புதன், 29 ஏப்ரல், 2020

ஓவிய அரசர் ராஜா ரவிவர்மா பிறந்தநாள் - ஏப்ரல் 29

கண்ணால் காணாதவற்றில் மனம் லயிப்பது என்பது மிக அபூர்வம். அதனால்தான் தியானம் செய்யத் தொடங்கும்போது எதோ ஒரு கடவுளின் உருவத்தை மனதில் நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் பலர் மனதில் நிறுத்தும் கடவுள் உருவம் என்பது ராஜா ரவிவர்மாவின் ஓவியத்தில் உள்ள உருவமாக இருப்பதற்கான வாய்ப்பு மிகஅதிகம். ஆண்டவன் மனிதனைப் படைத்தான், ஆனால் சில கலைஞர்கள் இறைவனையே படைப்பிக்கிறார்கள் என்று சொல்வது போல, பலர் வீட்டு பூஜையறையில் ராஜா ரவிவர்மாவின் கடவுள் ஓவியங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறு அதிகம்.

கேரளாவில் திருவனந்தபுரத்தில் அருகிலுள்ள கிளிமானூர் அரண்மனையில் உமாம்பா - நீலகண்டன் பட்டத்ரிபாதி என்ற அரச குடும்பத்தைச் சார்ந்த தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தாயாரே ஒரு கவிஞர். இவர் தந்தை சமிஸ்க்ரித மொழியிலும் ஆயுர்வேத மருத்துவமுறையில் சிறந்து விளங்கியவர். இவர்கள் குடும்பம் கேரளாவை ஆண்ட திருவிதாங்கூர் ராஜகுடும்பத்திற்க்கு மணஉறவு கொள்ளும் அந்தஸ்து படைத்தது. மருமக்கள்தாயம் என்ற முறைப்படி தற்போதுள்ள திருவனந்தபுரம் அரசர் இவரது மகள் வழி பேரன் ஆவார்.

சிறுவயதிலேயே இவருக்கு இருந்த ஓவியத்திறமையைக் கண்டு இவரது மாமா ராஜா ராஜ்வர்மா இவருக்கு அடிப்படைப் பயிற்சிகளை அளித்தார். பின்னர் தியோடர் ஜென்சன் என்ற ஐரோப்பியர் மூலம் எண்ணெய் ஓவிய ( Oil Painting ) முறையைக் கற்றுத் தேர்ந்தார். இந்தியாவில் பல்வேறு இடங்களையும் சுற்றி அலைந்த ரவிவர்மா தான் கண்ட பெண்களைக் கொண்டே தனது ஓவியங்களை உருவாக்கினார்.
             
பரோடா மன்னர் மூன்றாம் சத்யாஜிராவ் கெய்க்வாட் அழைப்பை ஏற்று அங்கே பத்தாண்டுகள் தங்கி, பல ஓவியங்களை வரைந்தார். சரஸ்வதி, லட்சுமி போன்ற கடவுள்களின் படங்களும், அன்னப்பறவையோடு தமயந்தி, விஸ்வாமித்திரர் மேனகையை ஏற்க மறுப்பது, காலில் குத்திய முள்ளை நீக்கும் சகுந்தலை போன்றவை இவரது புகழ்பெற்ற ஓவியங்களாகும்.   
                    
எனினும் சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர் போன்றோர் ரவிவர்மாவின் ஓவியங்களை ஒத்துக்கொள்வதில்லை. இவை இந்திய கலாச்சாரத்தின் உள்ளீடற்றவை என்றே அவர்கள் கருதுகிறார்கள். எந்தக் கலைஞனும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவன் இல்லை. ஆனாலும் பெருவாரியான மக்கள் தங்கள் பூஜையறையில் வைத்திருக்கும் கடவுள்களின் படங்கள் என்று பார்த்தால் ரவிவர்மாவின் பங்களிப்பை நாம் புறந்தள்ளிவிட முடியாது.

இவர் நேரடியாக கேரளா ராஜ குடும்பத்தினர் இல்லை. ராஜாஎன்பது  வழங்கப்பட்ட பட்டம்தான். அதுபோல ஆங்கில அரசு இவர்க்கு கெய்சர் ஹி ஹிந்த் என்ற பட்டத்தை அளித்து சிறப்பித்தது.

கேரள மாநிலம் மாவேலிக்கரா நுண்கலை கல்லூரிக்கும் இன்னும் பல கல்வி நிலையங்களுக்கும் இவர் பெயரை சூட்டி அரசு கௌரவித்து உள்ளது. ராஜா ரவிவர்மா பெயரில் கேரள அரசு ஆண்டுதோறும் சிறந்த கலைஞருக்கு பட்டம் அளித்து வருகிறது.

ராஜாரவிவர்மா 1906ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் நாள் தனது 58ஆம் வயதில் காலமானார். நூறாண்டுகள் கழிந்தும் இவரது ஓவியங்கள் இவரை உயிரோடு வைத்துள்ளது.