ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

லெப்டினென்ட் ஜெனரல் அர்தேஷிர் தாராபூர் - ஆகஸ்ட் 18

பாரத நாட்டின் சேவைக்காக பாகிஸ்தானுக்கு எதிரான 1965ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பலிதானியான லெப்டினென்ட் ஜெனரல் அர்தேஷிர் தாராபூர் அவர்களின் பிறந்ததினம் இன்று.

தாராபூரின் முன்னோரான ரத்தன்ஜிபா  சத்ரபதி சிவாஜி மஹாராஜின் படையில் தளபதியாகப் பணியாற்றியவர். இவரின் தந்தையும், பாட்டனாரும் ஹைதராபாத் நிஜாமின் அரசின் சுங்கத்துறையில் பணிபுரிந்தவர்கள். பள்ளிப்பருவத்திலேயே பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய தாராபூர் படிப்பை முடித்தபின் நிஜாமின் ராணுவத்தில் பணிபுரியத் தொடங்கினார். இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் இவரது படைப்பிரிவு மத்திய கிழக்கு நாடுகளில் பணியில் ஈடுபட்டு இருந்தது.




ஹைதராபாத் சமஸ்தானம் பாரதத்தோடு இணைந்த பிறகு 1951ஆம் ஆண்டு தாராபூர் இந்திய ராணுவத்தின் பூனா குதிரைப்படை பிரிவின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். படிப்படியாக ராணுவத்தில் முன்னேறிய அவர் 1965ஆம் ஆண்டு லெப்டினென்ட் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

1965ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் காஷ்மீர் மக்களைப் போன்று உடைகளை அணிந்துகொண்டு பாகிஸ்தான் ராணுவம் பாரத எல்லைக்குள் ஊடுருவியது. உள்ளூர் மக்கள் அளித்த தகவல்களைத் தொடர்ந்து பல்வேறு பாகிஸ்தான் ராணுவத்தினர் பாரத ராணுவவீரர்களால் கைது செய்யப்பட்டனர். கேந்ர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பிடிப்பதன் மூலமும், சாலைப் போக்குவரத்தை தடை செய்வதன் மூலமும் பாரத ராணுவத்தை நிலைகுலைய வைத்துவிட திட்டமிட்ட பாகிஸ்தான் முழுமையான போரில் இறங்கியது. செப்டம்பர் ஆறாம் நாள் பாரத ராணுவம் சர்வதேச எல்லைக்கோட்டை கடந்து பாகிஸ்தானுக்குள் புகுந்தது.

பாகிஸ்தான் பகுதியில் உள்ள சிலாகோட் நகரை கைப்பற்றி லாகூரில் இருந்து ராணுவ தளவாடங்கள் போர்முனைக்கு செல்லாமல் தடுக்கும் முன்னெடுப்பை பாரத ராணுவம் தொடங்கியது. இந்தத் தாக்குதலை இந்தியாவின் முதலாவது கவசப்படை நடத்துமாறு உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. தாராப்பூர் நடத்திய பூனா குதிரைப்படையும் முதல் கவசப்படையின் ஒரு பகுதியாக இருந்தது. அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்திருந்த கவச வண்டிகளில் ( Military Tanks ) அறுபதை பாரத ராணுவம் அழித்தது. சிலாகோட் பகுதி பாரத ராணுவத்தின் பிடிக்குள் வந்தது. போரில் படுகாயம் அடைந்த போதிலும் தாராப்பூர் களத்தை விட்டு அகலாது தனது படைகளை நடத்தினார். பாரத ராணுவத்திற்கு மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்த அந்த வீரர் போர்க்களத்தில் தனது உயிரைத் தியாகம் செய்தார்.

அவரது விருப்பப்படி போர்க்களத்திலேயே அவரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இறுதிச் சடங்குகள் நடைபெறும் நேரத்தில் பாகிஸ்தான் ராணுவமும் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தனது தாக்குதலை நிறுத்தி வைத்தது.

போற்றுதலுக்குரிய நெஞ்சுரத்தை காட்டி, பலிதானியான வீரர் லெப்டினென்ட் ஜெனரல் அர்தேஷிர் தாராபூர் அவர்களுக்கு ராணுவத்தின் மிக உயரிய விருதான பரமவீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

இந்திய நாட்டைக் காக்க தங்கள் உயிரையும் பணயம் வைக்கும் ராணுவ வீரர்களின் தியாகத்தை நாம் என்றும் போற்றுவோம்.