வெள்ளி, 13 டிசம்பர், 2019

பாஜக தலைவர் மனோகர் பாரிக்கர் பிறந்தநாள் - டிசம்பர் 13.

பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றியவருமான திரு மனோகர் கோபால கிருஷ்ண பிரபு பாரிக்கர் என்ற மனோகர் பாரிக்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று.


1955ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் நாள் பிறந்த திரு பாரிக்கர், தனது இளம்வயதிலேயே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மும்பையில் உள்ள புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ( IIT Mumbai ) உலோகவியல் பொறியியலில் ( Metallurgical Engineering ) பட்டம் பெற்றவர் இவர். ஐ ஐ டி பட்டதாரிகளில் சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பட்டதாரியும் இவரே.

1978ஆம் ஆண்டு தனது பட்டப்படிப்பை முடித்த பாரிக்கர் கோவா திரும்பி தங்கள் குடும்பத் தொழிலில் ஈடுபட்டார். அதோடு சங்கப்பணியும் அவருக்கு காத்திருந்தது. தனது 26ஆம் வயதில் உள்ளூர் ஷாகாவின் சங்கசாலக் பொறுப்பு அவரை வந்தடைந்தது. அதோடு பாஜகவை கோவா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் வளர்க்கும் பணியும் அவருக்கு அளிக்கப்பட்டது. 1994ஆம் ஆண்டு கோவா மாநிலத்தின் சட்டசபைக்கு அவர் தேர்வானார். 1999ஆம் ஆண்டு குறுகிய காலகட்டத்திற்கு அவர் கோவா மாநிலத்தின் எதிர்கட்சித் தலைவர் பொறுப்பையும் வகித்தார்.

அடுத்து நடந்த தேர்தலில் பாஜவை வெற்றிபெற வைத்து 2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பாரிக்கர் முதல்வராகப் பொறுப்பேற்றார். அந்த ஆட்சி 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெற்றது. அதிலிருந்து மரணமடையும் வரை பாரிக்கர் கோவா மாநிலத்தின் பாஜகவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கினார்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலிற்கு நரேந்திர மோதி அவர்களை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முதலில் எழுப்பியவர்களில் மனோகர் பாரிக்கர் முக்கியமான ஒருவராவார். மோதி அமைச்சரவையில் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சராக பாரிக்கர் சேர்க்கப்பட்டார். தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரிக்கர் டெல்லி சென்றார்.

ராணுவத்திற்கான தளவாடங்கள் வாங்குவதில் வெளிப்படைத் தன்மையை உருவாக்கியதன்மூலமும், அதிநவீனரக ஆயுதங்களை ராணுவத்திற்குப் பெற்றுக் கொடுத்ததன் மூலமும் பாரிக்கர் தனது முத்திரையைப் பதித்தார். நாட்டின் எல்லைகளைக் காக்கும் ராணுவத்தினர் உயிரைக் காக்கும் தரமான ஆயுதங்களை வாங்கிக் கொடுத்ததன் மூலம் அவர் நாட்டுக்கு மிக முக்கியமான சேவையை ஆற்றினார்.

கோவா மாநிலத்தில் உருவான நிலையற்ற தன்மையை மாற்றும் பொருட்டு பாரிக்கர் மீண்டும் கோவா திரும்பி அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பொறுப்பை 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்றுக்கொண்டார். அவர் ஆட்சி செய்த காலத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும், கோவாவின் சுற்றுலாதுறை வளர்ச்சிக்காகவும் எடுத்த நடவடிக்கைகள் இன்றும் மக்களால் நினைவு கூறப்படுகிறது.

துரதிஷ்டவசமாக கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாரிக்கர் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் நாள் காலமானார். அரசியல்வானில் சுடர்விட்டுப் பிரகாசித்து இருக்கவேண்டிய பல தலைவர்களை இள வயதிலேயே பாஜக இழந்து வருவது என்பது மிகவும் சோகமான ஒன்றாகும்.

இறுதி மூச்சுவரை ஒரு ஸ்வயம்சேவக் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த திரு மனோகர் பாரிக்கர் அவர்களை ஒரே இந்தியா தளம் மரியாதையோடு நினைவு கொள்கிறது.