செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

சர் தோரப்ஜி டாடா பிறந்தநாள் - ஆகஸ்ட் 27.

டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் மகனும், டாடா குழுமத்தின் இரண்டாவது தலைவரும், தொழிலதிபருமான திரு தோரப்ஜி டாடா அவர்களின் பிறந்தநாள் இன்று,



1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் நாள் திரு ஜாம்ஷெட்ஜி டாடா - ஹீராபாய் தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர் திரு தோரப்ஜி டாடா. தனது பள்ளிக்கல்வியை மும்பையிலும் பின்னர் பட்டப் படிப்பை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், மும்பையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியிலும் முடித்தார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார்.

1884 ஆம் ஆண்டு தந்தையின் நிறுவனத்தில் இணைந்த திரு தோரப்ஜி டாடா முதலில் பாண்டிச்சேரி நகரில் நூற்பாலை ஒன்றை நிறுவ முடியமா என்பதை கண்டுபிடிக்கவும், பின்னர் நாக்பூரில் உள்ள அவர்களின் துணி ஆலையிலும் பணியாற்றினார். மைசூர் நகரில் வசித்து வந்த கல்வித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றிய திரு ஹோர்முர்ஷி பாபாவின் மகளான மெஹர்பாய் என்ற பெண்மணியை மணம் செய்தார். மெஹர்பாயின் சகோதர் மகன்தான் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் டாக்டர் ஹோமி பாபா.

ஜாம்ஷெட்ஜி டாடாவின் மறைவிற்குப் பிறகு டாடா குழுமத்தின் தலைவராக திரு தோரப்ஜி டாடா பொறுப்பேற்றார். அப்போது டாடா குழுமத்தில் நூற்பாலைகளும் மும்பையில் உள்ள தாஜ்மஹால் ஹோட்டலும்தான் இருந்தன. தந்தையின் கனவை தனயன் நிறைவேற்றினார். டாடா குழுமத்தின் முக்கிய அங்கமான டாடா இரும்பு எக்கு தொழில்சாலை, டாடா மின் உற்பத்தி ஆலை, நியூ இந்தியா காப்பீட்டுக் கழகம் ஆகியவற்றை திரு தோரப்ஜி டாடா நிறுவினார். திரு ஜாம்ஷெட்ஜி டாடா காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பெங்களூர் நகரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் ( Indian Institute of Science ) திரு தோரப்ஜி டாடா காலத்தில்தான் முறையாகத் தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஒரு பெரும் தொகையை நன்கொடையாக அளித்தார்.

இந்திய தொழில் முன்னேற்றத்தில் திரு தோரப்ஜி டாடா அவர்களின் பங்களிப்பை மரியாதை செலுத்தும் வகையில் அன்றய ஆங்கில அரசு இவருக்கு சர் பட்டம் வழங்கியது.

வெற்றிகரமான தொழிலதிபராக மட்டுமல்லாது திரு தோரப்ஜி டாடா  ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும், விளையாட்டு வீரர்களை ஆதரிப்பவராகவும் விளங்கினார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தை நிறுவி அதன் தலைவராகவும் அவர் பணியாற்றினார். 1924 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கு பங்குபெற்ற இந்திய அணியின் மொத்த செலவையும் டாடாவே அளித்தார்.

1931 ஆம் ஆண்டு திரு தோரப்ஜி டாடாவின் மனைவி மெஹர்பாய் தனது 52 ஆம் வயதில் ரத்த புற்றுநோயால் மரணமடைந்தார். மனைவியின் நினைவாக திருமதி டாடா நினைவு அறக்கட்டளையை நிறுவி ரத்த புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிக்காக பொருளுதவி செய்தார். 1932 ஆம் ஆண்டு சர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை நிறுவப்பட்டது. கல்வி, பேரிடர் மேலாண்மை போன்ற சமுதாய பணிகளை இந்த அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.

1932 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் நாள் தோரப்ஜி டாடா காலமானார். இன்று ஆல்போல் பெருகி அருகுபோல் வேரோடி இருக்கும் டாடா குழுமத்தை நிலைநிறுத்தியதில் திரு தோரப்ஜி டாடா அவர்களின் பங்கு மகத்தானது.