வியாழன், 30 ஏப்ரல், 2020

இந்தியத் திரையுலகின் தந்தை தாதாசாஹேப் பால்கே - ஏப்ரல் 30

இந்தியத் திரையுலகின் தந்தை என்று போற்றப்படும் தாதாசாஹேப் பால்கே அவர்களின் பிறந்தநாள் இன்று.


தாதாசாஹேப் பால்கே அவர்கள், மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகரின் அருகில் உள்ள த்ரயம்பகேஸ்வர் என்னும் இடத்தில் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி 1870 ஆம் ஆண்டில் ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் தண்டிராஜ் கோவிந்த் பால்கே என்பதாகும். அவரது தந்தை ஒரு சிறந்த கல்வியாளர் ஆவார்.

தனது ஆரம்பக் கல்வியை த்ரயம்பகேஸ்வரில் படித்த தண்டிராஜ், பள்ளி இறுதி வகுப்பை மும்பையிலும் முடித்தார். அதனைத் தொடர்ந்து ஜெ ஜெ நுண்கலைக் கல்லூரியில் ஓவியப் பயிற்சியை மேற்கொண்டார். பின்னர் அவர் பரோடாவிலுள்ள கலா பவனில் சேர்ந்து, சிற்பம், பொறியியல், வரைதல், ஓவியம் மற்றும் புகைப்படம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். அந்தக் காலகட்டத்தில் அவருக்கு புகைப்படம் எடுப்பதில் பெரும் விருப்பம் இருந்தது,

குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ரா நகரில் முழுநேர புகைப்படக் கலைஞராக அவர் தொழில் செய்யத் தொடங்கினார். ஆனால் அவருக்கு அது லாபகரமாக அமையவில்லை. அப்போது அவரது மனைவியும் பிளேக் நோயினால் காலமாகிவிட்டார். அதற்கிடையில் மாயாஜால வித்தைகள் ( மாஜிக் ) செய்யவும் அவர் கற்றுக் கொண்டார். 1902ஆம் ஆண்டு பால்கே மறுமணம் செய்து கொண்டார்.

அவருக்கு இந்திய தொல்பொருள் ஆய்வகத்தில், வரைவாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. வரைவாளராகப் பணியில் ஈடுபட்ட அவர், அதில் திருப்தி அடையாமல் இருந்ததால், அவ்வேலையை ராஜினாமா செய்து விட்டு, அச்சிடும் தொழிலை சொந்தமாகத் தொடங்கினார். அவர் கல் அச்சுக் கலை (lithography) மற்றும் எண்ணெய் வண்ண அச்சுப்படத்தில் (oleograph) நிபுணத்துவம் பெற்றிருந்ததால், உலகப் புகழ்பெற்ற ஓவியரான ராஜா ரவி வர்மாவிடம் வேலைக்கு சேர்ந்தார். பின்னர், பால்கே  நண்பர்களோடு இணைந்து கூட்டாக ஒரு அச்சகத்தைத் தொடங்கினார். சிறிது காலத்திலேயே நண்பர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவர் அந்த கூட்டு வியாபாரத்தில் இருந்து விலகிக் கொண்டார்.

1911ஆம் ஆண்டு முதல்முறையாக ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் The Life of Christ என்ற திரைப்படத்தை பால்கே பார்த்தார். முதல்முறையாக திரையில் நகரும் பிம்பங்கள் அவரை வெகுவாக கவர்ந்தது. அதில் நமது இதிகாச நாயகர்களைக் காட்டினால் அதற்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று சரியாகக் கணித்த பால்கே திரைப்படம் எடுக்க முடிவு செய்தார்.

வாழ்நாள் முழுவதும் உண்மையையே பேசிய ராஜா ஹரிச்சந்திராவின் கதையைத்தான் அவர் முதல்முதலாகப் படமாக்கினார். இத்திரைப்படம், மே 3, 1913 ஆம் ஆண்டில் மும்பை காரநேஷன் சினிமாவில் முதன்முதலில் திரையில் பகிரங்கமாக வெளியிடப்பட்டது. இதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னர், ராமச்சந்திர கோபால் அவர்களின் படமான ‘பன்டாலிக்’ அதே திரையரங்கில் வெளியிடப்பட்டாலும், முதல் உள்நாட்டு இந்திய திரைப்படத்தைத் தயாரித்தப் பெருமை, தாதாசாகேப் பால்கே அவர்களையே சேரும், ஏனென்றால், “பண்டாலிக்” திரைப்படம் பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளர்களால் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், 1937 வரை 19 ஆண்டுகளில் 19 ஆண்டுகளில் தனது 95 திரைப்படங்கள் மற்றும் 27 குறும்படங்களை மொத்தமாக பால்கே செய்தார். மோகினி பஸ்மசூர், சத்யவான் சாவித்ரி, லங்கா தஹான், ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மா மற்றும் காலியா மார்டன் ஆகியோரின் மிகவும் குறிப்பிடத்தக்க படைப்புகளில் அடங்கும்

பால்கேவின் சாதனைகளில் பெரும்பங்கு அவர் மனைவி சரஸ்வதிபாய் அம்மையாரையே சாரும். அதுவரை நாட்டில் இல்லாத ஓவர் தொழிலில் ஈடுபட்ட கணவருக்கு உறுதுணையாக இருந்து, அவருக்காக தன் நகைகளை எல்லாம் விற்று, படம் தயாரிப்பிலும் பல்வேறு பணிகளை சரஸ்வதிபாய் மேற்கொண்டார்.

இந்திய வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ள திரைத்துறையை நாட்டிற்கு அறிமுகம் செய்த பால்கே 1944ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் காலமானார்.

இந்திய திரையுலகில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் விருது தாதாசாஹேப் பால்கே பெயராலே வழங்கப்படுகிறது.