செவ்வாய், 31 மார்ச், 2020

பாரதநாட்டின் முதல் பெண் மருத்துவர் ஆனந்திபாய் ஜோஷி - மார்ச் 31

எந்த ஒரு மருத்துவமனைக்கு நாம் சென்றாலும் அங்கே பெண் மருத்துவர்கள் நிரம்பி இருப்பது என்பது இன்று நமக்கு இயல்பான ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் இந்த இடத்திற்கு பாரதப் பெண்கள் எத்தனையோ தடைகளைத் தாண்டி பெரும் போராட்டத்தை நடத்த வேண்டி இருந்தது என்பது நமக்கு தெரியாத ஓன்று. அப்படி மிகப்பெரும் சவால்களை எதிர்கொண்டு பாரதநாட்டின் முதல் பெண் மருத்துவராக உருவான ஆனந்திபாய் ஜோஷி அவர்களின் பிறந்ததினம் இன்று.


இன்றய மும்பை நகரின் கல்யாண் பகுதியில் இருந்த ஒரு நிலச்சுவான்தார் குடும்பத்தில் 1865ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் நாள் பிறந்தவர் ஆனந்தி. இவரது இயற்பெயர் யமுனா என்பதாகும். மாறிய சூழ்நிலைகளால் யமுனாவின் குடும்பம் வறுமை நிலைக்கு ஆளானது. யமுனா தனது ஒன்பதாவது வயதில் தன்னைவிட இருபது வயது மூத்தவரான, மனைவியை இழந்த  கோபால்ராவ் ஜோஷி என்பவரை மணந்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு யமுனா ஆனந்தி என்று அழைக்கப்படலானார். அதிர்ஷ்டவசமாக  கோபால்ராவ் முற்போக்கு சிந்தனை கொண்டவராகவும், பெண்கள் படிப்பில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். அவர்தான் ஆனந்தியைப் படிக்கத் தூண்டினார். பெண்களுக்கான கல்விநிலையங்கள் இல்லாத சூழலில் அவரே தன் மனைவிக்கு ஆசிரியராக இருந்து கற்பிக்க ஆரம்பித்தார்.

இதற்கிடையில் தனது பதினான்காவது வயதில் ஆனந்தி ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானார். ஆனால் பிறந்த பத்தே நாட்களில் அந்தக் குழந்தை இறந்துவிட்டது. பெரும் இழப்பு ஆனந்தியை பெரும் சவாலை எதிர்கொள்ள தயார்செய்தது. ஆனந்தியை மருத்துவராக்க கோபால்ராவ் முடிவு செய்தார். அதற்கான தயாரிப்பில் அந்த தம்பதியினர் ஈடுபடலானார்கள்.

அமெரிக்காவில் சென்று ஆனந்தி மருத்துவம் பயில பல்வேறு மக்களோடு கோபால்ராவ் தொடர்பு கொள்ளத் தொடங்கினார். ராயல் வில்டர் என்ற அமெரிக்க பாதிரியாருக்கு அவர் எழுதிய கடிதம் பத்திரிகை ஒன்றில் பிரசுரமானது. அந்தக் கடிதம் திருமதி கார்பெண்டர் என்பவர் கண்ணில் பட்டு, அவர் கோபால்ராவுடனும் ஆனந்தியுடனும் தொடர்பு கொண்டு, அமெரிக்காவில் ஆனந்தியை அவரே பார்த்துக்கொள்வதாக வாக்களித்தார்.

பென்சில்வேனியாவில் உள்ள மகளிர் மருத்துவக் கல்லூரியில் ஆனந்திக்கு மருத்துவம் படிக்க அனுமதி கிடைத்தது. அமெரிக்காவிற்கு வந்த ஆனந்தியை திருமதி கார்பெண்டர் வரவேற்று தன்னோடு தங்க வைத்துக்கொண்டார். அவர்கள் இருவருக்கும் மிக நெருங்கிய உறவு உருவானது.

கடுமையான குளிர் சூழலில், ஒன்பது கஜம் உள்ள சேலையைச் சுற்றிக்கொண்டு பத்தொன்பது வயதான பாரத நாட்டுப் பெண் மருத்துவக் கல்லூரிக்குப் போவது என்பது அன்று யாருக்குமே ஒரு புதிய காட்சியாகத்தான் இருக்கும். அதிலும் அசைவம் உண்ணாத ஆனந்திக்கு அமெரிக்காவில் வசிப்பது அங்கே கல்வி கற்பது என்பது பெரும் சவாலாகத்தான் இருக்கும். படிக்கும் காலத்தில் ஆனந்தியை காசநோய் தாக்கியது. கடுமையான போராட்டத்திற்குப் பிறகு
1886ஆம் ஆண்டு முறைப்படி ஆனந்தி தனது படிப்பை முடித்து மருத்துவராகப் பட்டம் பெற்றார். அன்றய இங்கிலாந்து அரசி விக்டோரியா மஹாராணி  பாரதநாட்டின் பேரரசி என்ற முறையில் ஆனந்தியைப் பாராட்டி செய்தி அனுப்பினார். கோல்ஹாபூர் அரசர் தனது ராஜ்யத்தில் உள்ள ஆல்பர்ட் எட்வர்ட் மருத்துவமனையில் பெண்கள் நலப்பிரிவில் சேருமாறு ஆனந்திக்கு அழைப்பு விடுத்தார்.

எளிய பெண்மணியாக பாரத நாட்டை விட்டுச் சென்ற ஆனந்திபாய் 1886ஆம் ஆண்டு இறுதியில்  மருத்துவராக நாடு திரும்பினார். ஆனால் அவர் உடலை அரித்த காசநோய் அவரின் உயிரையும் பறித்து விட்டது. 1887ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் நாள் அவர் காலமானார். அப்போது அவரின் வயது இருபத்தி இரண்டு மட்டும்தான்.

அவரது அஸ்தி கலசம் திருமதி கார்பெண்டர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களின் குடும்ப கல்லறைகளோடு ஆனந்திபாயின் அஸ்தி புதைக்கப்பட்டது. பாரத நாட்டில் இருந்து கல்வி பெற வந்த முதல் பிராமணப் பெண் என்ற குறிப்போடு நியூயார்க் நகரில் உள்ள போகேப்சி கல்லறைத் தோட்டத்தில் கல்வியைத் தேடும் மனித குலத்தின் வரலாற்றுச் சான்றாக அது உள்ளது.


மருத்துவர் ஆனந்திபாய் ஜோஷி வகுத்த பாதையில் இன்று பல்வேறு பாரதப் பெண்கள் மருத்துவத்துறையில் இணைந்து பெரும் சாதனைகளைப் படைத்தது வருகிறார்கள். பாரத நாட்டின் முன்னோடிகளில் ஒருவரான ஆனந்திபாய் ஜோஷியின் மகத்தான சாதனைகளை நினைவு கூறுவோம். மனிதகுல மேம்பாட்டுக்கு நமது பங்களிப்பை என்றும் செய்வோம். 

திங்கள், 30 மார்ச், 2020

புரட்சியாளர் பண்டிட் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மா நினைவுநாள் - மார்ச் 30

நாட்டுக்காக உயிரைக் கொடுப்பது சிறப்பானது, அதிலும் சிறந்தது நாட்டுக்காக உயிரோடு இருப்பது. அதிலும் சிறப்பு நாட்டை அடிமைப்படுத்தியவர்கள் நாட்டில் இருந்து கொண்டே தாய்நாட்டின் விடுதலைக்கு உழைப்பது, அதற்கான தேசபக்தர்களை உருவாக்குவது. அப்படி உழைத்த தியாகி பண்டிட் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மாவின் நினைவுநாள் இன்று.


பாரத நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஆயுதம் தாங்கிய போராளிகளை லண்டன் நகரில் உருவாக்கிய நிறுவனம் இந்தியா ஹவுஸ். வீர சாவர்க்கர், வ வே சு ஐயர், மதன்லால் திங்ரா, மண்டயம் பார்த்தசாரதி திருமலாச்சாரியா, வீரேந்திரநாத் சட்டோபாத்யாய, காமா அம்மையார், லாலா ஹர்தயாள் என்று புகழ்பெற்ற வீரர்களை உருவாக்கி, தேசசேவைக்கு அளித்த இடம் அது. அதனை நிறுவியவர்தான் பண்டிட் ஷயாமாஜி கிருஷ்ண வர்மா.

1857ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் நாள் நூற்பாலை ஒன்றில் கூலித்தொழிலாளியாகப் பணியாற்றிக்கொண்டு இருந்த கிருஷ்ணதாஸ் பானுஷாலிக்கும் கோமதிபாய் அம்மையாருக்கும் மகனாக இன்றய குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தின் மாண்டவி பகுதியில்  பிறந்தவர் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மா. தனது சிறு வயதிலேயே தாயாரை இழந்ததால் இவர் தன் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். தனது ஆரம்பிக் கல்வியை புஜ் நகரத்தில் முடித்த கிருஷ்ண வர்மா மேற்படிப்புக்காக மும்பைக்கு வந்தார். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சமிஸ்க்ரித மொழியில் புலமையை வளர்த்துக்கொண்டார்.

ஆர்ய சமாஜத்தை நிறுவிய ஸ்வாமி தயானந்தரின் சீடராக, வேதாந்த தத்துவத்தை கிருஷ்ண வர்மா கற்றுக்கொண்டார். வடநாட்டில் பல்வேறு இடங்களில் வேதாந்த ஞானத்தைப் பற்றிய சொற்பொழிவுகளை அவர் நடத்தலானார். அவரது மேதைமையைப் பாராட்டி அதனை அங்கீகரிக்கும் விதமாக வாரணாசி நகரத்தில் உள்ள ப்ராஹ்மணர்கள் கிருஷ்ண வர்மாவுக்கு பண்டிட் என்ற பட்டத்தை அளித்து சிறப்பித்தனர். இவரது சமிஸ்க்ரித அறிவைக் கண்டு வியந்த மோனிர் வில்லியம்ஸ் என்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிருஷ்ண வர்மாவை தன் உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார்.

1879ஆம் ஆண்டு லண்டன் சென்ற கிருஷ்ண வர்மா 1883ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1885ஆம் ஆண்டு நாடு திரும்பிய கிருஷ்ண வர்மா வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். இவரது மேதமைக் கேள்விப்பட்டு மத்தியப்பிரதேசத்தில் உள்ள ரத்தினபுரி அரசு இவரை தங்கள் திவானாக நியமித்தது. சிறிது காலத்தில் உடல்நிலை காரணமாக அந்தப் பதவியை ராஜினாமா செய்த கிருஷ்ண வர்மா அஜ்மீர் நகருக்குக் குடியேறி அங்கே வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் உதய்ப்பூர் மன்னரின் அமைச்சராகவும் ஜூனாகாட் அரசின் திவானாகவும் பணியாற்றினார். ஆனால் அன்றய அரசர்களுக்கு வரையறை செய்யப்பட்ட அதிகாரங்கள் இருந்தன. பெரும்பான்மையான அதிகாரங்கள் ஆங்கிலேயர் வசமே இருந்தது. இதனால் மனம் நொந்த கிருஷ்ண வர்மா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் இங்கிலாந்து திரும்பினார்.

ஹிந்து ஞானமரபு வேறு ஹிந்து அரசியல்மரபு வேறு என்று இப்போது சில அறிஞர்கள் பேசத்தொடங்கி உள்ளனர். ஆனால் எப்போதெல்லாம் ஹிந்து அரசியல்மரபு ஹிந்து ஞானமரபோடு இணைந்து செயல்பட்டதோ அப்போதுதான் பாரதம் தலைசிறந்து இருந்தது என்பதுதான் வரலாறு. விஷ்ணுகுப்த சாணக்யனும் சந்திரகுப்த மௌரியன், சமர்த்த ராமதாசரும் சத்ரபதி சிவாஜியும், வித்யாரண்ய ஸ்வாமிகளும் ஹரிஹர புக்கரும், குரு நானக் தொடங்கி குரு கோவிந்தசிம்மன் வழியாக குரு கிரந்த சாஹேப் என்று தேவை ஏற்படும்போதெல்லாம் ஹிந்து ஞானமரபு ஹிந்து அரசியல்மரபிற்கு வழிகாட்டியாக இருந்துள்ளது.

அதன் நீட்சிதான் பத்தொன்பதாம் நூற்றாண்டு பல்வேறு ஹிந்து தர்மத்தின் காவலர்களாக ராமகிருஷ்ண பரமஹம்சரும் அவரது சீடர்களின் வரிசை ஒருபுறமும் சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றவர்கள் மறுபுறமும் என்று இந்த நாட்டை வழிநடத்த அவதரித்தார்கள். இங்கிலாந்து நாட்டுக்கு படிக்க வரும் பாரத மாணவர்களுக்காக அவர்கள் வசதிக்காக லண்டன் நகரில் வசதி செய்து கொடுக்கும்படி ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மாவுக்கு தயானந்த சரஸ்வதி அறிவுறித்தினார். அதன்படிதான் லண்டன் நகரில் ஒரு பெரிய கட்டடத்தை விலைக்கு வாங்கி இந்தியா ஹவுஸ் என்ற பெயரில் அவர் நிறுவினார். இதன் தொடக்க விழாவில் தாதாபாய் நௌரோஜி, மேடம் காமா ஆகியோர் கலந்து கொண்டனர். லண்டன் வரும் பாரத மாணவர்கள் தங்கிப் படிக்கும் இடமாக லண்டன் ஹவுஸ் விளங்கியது. அதிலும் தேசிய சிந்தனை உள்ள மாணவர்கள் ஓன்று கூடி, நாட்டின் விடுதலைக்காக என்ன செய்யலாம் என்று திட்டமிடும் இடமாகவும் அது விளங்கியது.

அரசியல் சிந்தனைநீட்சியில் கிருஷ்ண வர்மா திலகரின் வழியைப் பின்பற்றுபவராக இருந்தார். மீண்டும் மீண்டும் ஆங்கில அரசுக்கு விண்ணப்பம் அளிக்கும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் அவருக்கு உவப்பாக இல்லை. லண்டன் நகருக்கு வருகை தரும் பல்வேறு தலைவர்கள் லண்டன் ஹவுஸுக்கு வந்து, அங்குள்ள மாணவர்களிடம் உரையாடுவது வழக்கமாக இருந்தது. லாலா லஜபதி ராய், காந்தி போன்றவர்கள் அங்கே வந்துள்ளார்.

ஆயுதம் தாங்கிப் போராடும் எண்ணமுடைய பல்வேறு புரட்சியாளர்களை லண்டன் ஹவுஸ் உருவாக்கியது. அதில் முக்கியமானவர் வீர சாவர்க்கர், வ வே சு ஐயர், மதன்லால் திங்ரா போன்றவர்கள் முக்கியமானவர்கள். ஆங்கில அரசின் கண்கள் இந்தியா ஹவுஸ் மீது படிந்ததைத் தொடர்ந்து கிருஷ்ண வர்மா 1907ஆம் ஆண்டு யாரும் அறியாமல் பாரிஸ் நகருக்கு குடிபெயர்ந்தார். முதலாம் உலகப் போர் தொடங்கும் சாத்தியக்கூறுகளை யூகித்து அறிந்த கிருஷ்ணவர்மா அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து நாட்டுக்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் நல்லுறவு ஏற்படும் என்று எதிர்பார்த்து ஜெனீவா நகருக்கு சென்றுவிட்டார்.

ஏறத்தாழ முப்பதாண்டு காலம் நாட்டை விட்டுப் பிரிந்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட பண்டிட் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மா 1930ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் காலமானார். தேசபக்தரின் மரணச் செய்தியை வெளியில் தெரியாமல் வைத்திருக்க ஆங்கில அரசு முயற்சி செய்தது. ஆனாலும் செய்தி கசிந்து லாகூர் சிறையில் தூக்குத் தண்டனைக்காக காத்துகொண்டு இருந்த பகத்சிங் மற்றும் அவர் தோழர்களும், திலகர் தொடங்கிய மராத்தா போன்ற பத்திரிகைகளும் அவரின் புகழைப் பேசி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

வாழ்நாளின் பெரும்பகுதியை வெளிநாட்டில் கழிந்த கிருஷ்ண வர்மா தனது அஸ்தியும், தன் மனைவி பானுமதியின் அஸ்தியும் பாரதம் சுதந்திரம் அடைந்த பிறகு பாரத நாட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கேதான் கரைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்து, நூறாண்டுகளுக்கு அவர்கள் அஸ்தியை ஜெனீவாவில் உள்ள தூய ஜார்ஜ் கல்லறைத் தோட்டத்தில் அதற்கான பணத்தைக் கொடுத்து ஏற்பாடு செய்திருந்தார்.

1947ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த உடனேயே சகல மரியாதைகளோடும் அவரின் அஸ்தி பாரத நாட்டுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் வரலாற்றை மறைத்து, மாற்றி எழுத முனைப்பாக இருந்த அரசியல்வாதிகளால் அது நடைபெறவில்லை. இறுதியாக 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி அன்றய குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோதி, பண்டிட் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மாவின் அஸ்தியையும் அவர் மனைவி பானுமதியின் அஸ்தியையும் பெற்றுக்கொண்டு பாரதம் வந்தார். மும்பையில் இருந்து அவரின் சொந்த ஊரான மாண்டவி நகருக்கு பெரும் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட அந்த தியாகியின் அஸ்தி கிராந்தி தீர்த் என்ற நினைவிடத்தில் மரியாதையோடு வைக்கப்பட்டு உள்ளது. லண்டன் நகரில் உள்ள இந்தியா ஹவுஸ்  நினைவிடம் உருவாக்கப்பட்டு உள்ளது. கட்ச் நகரில் அருகே உருவான புது நகரம் ஷ்யாமாஜி கிருஷ்ணவர்மா நகர் என்றும், கட்ச் பல்கலைக்கழகத்திற்கு ஷ்யாமாஜி கிருஷ்ணவர்மாவின் பெயரைச் சூட்டி நாடு அந்தத் தியாகிக்கு மரியாதை செலுத்தியது.

எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாது நாட்டுக்காக தங்களை முழுவதும் அர்ப்பணம் செய்த பல்லாயிரம் தியாகிகளின் உதிரத்தால் கிடைத்தது நமது சுதந்திரம். அதனைக் காப்பாற்றுவதும், நாட்டின் பெருமைக்காக நமது திறமைகளை அர்ப்பணம் செய்வதுதான் அந்தத் தியாகிகளுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும். 

திங்கள், 23 மார்ச், 2020

அரசியல் வானில் ஒரு இளம்தாரகை - ஸ்ம்ரிதி இராணி மார்ச் 23.

எந்த ஒரு நிறுவனமோ, இயக்கமோ அல்லது அரசியல் கட்சியோ நெடுங்காலம் நீடித்து இருப்பதற்கு ஒரு வழிகாட்டும் கொள்கையும் அதனால் ஈடுபட்டு அதில் தன்னை இணைத்துக் கொள்ளும் இளைஞர் பட்டாளமும், அவர்களை வழிகாட்டி அவர்களைத் தலைவர்களாக மாற்றும் மூத்த நிர்வாகிகளும் தேவை. அப்படி ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்திலும் பின்னர் பாரதிய ஜனதா கட்சியிலும் அடுத்த தலைமுறை தலைவர்களில் முக்கியமானவராக விளங்கும் ஸ்ம்ரிதி இராணி அவர்களின் பிறந்தநாள் இன்று


அஜய் குமார் மல்ஹோத்ரா - ஷிபானி பக்ச்சி தம்பதியரின் மூத்த மகளாக ஸ்ம்ரிதி 1976ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் நாள் பிறந்தார். ஸ்ம்ரிதியின் தாத்தா ஒரு ஸ்வயம்சேவக், அவர் தாயார் ஜனசங்கத்தின் உறுப்பினர். எனவே இயல்பாகவே அவருக்கு அரசியல் ஈடுபாடு இருந்ததில் வியப்பில்லை.

சாதாரண மத்தியதர குடும்பத்தில் பிறந்த ஸ்ம்ரிதி, தனது சிறு வயதிலேயே அழகுசாதனப் பொருள்களை விற்பனை செய்து பொருளீட்டத் தொடங்கினார். 1998ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பத்து போட்டியாளர்ககளில் ஒருவராகத் தேர்வானார். அதனைத் தொடர்ந்து திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடிக்க ஸ்ம்ரிதி மும்பை நகருக்கு குடியேறினார்.

ஊச் லா லா லா என்ற தொலைக்காட்சித் தொடரை தொகுத்தளிக்கத் தொடங்கிய ஸ்ம்ரிதி, ஏக்தா கபூர் தயாரித்த குன்கி சாஸ் பி கபி பஹு தி என்ற தொலைக்காட்சித் தொடரில் துளசி விரானி என்ற பாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். இந்தத் தொடரின் வெற்றி அவரை வட மாநிலங்களில் அறியப்பட்ட முகமாக மாற்றியது. அந்தக் காலகட்டத்தில் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஸ்ம்ரிதி தயாரித்து வழங்கினார்.

2003ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த ஸ்ம்ரிதி, அடுத்த ஆண்டே மஹாராஷ்டிரா மாநில இளைஞர் அணியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கபில் சிபிலை எதிர்த்துப் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை.

ஆனால் இந்த தற்காலிகப் பின்னடைவு அவரின் அரசியல் வாழ்வில் ஒரு பகுதி மட்டுமே. தனது தொடர்ந்த உழைப்பினால் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளராகவும், பெண்கள் அணியின் தேசியத்தலைவராகவும் அவரை கட்சி நியமித்தது. 2011ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் சார்பாக ஸ்ம்ரிதி இராணி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் ஸ்ம்ரிதி இராணி களமிறங்கினார்.

1967ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் அதுவரை 14 தேர்தல்கள் நடைபெற்று இருந்தன. அதில் ஒரு முறை ஜனதா கட்சியும், ஒரு முறை பாஜகவும் வெற்றி பெற்று இருந்தது. 12 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இருந்தது. அதிலும் நேரு குடும்பத்தின் சொந்த தொகுதியாக சஞ்சய் காந்தி, ராஜிவ் காந்தி, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் 1980ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக (1988 தேர்தல் தவிர ) அந்தத் தொகுதியில் வெற்றி பெற்று இருந்தனர். ராகுல் காந்தி காங்கிரஸ் வேட்பாளராக இருந்த தொகுதியில் அவரை எதிர்த்து ஸ்ம்ரிதி இராணி போட்டியிட்டார். ஒருலட்ச ஒட்டு வித்தியாசத்தில் ராகுல் அப்போது வெற்றி பெற்றார்.

ஆனால் அடுத்த ஐந்தாண்டு காலகட்டத்தில் ஸ்ம்ரிதி இராணி அந்தத் தொகுதியைச் சுற்றிச் சுற்றி வந்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். 2019ஆம் ஆண்டு மீண்டும் ராகுலை எதிர்த்து அமேதி தொகுதியில் போட்டியிட்டார். வெற்றிபெறுவது கடினம் என்பதை உணர்ந்து கொண்ட ராகுல் கேரளா மாநிலத்தின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். எதிர்பார்த்தது போல ராகுல் காந்தியைவிட ஐம்பத்தைந்தாயிரம் வாக்குகள் அதிகம் பெற்று ஸ்ம்ரிதி அமேதி தொகுதியைக் கைப்பற்றினார்.

2014ஆம் ஆண்டு அமைந்த மோதி தலைமையிலான அரசில் மனிதவள மேம்பாட்டுத்துறை, அதனைத் தொடர்ந்து செய்தித் தொடர்புத் துறையின் கூடுதல் பொறுப்பு, ஜவுளித்துறை ஆகிய துறைகளின் அமைச்சராகவும், 2019ஆம் ஆண்டில் அமைந்த அமைச்சரவையில் ஜவுளிதுறை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகவும் ஸ்ம்ரிதி இராணி பணியாற்றி வருகிறார்.

ஸுபின் இராணி என்ற தொழிலதிபரை மணந்து கொண்ட ஸ்ம்ரிதி இராணிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்திய அரசியல் வானில் 44 வயது என்பது மிக இளைய வயதுதான். இன்னும் நீண்ட கால அரசியல் வாழ்வு ஸ்ம்ரிதி இராணிக்கு உள்ளது என்பதுதான் உண்மை.

பாரத நாட்டின் சேவையில் ஸ்ம்ரிதி இரானியின் பங்கு இன்னும் வீரியமாக இருக்கட்டும் என்று ஒரே இந்தியா தளம் மனமார வாழ்த்துகிறது. 

ஞாயிறு, 22 மார்ச், 2020

தொழிலதிபர் T V சுந்தரம் ஐயங்கார் பிறந்தநாள் - மார்ச் 22

தமிழகத்தின் முக்கியமான டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனர் திரு சுந்தரம் ஐயங்காரின் பிறந்ததினம் இன்று


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி என்ற சிறு கிராமத்தில் 1877ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி பிறந்தவர் திரு சுந்தரம் ஐயங்கார். திருநெல்வேலி ஹிந்து கல்லூரியில் படித்த அவர் சட்டபடிப்பையும் முடித்தார். அதனைத் தொடர்ந்து ரயில்வேயில் குமாஸ்தாவாகவும் பின்னர் வங்கியிலும் பணியாற்றினார். பின்னர் தொழில்துறையில் சுந்தரம் ஐயங்கார் கால்பதித்தார்.

1911ஆம் ஆண்டு தனது நிறுவனத்தை ஆரம்பித்த ஐயங்கார் 1912ஆம் ஆண்டு பஸ் போக்குவரத்தைத் தொடங்கினார். தஞ்சாவூர் - புதுக்கோட்டை வழியில் இவரது முதல் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. பேரம் பேசும் நிலைமையை மாற்றி தூரத்திற்கு ஏற்ப கட்டணம், பயணிகள் கொடுக்கும் பணத்திற்கு ஒப்புகை சீட்டு, குறிப்பிட்ட காலத்தில் கிளம்பி சரியான நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைதல் என்று அந்தக் காலத்திலேயே தரத்தில் கவனம் செலுத்தினார். டிவிஎஸ் நிறுவனத்தின் பேருந்துகள் வருவதை வைத்து கடிகாரத்தின் நேரத்தை சரி செய்துகொள்ளலாம் என்று அன்று பேசுவது இயல்பான ஒன்றாக இருந்தது.

பேருந்து போக்குவரத்தைத் தொடர்ந்து அதோடு தொடர்புடைய பல்வேறு தொழில்களிலும் டிவிஎஸ் நிறுவனம் கால்பதிக்கத் தொடங்கியது. வாகன உதிரிப்பொருள்கள், பெட்ரோல் / டீசல் விநியோகம், டயர் உற்பத்தி என்று விரிவடைந்தது. பின்னர் நாடு சுதந்திரம் அடைந்தபிறகு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்களின் விநியோக உரிமையும் டிவிஎஸ் நிறுவனத்திற்கு கிடைத்தது. எந்தவிதமான சமரசமும் இல்லாத தரக்கட்டுப்பாடு, அரசின் சட்டதிட்டங்களை மீறாத செயல்பாடு, பணிபுரியும் ஊழியர்களை குடும்ப உறுப்பினர்கள் போல நடத்துதல் என்று ஒரு உதாரண நிறுவனமாக டிவிஎஸ் நிறுவனத்தை ஐயங்கார் வார்த்தெடுத்தார். நிறுவனத்தில் கான்டீன் வசதி, தொழிலாளர்களுக்கு குடியிருப்பு, மருத்துவ வசதி, அவர்கள் பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடம் என்று அன்றய காலகட்டத்தில் எந்த தொழிலதிபரும் யோசிக்காத வசதிகளை தங்கள் தொழிலாளிகளுக்கு அவர் ஏற்படுத்திக் கொடுத்தார்.

வாகன விநியோகத்தில் ஈடுபட்ட நிறுவனம், தங்கள் வாகனங்களை விற்பனை செய்ய சுந்தரம் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தையும் உருவாக்கியது. இன்று வாகன கடன் வழங்குவதில் சுந்தரம் பைனான்ஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது. அரசு தனியார் போக்குவரத்தை அரசுமயமாக்கியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் நிறுவப்பட்டது. வீல்ஸ் இந்தியா, சுந்தரம் கிளேட்டன், டிவிஎஸ் மோட்டார்ஸ்,  என்று பல்வேறு நிறுவங்களாக அவை உருவெடுத்தன.

தாங்கள் தயாரிக்கும் பொருள்களின் தரத்திற்காக சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த நிறுவனங்கள் பல்வேறு உதிரிப்பாகங்களை ஏற்றுமதியும் செய்து வருகின்றன. டிவிஎஸ் குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் தரக் கட்டுபாட்டுக்கான டெமிங் தர விருதையும் பெற்றுள்ளன. இன்று ஏறத்தாழ 60,000கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு 8.5 பில்லியன் அமெரிக்கா டாலர் வியாபாரத்தை டிவிஎஸ் குழுமம் செய்து வருகிறது.

சுந்தரம் ஐயங்கார் அவர்களுக்கு ஐந்து மகன்களும் மூன்று மகள்களும் உண்டு. முற்போக்கு சிந்தனையாளராகவும், காந்தியைப் பின்பற்றுபவராகவும் சுந்தரம் ஐயங்கார் இருந்தார். சிறுவயதில் விதவையான தனது மகள் சௌந்தரம் அவர்களுக்கு ராமச்சந்திரன் என்பவருக்கு மறுமணம் செய்து வைத்தார், காந்திகிராம கிராமப்புற பல்கலைக்கழகத்தை நிறுவியவர்கள் இந்த தம்பதியினரே. 1955ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் நாள் சுந்தரம் ஐயங்கார் காலமானார்.

தமிழகத்தின் தொழில்வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த திரு சுந்தரம் ஐயங்கார் அவர்களின் பிறந்ததினத்தில் அவரை ஒரே இந்தியா செய்தித்தளம் போற்றி வணங்குகிறது. 

சனி, 21 மார்ச், 2020

மார்ச் 21 - ஷெனாய் மேதை பிஸ்மில்லாஹ்கான் பிறந்தநாள்

பாரதம்  ஒரு விசித்திரமான தேசம். ஏறத்தாழ இருநூறாண்டு கால ஆங்கிலேயர் ஆட்சிக்குப்பின் சுதந்திரம் அடையும்போது இந்த நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இங்கே பெரும்பான்மையாக உள்ள ஹிந்துக்களோடு இணைந்து வாழ  முடியாது என்று எண்ணிய இஸ்லாமியர்களுக்காக பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவானது. பிரிவினை பல லட்சம் மக்களைக் கொன்று, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடி அதன்மேலே  இரண்டு நாடுகள் உருவானது.

ஆனாலும் இந்தநாட்டின்மீது நம்பிக்கை கொண்டு பல லட்சம் இஸ்லாமியர்கள் இந்தியாவிலேயே தங்கிவிட்டனர். அப்படி தங்கிய இஸ்லாமியர் ஒருவர்தான் இந்தியாவின் சுதந்திரநாள் அன்றும் இந்தியா குடியரசாக மலர்ந்த நாளன்றும் மங்கள வாத்தியம் இசைத்து வலிமையான பாரதத்தை வரவேற்று வாழ்த்தினார் என்பதும் அந்த மகத்தான கௌரவத்தை அவருக்கு இந்த நாடு அளித்தது என்பதும் யாரையும் நெகிழவைக்கும் ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகும். அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் புகழ்பெற்ற ஷெனாய் இசைக்கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லாகான் அவர்கள்.

இன்றய பிஹார் மாநிலத்தில் உள்ள தூம்ரான் மாவட்டத்தில் பாரம்பரியமான ஒரு இஸ்லாமிய இசைக்குடும்பத்தில் 1916ஆம் ஆண்டு பிஸ்மில்லாகான் பிறந்தார். இவரது பெற்றோர்கள் இவருக்கு கமருதீன் என்றுதான் பெயர் சூட்ட இருந்தார்கள். ஆனால் இவரது தாத்தா ரசூல் பாக்ஸ்கான் குழந்தையைப் பார்த்த பொழுதில் பிஸ்மில்லாஹ் ( அல்லாஹ்வின் திருப்பெயரால் ) என்று மகிழ்ச்சியோடு கூவினார். அதனால் பிஸ்மில்லாஹ்கான் என்றே இவர் அழைக்கப்பட்டார்.

தனது ஆறாவது வயதிலேயே காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ஷெனாய் வித்வானாக இருந்த தனது தாய்மாமா அலி பக்ஷிகானிடம் இவர் தனது இசைப் பயிற்சியைத் தொடங்கினார். தனது இசை காசி விஸ்வநாதரின் அருள் என்பதில் பிஸ்மில்லாஹ்கான் உறுதியான நம்பிக்கை கொண்டுஇருந்தார். ஷெனாய் வாத்தியத்திற்கு இவரால் உலகப்புகழ் கிடைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

மத்தியபிரதேச அரசின் தான்சேன் விருது, சங்கீத நாடக அக்காதெமி விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை இவர் பெற்றார். இவை எல்லாவற்றிக்கும் மகுடம் வைத்தது போல 2001ஆம் ஆண்டு இந்திய அரசு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத்ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது.

சங்கீத நாடக அக்காதெமி இவர்பெயரால் உஸ்தாத் பிஸ்மில்லாஹ்கான் யுவபுரஸ்கார் என்ற விருதை 2007 ஆண்டு நிறுவியது. கலையுலகின் வளர்ந்துவரும்  இளம்கலைஞர்களுக்கான விருது இது.

காசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகமும், வங்காளத்தின் விஸ்வபாரதி பல்கலைக்கழகமும் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்துள்ளன.
முதுமையால் நோயுற்று இருந்த உஸ்தாத் பிஸ்மில்லாஹ்கான் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் நாள் காலமானார். இந்திய ராணுவத்தின் 21 குண்டு முழங்க இவரது நல்லடக்கம் நடைபெற்றது. இந்திய அரசு ஒருநாள் துக்கம் அனுஷ்டித்து. இவரது ஷெனாய் வாத்தியமும் இவர் உடலோடு புதைக்கப்பட்டது.

தனது இசையால் இந்த உலகத்தை மகிழ்வித்த உஸ்தாத் மறுஉலகிலும் தனது இசையால் புகழ்பெற்று இருப்பார்.

வியாழன், 19 மார்ச், 2020

மார்ச் 19 - இசையரசி டி.கே. பட்டம்மாள் பிறந்ததினம்

தமிழகத்தின் புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் திருமதி டி கே பட்டம்மாள் அவர்களின் பிறந்ததினம் இன்று.

காஞ்சீபுரத்தைச் சார்ந்த தாமல் கிருஷ்ணஸ்வாமி தீக்ஷிதருக்கும் காந்திமதி என்பவருக்கும் மகளாக பட்டம்மாள் 1919ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்கள் இருவருமே கர்நாடக இசை பயின்றவர்கள். மிகச் சிறு வயதிலேயே கேட்கின்ற பாடல்களைப் பாடும் திறமை இவருக்கு இருந்தது.

தனது பத்தாவது வயதிலேயே இவர் அன்றய சென்னை வானொலியில் தனது முதல் நிகழ்ச்சியை அரங்கேற்றினார். தனது பதின்மூன்றாம் வயதில் சென்னையில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் முழுமையான கச்சேரியை நடத்தினார். இசை பயிலவும், இசையுலகில் முன்னேறவும் இவர் பெற்றோர்கள் காஞ்சீபுரத்தில் இருந்து சென்னைக்கு குடியேறினர். சென்னை மட்டுமல்லாது நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களில் இவரது நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்தனர்.

அன்றய காலகட்டத்தில் ப்ராமண சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் பொதுமேடைகளில் ஆடவோ பாடவோ மாட்டார்கள். அதனை மாற்றி பரதநாட்டியத்தில் ருக்மணிதேவி அருண்டேல் போல சங்கீத மேடைகளில் முதலில் ஏறியவர் திருமதி பட்டம்மா அவர்கள்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய பாடல்கள் பல இவரால் பாடப்பட்டு பிரபலமானது. திருப்புகழ், தேவாரம் ஆகியவற்றை முறையாகக் கற்றுத்தேர்ந்து அவைகளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் பாடினார். புகழ்பெற்ற சாகித்யகர்த்தா பாபநாசம் சிவன் அவர்களிடம் இருந்து நேரடியாகப் பயின்று அவரது பாடல்களையும், மஹாகவி சுப்ரமணிய பாரதியார் பாடல்களையும் இவர் பெருமளவில் பரப்பினார். பயில்வதற்கு பாடுவதற்கும் கடினமான ராகம் தாளம் பல்லவி என்பதில் திறமைவாய்ந்தவராக இருந்ததால் இவர் பல்லவி பட்டம்மாள் என்று அழைக்கப் பட்டார்.

1940களில் பல்வேறு கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் தேசபக்திப் பாடல்களை, குறிப்பாக பாரதியார் பாடல்களை, அதிக அளவில் பாடிவந்தார். தீரர் சத்தியமூர்த்தி, ராஜாஜி, திரு.வி.க போன்ற தலைவர்கள் இவரை ”அதிகமாக தேசபக்திப் பாடல்களைப் பாட வேண்டாம். பெண்ணென்றும் பாராமல் வெள்ளையரசு சிறை வைத்துவிட்டால் என்ன செய்வாய்” என்று எச்சரித்தனர். ஆனாலும் விடாமல் தேசபக்திப் பாடல்களை மேடை தோறும் பாடிவந்தார்.

பல்வேறு திரைப்படங்களில் தேசபக்தி பாடல்களையும் ஆன்மீகப் பாடல்களையும் இவர் பாடி உள்ளார். AVM நிறுவனம் தயாரித்த படங்களில் பாரத சமுதாயம் வாழ்கவே, ஆடுவோமே பள்ளு பாடுவோமே, வெற்றி எட்டுத் திக்கும் என கொட்டு முரசே போன்ற பாரதியார் பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.

நம் நாடு விடுதலை அடைந்த 1947 ஆகஸ்டு பதினைந்து அன்று அதிகாலை (நள்ளிரவு) 12 மணிக்கு விடுதலை அறிவிப்பு வந்த பிறகு, நேருவின் பேச்சு முடிந்தவுடன் வானொலி நிலையத்தார் பட்டம்மாள் அவர்களை “ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே” பாடலைப் பாடச் செய்தனர்.

இவரது மேதைமையைப் பாராட்டி இவருக்கு சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி, கான சரஸ்வதி ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் பட்டத்தை அளித்து சிறப்பித்தது.

2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் நாள் இவர் சென்னையில் காலமானார். 

செவ்வாய், 17 மார்ச், 2020

விண்வெளி வீர மங்கை - கல்பனா சாவ்லா - மார்ச் 17

மனிதகுலம் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதலே விண்வெளியும், அதில் பறப்பதும் மனிதனுக்கு கிளர்ச்சியூட்டும் கனவாகவே இருந்து வந்துள்ளது. விண்வெளியில் கால்பதித்த முதல் பாரத பெண்மணி என்ற பெருமைக்கு சொந்தக்காரரான கல்பனா சாவ்லாவின் பிறந்ததினம் இன்று.  


மேற்கு பஞ்சாபில் ( இன்றய பாகிஸ்தான் ) முல்தான் பகுதியைச் சார்ந்த பனாரசிலால் சாவ்லா நாட்டின் பிரிவினையின் போது இன்றய ஹரியானா மாநிலத்திற்கு குடிபெயர்ந்தார். தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த அவர் பல்வேறு சிறு தொழில்களைச் செய்து வந்தார். சவாலான ஒரு காலகட்டத்தை அந்தக் குடும்பம் கடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நான்கு குழந்தைகளில் இளையவராக 1962ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் நாள் கல்பனா பிறந்தார். 

சிறுவயதிலிருந்தே படிப்பிலும், ஓவியம் வரைவதிலும், நடனமாடுவதிலும் சிறந்து விளங்கினார் கல்பனா. மொட்டை மாடியில் அமர்ந்தவாறு வானத்தைப் பார்த்துக்கொண்டு இருப்பதிலும், விண்மீன்களை எண்ணுவதும் அவரின் முக்கியமான பொழுதுபோக்காக இருந்தது. பள்ளிப்படிப்பை முடித்த கல்பனா 1982ஆம் ஆண்டு சண்டிகர் நகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் வான்வெளிப் பொறியியல் ( Aeronautical Engineering ) துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அன்று இந்தத் துறையில் சேர்ந்த ஒரே பெண் மாணவி கல்பனாதான். அதனைத் தொடர்ந்து மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1986ல் கொலராடோ பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முதுகலைப் பட்டமும், பிறகு 1988ல் வெண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.

கல்பனாவின் கனவு விண்வெளிப் பயணம்தான். 1995 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா, கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87இல் பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். பதினைந்து நாட்கள்  252 முறை பூமியைச் சுற்றி ஒரு கோடிக்கும் அதிகமான கிலோமீட்டர் பயணம் என்று விண்வெளியில் பறந்த முதல் பாரதப் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார். 

2003ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 அனுப்பி வைக்கப்பட்டது.கல்பனா உள்பட ஏழு விண்வெளி வீரர்கள் பல்வேறு ஆராய்ச்சிக்காக இந்த விண்கலத்தில் பயணம் செய்தனர். 16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பிப்ரவரி 1ஆம் தேதி பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது அமெரிக்காவின் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச் சிதறியது. இதில் கல்பனா சாவ்லா உட்பட 7 விண்வெளி வீரர்களும் பலியாகினர். 

பிரதமர் வாஜ்பாய் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது, அவர் பார்க்க விரும்பிய முக்கியமானவர்களில் ஒருவர் கல்பனா சாவ்லா. 
விண்ணில் இருந்து பார்த்தால் பாரதத்தின் கங்கை நதியும், இமயமலையும் எவ்வளவு அழகாகத் தெரிந்தது என்று கல்பனா பிரதமரிடம் குதூகலமாகக் கூறினார்.  

ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, விண்வெளியில் மிதந்து பாரத மக்களின் விடா முயற்சியை, எந்த சவாலையும் எதிர்கொள்ளும் நெஞ்சுரத்தை உலகெங்கும் பறைசாற்றிய கல்பனா சாவ்லாவின் இறப்பு என்பது பாரத நாட்டின் தேசிய துயரமாக அனுசரிக்கப்பட்டது. 

பாரதம் விண்ணில் ஏவிய வானிலை ஆராய்ச்சி செயற்கைக்கோளுக்கு கல்பனா என்ற பெயர் சூட்டப்பட்டது. பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் பெண்கள் விடுதி, ஹரியானா மாநிலத்தின் குருஷேத்திரா நகரில் அமைந்துள்ள கோளரங்கம், எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம், வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மௌலானா அபுல்கலாம் ஆஜாத் தொழ்ல்நுட்ப பல்கலைக்கழகம் என்று பல்வேறு கல்வி நிலையங்களின் மாணவ விடுதிகள் இன்று கல்பனா சாவ்லாவின் பெயரில் அழைக்கப்படுகின்றன. பாரதத்திலும், அமெரிக்காவிலும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் அவர் பெயரில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் சிறப்புப் பரிசுகளை வழங்குகின்றன. 

வீர தீர சாகசச் செயல்களைப் புரியும் பெண்களுக்கான பரிசு கல்பனா சாவ்லா பெயரில் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. 


இன்னும் பல ஆண்டுகளுக்கு பாரதநாட்டின் பெண்களுக்கு கல்பனா சாவ்லாவின் வாழ்வு உத்வேகம் தருவதாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை 

சனி, 14 மார்ச், 2020

கலம் செய் கோவே கலம் செய் கோவே

வாழ்க்கை ஒரு கொண்டாட்டம், இறப்பும் ஒரு கொண்டாட்டம்தான், ஏன்னென்றால் நமது சிந்தனைப் போக்கில் இறப்பு என்பது முற்றுப்புள்ளி அல்ல, அது பிறப்பு இறப்பு என்ற சுழற்சியில் ஒரு கால்புள்ளிதான். அதனால் தான் இன்றும் " இது பெரிய சாவு, எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்ற பேச்சு இயல்பாக பேசப்படுகிறது.

ஒரே நிகழ்வு, ஒரு சாவு, ஒரே போன்ற துயரம், அதனால் ஒரே போன்ற கோரிக்கை. அதிலும் ஓன்று போலவே தொடங்கும் இரண்டு பாடல்கள், இரண்டும் மரணத்தைப் பற்றிப் பேசுகிறது


தலைவன் இறந்து விடுகிறான். அநேகமாக போரில்தான் அவன் இறந்தது போய் இருக்கவேண்டும். அவனுக்கான இறுதிச் சடங்குகள் தொடங்கப் போகின்றது. அன்றய பழக்கத்தில் அவனை மண்ணில் புதைக்க ஈமத்தாழி செய்யவேண்டும். அதற்காக குயவர்கள் கூடி உள்ளார்கள். அவனை வைக்கும் ஈமத்தாழியை பெரிதாக வனை என்று இரண்டு பேர் சொல்கிறார்கள். ஓன்று இறந்தவனின் மனைவி, மற்றது அவனால்ஆதரிக்கப்பட்ட புலவன்

வண்டிச்சக்கரத்தில் உள்ள பல்லிபோல என் வாழ்க்கை அவனை மட்டுமே சுற்றி வந்துள்ளது. அவனில்லாமல் நான் என்ன செய்யப் போகிறேன், அதனால் என்னையும் உடன் வைத்துப் புதைக்கும் அளவுக்கு பெரியதாக ஒரு தாழியை செய்து கொடு என்று தலைவி கூறும் புறநானூற்றுப் பாடல்  ( 256 )ஓன்று.

கலம் செய் கோவே! கலம் செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறு வெண் பல்லி போலத் தன்னொடு
சுரம் பல வந்த எமக்கும் அருளி,
வியல் மலர் அகன் பொழில் ஈமத் தாழி
அகலிதாக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம் செய் கோவே!

தலைவனின் பெருமையை புலவர் பாடத் தொடங்குகிறார். எப்படிப்பட்ட தலைவன் இவன் தெரியுமா ? நிலப்பரப்பு முழுவதும் பரந்து விரிந்த படையின் தலைவன் இவன், புலவர்கள் பாடும் பொய்யே இல்லாத புகழ் பெற்றவன், புகழில் வானில் கதிர் வீசி ஒளிரும் ஆதித்யனுக்கு சமமானவன், செம்பியன் ( சோழ ) குலத்தில் பிறந்தவன். யானையின் மீது வலம் வரும் நெடுமாவளவன் இவன். இன்று இவன் அமரர் உலகம் சென்றுவிட்டான்,

இருள் கவ்வுவது போல புகையை எழுப்பி நீ இவனுக்கு ஈமத்தாழி செய்யத் தொடங்கி இருக்கிறாயே, இவன் புகழுக்கு ஏற்ற அளவில் தாழி செய்யவேண்டுமென்றால் இந்த நிலம் அளவுக்கு சக்கரம் செய்து, மலையளவு மண்ணை வைத்தல்லவா செய்ய வேண்டும். அதனை பெரிய தாழியை, ஈமத்தாழி செய்யும் கோமகனே ! உன்னால் செய்ய முடியுமா ? முடிந்தால் அத்தனை பெரிய தாழியை செய் என்று கூறும் புறநானூற்றுப் பாடல் (228) மற்றொன்று.


கலம் செய் கோவே! கலம் செய் கோவே!
இருள் திணிந்தன்ன குரூஉத் திரள் பரூஉப் புகை
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை,
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே!

அளியை நீயே; யாங்கு ஆகுவைகொல்?
நிலவரை சூட்டிய நீள் நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை,
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன
சேண் விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்
கொடி நுடங்கு யானை நெடுமா வளவன்
தேவர் உலகம் எய்தினன்ஆதலின்,

 அன்னோற் கவிக்கும் கண் அகன் தாழி
வனைதல் வேட்டனைஆயின், எனையதூஉம்
இரு நிலம் திகிரியா, பெரு மலை

மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே?

புகழுக்கு ஏற்ற அளவில் ஈமத் தாழி என்றால் நமக்கான ஈமத் தாழியின் அளவென்ன இருக்கும் என்று யோசிக்க வேண்டாமா ? 

பகத்சிங்கின் மனைவி - துர்காவதி தேவி - அக்டோபர் 7

லாகூர் புகைவண்டி நிலையத்திற்கு நேர்த்தியாக உடையணிந்த ஒரு கனவான் அவரது மனைவியோடு வந்தார். மனைவியின் கையில் ஒரு சிறு ஆண் குழந்தை. அவர்களோடு அவர்களின் வேலையாளும் கூட வந்தார். மூவருக்குமான பயணச்சீட்டை வாங்கிக்கொண்டு அந்த கணவானும் அவர் குடும்பமும் முதல்வகுப்பு பெட்டியில் ஏறிக்கொண்டனர். அவரது வேலையாள் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தார். கான்பூரில் அவர்கள் இறங்கி வேறு ஒரு புகைவண்டியில் லக்னோ சென்றனர். லக்னோ நகரில் அந்த வேலையாள் அந்தக் குடும்பத்தைப் பிரிந்து வாரனாசிக்குச் சென்றுவிட்டார். கனவானும் அவரது குடும்பமும் அங்கிருந்து ஹௌரா நகருக்குச் சென்றனர். சில காலம் கழித்து அந்தப் பெண்மணி மட்டும் தன் மகனோடு லாகூர் திரும்பினார்.

சாதாரணமான நிகழ்ச்சியாகத்தான் தோன்றுகிறது, அப்படித்தானே. ஆனால் பயணம் செய்த அந்த கனவான் பகத்சிங், அவரது வேலையாள் ராஜகுரு. காவல் அதிகாரி சாண்ட்ராஸ் படுகொலையை அடுத்து ஆங்கில அரசு வலைவீசித் தேடிக்கொண்டு இருந்த குற்றவாளிகள் அவர்கள். நாம்  அறிந்த பகத்சிங் திருமணம் ஆகாதவர். அப்படியானால் அந்தப் பெண்மணி யார் ? அவருக்கும் பகத்சிங்குக்கும் என்ன தொடர்பு ?


எட்டும் அறிவினில் மட்டுமல்ல வீரத்திலும், தியாகத்திலும் ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று வாழ்ந்து காட்டிய பாரத நாரிமணிகளின் வரிசையில் ஒளிவீசும் தாரகையாகத் திகழ்பவர் அந்தப் பெண்மணி. அவர் பெயர் துர்காவதி தேவி, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு  துர்கா பாபி அதாவது அண்ணி துர்காதேவி. இந்த நாட்டில் மறக்கடிக்கப்பட்ட தியாகிகளில் மிக முக்கியமானவர் துர்காவதி தேவி. மிகப் பெரிய செயல்களைச் செய்து விட்டு, எந்த பலனையும், எந்த அங்கீகாரத்தையும் எதிர்பாராமல் வாழ்ந்து மறைந்த மகோன்னதமான பெண்மணி அவர்.

1907ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி பிறந்தவர் துர்காதேவி அவர்கள். சிறுவயதிலேயே தனது தாயை இழந்து அதனால் உறவினர்களால் வளர்க்கப்பட்டவர். அன்றய காலசூழ்நிலையில் தனது பதினொன்றாம் வயதில் லாகூர் நகரைச் சார்ந்த பகவதி சரண் வோரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பகவதி சரண் வோராவும் மிகப் பெரும் தேசபக்தர், சிந்தனையாளர், புரட்சியாளர். நவ்ஜவான் பாரத் சபா மற்றும் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் அஸோஸியேஷன் என்ற புரட்சியாளர்கள் குழுவின் செயலாளராக இருந்து, அந்த புரட்சிப் பாதையின் கொள்கை விளக்க பிரகடனத்தை உருவாக்கியவர் திரு வோரா அவர்கள்.

காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து என்று வோராவின் போராட்டத்திற்கு துர்காதேவி உறுதுணையாக இருந்தார். புரட்சியாளர் கர்டார் சிங்கின் பதினோராவது பலிதான தினத்தை லாகூர் நகரில் கொண்டாடியது, லாகூர் சிறையில் அறுபத்திமூன்று நாட்கள் உண்னாவிரதம் இருந்து உயிர் நீத்த ஜதீந்திரநாத் தாஸின் இறுதி ஊர்வலத்தை லாகூர் நகரில் இருந்து கொல்கத்தா நகர் வரை தலைமையேற்று நடத்தியது என்று துர்காதேவி பல்வேறு போராட்ட களங்களில் செயல்பட்டார்.

சைமன் கமிஷனை புறக்கணித்து லாகூர் நகரில் நடைபெற்ற ஊர்வலத்தை தலைமையேற்று நடத்திய லாலா லஜபதி ராயை ஆங்கில காவலர்கள் தாக்கினர். படுகாயமுற்ற லாலா லஜபதி ராய் சிலநாட்களில் உயிர் துறந்தார். தலைவரின் மரணத்திற்கு பதிலடியாக காவல் அதிகாரி சாண்ட்ரஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை நிகழ்த்தியது ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் அஸோஸியேஷன. இதைச் செய்தது பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர்.

இருபத்தி ஏழு வயதான சீக்கிய இளைஞனை ஆங்கில அரசு தேட ஆரம்பித்தது. லாகூரில் இருந்து தப்பித்து கொல்கொத்தா செல்ல புரட்சியாளர்கள் முடிவு செய்தனர். ஆனால் ஆங்கில அரசிடம் மாட்டாமல் எப்படி தப்பிக்க ? அப்போதுதான் உதவிக்கு துர்காதேவி வந்தார். பகத்சிங்கின் மனைவியாக சென்றது துர்காதேவிதான். அன்றய காலகட்டத்தில் ( ஏன் இன்றும் கூட )  இன்னொரு ஆண்மகனின் மனைவியாக நடிக்க எந்த அளவு தியாக சிந்தனை இருக்கவேண்டும் என்பதை இன்றும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. பாதுகாப்பாக புரட்சியாளர்களைத் தப்ப வைத்துவிட்டு அதன் பின்னர் துர்காதேவி மீண்டும் லாகூர் திரும்பினார்.

லாலா லஜபதி ராயின் மரணத்திற்குப் பழிவாங்கிய பிறகு சிறிது காலம் தலைமறைவாக இருந்த புரட்சியாளர்கள் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வெடிகுண்டு வீச முடிவு செய்தனர். படுகேஸ்வர்தத்துடன் இந்த சாகசத்தை மேற்கொள்ள பகத்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். காது கேட்காத அரசுக்கு எங்கள் பேச்சு புரிவதில்லை, எனவே சத்தமாக பேசுவோம் என்று புரட்சியார்கள் தீர்மானித்தார்கள். நாடாளுமன்றத்தில் குண்டு வீசி, துண்டுப் பிரசுரங்களை விட்டெறிந்து இன்குலாப் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பி படுகேஸ்வர் தத்தும் பகத்சிங்கும் கைதானார்கள்.

சர்வ நிச்சயமாக அவர்கள் தூக்கிலிப்படுவார்கள் என்பது புரட்சியாளர்களுக்குத் தெரியும். இதற்கு எதிர்வினையாக வைஸ்ராய் இர்வின் பயணம் செய்யும் ரயில் வண்டியை வெடிகுண்டு வைத்துக் கவிழ்க்க துர்காதேவியின் கணவர் பகவதி சரண் வோரா முயற்சி செய்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக இர்வின் உயிர் தப்பினார். இர்வின் உயிர் தப்பியதற்கு ஆண்டவனுக்கு நன்றி தெரிவித்து புரட்சியாளர்களைக் கண்டித்து காந்தி வெடிகுண்டுகளை வழிபடுதல் ( The Cult of Bomb ) என்ற கட்டுரையை எழுதினார்.

இந்த கட்டுரைக்கு பதிலாக வெடிகுண்டுகளின் தத்துவம் ( Philosophy of Bomb ) என்ற கட்டுரையை பகவதி சரண்வோரா எழுதினார். " பாரதத்திற்கு மீது ஆங்கிலேய அரசு இழைக்காத குற்றம் என்பது எதுவுமே இல்லை, திட்டமிட்ட முறையில் ஆங்கில அரசு பாரதத்தை ஓட்டாண்டியாக மாற்றி உள்ளது. ஒரு இனமாகவும் பொது மக்களாகவும் இந்த அநீதியை நாங்கள் மறக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை. சர்வ நிச்சயமாக நாங்கள் பழி தீர்ப்போம். சர்வாதிகாரத்திற்கு எதிராக பழி தீர்ப்பது என்பது மக்களின் கடமை. கோழைகள் பின்வாங்கி சமாதானத்தையும் அமைதியையும் யாசிக்கட்டும். ஆனால் நாங்கள் எங்களுக்கு கருணையே அல்லது மன்னிப்போ தேவை இல்லை, அதை நாங்கள் கேட்கவும் இல்லை. நாங்கள் நடத்துவது போர் - அதற்கு வெற்றி அல்லது வீர மரணம் என்பதுதான் முடிவாக இருக்கும்" என்று அவர் முழங்கினார்.

சிறையில் இருந்த புரட்சியாளர்களை விடுவிக்க சிறை வளாகத்தில் வெடிகுண்டு வீச வோரா முடிவு செய்தார். ஆனால் குண்டு தயாரிக்கும் முயற்சியில் துரதிஷ்டவசமாக அந்த வெடிகுண்டு வெடித்து வோரா மரணமடைந்தார். கணவர் இறந்த துயரத்தில் இருக்கக் கூட துர்காதேவிக்கு நேரம் இருக்கவில்லை. யாருக்கும் தெரியாமல் கணவரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு மீண்டும் பகத்சிங்கையும் மற்ற புரட்சியாளர்களையும் காப்பாற்றும் முயற்சியில் அவர் ஈடுபடலானார். கையெழுத்து இயக்கம், வழக்கு நடத்த பணம் வசூலித்தல், காந்தி உள்பட பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசுதல் என்று பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார்.

1932ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துர்காதேவி ஆங்கில காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவரது செயல்பாடுகள் காவல்துறைக்கு முழுவதும் தெரியாததால் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனைதான் அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் சென்னைக்கு வந்த துர்காதேவி சிறு குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் முறையைக் கற்றுக் கொண்டு காஜியாபாத்திலும் பின்னர் லக்னோ நகரிலும் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, ஒரு சாதாரண பெண்மணி போல மற்றவர்கள் அறியாமல் வாழ்ந்து தனது 92ஆம் வயதில் 1999ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி துர்காதேவி பாரதமாதாவின் காலடியில் கலந்தார்.

புகழ்பெறவேண்டும் என்றோ மக்கள் பாராட்ட வேண்டும் என்றோ தியாகிகள் நாட்டுக்காக உழைப்பதில்லை. அது ஸ்வதர்மம் என்று எண்ணியே அவர்கள் உழைக்கிறார்கள். அவர்களைப் போற்றுவதும், அவர்களின் தியாகத்தை நினைவில் கொள்வதும் நம்மையும் அவர்கள் நடந்த பாதையில் நடக்கும் சக்தியைக் கொடுக்கும்.

பாரத நாட்டின் புகழ்பெற்ற தியாகிகள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள். 

வெள்ளி, 13 மார்ச், 2020

திவாலாகிறாரா அம்பானி ?


பங்குச்சந்தையில் ரத்தக் களரி. அநேகமாக எல்லா நிறுவனங்களின் பங்குகளும் விலை குறைந்து கொண்டே போகிறது. பிரதமர் மோதியின் செல்லப் பிள்ளைகள் என்று இதுவரை போராளிகளால் தூற்றப்பட்ட அம்பானி மற்றும் அதானியின் நிறுவனங்களின் பங்குகளும் விலை குறைந்துள்ளன. அவர்கள் திவாலாகப் போகிறார்கள், அவர்களையே இந்த அரசு காப்பாற்ற முடியவில்லை என்று வழக்கம் போல நமது போராளிகள் கூக்குரல் போடத் தொடங்கி இருக்கிறார்கள்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்தப் பங்குகள் ஏறத்தாழ 634 கோடி. அதில் 49% பங்குகள் அம்பானியின் வசம் உள்ளது. அதாவது 300 கோடிக்கும் சற்று அதிகமான பங்குகள் அவர் வசம் உள்ளது. அம்பானியின் சொத்து மதிப்பு என்பது அன்றய தினம் ஒரு பங்கின் மதிப்பை 300 கோடியால் பெருகினால் வரும் தொகைதான்.

கடந்த 52 வார காலத்தில் 1,600 ரூபாய் அளவில் விற்பனையான பங்கு இன்று 1,060 ரூபாய்க்கு கிடைக்கிறது. எனவே அம்பானியின் சொத்து மதிப்பு மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது என்று போராளிகள் சொல்கிறார்கள்.

நேற்றுவரை பாரத நாட்டுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருந்த அம்பானி ( அதானியும் ) ஓட்டாண்டியானால் இவர்களுக்கு என்ன பிரச்னை ? எதற்கு இப்படியான பெரும் பணக்காரர்களுக்கு இவர்கள் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள் ?

வேறு ஒன்றும் இல்லை, மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் விதவையானால் போதும் என்ற பரந்த மனப்பான்மையின் விளைவுதான் இது.

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா என்று காகிதத்தில் எழுதி நக்கிப் பார்த்தால் அது இனிக்காது. அதை அங்கே நெல்லையப்பர் கோவில் எதிரில் மாலை ஆறு மணிக்கு மேலே வரிசையில் இன்று வாங்கி சாப்பிட்டுப் பார்த்தால்தான் அதன் சுவை தெரியும்.

அதுபோல பங்கு மதிப்பை கைவசம் உள்ள பங்குகளின் எண்ணிக்கை கொண்டு பெருக்கி சொத்து மதிப்பை கணக்கிடுவது சிறிய முதலீட்டாளர்களுக்கு வேண்டுமானால் சரியாக வரும், பெரும்தொழிலதிபர்களின் சொத்தை அப்படி கணக்கிடுவது சரிவராது.

ஏன்னென்றால் ஒருவேளை பங்கு ஓன்று 1,600 ரூபாய்க்கு விற்பனையான சமயத்தில் தனது 300 கோடி பங்குகளை விற்பனை செய்ய அம்பானி முடிவு செய்தால், உடனடியாக பங்கின் விலை அதள பாதாளத்தில் விழுந்து விடும்.

நாம் வைத்திருக்கும் நூறு அல்லது இருநூறு பங்குகளை விற்பதால் எந்த நிறுவன பங்கின் விலையும் பெரிய அளவில் மாறாது, ஆனால் பெரிய அளவில் பங்குகள் விற்பனைக்கு வந்தால் விலை வீழ்ச்சி அடையும் என்பது பொருளாதாரத்தின் பால பாடம்.

தொழில்செய்பவருக்கு லாபம் மிக அவசியம், ஆனால் தொழில் நடத்துவதில் உள்ள சவால்தான் பணத்தைக் காட்டிலும் அவர்களை தூண்டுவது.

ஆகவே போராளிகளே ! அம்பானியும், அதானியும் அவர்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள். உங்கள் வேலையை மட்டும் நீங்கள் செய்தால் போதும்.

https://www.ril.com/ar2018-19/ril-annual-report-2019.pdf

2018 - 19ஆம் ஆண்டுக்கான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையை இதோடு இணைத்து இருக்கிறேன். படித்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்யவும். 

சனி, 7 மார்ச், 2020

கேப்டன் கெய்ஷிங் கிளிபோர்ட் நான்க்ராம் பிறந்தநாள் - மார்ச் 7


பாரத நாட்டின் வடகிழக்கு பகுதியில் பிறந்து, தெற்குப் பகுதியில் ராணுவப் பயிற்சி முடித்து வடக்கு எல்லையில் நாட்டைக் காக்க தனது உயிரை தியாகம் செய்த கேப்டன் கெய்ஷிங் கிளிபோர்ட் நான்க்ராம் அவர்களின் பிறந்தநாள் இன்று. 1975ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி பிறந்த இவர், 1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் நாள் கார்கில் போர்முனையில் கேந்த்ர முக்கியத்துவம் வாய்ந்த 4812 என்ற சிகரத்தை தனது உயிரை பலிதானம் செய்து எதிரிகளிடம் இருந்து மீட்டெடுத்தார்.

மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் நகரைச் சார்ந்த திரு கெய்ஷிங் பீட்டர் - சைலி நான்க்ராம் தம்பதியரின் மகன் கேப்டன் கெய்ஷிங் கிளிபோர்ட் நான்க்ராம். தனது பள்ளிப்படிப்பை டான் போஸ்கோ பள்ளியிலும் பின்னர் அரசியல் அறிவியல் துறையில் பட்டப்படிப்பை தூய அந்தோனியார் கல்லூரியிலும் படித்தவர் கேப்டன் கெய்ஷிங். படிக்கும் காலத்திலேயே கால்பந்தாட்டத்திலும், குத்து சண்டையிலும் திறன் பெற்று விளங்கிய கெய்ஷிங் சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்று இந்திய ராணுவத்தில் இணைந்தார்.

பயிற்சியை முடித்த கெய்ஷிங், ஜம்மு காஷ்மீர் காலாள்படைக்கு நியமிக்கப்பட்டார். அவர் ராணுவத்தில் இணைந்த இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே இமயத்தின் உச்சியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டி, எல்லைகளை மீட்டெடுக்கும் கார்கில் போர் தொடங்கியது. இறுதியில் பாரதம் இந்தப் போரில் வெற்றி பெற்றது என்றாலும், அதற்காக நாம் கொடுத்த விலை மிக அதிகம். வீரமும் துணிச்சலும் சாகசமும் நிரம்பிய பல இளைய ராணுவ அதிகாரிகளின் பலிதானத்தால் அந்த வெற்றி ஈட்டப்பட்டது.

1999ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி இரவில் 4812 என்ற சிகரத்தை எதிரிகளிடம் இருந்து மீட்டெடுக்குமாறு கேப்டன் கெய்ஷிங்க்குக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. செங்குத்தான வழியில் ஏறித்தான் மலை உச்சியை அடைய முடியும். அதிலும் அங்கே பதுங்குகுழி அமைத்து எதிரிகள் தங்கி இருந்தனர். எந்தப் போரிலும் மலை உச்சியில் இருப்பவர்களுக்கு அனுகூலங்கள் அதிகம். பதுங்குகுழி என்பதால் விமானத்தின் மூலமான தாக்குதலும் பயன் தராது. மலையின் மீதேறி சென்ற வீரர்களுக்கு ஓன்று மட்டும் நிச்சயமாகத் தெரியும். கட்டாயமாகஉயிரோடு  திரும்பி வரப்போவதில்லை, மூவர்ணக் கொடி போர்த்திய உடலாகத்தான் திரும்புவோம் என்பதில் அவர்கள் யாருக்கும் சந்தேகமே இல்லை. ஆனால் வீரர்கள் மரணத்தைக் கண்டு அஞ்சுவது இல்லை. கெய்ஷிங் தலைமையில் ஒரு சிறு அணி முன்னேறத் தொடங்கியது.

மலைமுகட்டை நோக்கிச் சென்ற வீரர்களை தொடர்ச்சியான துப்பாக்கிக் குண்டுகளும், பீரங்கி குண்டுகளும் வரவேற்றன. மலை உச்சிக்கு அருகே செல்ல பத்து மணி நேரம் ஆனது. தொடர்ந்து வெடிக்கும் குண்டுகளுக்கு சிக்காமல் தரையோடு தரையாக ஊர்ந்து செல்ல வேண்டிய பாதை அது. மலை உச்சிக்கு மிக அருகே இருக்கும் போது, வேறு எந்த போர்முயையும் பயன் தராது நேரடியான போரைத்தான் தொடங்க வேண்டும் என்று கேப்டன் கெய்ஷிங் முடிவெடுத்தார். மழையென பொழியும் குண்டுகளுக்கு நடுவே புகுந்து தனது கையெறி குண்டுகளை வீசி எதிரிகளின் ஒரு பதுங்குகுழியை  அவர் அழித்தொழித்தார். அதோடு அங்கே பதுங்கி இருந்த பாகிஸ்தான் வீரர்களும் மரணம் அடைந்தனர்.

அடுத்த பதுங்குகுழியில் இருந்து வெளியே வந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் கேப்டன் கெய்ஷிங் மீது தாக்குதலைத் தொடங்கினார்கள். இதற்கு நடுவே அவரது வீரர்கள் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி கேந்த்ர முக்கியத்துவம் வாய்ந்த அந்த மலைச்சிகரத்தை தங்கள் வசம் கொண்டு வந்தனர். ஆனால் எதிரிகளின் தொடர்ச்சியான துப்பாக்கி குண்டுகளை தன்மீது வாங்கி கேப்டன் கெய்ஷிங் வீரமரணம் அடைந்தார்.

கேப்டன் கெய்ஷிங் கிளிபோர்ட் நான்க்ராம் அவர்களின் வீரம் இந்தப் போரில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. இருபத்தி நான்கு வயதே நிரம்பிய கேப்டன் கெய்ஷிங் அவர்களுக்கு போர்க்காலத்தில் அளிக்கப்படும் இரண்டாவது மிக உயரிய விருதான மஹாவீர் சக்ரா விருதை வழங்கி நாடு தனது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டது.

தான் ராணுவத்தில் பணியாற்றிய காலத்தில், விடுமுறைக்காக வீடு திரும்பும் கேப்டன்  கெய்ஷிங் தனது பகுதியில் உள்ள கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களை ராணுவத்தில் சேரச் சொல்லி அதற்கான தயாரிப்புகள் பற்றி வகுப்புகள் எடுப்பது வழக்கம். இன்றும் அவரது படையணியைச் சார்ந்தவர்கள் அவர் நினைவாக ஷில்லாங் நகரின் பல கல்வி நிலையங்களில் ராணுவ சேவைக்காக மாணவர்களை ஆற்றுப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

நமது எதிர்காலத்திற்காக தங்கள் நிகழ்காலத்தை பணயம் வைக்கும் ராணுவ வீரர்களுக்கு நமது நன்றிகள் உரித்தாகுக.