வெள்ளி, 2 ஜனவரி, 2015

5. பழங்கால நாகரீகம்

நைனிடால் சிறையில் இருந்து ஜவஹர்லால் நேரு தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களின் மொழிபெயர்ப்பு 
---------------------------------------------------------------------------------------------------------------------------------

1931 ஜனவரி 9

வாரம் இருமுறை உலகச் செய்திகளைச் சுமந்துவரும் பாரத் என்ற ஹிந்தி இதழில் உன் தாயாரின் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்றும் அதலால் அரசாங்கம் அவளை மலாக்கா சிறையில் இருந்து லக்னோ சிறைக்கு மாற்ற உத்தரவிட்டிருக்கிறது என்றும் படித்தேன். ஒரு வேளை இந்தச் செய்தி வதந்தியாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்தச் சந்தேகம் கூட மன அமைதியைக் குலைக்கிறது. தனிப்பட்ட முறையில் நம்மால் துயரங்களைத் தாங்கிக் கொள்ள முடிகிறது. ஆனால் நமக்கு நெருக்கமானவர்களுக்கு ஏற்படும் துயரங்கள், அதிலும் அவர்களுக்கு நம்மால் எந்த உதவியும் செய்ய முடியாத கையறு நிலையில் இருக்கும் போது நம்மைத் தாங்கவொண்ணா துயரில் தள்ளி விடுகிறது.

அதனால்தான் அந்தச் செய்தி உன் தாயாரைப் பற்றிய கவலையை உண்டாக்கி விட்டது. உன் தாயார் சிங்கம் போன்ற மன உறுதி கொண்டவள்தான். அவள் தைரியசாலி ஆனால் உடலளவில் பலவீனமானவள், மெலிந்தவள். இன்னும் அவள் நலிவடைவதை நான் விரும்பவில்லை. உள்ளம் உறுதியாக இருந்தாலும் உடல் வலிமையாக இல்லாவிட்டால் என்ன பயன் ? எந்த ஒரு செயலையும் சிறப்பாகச் செய்து முடிக்க நமக்கு உடல் ஆரோக்கியம் மிக அவசியமான ஓன்று.

அவள் லக்னோ சிறைக்கு மாற்றப்படுவதும் ஒருவிதத்தில் நல்லதுதான். மலாக்காவில் அவள் தனியாக இருந்தால். லக்னோ சிறையில் அவளது தோழியர்கள் இருப்பதால் அவள் சற்றே மகிழ்ச்சியாக இருக்கக்கூடும். எனக்கும் அவள் அருகிலேயே இருப்பாள். இங்கே இருந்து லக்னோ வெறும் ஐந்து மைல் தொலைவுதான். இது ஒரு பொருளற்ற சிந்தனைதான். ஐந்து மைலோ நூற்றைம்பது மைலோ, இரு சிறைக்களின் உயர்ந்த மதில்சுவர்களை எண்ணிப் பார்த்தால் இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

தாத்தா (மோதிலால் நேரு) இன்று அலகாபாத் திரும்பிவிட்டார் என்பதையும் அவர் இப்போது உடல்நிலை தேறி ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதையும் அறிந்தேன். அவர் மலாக்கா சிறையில் உனது தாயாரைக் கண்டு வந்தார் என்பதை அறிந்த உடன் மகிழ்ச்சி அடைந்தேன். கொஞ்சம் நல்லூழ் இருந்தால், உங்கள் அனைவரையும் நாளை நான் சந்திக்க முடியும். நாளை சிறையில் பார்வையாளர் நாள். சிறையில் இருப்பவர்களுக்கு அது ஒரு கொண்டாட்ட தினம். நான் உன் தாத்தாவை ஏறத்தாழ இரண்டு மாதங்களாகப் பார்க்கவில்லை. அவரை நேரில் சந்தித்து, அவர் உடல் நிலையைப் பற்றி அறிந்து கொண்டால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். உன்னையும் நீண்ட இருவாரங்களுக்குப் பின் நான் பார்க்கலாம். உன்னைப் பற்றியும், உன் தாயாரைப் பற்றியும் என்னிடம் சொல்ல உனக்கும் பல செய்திகள் இருக்கும் அல்லவா !

ஆஹா ! உனக்கு வரலாற்றை எழுத ஆரம்பித்து, வேறு எதையெல்லாமோ எழுதிக் கொண்டு இருக்கிறேன். நான் நிகழ்காலத்தை சற்றே மறந்து விட்டு, ஒரு மூவாயிரம் வருடத்திற்கு பின்னே செல்வோம்.

என் முந்தய கடிதங்களில் எகிப்து மற்றும் க்ரெட நகரத்தில் உள்ள  க்நோசஸ்  பற்றி உனக்கு சொல்லி இருந்தேன். மனித நாகரீகம் இந்த இரண்டு இடங்களிலும், இன்று ஈராக் என்று அழைக்கப்படும் மெசபடோமியாவிலும், சைனா, இந்தியா மற்றும் கிரேக்க நாட்டிலும் தான் ஆரம்பமானது. கால அளவில் கிரேக்கம் சற்றே இளைய நாகரீகம். இந்த நாகரீகங்கள்  இப்போது என்ன   நிலையில் இருக்கிறது ? கநோச்ஸ் நாகரீகம் இப்போது இல்லவே இல்லை. கிரேக்கம் அதனை அழித்துவிட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டு செழித்து வளர்ந்த எகிப்திய நாகரீகம் இன்று பிரமிடு, பதப்படுத்தப் பட்ட சடலங்கள் மற்றும் அழிவுற்ற கோவில்களாக மட்டுமே எஞ்சிஉள்ளது. அங்கே நைல் நதி இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது, மக்கள் வசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களது பழங்கால நாகரீகத்தில் இருந்து முழுதாக வேறுபட்டுத்தான் இருக்கிறார்கள்.

இராக்கிலும் பெர்சியாவிலும் எத்தனையோ பேரரசுகள் தோன்றி மறைத்து போயின. மகத்தான பாபிலோன் நகரைப் பற்றிய குறிப்புகள் பழைய ஏற்பாடில் விரவி இருக்கிறது. இந்தப் பழைய நகரில் எத்தனையோ அரசுகள் தோன்றி மறைந்து இருக்கிறது. மன்னர்களும் சக்கரவர்த்திகளும் குறைந்த கால அளவில் ஆட்சி செய்து உலகை விட்டு விலகிச் சென்று உள்ளார்கள். ஆனால் மனித நாகரீகம் இன்றும் வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அரேபிய இரவு கதைகளின் களமான பாக்தாத் நகரம் இன்றும் துடிப்போடு இருக்கிறது. ஆனால் பெர்சியாவிலும், இராக்கிலும் இன்று உள்ள மக்கள் தங்கள் பழைய நாகரீகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

இன்றும் மக்கள் வியப்போடு கற்கும் வரலாறு கிரேக்க வரலாறு. கிரேக்த்தின் இலக்கியமும் பளிங்குச் சிலைகளும் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இன்றைய ஐரோப்பா புகழ்மிக்க அந்தப் பழைய கிரேக்கத்தின் குழந்தை. ஆனால் இன்றுள்ள கிரேக்கம் ஐரோப்பாவின் தென்கிழக்கில் உள்ள ஒரு சிறிய நாடு மட்டுமே.

எகிப்து, கிரேக்கம், ஈராக், பெர்சியா - இந்த எல்லாப் பழைய நாகரீகங்களும் இன்று வரலாற்றின் பக்கங்களாகவே குறிக்கப்படுகிறது. இவைகளோடு சமமாகக் குறிக்கப்படும் மற்றைய இரண்டு நாகரீகங்கள் - சைனா மற்றும் இந்தியாவின் நிலை இன்று என்ன ? இங்கும் பேரரசுகள் தோன்றின, மறைந்தன. பெரும் படையெடுப்புகளும், கொள்ளைகளும், பெரிய அளவிலான அழிவும் நடந்தன.

ஆனால் மற்றைய நாடுகள்போல் இல்லாமல், இந்த இரு நாடுகளில் மட்டும் இன்னும் அந்தப் பழைய நாகரீகம் அறுபடாமல் தொடர்ச்சியாக வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த இரண்டு நாடுகளும் தங்கள் தொட்ட உயரத்தில்  இருந்து விழுந்து விட்டன. கால ஓட்டத்தில் கசடுகளும், அழுக்குகளும் அதில் மண்டியுள்ளது. ஆனால் அதனைத் தாண்டியும் அவை உயிர்த்துடிப்போடு விளங்குகின்றன. இன்றைய இந்திய மக்களின் வாழ்க்கைமுறை என்பது அந்தப் பழைய நாகரீகத்தின் தொடர்ச்சிதான்.

உலகம் இன்று எவ்வளவோ மாறிஇருக்கிறது. புகைவண்டிகளும், பெரும்கப்பல்களும், தொழிற்சாலைகளும் இன்று உலகத்தின் பார்வையையும், போக்கையும் முற்றிலுமாக மாற்றியுள்ளது. இந்தியாவின் போக்கையும் இந்த மாற்றங்கள் பாதிக்கவே செய்துகொண்டு உள்ளது. ஆனால் வரலாற்றின் கால ஓட்டத்தையும் தாண்டி, இன்றும் தொடர்ந்துவரும் இந்திய நாகரீகம் அனைவரையும் வியப்பிலாழ்த்தும் ஒரு அதிசயம்தான். நாம் புகழ் வாய்ந்த அந்த நாகரீகத்தின் வாரிசுகள். வடமேற்குக் கணவாய் வழியாக ஹிந்துஸ்தானம் என்றும் ஆரியவர்தனம் என்றும் பரதகண்டம் என்றும் இன்று குறிக்கப்படும்  இந்தப் பரந்த நிலப்பரப்பிற்கு வந்த அந்த மக்களின் நேரடி வாரிசு நாம். கடினமான மலைதொடர்களைத் தாண்டி முன்பின் தெரியாத அந்த நிலத்திற்கு அவர்கள் வருவதை உன்னால் காண முடிகிறதா?

எது வரும் என்ற அச்சம் இல்லாமல் மிகுந்த துணிச்சலோடும், சாகச உணர்வோடும் அவர்கள் முன்னேறிச் சென்றனர். இறப்பையும் அவர்கள் புன்முறுவலோடு எதிர்கொண்டனர். அவர்கள் வாழ்க்கையைக் காதலித்தனர். வாழும் வழி என்பது வாழ்க்கையை, அதன் சவால்களை எதிர்கொள்வது மட்டும்தான் என்று அவர்கள் உணர்ந்து இருந்தனர். அவர்களைத் தோல்வியோ பின்னடைவுகளோ கலங்க வைக்கவில்லை. நம்முடைய அந்த முகம் தெரியாத முதாதையர்கள் புகழ்வாய்ந்த கங்கை நதிக்கரையை அடைந்தனர். கங்கையின் பிரவாகம் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கும். அவர்கள் கங்கையை வணங்கி தங்கள் இனிமையான மொழியில் அந்த நதியைப் போற்றிப் பாட ஆரம்பித்தனர்.

அவர்களின் வாரீசு நாம் என்பதை என்னும் போது நாம் பெருமிதம் அடைகிறோம். ஆனால் கால ஓட்டத்தின் நன்மைக்கும், தீமைக்கும் நாம் பொறுப்பெடுக்க வேண்டும். இன்றைய இந்தியாவில் தவறுகள் பல உள்ளன. உலகநாடுகள் பலவற்றின் கீழே நம்மைத் தள்ளிய தவறுகள் உள்ளன. வறுமையின் கோரத் தாண்டவமும், அன்னியர் கைகளில் பகடைக்காய் என்று நாம் இன்று உருண்டுகொண்டு இருக்கிறோம்.

ஆனால் இந்த இழிநிலை இன்னும் நீடிக்கக்கூடாது என்ற நினைப்பும் உறுதியும் இன்று நம்மிடையே உள்ளது.