வியாழன், 19 மார்ச், 2020

மார்ச் 19 - இசையரசி டி.கே. பட்டம்மாள் பிறந்ததினம்

தமிழகத்தின் புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் திருமதி டி கே பட்டம்மாள் அவர்களின் பிறந்ததினம் இன்று.

காஞ்சீபுரத்தைச் சார்ந்த தாமல் கிருஷ்ணஸ்வாமி தீக்ஷிதருக்கும் காந்திமதி என்பவருக்கும் மகளாக பட்டம்மாள் 1919ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்கள் இருவருமே கர்நாடக இசை பயின்றவர்கள். மிகச் சிறு வயதிலேயே கேட்கின்ற பாடல்களைப் பாடும் திறமை இவருக்கு இருந்தது.

தனது பத்தாவது வயதிலேயே இவர் அன்றய சென்னை வானொலியில் தனது முதல் நிகழ்ச்சியை அரங்கேற்றினார். தனது பதின்மூன்றாம் வயதில் சென்னையில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் முழுமையான கச்சேரியை நடத்தினார். இசை பயிலவும், இசையுலகில் முன்னேறவும் இவர் பெற்றோர்கள் காஞ்சீபுரத்தில் இருந்து சென்னைக்கு குடியேறினர். சென்னை மட்டுமல்லாது நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களில் இவரது நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்தனர்.

அன்றய காலகட்டத்தில் ப்ராமண சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் பொதுமேடைகளில் ஆடவோ பாடவோ மாட்டார்கள். அதனை மாற்றி பரதநாட்டியத்தில் ருக்மணிதேவி அருண்டேல் போல சங்கீத மேடைகளில் முதலில் ஏறியவர் திருமதி பட்டம்மா அவர்கள்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய பாடல்கள் பல இவரால் பாடப்பட்டு பிரபலமானது. திருப்புகழ், தேவாரம் ஆகியவற்றை முறையாகக் கற்றுத்தேர்ந்து அவைகளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் பாடினார். புகழ்பெற்ற சாகித்யகர்த்தா பாபநாசம் சிவன் அவர்களிடம் இருந்து நேரடியாகப் பயின்று அவரது பாடல்களையும், மஹாகவி சுப்ரமணிய பாரதியார் பாடல்களையும் இவர் பெருமளவில் பரப்பினார். பயில்வதற்கு பாடுவதற்கும் கடினமான ராகம் தாளம் பல்லவி என்பதில் திறமைவாய்ந்தவராக இருந்ததால் இவர் பல்லவி பட்டம்மாள் என்று அழைக்கப் பட்டார்.

1940களில் பல்வேறு கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் தேசபக்திப் பாடல்களை, குறிப்பாக பாரதியார் பாடல்களை, அதிக அளவில் பாடிவந்தார். தீரர் சத்தியமூர்த்தி, ராஜாஜி, திரு.வி.க போன்ற தலைவர்கள் இவரை ”அதிகமாக தேசபக்திப் பாடல்களைப் பாட வேண்டாம். பெண்ணென்றும் பாராமல் வெள்ளையரசு சிறை வைத்துவிட்டால் என்ன செய்வாய்” என்று எச்சரித்தனர். ஆனாலும் விடாமல் தேசபக்திப் பாடல்களை மேடை தோறும் பாடிவந்தார்.

பல்வேறு திரைப்படங்களில் தேசபக்தி பாடல்களையும் ஆன்மீகப் பாடல்களையும் இவர் பாடி உள்ளார். AVM நிறுவனம் தயாரித்த படங்களில் பாரத சமுதாயம் வாழ்கவே, ஆடுவோமே பள்ளு பாடுவோமே, வெற்றி எட்டுத் திக்கும் என கொட்டு முரசே போன்ற பாரதியார் பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.

நம் நாடு விடுதலை அடைந்த 1947 ஆகஸ்டு பதினைந்து அன்று அதிகாலை (நள்ளிரவு) 12 மணிக்கு விடுதலை அறிவிப்பு வந்த பிறகு, நேருவின் பேச்சு முடிந்தவுடன் வானொலி நிலையத்தார் பட்டம்மாள் அவர்களை “ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே” பாடலைப் பாடச் செய்தனர்.

இவரது மேதைமையைப் பாராட்டி இவருக்கு சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி, கான சரஸ்வதி ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் பட்டத்தை அளித்து சிறப்பித்தது.

2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் நாள் இவர் சென்னையில் காலமானார்.