லட்சுமிபாய், அவரது தளபதிகளுடன் இணைந்து போர் புரிந்தார்.

1857 ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து அக்டோபர் வரை இருந்து,  ராணி லக்ஷ்மி பாய் அவர்கள் அவரது அண்டை நாடுகளான ஓர்ச்சா மற்றும் டாடியாவை படையெடுத்து, அந்நாட்டுப் படைகளின் மூலமாக ஜான்சியைப் பாதுகாத்தார். இதுவே, ஜனவரி 1858ல், பிரிட்டிஷ் இராணுவம், ஜான்சியை நோக்கி படையெடுத்தற்கான காரணமாகும். ஜான்சிக்கும், பிரிட்டிஷ் ராணுவத்திற்குமான மோதல் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தது. இறுதியாக, இரண்டே வாரங்களில் ஆங்கிலேய அரசு ஜான்சி நகரத்தைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. எனினும், அவர் ஒரு ஆண்மகன் வேடம் பூண்டிருந்ததால், அவரை யாரும் அடையாளம் காணவில்லை. தனது வளர்ப்பு மகனை மடியில் ஏந்தியபடியே தப்பித்தார்.

ஆங்கிலேயர் பிடியிலிருந்து தப்பித்த ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், கல்பியில் தஞ்சம் அடைந்தார். அங்கு அவர், 1857ல் நடந்த கிளர்ச்சியில் பங்கேற்ற மாவீரன் தாந்தியா தோபேவை சந்தித்தார். ஆங்கிலேயர்களின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. ஆங்கிலேயப் படையை எதிர்த்து, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் ஜான்சிராணி போரிட்டார். ஆனால், ஆங்கிலேயர்களின் நவீன போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல், 18 ஜூன் 1858 ஆம் ஆண்டு ஜான்சி ராணி அவர்கள் இறந்தார். ராணியின் உடலைக்கூட எதிரிகள் கைப்பற்றி விடக்கூடாது என்று அவரின் வீரர்கள் ராணியின் உடலை எரித்து விட்டனர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் அணிக்கு ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் அணி என்றுதான் பெயரிட்டார். காலங்களைக் கடந்தும் அந்த வீரப்பெண்மணியின் வரலாறு நாடு மக்களை மெய்சிலிர்க்க வைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

செவ்வாய், 18 நவம்பர், 2025

நவம்பர் 18 - திரைப்பட இயக்குனர் V சாந்தாராம் பிறந்தநாள்

வெற்றிகரமான இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் என்ற பல முகங்களைக் கொண்ட திரு சாந்தாராமின் பிறந்தநாள் இன்று. திரைப்படங்களில் ஒலியையும் ஒளியையும் புகுத்திய கலைஞர்களில் இவர் ஒரு முன்னோடி.


1901  ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் நாள் இன்றய மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோல்ஹாபூர் நகரில் பிறந்தவர் சாந்தாராம். இள வயதிலேயே கலையார்வம் கொண்டவராக விளங்கிய சாந்தாராம், பாபுராவ் என்பவர் நடத்திய திரைப்பட நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். 1921ஆம் ஆண்டு சுரேகா ஹரன் என்ற மௌன படத்தில் அறிமுகமானார். நேதாஜி பால்கர் என்ற படத்தை முதல்முதலாக 1927ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்டார். சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் படைத் தளபதி நேதாஜி பாலகர் பற்றிய படம் இது.

அதனைத் தொடர்ந்து 1929ஆம் ஆண்டு நண்பர்கள் சிலரோடு இணைந்து பிரபாத் திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் 1932ஆம் ஆண்டு தயாரான அயோத்திசா ராஜா என்ற படம்தான் மராட்டி மொழியில் தயாரான முதல் படம். அதற்கு முன் அநேகமாக மௌனப் படங்கள்தான் பாரதத்தில் தயாரிக்கப் பட்டு வந்தன. ஒரே நேரத்தில் மராத்தி மொழியிலும் ஹிந்தி மொழியிலும் சாந்தாராம் இயக்கி இருந்தார்.

சமகால வாழ்க்கையைப் பதிவு செய்ததிலும், பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில் இயக்குனர் சாந்தாராம் இன்றும் நினைக்கப்படுகிறார். காவல்துறையைச் சார்ந்த ஒருவருக்கும் பாலியல் தொழில் செய்து வந்த பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட காதலை மனூஸ் என்ற மராத்தி மொழிப் படத்தில் கையாண்டார் சாந்தாராம். மஹாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய ஹிந்து சமயத் துறவியான ஏகநாதரைப் பற்றி தர்மாத்மா, வயதான முதியவரை திருமணம் செய்ய மறுக்கும் இளம் பெண்ணைப் பற்றி துனியா ந மானே ஆகியவை இவர் ஆரம்ப காலங்களில் இயக்கிய முக்கியமான படங்களாகும்.

பிரபாத் திரைப்பட நிறுவனத்தில் இருந்து விலகி 1942ஆம் ஆண்டு ராஜ்கமல் கலாமந்திர் என்ற திரைப்பட நிறுவனத்தை அவர் தொடங்கினார். ஏறத்தாழ அறுபதாண்டு காலத்திற்கும் மேலாக சாந்தாராம் திரைத்துறையில் பங்களித்து வந்தார். ஜனக் ஜனக் பாயல் பஜே என்ற பெயரில் இவர் இயக்கிய திரைப்படம்தான் முதல் வண்ணப்படம். நடனக் கலைஞர்களை கதாநாயகர்களாகக் கொண்ட இந்தப் படம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது.

சிறைத்தண்டனை என்பது கைதிகளை நல்வழிப்படுத்தவே அமைக்கப்பட்டவை என்ற எண்ணத்தை விதைக்கும் தோ ஹங்கேன் பாரா ஹாத் ( இரண்டு கண்களும் பனிரெண்டு கைகளும் ) என்ற படம் திரையுலகில் ஒரு மைல்கல் என்று கூறலாம். பெர்லின் நகரில் நடந்த திரைப்பட விழாவில் வெள்ளிகரடி விருதையும் அமெரிக்காவிற்கு வெளியே எடுக்கப்பட்ட படங்களில் சிறந்த படம் என்ற விருதையும் பெற்ற படம் இது. பல்லாண்டு வாழ்க என்ற பெயரில் எம் ஜி ஆர் நடிப்பில் தமிழிலும் இந்தப்படம் எடுக்கப்பட்டது.

திரைப்படத் துறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது சாந்தாராமுக்கு 1985ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இவரது மரணத்திற்குப் பின்னர் 1992ஆம் ஆண்டு இவருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் நாள் இயக்குநர் சாந்தாராம் காலமானார். 

திங்கள், 17 நவம்பர், 2025

நவம்பர் 17 - பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் நினைவுதினம்


அந்நிய வல்லாதிக்கத்திற்கு எதிராக போராடிய வீரர்களின் தலைவர்களாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் இருந்தவர்கள் மூவர். மஹாராஷ்டிராவைச் சார்ந்த லோகமானிய பால கங்காதர திலகர், வங்காளத்தைச் சார்ந்த பிபின் சந்திர பால், பஞ்சாபைச் சார்ந்த லாலா லஜபதி ராய் ஆகியோரே அந்த மும்மூர்த்திகள். சுதேசி இயக்கம், அன்னியப் பொருள்களை வாங்காது இருத்தல், முழுமையான சுதந்திரம் என்பதே அவர்களின் இலக்காக இருந்தது. கூட்டங்கள் போட்டு தீர்மானம் நிறைவேற்றி அரசிடம் மனு கொடுப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பது இவர்களின் எண்ணம். ஆயுதம் ஏந்திப் போராடிய பல வீரர்கள் இவர்களின் சீடர்களாக இருந்தார்கள்.

1865ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் நாள் பஞ்சாபி மாநிலத்தில் உள்ள துடுக்கி என்ற கிராமத்தில் வசித்து வந்த முன்ஷி ராதாகிருஷ்ண அகர்வால் - குலாப் தேவி தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் லஜபதி ராய். பள்ளிப் படிப்பை முடித்த லஜபதி ராய் லாகூர் நகரில் உள்ள அரசு கல்லூரியில் சட்டம் படிக்கத் தொடங்கினார். அந்த சமயத்தில் ஆரிய சமாஜத்தின் கொள்கைகளால் கவரப்பட்டு சமாஜத்தின் உறுப்பினர் ஆனார். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே ஆர்ய கெசட் என்ற பத்திரிகையை தொடங்கி அதன் ஆசிரியராகவும் இருந்தார். ஹிந்து மதம் என்ற குடையின் கீழ்தான் மக்களை ஓன்று திரட்டி விடுதலைக்காக போராடுவதுதான் வெற்றிகரமாக இருக்கும் என்பதே லஜபதி ராயின் நிலைப்பாடாக இருந்தது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிஸார் நகரில் தனது வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய லஜபதி ராய் சிறிது காலத்திலேயே லாகூர் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றத் தொடங்கினார். ஹிஸார் நகரில் இருந்த போது அங்கே காங்கிரஸ் கட்சியின் கிளையையும், ஆரிய சமாஜத்தின் கிளையையும் தொடங்கினார். 1888 மற்றும் 1889 ஆம் ஆண்டுகளில் ஹிஸார் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.

காங்கிரஸ் இயக்கத்தின் போராட்டங்களை முன்னெடுத்ததைத் தொடர்ந்து எந்த விசாரணையும் இல்லாமல் ஆங்கில அரசு இவரை இன்றய மியான்மர் நாட்டில் உள்ள மண்டலே நகருக்கு நாடு கடத்தியது. சில காலத்திலேயே அந்த உத்தரவு திருப்பிப் பெறப்பட, லஜபதி ராய் தாயகம் திரும்பினார். 1907ஆம் ஆண்டு சூரத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு முக்கியமான ஒன்றாகும். அதில்தான் காங்கிரஸ் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று இரண்டு பிரிவாக உடைந்தது. அந்த மாநாட்டின் தலைவர் பதவிக்கு லஜபதி ராய் போட்டியிட்டார். ஆனால் மாநாட்டில் ஏற்பட்ட குழப்பத்தாலும், கைகலப்பாலும் அவர் வெற்றி பெற முடியவில்லை.

ஆங்கில கல்விக்கு எதிராக தயானந்த் வேதிக் ஆங்கில பள்ளிகள் ( Dayanath Anglo Vedic Schools - DAV Schools ) என்ற கல்வி நிலையங்களை லஜபதி ராய் உருவாக்கினார். லாகூர் நகரில் தேசிய கல்லூரி என்ற நிலையத்தை உருவாக்கினார். இந்தக் கல்லூரி மாணவர்தான் புரட்சியாளர் பகத்சிங். பஞ்சாப் நேஷனல் வங்கி, லக்ஷ்மி இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களும் லஜபதி ராய் துவங்கியவைதான். விடுதலை அடைவது மட்டுமல்லாது, அதனைத் தொடர்ந்து புனர்நிர்மாணப் பணிகள் பற்றியும் லஜபதி ராய் ஆழமாகச் சிந்தித்து செயலாற்றினார் என்பது அவர் நிறுவிய பல்வேறு நிறுவனங்கள் மூலம் புலனாகிறது.

முதலாம் உலகப் போர் நடந்த சமயத்தில் லஜபதி ராய் இங்கிலாந்து நாட்டிலும் அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அமெரிக்காவில் இருந்த பல்வேறு இந்திய விடுதலை வீரர்களை ஒன்றிணைக்கும் பணியில் அவர் ஈடுபட்டு இருந்தார்.

1920ஆம் ஆண்டு நாடு திரும்பிய லஜபதி ராய் அந்த ஆண்டு கொல்கத்தா நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜாலியன்வாலாபாக் படுகொலையை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை லஜபதி ராய் தலைமைதாங்கி நடத்தினார். காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தின் பஞ்சாப் மாநிலத்தின் தளபதியாக செயல்பட்ட லஜபதி ராய், திடீர் என்று காந்தி அந்தப் போராட்டத்தை விலக்கிக் கொண்டதை ஏற்க மறுத்தார். சுதந்திர காங்கிரஸ் கட்சி என்ற அமைப்பை உருவாக்கினார். காங்கிரஸ் தொடர்ந்து முஸ்லிம்களுக்காக  அளவுக்கு அதிகமாக வளைந்து கொடுக்கிறது என்ற நிலைப்பாடு உடைய லஜபதி ராய் 1923ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே நாட்டில் வாழ முடியாது, எனவே இரண்டு நாடுகளாக நாட்டைப் பிரித்து, மக்களை இடம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பத்திரிகையில் எழுதினார். இது பெரும் சர்சையைக் கிளப்பியது.

இந்தியர்கள் எவரும் இல்லாத சைமன் கமிஷனை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு செய்தது. 1928ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் நாள் சைமன் கமிஷனை புறக்கணித்து லாகூர் நகரில் நடைபெற்ற ஊர்வலத்தை லாலா லஜபதி ராய் தலைமைதாங்கி நடத்தினார். காவல்துறை கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஸ்காட் தடியடி நடத்தி ஊர்வலத்தை கலைக்க உத்தரவிட்டார். காவலர்கள் லாலா லஜபதி ராயை லத்தியால் தாக்கினர். "இது என் மீது விழும் அடியல்ல, ஆங்கில ஏகாதிபத்தியத்தின் சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் ஆணிகள்" என்று லஜபதி ராய் முழங்கினார்.

அறுபத்தி மூன்று வயதான தலைவர் தன்மீது தொடுக்கப்பட்ட தாக்குதலால் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் 1928ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் நாள் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் மரணமடைந்தார்.

தலைவரின் மரணம் இளைஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. பழி வாங்குவோம் என்று ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபபிளிக் படை உறுதி பூண்டது. ஜான் சாண்டர்ஸ் என்ற காவல் அதிகாரியை சுட்டுக் கொன்று பகத்சிங்கும் ராஜகுருவும் ஆங்கில ஆட்சிக்கு சவால் விட்டனர்.

பாரத  கல்வி முறை பற்றி, ஆங்கில அரசு பாரத நாட்டைச் சுரண்டியது பற்றி, தனது நாடுகடத்தல் தண்டனை பற்றி, ஆர்ய சமாஜ் பற்றி என்று பல்வேறு நூல்களை லஜபதி ராய் எழுதி உள்ளார்.

மும்பையில் வணிகவியல் கல்லூரி, மீரட் நகரில் மருத்துவக் கல்லூரி, பஞ்சாப் மாநிலத்தில் மோகா நகரில் தொழில்நுட்பக் கல்லூரி, ஹிஸார் நகரில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவை இன்று லாலா லஜபதி ராய் பெயரைத் தாங்கி நடந்து வருகின்றன.

லஜ்பத் நகர் உள்ளிட்ட டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கு லாலா லஜபதி ராய் பெயரைச் சூட்டி நாடு அந்த வீரரை மரியாதை செலுத்தி உள்ளது. 


ஞாயிறு, 16 நவம்பர், 2025

நவம்பர் 16 - புரட்சியாளர் விஷ்ணு குமார் பிங்கிலே நினைவுநாள்


பாரத நாட்டின் விடுதலை என்பது கத்தியின்றி ரத்தமின்றி அடைந்ததல்ல. தன்னலம் கருதாத எண்ணற்ற வீரர்களின் தியாகத்தின் மீது கட்டமைக்கப்பட்டது அது. நாட்டின் விடுதலையை மனதில் கொண்டு உலகத்தின் பல பகுதிகளில் அதற்கான முன்னெடுப்பைச் செய்த தியாகிகள் பலர். ஆனால் இன்று அவர்களில் பலரை திட்டமிட்டு மறைத்து விட்டனர் சிலர். அப்படி பெருவாரியான மக்களால் அறியப்படாத விஷ்ணு குமார் பிங்கிலேவின் பலிதான நாள் இன்று.

பூனா நகரில் வசித்துவந்த ஒரு மஹாராஷ்டிர பிராமண குடும்பத்தின் ஒன்பதாவது குழந்தையாக 1888ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்தவர் விஷ்ணு குமார் பிங்கிலே. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே வீர சாவர்க்கரால் கவரப்பட்டு தேசிய உணர்ச்சியில் ஊன்றியவர் அவர். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு மாஹிம் பகுதியில் நடைபெற்றுவந்த பயோனீர் அல்கலி ஒர்க்ஸ் என்ற தொழில்சாலையில் பணிக்கு சேர்ந்தார் அவர். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் திரு கோவிந்தராவ் போட்தார் என்பவர். தேசியவாதியாக அவர் வெடிகுண்டு தயாரிப்பில் விற்பன்னர். போட்தார் பிங்கிலேவை பல்வேறு புரட்சியாளர்களோடு அறிமுகம் செய்து வைத்தார், அதுபோக பிங்கிலேவிற்கு வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியையும் அளித்தார்.

பிங்கிலேவின் நடவடிக்கைகளை அரசு கண்காணிக்கத் தொடங்கியது. எனவே பிங்கிலே பாரத நாட்டை விட்டு அமெரிக்கா செல்ல முடிவு செய்தார். அங்கே வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் ( Mechanical Engineering ) படிக்க அனுமதி கிடைத்து இருந்தது. மிக ரகசியமாக இந்த தகவலை வைத்து இருந்த பிங்கிலே ரயில் பெட்டியில் ஏறுவதற்கு சற்று முன்னரே தனது அண்ணனிடம் தான் அமெரிக்கா செல்லும் தகவலைச் சொன்னார்.

அமெரிக்காவில் ஹிந்து, முஸ்லீம், சீக்கிய, பார்சி என்று பல்வேறு மதங்களைச் சார்ந்த புரட்சியாளர்கள் இணைந்து கதர் கட்சி என்ற அமைப்பை நடத்தி வந்தனர். கதர் என்ற உருது மொழி சொல்லின் பொருள் புரட்சி என்பதாகும். ஆயுதம் தாங்கிய போராட்டம் வழியே ஆங்கில ஆட்சியை அகற்ற முடியும் என்பது அவர்கள் எண்ணம். பாய் பரமானத், சோஹன் சிங், பகவான் சிங், ஹர் தயாள், தாரகநாத் தாஸ், கர்த்தார் சிங், அப்துல் ஹஸிஸ் முஹம்மத் பரக்கத்துல்லா, ராஷ்பிஹாரி போஸ் ஆகியோர் அதில் முக்கியமான தலைவர்கள்.

முதலாம் உலகப் போர் தொடங்கிய நேரம் அது. பாரதம் முழுவதும் ஒரே நேரத்தில் போராட்டங்களை உருவாக்கி ஆங்கில ஆட்சியை அகற்ற வேண்டும், அதற்கு ஜெர்மனி துணை நிற்கும் என்ற உறுதி மொழி அளிக்கப்பட்டது. 1914ஆம் ஆண்டு பிங்கிலே மீண்டும் தாயகம் திரும்பினார். ஏற்கனவே லோகமான்ய திலகரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட லாலா லஜபதி ராய், அரவிந்த கோஷ் ஆகியோர் வட இந்தியா முழுவதும் புரட்சிக்கனலை தூண்டிவிட்டுக் கொண்டுதான் இருந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயுதம் தாங்கிய புரட்சிக்கு பல்வேறு இளைஞர்கள் தயாராகி கொண்டுதான் இருந்தார்கள்.

கொல்கத்தா நகருக்கு வந்து சேர்ந்த பிங்கிலே அங்கிருந்து பனாரஸ், லாகூர், அம்ரித்ஸர் ஆகிய நகரங்களில் உள்ள புரட்சியாளர்களோடு தொடர்பு கொண்டார். அன்றய பிரிட்டிஷ் ராணுவத்திலும் ஊடுருவிய புரட்சியாளர்கள் பல இடங்களில் உள்ள இந்திய சிப்பாய்களையும் தங்களுக்கு ஆதரவாக ஏற்கனவே மாற்றி வைத்து இருந்தனர். 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரே நேரத்தில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கும் ராணுவ வீரர்கள் ஆங்கில ஆட்சியை எதிர்த்து போராடத் துவங்கவேண்டும் என்பது திட்டம். ஆனால் இதற்கு நடுவே போராட்டக்காரர்களின் திட்டங்களை அரசு வேவு பார்க்கத் தொடங்கி இருந்தது. எனவே திட்டமிட்ட நாளுக்கு முன்னமே பல பகுதிகளில் இருந்த சிப்பாய்கள் ஆட்சியை எதிர்த்து போராடத் தொடங்கினார்கள். ஆனால் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் போனதால் அரசு அந்த முயற்சியை முறியடித்து விட்டது. கதர் புரட்சி என்றும் முதலாம் லாகூர் சதிவழக்கு என்று இந்த முயற்சி வரலாற்றில் பதிவானது.

மொத்தம் 291 புரட்சியாளர்கள் மீது வழக்கு பதிவானது. இதில் 42 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, 114 பேர் ஆயுள் தண்டனை பெற்று அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். 93 பேர் பல்வேறு காலத்திற்கான தண்டனைக்கு உள்ளானார்கள்.

1915ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் நாள் விஷ்ணு குமார் பிங்கிலே லாகூர் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார். அப்போது அவருக்கு வயது இருபத்தி ஏழு மட்டுமே.

வீரர்களின் தியாகத்தை மனதில் வைப்போம். பெற்ற சுதந்திரத்தை கண் போல் காப்போம். 

சனி, 15 நவம்பர், 2025

நவம்பர் 15 - ஆச்சார்ய வினோபா பாவே நினைவுநாள்

"எனது சீடனாக வந்து எனது ஆசிரியராக மாறியவர்" என்று காந்தியால் புகழப்பட்டவர், தனிநபர் சத்தியாகிரஹத்தின் முதல் போராளி,  நாடு முழுவதும் சுற்றிவந்து நிலச்சுவான்தார்கள் இடமிருந்து நிலங்களைப் பெற்று அதனை நிலமற்ற ஏழைத் தொழிலாளிகளுக்கு அளித்த பூதான இயக்கத்தின் தந்தை, பலமொழி அறிஞர், காந்தியின் ஆன்மீக வாரிசு என்று அறியப்படும்  ஆச்சாரிய வினோபா பாவேயின் நினைவுநாள் இன்று.



இன்று மும்பையின் பகுதியாக விளங்கும் கொலாபா பகுதியில் வசித்து வந்த நரஹரி சம்புராவ் - ருக்மணி தேவி தம்பதியரின் மூத்த மகனாக 1895ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் பிறந்தவர் விநாயக் நரஹரிராவ் என்னும் வினோபா பாவே. இறைநம்பிக்கையை கொண்ட தாயாலும் பாட்டியாலும் வளர்க்கப்பட்டதால் சிறுவயதிலேயே இதிகாச புராணங்களையும், கீதையையும் வினோபா முழுமையாகக் கற்று இருந்தார்.

1916ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தேர்வு எழுத மும்பைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டிய  இருந்த வினோபா  தனது கல்விச் சான்றிதழ்கள் எல்லாவற்றையும் தீயில் வீசிவிட்டு மும்பை செல்லாமல் காசிக்கு பயணமானார். ஆன்மீக சாதனையில் ஈடுபடத்தான் அவர் நினைத்து இருந்தார். ஆனால் காலம் அவர்க்கு வேறு வழியைக் காட்ட தீர்மானித்தது. காசியில் இருந்தபடி காந்தியோடு கடித தொடர்பை ஏற்படுத்தினார். காந்தி அவரை அஹமதாபாத் நகரில் அவர் தங்கி இருந்த கோசரப் ஆசிரமத்திற்கு வருமாறு அழைத்தார். அந்த சந்திப்பு வினோபாவை முழுவதுமாக மாற்றியது.

தனிப்பட்ட ஆன்மீக சாதனைகளை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு அவர் தேசப்பணிக்கு தன்னை அர்ப்பணம் செய்துகொண்டார். காந்தியின் அறிவுரையின்படி மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வார்தா பகுதியில் அமைந்துள்ள ஆஸ்ரமத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அங்கே அவர் மஹாராஷ்டிரா தர்மா என்ற மராட்டி மாத இதழை நடத்தலானார். பின்னர் அந்த இதழ் வார இதழாக வெளிவரத் தொடங்கியது. அதில் தொடர்ந்து உபநிஷதங்களின் உரைகளை எழுதலானார். கதர், கைத்தொழில், சுகாதாரம், கல்வி என்று காந்தியின் பல்வேறு தேச புனர்நிர்மாணப் பணிகளை வினோபா மேற்கொண்டார். கேரள மாநிலம் வைக்கம் நகரில் உள்ள வைக்கம் நகரில் கோவிலுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதற்கான போராட்டத்திற்காக அனுப்பப்பட்டார். காந்தி தொடங்கிய தனிநபர் சத்தியாகிரஹப் போராட்டத்தின் முதல் வீரராக வினோபா காந்தியால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்ற நூற்றாண்டின் இருபதுகளிலும் முப்பதுகளில் வினோபா பல முறை கைது செய்யப்பட்டார். சிறையில் படிப்பதும் எழுதுவதும் அவரது வேலையாக மாறியது. இஷாவாக்கிய விருத்தி, ஸ்திரப் ப்ரகிய தர்ஷன், ஸ்வராஜ்ய சாஸ்திரா  ஆகிய நூல்களை அவர் சிறையில் இருந்த போது எழுதினார். சிறையில் மற்ற கைதிகளுக்கு அவர் மராட்டி மொழியில் கீதையைப் பற்றி பேசியதின் தொகுப்பு கீதைப் பேருரைகள் என்ற பெயரில் புத்தகமாக பல்வேறு மொழிகளில் இன்று கிடைக்கிறது. கீதைக்கான சிறந்த உரைகளில் வினோபாவேயின் உரை முக்கியமான ஒன்றாகும். தமிழகத்தின் வேலூர் சிறையில் இருந்த காலத்தில் நான்கு தென்னிந்திய மொழிகளையும் கற்றுக்கொண்டார்.

நாடு விடுதலையான பிறகு நேரடி அரசியலில் ஈடுபடாமல் சமுதாயப் பணிகளிலேயே வினோபா தொடர்ந்து செயல்பட்டார். இன்றய தெலுங்கானா மாநிலத்தில் அன்று கம்யூனிஸ்ட் கட்சி செயல்பாட்டாளர்கள் நிலச் சுவான்தார்களை கொன்று நிலமற்ற ஏழை மக்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அவர்களை அடக்க ராணுவமும் காவல்துறையும் களமிறங்கியது. இருவருக்கும் நடுவே மக்கள் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தனர். இந்த சமயத்தில் வினோபா அந்தப் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நிலமற்ற நாற்பது  தாழ்த்தப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை அவர் அங்கே உள்ள மக்களிடம் முன்வைத்தார். தனக்கு சொந்தமான நிலத்தில் நூறு ஏக்கர் நிலத்தை ராமச்சந்திர ரெட்டி என்ற நிலச்சுவான்தார் அந்த மக்களுக்கு அளிக்க முன்வந்தார். குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் போதும் எனவே எண்பது ஏக்கர்களை மட்டும் பெற்றுக் கொள்கிறோம் என்று அந்த ஹரிஜன சகோதர்கள் கூறினார்கள். இந்த சிறிய விதை பூதான இயக்கமாக உருவானது.

நிலமற்ற ஏழை மக்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்றால் ஏறத்தாழ ஐந்து கோடி ஏக்கர் நிலம் வேண்டும் என்று கணக்கிடப்பட்டது. கிராமம் கிராமமாகச் சென்று "நான் உங்கள் ஐந்தாவது மகன், எனக்கான பங்கைக் தாருங்கள்" என்று வினோபா கோரிக்கை வைத்தார். சராசரியாக ஒரு நாளுக்கு இருநூறில் இருந்து முன்னூறு ஏக்கர் நிலம் அவருக்கு அளிக்கப்பட்டது. 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கிய அவரது பாதயாத்திரை 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் நிறைவு பெற்றது. ஏறத்தாழ 40 லட்சம் ஏக்கர் நிலத்தை அவர் பெற்று மக்களுக்கு அளித்தார். தானமும் தர்மமும் பாரதநாட்டின் பிரிக்க முடியாத அம்சம் என்று வினோபா நிரூபித்தார். மீண்டும் 1965ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு பிஹார் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு மக்களிடம் தற்சார்ப்பு பொருளாதாரம் பற்றிய ஆவலை உருவாக்கினார். சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த கொள்ளைக்காரர்கள் பலர் வினோபாவின் அறிவுரையினை ஏற்று அரசிடம் சரணடைந்தார்கள்.

1970ஆம் ஆண்டு முதல் ஒரே இடத்தில் தங்கி ஆத்ம சாதனையை மேற்கொள்ளப் போவதாக வினோபா அறிவித்தார். 1974ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் ஆண்டு முதல் 1975ஆம் ஆண்டு டிசம்பர் 25வரை ஓராண்டு பேசாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தது அதனை செயல்படுத்தினார்.

பாரத நாட்டு வரலாற்றில் அது ஒரு சோதனையான காலகட்டம். உயரிய விழுமியங்களை விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சி பதவியாசை கொண்டு விளங்கியது. லஞ்சமும், ஊழலும், வேலையில்லா திண்டாட்டமும் நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. சர்வோதயா இயக்கத்தில் ஆச்சாரிய வினோபாவின் தளபதியாக விளங்கிய ஜெயப்ரகாஷ் நாராயணன் தலைமையில் மாணவர்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். பிரதமர் இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அலஹாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்திரா நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். நாட்டின் ஜனநாய உரிமைகள் எல்லாவற்றையும் அவர் இல்லாமல் செய்தார். சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் தளபதிகளாக செயல்பட்ட தலைவர்கள் அனைவரும் இதனை எதிர்த்தனர். ஆனால் எனோ வினோபா இந்திராவை ஆதரித்தார். மிகப் பெரும் மனிதர்களும் தவறிழைக்கும் நேரங்கள் உண்டு என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல

1982ஆம் ஆண்டு உணவருந்த மறுத்து சமண முறைப்படி உபவாசம் இருந்து நவம்பர் 15ஆம் தேதி ஆச்சாரிய வினோபா பாவே தனது உடலைத் துறந்தார். இறப்பிற்கு பிறகு அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி மரியாதை செலுத்தியது.

இப்படிப்பட்ட மக்களையும் பாரதத் தாய் ஈன்றெடுத்துள்ளாள் என்பதையாவது நாம் அறிந்து கொள்வோம். 

வெள்ளி, 14 நவம்பர், 2025

நவம்பர் 14 - ஆதித்ய விக்ரம் பிர்லா பிறந்தநாள்

புகழ்பெற்ற தொழிலதிபரும் பிர்லா குடும்பத்தின் மிக முக்கியமான உறுப்பினருமான ஆதித்ய விக்ரம் பிர்லாவின் பிறந்தநாள் இன்று.


வியாபாரத்தில் மட்டுமே கால்பதித்து இருந்த பிர்லா குடும்பத்தை உற்பத்திதுறையிலும் முன்னெடுத்தவர் ஞான்ஷ்யாம்தாஸ் பிர்லா என்ற ஜி டி பிர்லா. ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த மார்வாடி வகுப்பைச் சார்ந்த ஜி டி பிர்லா முதல்முதலில் கொல்கத்தா நகரில் சணல் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கினார். அங்கிருந்து ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் முக்கியமான தொழில் குழுமமாக பிர்லா குடும்பம் விளங்குகிறது. ஜி டி பிர்லாவின் மகனான பசந்த் குமார் பிர்லாவின் மகனாக 1943ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி பிறந்தவர் ஆதித்ய விக்ரம் பிர்லா.

அன்று நாட்டின் முன்னணி தொழில் நகரமாக விளங்கியது கொல்கத்தா நகரம். ஆதித்ய பிர்லா கொல்கத்தா நகரின் தூய சவேரியார் கல்லூரியில் படித்து பின்னர் அமெரிக்காவில் உள்ள உலகின் முன்னணி கல்வி நிறுவனமான மசாசூட் பல்கலைக்கழகத்தில் ரசாயன பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். பள்ளிப் படிப்பை படிக்கும் போதே சமிஸ்க்ரித மொழியை ஆதித்ய பிர்லா கற்றுத் தேர்ந்தார்.

அமெரிக்காவில் கல்வி பயின்ற பிர்லா 1965ஆம் ஆண்டு பாரதம் திரும்பி, தங்கள் குடும்பத் தொழில்களில் தன்னை இணைத்துக் கொண்டார். ஆனால் அன்றய நிலைமை தொழிலதிபர்களுக்கு சாதகமாக இல்லை. சோசலிசம் என்ற தவறான கொள்கையின் விளைவாக எதை தயாரிக்க வேண்டும், எந்த அளவு தயாரிக்க வேண்டும், எந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அரசே முடிவு செய்யும் போக்குதான் இருந்தது. பல்வேறு தொழில்சாலைகளை நிறுவ பிர்லா குழுமம் அளித்த விண்ணப்பங்கள் அரசால் நிராகரிக்கப்பட்டன. மனது வெறுத்துப் போன ஆதித்ய பிர்லா வேறு நாடுகளில் தனது தொழில்சாலைகளை நிறுவலாம் என்று முடிவு செய்தார்.

1969ஆம் ஆண்டு முதல் ஆதித்ய பிர்லா தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற தூரக் கிழக்கு நாடுகளில் தனது தொழிலை விரிவுபடுத்தத் தொடங்கினார். விஸ்கோஸ் இழைகள், நூல் தயாரிப்பு, பனைமர எண்ணெய் தயாரிப்பு, ரேயான் இழை தயாரிப்பு என்று பல்வேறு தொழிற்சாலைகளை அவர் இந்த நாடுகளில் நிறுவினார். அரசின் தவறான கொள்கை முடிவுகள் அவரை இந்த நிலைக்கு தள்ளியது. நாடு பொருளாதார துறையில் முன்னேற்றம் அடைய இந்தக் கொள்கைகள் தடையாக இருந்தன.

1983ஆம் ஆண்டு ஜி டி பிர்லா காலமானார். அவர் தனது பல்வேறு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை ஆதித்ய பிர்லா வசம் ஒப்படைத்து இருந்தார். பிர்லா குழுமத்தின் தலைமை அதிகாரியாக, குழுமத்தின் முகமாக, நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் முக்கியமான ஒருவராக ஆதித்ய பிர்லா அறியப்பட்டார்.

ஆனால் காலத்தின் கணக்கு வேறு மாதிரியாக இருந்தது. 1993ஆம் ஆண்டு ஆதித்ய பிர்லா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. ஆதித்ய பிர்லாவின் தந்தையான பசந்த் குமார் பிர்லாவும், இருபத்தி ஐந்து வயதே ஆன மகன் குமாரமங்கலம் பிர்லாவும் பிர்லா குழுமத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். பால்டிமோர் நகரில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் ஆதித்ய பிர்லா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போதுதான் நாடு சுதந்திரமான பொருளாதாரக் கொள்கைக்கு மாறி இருந்தது. தொழில் நடத்துவதும், லாபம் சம்பாதிப்பதும் பாவகரமான செயல் அல்ல என்று அரசு எண்ணத் தொடங்கி இருந்தது. இன்னும் பல உயரங்களை அடைந்திருக்க வேண்டிய ஆதித்ய விக்ரம் பிர்லா 1995ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் நாள் மரணமடைந்தார்.

ஆதித்ய பிர்லாவின் நினைவாக ஆண்டுதோறும் நாட்டின் தலைசிறந்த பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகளில் படிக்கும் சிறந்த மாணவர்களில் நாற்பது பேரின் படிப்புக்கான தொகையை பிர்லா குழுமம் செலுத்தி வருகிறது. பூனே நகரில் பிர்லா குழுமம் ஆதித்ய விக்ரம் பிர்லா பெயரில் ஒரு மருத்துவமனையை நிறுவி நடத்தி வருகிறது.

பாரத நாட்டின் மிகச் சிறந்த தொழிலதிபரான ஆதித்ய விக்ரம் பிர்லாவின் பங்களிப்புக்காக ஒரே இந்தியா தளம் அவருக்கு நன்றி செலுத்துகிறது. 

செவ்வாய், 11 நவம்பர், 2025

நவம்பர் 11 - அபுல் கலாம் ஆசாத் பிறந்ததினம்



உலகத்தின் ஞான ஒளியாக பாரதம் என்றுமே திகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆப்கானிய வம்சாவளியைச் சார்ந்த ( பாரதம் என்பது இன்றய ஆப்கானிஸ்தான் வரை பரவி இருந்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ) டெல்லியில் வசித்து வந்த மௌலானா சையத் முஹம்மத் கைருதீன் பின் அஹமத் அல் ஹுசைனி என்பவர் இஸ்லாமிய தத்துவத்தில் பெரும் அறிஞராக இருந்தார். அவரை இஸ்லாத்தின் அஸ்திவாரமாக மெக்கா நகருக்கு வரவழைத்து அவரிடம் அரேபியர்கள் இஸ்லாமிய தத்துவத்தின் விளக்கத்தை கேட்டறிந்தார்கள் என்றால் அவரது ஆழ்ந்த புலமையை நாம் அறியலாம். மெக்கா நகரில் அவர் வசித்து வந்த காலத்தில் அரேபிய நாடு முழுவதும் அறியப்பட்ட அறிஞரான ஷேக் முஹம்மத் பின் சாஹீர் அல்வட்ரி என்பவரின் மகளான ஆலா பின்த் முஹம்மத் என்பவரை மணந்து கொண்டார். இந்த தம்பதியரின் மகனாக இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா நகரில் 1888ஆம் ஆண்டு பிறந்தவர்தான் செய்யத் குலாம் முஹைதீன் அஹமத் பின் கைருதீன் அழ ஹுசைனி என்ற மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள்.

1890ஆம் ஆண்டே ஆசாத்தின் பெற்றோர்கள் பாரதம் திரும்பி கொல்கத்தா நகரில் வசிக்கத் தொடங்கினார்கள். அபுல் கலாம் ஆசாத் தனது படிப்பை தனது வீட்டிலேயே ஆரம்பித்தார். தகுதியான ஆசிரியர்கள் அவருக்கு ஹிந்தி, பாரசீகம், ஆங்கிலம், வங்காளம், அரபி உருது ஆகிய மொழிகளையும், கணிதம், வரலாறு, அறிவியல் தத்துவம் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கவியல்  ஆகிய பாடங்களையும் கற்றுக் கொடுத்தனர். இயல்பிலேயே சூட்டிகையான மாணவனாக இருந்த ஆசாத், மிக விரைவில் பல்மொழி புலவராகவும், பல துறை அறிஞராகவும் அறியப்பட்டார். பதின்ம வயதிலேயே பத்திரிகை நடத்தவும், தனக்கு மூத்த மாணவர்களுக்கு பாடம் நடத்தவும் அவர் ஆரம்பித்தார்.

படித்த படிப்பின் படி அவர் ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞராகத்தான் இருந்திருக்க வேண்டும், ஆனால் அவரது படிப்பு அவரை ஒரு பத்திரிகையாளராக மாற்றியது. இளம் பருவத்தில் அவர் ஆயுதம் தாங்கிப் போராடும் போராளிகளின் கூட்டத்தில் ஒருவராகத்தான் இருந்தார். ஷியாம் சந்திர சக்கரவர்த்தி, அரவிந்த கோஷ் போன்ற வீரர்களின் நண்பராக இருந்தார். பல முஸ்லிம்களின் எண்ணத்திற்கு எதிராக வங்காளப் பிரிவினையை அவர் எதிர்த்தார்.

அமிர்தஸர் நகரில் இயங்கிக்கொண்டு இருந்த வக்கீல் என்ற செய்தித்தாளில் ஆசாத் பணியாற்றினார். பின்னர் 1912ஆம் ஆண்டு அல் ஹிலால் என்ற உருது மொழி நாளிதழை தொடங்கினார். அதில் தொடர்ந்து  ஆங்கில ஆட்சியை எதிர்த்தும், ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதின் அவசியம் பற்றியும் எழுதிக்கொண்டு இருந்தார். முதலாம் உலகப் போர் தொடங்கியதை அடுத்து ஆங்கில அரசு இந்தப் பத்திரிகையை தடை செய்தது. சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல ஆசாத் அல் பலாஹ் என்ற பத்திரிகையை ஆரம்பித்து ஆங்கில ஆட்சியைத் தாக்கி எழுதலானார். வழக்கம் போல ஆங்கில அரசு இவரை கைது செய்து ராஞ்சி சிறையில் அடைத்தது. மும்பை, பஞ்சாப், டெல்லி, ஆக்ரா ஆகிய மாகாணங்கள் தங்கள் எல்லைக்குள் ஆசாத் வரக்கூடாது என்று ஆணை பிறப்பித்தது.

சிறைவாசம் முடித்து ஆசாத் விடுதலையாகும் சமயம் பாரதத்தின் அரசியல் களம் மொத்தமாக மாறி இருந்தது. அடக்குமுறையின் உச்சமாக ரௌலட் சட்டம் அமுலில் இருந்தது. ஜாலியன்வாலாபாக் நகரில் அப்பாவி பொதுமக்களை காக்கை குருவி சுடுவது போல அரசு சுட்டுக் தள்ளி இருந்தது. அரசியல் களத்தின் தலைமை சந்தேகமே இல்லாமல் காந்தியின் கையில் வந்து சேர்ந்திருந்தது. ஆசாத் காந்தியின் நெருங்கிய தோழரும் தொண்டருமாக உருவானார். அன்னியத் துணிகளைத் துறந்து ராட்டை சுற்றி, நூல் நூற்று காந்தியோடு ஆசிரமங்களில் தங்கி எளிய வாழ்க்கை வாழ்ந்து என்று ஆசாத் முழுவதுமாக மாறிப் போனார். காந்திக்கு மட்டுமல்ல ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, நேதாஜி ஆகிய தலைவர்களின் தோழராகவும், நாட்டின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் ஆசாத் அறியப்படலானார்.

1922ஆம் ஆண்டு ஆசாத் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் காங்கிரஸ் கட்சிக்கு புது தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவது வழக்கம். மிக இளைய வயதில் தேர்வான தலைவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆசாத். மீண்டும் 1940ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜின்னா சுதந்திரம் அடையும் சமயத்தில் நாடு மதரீதிரியாகப் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்திருந்த நேரம் அது. அந்த குரலுக்கு முஸ்லீம் மக்கள் பலரின் ஆதரவும் இருந்தது.ஆனால் கணிசமான இஸ்லாமியர்கள் அதனை எதிர்த்து நின்றதும் வரலாறு. அதில் முக்கியமான குரல் ஆசாத்தின் குரல்.

" இந்த நாட்டு மக்களின் மதமாக ஹிந்து மதம் பல்லாயிரம் ஆண்டுகளாக விளங்குகிறது, அது போலவே ஆயிரம் ஆண்டுகளாக இஸ்லாம் மதமும் இந்த நாட்டின் மக்களின் மதமாக உள்ளது. நான் ஹிந்து மதத்தைப் பின்பற்றும் இந்தியன் என்று பெருமையோடு கூறுவது போல, நான் இஸ்லாம் மார்கத்தைப் பின்பற்றும் பாரதீயன் என்றும் நான் கிறிஸ்துவை வழிபடும் இந்தியன் என்று பெருமையோடு கூறலாம். நமது வழிபாடு முறைகள்தான் வேறுபட்டு உள்ளது, ஆனால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்களே" இது ஆசாத் அளித்த தலைமையுரையில் ஒரு பகுதி.

தவிர்க்க முடியாமல் நாடு மதத்தின் அடிப்படையில் துண்டாடப் பட்டது. இஸ்லாமின் பிறப்பிடமான மெக்கா நகரில் பிறந்த அபுல் கலாம் ஆசாத் உள்பட பல இஸ்லாமியர்கள் பாரத நாட்டிலேயே இருப்பது என்ற முடிவை எடுத்தனர். ஆசாத் நேருவின் நண்பராகவும், உற்ற தோழராகவும், அமைச்சரவை சகாவாகவும் விளங்கினார். நாட்டின் கல்வி அமைச்சராக அவர் பணியாற்றினார்.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஐ ஐ டிகள் போன்ற பல கல்வி நிறுவனங்கள் அவரின் முயற்சியால் உருவானவைதான். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டின் கல்விக்காக பெரிதாக எதுவும் செய்யவில்லை. விடுதலை அடையும் சமயத்தில் மக்களில் கல்வி பெற்றவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. தொடக்கக்கல்வி, முதியோர் கல்வி, பெண்கள் கல்வி, தொழிற்கல்வி என்று பல்வேறு தளங்களில் பெரும் சவால்களை ஆசாத் எதிர்கொண்டு நாட்டின் கல்வித் திட்டத்தை வடிவமைத்தார்.

அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாளை நாடு தேசிய கல்வி நாளாக அனுசரிக்கிறது.