சனி, 3 ஆகஸ்ட், 2019

சோதனைகளை வென்று சாதனை - அனு ஆகா - ஆகஸ்ட் 3



அடுக்கடுக்கான பிரச்சனைகள் சூழும்போதுதான் சாதாரண மனிதர்களுக்கும் சாதனையாளர்களுக்குமான வித்தியாசம் தெரிய வரும். இது ஒரு குடும்பத்தலைவியின் கதை. ஒரு மத்தியதர பார்சி குடும்பத்தைச் சார்ந்தவர் அவர்.  அவரின் தந்தை சிறிய அளவில் ஒரு தொழில்சாலையை தொடங்கி நடத்திக் கொண்டு இருந்தார். இவரோ மும்பை  நகரில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரமும் அதன் பின்னர் டாடா சமுதாய சேவைக்கான கல்லூரியில் ( Tata Institute of Social Science ) சமுதாய சேவை துறையில் மருத்துவமும் மனநலமும் பற்றிய உயர்கல்வியை முடித்திருந்தார். தந்தையின் தொழில்கூடத்தில் வேலை பார்த்துவந்த ரோஹின்டன் ஆகாவை திருமணம் செய்துகொண்டு, தங்கள் குழந்தைகளை பராமரித்துக்கொண்டு, கூடவே சமுதாயசேவைகளையும் செய்து கொண்டு இருந்தார். அவர்தான் 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் நாள் பிறந்த அனு ஆகா அவர்கள்.

தனது மாமனாரின் தொழிலை நல்லமுறையில் விரிவு செய்த ரோஹின்டனுக்கு  1982ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சை நடக்கும்போது அவர் பக்கவாதத்தால் தாக்கப்பட்டார். எண்களை, எழுத்துக்களை ஏன் மனைவி குழைந்தைகளைக் கூட அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலை உருவானது. ஆனால் தொடர்ந்த பயிற்சியினால் அவர் அந்த தடைகளை உடைத்துக் கொண்டு நலமடைந்து மீண்டும் தொழிலை நடத்தத் தொடங்கினார். கணவனுக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணத்தால் அனு ஆகா தங்கள் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறையில் தன்னை இணைத்துக் கொண்டார். 1995ஆம் ஆண்டு அந்த நிறுவனம் தனது பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிட்டு முதல் திரட்டியது.

தனது மகளின் பிள்ளைபேறுக்கு உதவி செய்ய அமெரிக்கா சென்று இருந்த அனு 1995 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். பூனாவில் இருந்து மும்பை நகருக்கு சென்று அவரை வரவேற்க வந்துகொண்டு இருந்த அவரது கணவர் அடுத்த மாரடைப்பால் மரணமடைந்தார். தெர்மாக்ஸ் நிறுவனம் இப்போது பங்குதாரர்களாக பொதுமக்களுக்கும் பதில் சொல்ல கடமைப்பட்ட ஓன்று. அந்த நிறுவனத்தின்  பங்குகளின் விலை ரூபாய் நானூற்றில் இருந்து ரூபாய் முப்பத்தி ஆறாகச் சரிந்தது. ஏற்கனவே மனிதவள மேம்பாட்டு துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்த அனு ஆகாவை தெர்மாக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் அமர்த்தினர்.இந்திய தொழில்துறைக்கு அது ஒரு சோதனையான காலகட்டம். பல்லாண்டுகளாக பாதுகாக்கப்பட்ட அரண்கள் விலக்கப்பட்டு, இந்திய தொழில்கள் நரசிம்மராவ் அறிமுகம் செய்த புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக பன்னாட்டு நிறுவனங்களோடு போட்டி போடும் சூழலில் இருந்த நேரம் அது.

தனது கடின உழைப்பாலும், சரியான ஆலோசகர்களின் அறிவுரையை செயல்படுத்தியதாலும் அனு தனது நிறுவனத்தை மீண்டும் லாபகரமாக மாற்றிக் காட்டினார். ஆனாலும் விதியின் கை அவரின் வாழ்க்கையோடு மீண்டும் விளையாடியது.கணவன் இறந்த ஒரே வருடத்தில் அனு ஆகாவின் மகன் குருஷ் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார். அடுக்கடுக்கான பிரச்சனைகள் சூழும்போதுதான் சாதாரண மனிதர்களுக்கும் சாதனையாளர்களுக்குமான வித்தியாசம் தெரிய வரும்.. தொடர்ந்த தனிப்பட்ட துயரங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதிக்காமல் இருக்கும்படி அனு ஆகா பார்த்துக்கொண்டார். தொடர்ந்து அவரது தலைமையில் அவர் நிறுவனம் திறமையாகச் செயல்பட்டு இன்றும் லாபகரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

பாரத அரசு இவருக்கு 2010ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.  2012ஆம் ஆண்டு இவர் நாட்டின் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

தற்போது அனு ஆகா Teach for India என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குழந்தைகளின் கல்விக்கு இந்த நிறுவனம் உதவி செய்து வருகிறது.

பாரத நாட்டின் பெண்களின் சக்திக்கு உதாரணமாக விளங்கும் அனு ஆகாவிற்கு ஒரே இந்தியா தளம் தனது மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.