வியாழன், 7 நவம்பர், 2019

குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா - நவம்பர் 7

சிறுகுழந்தைகளுக்கு மொழியை அறிமுகம் செய்ய இசையோடு இணைந்த பாடல்கள், அதுவும் எளிமையான சிறிய வார்த்தைகளால் உருவான பாடல்கள்தான் சரியான வழியாக இருக்கமுடியும். அப்படி அற்புதமான பாடல்களை, அதுவும் நல்ல கருத்துக்களை, நற்பண்புகளை இளமையிலேயே குழந்தைகள் மனதில் பதிய வைக்கும் பாடல்களை எழுதிய அழ வள்ளியப்பாவின் பிறந்ததினம் இன்று



புதுக்கோட்டை மாவட்டத்தில் ராயவரத்தில் நகரத்தார் சமுதாயத்தைச் சார்ந்த அழகப்ப செட்டியார் - உமையாள் ஆச்சி தம்பதியரின் மகனாக 1922ஆம் பிறந்தவர் வள்ளியப்பன். ராயவரத்தில் உள்ள எஸ் கே டி காந்தி துவக்கப்பள்ளியிலும் பின்னர் கடியபட்டி பூமீஸ்வரஸ்வாமி உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.
உயர்நிலைப் படிப்பை முடித்தபின் வாழ்வாதாரம் தேடி சென்னைக்கு வந்தார் கவிஞர்.

தனது பதினெட்டாம் வயதில் "சக்தி" என்ற பத்திரிகையில் பணிக்குச் சேர்ந்தார். சிறுது காலத்தில் இந்தியன் வங்கியில் எழுத்தாளராக தன்னை இணைத்துக்கொண்டார். வங்கிப் பணியில் இருந்த காலத்திலேயே பல்வேறு கதைகளையும் பாடல்களையும் எழுதினார். வள்ளியப்பா ஏறத்தாழ இரண்டாயிரம் பாடல்களையும் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். கோகுலம் என்ற சிறுவர் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

நமது நதிகள் : தென்னாட்டு நதிகள் என்ற தலைப்பில் பல்வேறு நதிகளைப் பற்றி வள்ளியப்பா எழுதிய நூலை தேசிய புத்தக டிரஸ்ட் பதினான்கு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு உள்ளது. பாட்டிலே காந்தி கதை என்று சிறு குழந்தைகளுக்கு காந்தியின் வரலாற்றை அறிமுகம் செய்து வைத்த இவரது புத்தகம் மிகவும் புகழ்வாய்ந்த ஓன்று. உலகம் எங்கும் கொண்டாடப்படும் ஈசாப் நீதிக்கதைகளை எளிய பாடல்கள் மூலம் வள்ளியப்பா எழுதினார்.

ரோஜாச் செடி, உமாவின் பூனை, அம்மாவும் அத்தையும், மணிக்கு மணி , மலரும் உள்ளம், கதை சொன்னவர் கதை, மூன்று பரிசுகள், எங்கள் கதையைக் கேளுங்கள், பர்மா ரமணி, எங்கள் பாட்டி, மிருகங்களுடன் மூன்று மணி, நல்ல நண்பர்கள், பாட்டிலே காந்தி கதை, குதிரைச் சவாரி, நேரு தந்த பொம்மை, நீலா மாலா, பாடிப் பணிவோம், வாழ்க்கை வினோதம், சின்னஞ்சிறு வயதில், பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் ஆகிய படைப்புகள் என்றும் புகழ்பெற்றவை. 1944-ல் ‘மலரும் உள்ளம்' எனும் அவரது முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது. 1961-ல் அவர் வெளியிட்ட ‘சிரிக்கும் பூக்கள்' எனும் கவிதைத் தொகுப்பு, ‘குழந்தைக் கவிஞர்’ எனும் பட்டத்தை அவருக்குப் பெற்றுத்தந்தது.

குழந்தைகளுக்காக எழுதிவரும் எழுத்தாளர்களுக்கெல்லாம் தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருந்ததோடு, அவர்களை ஊக்குவிப்பவராகவும் இருந்த வள்ளியப்பா, தமிழில் குழந்தை இலக்கியம் தழைக்கவும், எழுதுபவர்கள் பெருகவும் 1950-ல் 'குழந்தை எழுத்தாளர்கள் சங்கம்' என்ற அமைப்பை நிறுவினார். அதன் பல்வேறு பொறுப்புகளிலும் திறம்பட செயல்பட்டார்.

பாரதியாரின் 81வது பிறந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாட தமிழக் அரசு நியமித்த குழுவில் இடம்பெற்றார். 1979ல் "வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்" என்ற தலைப்பில் கல்கி நினைவு நாள் விழாவில் பேருரை நிகழ்த்தியது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது! மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு அரசின் விழாக்குழுவின் சார்பில் "குழந்தை இலக்கியத்தில் தமிழ்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி மாநாட்டுப்பார்வையாளர்களைக் கவர்ந்தார்!

"பிள்ளை கவியரசு" மற்றும் "மழலை கவிச்செம்மல்" போன்ற பட்டங்கள் திரு.அழ.வள்ளியப்பா அவர்களைத் தேடி வந்தது! 1982ல் "தமிழ் பேரவைச் செம்மல்" என்ற பட்டத்தை மதுரை காமராஜ் பலகலைக்கழகம் வழங்கிச் சிறப்பித்தது.  குழந்தைப் பாடல்களைப் படைப்பதோடு நின்று விடாமல், குழந்தை எழுத்தாளர்கள் பலரை உருவாக்கிய பெருமையும் வள்ளியப்பாவுக்கு உண்டு.மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் வள்ளியப்பா பற்றி இப்படிக் குறிப்பிட்டார்:“தமிழில் நான்கு வகையான பாக்கள் உண்டு என்பது தெரியும். ஆனால், என்னைப் பொறுத்த வரை பா வகைகள் ஐந்து. அவை ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, வள்ளியப்பா!” ''வள்ளியப்பா ஒரு புள்ளியப்பா - அவர்வரையும் பாக்கள் வெள்ளியப்பா!வளரும் பிள்ளைக்குப் பள்ளியப்பா - இளைஞர் வருங்காலத்திற்குத் தங்கமப்பா!”என்பது கொத்தமங்கலம் சுப்புவின்புகழாரம்.

''அணிலே, அணிலே, ஓடிவா!அழகு அணிலே ஓடிவா!கொய்யா மரம் ஏறிவா!குண்டுப்பழம் கொண்டு வா!பாதிப் பழம் உன்னிடம்பாதிப் பழம் என்னிடம்கூடிக்கூடி இருவரும்கொறித்துக் கொறித்துத் தின்னலாம்”  -
எளிய, இனிய, தெளிவான இப் பாடல் வாயிலாகப் பகிர்ந்து உண்ணும் நற்பண்பினை குழந்தைகளின் பிஞ்சு மனங்களில் பதிய வைத்துவிடுகின்றார் வள்ளியப்பா.

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம்அழகான மாம்பழம் அல்வா போல் மாம்பழம்தங்க நிற மாம்பழம் உங்களுக்கும் வேண்டுமா?இங்கு ஓடி வாருங்கள்;பங்கு போட்டுத் தின்னலாம்.மல்கோவா மாம்பழம் போலவே இனித்திடும் வள்ளியப்பாவின் சுவையான குழந்தைப் பாடல் இது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்ட வள்ளியப்பா, 'குழந்தை இலக்கியத்தைப் பல்கலைக்கழக அளவில் பாடமாக வைக்க வேண்டும்' என்று வலியுறுத்திப் பேசி முடித்த நிலையில் மயங்கிச் சாய்ந்தார். 1989 மார்ச் 16-ல் கவிஞரின் உயிர் பிரிந்தது!