சனி, 14 டிசம்பர், 2019

ஹிந்தி திரைப்பட நடிகர் ராஜ்கபூர் பிறந்தநாள் - டிசம்பர் 14.

ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கு மேலாக ஹிந்தி திரைப்பட உலகின் முக்கியமான ஆளுமையாக விளங்கிய ரன்பிர் ராஜ்கபூர் என்ற ராஜ்கபூர் அவர்களின் பிறந்ததினம் இன்று.


ஹிந்தி திரைபட உலகின் தொடக்ககால நட்சத்திரங்களில் ஒருவரான பிரிதிவிராஜ்கபூரின் முதல் மகனாக பேஷவார் நகரில் 1924ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் நாள் பிறந்தவர் ராஜ்கபூர். இவரின் சகோதர்கள் சஷிகபூர், ஷம்மிகபூர் மற்றும் ஊர்மிளா என்ற சகோதரி. திரைப்பட நடிகராக பல்வேறு நகரங்களுக்கு மாறி மாறி பிரிதிவிராஜ்கபூர் வசித்ததால், அவரின் குடும்பமும் அவரோடே பயணப்பட வேண்டி இருந்தது. அதனால் ராஜ்கபூர் டெஹ்ராடூன், கொல்கத்தா, மும்பை என்று பல்வேறு நகரங்களில் உள்ள பள்ளிகளில் படித்துவந்தார்.

சிறுவயதில் இருந்தே கலைத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த ராஜ்கபூர் சினிமாவில் முதல்முதலாக கிளாப் அடிக்கும் வேலையில் இருந்துதான் தன் பயணத்தைக் தொடங்கினார். பல படங்களில் சிறுசிறு வேடங்களில் தலைகாட்டிய ராஜ்கபூர் முதல்முதலாக 1947ஆம் ஆண்டு நீல்கமல் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்தப் படத்தில் இவரது ஜோடி மதுபாலா.

தனது 24ஆம் வயதில் ஆர் கே ஸ்டூடியோ என்ற நிறுவனத்தை உருவாக்கி ஆக் என்ற படத்தை இயக்கினார். இந்தப்படத்தில் நர்கிஸ் இவருக்கு ஜோடியாக நடித்தார். இதன் மூலம் அந்த காலத்தில் மிக இளைய திரைப்பட இயக்குனர் என்ற பெருமை ராஜ்கபூரை வந்தடைந்தது. திலிப்குமார், நர்கிஸ் ஆகியோரோடு ராஜ்கபூர் நடித்த அன்டாஸ் என்ற படம் பெரும் வெற்றியை பெற்றது. ராஜ்கபூர் தயாரித்து, இயக்கி நடித்த பர்ஸாட் என்ற படம் திரையுலகின் முக்கியமான ஆளுமையாக ராஜ்கபூரை நிலைநிறுத்தியது.

தனது ஆர் கே ஸ்டுடியோ சார்பில் ராஜ்கபூர் தயாரித்து நடித்த ஆவாரா, ஸ்ரீ 420, ஜிஸ் தேஷ் மே கங்கா பெஹத்தி ஹை ஆகிய படங்கள் அன்றைய வெற்றிப்படங்கள். 1970களில் ராஜ்கபூர் மேரா நாம் ஜோக்கர் என்ற படத்தை தயாரித்து இயக்கி நடித்தார். ஆனால் இன்று கொண்டாடப்படும் இந்தப்படம் அன்று ஒரு தோல்விப்படமாக இருந்தது. 1973ஆம் ஆண்டு இவர் தயாரித்த பாபி என்ற திரைப்படம் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது.

எழுபதுகளின் பிற்பாதிகளிலும் எண்பதுகளிலும் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல படங்களை ராஜ்கபூர் தயாரித்து இயக்கினார். ஸிநத் அமன் நடித்த சத்தியம் சிவம் சுந்தரம், பத்மினி கோல்ஹாப்பூரி நடித்த பிரேம் ரோக், மந்தாகினி அறிமுகமான ராம் தேரி கங்கா மைலி ஆகியவை அதில் முக்கியமானவையாகும். இந்த காலகட்டங்களில் ராஜ்கபூர் குணசித்ர வேடங்களில் நடிக்கத் தொடங்கி இருந்தார்.

1946ஆம் ஆண்டு ராஜ்கபூர் கிருஷ்ணா மல்ஹோத்ரா என்ற பெண்மணியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள். அதில் ரன்திர்கபூர், ரிஷிகபூர், ராஜிவ்கபூர் ஆகியோரும் திரைத்துறையில்தான் இயங்கிக்கொண்டு உள்ளார்கள். இவரது மகளான ரீத்து எஸ்கார்ட்ஸ் குழுமத்தின் ராஜு நந்தாவைத் திருமணம் செய்துகொண்டு உள்ளார். இவர்கள் மருமகள்தான் அமிதாப் பச்சனின் மகள் ஸுவேதா. ராஜ்கபூரின் மற்றொரு மகளான ரீமா மனோஜ் ஜெயின் என்ற முதலீட்டு ஆலோசகரை மணந்து கொண்டுள்ளார். பிரிதிவிராஜ்கபூரின் தொடங்கி நான்கு தலைமுறையாக இவர்கள் குடும்பம் ஹிந்தி திரையுலகின் பல்வேறு துறைகளில் தனி முத்திரை பதித்து வருகிறது.

பல்வேறு திரைப்படங்களுக்காக ராஜ்கபூருக்கு மூன்று தேசிய விருதுகளும், பதினோரு பிலிம்பேர் விருதுகளும் வழங்கப்பட்டு உள்ளது. 1971ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் 1987ஆம் ஆண்டு தாதாசாஹேப்பால்கே விருதும் இவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

திரு ராஜ்கபூர் 1988ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் நாள் காலமானார். திரை ரசிகர்கள் மனதில் இன்றும் ராஜ்கபூர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.