செவ்வாய், 23 ஜூலை, 2013

2. வரலாற்றின் பாடங்கள்

நைனிடால் சிறையில் இருந்து ஜவஹர்லால் நேரு தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களின் மொழிபெயர்ப்பு 

                    ------------------------------------------------------------

ஜனவரி 5, 1931

என் கண்ணே, நான் உனக்கு எதை எழுதுவது ? எங்க ஆரம்பிப்பது ? பழங்காலத்தைப் பற்றி நான் நினைக்கும் போது எல்லாம் பலதரப் பட்ட சித்திரங்கள் என் மனதில் தோன்றுகின்றன. அதில் சில நினைவுகள் மற்றவற்றைக் காட்டிலும் அதிகமான நேரம் என் மனதை ஆக்கிரமிக்கிறது. அவை என் மனதிற்கு நெருக்கமானவைகள். அவைகளைப் பற்றி நான் நினைக்கும்போது எல்லாம், தற்போதைய நிகழ்சிகளுடன் அவைகளை நான் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது. அப்படிச் செய்யும் போது, வரலாற்றின் மூலம் நாம் என்ன பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனையும் எழுகிறது.

ஒன்றோடு ஓன்று தொடர்பில்லாத ஓவியங்களின் அணிவகுப்பு போல, மனித மனதின் சிந்தனைகள் இருந்து வருகிறது. நம்மால் வரலாற்றின் நிகழ்சிகளை ஓரளவு வரிசைப் படுத்திவிட முடியும், ஆனால் பல நேரங்களில் இந்த நிகழ்சிகளே அதிசயமாகவும், ஏதாவது ஒரு வகையில் நேராகத் தொகுக்கக் கூடியதாக இருப்பது இல்லை என்பது தான் உண்மை.

வரலாற்றைப் படிப்பது என்றால் எப்படி இந்த உலகம் மெதுவாக ஆனால் நிச்சயமாக மாற்றிக்கொண்டே இருக்கிறது என்பதைப் பற்றியும், எப்படி மிருகங்கள் எல்லாம் பரிணாம வளர்ச்சியில் மாறி, மாறி முடிவில் அறிவில் சிறந்த மனிதன் என்ற மனிதன் என்று ஆகி, அந்த மனிதனும் தனது அறிவின் துணையோடு மற்ற மிருகங்களை எல்லாம் அடக்கி ஆண்டான் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது தான். காட்டுமிராண்டி என்ற நிலையில் இருந்து நாகரீகத்தை நோக்கிய மனிதனின் பயணமே வரலாறு.

பொதுவான ஒரு இலக்கை நோக்கி ஒருவரோடு ஒருவர் இணைந்து பணி செய்யும் கூட்டுறவு முறை எப்படி வளர்ச்சி அடைந்தது என்பதைப் பற்றி நான் உனக்கு முன்னரே கூறி உள்ளேன். ஆனால் வரலாற்றின் நீண்ட பக்கங்களை உற்று நோக்கினால், இந்த கூட்டுறவு முறை போதுமான அளவு நடைமுறையில் இருக்கிறதா என்பது விவாதிக்கப் பட வேண்டிய ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது.

மனிதர்கள் ஒருவரை ஒருவர் சுரண்டும், நாடுகள் ஒன்றை ஓன்று சுயலாப நோக்கிற்காக தாக்கும் இந்த நாள்களில், கூட்டுறவின் தேவை மிக அதிகமாகவே உள்ளது. பல லட்ச ஆண்டுகளின் முயற்சிக்குப் பின்னும், மனிதன் இன்னும் சுயலாப நோக்குடன் செயல்படும் போது, நாம் பண்பட்ட மனிதர்களாக மாற இன்னும் எத்தனை காலம் பிடிக்கும் ? வரலாற்றின் பக்கங்களில் பல நேரங்களில், உலகம் இப்போது இருப்பதை விட சிறந்ததாக, நாகரீகமாக இருந்தது போல நமக்கு தோன்றுகின்றது. அது போன்ற நேரங்களில் நாம் முன்னேறிக் கொண்டு இருக்கிறோமா அல்லது பின்னோக்கிச் சென்று கொண்டு இருக்கிறோமா என்ற சந்தேகம் நமக்கு வருகிறது. நமது நாட்டிற்க்கும், இப்போது உள்ள நிலையைக் காட்டிலும் சிறந்த ஒரு கடந்த காலம் உள்ளது.

இந்தியா, எகிப்து, சீனா, கிரேக்கம், இது போன்ற பல நாடுகளுக்கு ஒரு சிறந்த கடந்த கால வரலாறு உண்டு. ஆனால் பல நாடுகள் அந்த சிறந்த நிலைமையை விட்டுப் பின்னோக்கிச் சென்றதும் உண்டு. ஆனால் இதற்காக நாம் மனம் தளர வேண்டியது இல்லை. எந்த ஒரு நாட்டின் வளர்ச்சியோ அல்லது தாழ்ச்சியோ மிகப் பெரிய அளவில் உலகத்தைப் பாதிப்பது இல்லை.

மகத்தான கடந்த காலம் பற்றியும், அறிவியல் முன்னேற்றங்கள் பற்றியும் பலர் இன்று பழம்பெருமை பேசிக்கொண்டு இருப்பதை நீ அறிவாய். அறிவியல் அறிஞர்கள் போற்றப் படவேண்டியவர்கள்தான். ஆனால் இப்படிப் பழம்பெருமை பேசுபவர்கள் அப்படிப் பட்ட மனிதர்கள் இல்லை. அப்படி ஒன்றும் மனிதன் பல மிருகங்களை விட மிகப் பெரிய முன்னேற்றங்களை அடைந்து விட்டான் என்று சொல்ல முடியாது. இன்று கூட பல மிருகங்கள் மனிதனைக் காட்டிலும் சிறந்தவையாகவே இருக்கின்றன.

எனது இந்தக் கூற்றை சரியான முறையில் புரிந்து கொள்ளாத மனிதர்கள் என்னைப் பார்த்து எள்ளி நகையாடக் கூடும்.

நீ இப்போது தான் மேட்டர்லிங்க் எழுதிய எறும்புகளின் உலகம் என்ற புத்தகத்தைப் படித்து முடித்ததாகச்சொன்னாய், அந்தப் பிராணிகளின் சமூக அமைப்பைப் பற்றி யோசித்துப் பார். இன்று வாழும் உயிர் இனங்களில் மிகச் சிறியவை அவை, ஆனால் மனிதர்களைக் காட்டிலும் கூட்டுறவு முறையிலும், அந்த இனத்தின் பொதுவான நன்மைக்காக தியாகம் செய்யவும் அவை பல படிகள் முன்னால் உள்ளது. பரஸ்பர உதவி செய்வதும், பொது நன்மைக்காக தியாகம் புரிவதும், நாகரீகத்தின் அளவுகோல் என்றால் எறும்புகள் மனிதர்களைக் காட்டிலும் நாகரீகமானவை.

" ஒரு குடும்பத்திற்காக ஒரு உறுப்பினரையும், ஒரு சமுதாய நலனுக்காக ஒரு குடும்பத்தையும், ஒரு நாட்டின் நலனுக்காக ஒரு சமுகத்தையும், தன்னை உணர உலகத்தையும் தியாகம் செய்யலாம்" என்று ஒரு சமிஸ்கிரத நூல் கூறுகிறது. தன்னை உணர்தல் என்றால் என்ன என்பதை நாம் ஒவொருவரும் நமக்கு தோன்றும் படி கூறலாம், ஆனால் இந்தக் கருத்து என்னைப் பொறுத்தவரை பொது நன்மைக்காக தியாகம் செய்வதையே குறிக்கிறது.

இந்த மகத்தான உண்மையை நாம் பல ஆண்டுகளாக மறந்து விட்டோம், அதுவே நமது வீழ்ச்சிக்கு காரணம். இப்போது இதனை நாம் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். தங்கள் தனிப்பட்ட துயரங்களைப் பற்றி கவலைப் படாமல், இந்த நாட்டின் விடுதலைக்காக பாடு படும் மக்களைப் பார்க்கும் போது, நம்பிக்கை வருகிறது. ஒரு மிகப் பெரிய புனிதமான  பணியில் அவர்கள் ஈடு பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். நாம் இன்று நாட்டின் விடுதலைக்காக போராடிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இதில் நமது சுதந்திரம் மட்டும் இல்லை, உலக மக்களின் பல கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு பதிலும் இருக்கிறது. எனவே உலக நன்மைக்காகவே இந்தப் போராட்டம்.

இன்று நீ அலகாபாத் ஆனந்தபவனத்தில், நான் நைனிடால் சிறையில், உனது தாயார் மலாகா சிறையில். மீண்டும் ஒரு நாள் நாம் ஒன்றாகக் கூடுவோம், அந்த நினைப்பே இப்போது என்னை சந்தோசம் கொள்ளச் செய்கிறது.