புதன், 27 மே, 2020

பாஜக முன்னணி தலைவர் நிதின் கட்கரி பிறந்தநாள் - 27 மே


பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான திரு நிதின் கட்கரியின் பிறந்தநாள் இன்று. மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரைச் சார்ந்த கட்கரி, இளவயது முதலே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். பாரதீய ஜனதாவின் இளைஞர் பிரிவிலும், அகில பாரத வித்யார்த்தி பரீட்சித்திலும் பணியாற்றியவர். இவர் வணிகவியல் துறையில் முதுகலை பட்டமும் சட்டமும் பயின்றவர்.

மிகச் சிறுவயதிலேயே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டதால், தனது முப்பத்திரண்டாவது வயதிலேயே மஹாராஷ்டிரா மாநில மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989, 1990, 1996, 2002 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மஹாராஷ்டிரா மேலவை உறுப்பினராகத் தேர்வானார். மஹாராஷ்டிரா மாநில மேலவையில் எதிர்கட்சித் தலைவராகவும், பாஜகவின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றினார்.

1995ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு சாலைப்பணிகளை மேற்கொண்டார். அந்தக் காலகட்டத்தில் பல்வேறு சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டப்பட்டன. அவற்றில் முக்கியமானது மும்பை - பூனா நகரை இணைக்கும் அதிவிரைவு சாலை. உள்கட்டுமானப் பணிகளில் தனியார் பங்களிப்பை உறுதி செய்து தனியார்களையும் முதலீடு செய்யவைத்தது அவரின் செயல்பாடாக இருந்துவந்தது.

2009ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை பாஜகவின் தேசிய தலைவராகவும் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில்தான் மோதியை பிரதமர் வேட்பாளராக கட்சி அறிவித்தது. பாஜகவிற்கு அடுத்தடுத்து இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றிவாய்ப்பை இழந்த காலகட்டத்தில் கட்சியை ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் பொறுப்பு அவர்மீது சுமத்தப்பட்டது. அதனை கட்கரி திறமையாக கையாண்டார்.

2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் நாக்பூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானார். 2014ஆம் ஆண்டு உருவான மோதி தலைமையிலான பாஜக அரசின் மிக முக்கியமான துறைகளை நிர்வகித்து வந்தார். தேசிய நெடுஞ்சாலைத்துறைகளின் அமைச்சராக 2014 - 2019 பணியாற்றிய போது நாளொன்றுக்கு பதினாறு கிலோமீட்டர் அளவிற்கு சாலைகள் அமைக்கப்பட்டது.

பாஜக அரசின் சாதனைகளில் முக்கியமான ஒன்றான உள்கட்டமைப்பு வசதியை உருவாக்குவதில் கட்கரியின் பங்கு மகத்தானது. தற்போது கோதாவரி நதியை தமிழகத்திற்கு கொண்டுவரும் பிரமாண்டமான திட்டத்தின் மூலம் தமிழகத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம் என்று கட்கரி அறிவித்துள்ளார்.

மீண்டும் அமையவிருக்கும் பாஜவின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகிக்க இருக்கும் திரு கட்கரிக்கு நமது நல்வாழ்த்துகள்.