வியாழன், 27 பிப்ரவரி, 2020

நானாஜி தேஷ்முக் நினைவுநாள் - பிப்ரவரி 27

தான் உண்மை என்று நம்பும் கொள்கைக்காக எல்லா சுகங்களைளையும் துறந்து, மக்களின் பணிக்காக தங்களை முழுவதுமாக அர்பணித்துக்கொள்ளும் தனிமனிதர்கள் மீண்டும் மீண்டும் பாரத மண்ணில் தோன்றிக்கொண்டேதான் இருக்கிறார்கள். எந்த அங்கீகாரத்தை, புகழை, விளம்பர வெளிச்சத்தை விரும்பாத அப்படியான மகோன்னதமான மனிதர்களில் முக்கியமானவரான சந்திகதாஸ் அமிர்தராவ் தேஷ்முக் என்ற  திரு நானாஜி தேஷ்முக் அவர்களின் நினைவுநாள் இன்று.



1916ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் நாள் மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள கடோலி என்ற கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் நானாஜி. வறுமை வாட்டியபோதும், காய்கறிகள் விற்று அதில் வரும் வருமானத்தைக் கொண்டு தனது படிப்பை தொடர்ந்தவர் இவர். ஷிகர் சமஸ்தான மன்னர் அளித்த உதவித்தொகையைக் கொண்டு தனது மேல்படிப்பை பிலானிலில் உள்ள பிர்லா கல்லூரியில் முடித்தார்.

சங்கத்தின் நிறுவனர் டாக்டர்ஜி அவர்களோடு நெருங்கிய பழகிய குடும்பத்தைச் சார்ந்தவர் திரு தேஷ்முக். பல்வேறு ஸ்வயம்சேவகர்கள் போலவே மிக இள வயதிலேயே இவரும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். படிப்பை முடித்தபின் சங்கத்தின் முழுநேரப் பிரச்சாரகராக பணியாற்றத் தொடங்கிய தேஷ்முக்கின் கர்மபூமியாக உத்திரப்பிரதேசம் ஆனது. ஆக்ராவிலும் கோரக்பூரிலும் தர்மசாத்திரங்களில் தங்கிப் பணியாற்றி உத்திரப் பிரதேசத்தில் சங்க கிளைகளை உருவாக்கினார். அந்த சமயத்தில்தான் தீன தயாள் உபாத்தியாவின் அறிமுகம் தேஷ்முக்கிற்கு கிடைத்தது.

கல்வி பற்றி மிகக் கறாரான தெளிவான பார்வை அப்போதே தேஷ்முக்கிற்கு இருந்தது. 1950ஆம் ஆண்டு கோரக்பூரில் சரஸ்வதி சிஷு மந்திர் என்ற கல்வி நிலையத்தை தேஷ்முக் தொடங்கினார். இன்று 12,000 பள்ளிகளோடு ஏறத்தாழ நாற்பது லட்சம் மாணவர்களுக்கு கல்வி தரும் நிறுவனமாக அதனை மாற்றியது நானாஜியின் சாதனைகளில் ஓன்று.

1947ஆம் ஆண்டு பாஞ்சஜன்யா, ராஷ்டிரதர்மா என்ற மாத பத்திரிகைகளையும் ஸ்வதேஷ் என்ற நாளிதழையும் நானாஜி தொடங்கினார். அடல் பிஹாரி வாஜ்பாய் ஆசிரியராககவும், தீனதயாள் உபாத்தியாய வழிகாட்டியாகவும் செயல்பட்டனர். ஆனால் சிறிது காலத்திலேயே காந்தி கொலையானதைத் தொடர்ந்து, சங்கம் தடை செய்யப்பட பத்திரிகைகளை தலைமறைவாக இருந்து நடத்த வேண்டி இருந்தது.

சங்கத்தின் மீதான தடை விலக்கப்பட்ட பின்னர், ஜனசங்கம் என்ற அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டது. கட்சியின் உத்திரப்பிரதேச மாநிலத்தின் பொது செயலாளராக நானாஜி பணியாற்றத் தொடங்கினார். தீனதயாள் உபாத்தியாவின் லட்சிய நோக்கு, வாஜ்பாயின் பேச்சாற்றல், நானாஜியின் செயல்திறம் இவை அனைத்தும் இணைத்து வட பாரதத்தில் கட்சியை வளர்த்தன.

பிற கட்சித் தலைவர்களோடும் நானாஜி நெருங்கிய உறவை உருவாக்கி இருந்தார். சோஷலிச தலைவரான ராம் மானோஹர் லோஹியா உடன் நானாஜிக்கு நெருங்கிய நட்பு இருந்தது. எனவே இரண்டு கட்சிகளும் இணைந்து காங்கிரஸ் ஆட்சியின் தவறுகளை தட்டிக் கேட்பது என்பது வெகு இயல்பான ஒன்றாகத்தான் இருந்தது. ஆச்சாரிய வினோபா பாவேயின் பூதான இயக்கத்திலும் நானாஜி இணைந்து பணியாற்றினார்.

காங்கிரஸ்ஆட்சியின்  ஊழலை எதிர்த்து மாணவர்கள் களம் கண்டனர். அரசியலில் இருந்து விலகி இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் அந்தப் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். இயக்கத்தின் செயலாளராக நானாஜி பணியாற்றினார். 1975ஆம் ஆண்டு மக்களின் எல்லா உரிமைகளையும் பறித்து நாட்டில் இந்திரா நெருக்கடி நிலையை அறிவித்தார். அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். பத்திரிகைகள் கடுமையான தணிக்கைக்கு உள்ளாகின.

நானாஜி மீண்டும் தலைமறைவானார். தலைமறைவாக இருந்தபடியே பல்வேறு செய்தி இதழ்களை வெளியிட்டு ஜனநாயகத்தைக் காக்க போராடிக்கொண்டுதான் இருந்தார். இப்படி வெளியாகும் எல்லா பத்திரிக்கைளின் எல்லா இதழ்களும் பிரதமர் இந்திராவுக்கு தவறாமல் அனுப்பப் பட்டது. எந்த விதமான அடுக்குமுறையையும் எதிர்த்து நிற்கும் பாரம்பரியம் அப்போதும் தொடர்ந்தது.

நெருக்கடிநிலையை இந்திரா விலக்கிக்கொள்ள, அடுத்த தேர்தலில் ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. உத்திரப்பிரதேசத்தின் பைராம்பூர் தொகுதியில் இருந்து நானாஜி வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்தார். அன்றய பிரதமர் மொரார்ஜி நானாஜி அவர்களுக்கு மந்திரி பதவி அளிக்க முன்வந்தார். ஆனால் நானாஜி அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

எண்பதுகளில் நேரடி அரசியலை விட்டு விலகி சமுதாய சேவையில் முழுவதும் ஈடுபடலானார். நமது திட்டங்கள் தலைகீழாக உள்ளது. பாரதத்தின் வளம் என்பது கிராமங்களில் உள்ளது. அதனைப் புறக்கணித்து விட்டு அரசு நகரங்களுக்கும், அதிகமான நுகர்வு கலாச்சாரத்திற்கும் முன்னுரிமை அளிக்கிறது என்பது நானாஜியின் கருத்து.  உத்திரப்பிரதேசம். மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏறத்தாழ 500 கிராமங்களுக்கு மேலாக மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதிலும், கல்விப்பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார் நானாஜி.  இதனைத் தொடர்ந்து மத்தியப்பிரதேச மாநிலத்தில் சித்திரகூடப் பகுதியில் கிராமியப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அதன் முதல் வேந்தராக நானாஜி நியமிக்கப்பட்டார்.

1999ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு நானாஜியை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தது. அதே ஆண்டு அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

தனது 93ஆம் வயதில் 2010ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் நானாஜி பாரத தாயின் காலடியில் சரண் புகுந்தார். வாழும் நாளெல்லாம் மக்களுக்காகவே பாடுபட்ட அந்த தலைவரின் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது நானாஜிக்கு வழங்கப்பட்டது.

எண்ணற்ற தியாகிகள் இந்த மண்ணில், அவர்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கம்.