ஞாயிறு, 12 ஜனவரி, 2020

புரட்சிவீரர் சூர்யா சென் - ஜனவரி 12

“மரணம் என் வாழ்க்கையின் வாசற் கதவைத் தட்டுவது என் காதில் கேட்கிறது. என் மனம் எல்லையற்ற பெருவெளியை நோக்கி மெல்லப் பறக்கத் தொடங்கிவிட்டது. விழி மூடும் இந்த மரணப் பொழுதில் என் நண்பர்களிடம் நான் ஒன்றை மட்டும் என் நினைவாக விட்டுச் செல்கிறேன்.

அதுதான் ‘சுதந்திர இந்தியா’ என்ற என் பொற்கனவு.

தோழர்களே! இந்தக் கனவை நனவாக்க நம் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். எந்த நிலையிலும் ஓரடிகூடப் பின்வாங்க முயல வேண்டாம். நம் தேசத்தின் அடிமைப் பொழுது முடிந்துவிடும். சுதந்திரத்தின் ஒளிக்கதிர்கள் பொன்னொளி வீசுவதைக் காணுங்கள். எல்லோரும் எழுங்கள், அவநம்பிக்கை அடையாதீர்கள். வெற்றி விரைவில் வந்து சேரும்”


நாற்பதே வயதான அந்த ஆசிரியருக்கு தூக்குத் தண்டனை என்று தீர்ப்பு எழுதப்பட்டு இருந்தது. தூக்குக் கயிற்றை முத்தமிடும் வேளையில் அந்த இளைஞன் தன் நண்பர்களிடம் கூறிய வார்த்தைகள் இவை.

தாயநாட்டின் அடிமை விலங்கை அறுத்தெறிய ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நாடெங்கிலும் பல்வேறு இளைஞர்கள் முன்னெடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். தாயின் காலடியில் தங்கள் உயிரை ஆகுதியாக அளிக்க அவர்கள் ஒருபோதும் தயங்கியதே இல்லை. அப்படியான தியாக இளைஞர்கள் படையைக் கட்டமைத்து அவர்களுக்குத் தலைமையேற்று வழிநடத்திய சூர்யா சென் அவர்களின் பலிதானதினம் இன்று.

இன்றய பங்களாதேஷில் உள்ள துறைமுக நகரம் சிட்டகாங். அந்த நகரில் ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருந்த ரமணிரஞ்சன் சென் அவர்களின் மகனாகப் பிறந்தவர் சூர்யா சென். பெர்ஹாம்பூர் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே தனது ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார் சூர்யா சென்.  கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ஆங்கில வழி கல்விக்கு மாற்றாக தேசிய சிந்தனைகளின் வழி பாடத் திட்டத்தை அமைத்து மாணவர்களுக்கு கல்வி புகட்டும் பணியில் ஈடுபடலானார். எனவே மக்கள் இவரை மாஸ்டர் தா என்று மரியாதையாக அழைக்கத் தொடங்கினர்.

காங்கிரஸ் கட்சியின் அகிம்சா வழி முறையை சூர்யாசென் ஏற்கவில்லை. காந்தியடிகளின் திட்டம் தோல்வியைத் தழுவியது என்று சூர்யாசென் அறிவித்தார். சிட்டகாங்கை தளமாகக் கொண்டு செயல்பட்ட சூர்யாசென்னின் புரட்சிப் படையில் கணேஷ் கோஷ், சுபோத் சௌத்ரி, லோக்நாத் பால், ஆனந்த் குப்தா, பணீந்திர நந்தி, ஆனந்த் சிங், சகாய்ராம் தாஸ், பக்கீர் சென், லால்மோகன் சென், சுகேந்து தஸ்தகீர், ரணதீர் தாஸ் குப்தா, அணில் பந்து தாஸ், நந்திசின்ஹா, சுபோத்ராய், தாரகேஸ்வர் தஸ்தகீர், பிரசன்ன தாலுக்தார், சுபேந்திர தாஸ் முதலிய படித்த இளைஞர்களும், பிரிதிலதா வடகேர், கல்பனா தத் முதலிய வீராங்கனைகளும் சேர்ந்தனர். அந்த இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சியும், துப்பாக்கிச் சுடும் பயிற்சியும், வெடிகுண்டு தயாரித்தல் மற்றும் உபயோகப்படுத்துவதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது. சூர்யாசென் அமைத்த புரட்சிப் படையில் பயிற்சி பெற்ற நூற்று ஐம்பது இளைஞர்கள் இணைந்து செயல்பட்டனர்.

அஸ்ஸாம்-பெங்கால் ரயில்வே’யின் கருவூலத்தை பட்டப்பகலால், சுட்டெரிக்கும் சூரிய வெளிச்சத்தில் 1923ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் நாள் தமது புரட்சிப்படை தோழர்களுடன் தாக்கிச் சூரையாடினார். சூர்யா சென் போலீசியிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டார். ஆனால் சூர்யா சென் 1926ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, விசாரணையின்றி சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் 1928ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

சிட்டகாங் துறைமுகப் பட்டிணத்தில் பிரிட்டிஷ் அரசு ஆயுதக் கிடங்கு ஒன்றை அமைத்திருந்தது. வங்கப் புரட்சியாளர்களை ஒடுக்குவதற்கு அங்கிருந்துதான் பிரிட்டிஷ் போலீசாருக்கும், இராணுவத்தினருக்கும் ஆயுதங்கள் வழங்கப்பட்டு வந்தது.

அந்த ஆயுதக் கிடங்கை கைப்பற்றி சிட்டகாங் நகரை சுதந்திர நகராகப் பிரகடனப்படுத்த வேண்டுமென்று, ‘இந்துஸ்தான் குடியரசு இராணுவம்’என்ற புரட்சிப் படையின் தளபதியை சூர்யாசென்னும் அவரது தோழர்களும் திட்டமிட்டனர்.

சிட்டகாங்க ஆயுதக் கிடங்கை கைப்பற்றும் திட்டம் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி செயல்படுத்தப்பட்டது. புரட்சித் தளபதி சூர்யா சென் தலைமையில் 125 புரட்சி வீரர்கள் ஆயுதக் கிடங்கை முற்றுகையிட்டனர்.

பிரிட்டிஷ் இராணுவ வீரர்கள் மீது வெடிகுண்டுகளை வீசினார்கள். எதிர்த்துப் போரிட்ட பிரிட்டிஷ் இராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டுப் பொசுக்கினார்கள். வாள் வீச்சால் பலரை பலி கொண்டனர். புரட்சிப் படையின் ஒரு பிரிவு ஆயுதக் கிடங்கை சுற்றி வளைத்தது. மற்றொரு பிரிவு தொலைபேசி நிலையத்தை தகர்த்தெறிந்து தகவல் தொடர்பை துண்டித்தது. இன்னொரு பிரிவு இரயில் தண்டவாளங்களைத் தகர்த்து போக்குவரத்தைத் தடுத்தது. நான்காவது பிரிவு துறைமுகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ஆயுதக் கிடங்கில் குவித்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் மூட்டைகளாக் கட்டி எடுத்துக் கொண்டு, ஆயுதக் கிடங்கை தீ வைத்து கொளுத்தினர். ஆயுதக் கிடங்கின் பிரிட்டிஷ் தளபதி மேஜர் பெர்ரோல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆயுதக் கிடங்கு சூரையாடப்படுவதை கேள்வியுற்ற பிரிட்டிஷ் அரசு, கூர்க்கா படைப் பிரிவின் தளபதி ஜான்சன் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவம் விரைந்த வந்தது. தாக்குதல் தீவிரமடைந்தது. பிரிட்டிஷ் இராணுவத்தினர் 75 பேர் கொல்லப்பட்டனர். புரட்சியாளர்கள் 42 பேர் வீரமரணமடைந்தனர். சூர்யசென் தலைமையிலான புரட்சிப்படை ஆயுத மூட்டைகளுடன் சிட்டகாங் நகரைக் கடந்து, ஜலாலாபாத் மலைப் பகுதிக்கு தப்பிச் சென்றது. 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 முதல் 22 ஆம் தேதிவரை நடைபெற்ற போரில் தேவி குப்தா, மனோரஞ்சன் தாஸ், ரஜத்சென், சுதேஷ்ராய், அமரேந்திர நந்தி முதலிய புரட்சிப் படையின் வீரர்களும் களப்பலியானார்கள். புரட்சிப் படையின் வீரர்கள் சிலரை பிரிட்டிஷ் படையினர் கைது செய்தனர்.

சூர்யா சென் தலைமையில் தப்பிச் சென்ற புரட்சிப் படையினர் ‘காலகட்டம்’ என்ற கிராமத்தில் சாவித்திரியம்மாள் என்ற விதவைத்தாயின் குடிசையில் தங்கி தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். சூர்யாசென் தலைமறைவு வாழ்க்கையில் விவசாயக் கூலியாகவும், பால்காரராகவும், புரோகிதராகவும், வீட்டு வேலைக்காரராகவும் வேடமிட்டு பல பணிகளைச் செய்தார்.

சூர்யா சென் தலைக்கு பிரிட்டிஷ் அரசு பத்தாயிரம் ரூபாய் விலை வைத்தது. ஆனால், பணத்துக்கு ஆசைப்பட்டு கிராம மக்கள் யாரும் காட்டி கொடுக்க முன்வரவில்லை. மாறாக பாதுகாப்பு அளித்தனர்.

பிரிட்டிஷ் அரசின் காவல்துறை எப்படியோ மோப்பம் பிடித்து, புரட்சித் தளபதி சூர்யா சென்னும் அவரது தோழர்களும் ‘காலகட்டம்’ கிராமத்தில் தலைமறைவாகத் தங்கியுள்ளனர் என்பதை தெரிந்து கொண்டனர்.

பிரிட்டிஷ் இராணுவ கேப்டன் கெம்சன் என்பவனின் தலைமையில் இராணுவம் புறப்பட்டு, மறைந்திருந்த புரட்சியாளர்களை சுற்றி வளைத்தது. சூர்யா சென்னும் அவரது புரட்சித் தோழர்களும் வீரமுடன் போரிட்டனர். புரட்சியாளர்கள் வீசிய வெடிகுண்டுக்கு கேப்டன் கெம்சன் பலியானான். சூர்யா சென்னும், அவரது புரட்சித் தோழர்களும் தப்பிச் சென்றனர்.

தலைமறைவான சூர்யா சென், கைராலா என்ற கிராமத்தில் தமது உறவினராக நேத்ரா சென் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். பிரிட்டிஷ் அரசு அறிவித்த பத்தாயிரம் ரூபாய் பணத்துக்கு ஆசைப்பட்டு நேத்ரா சென் பிரிட்டிஷ் அரசின் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டான். துரோகி கேப்டன் கேமரான் தலைமையில் பிரிட்டிஷ் போலீஸ் படை கணப்பொழுதில் வீட்டைச் சுற்றி வளைத்து சூர்யா சென்னை கைது செய்தது. ஒரு துரோகி காட்டிக் கொடுத்ததால் பிரிட்டிஷ் அரசு சூர்யா சென்னை கைது செய்து சிறையிலடைத்தது,

நேத்ரா சென்னின் துரோகத்தை அவனுடைய மனைவி சாவித்திரி தேவியால் ஏற்க முடியவில்லை. ஒருநாள் மாலைப் பொழுதில் தனது கணவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். அப்போது சூர்யா சென்னின் புரட்சிப் படையின் வீரன் ஒருவன் வீட்டிற்கு வந்து காட்டிக் கொடுத்த துரோகி நேத்ரா சென்னின் தலையை வெட்டி வீசினான். சாவித்திரி தேவி அதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிரிட்டிஷ் அரசின் போலீஸ் சாவித்திரி தேவியிடம், நேத்ரா சென்னை வெட்டிக் கொன்றது யார் என விசாரணை மேற்கொண்டது. அப்போது அவள், “கொலையாளியைத் தெரியும், ஆனால் கூற முடியாது”, என்றாள் துணிச்சலுடன். நேத்ரா சென் என்ற ஒரு தேசச் துரோகிக்கு மனைவியாக வாழ்க்கைப்பட்டதற்காக நான் வருந்துகிறேன். என் கணவன் இந்த சிட்டகாங் கண்டெடுத்த நாயகனைக் காட்டிக் கொடுத்த கயவன். அதன் மூலம் இந்தியத் தாயின் முகத்தில் மாறாத வடுவை உருவாக்கிவிட்டான். அதனால், அந்த நீசனைக் கொன்றவனின் பெயரை நான் கூற விரும்பவில்லை. எங்கள் ‘மாஸ்டர்தா’ சூர்ய சென்னை நீங்கள் தூக்கிலிடுவீர்கள் என்பதை நான் அறிவேன். நாங்கள் அவரை நேசிக்கிறோம். அன்பு ததும்ப எங்கள் நெஞ்சத்தில் வைத்து வணங்குகிறோம். “சூர்யா’ என்றால் சூரியன். ஆம், எங்கள் சூரியனின் புகழ் என்றும் மறையாது. இந்திய வரலாற்றில் சூர்யா சென் பெயர் என்றும் நீங்காது, சுடர் ஒளியாக பரவும்”- என்று அறிவித்தாள் சாவித்திரி தேவி.

சிட்டகாங் சதி வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் 1930 ஆம் ஆண்டு ஜீலை மாதம் தொடங்கியது. 29 மாதங்கள் தொடர்ச்சியாக வழக்கு விசாரணை நடைபெற்றது. புரட்சிக்காரர்கள் தமக்காக வாதாட வழக்கறிஞர்களை அமர்த்தவில்லை. குற்றத்தை மறுக்கவில்லை. முhறாக அதை நியாயப்படுத்தி வாதாடினார்கள்.

சூர்யா சென் கட்டளைப்படி, 1932 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று, பிரிதிலதா வடேகர் சில புரட்சித் தோழர்களை அழைத்துக் கொண்டு பஹார்தலி என்ற இடத்தில் உள்ள ‘அய்ரோப்பியர் கிளப்’பை தாக்கினார்.

ஆங்கிலேய உயர் அதிகாரிகள் கிளப்பில் மாலை நேரத்தில் மது அருந்தி, சீட்டாடி, நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அங்கே ஒரே இடத்தில் கூடியுள்ள ஆங்கிலேய அதிகார வெறிபிடித்தவர்கள் அனைவரையும் வெடிகுண்டு வீசிக் கூண்டோடு கொன்றழிக்க வேண்டும் என்று பிரிதிலதாவிற்கு கட்டளையிட்டார் சூர்யாசென்.

திட்டமிட்டபடி, இரண்டு புரட்சித் தோழர்கள் கோச் வண்டியில் கிளப்புக்குள் முன்புற வழியாக நுழைந்தனர். மற்ற தோழர்கள் பின்புற வழியாக நுழைந்தனர். பிரிதிலதா கரம் உயர்த்தி ஆணையிட்டதும், கிளப்புக்குள் வெடிகுண்டுகளை சரமாறியாக வீசினார்கள். வெடிகுண்டு வீச்சில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மது மயக்கத்தில் தள்ளாடிக் கொண்டு, பயந்து பீதியில் மூலைக்கொருவராய் ஓடி ஒளிந்தனர். ‘ஒருவனைக் கூட உயிர் தப்பவிடாமல் சுட்டுத் தள்ளுங்கள்’ என்று பிரிதிலதா உத்தரவிட்டார். தானும் தம்மிடம் இருந்த துப்பாக்கியால் பிரிட்டிஷ் அதிகாரிகளை சுட்டுத் தள்ளினார். பிரிட்டிஷ் அதிகாரிகள் பலர் துப்பாக்கிச் சூட்டில் மாண்டனர்.

பிரிதிலதாவை பிரிட்டிஷ் காவலர்கள் சுற்றி வளைத்தனர். இனிமேல் தப்ப முடியாது என்ற நிலையில் தமது இடுப்பில் செருகியிருந்த ‘பொட்டாசியம் சயனைட்’ டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரிதிலதா தற்கொலை செய்து கொள்ளும் முன்பு “இதோ என் துப்பாக்கி. இதை எடுத்துச் சென்று நம் தலைவரிடம் கொடுங்கள். போகும் வரை முடிந்த மட்டும் வெள்ளை நாய்களை சுட்டுப் பொசுக்குங்கள், இதுதான் என் கடைசி விருப்பம். அனைவரும் தப்பி விடுங்கள். தலைவருக்கு என் இறுதி வணக்கம்” என்று முழங்கினார்.

பிரிட்டிஷ் காவல்படையினர் பிரிதிலதாவின் பிணத்தைத்தான் கைப்பற்ற முடிந்தது. இறுதிவரை அந்த புரட்சி வீராங்கனையின் நிழலைக் கூடத் தொடமுடியவில்லை.

சிட்டகாங் ஆயுதக் கிடங்கு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமது தீர்ப்பை வெளியிட்டது. அத்தீர்ப்பில் அனந்த சிங் மற்றும் 12 புரட்சியாளர்கள் ஆயுள் முழுவதும் நாடு கடத்தப்பட வேண்டும் எனவும், மற்ற புரட்சியாளர்களுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது. சூர்யா சென் மற்றும் தாரகேஸ்வர் தஸ்தகீர் இருவருக்கும் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டது.

சிட்டகாங் மத்திய சிறையில் 1934 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் நாள் சூர்யா சென்னும், தாரகேஸ்வர் தஸ்தகீரும் தூக்கிலிடப்பட்டனர். தூக்குத் தண்டனை அளிக்கப்பட்ட சூர்யாசென், தாரகேஸ்வர் ஆகிய இருவரும் சிட்டகாங் சிறைச் சாலையில் சித்ரவதை செய்யப்பட்டு அடித்தே கொல்லப்பட்டனர் என்றும், அவர்கள் பிணத்தைத்தான் ஆங்கிலேய ஆட்சியினர் தூக்கிலிட்டனர் என்பது பின்னர் நிரூபிக்கப்பட்டது. பின்னர் அவர்களின் சடலங்களை பிரிட்டிஷ் போர்க்கப்பலில் எடுத்துச் சென்று நடுக்கடலில் வீசியெறிந்து தங்களது வெறியைத் தீர்த்துக் கொண்டனர்.

இந்திய விடுதலைக்காக புரட்சிப்படை அமைத்து பிரிட்டிஷ் அரசின் இராணுவத்துடன் நேருக்கு நேர் நின்று போரிட்ட வீர வரலாறு சூர்யா சென்னுக்கு மட்டுமே உண்டு. ஆண்களோடு, பெண்களும் புரட்சிப் படையில் இணைந்து போராடிய வரலாறு சூர்யா சென்னின் புரட்சிப் படைக்கே உண்டு.


வரலாற்றின் பக்கங்களில் இன்று புதையுண்டு இருக்கும் வீரர்களின் தியாகத்தை என்றும் மனதில் வைப்போம்.  பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம். 

வீரத் துறவி ஸ்வாமி விவேகானந்தர். - ஜனவரி 12


கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா 
நாடென்ப நாட்டின் தலை                    குறள் 736

தன்னிலையில் கெடாமலும், ஒரு வேளை சூழ்நிலையால் கெட  நேர்ந்தாலும் தனது வளம் குன்றாது இருத்தலும் , மீண்டும் தனது வளத்தை மீண்டும் உருவாக்கிக்கொள்ளும் வலிமை உடையதுதான் நாடு என்று சொல்லப்பட வேண்டும் என்பது திருவள்ளுவர் காட்டும் நாட்டின் இலக்கியம். அப்படி பாரத நாட்டின் வளம் என்பது அதன் ஆன்ம பலத்தில்தான் உள்ளது. 

பாரதத்தின் ஆன்ம பலம் குன்றிப் போய் விடுமோ என்று அஞ்சும் காலத்தில், தகுதியான ஆசிரியர்கள் தோன்றி நாட்டின் ஆன்ம பலத்தை தூண்டி மக்களை வழிகாட்டிச் செல்வது என்பது பாரதத்தின் வரலாற்றில் மீண்டும் மீண்டும் நடைபெறும் நிகழ்வுதான். அப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய ஆசிரியர்தான் ஸ்வாமி விவேகானந்தர். 

பாரத நாட்டின் ஆன்ம பலம் என்பது அதன் ஆன்மீகத்தில் உள்ளது. ஆன்மீகத்தின் கருத்து என்பது உபநிடதங்களில் உள்ள நான்கு மஹாவாக்யங்களில் தெளிவாகிறது. ப்ரக்யானம் ப்ரம்ஹ, அயம் ஆத்மா ப்ரம்ஹ, தத் த்வ மஸி, அஹம் ப்ரம்ஹாஸ்மி என்பனவையே அந்த நான்கு மஹாவாக்யங்கள். அறிவே ப்ரம்ஹம், நானே ப்ரம்ஹம், நீயே அதுவாக ( ப்ரம்ஹமாக ) உள்ளாய், என்பதுதான் அந்த தத்துவம். எல்லா இடத்திலும் வியாபித்து இருப்பதுதான் என் உள்ளிலும் உள்ளது, நானும் ப்ரஹ்மமும் வேறில்லை, இந்த அறிவே ப்ரஹ்மம் எனவே உலக மக்கள் அனைவரும் ஒன்றே, என்னுள் இருக்கும் அதே ப்ரம்ஹம்தான் அனைத்து உயிரினங்களின் உள்ளேயும் உள்ளது என்பதுதான் பாரத நாடு காட்டும் பாதை. 

ஆனாலும் காலவோட்டத்தில் மக்கள் இதனை மறந்து விடுகிறார்கள். அப்போது நாடு அதன் இயல்பான தன்மையை விட்டு விலகி இருளடைந்த காலத்தில் சென்று விடுகிறது. அந்த இருளை விரட்ட தகுதியான குருமார்கள் தோன்றி நாட்டை நல்வழியில் செலுத்துகின்றனர்.வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்த நாட்டின் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி நாட்டை அடிமையாக்கினார். மிகப் பெருமளவில் மக்கள் திரண்டு அந்நியரை எதிர்த்து முதல் சுதந்திரப் போரை நடத்தினர். ஆனாலும் நவீன ஆயுதங்களை கொண்ட அன்னியர்களை பாரத மக்களால் வெற்றிபெற முடியவில்லை. இந்த காலகட்டத்தில்தான் ஸ்வாமி அவதரித்தார். இவரின் குருநாதர் இவருக்கு முப்பதாண்டுகளுக்கு முன்பே பிறந்து இவருக்காக காத்துகொண்டு இருந்தார். 

வங்காளத்தில் பிறந்த நரேந்திரநாத் தத்தா என்ற ஞான சூரியன், உண்மையை அறிந்துகொள்ள வேண்டி பல்வேறு அறிஞர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். அவரின் ஐயங்களின் தீர்வு படிப்பறிவே இல்லாத ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் இருந்தது. "உன்னை நான் பார்ப்பது போல, காளியைப் பார்க்கிறேன்" என்று கூறி நரேந்திரனை அதிரவைத்தார் ராமகிருஷ்ணர். இது அல்லது அது என்ற இரட்டைப்படை சிந்தனையில் வளர்ந்த நரேந்திரனுக்கு உண்மைக்கு ஒரே வழி மட்டுமே இல்லை, எந்த வழியில் சென்றாலும் உண்மையை அறியலாம் என்பதை ராமகிருஷ்ணர் காட்டினார். உருவ வழிபாடோ அல்லது அருவ வழிபாடோ, பக்தி யோகமோ, கர்ம யோகமோ அல்லது ஞான யோகமோ எல்லாமே ஒரே இடத்தைச் சென்று சேர உதவும் பல்வேறு பாதைகள் என்பதை நரேந்திரன் புரிந்து கொண்டார். ஆங்கிலப் படிப்பு படித்திருந்த நரேந்திரன், பெருமளவில் எதையும் படிக்காத, ஆனால் படிப்பதனால் மட்டுமே புலனாகாத உண்மையை அறிந்து கொண்டிருந்த ராமகிருஷ்ணரிடம் சரணடைந்தார். இல்லறத்தில் துறவறம் என்று வாழ்ந்த ராமகிருஷ்ணரின் பாதையில் செல்ல முடிவெடுத்த நரேந்திரர் துறவு பூண்டார். ஸ்வாமி விவேகானந்தர் என்ற யோகபட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. 

அனைத்தையும் துறந்து பாரத நாட்டை சுற்றிவரும் பரிவ்ராஜக சன்யாசிகளின் வரிசையில் ஒரு புதிய வரவாக ஸ்வாமிஜி நாடு முழுவதும் சுற்றிவந்தார். பாரத மக்களின் வறுமையும், அறியாமையும் அவரின் இதயத்தை தாக்கியது. அந்த நேரத்தில், மூடநம்பிக்கைகளின் பிடிகளிலும், பரவலான எழ்மை நிலைகளிலும் பாரத தேச மக்கள் கடின வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சோர்வும், அடிமைத்தனமும் பாரத மக்களின் ரத்த்த்தோடு கலந்தவைகளாகவே தோற்றமளித்தன. மக்கள் தங்கள் தலைவிதியை நொந்து கொண்டு வாழ்ந்தார்கள். அவர்களில் அனேகர் வெளி நாட்டுச் சரக்கு எதுவாக இருந்தாலும் அதைப் பெரிதாக மதித்தார்கள். நாட்டுப் பற்று கொண்ட தலைவர்களைக் காணமுடியவில்லை. 

எல்லாம் விதிப்படி நடக்கும் என்று கூறிச் செல்லும் திண்னை வேதாந்தி அல்ல ஸ்வாமிஜி. ஊழையும் உட்பக்கம் காணலாம் என்ற செயல்வீரர் அவர். பாரத தரிசனம் ஸ்வாமிக்கு அவரின் வாழ்வின் குறிக்கோளை உணரவைத்தது. சுவாமி விவேகானந்தர் அவர்கள், இந்திய துணை கண்டத்தில் தென் கோடி முனையில் இருக்கும் கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார். அவர் கடலில் சிறிது தூரம் நீந்தி, ஒரு தனி பாறையின் மீது அமர்ந்து, தனது தியானத்தைத் தொடங்கினார். மூன்று நாட்கள் அங்கு தியானம் மேற்கொண்ட அவர், இந்தியாவின் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்காலம் பற்றி தன் தியானத்தில் கண்டதாகக் கூறினார். 

அமெரிக்காவில் நடைபெற இருந்த சர்வ சமய மகாநாட்டில் கலந்துகொள்ள அன்றய ராமநாதபுரம் அரசர் சேதுபதி ஸ்வாமியை கேட்டுக் கொண்டார். ஸ்வாமிஜி அமெரிக்காவிற்கு பயணப்பட்டார். சிகாகோ நகரில் " எனது அமெரிக்க சகோதர சகோதரிகளே" என்று தொடங்கிய அவரது பேச்சு உலக அரங்கில் பாரதத்தின் இடம் எது என்பதை ஐயம்திரிபுர நிலை நாட்டியது. தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிகெட்ட நாடல்ல பாரதம், அது உலகின் ஆன்மீக குரு என்பதை ஸ்வாமியின் அமெரிக்கப் பயணம் உறுதி செய்தது. 

பாரதத்தின் ஆன்மீக ஞானத்தை உலகமெலாம் எடுத்துச் செல்லவும், பாரத நாட்டு மக்களுக்கு தேவையான கல்வி மற்றும் மருத்துவ வசதிகளைச் செய்து கொடுக்கவும் என்று ராமகிருஷ்ணா மிஷன் என்ற நிறுவனத்தையும் ஸ்வாமி உருவாக்கினார். நாடெங்கிலும் பல்வேறு நலப்பணிகளை ராமகிருஷ்ணா மிஷன் துறவிகள் இன்று நடத்திக்கொண்டு வருகிறார்கள். 

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பாரத மக்களின் உந்து சக்தியாக விளங்கியவர் ஸ்வாமிஜிதான். காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் ஹெட்கேவார், மஹரிஷி அரவிந்தர், ஸ்வாமி ராமதீர்த்தர், ஸ்வாமி சின்மயானந்தா, சி வி ராமன், ஜாம்ஷெட்ஜி டாடா, நானாஜி தேஷ்முக்  என்று பலரின் வாழ்வில் அவர்கள் வாழ்வின் குறிக்கோளை சுட்டிக் காட்டியவராகவும், அவர்களின் இலட்சியத்தை அடைய ஓயாது செயல்பட அவர்களைத் தூண்டியவராகவும் ஸ்வாமி விவேகானந்தர் விளங்குகிறார். 

எழுமின் விழுமின், எடுத்த செயல் நிறைவேறும் வரை துஞ்சாமல் உழைமின் என்ற உபநிடத வாக்கியத்தின் இலக்கணமாக வாழ்ந்து இன்றும் நமக்கு வழிகாட்டியாக விளங்கும் ஸ்வாமி விவேகானந்தரின் பாத கமலங்களை வணங்கி, நாட்டின் வளர்ச்சிக்கு நமது வாழ்வை அர்பணிப்போம் என்று உறுதி கூறுவோம்.