திங்கள், 27 ஏப்ரல், 2020

தொழிலதிபர் லாலா ஸ்ரீராம் பிறந்தநாள் - ஏப்ரல் 27.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் பாரதநாட்டில் தொழில்துறையில் பெரும் சாதனைகளைச் செய்த லாலா ஸ்ரீராம் அவர்களின் பிறந்தநாள் இன்று.


ஹரியானா மாநிலத்தைச் சார்ந்த மதன்மோகன்லால் - சந்தோதேவி தம்பதியரின் முதல் மகனாக 1884ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் நாள் பிறந்தவர் லாலா ஸ்ரீராம் அவர்கள். மிக சாதாரணமான குடும்பத்தில் பிறந்து தனது வாழ்நாளில் பாரத  நாட்டின் முக்கியமான தொழில் குழுமத்தை உருவாக்கியவர் லாலா ஸ்ரீராம். தனது ஆரம்ப கல்வியை நகராட்சிப் பள்ளியிலும் பின்னர் மேற்படிப்பை ஹிந்து கல்லூரியில் முடித்தார்.

1891ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் நாள் Delhi Cloth and General Mills Co என்ற பெயரில் ஒரு நூற்பாலை நிறுவப்பட்டது. அந்த ஆலையின் செயலாளராக ஸ்ரீராமின் மாமா லாலா கோபால் ராய் என்பவர் நியமிக்கப்பட்டார். அவரது மறைவுக்குப் பிறகு  அந்த நூற்பாலையின் செயலாளராக ஸ்ரீராமின் தந்தை மதன்மோகன்லால் நியமிக்கப்பட்டார். 1909 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் வருவாய் துறையில் லாலா ஸ்ரீராம் பணிக்குச் சேர்ந்தார். படிப்படியாக பதவியில் உயர்ந்த லாலா ஸ்ரீராம் முதலாம் உலகப்போரில் ஆங்கில ஆட்சிக்கு கூடாரங்கள் தயாரித்துக் கொடுக்கும் ஒப்பந்ததை நிறுவனத்திற்கு பெற்றுக் கொடுத்தார். இதன் மூலமாக ஒரு பெரும் பணம் அவருக்கு ஊக்கத்தொகையாக அளிக்கப்பட்டது. அந்தப் பணத்தை வைத்து லாலா ஸ்ரீராம் அந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கி, அந்த நிறுவனத்தின் உரிமையாளராக மாறினார்.

அதிலிருந்து மின்னல் வேகத்தில் லாலா ஸ்ரீராம் தலைமையில் அந்த நிறுவனம் வளர்ச்சி அடையத் தொடங்கியது. எட்டே வருடத்தில் நிறுவனத்தின் விற்பனை பதினாறு லட்சத்தில் இருந்து தொண்ணூற்றி ஒரு லட்சமாகவும் லாபம் மூன்று லட்சத்தில் இருந்து பதினெட்டு லட்சமாகவும் உயர்ந்தது.

செல்வத்துப் பயனே ஈதல் என்ற வரையரைக்கு ஏற்ப லாலா ஸ்ரீராம் பல்வேறு சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டார். Commercial Educational Trust என்ற அமைப்பை நிறுவி அதன் மூலமாக ஒரு உயர்நிலைப் பள்ளியை ஸ்ரீராம் தொடங்கினார். அந்தப் பள்ளி படிப்படியாக வளர்ந்து இன்று நாட்டின் புகழ்பெற்ற ஸ்ரீராம் கல்லூரியாக டெல்லியில் உருவாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து தனது மனைவியின் நினைவாக லேடி ஸ்ரீராம் கல்லூரி என்ற கல்வி நிலையத்தையும் லாலா ஸ்ரீராம் நிறுவினார்.

1930ஆம் ஆண்டு இந்திய தொழிமுனைவோர் கூட்டமைப்பின் ( Federation of Indian Chamber of Commerce & Industry ) தலைவராக லாலா ஸ்ரீராம் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவரோடு மேடையில் இருந்தவர் காந்தி அடிகள். ஆங்கில ஆட்சி நடந்துகொண்டிருந்த சமயத்தில் இதனைச் செயல்படுத்த மிகப்பெரும் துணிவு வேண்டும்.

லாலா ஸ்ரீராம் நிறுவிய DCM குழுமம்  மின்விசிறிகள், சர்க்கரை போன்ற பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் டொயோட்டா நிறுவனத்தோடு இணைந்து சரக்கு வாகனங்களை உருவாகும் தொழிலிலும் இருந்தது. HCL நிறுவனத்தின் உரிமையாளர் ஷிவ்நாடார் உள்பட பல தொழிலதிபர்கள் இந்த குழுமத்தில்தான் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.

தனது எழுபத்தி ஒன்பதாவது வயதில் 1963ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் நாள் லாலா ஸ்ரீராம் இயற்கை எய்தினார்.

நாட்டின் முன்னோடி தொழிலதிபர்களின் ஒருவரான லாலா ஸ்ரீராம் அவர்களின் பங்களிப்பை இன்று நினைவு கூறுவதில் ஒரே இந்தியா தளம் பெருமை கொள்கிறது.