புதன், 24 ஜூலை, 2019

விப்ரோ நிறுவன உரிமையாளர் ஆசிம் பிரேம்ஜி பிறந்தநாள் - ஜூலை 24.


பாரதத்தின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும், இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், தனது சொத்தில் பெரும்பங்கை கல்விக்காக அளித்தவருமான திரு ஆசிம் பிரேம்ஜியின் பிறந்தநாள் இன்று. குஜராத் மாநிலம் கட்ச் பகுதியைச் சார்ந்த ஷியா முஸ்லீம் வகுப்பை சார்ந்தவர் ஆசிம்.  இவரது தந்தை முகம்மது அலி ஜின்னாவிற்கு மிக நெருக்கமானவர். ஆனாலும் ஜின்னாவின் அழைப்பை நிராகரித்து விட்டு நாடு பிரிவினையாகும் போது பாரத நாட்டிலேயே தங்கிவிட்டவர்.

1946ஆம் ஆண்டு ஆசிம் பிரேம்ஜியின் தந்தை முஹம்மது ஹாசிம் பிரேம்ஜி மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஜாலேகான் மாவட்டத்தில் ஒரு சமையல் எண்ணெய் தயாரிக்கும் ஆலையை நிறுவினார். 1966ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக அவர் இறந்து போக, அமெரிக்காவில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொறியிலாளர் பட்டப்படிப்பை படித்துக்கொண்டு இருந்த ஆசிம் பிரேம்ஜி உடனடியாக நாடு திரும்ப வேண்டி இருந்தது. குடும்ப தொழிலின் நிர்வாகப் பொறுப்பை ஆசிம் பிரேம்ஜி ஏற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு வயது இருபத்தி ஓன்று மட்டுமே.

இளமைத் துடிப்போடு இருந்த ஆசிம் பல்வேறு பொருள்களைத் தயாரிக்கத் தொடங்கினார். மின்விளக்குகள், சிறு குழந்தைகளுக்கான சோப்பு முதலியவை விப்ரோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட தொடங்கின. அது நெருக்கடி நிலைக்குப் பிறகு ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த நேரம். அரசின் பொருளாதாரக் கொள்கையால் இந்தியாவில் இருந்து ஐபிஎம் நிறுவனம் வெளியேறியது. கணினி துறைக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதைக் கணித்த பிரேம்ஜி கணினி தயாரிப்பில் இறங்கினார்.
அதன் நீட்சியாக மென்பொருள் சேவை வழங்கும் தொழிலையும் அவர் தொடங்கினார். இன்று விப்ரோ நிறுவனம் ஏறத்தாழ அறுபதாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வணிகம் செய்கிறது, ஒரு லட்சத்து எழுபதாயிரம் பணியாளர்கள் இதில் வேலை பார்த்து வருகிறார்கள்.

வணிகம் செய்வதில் திறமைசாலியாக பலர் இருக்கலாம், ஆனால் தனது சொத்தில் பெரும்பகுதியை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அளிக்கும் பரந்த மனம் எல்லோருக்கும் இருப்பதில்லை. தான் சார்ந்து இருக்கும் சமுதாயம் நல்லபடி வாழவேண்டும் என்ற எண்ணத்தால் பிரேம்ஜி அவர் பெயரிலேயே ஒரு சேவை நிறுவனத்தைத் தொடங்கினார். தேவைப்படுபவர்களுக்கு பணம் அளிப்பது என்ற எண்ணத்தில் அல்லாது சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட பாதை கல்வி.

சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வை கல்வியின் மூலம்தான் சரி செய்ய முடியும் என்று முடிவு செய்ததால் அவர் இன்று ஆறு மாநிலங்களில் தனது தொண்டு நிறுவனம் மூலமா பள்ளிகளை நடத்திவருகிறார். அதோடு ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சிகளையும் அவரது தொண்டு நிறுவனம் முன்னெடுக்கிறது. கர்நாடக அரசு அவருக்கு ஒரு தனியார் பல்கலைக் கழகம் நடத்த அனுமதி அளித்துள்ளது. அதிலும் கல்வி, பொருளாதாரம், சட்டம் போன்ற பாடங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புக்கள் கற்பிக்கப்படுகின்றன.

விப்ரோ நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குகளை ஆசிம் பிரேம்ஜி தனது சேவை நிறுவனத்திற்கு அளித்துள்ளார். தொடர்ந்து அந்த சேவை நிறுவனத்துக்கான பொருளாதார கட்டமைப்பை அவர் இதன் மூலம் உறுதி செய்துள்ளார்.

ஆசிம் பிரேம்ஜியின் பங்களிப்புக்காக பாரத அரசு அவருக்கு நாட்டின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் பட்டத்தை அளித்து சிறப்பித்து உள்ளது.

இன்று எழுபத்தி ஐந்தாம் வயதில் அடியெடுத்து வைக்கும் பிரேம்ஜி இன்னும் பல்லாண்டு வாழ்ந்து, இந்திய இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கவேண்டும் என்று ஒரே இந்தியா தளம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 

புரட்சிவீரன் சந்திரசேகர ஆசாத் பிறந்த நாள் - ஜூலை 23


ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக போராடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு பதினைந்து வயது சிறுவன் நீதிபதிக்கு முன்னால் நிறுத்தப்பட்டு இருக்கிறான். விசாரணை தொடங்கியது.

நீதிபதி     : உனது பெயர்
சிறுவன்  : விடுதலை ( ஆசாத் )

நீதிபதி     : உனது தந்தையின் பெயர்
சிறுவன்  : சுதந்திரம்

நீதிபதி     : உனது இருப்பிடம்
சிறுவன்  : சிறைச்சாலை

இப்படி பதில் கூறும் சிறுவனிடம் என்ன விசாரிக்க முடியும். நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார் - பதினைந்து கசையடிகள். அந்த சிறுவனும் தனக்குத் தானே ஒரு தீர்ப்பை வழங்கிக் கொண்டான்  - இனி ஒருபோதும் வெள்ளையர்களிடம் கைதியாகப் பிடிபடப் போவதில்லை. உயிரோடு என்னை இவர்கள் பிடிக்கக் கூடாது என்று.

பாரத நாட்டின் பெரும்புரட்சியாளர்களில் ஒருவராகவும் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் ஆர்மியின் தளபதியாகவும், பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, படுகேஸ்வர் தத் போன்ற போராட்ட வீரர்களின் வழிகாட்டியாக, நண்பனாக விளங்கிய சந்திரசேகர ஆசாத்தின் பிறந்தநாள் இன்று.

சீதாராம் திவாரி ஜக்ரானி தேவி திவாரி தம்பதியினரின் மகனாக 1906ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் நாள் இன்றய மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாபாரா கிராமத்தில் பிறந்தவர் சந்திரசேகர திவாரி. இவரின் முன்னோர்கள் இன்றய உத்திரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரைச் சார்ந்தவர்கள்.

தனது மகன் வடமொழியில் புலமை பெறவேண்டும் என்று நினைத்த தாயார் சந்திரசேகரை காசி சர்வகலாசாலைக்கு படிக்க அனுப்பி வைத்தார். ஆனால் நாட்டில் வீசிக்கொண்டு இருந்த சுதந்திர வேட்கை சந்திரசேகரை காந்தியின் பக்கம் கொண்டு சேர்த்தது. காந்திஜி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு ஆங்கில காவல்துறையால் கைது செய்யப்பட்டார் சந்திரசேகர திவாரி. அப்போது நடந்த விசாரணைதான் இந்தக் கட்டுரையின் ஆரம்ப வரிகள். இதற்குப் பிறகு அவர் சந்திரசேகர ஆசாத் என்றே அழைக்கப்பட்டார்.

ஆயுதம் ஏந்தாத அஹிம்சைவழிப் போராட்டத்தை காந்திஜி முன்னெடுத்தார். ஆனால் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சவுரிசவுரா என்ற இடத்தில் போராட்ட வீரர்களை அடக்க தடியடியும் பின்னர் துப்பாக்கி சூடும் நடைபெற்றது, தன்னிலை இழந்த போராட்டக் குழுவினர் காவல் நிலையத்தைத் தாக்கி தீ வைத்தனர். இருபத்தி இரண்டு காவலர்கள் இந்த கலவரத்தில் இறந்ததாக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அஹிம்சை வழியில் போராடும் பக்குவத்திற்கு நாடு வரவில்லை என்று கூறி காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி வைத்தார். காந்தியின் முடிவை மறுதலித்து மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் ஆகியோர்  காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சுதந்திரா கட்சியைத் தொடங்கினர். அதுவரை காந்தியின் அணியில் இருந்த சந்திரசேகர ஆசாத் புரட்சியாளராக மாறினார்.

ஆசாதுக்கு இந்திய குடியரசு இயக்கம் ( ஹிந்துஸ்தான் ரிபப்ளிக் அஸோஸியேஷன் ) என்ற புரட்சி அமைப்பை தொடங்கி நடத்திக்கொண்டு இருந்த ராம் பிரசாத் பிஸ்மி மற்றும் மன்மத்நாத் குப்தா ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. அஹிம்சாவாதி ஆயுதவாதி ஆனார். 1925ஆம் ஆண்டு நடந்த ககோரி ரயில் கொள்ளை, 1926ஆம் ஆண்டு வைஸ்ராய் பயணம் செய்த ரயில்பெட்டியை கவிழ்க்கும் முயற்சி, லாலா லஜபதி ராயின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக காவல் அதிகாரி சாண்டர்ஸ் கொலையானது, நாடாளுமன்றத்தில் குண்டு வீச்சு என்று புரட்சியாளர்கள் ஆங்கில அரசின் கண்களில் தங்கள் விரலை விட்டு ஆட்டினர். பல்வேறு புரட்சியாளர்கள் கைது செய்யப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர், தூக்கில் இடப்பட்டனர், அந்தமான் சிறையிலும் மற்ற சிறைகளிலும் அடைக்கப்பட்டனர். ஆனால் கடைசி வரை சந்திரசேகர ஆசாத்தை மட்டும் பிடிக்கவே முடியவில்லை.

ஒரு பக்கம் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, இந்திய சமதர்ம குடியரசு ராணுவத்தின் தலைமைத் தளபதி பல்ராஜ் என்ற பெயரில் அறிக்கைகளை வெளியீட்டுக்க கொண்டு, அதே நேரத்தில் இன்றய மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி நகரின் சத்தார் நதியின் ஓரத்தில் உள்ள ஒரு ஹனுமார் கோவிலுக்கு அருகே குடிசையில் பண்டிட் ஹரிசங்கர் பிரம்மச்சாரி என்ற பெயரில் சிறுவர்களுக்கு ஆன்மீகமும் சமிஸ்க்ரித மொழியும் சொல்லிக் கொடுப்பதுபோல மாறுவேட வாழ்க்கையையும் அவரால் வாழ முடிந்தது.

1931ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் நாள் ப்ரயாக்ராஜ் நகரில் உள்ள ஆல்பிரெட் பூங்காவில் சந்திரசேகர ஆசாத் இருக்கிறார் என்ற தகவல் ஆங்கில அரசாங்கத்திற்கு கிடைத்தது. அவரைப் பிடிக்க பெரும் படை அந்தப் பூங்காவை சுற்றிவளைத்தது. தன்னோடு இருந்த மற்றொரு புரட்சியாளர் சுகதேவ்ராஜ் தப்பிக்கும் வரையில் சுற்றிவளைத்த காவலர்களை தனது கைத்துப்பாக்கியால் சுட்டு தடுத்துக் கொண்டு இருந்த சந்திரசேகர ஆசாத் கடைசி தோட்டாவால் தன்னை தானே சுட்டுக்கொண்டு இறந்து போனார். இனி ஒரு முறை உயிரோடு ஆங்கில அரசிடம் பிடிபடப் போவதில்லை என்று அவர் எடுத்த முடிவை கடைசிவரை காப்பாற்றிவிட்டார்.

பெரும் புரட்சியாளனாகவும், புரட்சியாளர்களின் வழிகாட்டியாகவும், மிகப் பெரும் வீர தீர செயல்களை செய்து அந்நிய ஆட்சியாளர்களை கலங்கடித்த அந்த வீரன் வாழ்ந்தது என்னவோ இருபத்தி நான்கு வயது வரை மட்டுமே.

எத்தனையோ வீரர்கள் இந்த நாட்டில், அவர்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்