சனி, 9 மே, 2020

காந்தியின் குரு - கோபால கிருஷ்ண கோகுலே மே 9

பாரதநாட்டின் சுதந்திரப் போராட்டம் என்பது ஆயுதம் தாங்கிப் போராடிய வீரர்களாலும், ஆங்கிலச் சட்டத்தின் துணையோடு ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரர்களாலும் ஒரே நேரத்தில் நடைபெற்ற ஒன்றாகும். அந்த வீரர்கள் தீவிரவாதிகள் என்றும் மிதவாதிகள் என்றும் அறியப்பட்டனர். ஏற்றுக்கொண்ட பாதை வேறாக இருந்தாலும் அவர்களின் தியாகம் என்பது சமமானதுதான். மிதவாதிகளின் முன்னோடியாக அறியப்பட்ட கோபாலகிருஷ்ண கோகுலே அவர்களின் பிறந்தநாள் இன்று.


மஹாராஷ்டிர மாநிலத்தின் ரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு சாதாரண சித்பவன் ப்ராமண குடும்பத்தில் கிருஷ்ணாராவ் கோகுலே - சத்தியபாமாபாய் தம்பதியரின் மகனாக 1866 ஆம் ஆண்டு மே 9 ஆம் நாள் பிறந்தவர் கோபாலகிருஷ்ண கோகுலே அவர்கள். பொருளாதார வசதி இல்லாமல் இருந்தாலும் அவர் குடும்பம் கல்வியின் முக்கியத்தை அறிந்தே இருந்தது. ஆங்கிலக் கல்வி அரசு இயந்திரத்தில் எங்காவது வேலைக்குச் சேர்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் குடும்பம் கோகுலேயின் கல்விக்கு உறுதுணையாக இருந்தது. கோல்காபூர் நகரின் ராஜாராம் கல்லூரியிலும் அதனைத் தொடர்ந்து மும்பையின் எலிபைன்ஸ்டோன் கல்லூரியிலும் கோகுலே கல்வி பயின்றார். ஆங்கிலக் கல்வி கோகுலேவிற்கு அரசியல் அறிவையும் சேர்த்தே அளித்தது. தனது படிப்பை முடித்த கோகுலே பூனா நகரில் உள்ள பார்கூசன் கல்லூரியில் கணிதப் பேராசிரிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.

மஹாதேவ கோவிந்த ராணடேயின் சீடராக கோகுலே காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தொடர்ச்சியான விவாதங்களின் மூலமாகவும், ஆங்கிலச் சட்டத்தின் மூலமாகவும் பாரதியர்களுக்கு அரசியலில் போதுமான பிரதிநிதித்துவம் பெறலாம் என்பது அவரின் கருத்தாக இருந்தது. அதே காலகட்டத்தில் அதே சித்பவன் ப்ராமண வகுப்பில் தோன்றிய திலகர் பூரண ஸ்வராஜ்யம் எங்கள் பிறப்புரிமை என்று முழங்கிக்கொண்டு இருந்தார். நேரடியான போராட்டங்களின் மூலம் ஆங்கில ஆட்சியை அகற்ற முடியும் என்று நம்பிய தேசபக்தர்கள் திலகரின் வழியைப் பின்பற்றினர். 1895ஆம் ஆண்டு கோகுலேவும் திலகரும் காங்கிரஸ் கட்சியின் துணைச்செயலாளர்களாகப் பணிபுரிந்தனர். அதனைத் தொடர்ந்து 1905ஆம் ஆண்டு கோகுலே காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியின் போக்கை மிதவாதிகளா அல்லது தீவிரவாதிகளா யார் நிர்ணயிப்பது என்ற கருத்து வேறுபாடு முற்றி 1907ஆம் ஆண்டு சூரத் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கட்சி இரண்டாகப் பிளவு பட்டது. 1908ஆம் ஆண்டு திலகர் கைது செய்யப்பட்டு பர்மாவில் உள்ள மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ காங்கிரஸ் கட்சி மிதவாதிகளின் கைகளுக்குச் சென்றது. கொள்கைரீதியாக வேறுபட்டு இருந்தாலும் தேசபக்தர்கள் ஒருவர்மீது ஒருவர் வைத்திருந்த மரியாதை குறையவே இல்லை என்பதுதான் உண்மை.

பாரத நாட்டின் மக்கள் அனைவர்க்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பது கோகுலேவின் விருப்பமாக இருந்தது. பாரத்தின் பொருளாதாரத்தை ஆய்வு செய்யவும், தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட பஞ்சங்கள் பற்றி ஆராயவும்  அமைக்கப்பட்ட வெல்பி கமிஷனிடம் தேவையற்ற பல செலவுகளை ஆங்கில அரசு செய்கிறது என்றும், போதுமான அளவு கல்விக்கு ஒதுக்கப்படவில்லை என்றும் கோகுலே வாதாடினார். குறைந்தபட்சம் நான்காம் வகுப்புவரையாவது கட்டாய இலவசக் கல்வி அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார்.

சிறந்த கல்வியை அளித்து தகுதியான தலைவர்களை உருவாக்க கோகுலே இந்தியாவின் பணியாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்.  அன்றய ஆங்கில சட்டத்துக்கு உள்பட்டு சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது என்பதுதான் கோகுலேவின் வழிமுறையாக இருந்தது.  1899 முதல் பல்லாண்டுகள் மகாராஷ்டிர சட்டமன்றத்திற்கும், பின்னர் நாடாளுமன்றத்திற்கும் கோகுலே தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் நாட்டின் பட்ஜெட் பற்றிய அவரது விவாதங்கள் செறிவு மிகுந்ததாக இருந்தது.

காந்தி கோகுலேவைதான் தனது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டு இருந்தார். தென்னாபிரிக்காவில் இருந்து பாரதம் திரும்பிய காந்தியை நாடு முழுவதும் சுற்றி வந்து, நேரடியாக நாட்டின் நாட்டுமக்களின் நிலைமையை அறிந்து கொண்டு அரசியலில் ஈடுபடுமாறு கோகுலே அறிவுறுத்தினார். பளிங்கைப் போன்ற தூய்மை, சிங்கத்தைப் போன்ற துணிவு, அரசியல் வானில் குறையே சொல்லமுடியாத சரியான மனிதர் என்று காந்தி கோகுலேவைப் புகழ்ந்து எழுதினார்.

பாரத நாட்டின் புகழ்வாய்ந்த தலைவர்களில் ஒருவரான கோபால கிருஷ்ண கோகுலே தனது 48ஆம் வயதில் 1915ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் நாள் காலமானார்.

தேசியத் தலைவருக்கு ஒரே இந்தியா தளம் தனது அஞ்சலியை செலுத்துகிறது.  

மஹாராணா பிரதாப் பிறந்த நாள் - மே 9


வரலாறு பதிவுசெய்யப்பட்ட காலத்தில் இருந்து பொதுயுகம் 1700 வரை பாரதம் உலகப் பொருளாதாரத்தில் 25% மேலான பங்கை வகித்து வந்தது. நீண்ட நெடிய நிலப்பரப்பும், வற்றாத நதிகளும், வளமையான நிலங்களும், உழைக்க அஞ்சாத மக்களும் என்று உலகத்தின் முக்கியமான நாடாக விளங்கியது. செல்வம் இருக்குமிடத்தை கொள்ளையடிக்க மற்றவர்கள் வருவது இயற்கைதானே. அப்படிதான் பல்வேறு நாடுகளிலில் இருந்து இந்தியாவின்மீது படையெடுக்க பலர் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருந்தனர். அலையலையாக வந்த ஆக்கிரமிப்பாளர்களை மீண்டும் மீண்டும் எதிர்த்து இந்தியர்கள் போரிட்டுக்கொண்டே இருந்தனர்.

தாயகம் காக்க தன்னலம் கருதாது தலைமையேற்ற மாவீரர்களில் மிக முக்கியமானவர். மஹாராணா பிரதாப்சிங் அவர்கள். இன்றய ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மேவார் பகுதியை ஆண்ட சிசோடியா வம்சத்தின் வாரிசு ராணா பிரதாப். மேவார் நாட்டின் தலைநகரான சித்தூர் நகரை முகலாய மன்னர் அக்பர் தாக்கி கைப்பற்றினார். சித்தூரை கைவிட்டு ராஜா உதய்சிங் தனது தலைநகரை மாற்றிக்கொண்டார். அப்படி அவர் நிறுவிய நகர்தான் உதய்பூர்.

ராஜ உதய்சிங் மறைவிற்குப் பின்னர் மேவார் நாட்டின் மன்னராக மஹாராஜா பிரதாப்சிங் பதவி ஏற்றுக்கொண்டார். அநேகமாக எல்லா ராஜபுத்திர அரசர்களும் முகலாய மன்னர் அக்பரோடு நெருக்கமாகி, அவருக்கு கட்டுப்பட்டு நடக்க ஒத்துக்கொண்டனர். பலர் தங்கள் மகள்களை, சகோதரிகளை அவருக்கு திருமணமும் செய்து வைத்தனர். ஆனால் எந்த உடன்படிக்கைக்கும் வர மறுத்து எதிர்த்து நின்றவர் ராணா பிரதாப் மட்டுமே.

அக்பர் அனுப்பிய தூதுகள் எல்லாம் பயனற்றுப் போக, அக்பர் மஹாராஜா பிரதாப் மீது படையெடுக்க முடிவு செய்தார். மொகலயப் படைக்கு தலைமை ஏற்றவர் சக ராஜபுத்திர மன்னரான ராஜா மான்சிங். முகலாயப்படை ராணா பிரதாப்பின் படையைப் போல நான்கு பங்கு பெரியது. ஆனாலும் ராஜ்புத்திரர்களின் வீரம் என்று மீண்டு உறுதிசெய்யப்பட்டது. தனது பட்டத்து குதிரையான சேட்டக் மீது ஏறி ராணா பிரதாப் தனது படையை வழிநடத்தினார். குதிரைக்கு செயற்கையான தும்பிக்கையை மாட்டி மான்சிங்கின் யானையை குழப்பமடையச் செய்தார். மிக அருகில் இருந்து தனது ஈட்டியை மான்சிங் மீது ஏவினார். ஆனால் அந்த ஈட்டிக்கு இரையாகி மான்சிங்கின் யானைப்பாகன் மான்சிங்கை காப்பாற்றினார்.

போரில் காயமடைந்த மஹாராணா பிரதாப்பை அவரது குதிரை சேட்டக் பல மைல் தொலைவுக்கு சுமந்து சென்று காப்பாற்றி தனது உயிரை நாட்டுக்காக அர்ப்பணித்து. மேவார் நாட்டின் வளமையான கிழக்குப் பகுதி முகலாயர் வசமானது. மலையும் காடுகளுமான பகுதி மட்டும் ராணா ப்ரதாபின் ஆளுமைக்கு கீழ் இருந்தது.

அங்கிருந்து முகலாயர் மீதான தனது தாக்குதலைத் தொடங்கினார் ராணா பிரதாப். கொரில்லா போர் முறையை முழுமையாக இந்தியாவிற்கு அறிமுகம் செய்தவர் என்று ராணா பிரதாப் போற்றப்படுகிறார். கடைசி வரை ராணா பிரதாப்பை முகலாயர்களால் வெற்றிகொள்ளவோ அல்லது அவர்களின் ஆளுமையை ஏற்றுக்கொள்ளவோ வைக்கவே முடியவில்லை. சிறுது சிறிதாக இந்த உண்மையை முகலாயர்கள் ஏற்றுக்கொள்ள, தனது ராஜ்யத்தின் பல பகுதிகளை ராணா பிரதாப் மீட்டெடுத்தார்.
ஏழு அடி ஐந்து அங்குல உயரமும் நூறு கிலோவிற்கு அதிகமான எடையும் கொண்ட தோற்றம், தலைக்கவசம், கேடயம், ஈட்டி, வாள் என்று இருநூறு கிலோவிற்கும் அதிகமான ஆயுதங்களைத் தாங்கிய வீரன், சொந்த ராஜபுத்திர மன்னர்கள் எதிர்த்து நின்றபோதும் அடிபணிய மறுத்த மன்னன், பின்னாளில் சத்ரபதி சிவாஜி மஹராஜ் போன்றவர்களுக்கு முன்னோடியாக விளங்கிய இந்தியாவின் முதல் விடுதலை வீரன் மஹாராணா பிரதாப்சிங்கின் வாழ்க்கை நம் அனைவருக்கும் லட்சியப் பாதையில் செல்ல உதாரணமாக இருக்கட்டும்.