புதன், 11 டிசம்பர், 2019

சர்சங்கசாலக் பாலாசாஹேப் தேவரஸ் பிறந்தநாள் - டிசம்பர் 11

குருஜி கோல்வாக்கருக்குப் பிறகு ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தை சர்சங்கசாலக்காக இருந்து வழிநடத்திய பரமபூஜ்யனிய மதுக்கர் தத்தாத்திரேய தேவரஸ் என்ற பாலாசாஹேப் தேவரஸ் அவர்களின் பிறந்ததினம் இன்று. 


மஹாராஷ்டிர மாநிலத்தைச் சார்ந்த தத்தாத்திரேய க்ரிஷ்ணாராவ் தேவரஸ் - பார்வதிபாய் தம்பதியினரின் எட்டாவது மகனாக 1915ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் நாள் பிறந்தவர் பாலாசாஹேப் தேவரஸ். மிக இளமைக்காலத்திலேயே சங்கத்தில் இணைந்து கொண்ட தேவரஸ் டாக்டர் ஹெட்கேவார் மற்றும் குருஜி கோல்வாக்கரால் பட்டை தீட்டப்பட்டார். சட்டத்துறையில் பட்டம் பெற்ற தேவரஸ், சங்கத்தின் முழுநேர பிரச்சாரகராகச் சேர்ந்தார். தேவரஸின் இளைய சகோதர் முரளிதர் தேவரஸும் சங்கத்தின் முழுநேர பிரச்சாரகர்தான். 

சங்கத்தின் பணியை முன்னெடுக்க பாலாசாஹேப் வங்காளத்திற்கு அனுப்பப்பட்டார். வெற்றிகரமாக வங்க மண்ணில் சங்கத்தை நிறுவி விட்டு நாக்பூர் திரும்பி சங்கத்தின் மராத்தி மொழி பத்திரிகையான தருண்பாரத் மற்றும் ஹிந்தி மொழியில் வெளியான யுகதர்மா ஆகிய பத்திரிகைகளின் பொறுப்பை தேவரஸ் ஏற்றுக்கொண்டார். சங்கம் ஒருபோதும் நேரடி அரசியலில் ஈடுபடுவது இல்லை. அதனால்தான் டாக்டர் ஹெட்கேவார் காந்தியின் சத்தியாகிரஹப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்ற போது, சங்கத்தின் பிரதிநிதியாக இல்லாமல் தனிப்பட்ட முறையிலேயே கலந்துகொண்டார். ஆனால் தவிர்க்கமுடியாமல் நேரடி அரசியல் பணியை சங்கம் முன்னெடுக்கவேண்டிய கட்டாயம் தேவரஸ் அவர்களுக்கு ஏற்பட்டது. 

1973ஆம் ஆண்டு சங்கத்தின் பொறுப்பு தேவரஸ் வசம் வந்தது. சிறிது காலத்திலேயே இந்திரா நெருக்கடி நிலையை அமுல் செய்தார். உடனடியாகத் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் சங்கமும் இருந்தது. நாக்பூரில் கைது செய்யப்பட்ட தேவரஸ் பூனா நகரின் ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார். சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். பலர் தலைமறைவானார்கள். ஸ்வயம்சேவகர்களின் வீடுகள் பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சார்ந்தவர்களின் சரணாலயமானது. இருபத்திமூவாயிரத்திற்கு மேற்பட்ட ஸ்வயம்சேவகர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் நடைபெற்ற தொடர்ந்த போராட்டங்களில் நாற்பத்தியையாயிரம் சங்க தொண்டர்கள் கைதானார்கள். 

சர்வாதிகாரத்தை எதிர்த்த சங்கத்தின் பங்களிப்பைப் பற்றி 1976ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதியிட்ட The Economist பத்திரிகை இப்படி எழுதியது. 

“The underground campaign against Mrs Gandhi claims to be the only non-left wing revolutionary force in the world, disavowing both bloodshed and class struggle. Indeed, it might even be called right wing since it is dominated by the Hindu communist party, Jan Sangh and its ‘cultural’ (some say paramilitary) affiliate the RSS. But its platform at the moment has only one non-ideological plank; to bring democracy back to India. The ground troops of this operation (the underground movement), consist of tens of thousands of cadres who are organized to the village level into four men cells. Most of them are RSS regulars, though more and more new young recruits are coming in. The other underground parties which started out as partners in the underground have effectively abandoned the field to Jan Sangh and RSS.”

நெருக்கடி நிலையை விலக்கிக்கொண்டு திடீர் என்று இந்திரா தேர்தலை அறிவித்தார். எல்லா எதிர்கட்சிகளையும் ஒரு குடைக்குள் கொண்டுவந்து இந்திராவை எதிர்க்க நானாஜி தேஷ்முக் தலைமையிலான ஸ்வயம்சேவகர்கள் ஈடுபட்டனர். குறுகிய கால இடைவெளிக்குள் நாடெங்கும் இந்திராவைத் தோற்கடிக்க ஸ்வயம்சேவகர்கள் உழைத்தனர். 

தேர்தல் முடிந்தபிறகு மீண்டும் சங்கம் தனது தேச புனர்நிர்மாணப் பணிக்கு திரும்பியது. எண்பதுகளின் இறுதிப் பகுதியில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுலாக்க வி பி சிங் முடிவு செய்தார்.  இந்த முடிவு நாடெங்கும் பெரும் சூறாவளியைக் கிளப்பியது. இந்த முடிவை எப்படி எதிர்கொள்ள என்று சங்கத்தின் அனைத்து நிலைகளிலும் விவாதங்கள் நடந்தன. ஏற்கனவே தீண்டாமை குற்றம் இல்லையென்றால் எதுவுமே குற்றமாகாது என்று மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டு இருந்த தேவரஸ், பெருவாரியான மக்களின் முன்னேற்றத்திற்காக இதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார். 

தேவரஸ் காலத்தில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிபட்ட போது மீண்டும் சங்கம் தடை செய்யப்பட்டது. அதில் இருந்தும் மீண்டும் பொலிவோடு முன்னெழ தேவரஸ் அவர்களின் பங்களிப்பு மிக அதிகம். 

1993ஆம் ஆண்டு தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சர்சங்கசாலக் பொறுப்பில் இருந்து தேவரஸ் விலகிக் கொண்டார். அடுத்த தலைவராக ராஜுபையா என்ற பேராசிரியர் ராஜேந்திரசிங் பொறுப்பேற்றுக்கொண்டார். 

இருபது ஆண்டுகள் சங்கத்தை மிக சிக்கலான காலகட்டத்தில் வழிநடத்திய பாலாசாஹேப் தேவரஸ் 2003ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் நாள் பாரததாயின் தாளில் அற்பணமானார். 

சங்கத்தின் புகழ்வாய்ந்த தலைவருக்கு ஒரே இந்தியா தளம் தலை வணங்கி தனது மரியாதையைச் செலுத்துகிறது.