சனி, 7 ஜனவரி, 2017

கறுப்புக் குதிரையும் கண்கட்டி வித்தையும் - I

ஏறத்தாழ 136 பக்கங்களும் இருபது அத்தியாயங்களையும் கொண்டு இந்தப் புத்தகத்தை நண்பர் நரேன் எழுதியுள்ளார். பொதுவாக பொருளாதாரம் என்பது படிப்பதற்கு விறுவிறுப்பில்லாத ஒரு விஷயம். அதை ஒரு துப்பறியும் நாவலுக்கு உண்டான வேகத்தோடு எழுதியதில் உண்மையிலே நரேன் வெற்றி அடைந்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஆற்றின் ஒழுக்கு போல எங்கேயும் தடைபடாத மொழி, நான் பார்த்தவரை வாக்கியங்களின் அமைப்பிலோ அல்லது சந்திப்பிழைகளையோ காணமுடியவில்லை. மிகச் சரியாக தொகுக்கப்பட்டு, பிழைத்திருத்தப்பட்ட நூல் இது. நரேன் அவர் வாத்தியாராகக் கொண்டாடும் சுஜாதாவின் நடை இதில் தெரிகிறது. ஆசிரியருக்கு ஏற்ற மானவர்தான்.

என் கையில் கிடைத்த மின்புத்தகம் போலவே அச்சுப் புத்தகமும் இருக்கும் என்றே நான் நினைக்கிறேன், அப்படியென்றால் புத்தகத்தின் மொழி மட்டுமல்ல அதன் வடிவமும் அநேகமாகக் குறைசொல்ல முடியாத ஒன்றுதான். வாழ்த்துகள் நரேனுக்கும், அரவிந்தனுக்கும்.

அதைவிட முக்கியமாக திரு நரேன் அவர்களை கடந்த மூன்றரை ஆண்டுகளாக   சுறுசுறுப்பாக வைத்திருக்கும் திரு மோடி அவர்களுக்கு என் பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.

இந்தப் புத்தகத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ளலாம். முதல் பிரிவு என்பது கள்ளப்பணம் என்பது இந்தியாவில் இருந்து வெளியேறி, மீண்டும் கணக்கில் வரவுவைக்கப்பட்டு வெள்ளைப்பணமாக இந்தியாவிற்குள் வந்துவிடும் என்பதை நிரூபிக்க முயன்ற பெரும்பகுதி.

இரண்டாவது பகுதியென்பது இந்த தாள்கள் செல்லாது என்று அறிவித்ததன் மூலம் ஏற்பட்ட இடர்கள் மற்றும் ஏன் இது சரியான நடவடிக்கை இல்லை என்று நிரூபிக்க முயற்சி செய்த பகுதி. இவை இரண்டிலும் திரு நரேன் சொல்ல மறந்த உண்மைகள் என்னவென்று நாம் பார்ப்போம்.

1, எது கறுப்புப் பணம் ? 

ஒரு நாட்டின் சட்டவிதிமுறைகளுக்குள் வராமல், வரி எய்ப்பின் மூலமும், வரி வளைப்பின் மூலமும் சேர்க்கப்படும் எல்லாமே கள்ளப்பணம்தான் ( பக்கம் 19 ) 

ஆனால் இதில் ஒரு சிறிய வேறுபாடு இருக்கிறது. சட்டத்தின் உட்பட்டு வருமானம் ஈட்டி, ஆனால் அதைக் கணக்கில் காட்டாமல் இருக்கும் கறுப்புப் பணம் என்பது ஓன்று, சட்டத்தை மீறி, சட்டத்திற்குப் புறம்பாக ஈட்டும் வருமானம் என்பது வேறு.

அதாவது ஒரு மருத்துவர் / வழக்கறிஞர் / ஆசிரியர் என்பவர் ஈட்டும் வருமானம் என்பது சட்டப்படி சரியானதுதான், அதைக் கணக்கில் காட்டாது வைத்திருப்பது என்பது ஓன்று.

அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சத்தின் மூலமாக ஊழலின் மூலமாக வரும் வருமானமும், தடைசெய்யப்பட்ட தொழில்கள் ( கள்ளச் சாராயம், போதைப் பொருள், ஆயத விற்பனை ) மூலம் வரும் வருமானமும் வெவ்வேறு.

முதலாவதில் சமுதாயப் பாதிப்பு என்பது அரசின் வரிவருவாய் இழப்பு என்பது தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் இரண்டாவதில் சட்டம் ஒழுங்குப் பிரச்னை முதல் வளர்ச்சிப் பணிகளின் பாதிப்பு வரை உண்டு.

இன்றய காலகட்டத்தில் ( 2017 ஜனவரி ) இந்தியாவின் மக்கள்தொகை 133 கோடி. ஒரு குடும்பம் என்பதில் ஐந்து பேர் இருக்கிறார்கள் என்றால் 26.6 கோடி குடும்பங்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். இதில் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டுபவர்கள் மூன்று கோடியே அறுபத்திஐந்து லட்சம் தனிநபர்கள் மட்டுமே. நிறுவனங்கள், பிரிவுபடாத ஹிந்து குடும்பங்கள் ( HUF ), மற்றவர்கள் என்று மொத்தம் மூன்று கோடியே தொன்னூற்று ஒரு லட்சம் கணக்குகள் வருமானவரித்துறையிடம் உள்ளது.

இவர்களில் ஒரு கோடியே ஐம்பத்திஐந்து லட்சம் கணக்குகளில் காட்டப்படும் வருமானம் என்பது இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் குறைவு, அதாவது இதில் வரி என்பதே கிடையாது.

அதாவது 133 கோடி மக்கள் உள்ள நாட்டில் வருட வருமானம் இரண்டரை லட்சத்திற்கு மேல் என்று கணக்கு காட்டுபவர்கள் எண்ணிக்கை இரண்டு கொடியே முப்பத்தி ஐந்து லட்சம் மட்டுமே. அதாவது மொத்த மக்கள்தொகையில் 1.76% மக்கள்தான் வருமான வரிக்கு மேலே வருமானம் ஈட்டுகிறார்கள் என்று கணக்கு இருக்கிறது

2, வரிவிகிதம்தான் காரணமா ? 

இன்றய நிலையில் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சம் வருமானம் ஈடுபவர் எந்த வித சலுகையும் பெறாவிட்டால் அவர் செலுத்தவேண்டிய வரி என்பது மாதம் ஒன்றுக்கு பதினைந்தாயிரம் ரூபாய்தான். இதையே அரசுத்தரும் சலுகைகளை முறையாகப் பயன்படுத்தினால், இந்த வருமானத்திற்கு வரியே செலுத்தவேண்டாம் என்பதுதான் உண்மை.எனவே வருமானவரிதான் கள்ளப்பணத்திற்குக் காரணம் என்பதும் ஒரு தவறான வாதம்தான்.

3, கறுப்புப்பணம் தாளாக இருக்காதா ? 

நண்பரின் அடுத்த வாதம் கறுப்புப்பணம் ரொக்கமாக இருக்காது, அது நகைகளாக, தங்கமாக, நிலங்களாக மாறிவிடும். மேலும் அவை வெளிநாட்டுக்குச் சென்று மீண்டும் கணக்கில் காட்டப்பட்ட பணமாக இங்கேயே வந்துவிடும் என்கிறார்.

பல்லாயிரம் கோடி கருப்புப்பணத்தை சலவை செய்யும் வழிமுறைகளை பற்றிப் பேசத்தான், இந்த நூலின் பெரும்பான்மையான பக்கங்கள் செலவிடப்பட்டு இருக்கிறது. பல வழிகள் நூலாசிரியருக்குத் தெரியும் என்பதும், தேவைப்படுபவர்கள் அவரை அணுகலாம் என்பதும்தான் எனக்குப் புலனாகிறது.

சரி, என்னிடம் பத்து கோடி ரூபாய்க்கு கணக்கில் காட்டாத பணம் இருக்கிறது. அதை யாரோ ஒருவரிடம் கொடுத்து அதை ஆசிரியர் கூறுவது போல வெளிநாட்டுக்கு அனுப்பி மீண்டும் இந்தியாவுக்கே கொண்டுவருகிறேன், இல்லை வரியில்லா சொர்க்கங்களில் அதை வேறு ஒரு நாட்டின் பணமாக வைத்துக் கொள்கிறேன் என்றே எடுத்துக் கொள்வோம். நான் இங்கே கொடுத்த பணம், இந்திய நோட்டுக்களாகவேதானே இருக்கும், அதை முழுவதும் இங்கேயே கணக்கில் கொண்டுவர முடியுமா ? இந்தப் பணம் தான் மீண்டும் மீண்டும் கருப்புப்பணமாக சுழன்று மீண்டும் மீண்டும் வரிஏய்ப்பு செய்பவர்களின் வழியாக சுற்றி வருகிறது.

இன்று இந்த நோட்டுகள் செல்லாது என்றான பிறகு, மீண்டும் இந்த அளவிலான கறுப்புப் பணத்தை உருவாக்க எத்தனை காலம் ஆகும் ?

ஒரு சட்டமன்றத் தேர்தலின் போது எல்லாக் கட்சிகளும் சேர்ந்து செலவழிக்கும் மொத்த தொகை எவ்வளவு ? ஒரு நாடாளுமன்றத்தேர்தலின் போது தொகுதிக்கு எத்தனை பணம் கைமாறுகிறது ? எல்லாப் பணமும் தங்கமும், நகைகளும், நிலங்களுமாக மாறி இருந்தால் தேர்தலுக்குத் தேர்தல் அவைகளை விற்றா பணம் புழக்கத்திற்கு வருகிறது ? அப்படி என்றால் தேர்தல்களின் போது நிலங்களின் விலையும், தங்கத்தின் விலையும் குறைகிறதா என்ன ?

ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். திருநெல்வேலி போன்ற ஒரு சிறிய நகரத்தில் உள்ள ஒரு ஆசிரியர் தனிப்பயிற்சியில் சம்பாதிக்கும் பணம் எவ்வளவாக இருக்கும் என்று ஒரு கணக்கைப் பாப்போம். வாரத்திற்கு மூன்று நாட்கள் நடக்கும் தனிப்பயிற்சிக்கு ஒரு மாணவருக்கு கட்டணம் குறைந்தபட்சம் ரூபாய் அறுநூறு. ஒரு பயிற்சி வகுப்பில் குறைந்தது இருப்பது மாணவர்கள், நாள் ஒன்றுக்கு இரண்டு வகுப்புகள் என்றால் கணக்கில் காட்டாது அவருக்கு வரும் வருமானம் ( 2 வகுப்புகள் X 20 மாணவர்கள் X ரூ 600 ) அதாவது ரூ 24,000/- இது திங்கள், புதன், வெள்ளி அன்று நடக்கும் பயிற்சியின் மூலம் வரும் வருமானம், இதேபோல செவ்வாய், வியாழன், சனி அன்று நடக்கும் வகுப்பில் இன்னொரு ரூ 24,000/- அதாவது மாதம் ஒன்றுக்கு ரூ 48,000/- ஒரு வருடத்தில் பத்து மாதங்கள் அவர் சம்பாதிக்கும் பணம் ஏறத்தாழ ரூபாய் ஐந்து லட்சம். சர்வ நிச்சயமாக இது சட்டத்திற்கு உள்பட்டு நேர்மையான முறையில் சம்பாதிக்கும் பணம்தான். ஆனால் முறையாக கணக்கு காட்டப்படாதது.

நரேன் சொல்வது போல இவர் வரியில்லா சொர்கங்களில் நிறுவனங்கள் ஆரம்பித்து, இந்தப் பணத்தை மாற்றப்போவது இல்லை. அவர் கப்பலைக் கவிழவைத்து காப்பீடு நிறுவனங்களை ஏமாற்றி இந்தப் பணத்தை சலவை செய்யப்போவது இல்லை. எங்கே போனது இந்தப்பணம் என்பதை ஆசிரியர் கூறுவாரா ?


4, கப்பல் கரைதட்டி காப்பீடு வாங்க முடியுமா ? 

சரக்குகளை அனுப்பாமல் காப்பீடு செய்து, சரக்கு போன கப்பல் கடலில் கவிந்தது என்று ஆதாரங்களைக் காட்டி, இல்லை கடற்கொள்ளையர்களால் கொள்ளை போனது என்று கூறி காப்பெடு நிறுவனங்களை ஏமாற்றி இழப்பீடு பெற்று, அந்தப் பணத்தை வெள்ளையாக்கலாம் என்று கூறி இருக்கிறார்.

கொக்கு தலையில் வெண்ணையை வைத்து, அது உருகி கொக்கின் கண்ணை மறைக்கும், அப்போது கொக்கைப் பிடிக்கலாம் என்று சொல்வதுபோலதான் இது.

காப்பீடின் ஆரம்பமே கடல்வழி வணிகத்தை காப்பீடு செய்வதில்தான் ஆரம்பமாகிறது. ஒரு பொருளைக் காப்பீடு செய்வதற்கு முன் காப்பீடு நிறுவனம் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றித் தெரியாதவர்கள்தான் இப்படி எழுத முடியும்.

கப்பல் எந்த நிறுவனத்திற்குச் சொந்தமானது, அதன் வயது என்ன, அது எங்கே இருந்து எங்கே செல்கிறது, அது பயணம் போகும் பாதை எது, அது நிறுத்தப்படும் துறைமுகங்கள் எவை, அதில் செல்லும் சரக்குகள் எவை இதுபோன்ற பல கேள்விகளைக் கேட்டு, பல விஷயங்களைத் துருவித் துருவி விசாரித்துவிட்டுதான் காப்பீடு வழங்கப்படும்.

சாதாரணமான இழப்புகளுக்கு நஷ்டஈடு வழங்கவே நிறுவனங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை தெரியாதவர்கள்தான் இப்படி எழுத முடியும்.

சில கசப்பான உண்மைகள்

இன்றய நிலையில் ஒரு சாதாரண தொழில் தொடங்கவேண்டும் என்றால் விற்பனைவரித்துறையில் பதிவு எண் பெறவேண்டும். அதற்கே லஞ்சம் தரவேண்டும். அதிலிருந்து அரசாங்கத்தோடு பொதுமக்கள் இடையேயான தொடர்பின் எல்லாக் கண்ணியிலும் லஞ்சம் இல்லாமல் எதுவும் நடைபெறுவது இல்லை. இப்படிப் பெறப்படும் பணம் எல்லாமே கறுப்புப் பணம்தான்.

வெவ்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள் கையில் பணத்தோடு அதை மாற்ற வழிதேடி அலைந்தது உண்மைதானே.

கோடிக்கணக்கில் கறுப்புப் பணம் வைத்து இருப்பவர்களை பிடியுங்கள், பிறகு பொதுமக்களிடம் உள்ள பணத்தைப் பார்க்கலாம் என்று சில அறிவாளிகள் கூறுகின்றனர்.

இதே அளவுகோலை வைத்தால், கோடிக்கு மேல் உள்ள திருட்டை மற்றும் காவல்துறை கணக்கில் எடுத்தால் போதுமா ? இல்லை கொலைகளைத் தவிர வேறு குற்றங்களைக் கண்டிக்காமல் விட்டுவிடலாமா ?  குற்றம் என்பது அதன் அளவைப் பொறுத்தது என்பதே தவறான வாதம்.

விவசாய விலை வீழ்ச்சி

மஹாராஷ்டிரா மாநிலத்தின் மாலேகாவ் தாலுகாவில் வெங்காய சந்தையும், மத்திய பிரதேசத்தின் மிர்ஜாபூர் பூ வியாபாரமும் இந்த நடவடிக்கையால் நிலைகுலைந்து போய் விட்டன. இதுபோல இந்தியாவை முழுவதும் விவசாயிகள் தங்கள் பொருள்களுக்கு சரியான விற்பனை விலை கிடைக்காமல் நஷ்டம் அடைகிறார்கள் என்று சொல்லி இருக்கிறார்.

விவசாயிகளுக்கு லாபம் இருக்கவேண்டும் என்பதிலோ அல்லது விவசாயம் லாபமான தொழிலாக இருக்கவேண்டும் என்பதிலோ இருவேறு கருத்துக்கள் இல்லை.

ஆனால் இந்த விலை குறைவு என்பது விவசாயிகளிடம் இருந்து மொத்த வியாபாரிகள் வாங்கும் விலையா இல்லை இறுதியான நுகர்வோர்களுக்கு கிடைக்கும் விலையா என்று அவர் கூறவில்லை. எனக்குத் தெரிந்து காய்கறிகளின் விலையில் பெரிய மாறுதல் எதுவும் நிகழவில்லை.

பொதுவாகவே உணவுப் பொருள் வணிகத்தில் வியாபாரிகள்தான் லாபம் அடைகிறார்கள் என்ற ஒரு பேச்சு இருக்கிறது.

அதுபோக அதிகமான விளைச்சல் என்றால் அப்போது விளைபொருள்களை பாதுகாக்கும் குளிர்சாதன பெட்டகங்களும், அந்த விளைபொருள்களை மதிப்புகூடப்பட்ட பொருள்களாக மாற்றுவதன் மூலமே இந்த நிலையை மாற்றமுடியும்.

சுற்றுலா : 

அரசின் இந்த முடிவால் சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டு உள்ளது. கோவாவின் கடற்கரைகளில் ஆளே இல்லை என்று எழுதி இருக்கிறார். ஆனால் உண்மை இதற்க்கு மாறாக இருக்கிறது. நவம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒன்பது சதவிகிதத்திற்கும் மேலாக வளர்ச்சி அடைந்து இருக்கிறது.

தொடருவேன்