வெள்ளி, 10 ஏப்ரல், 2020

பெரும் தொழிலதிபர் ஜி டி பிர்லா - ஏப்ரல் 10

பாரத நாட்டின் பெரும் தொழில் குழுமத்தை உருவாக்கிய கியான்ஷாம் தாஸ் பிர்லா அவர்களின் பிறந்தநாள் இன்று. ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த பிலானி பகுதியில் வசித்துவந்த மார்வாடி சமுதாயத்தைச் சார்ந்த ராஜா ராஜா பல்தேவ்தாஸ் பிர்லாவின் மகனாக 1894ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் பிறந்தவர் ஜி டி பிர்லா. 


ராஜா பல்தேவ்தாஸ் பிர்லா மும்பை நகருக்கு குடிபெயர்ந்து அங்கே தொழில் செய்யத் தொடங்கினார். வெள்ளி, பருத்தி, தானியங்கள் போன்ற பல்வேறு பொருள்களை விற்பனை செய்யும் தொழிலை அவர் நடத்தி வந்தார். காலப்போக்கில் அவரது நான்கு மகன்களும் அவரது வியாபாரத்தில் பங்குகொள்ளத் தொடங்கினார்கள்.
ஜி டி பிர்லா வியாபாரத்தில் இருந்து உற்பத்தித்துறையில் கால்பதிக்க முடிவு செய்தார். அவர் கொல்கத்தா நகருக்கு குடி பெயர்ந்து அங்கே சணல் வியாபாரத்தைத் தொடங்கினார். பின்னர் 1918ஆம் ஆண்டு சணல் தயாரிக்கும் ஆலையைத் தொடங்கினார். ஆனால் இந்த முயற்சியை அன்றுள்ள ஆங்கிலத் தொழிலதிபர்கள் பெருமளவில் முட்டுக்கட்டை போட்டனர். விடாமுயற்சியால் அந்த தடைகளை பிர்லா முறியடித்தார்.

முதலாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் ஏற்பட்ட தட்டுப்பாடு பிர்லாவின் தொழிலை பெரிய அளவில் முன்னெடுக்கும் காரணியாக அமைந்தது. 1919ஆம் ஆண்டு பிர்லா ஐம்பது லட்ச ரூபாய் முதலீட்டில் ஒரு பெரும் சணல் ஆலையை நிறுவினார். அதனைத் தொடர்ந்து சிமெண்ட், ஜவுளி, பல்வேறு ரசாயனங்கள், ரேயான் இழை தயாரிப்பு என்று பல்வேறு உற்பத்தித்துறைகளிலும் ஆலைகளை நிறுவினார். 1940ஆம் ஆண்டு ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் என்ற பெயரில் கார்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும் பிர்லா தொடங்கினார். 1926ஆம் ஆண்டு பிர்லா அன்றய மத்திய சட்டசபைக்கு உறுப்பினராக தேர்வானார்.

பெரும் தொழிலதிபரான பிர்லா தேசபக்தராகவும் இருந்தார். காந்திஜியின் ஆணைக்கு ஏற்ப ஹரிஜன் சேவா சங்கத்தின் நிறுவி அதன் தலைவராகவும் பிர்லா விளங்கினார். அதே போல இந்திய தொழில்முனைவோர்கள் கூட்டமைப்பான FICCI ( Federation of Indian Chamber of Commerce and Industry ) அமைப்பை உருவாக்கியவரும் பிர்லாதான். கொல்கத்தாவை தலைமையகமாக கொண்டு யூகோ வங்கியை பிர்லா நிறுவினார். காந்திஜியின் அணுக்கத் தொண்டராகவும் நெருங்கிய சீடராகவும் பிர்லா இருந்தார். காந்தி தனது வாழ்வின் கடைசி நான்கு மாதங்களை பிர்லா மாளிகையிலேயே கழித்தார்.

தொழில்துறையில் மட்டுமல்ல கல்வித்துறையிலும் பிர்லா அவர்களின் பங்களிப்பு மிகப் பெரியது. ராஜஸ்தான் மாநிலத்தில் எங்கோ இருக்கும் பிலானி நகரை இன்று கல்விப்புலத்தின் மிக முக்கியமான இடமாக பிர்லா மாற்றினார். அங்கே ஒரு பொறியியல் கல்லூரியை அவர் உருவாக்கினார். இன்று நாட்டின் மிக முக்கியமான பொறியியல் கல்லூரிகளில் முன்னணியில் பிர்லா கல்லூரி விளங்குகிறது. பிவானி நகரில் ஜவுளிதுறைக்கான ஒரு கல்விநிலையத்தையும் அவர் ஆரம்பித்தார்.

திரு ஜி டி பிர்லா எழுதிய பல்வேறு கடிதங்கள், கட்டுரைகள், நினைவுக்குறிப்புகள் பல்வேறு புத்தகங்களாக வெளியாகி உள்ளது மகாத்மாவின் நிழலில் என்று காந்திஜியோடு பிர்லாவின் புத்தகம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

1957ஆம் ஆண்டு பாரத நாட்டின் இரண்டாவது முக்கியமான விருதான பத்மவிபூஷண் விருதை அரசு பிர்லாவுக்கு அளித்து மரியாதை செய்தது.

ஒரு ஆயுள்காலத்தில் பெரிய தொழில் குழுமத்தை உருவாக்கி, அதோடு நாட்டின் பல்வேறு முன்னேற்றப்பணிகளுக்கும் பங்களிப்பு செய்த திரு ஜி டி பிர்லா தனது எண்பத்தி ஒன்பதாம் வயதில் 1983ஆம் ஆண்டு காலமானார்.

நாட்டின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான திரு ஜி டி பிர்லா அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.