புதன், 31 ஜூலை, 2019

ஹிந்தி மொழியின் உபன்யாஸ சாம்ராட் முன்ஷி பிரேம்சந்த் - ஜூலை 30


ஹிந்தி மொழியின் புகழ்பெற்ற நாவலாசிரியரும் நாவலாசிரியர்களில் சக்கரவர்த்தி ( உபன்யாஸ சாம்ராட் ) என்று போற்றப்படும் முன்ஷி பிரேம்சந்த்  அவர்களின் பிறந்தநாள் இன்று. பனிரெண்டுக்கும் மேற்பட்ட புதினங்கள், இருநூற்று ஐம்பது சிறுகதைகள், எண்ணற்ற கட்டுரைகள் மேலும் பல்வேறு மொழிபெயர்ப்புகள் என்று சாம்ராட் பட்டத்திற்கு தகுதியானவர்தான் பிரேம்சந்த்.

புனிதமான காசிநகரின் வடக்குப் பகுதியில் உள்ள லாம்ஹி பகுதியில் தபால் அலுவலகத்தில் பணிபுரிந்துகொண்டு இருந்த அஜெய்ப் ராய் - ஆனந்தி தேவி தம்பதியினரின் மகனாக 1980ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் நாள் பிறந்தவர் பிரேம்சந்த்.  இவரின் இயற்பெயர் தன்பதி ராய். இவரது பெற்றோருக்கு முதலில் பிறந்த இரண்டு குழந்தைகள் இறந்துவிட, மூன்றாவது ஒரு சகோதரியுடன் இவர் நான்காவது மகவு.

இவரது மாமா இவரை நவாப் என்று செல்லமாக அழைப்பது உண்டு. அதனால் இவர் முதலில் எழுதும்போது நவாப் ராய் என்ற புனைபெயரிலேயே எழுதத் தொடங்கினார். தனது ஏழாவது வயதில் ஒரு மதராசாவில் தனது படிப்பைத் தொடங்கினார் தன்பதிராய். இவரது எட்டாவது வயதில் தாயாரும், அதனைத் தொடர்ந்து சிறுது காலத்திலேயே தாயாரின் தாயரும் இறந்து போக, அதற்கு முன்பே இவரின் சகோதரிக்கு திருமணம் ஆகிவிட, தன்பதி ராய் தனித்து விடப்பட்டார்.

வேலை நிமித்தமாக கோரக்பூர் நகருக்கு மாற்றலாகிய இவரின் தந்தை மறுமணம் செய்துகொண்டார். சித்தியிடம் இருந்து தன்பதி ராய்க்கு எந்த பரிவும் கிடைக்கவில்லை. பிரேமச்சந்தின் படைப்புகளில் இப்படியான சித்தி பாத்திரம் மீண்டும் மீண்டும் வருவதை நாம் பார்க்கலாம். கவனிப்பார் யாருமில்லாத தன்பதி ராய் புத்தகம் படிப்பதிலும், அதுபற்றிய எண்ணங்களில் திளைத்து இருப்பதுமாக தனது இளமைப்பருவத்தை கழித்தார். தொடர்ந்து சோதனைகள் அவரை வாட்டியது. தனது பதினேழாம் வயதில் தந்தையையும் இழந்தார். இதற்கு நடுவில் அவருக்கு திருமணமும் ஆகி இருந்தது. படிப்பிலும் சிறப்பானவராக இல்லை. பள்ளி இறுதி தேர்வில் இரண்டாம் வகுப்பில்தான் தேர்ச்சி பெற முடிந்தது. சிறிது காலம் வாரணாசியிலேயே பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருந்தார். அந்த காலகட்டத்தில்தான் இவர் எழுதத் தொடங்கினார்.

இவரது தொடக்ககால படைப்புகள் விடுதலைப் போராட்டத்தை களமாகக் கொண்டே படைக்கப்பட்டது. திலகர் வழியில் தீவிரமாக போராடவேண்டும் என்பதே இவரின் எண்ணமாக இருந்தது. இவரது சில படைப்புகள் அரசால் தடை செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. அரசு வேலையில் இருந்துகொண்டே எழுதியதால் இவரின் நண்பரின் ஆலோசனையின் பேரில் நவாப்ராய் என்ற புனைபெயரில் இருந்து பிரேம்சந்த் என்ற பெயரில் எழுதத் தொடங்கினார்.

தனது வேலையின் காரணமாக கான்பூர் கோரக்பூர் என்று பல்வேறு நகரங்களில் வசித்து வந்த பிரேம்சந்த் தனது நாற்பதாவது வயதுக்குளாகவே பல்வேறு படைப்புகளை உருவாக்கி உருது மற்றும் ஹிந்தி மொழியின் முக்கிய படைப்பாளியாக அறியப்பட்டு இருந்தார். அப்போது காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு தனது வேலையை ராஜினாமா செய்தார். சிறிதுகாலம் மும்பையில் திரைத்துறையில் பணியாற்றினார்.

பிரேம்சந்தின் காலம் என்பது ஸ்வாமி விவேகானந்தர், கோகலே, திலகர் அதன்  காந்தி என்று பல்வேறு தலைவர்கள் நாட்டில் பெரும் தாக்கத்தை உருவாக்கிய காலம். அது பிரேம்சந்தின் படைப்புகளிலும் காணலாம். சுதந்திர போராட்டம், ஏழ்மை ஒழிப்பு, கல்வி சீர்திருத்தம், தொழிலாளர்களின் ஒடுக்கப்பட்ட நிலைமை என்ற கருத்துக்கள் இவர் படைப்புகளில் விரவி இருப்பதை நாம் காணலாம். தமிழகத்தில் பாரதி போன்று ஹிந்தி மற்றும் உருது மொழியில் ஒரு புது பாதையைத் தொடங்கி வைத்தவர் என்ற பெருமை முன்ஷி பிரேம்சந்த் அவர்களையே சாரும். சேவா சதன், நிர்மலா, கோதான், கர்மபூமி என்பவை இவரின் முக்கியமான சில படைப்புகள், இவரது பல புத்தகங்கள் தமிழ்மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.

1936ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள் பிரேம்சந்த் காலமானார்.  

திங்கள், 29 ஜூலை, 2019

பாரத நாட்டில் ஒரு துருவ நட்சத்திரம் - ஜெ ஆர் டி டாடா - ஜூலை 29.


இஸ்லாமிய படையெடுப்பில் இருந்து தப்பி ஜொராஸ்டர்கள் என்னும் பார்சி இன மக்கள் பாரத நாட்டில் தஞ்சம் அடைந்தனர். அன்று குஜராத்  பகுதியை ஆண்ட மன்னன் ஒரு கொள்கலம் நிறைய பாலை அவர்களுக்கு அனுப்பி வைத்தானாம். பார்சி மத பூசகர் கையளவு சர்க்கரையை அதில் போட்டு திருப்பி அனுப்பினாராம். எங்கள் நாட்டில் ஏற்கனவே அதிகமான மக்கள் இருக்கிறார்கள் என்பது அந்த மன்னன் அனுப்பிய செய்தி, பாலில் கலக்கும் சர்க்கரை தனியாகத் தெரிவதில்லை ஆனால் அது சுவையைக் கூடும் அதுபோல நாங்கள் இந்த மண்ணில் வேறுபட்டுத் தெரியமாட்டோம், ஆனால் இந்த மண்ணின் வளத்தைக் கூட்ட எங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்வோம் இது அந்த பூசகரின் பதில். நடந்ததோ இல்லையோ தெரியாது, ஆனால் பாரத நாட்டில் மிகச் சிறுபான்மையாக இருந்துகொண்டு, நாட்டின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய இனம் பார்சி இனம். அந்த இனத்தின் தன்னிகரில்லாத தாரகையாக ஒளிவீசியவர் ஜஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா - சுருக்கமாக ஜெ ஆர் டி டாடா.

புகழ்பெற்ற டாடா குடும்பத்தில் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவிற்கும்  பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த அவரது மனைவியான சூஸ்சானாவிற்கும் மகனாக 1904ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள் பிறந்தவர் ஜஹாங்கிர் டாடா. தாயார் பிரெஞ்சு நாட்டவர் என்பதால் ஜஹாங்கீரின் இளமைப் பருவம் பிரெஞ்சு நாட்டிலேயே கழிந்தது. அவரது பள்ளிப்படிப்பும் அங்கேயே நடந்தது. டாடா நிறுவனங்களின் பணிக்காக அவரது தந்தை வேறுவேறு நாடுகளில் பணியாற்ற இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா என்று குடும்பமும் அவரோடு செல்ல பல்வேறு இடங்களில் ஜஹாங்கிர் படிக்க நேர்ந்தது. தாயாரின் மரணத்தை அடுத்து ரத்தன்ஜி தனது குடும்பத்தை இந்தியாவுக்கே கொண்டு வந்தார். தனது மேல்நிலைக் கல்வியை இங்கிலாந்து நாட்டில் முடித்த ஜஹாங்கிர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்க முடிவு செய்தார். ஆனால் அப்போது பிரெஞ்சு நாடு இருபது வயதான இளைஞர்கள் அனைவரும் இரண்டாண்டு கட்டாய ராணுவ சேவை புரியவேண்டும் என்று சட்டமியற்றியது. ஆமாம், இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபர் அப்போது பிரெஞ்சு குடிமகனாகத்தான் இருந்தார். அரசின் ஆணையை ஏற்று ஜஹாங்கிர் பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரியத் தொடங்கினார். தரைப்படையில் இணைந்த அவ்ருக்கு பிரெஞ்சு மொழியோடு ஆங்கிலமும் பேசவும் எழுதவும் தெரியும் என்பதையும் அதோடு அவருக்கு தட்டச்சும் தெரியும் என்பதால் அவரை பிரெஞ்சு தளபதி ஒருவரின் உதவியாளராக ராணுவம் பணிமாற்றம் செய்தது. கட்டாய ராணுவ சேவையை முடித்துவிட்டு மீண்டும் கல்லூரிக்குச் செல்ல ஜஹாங்கிர் திட்டமிட்டுக் கொண்டு இருந்தபோது, அவர் தந்தை அவரை டாடா நிறுவனத்தில் பணியாற்ற அழைத்தார். தனது பிரெஞ்சு குடியுரிமையை 1929ஆம் ஆண்டு துறந்த ஜஹாங்கிர் முறைப்படி இந்திய குடிமகனாக மாறினார்.

இதனிடையே 1925ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தில் சம்பளம் இல்லாத பயிற்சி பெரும் தொழிலாளியாக இணைந்தார். மாபெரும் வணிக சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பும் வரலாறு அங்கேதான் தொடங்கியது. 1938ஆம் ஆண்டு தனது 34ஆவது வயதில் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான TATA SONS நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஐம்பது  ஆண்டுகள் அவர் இந்தப் பதவியில் இருந்து செயல்பட்டார். பதினான்கு நிறுவனங்களாக இருந்த குழுமத்தை தொண்ணூற்று ஐந்து நிறுவனங்கள் கொண்ட மாபெரும் ஸ்தாபனமாக அவர் வார்த்தெடுத்தார். நிறுவங்களின் எண்ணிக்கை, கொள்முதல் வரவு செலவு, நிகர லாபம், மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கியது என்பதெல்லாம் போக டாடா நிறுவனம் என்றால் ஒரு நெறிமுறை தவறாத நிறுவனம் என்றும் தரமான பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற பெயரை எடுத்ததுதான் அவரது ஆகப் பெரும் சாதனையாக இருக்கும்.

டாடா மோட்டார்ஸ், டைட்டான் கடிகாரத் தொழில்சாலை, டாடா கம்ப்யூட்டர்ஸ், டாடா கன்சுலேட்டன்சி சர்வீசஸ் என்று டாடா நிறுவனங்களின் பொருள்களை உபயோகிக்காத இந்திய மக்களே இருக்க முடியாது.



பாரத நாட்டில் முதல் முதலாக விமானம் ஓட்டும் தகுதிச் சான்றிதழைப் பெற்றவர் ஜஹாங்கிர் டாடாதான். அவர் தொடங்கிய டாடா விமான போக்குவரத்து நிறுவனம்தான் இன்று ஏர் இந்தியா நிறுவனமாக மாறி உள்ளது. ஆனாலும் அவரது விமான சேவையை தேசியமயமாக்கியத்தில் டாடாவிற்கு வருத்தம்தான். 1932ஆம் ஆண்டு கராச்சியில் இருந்து அஹமதாபாத் வழியாக மும்பை நகருக்கு தபால்களை தன்னந்தனியாக ஜஹாங்கிர் தனது விமானத்தில் கொண்டு வந்தார். இந்திய விமானப் போக்குவரத்துத்துறை அன்றுதான் தொடங்கியது. இந்த நிகழ்வின் முப்பதாவது ஆண்டு நிறைவிலும் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அதே போன்ற சிறிய விமானம் ஒன்றை அதே கராச்சி மும்பை நகருக்கு இடையே ஜஹாங்கிர் ஓட்டினார். இந்த நிகழ்வின் ஐம்பதாவது ஆண்டு என்பது 1982, அப்போது அவருக்கு வயது எழுபத்தி எட்டு.



வெறும் தொழிலதிபராக மட்டும் இருந்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே பொதுவாக பார்சி தொழிலதிபர்களும் குறிப்பாக டாடா குழுமமும் தங்கள் இலக்காக வைத்துக் கொள்வதில்லை. பொதுவாக அவர்களின் குழுமங்களின் பெரும்பான்மையான பங்குகள் அவர்கள் நடத்தும் தொண்டு நிறுவனங்களின் பெயரில்தான் இருக்கும். எனவே பெரும்பான்மையான லாபம் என்பது மக்களின் தேவைகளுக்கே செலவிடப் படும். அப்படி டாடா நிறுவனம் முன்னெடுத்த இயக்கம் குடும்ப கட்டுப்பாடு மற்றும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது.

அதுபோக மும்பை நகரில் தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை, Tata Institute of Social Science, Tata Institute of Fundamental Research ஆகியவை ஜஹாங்கிர் டாடாவால் நிறுவப்பட்டவை. அரசால் சட்டப்படி கட்டாயமாக்குவதற்கு முன்னமே தங்கள் தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர விலை, இலவச மருத்துவ சிகிச்சை, தொழிலாளர் சேம நிதி ஆகியவற்றை தங்கள் நிறுவனங்களில் ஜஹாங்கிர் டாடா அறிமுகப்படுத்தினார்.

பல்வேறு விருதுகளையும் மரியாதைகளையும் பெற்ற ஜஹாங்கிர் டாடாவிற்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருதை அரசு 1992ஆம் ஆண்டு வழங்கியது. இந்த விருதை பெற்ற முதல் தொழிலதிபர் டாடாதான். இன்றுவரை வேறு எந்த தொழிலதிபரும் இந்த விருதைப் பெறவில்லை.

1993ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம்  நாள் ஸ்விட்சர்லாந்து நாட்டில் தனது 89ஆம் வயதில் ஜெ ஆர் டி டாடா காலமானார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடாளுமன்றம் தனது நடவடிக்கைகளை ஒத்திவைத்தது. பொதுவாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் மறைவுக்கு இப்படி செய்வது மிக அரிது.

பாரத பொருளாதார வரலாற்றையோ அல்லது தொழில் வரலாற்றையோ எழுதும் போது ஜஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவிற்கு ஒரு தனி இடம் இருக்கும் என்பதில் ஐயமே இல்லை.

ஞாயிறு, 28 ஜூலை, 2019

கல்வித்துறையின் கதாநாயகன் H S S லாரன்ஸ் - பிறந்தநாள் 28 ஜூலை

கல்வித்துறையின் கதாநாயகன் H S S லாரன்ஸ் - பிறந்தநாள் 28 ஜூலை

இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கல்வித்துறை பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதில் பெரும்பங்காற்றி ஆனாலும் இன்று நினைவில் இல்லாமல் போன ஒரு அறிஞரைப் பற்றித்தான் இன்று பார்க்கப்போகிறோம். தமிழகத்தின் கல்வித்துறை என்றால் பொதுவாக  நாம் நினைவு கூறுவது காமராஜரைத்தான். கொஞ்சம் யோசித்தால் நெ து சுந்தரவடிவேலுவின் பெயர் நினைவுக்கு வரலாம், அவர்கள் அளவிற்கு தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு துணை நின்றவர்தான் திரு ஹாரிஸ் ஸாம் சகாயம் லாரன்ஸ் அவர்கள்.

1923ஆம் ஆண்டு நாகர்கோவில் நகரைச் சார்ந்த ஸாம் - அருளம்மாள் ஹாரிஸ் தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர்  இவர்.இந்தியாவின் வைஸ்ராயாகப் பணியாற்றிய ஜான் லாரன்ஸ் நினைவாக இவருக்கு பெயரிடப்பட்டது. தனது பள்ளிப்படிப்பை நாகர்கோவில் நகரிலும், பின்னர் வரலாறு மற்றும் பொருளாதாரத்துறைகளில் தனது இளங்கலை பட்டத்தை திருவனந்தபுரத்தில் இவர் முடித்தார். பாரத அரசு இவரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு மேற்படிப்புக்கு அனுப்பியது. அங்கே லாரன்ஸ் தனது முதுகலைப் பட்டத்தையும் கல்வித்துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

காலிகட் ஆசிரியர் பயிற்சி கல்லூரியிலும் பின்னர் வேலூர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியிலும் விரிவுரையாளராகவும் பின்னர் வேலூர் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார். கல்வித்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த லாரன்ஸ் 1976ஆம் ஆண்டு முதல் 1978ஆம் ஆண்டு வரை பள்ளிக்கல்விதுறையின் இயக்குநராகப் பணியாற்றினார். இவரது காலத்தில்தான் தமிழக கல்வித்துறையின் 150ஆவது ஆண்டு விழா 1977ஆம் ஆண்டு கொண்டாடப் பட்டது.

1976ஆம் ஆண்டு பள்ளிக்கல்வி சீரமைப்பு ஆணையத்தின் சிறப்பு அதிகாரியாக இவர் பணியாற்றியபோது அளித்த அறிக்கையின்படிதான் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு முடித்தபின் பள்ளி வளாகத்திலேயே உயர்நிலை வகுப்புகள் பின்னர் கல்லூரிப் படிப்பு என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டது. அதுவரை பள்ளி வளாகத்தில் பதினோராம் வகுப்பு வரை, பின்னர் கல்லூரியில் ஓராண்டு பின்னர் பட்டப்படிப்பு என்ற முறைதான் இருந்து வந்தது. கல்வித்துறையின் இந்த மாற்றத்தால் உருவான உயர்நிலைப் பள்ளி இயக்குநரகத்தின்  முதல் இயக்குனராக  திரு லாரன்ஸ் நியமிக்கப்பட்டார். அப்போதுதான் பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்த மெட்ரிகுசேஷன் பள்ளிகளை நிர்வகிக்க தனி அமைப்பு உருவாக்கப்பட்டது.

1969ஆம் ஆண்டு முதல் 1975ஆம் ஆண்டு வரை ஐநா நிறுவனத்தின் சார்பில் ஆப்கானிஸ்தான் நாட்டின் கல்வித்துறையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு  அந்த நாட்டின் கல்வித்துறையை நவீனமயமாக்கினார்.

பள்ளிகல்விதுறையில் லாரன்ஸின் பங்களிப்பு மகத்தானது. அகில இந்திய வானொலி நிலையத்தின் கல்வி ஒலிபரப்பை மாணவர்கள் அனைவரும் கேட்கும் விதமாக 31,000 பள்ளிகளுக்கு பொதுமக்கள் பங்களிப்போடு வானொலிப்பெட்டிகள் வழங்க வழிவகுத்தது, அதுவரை அங்கீகாரம் பெறாத பள்ளிகள் பற்றிய அறிக்கையை அரசுக்கு வழங்கியது, 1977ஆம் ஆண்டு முதல் அரசு பொதுதேர்வுகளில் முதலிடம் வாங்கும் மாணவர்களுக்கு பாராட்டு  பட்டயம் வழங்குவது, பொறியியல் மருத்துவம் போன்ற படிப்புகளில் சேரும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குவது, பள்ளிகளில் மாணவர்களுக்கு நல் ஒழுக்கத்திற்கான பரிசு வழங்குதல், பள்ளிகளில் புத்தக வங்கிகளை உருவாக்குவது என்று பல்வேறு முன்னெடுப்புக்களை திரு லாரன்ஸ் மேற்கொண்டார்.

பள்ளி மாணவர்களைக் கொண்டு பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்துதல், ஒரு கிராமத்தைத் தத்தெடுத்தல் என்று மாணவர்களுக்கு பள்ளிகளை, பாடங்களைத் தாண்டி சமுதாய கடமைகளை மேற்கொள்ளும் எண்ணத்தை விதைக்க இவர் முயற்சிகளை மேற்கொண்டார்.

ஒரு மேல்நிலைப் பள்ளியைச் சுற்றி நான்கு அல்லது ஐந்து நடுநிலைப் பள்ளிகள், பத்து முதல் இருபது தொடக்கப்பள்ளிகள் என்ற பள்ளித் தொகுதிகள் ( School Complex ) என்ற முறையை லாரன்ஸ் உருவாக்கினார். தமிழக அரசின் இந்த புதுமையான முயற்சிகளை பாரத அரசு பாராட்டியது. இன்று 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள கல்விக்கொள்கையில் உள்ள இதே கருத்தை தமிழக்தில் உள்ள எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதுதான் ஆச்சர்யமாக உள்ளது.

பள்ளித்துறையில் இருந்து ஓய்வு பெற்றபின் வங்கி பணியாளர் தேர்வாணையத்திலும் திரு லாரன்ஸ் திறம்படப் பணியாற்றினார்.

இவர் தனது 85ஆவது வயதில் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் நாள் காலமானார்.

வெள்ளி, 26 ஜூலை, 2019

கார்கில் போரின் வெற்றிவிழா நாள் - ஜூலை 26

மதத்தின் அடிப்படையில் நாட்டைப் பிரித்தபின்னும் ஹிந்துஸ்தானத்தின் வளம் பாகிஸ்தானின் கண்ணை உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. தனிக்குடித்தனம் போன பிறகும் தங்கள் நாடு வளமாக இருக்கவேண்டும் என்று எண்ணாமல், பாரதத்தை அழிப்பதிலேயே பாகிஸ்தான் தனது சக்தியை எல்லாம் செலவிட்டுக் கொண்டு இருக்கிறது. சுதந்திரம் அடைந்த உடனேயே காஷ்மீரை கைப்பற்ற முயற்சி செய்தது, அதன் பிறகு 1965 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் தேவையே இல்லாமல் பாரதத்தின் மீது படையெடுத்தது. 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானை இரண்டு துண்டாக்கி பங்களாதேஷ் என்ற நாடு உருவாக பாரதம் உதவி செய்தது. நேரடிப் போரில் வெற்றி பெறமுடியாது என்பதை தெளிவாகப் புரிந்துகொண்ட பாகிஸ்தான் பாரதம் முழுவதும் பிரிவினைவாதிகளையும், தீவிரவாதிகளையும் ஊக்குவித்தும், கள்ளத்தனமாக பாரத நாட்டின் செலவாணியை அச்சிட்டும் மறைமுகப் போரை தொடர்ந்து நடத்தி வந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படி பாக்கிஸ்தான் முயற்சி செய்த மற்றுமொரு தவறான சாகச நடவடிக்கைதான் கார்கில் போர்.

அன்றய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பாகிஸ்தானோடு நல்லுறவை உறுதி செய்யும் விதமாக அன்றய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் உடன் இணைந்து 1999ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் நாள் லாகூர் பிரகடனத்தில் கையெழுத்து இட்டார். கையெழுத்திட்ட மையின் ஈரம் காய்வதற்கு முன்னால் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவைத் துண்டாடும் தனது முயற்சியைத் தொடங்கியது. 1971ஆம் ஆண்டில் சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து பாரதத்தோடு நேரடிப் போரில் வெற்றி அடைய முடியாது என்பதை தெளிவாக உணர்ந்துகொண்ட பாகிஸ்தான் மறைமுகப் போரை முன்னெடுத்துக் கொண்டே இருந்தது. பாரதம் முழுவதும் பல்வேறு குழுக்களைத் தூண்டி விட்டு இந்த நாட்டின் அமைதியைக் குலைத்து, பொருளாதாரத்தை நாசமாக வேண்டும் என்பது மட்டும் தான் பாகிஸ்தானின் குறிக்கோள்.



பாஜக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை ஜெயலலிதா விலக்கிக் கொள்ள, வாஜ்பாய் அரசு நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போன நேரம் அது. காபந்து அரசாக வாஜ்பாய் அரசு நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் தாக்கினால் பாரத அரசு அதனை முழுமூச்சாக எதிர்கொள்ளாது, காஷ்மீரை முழுவதுமாக வெற்றி கொள்ள இதுதான் சரியான நேரம் என்று பாகிஸ்தான் முடிவு செய்தது.

காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் பகுதியையும் லே நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையை கார்கில் பகுதியில் துண்டாடிவிட்டால் காஷ்மீர் மாநிலம் முழுவதையும் தங்கள் ஆளுமைக்குள் கொண்டுவந்து விடலாம் என்று திட்டம் தீட்டி பாகிஸ்தான் பதர் திட்டம் என்று பெயரிட்டு 18,000 அடி உயரத்தில் உள்ள சாலையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 1999 ஆம் ஆண்டு மே மாதத்தில் அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் சிலர் பாகிஸ்தான் ராணுவத்தினரின் நடமாட்டத்தை இந்திய ராணுவத்திடம் தெரிவித்தனர். மே 5ஆம் தேதி ஐந்து பாரத ராணுவ வீரர்களைச் சிறைபிடித்து பாகிஸ்தான் அவர்களை சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிராக சித்திரவதை செய்து கொலை செய்தது. மே மாதம் இரண்டாம் வாரத்தில் பாரதம் தனது படைகளை காஷ்மீரில் குவித்தது. மே 27ஆம் நாள் நாடு மிக் 21, மிக் 27 ரக போர்விமானங்களில் தலா ஒன்றை இழந்தது. விமானப்படை அதிகாரி நசிகேசஸ் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானார்.

இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இது உள்ளூர் போராளிகளின் போராட்டம் மட்டுமே என்று பாகிஸ்தான் கூறிக்கொண்டே இருந்தது. ஜூன் 11ஆம் நாள் அன்றய பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி முஷாரப் சீனாவில் இருந்து துணைத் தளபதி ஆசிம்கானோடு நடத்திய தொலைபேசி உரையாடலை இந்தியா வெளியிட்டது. இதன் மூலம் இந்தப் போரை நடத்துவது பாகிஸ்தான் ராணுவம் என்பது உறுதியானது.

பாரதம் மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் அணு ஆயுத பலம் கொண்டவை என்பதால் அன்றய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் பாகிஸ்தான் அரசை தனது ராணுவத்தை பின்வாங்கச் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

ஜூன் 29ஆம் நாள் 5060 என்ற மலை உச்சியையும் 5100 என்ற மலைச் சிகரத்தையும் பாரத ராணுவம் கைப்பற்றியது. பதினோரு மணி நேரம் நடந்த தாக்குதலுக்குப் பிறகு புலிமலை சிகரத்தை பாரதம் கைப்பற்றியது.

பாரத கடற்படை கராச்சி துறைமுகத்தை தாக்கும் அளவில் நிலை கொண்டன. பாகிஸ்தானின் கடல்வழி வர்த்தகப் பாதை தடுக்கப்பட்டது. பின்னர் ஒரு நேரத்தில் அன்று பாகிஸ்தானிடம் ஆறு நாட்களுக்கான எரிபொருளே இருந்தது என்று நவாஸ் ஷெரிப் கூறினார்.

ஜூலை 5ஆம் நாள் ட்ராஸ் பகுதியை பாரத ராணுவம் தன்வசமாகியது. தோல்வி உறுதி என்பதை அறிந்த பாகிஸ்தான் பிரதமர் தனது ராணுவத்தை பின்வாங்குமாறு உத்தரவிட்டார். ஜூலை 14ஆம் நாள் பிரதமர் வாஜ்பாய் கார்கில் போரில் வெற்றி அடைந்து விட்டோம் என்று அறிவித்தார். ஜூலை 26ஆம் நாள் முழுமையான வெற்றியாக பாரத மண்ணில் இருந்து பாகிஸ்தானை முழுவதுமாக துடைத்து எடுத்து பாரத ராணுவம் தனது வீரத்தையும் தியாகத்தையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்தது.

தாயகம் காக்கும் தன்னலமற்ற சேவையில் 527 வீரர்கள் தங்கள் நல்லுயிரை ஈந்தனர். 1,363 வீரர்கள் காயமடைந்தனர். நாட்டின் மிக உயரிய ராணுவ விருதான பரமவீர் சக்ரா விருது யோகேந்திரசிங் யாதவ், மனோஜ் குமார் பாண்டே, விக்ரம் பத்ரா, சஞ்சய் குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அனுஜ் நய்யார், ராகேஷ் சிங் அதிகாரி ஆகியோர் மஹாவீர் சக்ரா விருதைப் பெற்றனர்.

தேசமெங்கும் ஜூலை 26 கார்கில் வெற்றி தினமாக அனுசரிக்கப்படுகிறது. அன்று மாலை ஆறு மணி அளவில் வீடுகளில் தீபம் ஏற்றி மக்கள் பலிதானியான வீரர்களுக்கு தங்கள் அஞ்சலியை செலுத்துவது வழக்கம்.

நாட்டின் காவல் அரணாக செயல்படும் முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவு கூறுவோம். அதற்கு நன்றி செலுத்துவோம்.


கார்கில் போர், வாஜ்பாய், நவாஸ் ஷெரிப், முஷாரப்,








வியாழன், 25 ஜூலை, 2019

வேட்டைக்காரனிலிருந்து காப்பாளனாக ஜிம் கார்பெட் - ஜூலை 25



உலகத்தில் இதுவரை தோன்றிய உயிரினங்களில் கடைசியாகத் தோன்றிய உயிரினம் மனிதன், ஆனால் உலகம் முழுவதும் அவனுக்கே உரிமை என்றும் மற்ற எல்லா உயிரினங்களும் அவனது தேவைக்குத் தோன்றியதாகவே மனிதன் எண்ணிக்கொண்டு இருக்கிறான். அடர்ந்த காடுகளில் வசிக்கும் மிருகங்களை கொன்று குவித்து பல உயிரினங்களை இல்லாமலேயே ஆக்கிய பெருமை அவனுக்கே உண்டு.

காட்டைப் பற்றிய அறிமுகம் முதலில் நமக்கு கதைப் புத்தகங்களில் இருந்தே கிடைக்கிறது. அதுவும் எப்படி - அது ஒரு அடர்ந்த காடு. அதில் சிங்கம், புலி போன்ற கொடிய மிருகங்கள் வசித்து வந்தன என்று. சிங்கமும் புலியும் ஒரே காட்டில் வசிக்காது, வசிக்க முடியாது.; சிங்கம் புதர் காடுகளில் வசிக்கும் மிருகம், புலி அடர்ந்த மரங்கள் உள்ள மழைக்காடுகளில்தான் வசிக்கும். அவை கொடிய மிருகங்களும் கிடையாது. பொதுவாக மிருகங்கள் மனிதர்களைக் கொல்வதில்லை. மனிதர்களை உண்ணும் மிருகமாக ஒரு புலி எப்போது மாறுகிறது? இயற்கையிலேயே தனக்கு அந்நியமான, மாறுபட்ட ஒரு உணவான மனிதனை எப்படிப் புலியால் தின்ன முடிகிறது? தொண்ணூறு சதவிகிதக் காரணம், ஒரு புலிக்கு ஏற்படும் காயங்கள். குறிப்பாக அக்காலத்தில் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தப்பட்ட புலி, துப்பாக்கிக்குண்டு உள்ளேயே இருப்பதால் கால்களையோ உடலையோ அசைக்கும்போது வலி ஏற்பட்டுப் பிற மிருகங்களை வேட்டையாட முடியாமல் போகிறது. அதேபோல் சில சமயங்களில் முள்ளம்பன்றிகளை வேட்டையாடும்போது அதன் முட்கள் கால்களில் நன்றாக உள்ளே தைத்துவிடுவதாலும் அந்தக் காயங்கள் பெரிதாகி, பிற மிருகங்களைத் துரத்த முடியாமல் பல நாட்கள் பட்டினி கிடக்கும் சூழல் புலிகளுக்கு ஏற்படுகிறது. இந்தச் சூழலில் தற்செயலாகக் காடுகளில் சுள்ளிகள் சேகரிக்க வரும் மனிதர்களைப் பார்க்கும் புலிகள், எதேச்சையாக அவர்களைக் கொல்ல நேரிட்டு, முதன்முறையாக மனித மாமிசத்தை சாப்பிட்டுப் பழகி, இதன்பின் மனிதர்களை எளிதில் கொல்லமுடியும் என்று தெரிந்துகொண்டே மனித வேட்டையர்களாக மாறுகின்றன.

இதை எல்லாம் புலிகளுக்கு மிக அருகே இருந்து, மனிதர்களை வேட்டையாடிய புலிகளை கொன்று வீழ்த்திய ஒரு ஆங்கிலேயர் பதிவு செய்து உள்ளார். அவரது அனுபவங்களை அவர் ஒரு தேர்ந்த கதை சொல்லியாக பதிவும் செய்து உள்ளார். அவர் எழுதிய புத்தகத்தை " இவர்கள் நிஜமாகவே ஏழைகள். இந்தியாவின் பஞ்சை பராரிகள் என்று அழைக்கப்படுபவர்கள். இவர்கள் மத்தியில் நான் வாழ்ந்து இருக்கிறேன். இவர்களை நேசிக்கிறேன். இந்தப் புத்தகத்தில் இவர்களைப் பற்றித்தான் பேசப்போகிறேன். இந்தியாவின் ஏழை ஜனங்களாகிய என் நண்பர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பணிவுடன் சமர்ப்பணம் செய்கிறேன்" என்று அவர் யார் மத்தியில் வாழ்ந்தாரோ அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

ஆங்கில நாட்டைச் சார்ந்த கிறிஸ்டோபர் வில்லியம் கார்பேட் ஆங்கில ராணுவத்தில் பணியாற்றிவிட்டு பின்னர் நைனிடால் நகரில் தபால்துறையில் பணியாற்றிவந்தார். அவரின் பதினாறு குழந்தைகளில் எட்டாவது குழந்தையாக 1875ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் நாள் பிறந்தவர் ஜிம் கார்பெட். தனது ஆறாவது வயதிலேயே தந்தையை இழந்த ஜிம் தனது பத்தொன்பதாம் வயதில் அன்றய வங்காள ரயில்வே துறையில் வேலைக்குச் சேர்ந்தார்.

1907ஆம் ஆண்டு முதல் 1935ஆண்டுக்குளாக மனிதர்களை வேட்டையாடி வந்த பனிரெண்டு புலிகளையும் இரண்டு சிறுத்தைகளையும் இவர் சுட்டுக் கொன்றார். அந்த அனுபவங்களை ஜிம் புத்தகங்களாக எழுதியுள்ளார்.

தேவையில்லாமல் புலிகளைக் கொல்லக்கூடாது என்ற இயல்புடையவர் கார்பெட். எப்போது ஒரு புலி மனிதர்களைக் கொல்ல ஆரம்பிக்கிறதோ, அப்போதுதான் அவற்றைக் கொல்லலாம் என்பது கார்பெட்டின் கருத்து. அப்போதுகூட நூறு மடங்கு உறுதியாகப் புலியை அடையாளம் தெரிந்தால்தான் கொல்லவேண்டும் என்பது அவர் கொள்கை. அதையும் மீறி இரண்டு சாதாரணப் புலிகளைத் தெரியாமல் கொன்றது பற்றி மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.

1920களில் படம் எடுக்கும் காமிராவை வாங்கிய ஜிம் கார்பெட், பல்வேறு உயிரினங்களை படமெடுத்து அவைகளை ஆவணப்படுத்தி உள்ளார். தனது நெடிய வேட்டை அனுபவத்தின் மூலம் மிகச் சில புலிகளே அதுவம் வேட்டையாட முடியாத நிலையில் உள்ள புலிகள்தான் மனிதர்களை கொன்று தின்கின்றன என்பதை அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

பல்வேறு கல்வி நிலையங்களிலும், கூட்டங்களிலும் வனவிலங்குகளை பாதுகாப்பதின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றி ஜிம் கானுயிர்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்கினார்.




இவர் குமாவுனின் ஆட்தின்னிகள் (Man-eaters of Kumaon 1946), ருத்ரப்ரயாகின் ஆட்தின்னி சிறுத்தை (The man-eating leopard of Rudraprayag 1948), கோயில் புலியும் மேலும் சில குமாவுன் ஆட்தின்னிகளும்(Temple Tiger and maore man-eaters of Kumaon 1954) ஆகிய நூற்களில் தனது வேட்டை அனுபவத்தைப் பதிவு செய்தார். இந்திய ஊரக வாழ்க்கையை எனது இந்தியா (My India) என்ற நூலில் பதிவு செய்தார். புதர்க்காட்டின் போதனைகள் (Jungle lore) அவரது தன்வரலாற்று நூலாகக் கருதப்படுகிறது.குமாவுனின் ஆட்தின்னிகள் 27 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

1947க்குப் பிறகு தனது சகோதரி மேகியுடன் கென்யாவிலுள்ள நியேரியில், ஆலமர வகையைச் சார்ந்த ஒரு மரத்தில் கட்டப்பட்ட குடிசையில் வசிக்கத் தொடங்கிய கார்பெட் 19 ஏப்ரல் 1955ல் மாரடைப்பு காரணமாக உயிர் துறந்தார். இவரது இறுதி வார்த்தைகள்: "எப்போதும் துணிச்சலோடிரு.இவ்வுலகை பிறர் வாழ்வதற்கு இன்னும் மகிழ்ச்சிகூடிய இடமானதாக முயன்று மாற்று" என்பதாகும்.

இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தனது ஆறாவது நூலான மர உச்சிகள் (Tree Tops)-ஐ எழுதி முடித்திருந்தார்.

இவரது வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளை நினைவுகூறும் விதமாக 1957ஆம் ஆண்டு பாரத அரசு ஹெய்லி தேசியப் பூங்காவிற்கு கார்பெட் சரணாலயம் என்று பெயர் சூட்டி மரியாதை செலுத்தி உள்ளது.  

புதன், 24 ஜூலை, 2019

விப்ரோ நிறுவன உரிமையாளர் ஆசிம் பிரேம்ஜி பிறந்தநாள் - ஜூலை 24.


பாரதத்தின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும், இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், தனது சொத்தில் பெரும்பங்கை கல்விக்காக அளித்தவருமான திரு ஆசிம் பிரேம்ஜியின் பிறந்தநாள் இன்று. குஜராத் மாநிலம் கட்ச் பகுதியைச் சார்ந்த ஷியா முஸ்லீம் வகுப்பை சார்ந்தவர் ஆசிம்.  இவரது தந்தை முகம்மது அலி ஜின்னாவிற்கு மிக நெருக்கமானவர். ஆனாலும் ஜின்னாவின் அழைப்பை நிராகரித்து விட்டு நாடு பிரிவினையாகும் போது பாரத நாட்டிலேயே தங்கிவிட்டவர்.

1946ஆம் ஆண்டு ஆசிம் பிரேம்ஜியின் தந்தை முஹம்மது ஹாசிம் பிரேம்ஜி மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஜாலேகான் மாவட்டத்தில் ஒரு சமையல் எண்ணெய் தயாரிக்கும் ஆலையை நிறுவினார். 1966ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக அவர் இறந்து போக, அமெரிக்காவில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொறியிலாளர் பட்டப்படிப்பை படித்துக்கொண்டு இருந்த ஆசிம் பிரேம்ஜி உடனடியாக நாடு திரும்ப வேண்டி இருந்தது. குடும்ப தொழிலின் நிர்வாகப் பொறுப்பை ஆசிம் பிரேம்ஜி ஏற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு வயது இருபத்தி ஓன்று மட்டுமே.

இளமைத் துடிப்போடு இருந்த ஆசிம் பல்வேறு பொருள்களைத் தயாரிக்கத் தொடங்கினார். மின்விளக்குகள், சிறு குழந்தைகளுக்கான சோப்பு முதலியவை விப்ரோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட தொடங்கின. அது நெருக்கடி நிலைக்குப் பிறகு ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த நேரம். அரசின் பொருளாதாரக் கொள்கையால் இந்தியாவில் இருந்து ஐபிஎம் நிறுவனம் வெளியேறியது. கணினி துறைக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதைக் கணித்த பிரேம்ஜி கணினி தயாரிப்பில் இறங்கினார்.
அதன் நீட்சியாக மென்பொருள் சேவை வழங்கும் தொழிலையும் அவர் தொடங்கினார். இன்று விப்ரோ நிறுவனம் ஏறத்தாழ அறுபதாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வணிகம் செய்கிறது, ஒரு லட்சத்து எழுபதாயிரம் பணியாளர்கள் இதில் வேலை பார்த்து வருகிறார்கள்.

வணிகம் செய்வதில் திறமைசாலியாக பலர் இருக்கலாம், ஆனால் தனது சொத்தில் பெரும்பகுதியை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அளிக்கும் பரந்த மனம் எல்லோருக்கும் இருப்பதில்லை. தான் சார்ந்து இருக்கும் சமுதாயம் நல்லபடி வாழவேண்டும் என்ற எண்ணத்தால் பிரேம்ஜி அவர் பெயரிலேயே ஒரு சேவை நிறுவனத்தைத் தொடங்கினார். தேவைப்படுபவர்களுக்கு பணம் அளிப்பது என்ற எண்ணத்தில் அல்லாது சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட பாதை கல்வி.

சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வை கல்வியின் மூலம்தான் சரி செய்ய முடியும் என்று முடிவு செய்ததால் அவர் இன்று ஆறு மாநிலங்களில் தனது தொண்டு நிறுவனம் மூலமா பள்ளிகளை நடத்திவருகிறார். அதோடு ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சிகளையும் அவரது தொண்டு நிறுவனம் முன்னெடுக்கிறது. கர்நாடக அரசு அவருக்கு ஒரு தனியார் பல்கலைக் கழகம் நடத்த அனுமதி அளித்துள்ளது. அதிலும் கல்வி, பொருளாதாரம், சட்டம் போன்ற பாடங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புக்கள் கற்பிக்கப்படுகின்றன.

விப்ரோ நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குகளை ஆசிம் பிரேம்ஜி தனது சேவை நிறுவனத்திற்கு அளித்துள்ளார். தொடர்ந்து அந்த சேவை நிறுவனத்துக்கான பொருளாதார கட்டமைப்பை அவர் இதன் மூலம் உறுதி செய்துள்ளார்.

ஆசிம் பிரேம்ஜியின் பங்களிப்புக்காக பாரத அரசு அவருக்கு நாட்டின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் பட்டத்தை அளித்து சிறப்பித்து உள்ளது.

இன்று எழுபத்தி ஐந்தாம் வயதில் அடியெடுத்து வைக்கும் பிரேம்ஜி இன்னும் பல்லாண்டு வாழ்ந்து, இந்திய இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கவேண்டும் என்று ஒரே இந்தியா தளம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 

புரட்சிவீரன் சந்திரசேகர ஆசாத் பிறந்த நாள் - ஜூலை 23


ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக போராடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு பதினைந்து வயது சிறுவன் நீதிபதிக்கு முன்னால் நிறுத்தப்பட்டு இருக்கிறான். விசாரணை தொடங்கியது.

நீதிபதி     : உனது பெயர்
சிறுவன்  : விடுதலை ( ஆசாத் )

நீதிபதி     : உனது தந்தையின் பெயர்
சிறுவன்  : சுதந்திரம்

நீதிபதி     : உனது இருப்பிடம்
சிறுவன்  : சிறைச்சாலை

இப்படி பதில் கூறும் சிறுவனிடம் என்ன விசாரிக்க முடியும். நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார் - பதினைந்து கசையடிகள். அந்த சிறுவனும் தனக்குத் தானே ஒரு தீர்ப்பை வழங்கிக் கொண்டான்  - இனி ஒருபோதும் வெள்ளையர்களிடம் கைதியாகப் பிடிபடப் போவதில்லை. உயிரோடு என்னை இவர்கள் பிடிக்கக் கூடாது என்று.

பாரத நாட்டின் பெரும்புரட்சியாளர்களில் ஒருவராகவும் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் ஆர்மியின் தளபதியாகவும், பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, படுகேஸ்வர் தத் போன்ற போராட்ட வீரர்களின் வழிகாட்டியாக, நண்பனாக விளங்கிய சந்திரசேகர ஆசாத்தின் பிறந்தநாள் இன்று.

சீதாராம் திவாரி ஜக்ரானி தேவி திவாரி தம்பதியினரின் மகனாக 1906ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் நாள் இன்றய மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாபாரா கிராமத்தில் பிறந்தவர் சந்திரசேகர திவாரி. இவரின் முன்னோர்கள் இன்றய உத்திரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரைச் சார்ந்தவர்கள்.

தனது மகன் வடமொழியில் புலமை பெறவேண்டும் என்று நினைத்த தாயார் சந்திரசேகரை காசி சர்வகலாசாலைக்கு படிக்க அனுப்பி வைத்தார். ஆனால் நாட்டில் வீசிக்கொண்டு இருந்த சுதந்திர வேட்கை சந்திரசேகரை காந்தியின் பக்கம் கொண்டு சேர்த்தது. காந்திஜி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு ஆங்கில காவல்துறையால் கைது செய்யப்பட்டார் சந்திரசேகர திவாரி. அப்போது நடந்த விசாரணைதான் இந்தக் கட்டுரையின் ஆரம்ப வரிகள். இதற்குப் பிறகு அவர் சந்திரசேகர ஆசாத் என்றே அழைக்கப்பட்டார்.

ஆயுதம் ஏந்தாத அஹிம்சைவழிப் போராட்டத்தை காந்திஜி முன்னெடுத்தார். ஆனால் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சவுரிசவுரா என்ற இடத்தில் போராட்ட வீரர்களை அடக்க தடியடியும் பின்னர் துப்பாக்கி சூடும் நடைபெற்றது, தன்னிலை இழந்த போராட்டக் குழுவினர் காவல் நிலையத்தைத் தாக்கி தீ வைத்தனர். இருபத்தி இரண்டு காவலர்கள் இந்த கலவரத்தில் இறந்ததாக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அஹிம்சை வழியில் போராடும் பக்குவத்திற்கு நாடு வரவில்லை என்று கூறி காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி வைத்தார். காந்தியின் முடிவை மறுதலித்து மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் ஆகியோர்  காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சுதந்திரா கட்சியைத் தொடங்கினர். அதுவரை காந்தியின் அணியில் இருந்த சந்திரசேகர ஆசாத் புரட்சியாளராக மாறினார்.

ஆசாதுக்கு இந்திய குடியரசு இயக்கம் ( ஹிந்துஸ்தான் ரிபப்ளிக் அஸோஸியேஷன் ) என்ற புரட்சி அமைப்பை தொடங்கி நடத்திக்கொண்டு இருந்த ராம் பிரசாத் பிஸ்மி மற்றும் மன்மத்நாத் குப்தா ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. அஹிம்சாவாதி ஆயுதவாதி ஆனார். 1925ஆம் ஆண்டு நடந்த ககோரி ரயில் கொள்ளை, 1926ஆம் ஆண்டு வைஸ்ராய் பயணம் செய்த ரயில்பெட்டியை கவிழ்க்கும் முயற்சி, லாலா லஜபதி ராயின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக காவல் அதிகாரி சாண்டர்ஸ் கொலையானது, நாடாளுமன்றத்தில் குண்டு வீச்சு என்று புரட்சியாளர்கள் ஆங்கில அரசின் கண்களில் தங்கள் விரலை விட்டு ஆட்டினர். பல்வேறு புரட்சியாளர்கள் கைது செய்யப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர், தூக்கில் இடப்பட்டனர், அந்தமான் சிறையிலும் மற்ற சிறைகளிலும் அடைக்கப்பட்டனர். ஆனால் கடைசி வரை சந்திரசேகர ஆசாத்தை மட்டும் பிடிக்கவே முடியவில்லை.

ஒரு பக்கம் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, இந்திய சமதர்ம குடியரசு ராணுவத்தின் தலைமைத் தளபதி பல்ராஜ் என்ற பெயரில் அறிக்கைகளை வெளியீட்டுக்க கொண்டு, அதே நேரத்தில் இன்றய மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி நகரின் சத்தார் நதியின் ஓரத்தில் உள்ள ஒரு ஹனுமார் கோவிலுக்கு அருகே குடிசையில் பண்டிட் ஹரிசங்கர் பிரம்மச்சாரி என்ற பெயரில் சிறுவர்களுக்கு ஆன்மீகமும் சமிஸ்க்ரித மொழியும் சொல்லிக் கொடுப்பதுபோல மாறுவேட வாழ்க்கையையும் அவரால் வாழ முடிந்தது.

1931ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் நாள் ப்ரயாக்ராஜ் நகரில் உள்ள ஆல்பிரெட் பூங்காவில் சந்திரசேகர ஆசாத் இருக்கிறார் என்ற தகவல் ஆங்கில அரசாங்கத்திற்கு கிடைத்தது. அவரைப் பிடிக்க பெரும் படை அந்தப் பூங்காவை சுற்றிவளைத்தது. தன்னோடு இருந்த மற்றொரு புரட்சியாளர் சுகதேவ்ராஜ் தப்பிக்கும் வரையில் சுற்றிவளைத்த காவலர்களை தனது கைத்துப்பாக்கியால் சுட்டு தடுத்துக் கொண்டு இருந்த சந்திரசேகர ஆசாத் கடைசி தோட்டாவால் தன்னை தானே சுட்டுக்கொண்டு இறந்து போனார். இனி ஒரு முறை உயிரோடு ஆங்கில அரசிடம் பிடிபடப் போவதில்லை என்று அவர் எடுத்த முடிவை கடைசிவரை காப்பாற்றிவிட்டார்.

பெரும் புரட்சியாளனாகவும், புரட்சியாளர்களின் வழிகாட்டியாகவும், மிகப் பெரும் வீர தீர செயல்களை செய்து அந்நிய ஆட்சியாளர்களை கலங்கடித்த அந்த வீரன் வாழ்ந்தது என்னவோ இருபத்தி நான்கு வயது வரை மட்டுமே.

எத்தனையோ வீரர்கள் இந்த நாட்டில், அவர்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்

செவ்வாய், 23 ஜூலை, 2019

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பிறந்தநாள் ஜூலை 22



பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் இன்றய மஹாராஷ்டிரா முதல்வருமான திரு தேவேந்திர பட்னவிஸ் அவர்களின் பிறந்தநாள் இன்று. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தால் வார்த்தெடுக்கப்பட்ட பாட்னவிஸ் மஹாராஷ்டிரா மாநிலத்தில் மிக இளைய வயதில் முதல்வராகத் தேர்வானவர்களில் இரண்டாமவர். இவர் தனது நாற்பத்தி நான்காவது வயதில் முதல்வர் பதவியை அடைந்தார். திரு சரத்பவார் தனது முப்பத்தி எட்டாவது வயதில் மஹாராஷ்டிரா முதல்வரானார்.

பட்னவிஸ் 1970ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் நாள் பிறந்தவர். இவர் தந்தை கங்காதர் பட்னவிஸ் பாரதிய ஜனசங்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவர். அவர் மஹாராஷ்டிரா மாநிலம் மேலவையின் உறுப்பினராகப் பணியாற்றியவர். கங்காதர் பட்னவிஸ் நெருக்கடி நிலையின் போது சிறை தண்டனை அனுபவித்தவர்.

தனது பள்ளிக்கல்வியை நாக்பூர் நகரின் சரஸ்வதி வித்யாலயாவில் முடித்த பட்னவிஸ், தந்து சட்டப் படிப்பை நாக்பூர் அரசு சட்டக் கல்லூரியில் 19992ஆம் ஆண்டு முடித்தார். வணிக மேலாண்மை மற்றும் திட்ட மேலாண்மை துறைகளில் முதுகலை பட்டய படிப்பையும் இவர் படித்துள்ளார்.

படிக்கும் காலத்திலேயே அகில பாரதிய விதார்த்தி பரீக்ஷித் அமைப்பில் இணைத்துக் கொண்ட பட்னவிஸ் பாரதிய ஜனதா கட்சியிலும், நேரடி அரசியலிலும் பல்வேறு பதவிகளை பெற்றுள்ளார். 1992 மற்றும் 1997 ஆகிய இரண்டு முறை பட்னவிஸ் நாக்பூர் மாநகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாக்பூர் மாநகராட்சியின் மிக இளைய மேயர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

1999 மற்றும் 2004ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் நாக்பூர் மேற்கு தொகுதியில் இருந்தும் 2009 மற்றும் 2014ஆம் ஆண்டு தேர்தல்களில் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் இருந்தும் பட்னவிஸ் மஹாராஷ்டிரா சட்டசபைக்கு தேர்வானார். 2014ஆம் ஆண்டு மாநிலத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பட்னவிஸ் அவர்களின் மிகப்பெரும் சாதனை என்பது வறட்சியால் பாதிக்கப்பட்ட மராத்வாடா பகுதிகளை அதில் இருந்து மீட்டெடுத்ததுதான். 2015ஆம் ஆண்டு அந்தப் பகுதியை பெரும் குடிநீர் தட்டுப்பாடு தாக்கியது. 3,600 கிராமங்களுக்கு 4,640 டேங்கர் லாரிகளில் அரசு குடிநீர் வழங்க வேண்டி இருந்தது. ஆனால் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தியத்தின் மூலம் 2017ஆம் ஆண்டுக்குள்ளாக 886 கிராமங்களுக்கு 669 டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் அளவிற்கு பட்னவிஸ் அரசு நிலைமையை சரிசெய்து விட்டது.

இந்தியாவின் வணிக தலைநகரமாகவும், பொருளாதாரரீதியில் மிக முன்னேறிய மாநிலமாகவும் உள்ள மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக அரசு உள்கட்டுமானப் பணிகளை பெருமளவில் முன்னெடுக்கிறது.

அரசியலில் ஐம்பது என்பது மிக இளைய வயதுதான். இன்னும் நெடுங்காலம் உடல்நலத்தோடு வாழ்ந்து திரு பட்னவிஸ் பாரத நாட்டுக்கு தனது சேவையை ஆற்றவேண்டும் என்று ஒரே இந்தியா தளம் வாழ்த்துகிறது. 

சனி, 20 ஜூலை, 2019

மறக்கடிக்கப்பட்ட மாவீரன் படுகேஸ்வர் தத் - நினைவுநாள் ஜூலை 20.

பாரதநாட்டின் சுதந்திரம் என்பது எதோ ஒரு சில தனிமனிதர்களின் முயற்சியாலோ அல்லது சில குடும்பங்களின் தியாகத்தாலோ மட்டுமே கிடைத்துவிடவில்லை. ஆயிரம் ஆயிரம் தியாகிகளின் குருதியால், அவர்களின் விடாத முயற்சியால், அவர்களின் பலிதியாகத்தால் கிடைத்த விடுதலை இது. தெளிவாக திட்டம் போட்டு அப்படிப்பட்ட தியாகிகள் இந்த மண்ணில் மறக்கடிக்கப் பட்டனர். அதனால்தான் தேசபக்தியை இல்லாத மூன்று தலைமுறைகளை நாம் உருவாக்கி உள்ளோம். அப்படி வரலாற்றின் பக்கங்களில் இருந்து மறக்கடிக்கப்பட்ட ஒரு மாவீரனின் நினைவுநாள் இன்று.



எந்த ஒரு பாரதியரும் இல்லாமல் உருவான சைமன் குழுவை நாடு புறக்கணிக்க முடிவு செய்தது. சைமன் குழுவை புறக்கணித்து லாகூர் நகரில் நடந்த அமைதியான ஊர்வலத்தை பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் தலைமையேற்று நடத்தினார். அன்றய ஆங்கில காவல் அதிகாரி ஜேம்ஸ் ஸ்காட் கண்மூடித்தனமாகத் தாக்கினான். குண்டாந்தடிகளின் அடியை உடல்முழுதும் ஏந்திய லாலா லஜபதி ராய் மருத்துவமனையில் மரணமடைந்தார். " என்மீது விழுந்த அடிகள் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் சவப்பெட்டியை மூடும் ஆணிகள்" என்று அவர் கூறினார்.

தலைவரின் மரணத்திற்கு பழிவாங்க இளைஞர் பட்டாளம் கிளம்பியது. 1928ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி காவல் அதிகாரி சாண்டர்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். சந்திரசேகர ஆசாத் தலைமையில் இயங்கிய  இந்திய சோசலிச குடியரசு ராணுவத்தைச் ( Hindustan Socialist Republic Army ) சார்ந்த பகத்சிங்கும் அவர் நண்பர்களும் இந்த பழிவாங்குதலை செய்துமுடித்தார்கள்.

காது கேளாத அரசுக்கு கேட்கவேண்டுமானால் நாம் உரக்கத்தான் பேசவேண்டும் என்று முடிவு செய்த இளைஞர் படை நாட்டின் பாராளுமன்றத்தின் உள்ளே வெடிகுண்டை வீச முடிவு செய்தது. அது 1929ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி.  பாராளுமன்ற கூட்டம் தொடங்க இருந்த நேரத்தில் பார்வையாளர்கள் இடத்தில் இருந்து இரண்டு இளைஞர்கள் எழுந்தனர். தங்கள்வசம் இருந்த வெடிகுண்டுகளை ஆட்களே இல்லாத இடத்தை நோக்கி வீசினார். யாரையும் கொல்ல வேண்டும் என்று நினைக்காததால், அந்த குண்டு பெரும் சத்தத்தையும் புகையையும் மட்டுமே வெளியிட்டது. நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் குண்டு வீசிய இளைஞர்கள் அதனை பயன்படுத்திக்கொண்டு தப்பி ஓட முயற்சி செய்யவில்லை. " புரட்சி ஓங்குக, ஏகாதிபத்தியம் ஒழிக" என்றே அவர்கள் கோஷம் எழுப்பிக்கொண்டு இருந்தனர். அந்த இளைஞர்களில் ஒருவர் பகத்சிங். இன்னொருவர் படுகேஸ்வர் தத். பகத்சிங்கை மக்கள் மனதில் இருந்து மறக்கடிக்க முடியாதவர்களால் படுகேஸ்வர் தத் பெயரை மறைக்க முடிந்ததுதான் இந்த தேசத்தின் சோகம்.

1910ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் நாள் இன்றய மேற்கு வங்காள மாநிலத்தில் பிறந்த தத், கான்பூர் நகரில் கல்வி கற்றார். அபோது சந்திரசேகர ஆசாத் போன்ற புரட்சியாளர்களின் அறிமுகம் கிடைத்தது. கையெறி குண்டுகள் தயாரிப்பதில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றிருந்தார்.

பாராளுமன்றத்தில் குண்டு வீசிய வழக்கில் தத்தும் பகத்சிங்க்கும் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்தபோது அரசியல் கைதிகளை முறையாக நடத்தவேண்டும் என்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தோழர்கள் தொடங்கினார்கள். ஓரளவுக்கான வசதிகளும் சலுகைகளும் அரசியல் கைதிகளுக்கு வழங்க ஆங்கில அரசு ஒத்துக்கொண்டது.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். படுகேஸ்வர் தத் நாடு கடத்தப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவரை காசநோய் பற்றியது. விடுதலையான படுகேஸ்வர் தத் காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 1946ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

நாடு விடுதலை அடைந்த பின்னர், அரசின் உதவிக்காக விண்ணப்பித்த அந்த வீரனுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை. வறுமையிலும் காசநோயால் வாடிய அந்த வீரன் 1965ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் நாள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பிரோஸ்ப்பூர் நகரின் அருகே உள்ள ஹுசைனிவாலா என்ற கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அவரது சகாக்களான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் உடல்கள் எரிக்கப்பட்ட இடுகாட்டில் அவரது உடலும் தகனம் செய்யப்பட்டது. வீரத்தையும், தேசபக்தியையும் விதைத்த அந்த மாவீரனின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

குறைந்தபட்சம் போற்றப்படாத, பாராட்டப்படாத, சொல்லப்படாத அந்த தியாகிக்கு ஒரு துளி கண்ணீரை நாம் இன்று காணிக்கையாகச் செலுத்துவோம்.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட தினம் - ஜூலை 19.


பாரத நாட்டில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட ஐம்பதாவது ஆண்டு இன்று. 1969ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் நாம் அரசு 14 பெரும் வங்கிகளை தேசியமயமாகியது. அரசாங்கம் ஒரு முன்னெடுப்பைச் செய்கிறது என்றால் அதன்பின் உள்ள சமூக, பொருளாதார காரணிகளை மட்டுமல்லாது அரசியல் பின்புலத்தையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.



நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பதினேழு ஆண்டுகள் பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேரு 1964ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரை அடுத்து பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி 1966ஆம் ஆண்டு சந்தேகத்திற்கு இடமான முறையில் தாஷ்கண்ட் நகரில் மரணமடைந்தார். நாடு இரண்டு பெரும் போர்களை சந்தித்து இருந்தது. சீனாவுடனான போரில் தோல்வியும், அதன் பின்னர் பாகிஸ்தானுடனான போரில் வெற்றியும் பெற்றிருந்தது. கம்யூனிச, சோசலிஸ சித்தாந்தங்கள் கவர்ச்சியாக தோன்றிய காலம் அது. ஆனால் அதற்கு நேரெதிராக வலதுசாரி சிந்தனைகளை முன்னிறுத்தும் ஸ்வதந்த்ரா மற்றும் பாரதிய ஜன சங்கம் ஆகிய கட்சிகளும் வலுவோடு இருந்தன. அந்நியர் ஆட்சியில் இருந்து விடுபட்டுவிட்டால் பெருமளவு வறுமைநிலை மாறிவிடும் என்று நினைத்துக்கொண்டு இருந்த மக்கள் ஏமாற்றத்தில் இருந்த காலம்.

சாஸ்திரிக்குப் பிறகு யார் ? சங்கடமான இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் பொறுப்பு காமராஜரிடம் வந்தது. அவரது தேர்வு இந்திரா பிரியதர்சினி காந்தியாக இருந்தது. மொரார்ஜி தேசாய்க்குப் பதிலாக காங்கிரஸ் இந்திரா காந்தியை தேர்ந்தெடுத்தது. அப்போது இந்திராவிற்கு வயது நாற்பத்தி ஒன்பது மட்டுமே. நேருவின் மகள் என்பதைத் தவிர வேறு எந்த பின்புலமும் இல்லாதவர், அதனால் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார் என்று மக்கள் நினைக்க, இந்திராவிற்கு வேறு எண்ணங்கள் இருந்தன. வலிமைவாய்ந்த மாநிலத்தலைவர்கள் ஆட்டிவைக்கும் பொம்மையாக அவர் இருக்க விரும்பவில்லை. கவர்ச்சிகரமான கோஷங்கள், அதிரடியான செயல்கள் மூலம் அவர் மக்களுக்கு நெருக்கமாக இருக்க விரும்பினார். மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசியமயமாக்கல், வலிமையான மாநில தலைவர்களை இல்லாமல் ஆக்கி, அங்கே தனக்கு கட்டுப்பட்ட ஆட்களை நியமித்தல் என்று அவர் திட்டமிடத் தொடங்கினார்.

இன்றய வடிவிலான வங்கி சேவை என்பது 1770ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஹிந்துஸ்த்தான் வங்கி என்ற நிறுவனத்தின் மூலம் பாரத நாட்டில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 1796ஆம் ஆண்டு ஜெனரல் பேங்க் ஆப் இந்தியா தொடங்கப்பட்டது. 1806ஆம் ஆண்டு பேங்க் ஆப் கல்கத்தா என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட வங்கி பேங்க் ஆப் பெங்கால் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1840ஆம் ஆண்டு பேங்க் ஆப் பாம்பே மற்றும் 1843ஆம் ஆண்டு பேங்க் ஆப் மதராஸ் ஆகிய வங்கிகள் உருவானது. 1921ஆம் ஆண்டு இந்த மூன்று வங்கிகளும் இணைந்து இம்பீரியல் பேங்க் ஆப் இந்தியா என்று ஆனது. நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு 1955ஆம் ஆண்டு இந்த வங்கி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவாக உருவெடுத்தது. 1959ஆம் ஆண்டு அன்றய சமஸ்தானங்கள் நடத்திவந்த வங்கிகள் ஸ்டேட் பாங்கின் துணை நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டன. 1935ஆம் ஆண்டுதான் ரிசெர்வ் பேங்க் ஆப் இந்தியா உருவாக்கப்பட்டது.

சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்துகொண்டு இருந்த போது பல்வேறு வங்கிகளை தேசியத்தலைவர்கள் உருவாக்கினார்கள். 1894ஆம் ஆண்டு லாகூர் நகரில் பஞ்சாப் நேஷனல் பேங்க் நிறுவப்பட்டது. கத்தோலிக் சிரியன் பேங்க், கார்பொரேஷன் பேங்க், பேங்க் ஆப் இந்தியா, கனரா பேங்க் இந்தியன் பேங்க், பேங்க் ஆப் பரோடா ஆகியவை இன்றுவரை இயங்கிக் கொண்டு உள்ளன. ஆனால் இதற்கிடையே பல்வேறு வங்கிகள் திவாலானதும் நடந்தது.

பல்வேறு வங்கிகள் வெவ்வேறு தொழில்நிறுவங்களால் நடத்தப்பட்டன. பொதுமக்கள் சேமிக்கும் பணத்தை வங்கி நிர்வாகம் தங்களின் முதலாளிகளாக தொழிலதிபர்களுக்கு கடனாகக் கொடுத்து விடுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எதனாலோ பெரும்தொழிலதிபர்கள் மீது இந்திராவுக்கு ஒரு ஒவ்வாமை இருந்தது. கடுமையான சோசலிஸ பொருளாதாரத்தை அவர் முன்னெடுத்தார். இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான இடைவெளியைக் குறைக்க அனைவரையும் ஏழைகளாக மாற்றும் திட்டம்தான் செயலில் இருந்தது.

வங்கி சேவை நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும், விவசாயம், சிறுதொழில்கள் போன்ற அரசின் முக்கியமான திட்டங்களுக்கு கூடுதல் கடன் அளிக்கப்படவேண்டும். இதற்க்கு வங்கிகள் தனியார்வசம் இருந்தால் சரிப்படாது, அவை அரசின் கைவசம் இருக்கவேண்டும் என்று இந்திரா நினைத்தார்.

1966இல் இந்திரா பதவியேற்றத்தில் இருந்து 1969 ஜூலை மாதத்திற்குள் என்ன நடந்தது என்பதையும் நாம் இங்கே பார்க்கவேண்டும். அதில் மிக முக்கியமானது 1967ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைக்கான நான்காவது பொது தேர்தல். முதல் மூன்று பொதுத்தேர்தல்களை காங்கிரஸ் கட்சி நேருவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி வெற்றி பெற்று இருந்தது. 1962ஆம் ஆண்டு தேர்தலில் அது 361 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. ஆனால் 1967ஆம் ஆண்டு தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 283 தொகுதிகளில்தான் வெற்றி பெற்று இருந்தது. நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனசங், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிரஜா சோசலிஸ்ட் கட்சி, ஸ்வதந்திரா கட்சி, திமுக ஆகிய கட்சிகள் கணிசமான எண்ணிக்கையில் வெற்றி பெற்று இருந்தன. அதோடு ஆறு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து இருந்தது.

கல்வியாளரும்  நாட்டின் மூன்றாவது குடியரசுத்தலைவருமான ஜாகிர் ஹுசைன் எதிர்பாராத விதமாக 1969ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் நாள் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து குடியரசு துணைத்தலைவர் வி வி கிரி குடியரசின் தாற்காலிகத் தலைவராக பதவி ஏற்றார். குடியரசுத்தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி நீலம் சஞ்சீவ ரெட்டியை கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக நிறுத்தியது. ரிசெர்வ் வங்கியின் முதல் இந்திய கவர்னர் என்ற பெருமையைப் பெற்ற திரு சி டி தேஷ்முக்கை எதிர்க்கட்சிகள் தங்கள் வேட்பாளராக அறிவித்தன. சுயேச்சை வேட்பாளராக வி வி கிரி களமிறங்களினார். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் தங்கள் மனச்சாட்சியின்படி ஓட்டளிக்குமாறு இந்திரா கேட்டுக்கொண்டார்.

ஜூலை 20ஆம் தேதி கிரி, குடியரசின் தாற்காலிகத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு முன்தினம் ஜூலை 19ஆம் தேதி வங்கிகள் தேசியமாகும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். பதினான்கு பெரும் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. மீண்டும் 1980ஆம் ஆண்டு ஆறு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. அதில் நியூ பேங்க் ஆப் இந்தியா பஞ்சாப் நேஷனல் பாங்கோடு இணைக்கப்பட்டது.

பல்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இயங்கி வந்த சிறிய தனியார் வங்கிகள் அரசு வங்கிகளோடு இணைக்கப்பட்டன. உதாரணமாக மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிய பாண்டியன் வாங்கி கனரா பாங்கோடும், தஞ்சாவூரைச் சார்ந்த பேங்க் ஆப் தஞ்சாவூர் இந்தியன் பாங்கோடும், நெல்லையைச் சார்ந்த பேங்க் ஆப் தமிழ்நாடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியொடும் இணைக்கப்பட்டன.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதால் வங்கி சேவைகள் நாடெங்கும் பரவியது. கிராமங்களில் கூட வங்கிகளின் கிளைகள் திறக்கப்பட்டன. அதுவரை வங்கி சேவைகளை உள்வாங்காத மக்களுக்கு சேவைகள் அளிக்கப்பட்டன. விவசாயம், சிறுதொழில் போன்ற அரசின் முன்னுரிமை திட்டங்களுக்கு குறிப்பிட்ட அளவில் கடன் வழங்கவேண்டும் என்ற நிபந்தனையால் பெரும் மாற்றங்கள் உருவானது. வங்கி பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, அதனால் வேலைவாய்ப்பு பெருகியது.

அதே நேரத்தில் வங்கியில் உள்ள மக்களின் பணத்தை அரசியல் லாபத்திற்காக கவர்ச்சிகரமான திட்டங்களுக்கு அள்ளி விடுவதும் நடந்தது. 1980இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திராவின் அமைச்சரவையில் இருந்த ஜனார்தன் பூஜாரி  கடன் திருவிழாக்களைத் தொடங்கி வைத்தார். வங்கி கடன்களை வழங்குவதன் மூலம் அரசியல்வாதிகள் தங்கள் வாக்குவங்கியைப் பலப்படுத்திக் கொள்ளும் பழக்கம் உருவானது.

சக்கரம் சுழன்றது. 90களில் உருவான பொருளாதார தாராளமயமாக்கல் தனியார் வங்கிகளுக்கு அனுமதி அளித்தது. குறைவான பணியாளர்கள், தொழில்நுட்ப வசதிகள் மூலம் துரிதமான சேவை, அதிக கட்டணம் என்ற புதிய போக்கு உருவானது.

இன்று பல்வேறு வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதன் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியல் இடப்பட்டு, பலரும் அந்தப் பங்குகளை வர்த்தகம் செய்யும் நிலையில் உள்ளது.

நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை, வங்கிகளின் தேசியமயமாக்கலும் அதுபோன்றதுதான். நாம்தான் வரலாற்றில் இருந்து பாடம் படித்து, நல்லவற்றை அதிகரித்து தீமைகளை கூடியவரை குறைத்து செயல்படவேண்டும்.

மைசூரின் கடைசி மஹாராஜா ஜெயசாம்ராஜேந்திர உடையார் - பிறந்தநாள் ஜூலை 18


மைசூர் சமஸ்தானத்தின் இருபத்தி ஐந்தாவது மஹாராஜாவும் ஏறத்தாழ ஐந்தரை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பரம்பரையின் கடைசி வாரிசாகவும் இருந்த மஹாராஜா ஜெயசாம்ராஜேந்திர உடையாரின் பிறந்தநாள் இன்று.

மைசூரின் மன்னராக இருந்த நாலாம் கிருஷ்ணராஜ உடையாரின் சகோதரர் இளவரசர் நரசிம்மராஜஉடையார். இளவரசர் நரசிம்மராஜ உடையாரின் மகனாகப் பிறந்தவர் ஜெயசாம்ராஜேந்திர உடையார். தந்தை இறந்ததால் இவர் இளவரசனாக நியமிக்கப்பட்டார். மஹாராஜா கிருஷ்ணராஜ உடையாரின் மறைவுக்குப் பிறகு ஜெயசாம்ராஜேந்திர உடையார் மைசூர் சமஸ்தானத்தின் மன்னராக 1940ஆம் ஆண்டு பட்டம் சூட்டப்பட்டார். 1947ஆம் ஆண்டு பாரத நாடு சுதந்திரம் அடையும் நேரத்தில் மஹாராஜா தனது சமஸ்தானத்தை பாரத நாட்டோடு இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டார். அதோடு தனி மைசூர் சமஸ்தானம் பாரதத்தோடு இணைந்து கர்நாடக மாநிலமாக உருவானது.

ஜெயசாம்ராஜேந்திர உடையாரை மைசூர் சமஸ்தானத்தின் ராஜபிரமுக் என்ற பதவியில் பாரத அரசு நியமித்தது. அதன் பின்னர் மதராஸ் மாகாணம் மற்றும் ஹைதராபாத் சமஸ்தானத்தின் ஆளுகைக்குள் இருந்த கன்னட மொழி பேசும் இடங்களை இணைத்து உருவான மைசூர் மாகாணத்தின் ஆளுநராகவும், அதன் பின்னர் அன்றய  மதராஸ் மாநிலத்தின் ஆளுநராகவும் இவர் பணியாற்றினார்.

பொதுவாகவே மைசூர் மன்னர்கள் நாட்டு மக்களின் நலனிலும் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டவர்கள். ஜெயசாம்ராஜேந்திர உடையாரும் அவர் காலத்தில் கல்வி அறிவைப் பரப்ப பெரும்பணத்தை ஒதுக்கினார். மருத்துவம், விவசாயம், தொழில்துறை ஆகிய துறைகளிலும் மைசூர் சமஸ்தானம் நாட்டுக்கே முன்னோடியாக திகழ்ந்தது.

அமெரிக்காவைச் சார்ந்த வில்லியம் பவ்லி என்பவரோடு இணைந்து இந்திய தொழிலதிபர் வால்சந்த் ஹிராசந்த் கொடுத்த திட்டத்தை ஏற்று பெங்களூரு நகரில் இந்தியன் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை மஹாராஜா தொடங்கினார். விமானங்களை உருவாகும் நிறுவனமாகத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று பாரத நாட்டின் பாதுகாப்புதுறையில் முன்னணியில் உள்ளது.

ஜெயசாம்ராஜேந்திர உடையார் கர்நாடக இசையிலும், மேற்கத்திய இசையிலும் திறமைசாலியாக விளங்கினார். தனது தாயிடம் பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்ட மஹாராஜா பல்வேறு மேலைநாட்டு இசை விற்பனர்களுக்கு உதவி செய்தார். கர்நாடக இசையிலும் வீணை வாசிப்பதிலும் சிறந்து விளங்கிய மஹாராஜா 94 சாகித்யங்களை இயற்றியுள்ளார். ஸ்ரீ வித்யா என்பது இவர் இயற்றிய சாகித்யங்களில் இவரது முத்திரை சொல்லாகும்.

இந்திய தத்துவத்திலும் ஆழ்ந்த புலமை கொண்ட ஜெயசாம்ராஜேந்திர உடையார் வேதாந்தம் பற்றி, கீதை பற்றி, இந்திய தத்துவவியல் பற்றி பல்வேறு புத்தகங்களை எழுதி உள்ளார். பல்வேறு சமிஸ்க்ரித நூல்களை கன்னட மொழியில் மொழிபெயர்க்கும் அமைப்பை நிறுவி அதன் புரவலாராகவும் இருந்தார்.

பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் மஹாராஜா ஜெயசாம்ராஜேந்திர உடையாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி மரியாதை செலுத்தி உள்ளன.

வழமையான சாம்ராஜ்யத்தின் மன்னராகத் தொடங்கி, பல்வேறு துறைகளில் பெரும்பங்களிப்பை நல்கிய அரசர் தனது ஐம்பத்தி ஐந்தாவது வயதில் 1974ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் நாள் காலமானார்.