வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

கண்ணன் வருகின்ற நேரம் - ஜன்மாஷ்டமி - 23 ஆகஸ்ட்

இன்று கோகுலாஷ்டமி திருநாள். நாடுமுழுவதும் வீடுகள் எல்லாம் வாசலைப் பெருகி, நீரிட்டு மெழுகி, கோலம் இட்டு வாசலில் இருந்து கண்ணனின் காலடித் தடத்தை வரைந்து வெண்ணையும் அதிரசமும் அக்கார அடிசிலும் தயாரித்து கண்ணன் வருகைக்காக மக்கள் காத்துக்கொண்டு இருக்கும் பெருநாள்.



பாரத மண்ணின் இதிகாச நாயகன் சந்தேகமே இல்லாமல் நடையில் நின்று உயர் நாயகன் ராமன்தான். ஆனாலும்  மக்களின் உள்ளம் கவர்ந்தவன் கண்ணன்தான். ஆதியும் அந்தமும் இல்லாத இறைப் பொருள் மனிதனாக தோன்றி மக்கள் வாழும் வழியைச் சொல்லிச் சென்றதுதான் கண்ணனின் கதை.

ஒரு மனிதனுக்கு எப்படியெல்லாமோ துன்பங்கள் வரலாம், ஆனால் எல்லாவற்றையும் புன்முறுவலோடு எதிர்கொள்வது எப்படி என்பதையும், மகனாக, சகோதரனாக, நண்பனாக, அரசனாக, ராஜதந்திரியாக, நல்லாசானாக எப்படியெல்லாம் சமுதாயத்தோடு பழக வேண்டும் என்பதையும், இந்த சூழல் எந்த நேரத்திலும் கட்டுப்பட்டு விடாமல் தனித்திருப்பது எப்படி என்பதையும் கற்றுக்கொடுத்தவன் கண்ணன்.

பிறப்பதற்கு முன்னமே அவனை அழிக்க எதிரி காத்துகொண்டு இருந்தான். ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்த இளமைப் பருவம், வளரும் பருவத்தில் வீசும் இடமெல்லாம் குளுமையைத் தரும் தென்றல் போன்ற செயல்கள், எப்போதும் நண்பர்கள் பட்டாளம் சூழ வாழும் வாழ்க்கை, இசையே வாழ்வா இல்லை இசையோடு வாழ்வா என்று பிரித்து அறியாதபடி குழல் ஊதி மனமெல்லாம் கொள்ளை கொண்டாடும் திறமை, அழைப்பு வந்த உடன் அதனை மறுக்காமல் மதுரா நகருக்குச் சென்று மாமன் கம்சனை வென்ற வீரம், வெற்றி பெற்று அதனால் தனக்கு உரிமையான அரசை ஏற்காமல் அதனை உக்ரசேன மஹாராஜாவிற்கே அளித்த பெருந்தன்மை, கம்சனின் மாமனாரான ஜராசந்தனின் தாக்குதலுக்கு நாட்டு மக்களை பலியிடாமல் மத்திய பாரதத்தில் இருந்து மேற்கு கடற்கரை நகரமாம் துவாரகா நகருக்கு மாறிச் சென்ற யதார்த்தவாதி, அதே ஜராசந்தனை பாண்டவர்களைக் கொண்டு அழித்த புத்திசாலித்தனம், பாண்டவர் தூதுவனாய் அமைதிப் பேச்சுவார்தையை முன்னெடுத்த அமைதியின் தூதுவன், அது முடியாமல் போக பார்த்தனுக்கு சாரதியாக அமர்ந்து, இலக்குகள்தான் முக்கியம் தனிமனிதனலல்ல என்று பாடம் நடத்திய கடமை வீரன், போர்க்களத்தில் சோர்வுற்று இருந்த அர்ஜுனனுக்கு கடமையை செய்ய உத்வேகம் ஊட்டிய மனோதத்துவ நிபுணன். கண்ணனின் பல்முக ஆளுமை என்பது நாம் எல்லோருமே அறிந்ததுதான்.

இன்றய காலத்தில் நாட்டிற்கு கண்ணன் கூறும் செய்தி என்ன ?

பிரச்சனைகளும் பின்னடைவுகளும் எல்லோர் வாழ்விலும் ஒரு தவிர்க்க முடியாத பகுதிதான். அதற்காக புலம்பிக் கொண்டு இருப்பதில் பயனில்லை. வாழுவது ஒரு வாழ்க்கை, அதை ஆனந்தமாக வாழுவது எப்படி என்பது கண்ணன் காட்டும் ஒரு  பாடம்.

இசையை ரசிக்கத் தெரியாத அல்லது இலக்கியத்தில் பரிச்சியம் இல்லாத தலைமுறைக்கு வாழ்க்கையை வாழத் தெரியாது. எனவே இவைகளில் குறைந்த பட்ச பரிட்சயமாவது இருக்க வேண்டும், இது கண்ணனின் கையில் உள்ள புல்லாங்குழல் இசைக்கும் பாடம்.

தேங்கிக் கிடக்கும் நீர் கெட்டுவிடும், வில்லில் இருந்து புறப்படாத அம்பு எந்த இலக்கையும் அடையாது. எல்லா மனிதர்களுக்கும் பயணம் என்பது மிக அவசியம். மதுரா நகரில் இருந்து கோகுலத்திற்கு, அங்கிருந்து மீண்டும் மதுரா நகருக்கு, அங்கிருந்து துவாரகாபுரிக்கு, பிறகு  அஸ்தினாபுரத்திற்கும் குருஷேத்திர படுகளத்திற்கும் என்ற கண்ணன் நடந்த பாதை காட்டும் வழி நமக்கு இதுதான்.

வேடிக்கையும் விளையாட்டும் குறும்புத்தனமும் என்று இருந்த கண்ணன் நல்லாசிரியனாக வழிகாட்டியாக ஜகதகுருவாக தன்னை வெளிகாட்டிக் கொண்டது குருஷேத்திர படுகளத்தில். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டில் பிறந்த மக்களுக்கு வழிகாட்டியாக அமைந்த கீதையை அங்கேதான் கண்ணன் கூறுகிறான். எழுநூறு ஸ்லோகங்களின் சாரம் என்ன ?

"ஆரியனுக்கு அடுக்காததும் புகழைக் கெடுக்கக் கூடியதுமான மனச் சோர்வை விட்டொழி. செயல் செய். செயல் புரிவது என்ற கடமைக்காக செயலைப் புரி. பலனின் மீது பற்றில்லாமல் செயல் செய். பெருந்தோளா ! பாரதா ! எழுந்து நில், செயல் புரி" இது தான் கண்ணன் நமக்கு காட்டும் வழி.

வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தில் நாடு இருக்கிறது, இந்த நாட்டிற்கான நமது பங்களிப்பை செய்ய நாம் செயல் பட வேண்டும். தொழில் செய்தாலும் கல்வி கற்றாலும் தேசத்தின் நன்மைக்கே என்ற அர்ப்பண உணர்வோடு செயல் செய்யவேண்டும் என்பதுதான் நமக்கு கண்ணனின் அறைகூவல்.

நம்மில் உள்ள கண்ணனை கண்டறிவோம், கண்ணனைக் கண்டடைவோம்.

நண்பர்களுக்கு ஒரே இந்தியா தளத்தின் ஜென்மாஷ்டமி வாழ்த்துகள்.