சனி, 26 அக்டோபர், 2019

புரட்சிவீரர் மன்மதநாத் குப்தா நினைவுநாள் - அக்டோபர் 26

அக்டோபர் 26, வருடம் 2000. இன்றுபோல் அன்றும் ஒரு தீபாவளி திருநாள். பதின்ம வயதிலேயே  சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, அந்நிய ஆட்சியை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடி அதனால் தனது நாற்பதாம் வயதுக்குள் இருபதாண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பெரும் போராளி தீபவரிசை நாட்டை அலங்கரித்து வழியனுப்ப தொண்ணுற்றி ஒன்றாம் வயதில் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட நாள் இன்றுதான்.



"எங்களை புரட்சியாளர்கள் என்று மக்கள் சொல்கிறார்கள், ஆனால் உண்மையில் நாங்கள் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்யத் துணிந்த சாதாரண மனிதர்கள்தான்" என்று கூறிய மன்மதநாத் குப்தாவின் நினைவுநாள் இன்று.

வங்காளத்தை தங்கள் பூர்விகமாகக் கொண்ட, வாரணாசியில் வசித்து வந்த  வீரேஸ்வர் குப்தாவிற்கு மகனாக 1908ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் நாள் பிறந்தவர் மன்மதநாத் குப்தா. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர் மன்மதநாத். 1921ஆம் ஆண்டு அன்றய வேல்ஸ் இளவரசரான எட்டாம் எட்வர்ட் வருகையை ஒட்டி வாரணாசியில் மன்னர் வரவேற்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் மக்களைக் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறி அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுக்கும் துண்டு பிரசுரங்களை 13 வயதான மன்மதநாத் விநியோகிக்கும் செய்துகொண்டு இருந்தார். அரசுக்கு எதிரான நடவடிக்கை என்று அன்றய காவல்துறை அவரை கைது செய்தது. மூன்று மாத சிறைவாசம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விடுதலைப் போருக்கும், சிறைவாழ்வுக்கும் மன்மதநாத் குப்தாவுக்குமான நீண்ட உறவு அன்றுதான் தொடங்கியது.

விடுதலையாகி வந்த மன்மதநாத் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். ஒத்துழையாமை இயக்கத்திற்கு காந்தி அழைப்பு விடுத்தார். ஆனால் சவுரி சவுராவில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து போராட்டத்தை காந்தி திரும்பப் பெற்றார். மனம் வெறுத்த இளைஞர்கள் தீவிரவாத நடவடிக்கைதான் சரியாக இருக்கும் என்று எண்ணத் தலைப்பட்டனர். பலர் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் அஸோஸியேஷன் என்ற அமைப்பில் இணைந்தனர். ராம் பிரசாத் பிஸ்மி, அஷ்பாகுல்லாகான், சந்திரசேகர ஆசாத், பகத்சிங் என்ற பெரும் வீரர்கள் ஒரே அணியாகத் திரண்டனர். அவர்களில் ஒருவராக மன்மதநாத் குப்தாவும் இருந்தார்.

போராட்டத்திற்கு ஆயுதம் வேண்டும், ஆயுதம் வாங்கப் பணம் வேண்டும், பணத்தை ஆங்கில ஆட்சியிடமே கொள்ளை அடிக்கலாம் என்ற திட்டம் உருவானது. அரசின் பணத்தோடு வந்த புகைவண்டி ஒன்றை ககோரி என்ற இடத்தில் வீரர்கள் கொள்ளை அடித்தனர். ஆனால் ஆட்சியாளர்களின் கைகள் புரட்சிவீரர்கள் பலரை கைது செய்தது. மன்மதநாத் குப்தாவும் கைதானார். பதினெட்டு வயதை எட்டவில்லை என்பதால் பதினாலு ஆண்டுகள் கடுங்காவல் சிறைவாசம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1937ஆம் ஆண்டு விடுதலையான மன்மதநாத் மீண்டும் ஆங்கில ஆட்சியை எதிர்த்து எழுதத் தொடங்கினார். 1939ஆம் ஆண்டு மீண்டும் சிறை, இந்தமுறை அந்தமான் சிறைக்கொட்டடியில், எட்டாண்டுகள் கழித்து 1946ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். முப்பத்தி எட்டு வயதுக்குள் சரிபாதி வாழ்வை சிறையில் கழித்த வீரர் மன்மதநாத்.

சுதந்திரம் அடைந்த நாட்டில் மன்மதநாத் எழுத்தாளராக உருமாறினார். ஏறத்தாழ நூற்றி இருபது புத்தகங்களுக்கு மேலாக அவர் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் வங்காள மொழியில் எழுதியுள்ளார். கத்தியின்றி ரத்தமின்றி கிடைக்கவில்லை சுதந்திரம் என்பது, அதில் ஆயுதம் தாங்கி போராடிய வீரர்களின் பங்கு மிகப் பெரியது என்ற உண்மையை போராளிகளின் பார்வையில் இருந்து அவர் பதிவு செய்து உள்ளார். அவர்கள் அபாயகரமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் ( They lived dangerously ) என்ற அவரது புத்தகம் அன்றய விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்வை பதிவு செய்துள்ளது. சந்திரசேகர ஆசாத், காந்தியும் அவர் காலமும், பகத்சிங்கும் அவர் காலமும், விடுதலைப் போராட்டத்தில் போராளிகளின் வரலாறு என்பவை அவர் எழுதிய முக்கியமான நூல்களில் சில.

செய்தி ஒளிபரப்பு துறையில் பணியாற்றிய மன்மதநாத் குப்தா திட்டக்குழுவின் சார்பில் பல்வேறு புத்தகங்களை / கையேடுகளை எழுதி வெளியிட்டுள்ளார். பால பாரதி என்ற சிறுவர் பத்திரிகை மற்றும் ஆஜ்கல் என்ற இலக்கிய பத்திரிகை மற்றும் திட்டக்குழுவின் சார்பில் வெளியான யோஜனா ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் மன்மதநாத் குப்தா இருந்தார்.

நாட்டின் வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட தியாகிகளில் ஒருவரான மன்மதநாத் குப்தா 2000ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் நாள் இந்திய மண்ணோடு கலந்தார்.

விடுதலை வீரர்கள் அனைவருக்கும் நமது வணக்கங்கள்