செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

பிப்ரவரி 10 - மும்பை நகரின் பிதாமகன் ஜெகநாத் ஷங்கர்சேத் பிறந்ததினம்

இன்று மும்பை நகரம் பாரத நாட்டின் பொருளாதாரத் தலைநகர். ஆனால் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பூனாவும், சூரத்தும், ராய்கட் பகுதியும்தான் மராட்டிய மாநிலத்தின் முக்கிய நகரங்களாக இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் மும்பை மேற்கு கடற்கரையின் முக்கியமான நகரமாக உருவெடுத்தது. மும்பை நகரை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவரான திரு ஜெகநாத் ஷங்கர்சேத் அவர்களின் பிறந்ததினம் இன்று.


அரபிக்கடற்கரையின் ஓரத்தில் அமைந்த கொங்கன பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட தைவைத்நிய ப்ராமண சமூகத்தைச் சார்ந்தவர் ஜெகநாத்சேத். இறைத்தொண்டும், நகை தயாரிப்பும் இந்த சமுதாயத்தினரின் தொழிலாக இருந்தவை. 1803ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் நாள் பிறந்த ஜெகநாத்சேத் இவை இரண்டையும் விட்டு விட்டு வியாபாரத்தில் நுழைந்தார். தொழிலில் நாணயமானவர் என்று பெயர் எடுத்ததால், மிகச் சில காலத்திலேயே அன்றய மும்பை நகரின் முக்கியமான வணிகராக மாறினார். தொழில் சிறப்பாக நடைபெற்றதால், லாபமும் கணிசமாக வந்தது, நாளடைவில் பெரும்பணக்காரராக மாறினார்.

தனக்கு கிடைத்த செல்வதை மக்களின் சேவைக்கு ஜெகன்நாத்சேத் செலவிடத் தொடங்கினார். கல்வியின் முக்கியத்தை அறிந்த அவர் மும்பையில் கல்விச் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். அதன் மூலம் ஆண்களுக்கான பள்ளி, பெண்களுக்கான பள்ளி, சமிஸ்க்ரித பள்ளி, நூலகம் ஆகியவற்றைத் தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் உருவானதுதான் இன்று மும்பை நகரின் புகழ்பெற்ற எல்பின்ஸ்டோன் கல்லூரி. தாதாபாய் நௌரோஜி, மஹாதேவ் கோவிந்த ரானடே, கோகுலே, திலகர் போன்ற பாரத நாட்டின் பெரும் தலைவர்களை உருவாக்கியது இந்தக் கல்லூரிதான்.

மாணவர்களுக்கு தாய்மொழியில்தான் கல்வி கற்பிக்கவேண்டும் என்பது ஜெகநாத்சேத்தின் கருத்து. ஆங்கிலத்தில்தான் கல்வி இருக்கவேண்டும் என்பது அரசின் எண்ணம். தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின்னர் ஆரம்பக் கல்வி தாய்மொழியில் உயர்நிலைக் கல்வி ஆங்கிலத்திலும் இருக்கலாம் என்று முடிவு எட்டப்பட்டது.

ரயில் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை அறிந்த ஜெகநாத்சேத் ஜாம்ஷெட்ஜி ஜீஜீபாயுடன் இணைந்து இந்தியன் ரயில்வே அஸோசியேஷன் என்ற அமைப்பை உருவாக்கினார். இதன்மூலம் பாரத நாட்டுக்கு ரயில் போக்குவரத்தை அறிமுகம் செய்யவேண்டும் என்று ஆங்கில அரசை வலியுறுத்தினார். இந்த அமைப்புதான் பின்னர் கிரேட் இந்தியன் பெனின்சுலர் ரயில்வே என்று உருமாறி நாட்டின் ரயில் போக்குவரத்தை உருவாக்கியது. முதல் ரயில் மும்பை நகருக்கும் தானாவிற்கும் இடையே தொடங்கியது.

ஜெகநாத்சேத்தின் முக்கியத்துவத்தை அறிந்த ஆங்கில அரசு அவரை மும்பை சட்டசபைக்கு நியமித்தது. அந்த சபையின் முதல் பாரதிய அங்கத்தினர் ஜெகநாத்சேத்தான். தனது தொடர்புகளைப் பயன்படுத்தி சதியை தடைசெய்ய வைத்தார், விசாலமான சாலைகள், சாலையின் இருபுறமும் மரங்கள் என்று மும்பை நகரின் விரிவாக்கத்திற்கு சேத் பெரும்பணியாற்றினார். பம்பாய் அஸோஸியேஷன் என்ற பெயரில் மும்பையின் முதல் அரசியலமைப்பையும் இவர் தொடங்கினார். 1857ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போரில் இவரது பங்கு இருக்கும் என்று ஆங்கில அரசு எண்ணியது. ஆனால் போதிய சாட்சியங்கள் இல்லாததால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.

பல்வேறு நிறுவனங்களை உருவாக்க பணம் அளித்ததோடு மட்டுமல்லாமல், அதற்காக தனது சொந்த இடங்களையும் ஜெகநாத்சேத் வழங்கினார். இன்றய மும்பை நகரின் பிதாமகர் என்று அவரைச் சொன்னால் அது மிகையாகாது.

அறுபத்தி இரண்டு ஆண்டுகளே வாழ்ந்த ஜெகநாத் ஷங்கர்சேத் 1865ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் நாள் காலமானர். 

திங்கள், 9 பிப்ரவரி, 2026

பிப்ரவரி 9 - அபய சாதகன் பாபா ஆம்தே நினைவு நாள்

மதமாற்றத்தில் ஈடுபடாமல், விளிம்புநிலை மனிதர்களுக்கு சேவை செய்பவர்கள் பற்றி பொதுவாகவே நமது பத்திரிகைகள் மக்களுக்குச் சொல்லாது. ஆனாலும் அதனையும் மீறி வெளிச்சத்திற்கு வந்த சமூகசேவகர் பாபா ஆம்தே அவர்களின் நினைவு நாள் இன்று.


மகாராஷ்டிரா மாநிலத்தின் வார்தா பகுதியைச் சார்ந்த ப்ராஹ்மண சமூகத்தின் தேவதாஸ் ஆம்தே, ஆங்கில அரசின் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். பரம்பரை பணக்காரரான தேவதாஸ் ஆம்தேவிற்கு முதல் மகனாகப் பிறந்தவர் முரளிதர் தேவதாஸ் பாபா ஆம்தே. 1914ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் நாள் பிறந்தவர் இவர். பொதுவாக சந்யாசிகள் அல்லது முதியவர்களை பாபா என்று அழைப்பது வட இந்தியர்களின் பழக்கம். ஆனால் சிறுவயதிலேயே தங்கள் மகனை பாபா என்று இவரின் பெற்றோர்கள் அழைக்கத் தொடங்கி அதுவே இவரின் பெயராக மாறிவிட்டது.

கிட்டத்தட்ட சித்தார்த்தன் புத்தனாக மாறிய கதைதான் பாபா ஆம்தேவின் கதையும். சிறுவயதிலேயே  தனக்கான காரின் இருக்கையில் சிறுத்தையின் தோலால் தயாரான உறையை மாட்டிக்கொண்டு சொந்த துப்பாக்கியை வைத்துக்கொண்டு வேட்டையாடுவதில் காலம் கழித்துக்கொண்டு இருந்த முரளிதர் நாட்டின் முக்கியமான சமூகசேவகராக மாறியது மிகப் பெரும் அதிசயம்தான்.   செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும், மக்களிடையே நிலவிய பொருளாதார ஏற்றத்தாழ்வு அவரின் மனதில் பல்வேறு கேள்விகளை எழுப்பிக்கொண்டுதான் இருந்தது.

காலனிய சக்தியான ஆங்கிலேய அரசிற்கு எதிராக விடுதலை போராட்டம் சூடு பிடித்திருந்த காலகட்டத்தில் முரளிதரும் அன்றைய வேறு பல இளைஞர்களைப் போல்,  ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க வன்முறை வழியை நம்பியவர்களுக்கு அவசியமான ஆயுதங்களை சேகரிப்பது முக்கியம் என நம்பினார். 1935ஆம் ஆண்டு பலூசிஸ்தான் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டபோது, முரளிதர் சீரமைப்பு பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு க்வேட்டா சென்றார்.

பெரும்பாலான அன்றய இளைஞர்கள்போல ஆம்தேவும் சட்டம் பயின்றார், வார்தா நகரில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். நாட்டு விடுதலைக்காக போராடி அதனால் ஆங்கில அரசால் கைதுசெய்யப்பட்ட விடுதலை வீரர்களுக்காக வாதாடத் தொடங்கினார். படிப்படியாக காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆம்தே காந்தி நிறுவிய சேவாகிராமத்தில் தங்கி கை ராட்டை சுற்றியும், கதர் துணியை நெய்தும் முழுமையான காந்தியவாதியாக மாறினார்.

ஆம்தே வரோரா நகராட்சியின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தியின் அறைகூவலை ஏற்று நாளொன்றுக்கு நாற்பது கழிப்பறைகளை அவர் சுத்தம் செய்யத் தொடங்கினார். எந்தத் தொழிலும் இழிவானதல்ல என்பதைக் காட்ட கழிப்பறை சுத்தம் செய்வதை காந்தி முன்னெடுத்தார். அதனை காந்தியின் சீடர்கள் பலர் பின்தொடர்ந்தனர்.

அப்படியொருநாள் தலைகூடையில் கழிவுகளை சுமந்துகொண்டு சென்ற மழைநாளில், நீர்தேங்கிய குட்டைக்கு அருகில் கோர முகத்துடன், விரல்களற்ற, புழுக்கள் மண்டி வலியில் துடித்த நிர்வாண மனிதர் ஒருவரைக் கண்டார். அந்தக் காட்சி அவரை உலுக்கியது. முரளிதர் அப்போதுதான் தொழு நோயாளியை முதன்முதலாக கண்டிருந்தார். அந்தக் காட்சியும், தனக்கும் நோய் பரவிவிடும் எனும் அச்சமும் அவரைப் பீடித்ததால் வீட்டிற்கு ஓடி வந்தார். அவர் மீது படிந்த அழுக்குகளை சுத்தப்படுத்திகொள்ள குளித்தார்.

ஆனாலும் மனதளவில் அந்த காட்சியின் உக்கிரத்திலிருந்து அவரால் விடுபட முடியவில்லை. “ஒருகால் தானோ, தன் மனைவி, பிள்ளைகளோ இந்நோயால் பீடிக்கப்பட்டால் எங்கு போவது?” எனும் கேள்வி அவருள் எழும்பியது. “எங்கு அச்சமிருக்கிறதோ அங்கு அன்பு இருக்க இயலாது, எங்கு அன்பு இல்லையோ அங்கு கடவுளும் இருக்க இயலாது. நான் இந்த அச்சத்தைப் போக்கியாக வேண்டும்” என்று தன்னையே தேற்றிக் கொண்டார். நோய்மையின் தனிமையில் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை எப்படி அப்படியே விட்டுவர தன்னால் முடிந்தது என எண்ணி வெட்கினார்.

மீண்டும் அங்கு சென்று அந்த மனிதருக்கு உணவளித்து, அவருக்கு சிறு மூங்கில் குடிலமைத்துக் கொடுத்து பராமரித்தார். அவர் பெயர் துளசிராம், துளசிராம் பாபா ஆம்தேவின் பராமரிப்பில்தான் மரித்தார். ஆம், முரளிதரின் வாழ்க்கையையே மாற்றி, பாபா ஆம்தேவின் வாழ்வில் பெரும் திருப்புமுனையாக இருந்துவிட்டே மரித்தார்.

‘நான் எதற்குமே அஞ்சியதில்லை. ஆங்கிலேய இளைஞர்களை எதிர்த்து, இந்தியப் பெண்ணின் மானம் காக்க சண்டையிட்டிருக்கிறேன். காந்திஜி என்னை ‘அபய சாதகன்’, அதாவது ‘அச்சமற்று சத்தியத்தை தேடுபவன்’ என்றே அழைப்பார். வரோராவின் தோட்டிகள், 'கழிவறை சுத்தம் செய்திட முடியுமா?" என எங்களிடம் சவால்விட்டபோது, அதை ஏற்றுச் செய்தேன். குண்டர்களையும் கொள்ளைக்கார ஆங்கிலேயர்களையும் எதிர்த்து சண்டையிட்ட நானேதான் பிணம் போல் வாழ்ந்த துளசிராமைக் கண்டு அஞ்சி நடுங்கினேன். விரல்கள் இல்லை, துணிமணிகள் இல்லை, உடலெங்கும் புழுக்கள்.’

பாபா அவருடைய அச்சத்தை நேருக்கு நேராக எதிர்கொள்ள முடிவெடுத்தார். அதற்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள கொஞ்ச காலம் பிடித்தது. ஆனால் அப்படி எதிர்கொள்வதன் வழியாகவே அவற்றை வென்று கடந்து செல்ல இயலும் என்பதை புரிந்துகொண்டார். 

காந்தி தன்னுடைய ஆக்கப்பூர்வ செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக தொழுநோய் பராமரிப்பையும் முன்னிலைப்படுத்தினார். வரோராவிற்கு அருகில் தத்தபுரத்தில் தொழுநோய் மருத்துவமனையும் வசிப்பிடமும் நிர்மாணிக்கப்பட்டது. அங்கு ஒரு சிறு குடிசை கட்டிக்கொண்டு அவர்களுடைய வாழ்வை நெருங்கி அவதானிக்கத் தொடங்கினார் முரளிதர். பின்னர் 1948ல் வரோராவில் சிறிய ஒரு தொழு நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை மையத்தை துவக்கினார். ஆனால் தொழுநோய் பற்றி பூரண அறிதல் அதை எதிர்கொள்ள அத்தியாவசியம் என உணர்ந்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து கல்கத்தாவில் ட்ராபிக்கல் நோய் மையத்தில் சேர்ந்து தொழுநோய் தொடர்பான ஓராண்டு மருத்துவ பயிற்சி படிப்பில் சேர்ந்து கல்வி கற்றுத் தேர்ந்தார். வராரோவைச் சுற்றி ஐம்பது கிலோமீட்டர் சுற்றளவு பரப்பில் பதினோரு தொழுநோய் சிகிச்சை மையங்களை உருவாக்கினார். நான்காயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

1950 ஆம் ஆண்டு மகாரோக சேவா சமிதி என்றொரு அமைப்பை தொழுநோயாளிகளின் பராமரிப்பிற்காக ஏற்படுத்தினார். அவர்கள் குணமாகி, சமூகத்திற்கு பயனுள்ள, தற்சார்புடைய வாழ்வு வாழ அனைவரும் இணைந்து வசிப்பதற்குரிய இருப்பிடம் தேவை என உணர்ந்துகொண்டார். பொருளியல் தற்சார்பு வழியாகத்தான் ஒருவன் பூரணமாக நோயிலிருந்து விடுபட்டு மீண்டெழ முடியும் என்று அவர் கருதினார். “விரல்கள் இன்றிக்கூட மனிதன் வாழ்ந்துவிட முடியும், ஆனால் சுயமரியாதையின்றி வாழ முடியாது”.

1951ஆம் ஆண்டில் சந்திரபூர் வனப்பகுதியில் சிறிது நிலத்தை அரசாங்கம் அவருக்கு வழங்கியது. மனைவி மற்றும் இரு கைக்குழந்தைகளுடன். பையிலிருந்த பதினான்கு ரூபாயுடன் ஆறு தொழுநோயாளிகளை அழைத்துக் கொண்டு கொடிய வனப்பகுதி நிலத்தைத் திருத்தி குடியேறினார். மூங்கில் கழிகளைக் கொண்டு சிறு குடில்களமைத்துக் கொண்டார், கிணறு வெட்டினார், அங்கேயே வசிக்கத் துவங்கினார். அப்படித்தான் ‘ஆனந்தவனம்’ உருவானது. வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்திருக்க வேண்டும் என்பதே ஆம்தேயின் கருத்தாக இருந்தது. தொழுநோயாளிகள் வாழ்வில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் துளிர்க்கச் செய்வதே தன் வாழ்நாள் பணியென உறுதிகொண்டிருந்தார் அவர்.

மிகச் சிறிய மருத்துவ மையமாகத் தொடங்கப்பட்டு இன்றொரு பிரம்மாண்டமான மருத்துவமனையாக வளர்ந்து உருமாறி இருக்கிறது ஆனந்தவன். நாளொன்றிற்கு ஐநூறு புறநோயாளிகள் வந்து செல்கிறார்கள், ஆயிரத்து ஐநூறு உள் நோயாளிகள் தங்குவதற்கான இட வசதிகள் உண்டு. தொழுநோய் ஆய்வு மையம் ஒன்றும் உண்டு.

1967 ஆம் ஆண்டு ஆனந்தவனத்தில் இருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சோம்நாத்தில் மற்றுமொரு தொழுநோய் மையத்தை நிறுவ யத்தனித்தார் ஆம்தே. அங்கும் தொழுநோயாளிகளின் கூட்டு முயற்சியில் மருத்துவமனை உருவானது.

பாபா ஆம்தேவுடன் அவரது மனைவி, மகன்கள் மருமகள்கள் என்று மொத்த குடும்பமே தங்களை சேவைக்கு அர்பணித்துக்கொண்டு உள்ளனர். அவரது இரண்டு மகன்களும் இரு மருமகள்களும் மருத்துவம் படித்தவர்கள். இன்று அவரின் இரண்டு பேரன்களும் மருத்துவம் படித்துவிட்டு ஆனந்தவனத்தில் தங்கி பணியாற்றி வருகிறார்கள்.

தன்னலம் கருதாது உழைத்தாலும், தகுதியானவர்களுக்கு அதற்கான அங்கீகாரம் வரத்தான் செய்யும். பாபா ஆம்தேவை நோக்கி பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், மாகஸே விருது, காந்தி அமைதிப் பரிசு ஆகியவை தேடி வந்தன.

அபய சாதகன் அதாவது பயமே இல்லாது சேவை புரிபவன் என்று காந்தியால் பாராட்டப்பட்ட பாபா ஆம்தே தனது தொண்ணூற்றி மூன்றாம் வயதில் 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் நாள் காலமானார்.

நம்மால் முடிந்த அளவு பிறருக்கு உழைப்பதே இதுபோன்ற மகத்தான மனிதர்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்வதின் பயனாக இருக்கும். 

சனி, 31 ஜனவரி, 2026

ஜனவரி 31 - மேஜர் சோம்நாத் சர்மா பிறந்ததினம்

பரம்வீர் சக்ரா விருதை முதன்முதலில் பெற்றவர் மேஜர் சோம்நாத் சர்மாவின் பிறந்ததினம் இன்று. 

மேஜர் சோம்நாத் சர்மாவின் குடும்பமே ராணுவ வீரர்கள் குடும்பம் என்று சொன்னால் அது மிகையாகாது. சோம்நாத் சர்மாவின் தந்தை அமர்நாத் சர்மா. அவர் ஒரு மருத்துவர். ராணுவத்தின் மருத்துவப் பிரிவில் பணியாற்றி அவர் மேஜர் ஜெனரல் என்ற நிலையில் பணி நிறைவு பெற்றவர். சோம்நாத் சர்மாவிற்கு இரண்டு சகோதரர்கள். சுரீந்தர்நாத் சர்மா பொறியியல் பட்டம் பெற்று ராணுவப் பணியில் இணைந்து லெப்டினென்ட் ஜெனரல் என்ற நிலைக்கு உயர்ந்தவர். இன்னொரு சகோதரர் ஜெனரல் விஷ்வநாத் சர்மா பாரத ராணுவத்தின் 14ஆவது தலைமைத் தளபதியாகப் பணியாற்றியவர். மருத்துவம் படித்த அவரது சகோதரி ராணுவத்தில் பணியாற்றனார். கமலாவும் அவரது மற்றொரு சகோதரியான மனோரமா இருவரும் ராணுவத்தில் பணியாற்றியவர்களையே மணந்து கொண்டார்கள். வீரமும் தியாகமும் அவர்கள் குடும்பத்தின் பரம்பரைச் சொத்து என்றால் அது மிகையாகாது. 

இன்றய ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் உள்ள கங்கிரா மாவட்டத்தில் 1923ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் நாள் பிறந்தவர் சோம்நாத். அந்தக் காலத்தில் இந்த மாவட்டம்  பஞ்சாப் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் பெரும் வீரத்தைக் காட்டி பரம்வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் விக்ரம் பத்ராவும் இதே பகுதியைச் சார்ந்தவர்தான். 

சோம்நாத்திற்கு நான்கு வயதாக இருந்தபோது மருத்துவத்துறையில் மேற்படிப்பிற்காக அவர் தந்தை இங்கிலாந்து செல்ல வேண்டி இருந்தது. அவரோடு அவரது மனைவியும் சென்றார். எனவே சோம்நாத்தும் அவர் சகோதரர் சசுரீந்தர்நாத்தும் முசோரி நகரில் உள்ள ஹாம்ப்டன் கான்வென்டில் சேர்க்கப்பட்டார்கள். ஒரே வகுப்பிலும் ஒரே விடுதி அறையிலும் என்று அவர்கள் இளமைக்காலம் ஆரம்பமானது. பொது அறிவு மற்றும் வரலாறு ஆகிய படங்கள்தான் சோம்நாத்தைக் கவர்ந்தன. மற்ற பாடங்களைக் காட்டிலும் விளையாட்டிலும் உடற்பயிற்சியிலும்தான் அவரது நாட்டம் இருந்தது. அதனைத் தொடர்ந்து நைனிடாலில் உள்ள ஷெர்வுட் கல்லூரியில் படித்த சோம்நாத் பின்னர் டெஹ்ராடூனில் உள்ள ராணுவக் கல்லூரியில் சேர்ந்து ராணுவத்திற்கான பயிற்சியை வெற்றிகரமாக முடித்தார், 1941ஆம் ஆண்டு இந்திய ராணுவ அகாடெமியில் சோம்நாத் சேர்ந்தார். ஆனால் அது இரண்டாம் உலகப் போர் ஆரம்பமான காலம். எனவே பயிற்சி நிறுத்தப்பட்டு அங்கே பயின்றவர்கள் போர் முனைக்கு அனுப்பப்பட்டார்கள். 1942ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 வயதேயான சோம்நாத் சர்மா 8/19 ஹைதராபாத் படைப்பிரிவின் இரண்டாம் லெப்டினென்டாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.  

ஆங்கிலக் கல்வி பயின்றாலும் தனது பேரன்கள் பாரதப் பண்பாட்டில் இருந்து வழி மாறிவிடக் கூடாது என்று எண்ணிய சோம்நாத்தின் தாத்தா அவர்க்கு இதிகாசங்களைக் கற்பித்தார். குறிப்பாக பகவத்கீதை சோம்நாத்தின் மனதில் ஆழமாகப் பதிந்தது. கீதையே அவரின் வழிகாட்டியாக அமைந்தது. 

ஹைதராபாத் படைப்பிரிவு பின்னாளில் குமாவுன் படைப்பிரிவு என்று பெயர் மாற்றம் பெற்றது. பாரதநாட்டின் வரலாற்றில் குமாவுன் பிரிவு நீண்ட வரலாறு கொண்ட படைப்பிரிவு. இதன் தலைமையகம் உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா நகரின் அருகே உள்ள ராணிகெட் என்ற பகுதியில் அமைந்துள்ளது. மஹாவிஷ்ணுவின் கூர்ம அவதாரம் இந்தப் பகுதியில்தான் நடைபெற்றது என்று இங்குள்ள மக்கள் நம்புகிறார்கள். கடினமான மலைப்பிரதேசத்தில் வாழ்க்கையை நடத்தவேண்டி உள்ளதால் இங்கே உள்ள மக்கள் இயற்கையாகவே வீரமிக்கவர்களாக இருப்பதில் வியப்பேதும் இல்லை. 

குமாவுன் படையின் வரலாறு ஏறத்தாழ பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசியில் தொடங்குகிறது. இந்தப்பகுதியில் இருந்த இளைஞர்கள் அன்றய பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்கள்.  ஹைதராபாத் நிஜாமின் படையை குமாவுன் மக்களை வைத்து ஆங்கில அரசு நிரப்பியது. பாரத நாட்டிலும் பல்வேறு வெளிநாடுகளிலும் ஆங்கில ஆட்சிக்காக உலகின் பல்வேறு நாடுகளிலும், நாடு விடுதலை அடைந்த பிறகு நடைபெற்ற பல்வேறு போர்களிலும் குமாவுன் பிரிவு மிகப் பெரும் வீர சாகஸங்களைச் செய்து பெரும் புகழை அடைந்தது. மேஜர் சோம்நாத் சர்மா மற்றும் மேஜர் சைத்தான் சிங் இருவரும் பரம்வீர் சக்ரா விருது பெற்றார்கள். ஜெனரல் ஸ்ரீநாகேஷ், ஜெனரல் திம்மய்யா, ஜெனரல் ரெய்னா என்ற மூன்று தலைமைத் தளபதிகளை இந்தப் பிரிவு பாரதநாட்டின் ராணுவத்திற்கு அளித்துள்ளது. 

சோம்நாத் சர்மா ஹைதராபாத் படைப்பிரிவைத் தேர்ந்தெடுத்ததற்கு முக்கியமான காரணம் அவரது தாய்மாமா லெப்ட்டினென்ட் கிருஷ்ணன்தத் வாசுதேவா. அவர் ஹைதராபாத் படையின் 4/19ஆம் பிரிவில் பணியாற்றியவர். இரண்டாம் உலகப்போர் காலத்தில் 1942ஆம் ஆண்டு மலேசியாவில் ஜப்பானியப் படைகளை எதிர்த்துப் போரிடும் போது வீரமரணத்தைத் தழுவியவர் அவர். 

சோம்நாத் சர்மா பணியாற்றிய 8/19 ஹைதராபாத் படைப்பிரிவு ஜப்பானியர்களை மியன்மார் நாட்டில் உள்ள அரக்கான் பகுதியில் எதிர் கொண்டது. தான் எதிர்கொண்ட முதல் போர்க்களத்திலேயே சர்மாவின் வீரம் அவரது மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. தனது உயிரையும் துச்சமாக எண்ணி படுகாயமுற்ற சக வீரர் ஒருவரை தன் தோளில் சுமந்து அவரை பத்திரமாக பாசறைக்கு சர்மா கொண்டு வந்தார். இந்த தீரச்செயல் அவரது உயரதிகாரிகளால் குறிப்பிட்டு ராணுவ தலைமையகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. 

காஷ்மீரில் ஊடுருவியவர்களை விரட்டி காஷ்மீரைக் காக்கும் பணியில் முதலில் களம் இறங்கியவர்கள் 1 சீக்கியப் படைப்பிரிவு. லெப்ட்டினென்ட் கார்னெல் ரஞ்சித் ராய் இந்தப் படைக்குத் தலைமை தாங்கினார். 1947ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் நாள் ஸ்ரீநகர் விமனநிலையத்திற்கு வந்தடைந்த இந்தப் படை, பாராமுல்லா நகருக்கு வெளியே பட்டாணியர்களை எதிர்கொண்டது. நடைபெற்ற போரில் ரஞ்சித்ராய் வீரமரணம் அடைந்தார். ஆனால் ஸ்ரீநகரில் பட்டாணியர்கள் ஊடுருவுவது தடுக்கப்பட்டது. போரின் திசையை பாரதநாட்டுக்கு சாதகமாக மாற்ற தனது உயிரை ரஞ்சித்ராய் பலி கொடுத்தார். நாடு அவருக்கு மஹாவீர் சக்ரா விருது வழங்கி கெளரவம் செய்தது. அக்டோபர் 27ஆம் நாள் பாரத ராணுவத்தின் காலாள்படைதினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் படைகள் ஸ்ரீநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் குமாவுன் படைப்பிரிவும்  ஓன்று. அதற்கு சோம்நாத் சர்மா தலைமை தாங்கினார். அப்போது ஹாக்கி விளையாடி கையில் அடிபட்டுக் கொண்டிருந்தார் சோம்நாத். இவரது உயரதிகாரிகள் இவரை ஒய்வெடுக்கும் படி பணித்தனர். எதிரியை விரட்டியபின்  ஓய்வெடுப்பேன் அல்லது அவனோடு போரிட்டு கட்டாய ஓய்வு பெறுவேன். இங்கே உட்கார்ந்திருக்க மாட்டேன் என்று சொல்லி படையோடு கிளம்பினார் சோம்நாத்.

நவம்பர் 3 ஆம் நாள் பட்காம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் இவரது படை வீரர்கள். பாகிஸ்தானிகள் உள்ளே புகுந்துவிடாமல் தடுப்பது அவர்கள் நோக்கம். அங்கே பொதுமக்கள் மட்டும்தான் இருப்பதாகத் தெரிந்தது. நிலைமை கட்டுக்குள் அடங்கி இருந்தது. எதிரி நடமாட்டம் ஏதுமில்லை என்று மூன்று படைப்பிரிவுகளில் இரண்டு கம்பெனிப் பிரிவுகள் ஸ்ரீநகருக்கு மதியம் திரும்பிவிட்டன. சோம்நாத்தின் படைப்பிரிவு மட்டும் காவலுக்கு நின்றது. மூன்று மணிவரை பணி, பிறகு வேறொரு பிரிவு வந்துவிடும் என்று உத்தரவு. ஆனால் உள்ளூர் மக்களோடு கலந்து இருந்த பட்டாணியர்கள்  2.30க்கு உள்ளூர்வாசிகள் வீடுகளுக்குள் இருந்து சுட ஆரம்பித்தனர்.  பொதுமக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்று திருப்பிச் சுட சோம்நாத் உத்தரவு கொடுக்கவில்லை.

சோம்நாத் ஷர்மாவின் படைப்பிரிவு 100 பேர், ஆனால் தாக்குதல் நடத்தும் கூலிப்படையினர் 700 பேர். இந்நிலையில் தாக்குப் பிடிப்பது மிகவும் கடினம் என்று உணர்ந்தார் சோம்நாத். ஆனால் படைப்பிரிவு இடத்தை விட்டுவிட்டு நகர்ந்தால் ஸ்ரீநகர் போக்குவரத்து வழியும், விமான நிலையமும் எதிரிகளின் வசமாகும். நம் ராணுவம் மேற்கொண்டு படைகளை அனுப்பினாலும் வரவோ இறங்கவோ இடமிருக்காது. ஆகவே தம் படைப்பிரிவுக்கு எதிர்த்தாக்குதல் நடத்தவும் அதே நேரம் தற்காப்பாக இருக்கவும் உத்தரவிட்டார். முடிந்தவரை இடத்தை விட்டு அகலாது பாதுகாக்க உறுதிபூண்டனர் நூறுபேர்.

ஆனாலும் ஆட்குறைவும் அடிபட்டு விழும் வீரர்களும் இவர்களது பாதுகாப்பைக் குறைத்தது. சோம்நாத் தானே ஒவ்வொரு போஸ்டுக்கும் ஓடி ஓடி ஆயுதங்களையும், குண்டுகளையும் விநியோகித்தார். ஒருவர் அடிபட்டு விழுந்தால் மற்றொரு வீரர் அந்த இடத்துக்கு வரும்வரை அங்கே நின்று துப்பாக்கி பிடித்துச் சுட்டார். தலைவர் இப்படிச் செய்து அவருக்கு ஏதாவது ஆனால் என்ன செய்வது என்று அவரை பாதுகாப்பான இடத்தில் இருக்கச் சொன்னார்கள் இவரது படைப்பிரிவினர். போர்க்களத்தில் பத்திரமான இடத்தில அமர்ந்து ஆணை பிறப்பிப்பவன் நல்ல தலைவன் அல்ல, அவர் தனது வீரர்களோடு களத்தில் போராடவேண்டும், போர் என்று வந்து விட்டால் நமது பணி எதிரிகளை வெற்றி கொள்வது மட்டும்தான், அதனை மட்டும் இப்போது செய்வோம் என்று கீதையைக் காட்டி தனது வீரர்களை சர்மா உற்சாகமூட்டினார். 

தலைமையகத்துக்கு " எதிரிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். நாங்கள் கடும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறோம். ஆனாலும் இங்கிருந்து பின்வாங்க மாட்டேன். எங்கள் படைப்பிரிவில் கடைசி வீரனும் கடைசி குண்டும் இருக்கும்வரை போராடுவோம்" என்று தகவல் அனுப்பினார். தலைமையகம் உடனடியாக விமானத்தில் வேறு சில படைப்பிரிவுகளை அனுப்பியது. அவர்கள் ஸ்ரீநகர் விமானநிலையம் வந்திறங்கி பட்காம் வருவதற்குள் காலம் கடந்துவிட்டிருந்தது.

சோம்நாத் ஷர்மாவின் படைப்பிரிவில் ஒருவர் கூட எஞ்சவில்லை. ஆனால் 700 பேரில் 200 பேர் சாவும், 250 பேர் காயமும் பட்டதில் பாகிஸ்தானிய கூலிப்படையினர் சற்றே பின்னடைந்தனர். அவர்கள் மீண்டும் தங்களைத் திரட்டிக் கொண்டு வந்த போது 500 பேர் கொண்ட வலிமையான ராணுவப்படைப் பிரிவு வரவேற்றது. வர இயலாமல் மலையிறங்கி பாதிப்பேர் ஓடினர். மீதிப்பேர் ஒரேடியாக மலையேறினர். ஸ்ரீநகர் போக்குவரத்துச் சாலையும் விமான நிலையமும் காப்பாற்றப்பட்டு நமது கஷ்மீரத்தைக் கைப்பற்ற வந்தவர்கள் தோற்று ஓட முக்கியக் காரணமான சோம்நாத் ஷர்மாவும் அவரது படையில் பணியாற்றிய 20 அதிகாரிகளும் 70 சிப்பாய்களும் வீரமரணம் எய்தினர். பத்துப்பேர் குற்றுயிரோடு மீட்கப்பட்டனர். அவர்கள் சொன்னது மூலமாகவே சோம்நாத் ஷர்மாவின் சாகசங்கள் தெரியவந்தன.

மூன்று நாட்கள் போருக்குப் பிறகு அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. சோம்நாத்தின் சட்டைப்பையில் ஒரு சிறு பகவத் கீதை புத்தகம் இருந்தது. அவரது துப்பாக்கியைக் கையில் ஏந்தியபடியே உயிர்நீத்திருந்தார். அவர் அனுப்பிய செய்தியும் காட்டிய வீரமும் மேஜர் ஜெனரல் திம்மையாவால் ஆவணப்படுத்தப்பட்டது. தலைமைத்தளபதிக்கும் தெரியப்படுத்தி அந்தப் படைப்பிரிவுக்கு உரிய கௌரவம் அளிக்க முடிவு செய்தனர். 

மரணம் அடையும்போது திருமணம் ஆகாத சோம்நாத் சர்மாவிற்கு இருபத்தி ஐந்து வயதுதான் ஆகி இருந்தது. பரம்வீர் சக்ரா விருதை முதலில் யாருக்கு அளிப்பது என்ற கேள்வி எழுந்தபோது யோசிக்காமல் தலைமைத் தளபதி கரியாப்பா சொன்ன பெயர் மேஜர் சோம்நாத் ஷர்மா. 

நாட்டைக் காக்க தங்கள் நல்லுயிரை ஈந்த வீரர்களை என்றும் நினைவில் கொள்வோம் 

செவ்வாய், 20 ஜனவரி, 2026

ஜனவரி 20 - அஜித் தோவல் பிறந்தநாள்

 தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல் அவர்களின் பிறந்தநாள் இன்று 1945ஆம் ஆண்டு தற்போதுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்த இவரின் தந்தை ஒரு ராணுவ அதிகாரி. 1967ஆம் ஆண்டு தோவல் ஆக்ரா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

1968ஆம் ஆண்டு அஜித் தோவல் இந்தியக் காவல் பணி தேர்வில் வெற்றிபெற்ற திரு தோவல் கேரள மாநில பணித்துறையில் சேர்ந்தார். 2005ஆம் ஆண்டு இவர் பணி நிறைவைடைந்தார். அப்போது இவர் இந்திய உளவுத்துறையின் தலைவராக இருந்தார்.

இவரது பணிக்காலத்தில் தோவல் பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்தார். பல்லாண்டுகள் பாகிஸ்தானில் தலைமறைவாகப் பணியாற்றி ராணுவத்தில் முக்கிய அதிகாரியாகப் பாராட்டப்பெற்றார்.

2014ஆம் ஆண்டு பிரதமர் திரு நரேந்திர மோதி இவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமித்தார். இந்தக் காலகட்டத்தில் ஈராக் நாட்டில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய செவிலியர்களை விடுவிப்பது, மியான்மர் நாட்டில் இருந்து செயல்பட்ட வடகிழக்கு தீவிரவாத அமைப்புகளின் மீதான தாக்குதல் ஆகியவை இவரது திட்டமிடும் திறமைக்கு சான்றாக அமைகிறது.

இவரது பனிக்காலத்தில் ஆறே ஆண்டுகளில் காவல்துறைப் பதக்கம், காவல்துறைக்கான ஜனாதிபதியின் பதக்கம் மற்றும் அதுவரை ராணுவத்தினருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த கீர்த்தி சக்ரா பதக்கம் ஆகியவைகள் இவரது சேவைக்காக வழங்கப்பட்டுள்ளன.

2014ஆம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை இந்தியாவில் எந்த தீவிரவாத இயக்கங்களால் தாக்குதல் நடத்த  இவரது  திறமைக்கு சான்றாகும்.

திங்கள், 12 ஜனவரி, 2026

ஜனவரி 12 - வீரத் துறவி ஸ்வாமி விவேகானந்தர் பிறந்ததினம்


கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா 
நாடென்ப நாட்டின் தலை                    குறள் 736

தன்னிலையில் கெடாமலும், ஒரு வேளை சூழ்நிலையால் கெட  நேர்ந்தாலும் தனது வளம் குன்றாது இருத்தலும் , மீண்டும் தனது வளத்தை மீண்டும் உருவாக்கிக்கொள்ளும் வலிமை உடையதுதான் நாடு என்று சொல்லப்பட வேண்டும் என்பது திருவள்ளுவர் காட்டும் நாட்டின் இலக்கியம். அப்படி பாரத நாட்டின் வளம் என்பது அதன் ஆன்ம பலத்தில்தான் உள்ளது. 

பாரதத்தின் ஆன்ம பலம் குன்றிப் போய் விடுமோ என்று அஞ்சும் காலத்தில், தகுதியான ஆசிரியர்கள் தோன்றி நாட்டின் ஆன்ம பலத்தை தூண்டி மக்களை வழிகாட்டிச் செல்வது என்பது பாரதத்தின் வரலாற்றில் மீண்டும் மீண்டும் நடைபெறும் நிகழ்வுதான். அப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய ஆசிரியர்தான் ஸ்வாமி விவேகானந்தர். 

பாரத நாட்டின் ஆன்ம பலம் என்பது அதன் ஆன்மீகத்தில் உள்ளது. ஆன்மீகத்தின் கருத்து என்பது உபநிடதங்களில் உள்ள நான்கு மஹாவாக்யங்களில் தெளிவாகிறது. ப்ரக்யானம் ப்ரம்ஹ, அயம் ஆத்மா ப்ரம்ஹ, தத் த்வ மஸி, அஹம் ப்ரம்ஹாஸ்மி என்பனவையே அந்த நான்கு மஹாவாக்யங்கள். அறிவே ப்ரம்ஹம், நானே ப்ரம்ஹம், நீயே அதுவாக ( ப்ரம்ஹமாக ) உள்ளாய், என்பதுதான் அந்த தத்துவம். எல்லா இடத்திலும் வியாபித்து இருப்பதுதான் என் உள்ளிலும் உள்ளது, நானும் ப்ரஹ்மமும் வேறில்லை, இந்த அறிவே ப்ரஹ்மம் எனவே உலக மக்கள் அனைவரும் ஒன்றே, என்னுள் இருக்கும் அதே ப்ரம்ஹம்தான் அனைத்து உயிரினங்களின் உள்ளேயும் உள்ளது என்பதுதான் பாரத நாடு காட்டும் பாதை. 

ஆனாலும் காலவோட்டத்தில் மக்கள் இதனை மறந்து விடுகிறார்கள். அப்போது நாடு அதன் இயல்பான தன்மையை விட்டு விலகி இருளடைந்த காலத்தில் சென்று விடுகிறது. அந்த இருளை விரட்ட தகுதியான குருமார்கள் தோன்றி நாட்டை நல்வழியில் செலுத்துகின்றனர்.வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்த நாட்டின் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி நாட்டை அடிமையாக்கினார். மிகப் பெருமளவில் மக்கள் திரண்டு அந்நியரை எதிர்த்து முதல் சுதந்திரப் போரை நடத்தினர். ஆனாலும் நவீன ஆயுதங்களை கொண்ட அன்னியர்களை பாரத மக்களால் வெற்றிபெற முடியவில்லை. இந்த காலகட்டத்தில்தான் ஸ்வாமி அவதரித்தார். இவரின் குருநாதர் இவருக்கு முப்பதாண்டுகளுக்கு முன்பே பிறந்து இவருக்காக காத்துகொண்டு இருந்தார். 

வங்காளத்தில் பிறந்த நரேந்திரநாத் தத்தா என்ற ஞான சூரியன், உண்மையை அறிந்துகொள்ள வேண்டி பல்வேறு அறிஞர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். அவரின் ஐயங்களின் தீர்வு படிப்பறிவே இல்லாத ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் இருந்தது. "உன்னை நான் பார்ப்பது போல, காளியைப் பார்க்கிறேன்" என்று கூறி நரேந்திரனை அதிரவைத்தார் ராமகிருஷ்ணர். இது அல்லது அது என்ற இரட்டைப்படை சிந்தனையில் வளர்ந்த நரேந்திரனுக்கு உண்மைக்கு ஒரே வழி மட்டுமே இல்லை, எந்த வழியில் சென்றாலும் உண்மையை அறியலாம் என்பதை ராமகிருஷ்ணர் காட்டினார். உருவ வழிபாடோ அல்லது அருவ வழிபாடோ, பக்தி யோகமோ, கர்ம யோகமோ அல்லது ஞான யோகமோ எல்லாமே ஒரே இடத்தைச் சென்று சேர உதவும் பல்வேறு பாதைகள் என்பதை நரேந்திரன் புரிந்து கொண்டார். ஆங்கிலப் படிப்பு படித்திருந்த நரேந்திரன், பெருமளவில் எதையும் படிக்காத, ஆனால் படிப்பதனால் மட்டுமே புலனாகாத உண்மையை அறிந்து கொண்டிருந்த ராமகிருஷ்ணரிடம் சரணடைந்தார். இல்லறத்தில் துறவறம் என்று வாழ்ந்த ராமகிருஷ்ணரின் பாதையில் செல்ல முடிவெடுத்த நரேந்திரர் துறவு பூண்டார். ஸ்வாமி விவேகானந்தர் என்ற யோகபட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. 

அனைத்தையும் துறந்து பாரத நாட்டை சுற்றிவரும் பரிவ்ராஜக சன்யாசிகளின் வரிசையில் ஒரு புதிய வரவாக ஸ்வாமிஜி நாடு முழுவதும் சுற்றிவந்தார். பாரத மக்களின் வறுமையும், அறியாமையும் அவரின் இதயத்தை தாக்கியது. அந்த நேரத்தில், மூடநம்பிக்கைகளின் பிடிகளிலும், பரவலான எழ்மை நிலைகளிலும் பாரத தேச மக்கள் கடின வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சோர்வும், அடிமைத்தனமும் பாரத மக்களின் ரத்த்த்தோடு கலந்தவைகளாகவே தோற்றமளித்தன. மக்கள் தங்கள் தலைவிதியை நொந்து கொண்டு வாழ்ந்தார்கள். அவர்களில் அனேகர் வெளி நாட்டுச் சரக்கு எதுவாக இருந்தாலும் அதைப் பெரிதாக மதித்தார்கள். நாட்டுப் பற்று கொண்ட தலைவர்களைக் காணமுடியவில்லை. 

எல்லாம் விதிப்படி நடக்கும் என்று கூறிச் செல்லும் திண்னை வேதாந்தி அல்ல ஸ்வாமிஜி. ஊழையும் உட்பக்கம் காணலாம் என்ற செயல்வீரர் அவர். பாரத தரிசனம் ஸ்வாமிக்கு அவரின் வாழ்வின் குறிக்கோளை உணரவைத்தது. சுவாமி விவேகானந்தர் அவர்கள், இந்திய துணை கண்டத்தில் தென் கோடி முனையில் இருக்கும் கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார். அவர் கடலில் சிறிது தூரம் நீந்தி, ஒரு தனி பாறையின் மீது அமர்ந்து, தனது தியானத்தைத் தொடங்கினார். மூன்று நாட்கள் அங்கு தியானம் மேற்கொண்ட அவர், இந்தியாவின் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்காலம் பற்றி தன் தியானத்தில் கண்டதாகக் கூறினார். 

அமெரிக்காவில் நடைபெற இருந்த சர்வ சமய மகாநாட்டில் கலந்துகொள்ள அன்றய ராமநாதபுரம் அரசர் சேதுபதி ஸ்வாமியை கேட்டுக் கொண்டார். ஸ்வாமிஜி அமெரிக்காவிற்கு பயணப்பட்டார். சிகாகோ நகரில் " எனது அமெரிக்க சகோதர சகோதரிகளே" என்று தொடங்கிய அவரது பேச்சு உலக அரங்கில் பாரதத்தின் இடம் எது என்பதை ஐயம்திரிபுர நிலை நாட்டியது. தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிகெட்ட நாடல்ல பாரதம், அது உலகின் ஆன்மீக குரு என்பதை ஸ்வாமியின் அமெரிக்கப் பயணம் உறுதி செய்தது. 

பாரதத்தின் ஆன்மீக ஞானத்தை உலகமெலாம் எடுத்துச் செல்லவும், பாரத நாட்டு மக்களுக்கு தேவையான கல்வி மற்றும் மருத்துவ வசதிகளைச் செய்து கொடுக்கவும் என்று ராமகிருஷ்ணா மிஷன் என்ற நிறுவனத்தையும் ஸ்வாமி உருவாக்கினார். நாடெங்கிலும் பல்வேறு நலப்பணிகளை ராமகிருஷ்ணா மிஷன் துறவிகள் இன்று நடத்திக்கொண்டு வருகிறார்கள். 

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பாரத மக்களின் உந்து சக்தியாக விளங்கியவர் ஸ்வாமிஜிதான். காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் ஹெட்கேவார், மஹரிஷி அரவிந்தர், ஸ்வாமி ராமதீர்த்தர், ஸ்வாமி சின்மயானந்தா, சி வி ராமன், ஜாம்ஷெட்ஜி டாடா, நானாஜி தேஷ்முக்  என்று பலரின் வாழ்வில் அவர்கள் வாழ்வின் குறிக்கோளை சுட்டிக் காட்டியவராகவும், அவர்களின் இலட்சியத்தை அடைய ஓயாது செயல்பட அவர்களைத் தூண்டியவராகவும் ஸ்வாமி விவேகானந்தர் விளங்குகிறார். 

எழுமின் விழுமின், எடுத்த செயல் நிறைவேறும் வரை துஞ்சாமல் உழைமின் என்ற உபநிடத வாக்கியத்தின் இலக்கணமாக வாழ்ந்து இன்றும் நமக்கு வழிகாட்டியாக விளங்கும் ஸ்வாமி விவேகானந்தரின் பாத கமலங்களை வணங்கி, நாட்டின் வளர்ச்சிக்கு நமது வாழ்வை அர்பணிப்போம் என்று உறுதி கூறுவோம். 

செவ்வாய், 6 ஜனவரி, 2026

ஜனவரி 6 - கௌரவ கேப்டன் பானாசிங் பிறந்ததினம்

காஷ்மீர் மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் விவசாயம் செய்து வரும் அந்த முதியவர் வருடம் தோறும் ஜனவரி மாதம் தனது ராணுவ உடுப்புகளைகளையும் தான் பெற்ற விருதுகளையும் நெஞ்சில் தரித்துக் கொண்டு டெல்லியில் நடைபெறும் குடியரசுதின அணிவகுப்பில் கலந்துகொண்டு குடியரசுத் தலைவருக்கு ராணுவ முறைப்படி வணக்கம் வைத்து மீண்டும் தனது கிராமத்திற்குத் திரும்புவது வழக்கம். 

அந்த எளிய மனிதரின் பெயர் பானாசிங். வீர சாகசச் செயலுக்காக பாரத ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருதைப் பெற்றவர் அவர். அந்த வீரரின் பிறந்ததினம் இன்று.  பானாசிங் சீக்கிய சமயத்தைச் சார்ந்தவர். அவரது குடும்பம் காஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்தது. 1949ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் நாள் பிறந்த பானாசிங், தனது இருபதாம் வயதில் பாரத ராணுவத்தில் காஷ்மீர் படைப்பிரிவில்  தன்னை இணைத்துக்கொண்டார். இமயமலைப் பகுதிகளைக் காப்பாற்ற நடைபெறும் போர்களில் பங்குகொள்ளும் வீரர்களைத் தயார்படுத்தும் சிறப்பு பயிற்சி இவருக்கு அளிக்கப்பட்டது. 

ஆப்கானிஸ்தான் தஜகிஸ்தானில் தொடங்கி பாகிஸ்தான் வழியாக பாரதநாட்டைக் கடந்து சீனா வரை ஏறத்தாழ ஐநூறு கிலோமீட்டர் அளவிலான  மலைத்தொடர் காரகோரம் மலைத்தொடர். துருவப்பகுதிகளுக்கு வெளியே பனிப்பாறைகள் அமைந்துள்ள இடம் இது. உடலை உருகவைக்கும் குளிர் பிரதேசமான இந்த மலைத்தொடரில் கடல்மட்டத்தில் இருந்து 18.875 அடி உயரத்தில் அமைந்துள்ளது  சியாச்சின் பகுதி. 

சியாச்சின் என்பது ஒரு தனி உலகம். அங்கே செல்லாதவர்களுக்கு அதன் அழகையோ  அல்லது அதனை காத்து நிற்கும் வீரர்கள் படும் துன்பங்களையோ புரிந்துகொள்ள முடியாது. உலகத்தின் கூரையாக பார்க்கும் இடங்களில் எல்லாம்  பனிப்பாறைகளும் பனிக்கட்டிகளும் நிறைந்திருக்கும் இடம் அது. கொஞ்சும் அழகோடு கவனமாக இல்லாவிட்டால் உயிரைப் பறிக்கும் அபாயகரமான இடம் அது.  பூஜ்யத்திற்கு கீழே நாற்பது  டிகிரி செல்சியஸ் குளிரும், அதோடு நாற்பத்தி ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் உறைய வைக்கும் குளிர் காற்றும் வீசும் இடம் இது. 

இங்கே போரில் இறந்தவர்களை விட உறைய வைக்கும்  குளிரால், கடினமான காலநிலையால் மலைச்சரிவால் பனிப்பொழிவால்  என்று இயற்கைப் பேரிடர்களால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். உலகின் மிக உயரமான இந்தப் பகுதியைக் கைப்பற்றவும், காப்பாற்றித் தக்கவைக்கவும் பல பாரத வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்த இடமும் இதுதான். உலகின் மிக உயரமான மற்றும் கடினமான போர்க்களம் இது. 

1987ஆம் ஆண்டு நடைபெற்ற  ஊடுருவல் மூலம் பாகிஸ்தான் சால்டோரா மலைத்தொடரில் பிலாபோண்ட் கணவாய் பகுதியில் ஒரு ராணுவ தளத்தை உருவாக்கியது.  அதற்கு காயித் இ ஆசம் தளம் என்று பெயர் சூட்டியது. காயித் இ ஆசம் என்ற பெயர் பாகிஸ்தானை உருவாக்கிய முகம்மது அலி ஜின்னாவின் பெயர். இங்கிருந்து பாகிஸ்தான் படைகளால் பாரதத்தின் பாதுகாப்பு நிலையங்களையும், ராணுவ ஹெலிகாப்டர்கள் வருவதையும் கண்காணிக்க முடியும். மலை உச்சியில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் பாரத ராணுவத் தளங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதலைத் தொடுக்கத் தொடங்கியது. தரைமட்டத்தில் இருந்து 20,000 அடி உயரத்தில் இந்தப் பகுதி உள்ளது. 457 மீட்டர் உயரமுள்ள பனிப்பாறைகள் இதனைச் சுற்றி உள்ளது. ஏறக்குறைய செங்குத்தான பாறைகள் இவை. மேலே உள்ள எதிரியை கண்களில் படமால் இங்கே வந்து சேர்வது என்பது நடக்கவே முடியாத ஓன்று. எதிரிப் படைகளை அங்கே இருந்து அகற்றி, அந்தத் தளத்தைக் கைப்பற்றாமல் விட்டால் காஷ்மீரின் பல இடங்களை பாரதம் இழக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்தத் தாக்குதல் என்பது அநேகமாக மரணத்தைத் எதிர்கொள்வதாதான் இருக்கும். ஆனால் இந்த சவாலை பாரத ராணுவம் எதிர்கொண்டது.

 1987ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் நாள் ஜம்மு காஷ்மீர் காலாள்படைப் பிரிவைச் சார்ந்த செகண்ட் லெப்ட்டினென்ட் ராஜிவ் பாண்டே தலைமையில் எட்டு வீரர்கள் கொண்ட படை பனிமலையில் எறத் தொடங்கியது. ஆபரேஷன் மேகதூத் என்று இந்தத் தாக்குதலுக்குப் பெயரிடப்பட்டது. மலையுச்சியை அடைவதற்கு முப்பது மீட்டரே இருக்கும்போது அவர்களை பாகிஸ்தான் படை கண்டுகொண்டு துப்பாக்கியால் சுடச் தொடங்கியது. அதில் ராஜிவ் பண்டேயும் ஐந்து வீரர்களும் வீரமரணம் அடைந்தார்கள். ராஜிவ் பாண்டேவுக்கு வீர் சக்ரா விருது வழங்கி நாடு மரியாதை செலுத்தியது. 

காயித் இ ஆசாம் தளத்தைக் கைப்பற்றவும் ராஜிவ் பாண்டே மற்றும் அவரது அணியின் வீர மரணத்திற்குப் பழி வாங்கவும் அடுத்த தாக்குதலை நடத்த பாரத ராணுவம் தயாரானது. இந்தத் தாக்குதலுக்கு ஆபரேஷன் ராஜிவ் என்று பெயர் சூட்டப்பட்டது. மேஜர் வரீன்தர்சிங் இந்தத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார். கேப்டன் அணில்சர்மா உள்ளிட்ட அறுபத்தி இரண்டு வீரர்கள் இந்தத் தாக்குதலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

இரண்டு முறை முயற்சி செய்தும் அவை வெற்றியாடாததால் ஒரு இறுதித் தாக்குதலை நடத்த வரீன்தர்சிங் முடிவு செய்தார். எட்டு வீரர்களது வரீன்தர்சிங் ஒரு பக்கத்தில் இருந்தும் ஐந்து பேர் கொண்ட படையோடு மறுபக்கமாக பானாசிங் தலைமையில் மற்றொரு படையும் மலை ஏறவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 

நீண்ட கடினமான பாதையின் வழியாக மலையுச்சியை சென்றடைய பானாசிங் முடிவு செய்தார். இருளைப் பயன்படுத்தி செங்குத்தான மலையை பானாசிங் படை சென்றடைந்தது. பதுங்குகுழியில் இருந்த பாகிஸ்தான் ராணுவவீரர்கள்மீது கையெறிகுண்டை எறிந்து  அதோடு அந்தக் குழியின் கதவையும் பூட்டி அவர்களை பானாசிங் அழித்தொழித்தார். மீதி இருந்த பாகிஸ்தான் வீரர்களோடு நேருக்குநேரான சண்டையில் மீதம் இருந்த பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். இமயத்தின் உச்சியில் மீண்டும் மூவர்ணக்கொடி பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது. 

காயித் இ ஆசம் முனைக்கு பானாசிங் முனை என்று பெயரிட்டு அந்த வீரனை பாரத ராணுவம் மரியாதை செலுத்தியது. மிகவும் கடினமான சூழ்நிலையில் தலைமைப் பண்பையும் மகத்தான வீரத்தையும் வெளிப்படுத்தியதற்காக பானாசிங்கிற்கு ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. ஆபரேஷன் ராஜீவில் பங்குகொண்ட வீரர்களுக்கு  ஒரு பரம்வீர் சக்ரா, ஒரு மஹாவீர் சக்ரா, ஏழு வீர் சக்ரா, ஒரு சேனா பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன. 

முப்பதாண்டு ராணுவ சேவைக்குப் பிறகு பானாசிங் 2000ஆம் ஆண்டில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு கௌரவ கேப்டன் பதவி கொடுத்து ராணுவம் மரியாதை செய்தது. பானாசிங்கின் மகன் ராஜிந்தர்சிங்கும் 2008ஆம் ஆண்டு முதல் பாரத ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.  

திங்கள், 5 ஜனவரி, 2026

ஜனவரி 5 - முரளி மனோகர் ஜோஷி பிறந்தநாள் -


பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான திரு முரளி மனோகர் ஜோஷியின் பிறந்தநாள் இன்று. 1934ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் நாள் இன்றய உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா பகுதியில்  பிறந்த ஜோஷி, இயற்பியலில் இளங்கலைப் பட்டத்தை மீரட் கல்லூரியிலும், முதுகலைப் பட்டத்தை அலஹாபாத் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். நிறமாலையில் ( Spectroscopy ) முனைவர் பட்டம் பெற்ற ஜோஷி, அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னாளில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் சர்சங்கசாலக்காக இருந்த பேராசிரியர் ராஜேந்திரசிங்கின் மாணவர் திரு ஜோஷி. முனைவர் பட்டத்திற்கான தனது ஆராய்ச்சிக் கட்டுரையை ஹிந்தி மொழியில் சமர்பித்தவர் ஜோஷி. பாரதத்தில் முதல் முறையாக ஹிந்தியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை இதுதான்.

சிறு வயதிலேயே பசு பாதுகாப்பு இயக்கத்திலும், நிலவரி குறைப்பு போராட்டங்களிலும் ஜோஷி பங்கு பெற்றார். பாரதிய ஜன சங்கத்திலும், அகில பாரத வித்யார்த்தி பரீக்ஷித் அமைப்பிலும் ஜோஷி பல்வேறு பொறுப்புகளை வகித்தார். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட உடனேயே கைது செய்யப்பட்ட தலைவர்களில் ஜோஷியும் ஒருவர்.

அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மக்களவைக்குத் தேர்வான ஜோஷி, ஜனதா கட்சியின் நாடாளுமன்ற செயலாளராகப் பொறுப்பேற்றார். ஜனதா கட்சி உடைந்த பிறகு உருவான பாரதிய ஜனதா கட்சியில் அகில பாரத செயலாளராகவும் பின்னர் பொருளாளராகவும் பணியாற்றினார்.

பிஹார், வங்காளம், வட கிழக்கு மாநிலங்களின் பொறுப்பாளராக பணியாற்றிய ஜோஷி, அங்கெல்லாம் பாஜக காலூன்ற வகை செய்தார். 1991 - 1993 காலகட்டத்தில் பாஜகவின் அகில இந்திய தலைவராகவும் ஜோஷி பொறுப்பு வகித்தார்.

1977, 1996, 1998, 1999, 2009, 2014 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அல்மோரா, அலஹாபாத், வாரணாசி, கான்பூர் ஆகிய தொகுதிகளில் இருந்து ஜோஷி மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். 1992, 2004ஆம் ஆண்டுகளில் ராஜ்யசபை உறுப்பினராகவும் ஜோஷி தேர்வானார்.

முதன்முறையாக வாஜ்பாய் தலைமையில் உருவான அரசின் உள்துறை அமைச்சராகவும், பின்னர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் ஜோஷி பணியாற்றி உள்ளார்.

நூற்றுக்கும் மேலான அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளையும் விகல்ப் மற்றும் பிரக்யா பிரவாக் என்ற நூல்களையும் ஜோஷி எழுதியுள்ளார். ஜோஷியின் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் உலகின் புகழ்பெற்ற அறிவியல் பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன. திருப்பதி சமிஸ்க்ரித பல்கலைக்கழகம் முரளி மனோகர் ஜோஷிக்கு மஹோமஹோபாத்தியாய பட்டத்தை அளித்து சிறப்பித்து உள்ளது. ஜோஷியின் சேவைகளை அங்கீகாரம் செய்யும் விதமாக பாரத அரசு அவருக்கு 2017ஆம் ஆண்டு பத்மவிபூஷன் பட்டத்தை அளித்துள்ளது.

முதுபெரும் தலைவர் முரளி மனோகர் ஜோஷி இன்னும் பல்லாண்டு காலம் நலமோடு வாழ்ந்து கட்சியையும், நாட்டையும் அறிவுரை கூறி வழிநடத்த வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, திரு ஜோஷி அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.