செவ்வாய், 31 மார்ச், 2015

எச்சரிக்கை - சிறிது நிதானம் தேவை

சேமிப்புக்கான முதல் விதி என்ன என்றால் ஒருபோதும் வருமானத்திற்கு மேலாகச் செலவு செய்யக்கூடாது என்பதுதான். வரவு எட்டணா ஆனால் செலவு பத்தணா என்றால் கடைசியில் துந்தணாதான். நம்மில் பலருக்கு வருமானம் என்பது நிலையானதாகவே இருக்கும், ஆனால் செலவுகள்தான் நிலையானதாக இருக்காது.

நமது செலவுகளை திட்டமிட்ட செலவுகள் என்றும் திட்டமிடாக திடீர் செலவுகள் என்றும் பிரிக்கலாம். வீட்டு வாடகை அலது வீட்டுக் கடனுக்கான மாதாந்திரத் தவணை, நாம் பயன்படுத்தும் வண்டிக்கான தவணை, அதற்கான எரிபொருள், பராமரிப்புச் செலவு, வீட்டில் பயன்படுத்தும் மின்சாரதிர்க்கான கட்டணம், குழந்தைகளுக்கான கல்விக்கான செலவு, பால், அரிசி, மலிகைச்சாமான்கள் இன்னபிற உணவுப் பொருள்களுக்கான தேவை என்பவை திட்டமிட்டச் செலவுகளில் அடங்கும்.

எதிர்பாராமல் வரும் உடல்நலக் குறைவு, சந்தையில் புதிதாக அறிமுகமாகி உள்ள கைபேசி, தொலைகாட்சி ஆகியவற்றை வாங்குவது இவை எல்லாம் திட்டமிடாத செலவுகளில் வரும். உறவினர்கள் வீட்டு விசேச நிகழ்சிகள், நாம் கொண்டாடும் பண்டிகைகள் இதற்க்கான செலவுகள் ஒரு தனி அணியாக இருக்கும்.

சேமிப்பு என்றால் சாதாரணமாக நாம் அனுபவிக்கவேண்டிய விசயங்களைக் கூட அனுபவிக்காமல் கஞ்சத்தனமாக இருப்பது இல்லை. ஆனால் தேவைற்ற செலவுகளைக் குறைப்பதும் முடிந்தால் அவற்றை அறவே நிறுத்துவதும்தான் வாழ்கையை வாழும் வழி. வாழ்க்கை என்பது ஒருமுறைதான் நமக்குக் கிடைப்பது, அதை முறையோடு அனுபவிக்காமல் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. இப்படிப் பட்ட மனிதர்களைப் பற்றி ஔவை

பாடுபட்டுத் தேடித் பணத்தைப் புதைந்து வைத்துக் 
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டு இங்கு 
ஆவிதான் போனபின்பு யாரோ அனுபவிப்பார் 
பாவிகாள் அந்தப் பணம் ?  
என்று வினவுகிறார்.


ஆனால் அதே நேரத்தில் முதலுக்குமேல் செலவு செய்தால் என்ன நடக்கும் என்றால்
ஆன முதலில் அதிகம் செலவானால் 
மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை 
எல்லோருக்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் 
நல்லோர்க்கும் பொல்லனாம் நாடு 

ஆகவே, உங்கள் செலவுக் கணக்கை முறையாக எழுத ஆரம்பியுங்கள். எழுதிப் பார்க்கும்போது எவை எல்லாம் தேவையான செலவுகள், எவை எல்லாம் தேவையற்ற தவிர்க்கக்கூடிய செலவுகள் என்பதனை நாம் கண்டுகொள்ள முடியும். சந்தையில் கிடைக்கும் பொருள்களில் பல நமக்கு தேவை இல்லாத பொருள்களே. எந்தப் பொருளை வாங்குமுன்பும் ஒருமுறைக்கு இருமுறை அந்தப் பொருள் நமக்குத் தேவைதான என்பதை யோசித்துப் பாருங்கள். 75% தள்ளுப்படி, அடக்கவிலைக்கே விற்பனை, ஓன்று வாங்கினால் ஓன்று இலவசம் என்ற விளம்பரங்கள் எல்லாம் வாடிக்கையாளர்களை தங்கள்வசம் இழுக்க விற்பனையாளர்கள் கையாளும் யுக்தி. அதில் மயங்கி தேவையற்ற பொருள்களை வாங்காதீர்கள்.

கடன் அட்டையை உபயோகப்படுத்தி, அதையும் தவணை முறையில் அல்லது குறைந்த அளவிலான பணத்தைச் செலுத்துவது என்பது மீளமுடியாத குழியில் விழுவதற்குச் சமம். குறிப்பிட்ட காலஅளவை தாண்டினால் கடன் அட்டைகளின் வட்டிவிகிதம் ஏறத்தாழ 30% மேல் போகும்.

உங்களிடம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதனை விட  பலரிடம் அதிகமான பொருள்கள் இருக்கும். உங்களிடம் எவ்வளவு குறைவாக இருந்தாலும்  பலரிடம் அதனைவிட குறைவான பொருள்களே  இருக்கும்.  ஒருபோதும் மற்றவர்களைப் பார்த்தோ அல்லது பிறர் உங்களைப் புகழவேண்டும் என்றோ தேவையற்ற பொருள்களை வாங்காதீர்கள். மற்றவர்களுக்காக பகட்டாகக் காட்டிக் கொள்ளவும், அலங்காரத்திற்க்காகவும் கவர்ச்சிக்காகவும் பொருள்களை வாங்காமல் இருந்தால் அதுவும் சேமிப்புதான்.

செல்வம் என்பது சிந்தையின் நிறைவே என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்.

தொடர்புடைய பதிவுகள் 
பணவீக்கம் ஒரு எளிய அறிமுகம் 
அவசரக்கால தேவைகளுக்கு