ஞாயிறு, 10 மே, 2020

ராணுவத் தளபதி ஜெனரல் V K சிங் - மே 10

பாரத ராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் தற்போதைய பாஜக மந்திரிசபையின் முக்கியமான அங்கமாகவும் விளங்கும் ஜெனரல் விஜய் குமார் சிங் அவர்களின் பிறந்தநாள் இன்று.


ஹரியானா மாநிலத்தைச் சார்ந்த ஜெனரல் வி கே சிங் பாரம்பரியமான ராணுவக் குடும்பத்தைச் சார்ந்தவர். அவர் தந்தையும், தாத்தாவும் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். ராஜஸ்தான் மாநில பிலானி நகரில் உள்ள பிர்லா பள்ளியில் படித்த வி கே சிங் பின்னர் பூனா நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு பள்ளியில் பயின்றார். 1970 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் ராஜ்புத் பிரிவில் பணியாற்றத் தொடங்கிய சிங், பாரத ராணுவக் கல்லூரியிலும் அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள ராணுவக் கல்லூரியிலும் மேல்படிப்பு படித்தார்.

படிப்படியாக ராணுவசேவையில் முன்னேறிய சிங்,  பாரத ராணுவத்தின் கிழக்கு பிரிவின் தலைவராகப் பணியாற்றினார். 2010ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் நாள் பாரத ராணுவத்தின் 24ஆவது தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இரண்டு ஆண்டுகள் அவர் இந்தப் பொறுப்பில் இருந்தார்.

ராணுவசேவையில் இருந்து ஓய்வுபெற்ற திரு சிங் ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டார். பின்னர் பாஜகவில் இணைந்து 2014ஆம் ஆண்டு காசியாபாத் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டு அமைக்கப்பட்ட பாஜகவின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறையின் இணை அமைச்சராகவும், வடகிழக்கு மாநில வளர்ச்சிக்கான அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.

அந்தக் காலகட்டத்தில் தெற்கு சூடானிலும், ஏமன் நாட்டிலும் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு நடுவில் அந்த நாடுகளில் வேலை நிமித்தம் வசித்துவந்த இந்தியர்களை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரும் சவாலான பொறுப்பை ஜெனரல் சிங் முன்னிருந்து வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். டெல்லியில் இருந்து மேற்பார்வை பார்த்துக்கொண்டு இருக்காமல், ஜெனரல் சிங் ராணுவத் தளபதி போல கொந்தளிப்பான இடங்களில் நேராகச் சென்று அங்கிருந்து மீட்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கி வழிகாட்டினார்.

2019ஆம் ஆண்டும் காசியாபாத் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெனரல் சிங், தற்போதைய மந்திரிசபையில் நெடுஞ்சாலைத்துறையின் இணை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.

ஜெனரல் வி கே சிங் அவர்களுக்கு ஒரே இந்தியா செய்தித்தளம் மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.