திங்கள், 28 அக்டோபர், 2019

இந்திரா நூயி - பிறந்தநாள் அக்டோபர் 28

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம், எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி


மஹாகவியின் இந்த வாக்கு இன்று உண்மையாகிக் கொண்டுள்ளது. பாரதத்தில் மட்டுமல்ல பாரெங்கும் பாரதப் பெண்கள் இன்று தங்கள் திறமையால் வெற்றிக்கொடி கட்டி வருகின்றனர். அதில் குறிப்பிடத்தக்கவர் திருமதி இந்திரா நூயி அவர்கள். அதிலும் இவர் தமிழகத்தைச் சார்ந்தவர் என்பது நமெக்கெல்லாம் இன்னும் பெருமை.

சென்னையைச் சார்ந்த மத்தியதர குடும்பத்தில் 1955ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி பிறந்தவர் திருமதி இந்திரா. தனது கல்வியை சென்னையில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியிலும், பின்னர் சென்னை கிருஸ்துவக் கல்லூரியிலும் முடித்த இந்திரா பின்னர் கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிலையத்தில் மேலாண்மைப்  பட்டத்தையும் பெற்றார்.

டூடல் என்ற நிறுவனத்திலும், அதனைத் தொடர்ந்து ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திலும் பணியாற்றி, பின்னர் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்கத் தொடங்கினார். அமெரிக்காவில் பாஸ்டன் கன்சல்டிங் குரூப், மோட்டோரோலா மற்றும் ஏசியா பிரவுன் போவெரி போன்ற நிறுவனங்களில் பணியாற்றினார்.

1994ஆம் ஆண்டு பெப்சி நிறுவனத்தில் மூத்த உதவித் தலைவர் பதவி இந்திரா நூயியை தேடி வந்தது. அதிலிருந்து இருபத்தி நான்கு ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் அவர் பணியாற்றினார். பல்வேறு பொறுப்புகளில் நிறுவனத்திற்குச் சேவை செய்து அவரது கடின உழைப்பில் மட்டுமே வளர்ந்து, பின்னர் 2001 ல் பெப்சிகோ வின் தலைமை நிதி அதிகாரி மற்றும் தலைவர் ஆனார். மேலும் அவர் இயக்குர் குழுவிலும் இருப்பார் என அறிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப பெப்சி மற்றும் இதர விற்பனைப் பொருட்களின் வடிவம், அளவு, தரம் ஆகியவற்றில் பல மாறுதல்களைப் புகுத்தினார். இவரது வருகைக்குப் பிறகு 45 ஆண்டுக்கும் மேலான அந்நிறுவன வளர்ச்சி பெரிய முன்னேற்றப் பாதைக்குச் சென்றது. இதனால் 2006-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் ஐந்தாவது தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்தார்.

ஒவ்வொரு நாட்டிலும், குறிப்பிட்ட மாநிலங்களுக்குள்ளாக அந்த மக்களுக்குப் பரிட்சயமான பிரபலங்களைக் கொண்டு பெப்சி விளம்பரங்களைப் பல வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தினார். இந்தியாவில் முன்னணி விளையாட்டு வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்களைக் கொண்டு பெப்சி குளிர்பானத்திற்கான விளம்பரங்களை அதிக அளவில் செய்தார். இதனால் உலகம் முழுக்க பெப்சியின் விற்பனை வளர்ச்சி கணிசமாக உயர்ந்தது. குறிப்பாக பெப்சியின் விற்பனை வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு மிக அதிகம். இந்தியாவில் விற்பனையாகும் முதல் ஐந்து குளிர்பானங்களில் பெப்சியும் ஒன்று.

இந்திராவின் திறமைக்கு சி.இ.ஓ பதவியுடன் கூடுதலாக 2007-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைவர் பொறுப்பும் அவரைத் தேடிவந்தது. ஃபார்ச்சுன் பத்திரிகையின் 2006, 2007, 2008, 2009-ம் ஆண்டுகளின் உலகின் வலிமைமிக்க பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்தார். அந்தச் சமயங்களில் ஓர் இந்தியப் பெண்மணியாக உலகம் முழுக்க இவரது பணித் திறன் பெருமையாக பேசப்பட்டது.

1981ஆம் ஆண்டு ராஜ் நூயி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இந்திராவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவரது திறமையைப் பாராட்டி பல்வேறு விருதுகளும், பட்டங்களும் இவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. 2007 ஆம் ஆண்டு பாரத அரசு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி சிறப்பித்தது.

எல்லாத் தடைகளையும் பாரத மகளீர் தாண்டி சாதனை படைப்பார்கள் என்ற உண்மையை உலகமெங்கும் உரக்கச் சொன்ன இந்திரா நூயி அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.