ஞாயிறு, 22 மார்ச், 2015

ஆயுள் காப்பீடு - இன்னும் கொஞ்சம்

ஆமாம், ஒரு லட்ச ரூபாய் மாத வருமானத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யவேண்டும் என்றால், அதற்கான ப்ரீமியம் எவ்வளவு இருக்கும் ?
உங்கள் வயது முப்பத்தி ஐந்து என்றால், நீங்கள் காப்பீடு செய்யும் காலம் முப்பது வருடங்கள் என்றால் நீங்கள் செலுத்தும் தொகை வருடம் ஒன்றுக்கு ஏறத்தாழ ஐந்து லட்சம் வரை வரும்.

வருட வருமானம்               : பனிரெண்டு லட்சம்
உங்கள் செலவு                    : முன்றரை லட்சம்
காப்பீடுக்கான தொகை     : ஐந்து லட்சம்.

சம்பாதிக்கும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கு, காப்பீடு செய்ய என்று எடுத்து வைத்துவிட்டால் அப்புறம் எப்படி மற்றச் செலவுகளைச் செய்ய ? கணக்கு இடிக்கிறது இல்லையா. இதைச் சற்றே ஒரு பக்கமாக வைத்து விட்டு காப்பீடு நிறுவனங்கள் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் பார்ப்போம்.

பலரிடம் இருந்து பணம் பெற்று, சிலருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடு செய்வதுதான் காப்பீடு நிறுவனங்களின் வேலை என்று முன்னர் பார்த்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். இந்த சேவையைச் செய்ய காப்பீடு நிறுவனங்கள் ஆள்களை வேலைக்கு வைக்க வேண்டும், அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும், அதற்கான அலுவலகம், அதற்கான வாடகை, மற்றச் செலவுகள் இவை எல்லாம் இருக்கிறது அல்லவா. இந்தச் செலவுகளை அந்த நிறுவனம் எவ்வாறு ஈடுகட்டும் ? அந்தச் செலவுகளையும் நாம்தான் கொடுக்கிறோம்.

இருபது வருடங்கள் நீங்கள் பணம் கட்டினால், அந்தக் காலம் முடிந்தபின் நீங்கள் கட்டிய பணம் வட்டியோடு திரும்பி வரும் என்றுதானே காப்பீடு நிறுவனத்தின் முகவர்கள் உங்களுக்கு சொல்லிருக்கிறார். உங்களுக்கு மீண்டும் திரும்பி வரும் அந்தப் பணம் எங்கே இருந்து வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா ?

இருபது வருடங்களுக்கு நீங்கள் ஒரு லட்ச ரூபாய்க்கு காப்பீடு செய்து கொண்டால், நீங்கள் வருடம் ஒன்றுக்கு ஐயாயிரம் ரூபாய்க்குக் குறைவாகத்தானே பணம் கட்ட வேண்டி இருக்கும். நீங்கள் வருடாவருடம் அளிக்கும் பணத்திற்கு வட்டியைக் கணக்கிட்டால் நீங்கள் செலுத்தும் தொகை இன்னும் குறைவாகத்தானே இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் செலுத்தும் தொகை அதிகமாகத்தானே இருக்கிறது. அது ஏன் ?

இங்கேதான் நீங்கள் காப்பீடு நிறுவனங்கள் எவ்வாறு வேலை செய்கிறது என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் கட்டும் ப்ரீமியம் தொகை மூன்று பிரிவுகளைக் கொண்டது.

1. காப்பீடுக்கான தொகை
2. நிறுவனத்தின் செலவுகளுக்கான தொகை
3. முதலீடு செய்யப்படும் தொகை.

யாரோ சிலருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை இந்தக் காப்பீடுக்கான தொகையில் இருந்தே நிறுவனங்கள் திருப்பித் தருகின்றன. நிறுவனத்தின் செலவுகள் அதற்காக  ஒதுக்கப் படும் தொகையில் இருந்து செய்யப்படுகிறது.

முதலீடு செய்வதற்காக ஒதுக்கப் படும் தொகையும் அந்த முதலீட்டினால் கிடைக்கும் வருவாயும்தான் காப்பீடு முதிவடையும்போது வாடிக்கையாளர்களுக்குத் திருப்பி அளிக்கப் படுகிறது. பொருளாதார பயன்பாடு உள்ள ஒரு பொருளுக்கு எந்த வகையில் எல்லாம் இழப்பு வரலாம் என்பதை கணித முறையில் கணிக்கும் வல்லுனர்கள் எந்த அளவு பணம் பெற்றுக் கொண்டால் இழப்பை ஈடுகட்டி, வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட கால முடிவில் பணம் திருப்பித் தரமுடியும் என்பதை முடிவு செய்கிறார்கள். இந்த வல்லுனர்களுக்கு அக்சோரியல்கள்  என்று பெயர். மிக அதிகமான வருமானம் தரும் துறைகளில் இதுவும் ஓன்று.

நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான உண்மை என்றால்
காப்பீடு என்பது எதிர்பாராமல் ஏற்ப்படும் இழப்பை ஈடுசெய்ய மட்டுமே தவிர காப்பீடு என்பது சேமிப்புக்கான வழிமுறை இல்லை.

அநேகமாக ஆயுள் காப்பீடு முகவர்கள் பேசாத ஒரு காப்பீடுத் திட்டம் ஓன்று உள்ளது. முழுவதும் இழப்பை மட்டுமே ஈடு கட்டும் திட்டம் அது. ஆங்கிலத்தில் அதனை TERM INSURANCE என்று சொல்லுவார்கள். நான் என் உயிரை குறிப்பிட்ட தொகைக்கு காப்பீடு, குறிப்பிட்ட கால அளவிற்கு காப்பீடு செய்து கொள்ளலாம். அந்தக் குறிப்பிட்ட காலம் வரை நான் ப்ரீமியம் செலுத்தி வர வேண்டும். அந்தக் கால அளவிற்கு உள்ளாக நான் உயிர் இழக்க நேர்ந்தால் காப்பீடு நிறுவனம் அந்தப் பணத்தை நான் ஏற்க்கனவே நியமித்து உள்ள என் உறவினருக்கு அளிக்கும். ஆனால் ஒப்பந்த காலம் தாண்டி நான் உயிரோடு இருந்தால் நான் கட்டிய பணம் எதுவும் எனக்குத் திரும்பிக் கிடைக்காது.


ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அல்லவா ?
சரி நமது வண்டிக்கு வருடாவருடம் காப்பீடு செய்கிறோம், ஏதாவது விபத்து நடந்தால் மட்டும்தானே இழப்பீடு கிடைக்கிறது. இல்லை என்றால் நாம் எந்தக் கேள்வியும் கேட்காமல் அடுத்த வருட பிரீமியத்தை கட்டத்தானே செய்கிறோம். அப்போது அதே எண்ணத்தை ஏன் ஆயுள் காப்பீடுக்கும் கொண்டு செலுத்தக் கூடாது ?

இந்திய ஆயுள் காப்பீடுக் கழகம் (Life Insurance Corporation of India) உருவாக்கப்பட்ட போது, அதாவது பல ஆயுள் காப்பீடு நிறுவனங்களை தேசியமயமாக்கி ஒன்றாக இணைத்த போது, பொதுமக்களின் சேமிப்பை ஊக்குவித்து, அதை அரசாங்கத்தின் வசம் சேர்த்து, அதனை வைத்து பல்வேறு கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர வேண்டி இருந்தது. அது போக காப்பீடு செய்துகொண்டவர் இறந்து போனால் அதற்க்கு இழப்பீடு கிடைக்கும் என்பதனை நேரடியாகச் சொல்ல இயலாத நிலை இருந்தது. எனவே ஆயுள் காப்பீடு என்பது ஒரு சிறந்த சேமிப்பாக மட்டுமே மக்களிடம் மீண்டும் மீண்டும் கூறப்பட்டது.

மாதம் ஒன்றிக்கு ஐம்பதாயிரம் தேவைப் படும் ஒரு குடும்பத்திற்கு, அந்தக் குடும்பத்தின் சம்பாதிக்கும் உறுப்பினர் இழப்பால் பத்து லட்சம் ரூபாய் காப்புத்தொகையாகக் கிடைத்தாலும், அந்தப் பணம் அக்குடும்பத்தின் இரண்டு வருடத்தேவையைக் கூட பூர்த்தி செய்யாது.

பொருளாதாரத்தில் சுயசார்ப்பு அடையநினைப்பவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை, சரியான அளவில் தங்களைக் காப்பீடு செய்து கொள்வதுதான். இதனை சிறுவயதில் ( முப்பது வயதிற்கு உள்ளாக) செய்து கொண்டால் ப்ரீமியம் தொகை மிகக் குறைவாகவே இருக்கும்.

மற்றைய அசையும் அசையாச் சொத்துகள் போலல்லாது மனித உயிரின் மதிப்பு வயது ஏற ஏறக் கூடும். உங்கள் வருடவருமானதைக் கணக்கிட்டு அதற்குத் தகுந்ததுபோல உங்கள் ஆயுள் காப்பீட்டை உயர்த்திக் கொள்ளுங்கள்.

வீடு கட்டுவது போன்ற பெரும் முதலீட்டில், பெரிய அளவு கடன் வாங்கும் போது, அந்தக் கடனின் அளவிற்கு தனியாகக் காப்பீடு செய்து கொள்ளுங்கள்.