புதன், 29 ஜனவரி, 2020

கிண்டில் மொழியா கிண்டிலின் மொழியா ?

கடந்த பத்தாண்டுகளாக இணையத்தில் உலாத்திக்கொண்டு இருப்பவர்களுக்கு பரிச்சியமானவர்தான் ஜோதிஜி. ஒரு புறம் பெரியாரைப் பிடிக்கும், ஒரு புறம் விடுதலைப்புலிகளும் பிரபாகரனும் ஆதர்சம். ஒரு புறம் மோதியையும் பிடிக்கும் என்று கலந்து கட்டிய சராசரி தமிழனுக்காக சரியான உதாரணம். என்ன ஈ வே ராவைப் முகப்புப் படமாக வைத்ததால் ஒரு சாராராலும், மோதியைப் பிடிக்கும் என்று சொல்வதால் முகமூடி சங்கி ஓன்று மற்றவர்களாலும் தள்ளி வைக்கப்பட்டு தனியாக இயங்குபவர்.


பல்வேறு புத்தகங்களைப் படித்து அதன் தாக்கத்தால் எழுதுபவர்கள் ஒருபுறம், தான் கண்ட, அனுபவித்த வாழ்க்கையை முன்வைத்து அதனை எழுதுபவர்கள் ஒருபுறம். ஜோதிஜி இதில் .இரண்டாம் வகை.
செட்டிநாட்டுப் பகுதியைச் சார்ந்த இவர், வேலை நிமித்தமாக திருப்பூருக்கு குடிவந்து ஏறத்தாழ முப்பத்தாண்டுகாலம் திருப்பூர்வாசியாகவே மாறிவிட்டனர். பின்னலாடைத் தொழிலின் பல்வேறு பிரிவுகளில், பல்வேறு நிலைகளில் வேலை செய்து இன்று தொழில்முனைவோராக வளர்ந்து இருப்பவர்.

மின்புத்தகங்களுக்கான சந்தையை விரிவாக்க, அமேசான் நிறுவனம் சில ஆண்டுகளாக புதிய புத்தகங்களை அறிமுகம் செய்யும் போட்டி ஒன்றை நடத்தி வருகிறது. எழுத்தாளர்கள் என்று தங்களைத் தாங்களே அங்கீகாரம் செய்யும் யார்வேண்டுமானலும் புத்தகங்களை எழுதி, அதனை மின்புத்தகங்களாக உருவாக்கி, இணையத்தில் வெளியிட்டு இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

அதன் பின், நம் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கும். பெரியோர்களே ! தாய்மார்களே ! நான் எழுதிய புத்தகத்தை தரவிறக்கம் செய்து, பக்கங்களைப் புரட்டி, புத்தகத்திற்கு உங்கள் விமர்சனங்களை எழுதி, கூடவே தரமதிப்பீட்டில் நட்சத்திர குறியீடு செய்து என்னை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று எழுத்தாளர்கள் இணையமெங்கும் மின்னல் வேக பிரச்சாரத்தை செய்தனர்.

ஏற்கனவே கவிஞர்களாலும் போராளிகளாலும், செயல்பாட்டாளர்களாலும் நிரம்பியுள்ள தமிழ் கூறும் நல்லுலகு இப்போது மிக அதிகமான எழுத்தாளர்களையும் இனம் கண்டுகொண்டுவிட்டது. வழக்கம் போல நம் திராவிட இனமான சிங்கங்கள் களத்தில் குதித்து, 150க்கும் மேலான புத்தகங்களை வெளியிட்டு, இணைய அணியின் பிரச்சாரத்தின் மூலம் எல்லாவற்றையும் தரவிறக்கம் செய்து, அனைவருக்கும் ஐந்து நட்சத்திர மதிப்பு அளித்து, வெற்றிக்கோட்டுக்குப் பக்கத்தில் இருக்கின்றனர்.

வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுவது. இதுதான் போட்டியின் வரைமுறை என்றால் அதனை கைவசம் செய்வதற்கு ஒரு திறமை வேண்டும். இலக்குதான் வழிமுறை முக்கியம் இல்லை என்ற நினைப்பு எனக்கு இருப்பதால் நான் இதனை குறைகூறவில்லை. என்ன செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்ற பாரதி பாட்டுக்கே மூன்றாம் இடம்தான் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று பரிசு பெற்ற முதலிரண்டு பாடல்களைக் காணவே இல்லை. எங்கள் படைப்பு காலத்தை வென்று நிற்கும், என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

இந்தப் போட்டிக்கு ஜோதிஜி ஐந்து முதலாளிகளின் கதை என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அவரது நீண்ட நெடிய தொழில் பயணத்தில் அவர் சந்தித்த அவர் பணிபுரிந்த தொழில் நிறுவங்களின் அதன் உரிமையாளர்களின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை இந்த நூல் அளிக்கிறது. வெற்றி பெற்றவர்கள், வெற்றியை நழுவ விட்டவர்கள், பெற்ற வெற்றியை தக்க வைத்தவர்கள், தக்க வைக்காமல் போனவர்கள் என்று நாம் தினம்தோறும் பார்த்த, பார்த்துக்கொண்டு இருக்கும், பார்க்கப் போகும் மனிதர்களின் வாழ்க்கையைத்தான் எழுதியுள்ளார்.

ஓன்று வாங்கினால் இன்னொன்றும் கூடவே கிடைக்கவேண்டும் என்ற தமிழனின் தணியாத தாகத்தை தீர்க்கும் பொருட்டு, ஐந்து முதலாளிகளின் கதையை எழுதியது பற்றியும், அமேசான் நிறுவனம் நடத்திய போட்டி பற்றியும், அதில் நடந்த அரசியல் பற்றியும், அந்தப் போட்டியை எதிர்கொள்ள எப்படி தயாராக வேண்டும் என்பது பற்றியும் கிண்டில் மொழி என்ற அடுத்த புத்தகத்தையும் சுடச் சுட வெளியுட்டுளார்.

தன்னளவில் எந்தப் படைப்பும் மிகச் சிறந்தது என்று கூறிவிட முடியாது. அது அந்தப் படைப்பு வாசகனை எப்படி பாதிக்கிறது என்பதைப் பொறுத்துதான் அது  முடிவாகும். வெவ்வேறு பின்னணியில் இருக்கும் வாசகர்கள் ஒரு படைப்பை வெவ்வேறு விதமாகத்தான் எடை போடுவார்கள். அதன் படி முதலில் விமர்சித்தவர் இந்தப் புத்தகத்திற்கு மூன்று நட்சத்திர தரவரிசையைத்தான் அளித்தார். பாவம், அவருக்கு இந்தப் போட்டியைப் பற்றியோ அல்லது தனக்கு நெருக்கமானவர்களின் படைப்புக்கு ஐந்து நட்சத்திர தரவரிசையை அளிக்க வேண்டும் என்றோ தெரியவில்லை.

தனிப்பட்ட பழக்கம் என்பது வேறு, கட்சி சார்ந்த நிலைப்பாடு என்பது வேறு என்பதில் தெளிவாக இருந்த அவரின் நண்பர்கள் அவரின் புத்தகத்தைப் பற்றி பேசுவதை தெளிவாக தவிர்த்தார்கள். சொக்கா, அமேசான் கொடுக்கிற ஐந்து லட்ச ரூபாய் பரிசும் என் கட்சிக்காரருக்கே கிடைக்கணும் என்ற தருமியின் நிலைதான்.

இதுபோன்ற அரசியல் பற்றி, நாளை யாராவது இந்தப் போட்டியில் கலந்து கொள்ள நினைத்தால் எப்படி கூட்டம் சேர்த்து, இந்தப் புத்தகம் போன்ற ஓன்று இதுவரை வெளிவரவே இல்லை, மனிதகுலத்தை உய்விக்க இதுவே இறுதி புத்தகம் என்று எப்படி சந்தைப்படுத்துவது என்பது பற்றி இதில் ஜோதிஜி தெளிவாக எழுதியுள்ளார்.

கூடவே ஏற்கனவே எழுதியதை மின்புத்தகமாக மாற்றத் தெரிந்தவர்களுக்கு பணம் சம்பாதிக்க ஒரு புது வாய்ப்பு தயாராக உள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதைவிட முக்கியம் ஜோதிஜி எழுதிய திருப்பூர் பற்றிய பல்வேறு நூல்களை திரட்டி, கறாராக பிழை திருத்தி, நேர்த்தியாக எடிட் செய்து வெளியிட்டால், அது கடந்த ஐம்பதாண்டு கால திருப்பூரின், பின்னலாடைத் தொழிலின் வளர்ச்சியை, அதனால் ஏற்பட்ட பொருளாதார, சமூக, சுற்றுப்புறசூழல் மாறுபாட்டை விவரிக்கும் கண்ணாடியாக இருக்கும். அப்படியான முயற்சியை ஜோதிஜி முன்னெடுக்கட்டும். 

செவ்வாய், 28 ஜனவரி, 2020

ஆட்டத்தின் விதிகள் ஐந்துதானா ?

வாழ்வின் முதிரா இளம்பருவத்தில் எதை செய்யவேண்டும் எதைச் செய்யக்கூடாது என்ற புரிதல் இல்லாத காலத்திலேயே விற்பனைத்துறையில்தான் இருக்க வேண்டும் என்ற முடிவை நான் எடுத்துவிட்டேன். ஒரே இடத்தில நீண்ட நேரம் இருக்க முடியாத தன்மையா அல்லது பலரோடு பழகி பேசுவதில் எனக்கு இருந்த ஆர்வமா எது அந்த முடிவை எடுக்க என்னைத் தூண்டியது என்பது இன்னும் எனக்கு சரியாகப் புலனாகவில்லை. விற்பனையால் கிடைக்கும் லாபமோ அல்லது அந்த விற்பனையை முடித்துக் கொடுப்பதால் கிடைக்கும் ஊக்கத்தொகையோ அல்ல, விற்பனையில் பொதிந்துள்ள சவால்தான் என்னை எப்போதும் இயக்குகிறது என்பதை இப்போது நான் தெளிவாக அறிந்து வைத்துளேன்.


நான் ஒரு விற்பனையாளன், பொருள்களையும் சேவைகளையும் விற்பது என்ற போர்வையில் கனவுகளை விற்பனை செய்வது என் தொழில். கடைசியாக நீங்கள் எதை வாங்கினீர்கள் நண்பர்களே ? அதை ஏன் வாங்கினீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். எதோ ஒரு தேவையை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையில்தான் நீங்கள் எதையுமே வாங்கி இருக்க முடியும். தேவையில்லாத பொருளை யாரும் அநேகமாக வாங்கமாட்டார்கள். மனிதனின் அடிப்படை தேவை என்பது உணவு மட்டும்தான். அதைத் தவிர்த்த எதுவும் மனிதனுக்குத் தேவையே இல்லை. ஆனாலும் மக்கள் எதையெல்லாமோ வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எதோ ஒரு தேவையை உருவாக்கி, அல்லது இருப்பதாக நம்பவைத்து அந்த தேவையை பூர்த்தி செய்யும் பொருள் என்னிடம் உள்ளது, அதனை வாங்கிக்கொள்ளுங்கள் என்று விற்பனை செய்வது என்பது அடிப்படையில் கனவுகளை விற்பனை செய்வதுதான்.

இப்படியான கனவுகளை விற்பனை செய்பவர்களைப் பயிற்றுவிற்கும் துறையில் இருப்பவர் இந்த நூலின் ஆசிரியரும் சகோதரருமான ராஜகோபால். காப்பீட்டுத் துறை முகவர்களை பயிற்றுவிக்கும் துறையில் பதினேழு ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். அந்த அனுபவத்தின் முதிர்ச்சியே  இந்த புத்தகம். மற்ற பொருள்களை விற்பனை செய்வதுபோல அல்ல காப்பீடு விற்பனை செய்வது. மற்றப் பொருட்கள் நீங்கள் அளிக்கும் பணத்திற்கு ஏற்ப கூடுதலான தரத்தோடும், வடிவமைப்போடும் இருக்கும். ஆனால் நீங்கள் என்ன பணம் கொடுத்தாலும் உங்களுக்குக் கிடைக்கபோவது வெறும் காகிதம்தான். அதிலும் பெரும்பாலான நேரங்களில் அந்த காகிதம் தனது உறுதிமொழியை செயலாக்கும் போது, அதை வாங்கியவர் அதனை காணவோ அல்லது அனுபவிக்கவோ முடியாது என்பதுதான் உண்மை. இந்தப் பொருளை நீங்கள் வாங்கினால் மனமகிழ்ச்சியோடு இருக்கலாம் என்று கூறுவதற்கும், ஒரு வேளை நீங்கள் இறந்து போனால் இந்தப் பொருள் உங்கள் குடும்பத்தின் பொருளாதாரநிலை ஆட்டம் காணாமல் இருக்க உதவும் என்று கூறி விற்பதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது, சரிதானே நண்பர்களே.

புதிதாக விற்பனைத்துறையில் இணைபவர்களுக்கு அவர்கள் விற்பனை செய்ய இருக்கும் பொருள்கள் அல்லது சேவைகள் பற்றி, அதன் பயன்கள் பற்றி, அவற்றின் சிறப்பியல்புகள் பற்றி முதலில் கற்றுக் கொடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து அந்த பொருளையோ அல்லது சேவையைவோ யாரிடம் விற்பனை செய்ய முடியும், அந்த வாடிக்கையாளர்களை எங்கே கண்டுபிடிக்கலாம், அவர்களை எப்படி அணுக வேண்டும், அவர்களோடு எப்படி உரையாட வேண்டும், அவர்களின் ஆவலை எப்படித் தூண்டி, அந்தப் பொருளை வாங்க வைக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்கப்படும். இது வரை எல்லாம் சரியாகத்தான் இருக்கும். ஆனால் வாடிக்கையாளரை சந்தித்து, பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எதிர்கொண்டு பலநேரங்களில் நிராகரிக்கப்படுவது என்பது விற்பனையாளர்கள் மீண்டும் மீண்டும் எதிர்கொள்ளும் நிகழ்ச்சிதான்.

ஒவ்வொரு வாடிக்கையாளருக்கு ஒவ்வொரு விதம், அவர்களின் தேவைகள் ஒன்றுபோல் இருக்காது. எனவே அவர்களின் கேள்விகளும் சந்தேகங்களும் ஒன்றுபோல இருக்க முடியாது. சந்தர்ப்பத்துக்கு ஏற்ப, வாடிக்கையாளருக்கு ஏற்ப பதில் கூறி அவர்களை சம்மதிக்க வைக்க முழுமையாக நூறு சதவிகிதம் விற்பனையில் முடிவது போன்று எந்த பயிற்சியாளலாரும் விற்பனையாளரை தயாரித்து அனுப்ப முடியாது.

பயிற்சி வகுப்பில் கற்றுக்கொடுக்கப்படும் பாடங்கள் நிஜ வாழ்வில் பயன்படவில்லை என்ற உண்மை எந்தப் பயிற்சியாளரையும் நிலைகுலைய வைத்துவிடும். அப்படியான சவாலில் இருந்து எப்படி திரு ராஜகோபால் மீண்டுவந்தார் என்பதையும், விற்பனையாளரின் கண்கள் வழியாக பார்ப்பதை விட்டு விட்டு வாங்குபவர் கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கினால் தென்படும் காட்சிகள் எப்படி மாறி வரும் என்பதையும், மாறிய அந்த சூழலில் எப்படி வாடிக்கையாளர்களை எதிர்கொள்வது என்பது பற்றியும் அவரின் அனுபவமே இந்த நூலாக வெளியாகி உள்ளது.

விற்பனைப் பற்றியும், மேலாண்மை பற்றியும், சுய முன்னேற்றம் பற்றியும் உள்ள பல நூல்கள் மேற்கத்திய சிந்தனைப் போக்கை அடிப்படையாகக் கொண்டவை, அதனாலே அவை பாரதம் போன்ற கீழைநாட்டுச் சிந்தனைக்கு ஒத்துவராமலே உள்ளது. அவைகளைப் படித்து, அதனை நமது பாரம்பரிய மரபிற்கு, சிந்தனைப் போக்குக்கு மாற்றி செயல்படுத்த வேண்டி உள்ளது. இப்போதுதான் நமது வேர்களைப் பற்றி, நமது சிந்தனை மரபை ஒட்டி இதுபோன்ற நூல்கள் வெளியாகத் தொடங்கி உள்ளது. அந்த வகையில் ஆட்டத்தின் ஐந்து விதிகள் என்ற இந்த நூல் நல்லதொரு தொடக்கமாக இருக்கிறது. பல்வேறு நூல்களைப் படித்து அதனைத் தொகுத்து எழுதுவது என்று இல்லாமல், தனது அனுபவத்தின் மீது எழுதப்பட்ட நூல், விற்பனையாளர்களுக்கு மட்டுமல்லாமல் ஆளுமைத் திறனை வளர்த்துக்கொள்ள நினைக்கும் அனைவருக்குமே பயனுள்ளதாக இருக்கும்.

திரு ராஜகோபால் பார்வையில் ஆட்டத்திற்கு ஐந்து விதிகள் என்று இருந்தாலும், பழக்கத்தில் கொண்டு வருபவருக்கு ஐந்தாம் விதியை முதலாவதாகவும், அதோடு முதல் விதியை இணைத்து செயல்படுத்தத் தொடங்கினால் அதுவே போதும் என்று நினைக்கிறேன். 

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

புரட்சிவீரர் சூர்யா சென் - ஜனவரி 12

“மரணம் என் வாழ்க்கையின் வாசற் கதவைத் தட்டுவது என் காதில் கேட்கிறது. என் மனம் எல்லையற்ற பெருவெளியை நோக்கி மெல்லப் பறக்கத் தொடங்கிவிட்டது. விழி மூடும் இந்த மரணப் பொழுதில் என் நண்பர்களிடம் நான் ஒன்றை மட்டும் என் நினைவாக விட்டுச் செல்கிறேன்.

அதுதான் ‘சுதந்திர இந்தியா’ என்ற என் பொற்கனவு.

தோழர்களே! இந்தக் கனவை நனவாக்க நம் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். எந்த நிலையிலும் ஓரடிகூடப் பின்வாங்க முயல வேண்டாம். நம் தேசத்தின் அடிமைப் பொழுது முடிந்துவிடும். சுதந்திரத்தின் ஒளிக்கதிர்கள் பொன்னொளி வீசுவதைக் காணுங்கள். எல்லோரும் எழுங்கள், அவநம்பிக்கை அடையாதீர்கள். வெற்றி விரைவில் வந்து சேரும்”


நாற்பதே வயதான அந்த ஆசிரியருக்கு தூக்குத் தண்டனை என்று தீர்ப்பு எழுதப்பட்டு இருந்தது. தூக்குக் கயிற்றை முத்தமிடும் வேளையில் அந்த இளைஞன் தன் நண்பர்களிடம் கூறிய வார்த்தைகள் இவை.

தாயநாட்டின் அடிமை விலங்கை அறுத்தெறிய ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நாடெங்கிலும் பல்வேறு இளைஞர்கள் முன்னெடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். தாயின் காலடியில் தங்கள் உயிரை ஆகுதியாக அளிக்க அவர்கள் ஒருபோதும் தயங்கியதே இல்லை. அப்படியான தியாக இளைஞர்கள் படையைக் கட்டமைத்து அவர்களுக்குத் தலைமையேற்று வழிநடத்திய சூர்யா சென் அவர்களின் பலிதானதினம் இன்று.

இன்றய பங்களாதேஷில் உள்ள துறைமுக நகரம் சிட்டகாங். அந்த நகரில் ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருந்த ரமணிரஞ்சன் சென் அவர்களின் மகனாகப் பிறந்தவர் சூர்யா சென். பெர்ஹாம்பூர் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே தனது ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார் சூர்யா சென்.  கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ஆங்கில வழி கல்விக்கு மாற்றாக தேசிய சிந்தனைகளின் வழி பாடத் திட்டத்தை அமைத்து மாணவர்களுக்கு கல்வி புகட்டும் பணியில் ஈடுபடலானார். எனவே மக்கள் இவரை மாஸ்டர் தா என்று மரியாதையாக அழைக்கத் தொடங்கினர்.

காங்கிரஸ் கட்சியின் அகிம்சா வழி முறையை சூர்யாசென் ஏற்கவில்லை. காந்தியடிகளின் திட்டம் தோல்வியைத் தழுவியது என்று சூர்யாசென் அறிவித்தார். சிட்டகாங்கை தளமாகக் கொண்டு செயல்பட்ட சூர்யாசென்னின் புரட்சிப் படையில் கணேஷ் கோஷ், சுபோத் சௌத்ரி, லோக்நாத் பால், ஆனந்த் குப்தா, பணீந்திர நந்தி, ஆனந்த் சிங், சகாய்ராம் தாஸ், பக்கீர் சென், லால்மோகன் சென், சுகேந்து தஸ்தகீர், ரணதீர் தாஸ் குப்தா, அணில் பந்து தாஸ், நந்திசின்ஹா, சுபோத்ராய், தாரகேஸ்வர் தஸ்தகீர், பிரசன்ன தாலுக்தார், சுபேந்திர தாஸ் முதலிய படித்த இளைஞர்களும், பிரிதிலதா வடகேர், கல்பனா தத் முதலிய வீராங்கனைகளும் சேர்ந்தனர். அந்த இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சியும், துப்பாக்கிச் சுடும் பயிற்சியும், வெடிகுண்டு தயாரித்தல் மற்றும் உபயோகப்படுத்துவதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது. சூர்யாசென் அமைத்த புரட்சிப் படையில் பயிற்சி பெற்ற நூற்று ஐம்பது இளைஞர்கள் இணைந்து செயல்பட்டனர்.

அஸ்ஸாம்-பெங்கால் ரயில்வே’யின் கருவூலத்தை பட்டப்பகலால், சுட்டெரிக்கும் சூரிய வெளிச்சத்தில் 1923ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் நாள் தமது புரட்சிப்படை தோழர்களுடன் தாக்கிச் சூரையாடினார். சூர்யா சென் போலீசியிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டார். ஆனால் சூர்யா சென் 1926ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, விசாரணையின்றி சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் 1928ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

சிட்டகாங் துறைமுகப் பட்டிணத்தில் பிரிட்டிஷ் அரசு ஆயுதக் கிடங்கு ஒன்றை அமைத்திருந்தது. வங்கப் புரட்சியாளர்களை ஒடுக்குவதற்கு அங்கிருந்துதான் பிரிட்டிஷ் போலீசாருக்கும், இராணுவத்தினருக்கும் ஆயுதங்கள் வழங்கப்பட்டு வந்தது.

அந்த ஆயுதக் கிடங்கை கைப்பற்றி சிட்டகாங் நகரை சுதந்திர நகராகப் பிரகடனப்படுத்த வேண்டுமென்று, ‘இந்துஸ்தான் குடியரசு இராணுவம்’என்ற புரட்சிப் படையின் தளபதியை சூர்யாசென்னும் அவரது தோழர்களும் திட்டமிட்டனர்.

சிட்டகாங்க ஆயுதக் கிடங்கை கைப்பற்றும் திட்டம் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி செயல்படுத்தப்பட்டது. புரட்சித் தளபதி சூர்யா சென் தலைமையில் 125 புரட்சி வீரர்கள் ஆயுதக் கிடங்கை முற்றுகையிட்டனர்.

பிரிட்டிஷ் இராணுவ வீரர்கள் மீது வெடிகுண்டுகளை வீசினார்கள். எதிர்த்துப் போரிட்ட பிரிட்டிஷ் இராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டுப் பொசுக்கினார்கள். வாள் வீச்சால் பலரை பலி கொண்டனர். புரட்சிப் படையின் ஒரு பிரிவு ஆயுதக் கிடங்கை சுற்றி வளைத்தது. மற்றொரு பிரிவு தொலைபேசி நிலையத்தை தகர்த்தெறிந்து தகவல் தொடர்பை துண்டித்தது. இன்னொரு பிரிவு இரயில் தண்டவாளங்களைத் தகர்த்து போக்குவரத்தைத் தடுத்தது. நான்காவது பிரிவு துறைமுகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ஆயுதக் கிடங்கில் குவித்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் மூட்டைகளாக் கட்டி எடுத்துக் கொண்டு, ஆயுதக் கிடங்கை தீ வைத்து கொளுத்தினர். ஆயுதக் கிடங்கின் பிரிட்டிஷ் தளபதி மேஜர் பெர்ரோல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆயுதக் கிடங்கு சூரையாடப்படுவதை கேள்வியுற்ற பிரிட்டிஷ் அரசு, கூர்க்கா படைப் பிரிவின் தளபதி ஜான்சன் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவம் விரைந்த வந்தது. தாக்குதல் தீவிரமடைந்தது. பிரிட்டிஷ் இராணுவத்தினர் 75 பேர் கொல்லப்பட்டனர். புரட்சியாளர்கள் 42 பேர் வீரமரணமடைந்தனர். சூர்யசென் தலைமையிலான புரட்சிப்படை ஆயுத மூட்டைகளுடன் சிட்டகாங் நகரைக் கடந்து, ஜலாலாபாத் மலைப் பகுதிக்கு தப்பிச் சென்றது. 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 முதல் 22 ஆம் தேதிவரை நடைபெற்ற போரில் தேவி குப்தா, மனோரஞ்சன் தாஸ், ரஜத்சென், சுதேஷ்ராய், அமரேந்திர நந்தி முதலிய புரட்சிப் படையின் வீரர்களும் களப்பலியானார்கள். புரட்சிப் படையின் வீரர்கள் சிலரை பிரிட்டிஷ் படையினர் கைது செய்தனர்.

சூர்யா சென் தலைமையில் தப்பிச் சென்ற புரட்சிப் படையினர் ‘காலகட்டம்’ என்ற கிராமத்தில் சாவித்திரியம்மாள் என்ற விதவைத்தாயின் குடிசையில் தங்கி தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். சூர்யாசென் தலைமறைவு வாழ்க்கையில் விவசாயக் கூலியாகவும், பால்காரராகவும், புரோகிதராகவும், வீட்டு வேலைக்காரராகவும் வேடமிட்டு பல பணிகளைச் செய்தார்.

சூர்யா சென் தலைக்கு பிரிட்டிஷ் அரசு பத்தாயிரம் ரூபாய் விலை வைத்தது. ஆனால், பணத்துக்கு ஆசைப்பட்டு கிராம மக்கள் யாரும் காட்டி கொடுக்க முன்வரவில்லை. மாறாக பாதுகாப்பு அளித்தனர்.

பிரிட்டிஷ் அரசின் காவல்துறை எப்படியோ மோப்பம் பிடித்து, புரட்சித் தளபதி சூர்யா சென்னும் அவரது தோழர்களும் ‘காலகட்டம்’ கிராமத்தில் தலைமறைவாகத் தங்கியுள்ளனர் என்பதை தெரிந்து கொண்டனர்.

பிரிட்டிஷ் இராணுவ கேப்டன் கெம்சன் என்பவனின் தலைமையில் இராணுவம் புறப்பட்டு, மறைந்திருந்த புரட்சியாளர்களை சுற்றி வளைத்தது. சூர்யா சென்னும் அவரது புரட்சித் தோழர்களும் வீரமுடன் போரிட்டனர். புரட்சியாளர்கள் வீசிய வெடிகுண்டுக்கு கேப்டன் கெம்சன் பலியானான். சூர்யா சென்னும், அவரது புரட்சித் தோழர்களும் தப்பிச் சென்றனர்.

தலைமறைவான சூர்யா சென், கைராலா என்ற கிராமத்தில் தமது உறவினராக நேத்ரா சென் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். பிரிட்டிஷ் அரசு அறிவித்த பத்தாயிரம் ரூபாய் பணத்துக்கு ஆசைப்பட்டு நேத்ரா சென் பிரிட்டிஷ் அரசின் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டான். துரோகி கேப்டன் கேமரான் தலைமையில் பிரிட்டிஷ் போலீஸ் படை கணப்பொழுதில் வீட்டைச் சுற்றி வளைத்து சூர்யா சென்னை கைது செய்தது. ஒரு துரோகி காட்டிக் கொடுத்ததால் பிரிட்டிஷ் அரசு சூர்யா சென்னை கைது செய்து சிறையிலடைத்தது,

நேத்ரா சென்னின் துரோகத்தை அவனுடைய மனைவி சாவித்திரி தேவியால் ஏற்க முடியவில்லை. ஒருநாள் மாலைப் பொழுதில் தனது கணவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். அப்போது சூர்யா சென்னின் புரட்சிப் படையின் வீரன் ஒருவன் வீட்டிற்கு வந்து காட்டிக் கொடுத்த துரோகி நேத்ரா சென்னின் தலையை வெட்டி வீசினான். சாவித்திரி தேவி அதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிரிட்டிஷ் அரசின் போலீஸ் சாவித்திரி தேவியிடம், நேத்ரா சென்னை வெட்டிக் கொன்றது யார் என விசாரணை மேற்கொண்டது. அப்போது அவள், “கொலையாளியைத் தெரியும், ஆனால் கூற முடியாது”, என்றாள் துணிச்சலுடன். நேத்ரா சென் என்ற ஒரு தேசச் துரோகிக்கு மனைவியாக வாழ்க்கைப்பட்டதற்காக நான் வருந்துகிறேன். என் கணவன் இந்த சிட்டகாங் கண்டெடுத்த நாயகனைக் காட்டிக் கொடுத்த கயவன். அதன் மூலம் இந்தியத் தாயின் முகத்தில் மாறாத வடுவை உருவாக்கிவிட்டான். அதனால், அந்த நீசனைக் கொன்றவனின் பெயரை நான் கூற விரும்பவில்லை. எங்கள் ‘மாஸ்டர்தா’ சூர்ய சென்னை நீங்கள் தூக்கிலிடுவீர்கள் என்பதை நான் அறிவேன். நாங்கள் அவரை நேசிக்கிறோம். அன்பு ததும்ப எங்கள் நெஞ்சத்தில் வைத்து வணங்குகிறோம். “சூர்யா’ என்றால் சூரியன். ஆம், எங்கள் சூரியனின் புகழ் என்றும் மறையாது. இந்திய வரலாற்றில் சூர்யா சென் பெயர் என்றும் நீங்காது, சுடர் ஒளியாக பரவும்”- என்று அறிவித்தாள் சாவித்திரி தேவி.

சிட்டகாங் சதி வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் 1930 ஆம் ஆண்டு ஜீலை மாதம் தொடங்கியது. 29 மாதங்கள் தொடர்ச்சியாக வழக்கு விசாரணை நடைபெற்றது. புரட்சிக்காரர்கள் தமக்காக வாதாட வழக்கறிஞர்களை அமர்த்தவில்லை. குற்றத்தை மறுக்கவில்லை. முhறாக அதை நியாயப்படுத்தி வாதாடினார்கள்.

சூர்யா சென் கட்டளைப்படி, 1932 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று, பிரிதிலதா வடேகர் சில புரட்சித் தோழர்களை அழைத்துக் கொண்டு பஹார்தலி என்ற இடத்தில் உள்ள ‘அய்ரோப்பியர் கிளப்’பை தாக்கினார்.

ஆங்கிலேய உயர் அதிகாரிகள் கிளப்பில் மாலை நேரத்தில் மது அருந்தி, சீட்டாடி, நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அங்கே ஒரே இடத்தில் கூடியுள்ள ஆங்கிலேய அதிகார வெறிபிடித்தவர்கள் அனைவரையும் வெடிகுண்டு வீசிக் கூண்டோடு கொன்றழிக்க வேண்டும் என்று பிரிதிலதாவிற்கு கட்டளையிட்டார் சூர்யாசென்.

திட்டமிட்டபடி, இரண்டு புரட்சித் தோழர்கள் கோச் வண்டியில் கிளப்புக்குள் முன்புற வழியாக நுழைந்தனர். மற்ற தோழர்கள் பின்புற வழியாக நுழைந்தனர். பிரிதிலதா கரம் உயர்த்தி ஆணையிட்டதும், கிளப்புக்குள் வெடிகுண்டுகளை சரமாறியாக வீசினார்கள். வெடிகுண்டு வீச்சில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மது மயக்கத்தில் தள்ளாடிக் கொண்டு, பயந்து பீதியில் மூலைக்கொருவராய் ஓடி ஒளிந்தனர். ‘ஒருவனைக் கூட உயிர் தப்பவிடாமல் சுட்டுத் தள்ளுங்கள்’ என்று பிரிதிலதா உத்தரவிட்டார். தானும் தம்மிடம் இருந்த துப்பாக்கியால் பிரிட்டிஷ் அதிகாரிகளை சுட்டுத் தள்ளினார். பிரிட்டிஷ் அதிகாரிகள் பலர் துப்பாக்கிச் சூட்டில் மாண்டனர்.

பிரிதிலதாவை பிரிட்டிஷ் காவலர்கள் சுற்றி வளைத்தனர். இனிமேல் தப்ப முடியாது என்ற நிலையில் தமது இடுப்பில் செருகியிருந்த ‘பொட்டாசியம் சயனைட்’ டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரிதிலதா தற்கொலை செய்து கொள்ளும் முன்பு “இதோ என் துப்பாக்கி. இதை எடுத்துச் சென்று நம் தலைவரிடம் கொடுங்கள். போகும் வரை முடிந்த மட்டும் வெள்ளை நாய்களை சுட்டுப் பொசுக்குங்கள், இதுதான் என் கடைசி விருப்பம். அனைவரும் தப்பி விடுங்கள். தலைவருக்கு என் இறுதி வணக்கம்” என்று முழங்கினார்.

பிரிட்டிஷ் காவல்படையினர் பிரிதிலதாவின் பிணத்தைத்தான் கைப்பற்ற முடிந்தது. இறுதிவரை அந்த புரட்சி வீராங்கனையின் நிழலைக் கூடத் தொடமுடியவில்லை.

சிட்டகாங் ஆயுதக் கிடங்கு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமது தீர்ப்பை வெளியிட்டது. அத்தீர்ப்பில் அனந்த சிங் மற்றும் 12 புரட்சியாளர்கள் ஆயுள் முழுவதும் நாடு கடத்தப்பட வேண்டும் எனவும், மற்ற புரட்சியாளர்களுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது. சூர்யா சென் மற்றும் தாரகேஸ்வர் தஸ்தகீர் இருவருக்கும் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டது.

சிட்டகாங் மத்திய சிறையில் 1934 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் நாள் சூர்யா சென்னும், தாரகேஸ்வர் தஸ்தகீரும் தூக்கிலிடப்பட்டனர். தூக்குத் தண்டனை அளிக்கப்பட்ட சூர்யாசென், தாரகேஸ்வர் ஆகிய இருவரும் சிட்டகாங் சிறைச் சாலையில் சித்ரவதை செய்யப்பட்டு அடித்தே கொல்லப்பட்டனர் என்றும், அவர்கள் பிணத்தைத்தான் ஆங்கிலேய ஆட்சியினர் தூக்கிலிட்டனர் என்பது பின்னர் நிரூபிக்கப்பட்டது. பின்னர் அவர்களின் சடலங்களை பிரிட்டிஷ் போர்க்கப்பலில் எடுத்துச் சென்று நடுக்கடலில் வீசியெறிந்து தங்களது வெறியைத் தீர்த்துக் கொண்டனர்.

இந்திய விடுதலைக்காக புரட்சிப்படை அமைத்து பிரிட்டிஷ் அரசின் இராணுவத்துடன் நேருக்கு நேர் நின்று போரிட்ட வீர வரலாறு சூர்யா சென்னுக்கு மட்டுமே உண்டு. ஆண்களோடு, பெண்களும் புரட்சிப் படையில் இணைந்து போராடிய வரலாறு சூர்யா சென்னின் புரட்சிப் படைக்கே உண்டு.


வரலாற்றின் பக்கங்களில் இன்று புதையுண்டு இருக்கும் வீரர்களின் தியாகத்தை என்றும் மனதில் வைப்போம்.  பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம். 

வீரத் துறவி ஸ்வாமி விவேகானந்தர். - ஜனவரி 12


கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா 
நாடென்ப நாட்டின் தலை                    குறள் 736

தன்னிலையில் கெடாமலும், ஒரு வேளை சூழ்நிலையால் கெட  நேர்ந்தாலும் தனது வளம் குன்றாது இருத்தலும் , மீண்டும் தனது வளத்தை மீண்டும் உருவாக்கிக்கொள்ளும் வலிமை உடையதுதான் நாடு என்று சொல்லப்பட வேண்டும் என்பது திருவள்ளுவர் காட்டும் நாட்டின் இலக்கியம். அப்படி பாரத நாட்டின் வளம் என்பது அதன் ஆன்ம பலத்தில்தான் உள்ளது. 

பாரதத்தின் ஆன்ம பலம் குன்றிப் போய் விடுமோ என்று அஞ்சும் காலத்தில், தகுதியான ஆசிரியர்கள் தோன்றி நாட்டின் ஆன்ம பலத்தை தூண்டி மக்களை வழிகாட்டிச் செல்வது என்பது பாரதத்தின் வரலாற்றில் மீண்டும் மீண்டும் நடைபெறும் நிகழ்வுதான். அப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய ஆசிரியர்தான் ஸ்வாமி விவேகானந்தர். 

பாரத நாட்டின் ஆன்ம பலம் என்பது அதன் ஆன்மீகத்தில் உள்ளது. ஆன்மீகத்தின் கருத்து என்பது உபநிடதங்களில் உள்ள நான்கு மஹாவாக்யங்களில் தெளிவாகிறது. ப்ரக்யானம் ப்ரம்ஹ, அயம் ஆத்மா ப்ரம்ஹ, தத் த்வ மஸி, அஹம் ப்ரம்ஹாஸ்மி என்பனவையே அந்த நான்கு மஹாவாக்யங்கள். அறிவே ப்ரம்ஹம், நானே ப்ரம்ஹம், நீயே அதுவாக ( ப்ரம்ஹமாக ) உள்ளாய், என்பதுதான் அந்த தத்துவம். எல்லா இடத்திலும் வியாபித்து இருப்பதுதான் என் உள்ளிலும் உள்ளது, நானும் ப்ரஹ்மமும் வேறில்லை, இந்த அறிவே ப்ரஹ்மம் எனவே உலக மக்கள் அனைவரும் ஒன்றே, என்னுள் இருக்கும் அதே ப்ரம்ஹம்தான் அனைத்து உயிரினங்களின் உள்ளேயும் உள்ளது என்பதுதான் பாரத நாடு காட்டும் பாதை. 

ஆனாலும் காலவோட்டத்தில் மக்கள் இதனை மறந்து விடுகிறார்கள். அப்போது நாடு அதன் இயல்பான தன்மையை விட்டு விலகி இருளடைந்த காலத்தில் சென்று விடுகிறது. அந்த இருளை விரட்ட தகுதியான குருமார்கள் தோன்றி நாட்டை நல்வழியில் செலுத்துகின்றனர்.வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்த நாட்டின் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி நாட்டை அடிமையாக்கினார். மிகப் பெருமளவில் மக்கள் திரண்டு அந்நியரை எதிர்த்து முதல் சுதந்திரப் போரை நடத்தினர். ஆனாலும் நவீன ஆயுதங்களை கொண்ட அன்னியர்களை பாரத மக்களால் வெற்றிபெற முடியவில்லை. இந்த காலகட்டத்தில்தான் ஸ்வாமி அவதரித்தார். இவரின் குருநாதர் இவருக்கு முப்பதாண்டுகளுக்கு முன்பே பிறந்து இவருக்காக காத்துகொண்டு இருந்தார். 

வங்காளத்தில் பிறந்த நரேந்திரநாத் தத்தா என்ற ஞான சூரியன், உண்மையை அறிந்துகொள்ள வேண்டி பல்வேறு அறிஞர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். அவரின் ஐயங்களின் தீர்வு படிப்பறிவே இல்லாத ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் இருந்தது. "உன்னை நான் பார்ப்பது போல, காளியைப் பார்க்கிறேன்" என்று கூறி நரேந்திரனை அதிரவைத்தார் ராமகிருஷ்ணர். இது அல்லது அது என்ற இரட்டைப்படை சிந்தனையில் வளர்ந்த நரேந்திரனுக்கு உண்மைக்கு ஒரே வழி மட்டுமே இல்லை, எந்த வழியில் சென்றாலும் உண்மையை அறியலாம் என்பதை ராமகிருஷ்ணர் காட்டினார். உருவ வழிபாடோ அல்லது அருவ வழிபாடோ, பக்தி யோகமோ, கர்ம யோகமோ அல்லது ஞான யோகமோ எல்லாமே ஒரே இடத்தைச் சென்று சேர உதவும் பல்வேறு பாதைகள் என்பதை நரேந்திரன் புரிந்து கொண்டார். ஆங்கிலப் படிப்பு படித்திருந்த நரேந்திரன், பெருமளவில் எதையும் படிக்காத, ஆனால் படிப்பதனால் மட்டுமே புலனாகாத உண்மையை அறிந்து கொண்டிருந்த ராமகிருஷ்ணரிடம் சரணடைந்தார். இல்லறத்தில் துறவறம் என்று வாழ்ந்த ராமகிருஷ்ணரின் பாதையில் செல்ல முடிவெடுத்த நரேந்திரர் துறவு பூண்டார். ஸ்வாமி விவேகானந்தர் என்ற யோகபட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. 

அனைத்தையும் துறந்து பாரத நாட்டை சுற்றிவரும் பரிவ்ராஜக சன்யாசிகளின் வரிசையில் ஒரு புதிய வரவாக ஸ்வாமிஜி நாடு முழுவதும் சுற்றிவந்தார். பாரத மக்களின் வறுமையும், அறியாமையும் அவரின் இதயத்தை தாக்கியது. அந்த நேரத்தில், மூடநம்பிக்கைகளின் பிடிகளிலும், பரவலான எழ்மை நிலைகளிலும் பாரத தேச மக்கள் கடின வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சோர்வும், அடிமைத்தனமும் பாரத மக்களின் ரத்த்த்தோடு கலந்தவைகளாகவே தோற்றமளித்தன. மக்கள் தங்கள் தலைவிதியை நொந்து கொண்டு வாழ்ந்தார்கள். அவர்களில் அனேகர் வெளி நாட்டுச் சரக்கு எதுவாக இருந்தாலும் அதைப் பெரிதாக மதித்தார்கள். நாட்டுப் பற்று கொண்ட தலைவர்களைக் காணமுடியவில்லை. 

எல்லாம் விதிப்படி நடக்கும் என்று கூறிச் செல்லும் திண்னை வேதாந்தி அல்ல ஸ்வாமிஜி. ஊழையும் உட்பக்கம் காணலாம் என்ற செயல்வீரர் அவர். பாரத தரிசனம் ஸ்வாமிக்கு அவரின் வாழ்வின் குறிக்கோளை உணரவைத்தது. சுவாமி விவேகானந்தர் அவர்கள், இந்திய துணை கண்டத்தில் தென் கோடி முனையில் இருக்கும் கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார். அவர் கடலில் சிறிது தூரம் நீந்தி, ஒரு தனி பாறையின் மீது அமர்ந்து, தனது தியானத்தைத் தொடங்கினார். மூன்று நாட்கள் அங்கு தியானம் மேற்கொண்ட அவர், இந்தியாவின் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்காலம் பற்றி தன் தியானத்தில் கண்டதாகக் கூறினார். 

அமெரிக்காவில் நடைபெற இருந்த சர்வ சமய மகாநாட்டில் கலந்துகொள்ள அன்றய ராமநாதபுரம் அரசர் சேதுபதி ஸ்வாமியை கேட்டுக் கொண்டார். ஸ்வாமிஜி அமெரிக்காவிற்கு பயணப்பட்டார். சிகாகோ நகரில் " எனது அமெரிக்க சகோதர சகோதரிகளே" என்று தொடங்கிய அவரது பேச்சு உலக அரங்கில் பாரதத்தின் இடம் எது என்பதை ஐயம்திரிபுர நிலை நாட்டியது. தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிகெட்ட நாடல்ல பாரதம், அது உலகின் ஆன்மீக குரு என்பதை ஸ்வாமியின் அமெரிக்கப் பயணம் உறுதி செய்தது. 

பாரதத்தின் ஆன்மீக ஞானத்தை உலகமெலாம் எடுத்துச் செல்லவும், பாரத நாட்டு மக்களுக்கு தேவையான கல்வி மற்றும் மருத்துவ வசதிகளைச் செய்து கொடுக்கவும் என்று ராமகிருஷ்ணா மிஷன் என்ற நிறுவனத்தையும் ஸ்வாமி உருவாக்கினார். நாடெங்கிலும் பல்வேறு நலப்பணிகளை ராமகிருஷ்ணா மிஷன் துறவிகள் இன்று நடத்திக்கொண்டு வருகிறார்கள். 

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பாரத மக்களின் உந்து சக்தியாக விளங்கியவர் ஸ்வாமிஜிதான். காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் ஹெட்கேவார், மஹரிஷி அரவிந்தர், ஸ்வாமி ராமதீர்த்தர், ஸ்வாமி சின்மயானந்தா, சி வி ராமன், ஜாம்ஷெட்ஜி டாடா, நானாஜி தேஷ்முக்  என்று பலரின் வாழ்வில் அவர்கள் வாழ்வின் குறிக்கோளை சுட்டிக் காட்டியவராகவும், அவர்களின் இலட்சியத்தை அடைய ஓயாது செயல்பட அவர்களைத் தூண்டியவராகவும் ஸ்வாமி விவேகானந்தர் விளங்குகிறார். 

எழுமின் விழுமின், எடுத்த செயல் நிறைவேறும் வரை துஞ்சாமல் உழைமின் என்ற உபநிடத வாக்கியத்தின் இலக்கணமாக வாழ்ந்து இன்றும் நமக்கு வழிகாட்டியாக விளங்கும் ஸ்வாமி விவேகானந்தரின் பாத கமலங்களை வணங்கி, நாட்டின் வளர்ச்சிக்கு நமது வாழ்வை அர்பணிப்போம் என்று உறுதி கூறுவோம். 

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி பிறந்தநாள் - ஜனவரி 5


பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான திரு முரளி மனோகர் ஜோஷியின் பிறந்தநாள் இன்று. 1934ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் நாள் இன்றய உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா பகுதியில்  பிறந்த ஜோஷி, இயற்பியலில் இளங்கலைப் பட்டத்தை மீரட் கல்லூரியிலும், முதுகலைப் பட்டத்தை அலஹாபாத் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். நிறமாலையில் ( Spectroscopy ) முனைவர் பட்டம் பெற்ற ஜோஷி, அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னாளில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் சர்சங்கசாலக்காக இருந்த பேராசிரியர் ராஜேந்திரசிங்கின் மாணவர் திரு ஜோஷி. முனைவர் பட்டத்திற்கான தனது ஆராய்ச்சிக் கட்டுரையை ஹிந்தி மொழியில் சமர்பித்தவர் ஜோஷி. பாரதத்தில் முதல் முறையாக ஹிந்தியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை இதுதான்.

சிறு வயதிலேயே பசு பாதுகாப்பு இயக்கத்திலும், நிலவரி குறைப்பு போராட்டங்களிலும் ஜோஷி பங்கு பெற்றார். பாரதிய ஜன சங்கத்திலும், அகில பாரத வித்யார்த்தி பரீக்ஷித் அமைப்பிலும் ஜோஷி பல்வேறு பொறுப்புகளை வகித்தார். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட உடனேயே கைது செய்யப்பட்ட தலைவர்களில் ஜோஷியும் ஒருவர்.

அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மக்களவைக்குத் தேர்வான ஜோஷி, ஜனதா கட்சியின் நாடாளுமன்ற செயலாளராகப் பொறுப்பேற்றார். ஜனதா கட்சி உடைந்த பிறகு உருவான பாரதிய ஜனதா கட்சியில் அகில பாரத செயலாளராகவும் பின்னர் பொருளாளராகவும் பணியாற்றினார்.

பிஹார், வங்காளம், வட கிழக்கு மாநிலங்களின் பொறுப்பாளராக பணியாற்றிய ஜோஷி, அங்கெல்லாம் பாஜக காலூன்ற வகை செய்தார். 1991 - 1993 காலகட்டத்தில் பாஜகவின் அகில இந்திய தலைவராகவும் ஜோஷி பொறுப்பு வகித்தார்.

1977, 1996, 1998, 1999, 2009, 2014 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அல்மோரா, அலஹாபாத், வாரணாசி, கான்பூர் ஆகிய தொகுதிகளில் இருந்து ஜோஷி மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். 1992, 2004ஆம் ஆண்டுகளில் ராஜ்யசபை உறுப்பினராகவும் ஜோஷி தேர்வானார்.

முதன்முறையாக வாஜ்பாய் தலைமையில் உருவான அரசின் உள்துறை அமைச்சராகவும், பின்னர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் ஜோஷி பணியாற்றி உள்ளார்.

நூற்றுக்கும் மேலான அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளையும் விகல்ப் மற்றும் பிரக்யா பிரவாக் என்ற நூல்களையும் ஜோஷி எழுதியுள்ளார். ஜோஷியின் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் உலகின் புகழ்பெற்ற அறிவியல் பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன. திருப்பதி சமிஸ்க்ரித பல்கலைக்கழகம் முரளி மனோகர் ஜோஷிக்கு மஹோமஹோபாத்தியாய பட்டத்தை அளித்து சிறப்பித்து உள்ளது. ஜோஷியின் சேவைகளை அங்கீகாரம் செய்யும் விதமாக பாரத அரசு அவருக்கு 2017ஆம் ஆண்டு பத்மவிபூஷன் பட்டத்தை அளித்துள்ளது.

முதுபெரும் தலைவர் முரளி மனோகர் ஜோஷி இன்னும் பல்லாண்டு காலம் நலமோடு வாழ்ந்து கட்சியையும், நாட்டையும் அறிவுரை கூறி வழிநடத்த வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, திரு ஜோஷி அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

சனி, 4 ஜனவரி, 2020

பொருளாதார மேதை ஜே சி குமரப்பா பிறந்ததினம் - ஜனவரி 4

நீண்டதொரு வரலாறும், நெடிய பாரம்பரியமும் கொண்டது நமது பாரத நாடு. நம் நாட்டின் பிரச்சனைகளும் சவால்களும் தனித்துவமானவை. அதற்கான தீர்வை நமது வேர்களில் இருந்துதான் கண்டடைய வேண்டுமேயன்றி, மேலைநாட்டுச் சிந்தனைகளில் இருந்து நமக்கான தீர்வுகளை கண்டுகொள்ள முடியாது. இந்த நாட்டைப் பற்றி தெரிந்தவர்களின் எண்ணம் இப்படித்தான் இருக்க முடியும். அப்படி காந்திய சிந்தனைகளின் வழியே பொருளாதாரக் கொள்கையை வகுத்தளித்த ஜோசப் செல்லதுரை கொர்னிலியஸ்.என்ற ஜே சி குமரப்பாவின் பிறந்ததினம் இன்று.


தஞ்சாவூரில் அரசு பொதுப்பணித்துறை ஊழியரான சாலமன் துரைசாமி கொர்னிலியசுக்கும், எஸ்தருக்கும்  ஏழாவது குழந்தையாக 1892 ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் நாள் குமரப்பா பிறந்தார். சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் படித்த குமரப்பா, பட்டயக் கணக்காளர் பட்டதைப் பெற்று, அதனைத் தொடர்ந்து பொருளாதாரத்திலும் மேலாண்மைத் துறையிலும் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். ஆங்கில ஆட்சி பாரத மக்களை மேம்படுத்தியது என்ற எண்ணம் பரவலாக இருந்த காலத்தில், மக்களின் வறுமைக்கான அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களைத் தேடி தனது ஆய்வை குமரப்பா மேற்கொண்டார். பிரிட்டிஷ் அரசின் சுரண்டல்தான் பாரத நாட்டின் வறுமைக்குக் காரணம் என்பதை தனது ஆய்வின் மூலம் கண்டறிந்த குமரப்பா, அந்நிய ஆட்சியை அகற்றினால்தான் மக்களின் வறுமை அகலும் என்ற முடிவுக்கு வந்து சேர்ந்தார். தனது ஆய்வுக் கட்டுரைக்கு முன்னுரை வழங்குமாறு, அதனை காந்திக்கு அனுப்பி வைத்தார். தனது சுதேசிக் கொள்கைக்கு குமரப்பாவின் ஆய்வு வலுச் சேர்ப்பதை அறிந்த காந்தி தனது எண்ணங்களுக்குக் கருத்தாக்க வடிவம் கொடுக்கவும், கிராமப்புற மேம்பாடு பற்றிய தனது கனவுகளை நனவாக்கவும், அவருடைய பணி உதவும் என நம்பினார்.

காந்தியின் அறிவுரையின் பேரில் குமரப்பா, குஜராத் வித்யாபீடத்தின் இரண்டு பேராசிரியர்கள் மற்றும் ஒன்பது மாணவர்களின் துணையோடு ஐம்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களில் சுற்றித் திரிந்து அதன் பொருளாதாரப் புள்ளிவிவரங்களைச் சேகரித்து அறிக்கை ஒன்றை காந்தியிடம் அளித்தார். தற்சார்புடைய கிராமங்கள், எதற்கும் எந்த பெருநகரத்தையும் நம்பி இருக்க வேண்டிய தேவை இல்லாத கிராமங்கள், இயந்திரங்கள் மூலமான உற்பத்தி அல்லாது, பலர் உழைப்பின் மூலம் பொருள்கள் உருவாக்கம், மிகச் குறைந்த அளவில் மக்களின் வாழ்வில் தலையிடும் அரசாங்கம் இதுதான் காந்தி கனவு கண்ட இந்தியா. அசைக்கமுடியாத ஆதாரங்களின் மீது உருவான குமரப்பாவின் ஆய்வு, காந்திய பொருளாதாரத்தின் அடிப்படையாக அமைந்தது. அரசின் திட்டங்கள் எப்படி தேவைப்படும் ஏழைகளை அடைவதில்லை என்பதையும் உண்மையில் பாரத மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கிறது என்பதையும் மட்டுமல்லாது, அதற்கான தீர்வையும், மாற்றுத் திட்டங்களையும் சேர்த்தே குமரப்பா கொடுத்தார்.

வசதியான குடும்பப் பின்னணி, அதிலும் அந்நிய நாட்டில் பெரிய படிப்பு எனவே குமரப்பா ஆங்கில உடைகளைத்தான் அதுவரை அணிந்திருந்தார். ஆனால் மக்களின் நிலைமை அவர் மனதை மாற்றியது. ஆங்கில உடைகளைத் தவிர்த்து அவர் பாரத நாட்டின் உடைகளை கதர் ஜிப்பா, கதர் வேஷ்டி, கதர் குல்லாய் என்று அணியத் தொடங்கினார். கொர்னிலியஸ் என்ற பெயரையும் துறந்து தங்கள் குடும்பப் பெயரான குமரப்பாவை இணைத்துக்கொண்டு ஜே சி குமரப்பா என்று அறியப்படலானார்.

காந்தி தண்டி யாத்திரையை மேற்கொண்டபோது யங் இந்தியா பத்திரிகையின் ஆசிரியராக குமரப்பா பொறுப்பேற்றுக்கொண்டார். கருத்துச் செறிவு, அசைக்கமுடியாத ஆதாரங்களின் மேல் எழுதப்படும் கட்டுரைகள், ஆவேசமான நடை இவை குமரப்பாவிற்கு இயல்பாகவே கைவசம் ஆனது. இவை பிரிட்டிஷ் அரசை தடுமாறச் செய்தது. ஆங்கில அரசு யங் இந்தியா அச்சகத்தைப் பறிமுதல் செய்தது. பத்திரிகையை தட்டச்சு செய்து, நகலெடுத்து குமரப்பா வெளியிட்டார். இன்றய இந்திய அரசு பிரிட்டிஷ் மக்களின் எண்ணத்திற்கேற்பவே நடைபெறுகிறது, இது இந்திய மக்களுக்காக நடைபெறவில்லை. எனவே சட்டப்படி டெல்லியில் இருந்தல்ல லண்டனிலில் இருந்துதான் அரசு செயல்படவேண்டும் என்று குமரப்பா எழுதிய கட்டுரைக்காக அரசு அவரைச் சிறை பிடித்தது. மொத்தம் மூன்று முறை அவர் எழுதிய கட்டுரைகளுக்காக குமரப்பா சிறையானார்,

எந்தத் திட்டத்தையும் தீட்டும் முன்பு ஏழை மனிதன் ஒருவனின் விலா எலும்புகளை எண்ணிப் பாருங்கள். திட்டம் நிறைவேறிய பிறகு, அந்த விலா எலும்புகள் தெரியாத வண்ணம் அவனுக்கு சதை போட்டிருக்குமானால், உங்கள் திட்டம் வெற்றி அடைந்து விட்டது என்று கூறிவிடலாம். இதுதான் நாட்டின் திட்டத்தின் அளவுகோல் என்பது குமரப்பாவின் கருத்து.

சுரண்டலற்ற பொருளாதாரம் சாத்தியம் என்றும் அதுவே பாரதத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு என்றும் குமரப்பா நம்பினார். இயற்கை வளம் என்பது நாம் நமது வருங்கால சந்ததியினரிடம் இருந்து பெற்ற கடன்தான், இயற்கை வளத்தை அவர்களுக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்பதுதான் குமரப்பாவின் கருத்து. ஆனால் அரசின் திட்டப்படி அமையும் பொருளாதாரம், பெரும் அணைகள், பெரிய தொழில்சாலைகள் ஆகியவை நேருவின் கனவாக இருந்தது. குமரப்பா ஓரம் கட்டப்பட்டார்.

உடல்நலம் குன்றிய குமரப்பா கல்லுப்பட்டி அருகே உள்ள காந்திகிராமத்தில் வந்து வசிக்கத் தொடங்கினார். நினைத்திருந்தால் பெரிய பதவிகளில் அமர்ந்து பெரும் பொருள் ஈட்டி இருக்கும் வாய்ப்பை உதறித்தள்ளிவிட்டு, திருமணமே செய்து கொள்ளாமல், நாட்டின் பொருளாதார சிந்தனையை கட்டமைப்பதிலே குமரப்பா தன்னை அர்ப்பணித்தார்.

நிலக்கரியையும் பெட்ரோலையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதாரம் மிகவும் ஆபத்தானது. எனவே, புதுப்பிக்கக்கூடிய வளங்களைக் கொண்ட ஒரு பொருளாதாரக் கொள்கை வேண்டும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், தாவர எண்ணெயைக் கொண்டு எரியும் விளக்கு ஒன்றை வடிவமைத்துக் கொடுத்தார். சமையல் எரிவாயு மானியத்துக்கு அல்லல்படும் நமது மக்களின் இன்றைய துயரங்களைத் தொலைநோக்குடன் சிந்தித்ததாலோ என்னவோ, புகையில்லா அடுப்பை உருவாக்கினார், அதற்குக் கல்லுப்பட்டி அடுப்பு என்றே பெயர்.

1960ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் நாள் குமரப்பா பாரதத்தாயின் காலடியில் அர்ப்பணமானார் 

வெள்ளி, 3 ஜனவரி, 2020

விண்வெளி ஆராய்ச்சியாளர் சதிஷ் தவான் நினைவு நாள் - ஜனவரி 3

சந்திரமண்டலத்தியல் கண்டு தெளியும் விண்வெளி ஆய்வில் தனியிடம் பெற்று பாரதம் விளங்குகிறது என்றால் அதற்கான அடித்தளம் இட்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான பேராசிரியர் சதிஷ் தவான் அவர்களின் நினைவுநாள் இன்று.


காஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த சதிஷ் தவான் 1920ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி பிறந்தவர். இன்று பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரத்தின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் கணிதத்தில் இளங்கலைப் பட்டத்தையும், இயந்திரவியல் துறையில் இளங்கலைப்  பட்டத்தையும் அதனைத் தொடர்ந்து ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றவர். பின்னர் அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் விண்வெளி  பொறியியல் துறையில் முதுகலை பட்டமும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வானூர்தி பொறியியல் துறையில் முதுகலை பட்டமும் பின்னர் கணிதம் மற்றும் வானூர்தி பொறியியல் ஆகிய இரண்டு துறைகளிலும் முனைவர் பட்டத்தையும் பெற்றவர்.

தனது உயர்கல்வியை அமெரிக்காவில் முடித்த பிறகு சதிஷ் தவான் 1951ஆம் ஆண்டு தாயகம் திரும்பி பெங்களூரு நகரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். 1962ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தில் இயக்குநராகப் பொறுப்பேற்ற பேராசிரியர் தவான் 1981ஆம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பில் நீடித்தார். தவான் பொறுப்பில் இருந்த காலத்தில் கூடுமான வரை நாட்டில் தயாரான பொருள்களை வைத்தே அறிவியல் ஆய்வுகளை நடத்தவும், புதிதாக சுதந்திரம் அடைந்த நாட்டின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் துறைகளிலும் ஆய்வு செய்யவும் அவர் தூண்டுகோலாக இருந்தார்.

புதிதாக சுதந்திரம் அடைந்த பாரத நாடு அறிவியல் துறையில் முன்னேறவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த விக்ரம் சாராபாய் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தைத் தொடங்கி, திறமை வாய்ந்த இளைஞர்கள் துணையோடு செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் மர்மமான முறையில் சாராபாய் இறக்க,  மிகக் குறுகிய காலம் பேராசிரியர் எம் ஜி கே மேனன் தலைமையில் விண்வெளி ஆய்வு மையம் செயல்பட்டது. இந்த முக்கியமான ஆய்வு மையத்தை வழிநடத்த பேராசிரியர் சதிஷ் தவான்தான் பொருத்தமான மனிதராக இருப்பார் என்று கருதிய அரசு அவரை விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக நியமித்தது. 1972ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் பொறுப்பேற்றுக்கொண்ட தவான் ஏறத்தாழ பனிரெண்டு ஆண்டுகள், 1984ஆம் ஆண்டு வரை விண்வெளி ஆய்வை வழிநடத்தினார்.

பாரத நாட்டின் விண்வெளி ஆய்வு  பேராசிரியர் சதிஷ் தவானால் மிக உறுதியாக அடித்தளம் இடப்பட்டது. அவர் காலத்தில்தான் ஆரியபட்டா, பாஸ்கரா போன்ற துணைக்கோள்களை விண்ணில் ஏவப்பட்டது. துணைக்கோள்களை விண்வெளியில் செலுத்தும் ஏவுகணைகளின் ஆரம்பகால வெற்றிகளும் எட்டப்பட்டன. விண்வெளி ஆய்வின் மூலம் தொலைத்தொடர்பு துறையிலும், பருவநிலை மாற்றம், மழை பொழிவு போன்ற தகவல்கள் திரட்டப்பட்டு மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டன.

விண்வெளி ஆய்வில் பின்னடைவு ஏற்படும் போது அதற்கான பொறுப்பை தானே ஏற்றுக்கொண்டும், வெற்றியடையும் காலத்தில் அதற்கான பாராட்டைத் தன் அணியைச் சார்ந்தவர்கள் பெறச் செய்வதும் என்று பேராசிரியர் சதிஷ் தவான் ஒரு சிறந்த தலைவருக்கான உதாரணமாக விளங்கினார். அடுத்த தலைமுறை ஆய்வாளர்களும், தலைவர்களையும் உருவாக்கி தனக்கு அளிக்கப்பட பணியை தவான் திறம்பட நடத்தினார்.

பாரத நாட்டின் முக்கியமான ஆய்வாளரான சதிஷ் தவானின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் 1971ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதையும், 1981ஆம் ஆண்டு பத்மவிபூஷண் விருதையும் வழங்கி நாடு அவரை கௌரவித்தது.

பேராசிரியர் சதிஷ் தவான் 2002ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் நாள் காலமானார். ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திற்கு பேராசிரியர் சதிஷ் தவானின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. சதிஷ் தவான் அமைத்துக் கொடுத்த வலிமையான அடித்தளத்தில் நாடு இன்று விண்வெளி ஆய்வில் உலகில் முன்னணியில் உள்ளது.

பேராசிரியர் சதிஷ் தவான் உள்பட அறிஞர் பெருமக்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. 

புதன், 1 ஜனவரி, 2020

காந்தியின் செயலாளர் மஹாதேவ தேசாய் - ஜனவரி 1



நாடு சுதந்திரம் அடைய மிகச் சரியாக ஐந்தாண்டுகள் இருந்தது. 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் அது. ஐம்பது வயதான அந்த மனிதர் உயிரற்ற உடலாக ஆகாகான் மாளிகையில் கிடத்தப்பட்டு இருந்தார். எழுபத்தி மூன்று வயதான முதியவர் "மஹாதேவ், மஹாதேவ்" என்று குரல் கொடுத்து அவரை எழுப்ப முயற்சி செய்துகொண்டிருந்தார். " இருபத்தி ஐந்தாண்டுகளாக எனது எந்த ஆணையையும் இவன் மீறியதே இல்லை, இன்றுதான் பதில் சொல்லாமல் இருக்கிறான்" என்று கூறியபடி உயிரற்ற அந்த உடலை குளிப்பாட்டி, தன் மகனைப் போல இருந்தவனுக்கு அந்த முதியவர் தந்தைக்கு மகன் செய்வது போல இறுதிச் சடங்குகளை முன்னின்று செய்தார். தந்தை இருக்கும்போது மகன் இறக்க நேரிடும் இல்லங்களில் நாம் காணும் காட்சிதான் இது. ஆனால் அங்கே இறந்து கிடந்தவர் மஹாதேவ தேசாய், இறுதிச் சடங்குகளை முன்னின்று நடத்தியவர் காந்தி.

காந்தியின் செயலாளராக, அவரின் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சராக, காந்தியின் வாழ்வின் முக்கியமான கட்டத்தைப் பதிவு செய்தவராக, பல நேரங்களில் காந்தியின் சமையல்காரராக, காந்தியின் மகனாக  இருந்த மஹாதேவ தேசாயின் பிறந்ததினம் இன்று. இன்றய குஜராத் மாநிலத்தின் சூரத் பகுதியைச் சேர்ந்த ஹரிபாய் தேசாய் - ஜம்னாபென் தம்பதியரின் மகனாக 1892ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் நாள் பிறந்தவர் மஹாதேவ் தேசாய். எளிய குடும்பத்தில் பிறந்த தேசாய், தனது ஆரம்ப கல்வியை சூரத்தில் முடித்து பின்னர் மும்பை எலிபென்டைன் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும், பின்னர் சட்டப் படிப்பையும் முடித்தார். அதனைத் தொடர்ந்து மும்பை மத்திய கூட்டுறவு வங்கியில் ஆய்வாளராகப் பணியில் அமர்ந்தார். இதற்கிடையில் அன்றய வழக்கத்தின்படி தனது பதின்மூன்றாம் வயதில் மஹாதேவ தேசாய் துர்காபென் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

தென்னாபிரிக்காவில் இருந்து காந்தி அப்போதுதான் பாரதம் திரும்பி இருந்தார். 1915ஆம் ஆண்டு முதல்முறையாக மஹாதேவ தேசாய் காந்தியை சந்திக்கச் சென்றார். ஜான் மோர்லே என்பவர் எழுதிய ஆங்கிலப் புத்தகம் ஒன்றை அவர் அப்போது குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்திருந்தார். அதனைப் பிரசுரம் செய்வது பற்றி காந்தியின் ஆலோசனையை அவர் கேட்க விரும்பினார். அந்த சந்திப்பு பின்னர் பலமுறை காந்தியை நேரில் கண்டு பழகும் வாய்ப்பை தேசாய்க்கு அளித்தது. 1917ஆம் ஆண்டு தேசாயை தன்னோடு தங்கி இருக்கும்படி காந்தி கேட்டுக்கொண்டார். 1917ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி முதல் 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் நாள், அதாவது தான் இறப்பதற்கு முன்தினம் வரை முழுமையாக தேசாய் பதிவு செய்துள்ளார்.

காந்தியோடு இணைந்த பிறகு தேசாய் முதன்முதலாக பிஹார் மாநிலத்திற்கு காந்தியோடு சென்றார். அநேகமாக தேசாய் இல்லாது காந்தி யாரையும் சந்தித்ததே இல்லை என்று சொல்லலாம். காந்தி இங்கிலாந்து சென்றபோது, அன்றய பிரிட்டிஷ் அரசர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்தார், அந்த சந்திப்பில் உடனிருந்த ஒரே ஒருவர் தேசாய்தான் என்றால் காந்தியின் மனதில் தேசாயின் இடம் என்ன என்பது நமக்குப் புரியும். சொல்லப்போனால் விடுதலைப் போரில் காந்தியின் முக்கியத் தளபதிகளாக இருந்த நேரு, படேல் இவர்களைக் காட்டிலும் தேசாய் காந்திக்கு நெருக்கமாக இருந்தார். காந்தியோடு இருப்பது என்பது எந்த நேரத்திலும் சிறை செல்லத் தயாராக இருப்பது என்றுதான் பொருள். தேசாயும் பலமுறை சிறை செல்ல வேண்டி இருந்தது. தான் எழுதிய கட்டுரைக்காக 1921ஆம் ஆண்டு முதன்முதலில் சிறையான தேசாய், பின்னர் உப்பு சத்தியாகிரஹம், சட்ட மறுப்பு போராட்டம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் போன்ற பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்தார்.

மஹாதேவ தேசாய் ஒரு சிறந்த எழுத்தாளருமான இருந்தார். குஜராத்தி, ஆங்கிலம், வங்காள மொழிகளில் அவர் பல கட்டுரைகளை எழுதி உள்ளார். நவஜீவன், எங் இந்தியா, ஹரிஜன், ஹிந்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஆனந்த பஜார் பத்திரிகா ஆகிய பத்திரிகைகளில் அவரது கட்டுரைகள் வெளியாகி உள்ளது. பர்தோலி சத்தியாகிரஹம் பற்றிய புத்தகம் ஒன்றை அவர் எழுதினார். காந்தி தனது தாய்மொழியான குஜராத்தி மொழியில் எழுதிய சுயசரித்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது தேசாய்தான். கீதை பற்றி காந்தி பல்வேறு இடங்களில் பேசியதையும் எழுதியதையும் தொகுத்து காந்தியின் பார்வையில் கீதை என்ற நூலை அவர் எழுதினார். வல்லபாய் படேல், கான் அப்துல் கபார் கான் ஆகியோர் பற்றிய வரலாற்று நூல்கள், வங்கத்தின் புகழ்பெற்ற நாவலாசிரியர் சரத்சந்திர சட்டோபாத்யாய எழுதிய பல்வேறு சிறுகதைகள், மற்றும் ஜவஹர்லால் நேருவின் சுயசரிதம் ஆகியவற்றை தேசாய் குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்து உள்ளார்.

காந்தியோடு அவர் இருந்த காலத்தில் எழுதிய நாள்குறிப்புகள் இருபத்தி இரண்டு தொகுதி கொண்ட மஹாதேவபாய் டைரி என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இது தேசாயின் மரணத்திற்குப் பிறகு பிரசுரமானது. காந்தியின் வாழ்வைப் பற்றியும், பாரத நாட்டின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும் பல முக்கியமான தகவல்கள் கொண்ட களஞ்சியமாக இது விளங்குகிறது. இந்த நூலுக்காக சாஹித்ய அகாடமி விருது தேசாய்க்கு அவரின் மரணத்திற்குப் பிறகு வழங்கப்பட்டது. 

1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் நாள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தி தொடங்கினார். செய் அல்லது செத்து மடி என்று மக்களுக்கு அறிவுரை பிறந்தது. இந்த நாட்டை யாரிடம் கொடுப்பது என்று கேட்கிறார்கள்,யாரிடம் வேண்டுமானாலும் கொடுங்கள், திருடனிடமோ, கொள்ளைக்காரனிடமோ யாரிடம் வேண்டுமானாலும் கொடுங்கள் ஆனால் நீங்கள் வெளியேறுங்கள் என்று ஆங்கிலேயர்களிடம் கூறப்பட்டது. முழு பலத்தோடு ஆங்கில அரசு போராட்டத்தை ஒடுக்க முடிவு செய்தது. நாட்டின் பல்வேறு தலைவர்கள் உடனைடியாகக் கைது செய்யப்பட்டனர்.

ஆகஸ்ட் 9ஆம் நாள் காந்தி கைதானார். மஹாதேவ தேசாயும் அவரோடு கைது செய்யப்பட்டார். அவர்கள் ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர். ஆறே நாட்களில் மாரடைப்பால் 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் தேசாய் காலமானார்.

நாட்டின் முக்கியமான தேசபக்தர்களில் ஒருவரான மஹாதேவ தேசாயின் பிறந்ததினத்தில் ஒரே இந்தியா தளம் அவருக்கு தன் மரியாதையை செலுத்துகிறது.