புதன், 4 டிசம்பர், 2019

பொம்மைகள் வழியாக விஞ்ஞானம் அரவிந்த்குப்தா டிசம்பர் 4

நாம் உணர்கிறோமோ இல்லையோ, நாம் வசிக்கும் பிரபஞ்சம் திட்டவட்டமான அறிவியல் விதிகளின்படியே இயங்குகிறது. ஆனால் பயனாளிகளுக்கு அறிவியல் விதிகள் சொல்லிக்கொடுக்கப்படுவது இல்லை. பொதுமக்களுக்கும் கல்விச்சாலைகளுக்கும் இடையே மிகப்பெரும் இடைவெளி இருக்கின்றது. மனப்பாடம் செய்து, கேள்விகளுக்கு பதில் சொல்லும்படிதான் நமது மாணவர்கள் பயிற்றுவிற்கப் படுகிறார்கள். பதில்கள் மீது கேள்வி கேட்கும் மாணவர்களை நமது கல்விமுறை ஊக்குவிப்பதில்லை. இந்த இடைவெளியை இல்லாமல் செய்ய பலர் முயற்சி செய்து வருகிறார்கள். அதில் முக்கியமானவர் அரவிந்த் குப்தா. நாம் குப்பைகள் என்று ஒதுக்கும் பொருள்களில் இருந்து பொம்மைகளைச் செய்து அதன் மூலம் அறிவியலை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் இவர்.


அர்விந்த் குப்தா, பரேலி என்னும் ஊரில், மிக அதிகம் படிக்காத, ஆனால், கல்வியின் முக்கியத்துவம் அறிந்த பெற்றோருக்கு நான்காவது மகனாக 1953ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் நாள் பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்த அரவிந்த் குப்தா 1972 ஆம் ஆண்டு, கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் மின் பொறியியல் படிக்கச் சேர்ந்தார். அந்தக் காலத்தில் ஒரு நாள், கான்பூர் ஐஐடியில், கல்வியாளார் அனில் சட்கோபால் என்பவர் ஒரு உரை நிகழ்த்தினார். அனில் சட்கோபால், இந்திய வேளாண் கழகத்தில் முதுகலைப் பட்டமும், கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகத்தில், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்த் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

வேளாண்மை, சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் கிஷோர் பாரதி என்ற சேவை நிறுவனத்தை அனில் சட்கோபால் 1971ஆம் ஆண்டு துவங்கி இருந்தார். 1972 ஆம் ஆண்டு, ஹோஷங்காபாத் அறிவியல் கல்வித் திட்டம் (Hoshangabad Science Teaching Programme – HSTP) என்னும் திட்டத்தைத் துவங்கினார். இது துவக்கத்தில், 5-8 வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, அறிவியற் கல்வியைக் கற்பிப்பதற்காகத் துவங்கப்பட்டது. அவரின் உரை அரவிந்த் குப்தாவிற்கு புதிய திறப்பை அளித்தது.

படிப்பை முடித்தபின் அரவிந்த் குப்தா டாடா மோட்டார் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு ஹோஷங்காபாத் சென்றார். சைக்கிளின் வால் ட்யூப்பையும், தீக்குச்சிகளையும் வைத்துக் கொண்டு, பல்வேறு விதமான வடிவங்களை அமைத்தார். அவற்றை வைத்துக் கொண்டு, கணித வடிவங்கள், வேதியியல் மூலக்கூறு அமைப்புகள், வீடுகள், கட்டுமானங்கள் முதலியவற்றைக் குழந்தைகளே செய்து, அறிந்து கொள்ளுமாறு பயிற்றுவித்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, அங்கிருந்து திருவனந்தபுரம் சென்று, கட்டிடக்கலை வல்லுநர் லாரி பேக்கரிடம் பணிபுரிந்தார.

மீண்டும் வேலைக்குத் திரும்பிய அரவிந்த் குப்தாவிற்கு, தான் மேற்கொள்ள வேண்டிய பணி எது என்பது தீர்மானமாகத் தெரிந்ததால், வேலையை விட்டு விட்டு கல்வி கிடைக்காத குழந்தைகளுக்கு பொம்மைகள் மூலம் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் பணியில் ஈடுபட முடிவு செய்து, வேலையை உதறினார். அந்தச் சமயத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலராக இருந்த பேராசிரியர் யாஷ்பால் அவர்கள் மூலமாக, ஒரு புத்தகம் எழுத ஒரு ஃபெல்லோஷிப் கிடைத்தது. “தீக்குச்சி மாதிரிகளும் மற்ற அறிவியல் பரிசோதனைகளும்”, என்னும் ஒரு புத்தகத்தை எழுதினார். இரண்டு ஆண்டுகளில், அந்தப் புத்தகம் 12 மொழிகளில் வெளியாகி, கல்வியாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அனில் சடகோபனின் ஏகலைவா நிறுவனத்துக்காக, அர்விந்த் குப்தா பல அறிவியல் நூல்களை எழுதினார். தரங்க் (சிற்றலைகள்) என்னும் தலைப்பில், 25 வருடங்களில், 125 நிகழ்ச்சிகளைத் தயாரித்து, தேசியத் தொலைக்காட்சிக்காக (தூர்தர்ஷன்) வழங்கினார். இதன் மூலமாக, மிகப் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களுக்கும், எளிமையான அறிவியல் பரிசோதனைகளை அவர் பள்ளி மாணவர்களிடையே கொண்டு செல்ல முடிந்தது. தரங்க், தூர்தர்ஷனின் மிக வெற்றிகரமான நிகழ்ச்சிகளுள் ஒன்று.

பெரும் பொருள்செலவில் பள்ளிகளில் அறிவியல் சோதனைச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதாலேயே, பல பள்ளிகளில் அவை இல்லாமலேயே ஆகி விடுகிறது. ஆனால் மிக எளிய முறையில், அதிகம் பொருள் செலவு இல்லாமலேயே அதே சோதனைகளை செய்து காட்டியும், குழந்தைகளே அந்த சோதனைகளைச் செய்ய வைப்பதன் மூலம் அவர்களின் அறிவியல் மீதான ஆர்வத்தைத் தூண்டுவதும் பெரும் பலனை அளிக்கும் என்பதை அரவிந்த் குப்தா நிரூபித்து உள்ளார்.

பல்வேறு பொம்மைகளின் மூலம் அறிவியல் சோதனைகளைச் செய்வது பற்றிய அவரின் செயல்முறை விளக்கங்களும், அது பற்றிய புத்தகங்களும் என்று அவரது வலைத்தளம் தேடுதல் உடையவர்களுக்கு ஒரு தங்கச் சுரங்கம்.

தனது கல்வியை, திறமையை சமுதாயத்தின் வளர்ச்சிக்கு என்று அர்ப்பணித்த அரவிந்த் குப்தாவிற்கு பல்வேறு விருதுகளும் அங்கீகாரங்களும் கிடைத்துள்ளன. அதில் முக்கியமானது பாரத அரசு 2018ஆம் ஆண்டு அவருக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதாகும்.

நாட்டின் சிறப்புமிக்க அறிவியல் ஆசிரியருக்கு ஒரே இந்தியா தளம் தனது வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.