செவ்வாய், 5 நவம்பர், 2019

தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் - நவம்பர் 5

பாரத நாட்டின் மறுமலர்ச்சி அலை என்பது முதலில் வங்காளத்தில்தான் தொடங்கியது. பெரும் அறிவாளிகளும், கவிஞர்களும், சிந்தனையாளர்களும், வழக்கறிஞர்களும்,  தத்துவ ஞானிகளும் விடுதலைப் போராட்ட வீரர்களும் என்று அலையலையாக தோன்றி பாரதத்தின் பாதையை வங்காளிகளே சமைத்தனர். வங்காளத்தில் தோன்றிய விடுதலைப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர் சித்தரஞ்சன் தாஸ். தேசத்தின் தேச மக்களின் நண்பர் என்ற பொருள்படும் தேசபந்து என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர் அவர்.


இன்றய பங்களாதேஷ் நாட்டில் உள்ள டாக்கா நகரில் பூபன் மோகன் தாஸ் - நிஷாரிணி தேவி தம்பதியரின் 1870ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் நாள் பிறந்தவர் சித்தரஞ்சன் தாஸ். தனது சகோதர்கள் அடியொற்றி சித்தரஞ்சன் தாஸும் வழக்கறிஞர் பட்டம் பெறுவதற்காக லண்டன் மாநகரம் சென்றார். அன்றய லண்டன் நகரம் பாரத நாட்டின் தேசபக்தர்களை உருவாக்கும் இடமாகவும் இருந்தது. லண்டன் நகரில் அரவிந்த கோஷ், சரோஜினி நாயுடு, அதுல் பிரசாத் சென் ஆகிய தேசபக்தர்கள் நட்பு சித்தரஞ்சன் தாஸுக்கு ஏற்பட்டது.

வழக்கறிஞர் பட்டம் பெற்று நாடு திரும்பிய சித்தரஞ்சன் தாஸ் வங்காளத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞராக உருவானார். நீதிபதி கிங்ஸ்போர்ட என்பவரை கொலை செய்ய நடந்த முயற்சியை விசாரிக்கும் அலிப்பூர் சதி வழக்கில் அரவிந்த கோஷுக்கு வாதாடி வெற்றி பெற்று அவரை சிறைத்தண்டனையில் இருந்து தாஸ் விடுவித்தார். அன்றய வங்காளத்தில் இயங்கிக்கொண்டு இருந்த அனுசீலன் சமிதியின் செயல்பாடுகளுக்கு சித்தரஞ்சன் தாஸ் மிகவும் உதவிகரமாக இருந்தார்.

அதனைத் தொடர்ந்து காந்தியின் வழிமுறைகளை ஏற்றுக்கொண்ட சித்தரஞ்சன் தாஸ் அன்னியத் துணி பகிஷ்கரிப்பு, கதர் துணியை ஆதரித்தல், ஒத்துழையாமை இயக்கம் என்று போராடத் தொடங்கினார். சட்டமன்றங்களில் நுழைந்து அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும் என்ற கருத்துக்கு எதிராக காந்தி இருந்ததால் மோதிலால் நேருவுடன் இணைந்து ஸ்வராஜ்யா கட்சியை தாஸ் ஆரம்பித்தார். கொல்கத்தா மாநகராட்சி அமைக்கப்பட்ட போது, தேர்தலில் போட்டியிட்டு அதன் முதல் மேயராகப் பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் சித்தரஞ்சன் தாஸின் சீடராகவும், உதவியாளராகவும் இருந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்.

தாஸின் மனைவி பஸந்தி தேவி  அம்மையார். தன்னளவிலேயே அவரும் முக்கியமான சுதந்திரப் போராட்ட வீராங்கனையாக விளங்கினார். 1921ஆம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு பஸந்தி தேவியும் சித்தரஞ்சன் தாஸின் சகோதரி ஊர்மிளா தேவியும் கைதானார்கள். பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு குறிப்பாக சுபாஷ் சந்திரபோஸுக்கு அவர் காட்டிய பாசம் பலர் பஸந்தி தேவியை தங்கள் தாயாகவே எண்ண வைத்தது.

சித்தரஞ்சன் தாஸ் மிகச் சிறந்த கவிஞரும் கூட. அவரது கவிதைகள் சாகர் சங்கீத் என்ற பெயரில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டு உள்ளது. அரவிந்தர் வங்காள மொழியில் அமைந்த இந்த கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

சுதந்திரம் என்ற பெயரில் நாளிதழையும் நாராயணா என்ற பெயரில் நாளிதழ் ஒன்றையும் சித்தரஞ்சன் தாஸ் நடத்திவந்தார். பிபின் சந்திர பால், சரத்சந்திர சட்டோபாத்யாய, ஹரிப்ரசாத் சாஸ்திரி உள்ளிட்ட வங்காளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் இந்த பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதி வந்தார்கள்.

தொடர்ச்சியான செயல்பாட்டால் சித்தரஞ்சன் தாஸின் உடல்நலம் சீர்கெட்டது. ஓய்வெடுக்கவும் உடல்நலத்தைப் பேணவும் அவரை மலைப்பிரதேசத்தில் சிறுது காலம் இருக்கச் சொல்லி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். சித்தரஞ்சன் தாஸ் டார்ஜலிங் நகருக்குச் சென்றார். 1925ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் நாள் டார்ஜிலிங் நகரில் தாஸ் மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் கொல்கத்தா நகரில் நடைபெற்றது. சித்தரஞ்சன் தாஸின் இறுதி ஊர்வலம் காந்தியின் தலைமையில் நடந்தது.

தனது சொத்துக்களை எல்லாம் நாட்டு மக்களுக்கு எழுதி வைத்திருந்தார் சித்தரஞ்சன் தாஸ். அவர் அளித்த நிலத்தில் இன்று சித்தரஞ்சன் தாஸ் புற்றுநோய் மருத்துவமனை இயங்கி வருகிறது.
ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளே வாழ்ந்தாலும் அதற்குள் மகத்தான சேவைகளை புரிந்த தலைவரை ஒரே இந்தியா தளம் நன்றியோடு நினைவு கொள்கிறது.