திங்கள், 25 மே, 2020

ராஷ் பிஹாரி போஸ் பிறந்தநாள் - மே 25


பாரத நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட பலரின் பெயர்கள் பொதுமக்களின் மனதில் இருந்து திட்டமிட்டு மறைக்கப்பட்டு உள்ளது. வீடு மனையைத் துறந்து, குடும்பத்தினரைப் பிரிந்து, வெளிநாடுகளில் தங்கி பாரதநாட்டின் விடுதலைக்காக தங்கள் வாழ்வு முழுவதையும் தியாகம் செய்த பெருமைமிக்க புதல்வர்கள் பலர். அதில் முக்கியமானவர் ராஷ்பிஹாரிபோஸ். சுபாஷ் சந்திர போஸுக்கு முன்னரே ஜப்பான் நாட்டுக்குச் சென்று அங்கே இந்திய சுதந்திரத்திற்கு பாடுபடும் படையை உருவாக்கியவர் இவர். இந்தப் படையின் தலைமையைத்தான் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் ஏற்றுக்கொண்டார்.

வங்காளத்தின் பார்த்துவான் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 1886ஆம் ஆண்டு பினோத் பிஹாரி போஸ் - புவனேஸ்வரி தேவி தம்பதியின் மகனாகப் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை கிராமத்தில் உள்ள பள்ளியில் பயின்றார். கல்லூரிப் படிப்பை கொல்கத்தா நகரில் முடித்தார். படிக்கின்ற காலத்திலேயே ஆங்கில அரசை ஆயுதம் தாங்கியே எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்.

1912ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு இந்தியாவின் தலைநகரை கொல்கத்தா நகரில் இருந்து டெல்லிக்கு மாற்றியது. டெல்லி நகரில் அன்றய வைஸ்ராய் ஹார்டிங் 1912ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் நாள் யானை மீது பவனி வந்தார். சாந்தினி சவுக் பகுதியில் ஊர்வலம் வரும்போது அவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. காயங்களோடு ஹார்டிங் உயிர்தப்பினார். வெடுக்குண்டு வீசியது பசந்த் பிஸ்வாஸ் எனும் 16 வயது சிறுவன். அவனைப் பயிற்றுவித்தது போஸ்.

போஸ் அப்போது டெஹ்ராடூன் நகரில் உள்ள வனத்துறையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். ஏதும் அறியாதது போல அவர் மீண்டும் டெஹ்ராடூன் சென்று தனது பணியைத் தொடர்ந்தார். ஆனாலும் இந்த வெடிகுண்டு வீச்சுக்குப் பின்னால் போஸ்தான் இருக்கிறார் என்பதைக் கண்டுகொண்ட ஆங்கில அரசு போஸ்மீது கைது நடவடிக்கையை ஆரம்பித்தது. போஸ் தலைமறைவானார். அவரை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு என்று அரசு அறிவித்தது.

தலைமறைவு வாழ்க்கையை நடத்தும் போதே இந்திய அளவில் ஆயுதம் தாங்கிய தாக்குதலுக்கு போஸ் முயற்சி செய்து கொண்டு இருந்தார். அமெரிக்காவில் இருந்த கதர் கட்சி ( அரபி மொழியில் இருந்த வந்த உருது சொல் - இதற்கு புரட்சி என்று பொருள் ) ஜெர்மன் நாட்டில் இருந்து இயங்கிய இந்திய விடுதலைக்கான கூட்டமைப்பு, இந்தியாவில் செயல்பட்டு வந்த ஆயத புரட்சியாளர்கள் மற்றும் ராணுவத்தில் உள்ள வீரர்களோடு இணைந்து இந்தியாவின் பல பகுதிகளில் ஒரே நாளில் போராட்ட திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் ஆங்கில உளவுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு திட்டம் தோல்வியில் முடிந்தது.

போஸ் இந்தியாவை விட்டு நீங்கி ஜப்பான் சென்றார். ஜப்பானிலும் ஆங்கில அரசு அவரைப் பின்தொடர்ந்து. அவரை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு ஜப்பான் அரசை நிர்ப்பந்தித்தது. இந்தியாவின் வீர மைந்தன் ஜப்பான் நாட்டிலும் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டி இருந்தது. ஆனால் இதற்கு நடுவே இங்கிலாந்து மற்றும் ஜப்பான் நாடுகளுக்கான உறவு சீர்குலைந்ததால் போஸ் ஜப்பானில் நிம்மதியாக இயங்க முடிந்தது. களங்கள்தான் மாறியது கடமை மாறவில்லை. ஜப்பானில் இருந்து போஸ் இந்திய விடுதலைக்கான வேலையைச் செய்து கொண்டுதான் இருந்தார். பல பத்திரிகைகளில் தனது கட்டுரைகள் மூலம் இந்திய விடுதலை வீரர்களுக்கு ஜப்பான் ஆதரவு தரவேண்டும் என்று எழுதி, ஜப்பான் நாட்டை இந்திய போராளிகளுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றினார். இந்திய விடுதலை முன்னணி என்ற அமைப்பை ஜப்பானில் உருவாக்கினார். இதன் தலைமைப் பொறுப்பையே பின்னாளில் நேதாஜி ஏற்றுக்கொண்டார்.

ஜப்பானில் நாகமுறையா உணவகத்தின் உரிமையாளரின் மகள் டோஷிகோ சோமோ என்பவரை போஸை மணந்துகொண்டார். அவருக்கு ஜப்பான் நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டது. எட்டாண்டுகளே இந்தத் தம்பதியினர் இணைந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர். உடல்நலக் குறைவால் டோஷிகோ சோமோ மரணமடைய, அதன் பின்னர் தனியாகவே போஸ் வாழ்ந்தார்.

சுபாஷ் சந்திர போஸ் பிரகடனம் செய்த சுதந்திர இந்தியாவின் கொடியை வடிவமைத்து கொடுத்தவர் ராஷ்பிஹாரிபோஸ்தான். "நான் காந்தியை மதிக்கிறேன், அவர் புனிதமானவர். ஆனால் அவர் கடந்த காலத்தவர், சுபாஷ் வருங்காலத்தை சேர்ந்தவர்" என்று கூறி சுபாஷுக்கு ஆசி வழங்கினார் ராஷ்பிஹாரிபோஸ்

இந்தியாவின் புகழ்வாய்ந்த தேசபக்தர் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் 1945ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் நாள் தந்து 58ஆம் வயதில் காலமானார்.

எதையும் எதிர்பாராமல் நாட்டுக்கு உழைத்த தியாகிகளின் நினைவைப் போற்றுவோம். அவர்கள் வழியில் நடப்போம் என்று ராஷ்பிஹாரிபோஸ் பிறந்தநாளில் உறுதி ஏற்போம்.