சனி, 30 நவம்பர், 2019

ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்தநாள் - நவம்பர் 30.

பாரத நாட்டின் புகழ்மிக்க அறிவியல் அறிஞர்கள் பெயர்களைக் கூறு என்று சொன்னால் அநேகமாக அனைவரும் முதலில் கூறும் பெயர் ஜெகதீஷ் சந்திர போஸ் என்றுதான் இருக்கும். இயற்பியல், உயிரியல், தாவிரவியல், உயிர் இயற்பியல் என்று அறிவியலின் பல்வேறு துறைகளில் வல்லுநராகவும், அதோடு வங்காள மொழியில் அறிவியல் சார்ந்து புனைகதைகளை எழுதும் துறையின் ஆரம்பகால எழுத்தாளராகவும் விளங்கிய ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்ததினம் இன்று. 


வங்காள காயஸ்தா பிரிவைச் சார்ந்த பகவான் சந்திர போஸ் இந்திய ஆட்சிப்பணியில் துணை ஆணையாளராகவும் துணை நீதிபதியாகவும் பணியாற்றிக்கொண்டு இருந்தவர். அவர் ப்ரம்மசமாஜத்தின் முக்கியமான உறுப்பினராகவும் இருந்தவர். 1858ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் பிறந்தவர் ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்கள். தாய் மொழியில்தான் குழந்தைகள் தங்கள் ஆரம்பக்கல்வியை பயிலவேண்டும் என்ற எண்ணம் தந்தைக்கு இருந்ததால் ஜெகதீஷ் சந்திர போஸ் வங்காள மொழியில்தான் தனது ஆரம்பிக் கல்வியை முடித்தார். சமுதாயத்தின் பல்வேறு படிநிலையில் உள்ள மாணவர்களோடு சேர்ந்து படித்ததால், போஸின் சிந்தனை விசாலமாக உருவானது. 

இதனைத் தொடர்ந்து சவேரியார் பள்ளியிலும், சவேரியார் கல்லூரியிலும் தனது படிப்பைத் தொடர்ந்தார் போஸ். அருள் தந்தை யூகினே லபோர்ட் என்பவரின் வழிகாட்டுதல் உயிரியல் துறையில் போஸுக்கு ஈடுபாடு அதிகமானது. இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வு எழுத லண்டன் செல்லவேண்டும் என்பது ஜெகதீஸ் சந்திர போஸின் விருப்பம். ஆனால் தன் மகன் பிறரால் கட்டுப்படுத்தப் படாது சுயேட்சையாக இருக்கவேண்டும் என்பது அவர் தந்தையின் ஆசை. எனவே லண்டன் சென்று மருத்துவம் படிக்கலாம் என்று போஸ் முடிவு செய்தார். ஆனால் உடல்நலம் இல்லாத காரணத்தால் மருத்துவத்தை கைவிட்டு விட்டு உயிரியல் துறையில் சேர்ந்து படித்து முனைவர் பட்டம் பெற்றார் போஸ். 

பாரதம் திரும்பிய போஸ், கல்கத்தா நகரில் உள்ள மாநிலக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். ஆங்கிலேயர்களின் நிறவெறியும், அதனால் போஸின் ஆராய்ச்சிகளுக்கு போதுமான பொருளாதார உதவி கிடைக்காததும் என்று பல்வேறு சவால்களை போஸ் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் செயல் வீரர்கள் இந்த பிரச்சனைகளை ஒருநாளும் பொருள்படுத்துவது இல்லை. 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி என்பது அறிவியல் பல்வேறு துறைகளில் பெரும் முன்னேற்றத்தை அடைந்த காலம். முதலில் ஒரு அறிஞர் ஒரு கருத்தை கோட்பாடாக முன்மொழிவார். பிறகு ஆராய்ச்சிகள் மூலம் அது சரியா இல்லை தவறா என்று வேறு யாராவது கண்டுபிடித்து உலகுக்கு அறிவிப்பார்கள். இப்படி ஜேம்ஸ் மாக்ஸ்வெல் என்ற அறிஞர் மின்காந்த அலைகள் பற்றிய கோட்பாட்டை அறிவித்தார். ஹென்ரிச் ஹெர்ட்ஸ் என்பவர் மின்காந்த அலைகள் இருப்பதை அதிகாரபூர்வமாக கண்டைந்து சொன்னார். மின்காந்த அலைகளின் அலைவரிசையை குறுக்குவதன் மூலம் சுவர்களைத் தாண்டி அந்த அலைகளை அனுப்ப முடியும், அதன் மூலம் கம்பி இல்லாமலே தந்தியை அனுப்பலாம் என்பதை போஸ் நிரூபித்துக் காட்டினார்.  படைப்போ அல்லது கண்டுபிடிப்போ இயற்கை ஒரு தனி மனிதன் மூலம் வெளிப்படுத்துவதுதான் என்ற பாரத எண்ணத்தின் படி வாழ்ந்த போஸ் தனது கண்டுபிடிப்புகளுக்கு எந்தவிதமான காப்புரிமையையும் கோரவில்லை. வானொலிப் பெட்டியில் இருந்து கைபேசி வரை, கணினி வரை இன்று செயல்படும் பல்வேறு சாதனங்களின் பின்னால் போஸின் பங்கு உள்ளது என்பது பாரத மக்களான நமக்கு பெருமையான ஓன்று. 

தாவரங்களுக்கு உயிர் உண்டு, வலி உண்டு என்பதையும் தன் ஆராய்ச்சி மூலம் போஸ் நிரூபித்தார். போஸின் ஆராய்ச்சிப் பணிகளுக்கு பொருளாதார உதவிகளைத் திரட்டவும், அவரது கட்டுரைகளை மொழி பெயர்க்கவும் ஸ்வாமி விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதா பேருதவி செய்தார். அறிவியல் சார்ந்து சில சிறுகதைகளையும் போஸ் எழுதி உள்ளார். 

ஒரு நல்ல ஆசிரியரின் பெருமை என்பது சிறந்த மாணவர்களை உருவாக்குவது. அப்படி சத்யேந்திரநாத் போஸ், மேகநாத் சாகா, பி சி மஹலனோபிஸ் சிசிர் குமார் மித்ரா போன்ற புகழ்பெற்ற அறிஞர்களை போஸ் வார்த்தெடுத்தார். 

பல்துறை விற்பன்னராக விளங்கிய ஜெகதீஷ் சந்திர போஸ் தனது எழுபத்தி எட்டாம் வயதில் 1937 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் நாள் காலமானார். 

வியாழன், 28 நவம்பர், 2019

மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் பலிதான தினம் - நவம்பர் 28

2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள், பாரத மக்களால் ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாத நாள். நேரடியாக மோதத் துணிவில்லாத பாகிஸ்தான் கையளவே உள்ள தீவிரவாதிகளை மும்பைக்கு அனுப்பி, அப்பாவி மக்களைக் கொன்று வெறியாட்டம் போட்ட நாள் அது. இருபத்தி ஆறு வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட நூற்று எழுபத்தி நான்குபேர் இந்த கோழைத்தனமான தாக்குதலில் மரணமடைந்தார். தீவிரவாதிகளை முறியடிக்கும் பணியில் நாட்டின் வீர மகன்கள் தங்களை ஆகுதி ஆகினார்கள். கடினமான இந்தப்பணியில் மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் பலிதானியான தினம் இன்று.


கேரளத்தைச் சார்ந்த திரு உன்னிகிருஷ்ணன் தனது வேலை நிமித்தமாக பெங்களூர் நகருக்கு குடியேறுகிறார். அவர் மனைவி திருமதி தனலக்ஷ்மி. இந்தத் தம்பதியரின் மகனாக 1977ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் நாள் பிறந்தவர் சந்தீப். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே ராணுவத்தில்தான் பணியாற்றவேண்டும் என்ற ஆசை சந்தீப்புக்கு துளிர் விடுகிறது. தேசிய பாதுகாப்பு நிலையத்தில் இணைந்து தனது இளங்கலை படிப்பை மேற்கொள்கிறார். படிப்பு முடிந்தபின்பு பாரத ராணுவத்தின் பிஹார் படைப் பிரிவில் பிரிகேடியர் பதவியில் சேர்கிறார். பணியின் நிமித்தமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் தனது திறமையை நிரூபித்துக் காட்டினார் சந்தீப்.

அதனைத் தொடர்ந்து பாரத ராணுவத்தின் சிறப்பு மிக்க தேசிய பாதுகாப்பு அணியில் ( National Security Guards ) தனது சேவையைத் தொடர்கிறார் சந்தீப். சிறிது காலத்திலேயே அந்த அணியின் அதிரடிப் படையில் சேருமாறு சந்தீப்புக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. கார்கில் போரில் மிகச் சிறிய அணியைத் தலைமையேற்று முக்கியமான ராணுவ தளங்களை நாட்டுக்காக மீட்டுத் தந்தார்.

2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் நாள் ஒரே நேரத்தில் மும்பை நகரின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தங்கள் தாக்குதலைத் தொடங்கினார்கள். ஓப்ராய் மற்றும் தாஜ் ஹோட்டல்களில் புகுந்த தீவிரவாதிகள் அங்கே தங்கியுள்ள பயணிகளை பயணக்கைதியாக வைத்துக்கொண்டு தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள். அங்கே இருந்து தீவிரவாதிகளை உயிரோடு அல்லது பிணமாகவோ அகற்றி, பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆணை சந்தீப்புக்கு அளிக்கப்படுகிறது. பத்து அதிரடிப்படை வீரர்களோடு டெல்லியில் இருந்து மும்பைக்கு விரைகிறது அதிரடிப்படை.

எந்த தளத்தில், எந்த அறையில் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்பது தெரியாது. எனவே ஒவ்வொரு அறையாக கைப்பற்றவேண்டும். எந்த ஒரு அறையிலும் பயணியாக வந்த பொதுமக்களில் யாராவது இருக்கலாம், தீவிரவாதி இருக்கலாம், அல்லது தீவிரவாதி பொதுமக்களோடு இருக்கலாம், அல்லது அந்த அறையே காலியாக ஆளே இல்லாமல் இருக்கலாம். இப்படி ஒரு தளத்தை கைப்பற்றியபின், அங்கே மீண்டும் தீவிரவாதிகள் வந்து விடாமல் இருக்க அதிரடிப்படையின் வீரர்கள் காவல் இருக்க வேண்டும். குறைந்த படையோடு அடுத்த தளத்தை கைப்பற்றவேண்டும். இப்படி ஒவ்வொரு அறையாக, ஒவ்வொரு தளமாக கைப்பற்றி காக்கவேண்டும். நினைக்கவே சங்கடமான வேலை இது. இதனை பாரதத்தின் அதிரடிப்படை வெற்றிகரமாக செய்து காட்டியது. உலகத்தின் பல்வேறு ராணுவங்கள் இந்த அனுபவத்தை, வெற்றியை தங்கள் பாடத் திட்டத்தில் ஒரு பகுதியாக வைத்துள்ளன என்றால், இந்த வேலையின் முக்கியத்துவத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இந்த கடினமான செயலை பத்து வீரர்களோடு முன்னெடுத்தவர் மேஜர் சந்தீப். மூன்றாவது தளத்தில் ஒரு அறையில் சில பெண் பயணிகளோடு தீவிரவாதி இருக்கலாம் என்று கணித்து, சுனில் யாதவ் என்ற அதிரடிப்படை வீரர் அந்த அறையின் கதவை உடைத்துத் திறந்தார். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுனில் யாதவ் காயமடைந்தார். தனது சகாவை காப்பாற்றி அந்த இடத்தில இருந்து அப்புறப்படுத்த சந்தீப் உன்னிகிருஷ்ணன் தீவிரவாதிமீதான தாக்குதலைத் தொடர்ந்தார். அந்த சண்டையில் துப்பாக்கி குண்டு பட்டு மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் பலிதானியானார்.

மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் உடல் பெங்களூர் நகருக்கு கொண்டு வரப்பட்டது. ஆயிரமாயிரம் மக்கள் அந்த வீரருக்கு தங்கள் அஞ்சலியைத் தெரிவிக்க அவர் வீட்டுக்கு வந்தார்கள். முழு ராணுவ மரியாதையோடு அவருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

பெங்களூர் நகரின் முக்கியமான சாலைக்கு மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. ராமமூர்த்தி நகர் பகுதியில் அவரது மார்பளவுச் சிலை நிறுவப்பட்டுள்ளது. அமைதிகாலத்தில் அளிக்கப்படும் மிக உயரிய ராணுவ விருதான அசோக சக்ரா விருது அவருக்கு மரணத்திற்குப் பிறகு அளிக்கப்பட்டது.

மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம்தனிலே நிலைக்கின்றார் என்ற வரிகளுக்கு ஏற்ப மக்கள் மனதில் மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். நாட்டைக் காக்க இன்னும் ஆயிரமாயிரம் உன்னி கிருஷ்ணன்கள் வருவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

புதன், 27 நவம்பர், 2019

நாடாளுமன்றத்தின் முதல் சபாநாயகர் கணேஷ் மாவலங்கர் - நவம்பர் 27

தேசியவாதி, சுதந்திரப் போராட்ட வீரர், வழக்கறிஞர், கல்வியாளர், பாராளுமன்றவாதி என்ற பல்முக ஆளுமையாகத் திகழ்ந்த கணேஷ் வாசுதேவ மாவலங்கரின் பிறந்தநாள் இன்று.


மகாராஷ்டிர மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தைச் சார்ந்த மாவலங்கர் 1888 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் பரோடா நகரில் நாள் பிறந்தவர். தனது ஆரம்ப கல்வியை அன்றய பம்பாய் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் முடித்த மாவலங்கர் மேற்படிப்புக்காக இன்றய குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமதாபாத் நகருக்கு குடிபெயர்ந்தார். 1908ஆம் ஆண்டு குஜராத் கல்லூரியில் தனது இளங்கலை அறிவியல் பட்டத்தைப் பெற்று அதனைத் தொடர்ந்து 1912ஆம் ஆண்டு மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார். அதனைத் தொடர்ந்து அஹமதாபாத் நகரில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.

அந்த காலகட்டத்தில் நாட்டில் சூறாவளியாக வீசிக்கொண்டு இருந்த சுதந்திர வேட்கை மாவலங்கரையும் பற்றிக் கொண்டது.  குஜராத் மாநிலத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்ததால், காந்தி, வல்லபாய் படேல் ஆகியோரோடு தொடர்பு ஏற்பட்டது. அஹமதாபாத் நகராட்சியின் உறுப்பினராக 1919ஆம் ஆண்டு தேர்வானார். 1919 - 1922, 1925 - 1928, 1930 - 1933, 1934 - 1937  ஆகிய காலகட்டத்திலும் அவர் அஹமதாபாத் நகராட்சியின் உறுப்பினராக பணியாற்றினார்.

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும் மாவலங்கர் நியமிக்கப்பட்டார். ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டதால் குஜராத் மாநிலத்தின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக மாவலங்கர் அறியப்படலானார். பல்வேறு  போராட்டங்களில் கலந்து கொண்டு ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

1934ஆம் ஆண்டு பம்பாய் மாநிலத்தின் சட்டசபைக்கு தேர்வான மாவலங்கர் 1937 ஆம் ஆண்டு பம்பாய் சட்டசபையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து உருவான அரசியல் சாசன சபையின் சபாநாயகராகவும் அவர் பணியாற்றினார். 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுதேர்தலில் அஹமதாபாத் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற மாவலங்கர் முதல் நாடாளுமன்ற சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெற்றிகரமான வழக்கறிஞராகவும், அதே நேரத்தில் தகுதியான பாராளுமன்றவாதியாகவும் இருந்த மாவலங்கர், குஜராத் மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கும் பெரும் தொண்டாற்றினார். அஹமதாபாத் கல்விச் சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினரான இவர், அதன் தலைவராகவும் இருந்தார். குஜராத் வித்யாபீடத்தின் சட்டதுறை பேராசிரியராக பணியாற்றனார். குஜராத் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினராக இருந்தார். காந்தியோடு தனது அனுபவங்கள், சிறையில் தான் சந்தித்த பல்வேறு கைதிகள் பற்றி, தனது வழக்கறிஞர் வாழ்க்கையைப் பற்றி என்று பல்வேறு புத்தகங்களையும் மாவலங்கர் எழுதி உள்ளார்.

1956ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாரடைப்பால் அவதிப்பட்ட மாவலங்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 1946ஆம் ஆண்டில் இருந்து தற்காலிக நாடாளுமன்றம், அரசியலமைப்பு சபை, சுதந்திர பாரதத்தின் முதல் நாடாளுமன்றம் ஆகியவற்றை பத்தாண்டுகள் வழிநடத்திய கணேஷ் வாசுதேவ மாவலங்கர் 1956ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் காலமானார். எத்தனையோ பிரச்சனைகள் இருந்தும் ஜனநாயக வழியில் பாரதம் நடைபோடுகிறது என்றால் அது மாவலங்கர் போன்ற அறிஞர்கள் அமைத்துக் கொடுத்த அடிப்படைகளே காரணம் என்று உறுதியாகச் சொல்லலாம். 

செவ்வாய், 26 நவம்பர், 2019

பாரதத்தின் பால்காரர் - வர்கீஸ் குரியன் - நவம்பர் 26

எனக்கும் ஒரு கனவு இருந்தது - அந்த மனிதரின் சுயசரித்திரத்தின் பெயர் இதுதான். ஆனால் அவருக்கு சிறுவயதில் இருந்த கனவு அல்ல அது. வேண்டா வெறுப்பாக ஒரு வேலையை ஏற்றுக் கொண்டு, பாஷை தெரியாத ஒரு குக்கிராமத்தில் தனது பயணத்தைக் தொடங்கி, ஆனால் இந்த தர்மக்ஷேத்திரத்தை தனது குருஷேத்திரமாக ஏற்றுக் கொண்டு, அந்த மக்களின் வாழ்க்கைக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தனி மனிதரின் கதை அது. தனி மனிதனாக ஒரு பெரும் வியாபார சாம்ராஜ்யத்தை உருவாக்கி, ஆனாலும் அதில் தான் ஒரு வேலையாள் மட்டும்தான், நான் இதற்கு உரிமையாளன் அல்ல இது எனது சுதர்மம் என்ற மனப்பாங்கோடு கீதை காட்டிய வழியில் நடந்த மனிதரின் கதை. 


கேரளாவைச் சார்ந்த சிரியன் கிருஸ்துவ குடும்பத்தில் 1921ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் பிறந்தவர் வர்கீஸ் குரியன். அவரது தந்தை ஒரு மருத்துவர், தாயாரும் கல்வி கற்றவர். தந்தை பணிபுரிந்த கோபிச்செட்டி பாளையத்தில் பள்ளி கல்வியையும், அதனைத் தொடர்ந்து சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் பட்டத்தையும், கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியலில் பட்டத்தையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து சிறிது காலம் டாடா குழுமத்தில் பணி புரிந்தார். 

இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த சமயம் அது, நாடு வெகு விரைவில் சுதந்திரம் அடைந்து விடும் என்ற நம்பிக்கை எல்லா இடங்களிலும் பிரகாசமாக இருந்தது, பொருளாதாரரீதியாக இரண்டு நூறாண்டுகளாக சுரண்டப்பட்டு இருந்த தேசத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும், அதற்கு பல்வேறு தொழில்நுட்பங்களை அறிந்த இளைஞர் பட்டாளம் தேவை என்பதால் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று படித்து நாட்டுக்கு தனது திறமையை அர்ப்பணம் செய்யத் தயாராக உள்ள இளைஞர்களை கண்டறிந்து அவர்களின் கல்விக்கான பொருளாதார உதவியை அரசு செய்ய முடிவெடுத்தது. அதில் தேர்வான குழுவில் வர்கீஸ் குரியனும் ஒருவர். பால் பதனிடும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு வருமாறு அரசு அவருக்கு உதவித்தொகை அளித்தது. ஆனால் குரியன் உலோகவியலும், அணு அறிவியலையும் கற்றுத் தேர்ந்தார். கூடவே பால் பதனிடும் நுட்பத்தையும் கற்றுக் கொண்டார். நாடு திரும்பிய குரியனை குஜராத் மாநிலத்தின் கைரா  மாவட்டத்தின் ஆனந்த் என்ற ஒரு சிறு கிராமத்தில் பணியாற்ற அரசு பணித்தது. வேண்டா வெறுப்பாக அந்த வேலையை  ஏற்றுக்கொண்டார். எப்போது அந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குப் போகலாம் என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தார். 

காலம் குரியனுக்கு வேறு ஒரு பாதையை தீர்மானித்து வைத்திருந்தது. தேசபக்தரும் கூட்டுறவு இயக்கத்தில் பெரும் நம்பிக்கை கொண்ட திரிபவன்தாஸ் படேல் என்பவரின் அறிமுகம் குரியனுக்கு கிடைத்தது. பால் வியாபாரம் செய்யும் பலர் ஏழ்மை நிலையில் இருப்பது குரியனின் மனதைப் பாதித்தது. அவர்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று அவர் முடிவு செய்தார். அன்று தொடங்கிய அவரது பயணம் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக அந்த மக்களோடு தொடர்ந்தது. பல லட்சம் ஏழை விவசாயிகளின் பொருளாதார நிலைமையை முன்னேற்றி, பாரத நாட்டை பால் உற்பத்தியில் உலகின் முக்கியமான  நாடாக மாற்றி, பெரும் நிறுவனங்களை உருவாக்கி என்று அவரின் வாழ்க்கையே பலருக்கு உதாரணமாகத் திகழ்கிறது. 

ஆண்டில் எல்லா நாட்களிலும் ஒரே அளவில் பால் கிடைப்பது இல்லை. அதிகமாக பால் கிடைக்கும் நேரங்களில் அதை விற்க முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்தனர். இதனை மாற்ற கூட்டுறவு முறையில் பாலை வாங்கி அதனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் முறையை குரியன் அறிமுகம் செய்தார். பால் மீதமாகும் நேரங்களில் அதனை பால் பவுடராக மற்றும் நுட்பத்தை குரியன் அறிமுகம் செய்தார். அதுவும் எருமைப்பாலில் இருந்து பால் பவுடர் தயாரிக்கும் நுட்பம் என்பது அதுவரை உலகில் எங்கும் இல்லாத ஓன்று. பிரச்சனைக்கு தீர்வுகளை சமுதாயத்தோடு இணைந்த தொழில்நுட்பதின் மூலம் கண்டறியும் குரியனின் செயல்திறனால் குஜராத்தில் உள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உருவானது. 

ஆனந்த் பகுதியில் குரியன் செயல்படுத்திய முறையை நாடு முழுவதும் முன்னெடுக்க அரசு அவரைக் கேட்டுக்கொண்டது. வெண்மைப் புரட்சி என்ற பெயரில் நாடு முழுவதும் பால் உற்பத்தியைப் பேருக்கும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. தட்டுப்பாடு என்ற நிலைமையில் இருந்து பால் பொருள்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு பால் உற்பத்தியை அவர் அதிகப்படுத்தினார். அதோடு இணைந்து பல்வேறு நிறுவனங்களை குரியன் உருவாக்கினார். குஜராத் பால் உற்பத்தியார்கள் கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு ( Gujarat Cooperative Milk Manufacturer Federation ), தேசிய பால் மேம்பாட்டு வாரியம் ( National Dairy Development Board ) என்று பால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும்,  அதோடு இணைந்து அறிவியல் முறையில் தொழில்நுட்பத்தை இணைந்து கிராம முன்னேற்றத்திற்காக மேலாண்மை கல்லூரியையும்  கிராம மேலாண்மை நிறுவனம் ( Institute of Rural Management - Anand ) அவர் உருவாக்கினார். 

எல்லாக் காலத்திலும் பால் உற்பத்தியாளர்கள்தான் இந்த நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள், தான் வேலைக்காரன் மட்டும்தான் என்ற எண்ணத்தில் இருந்து குரியன் மாறவே இல்லை. குரியனின் சேவைக்கு பல்வேறு இடங்களில் இருந்து அங்கீகாரம் வந்து சேர்ந்தது. 1965ஆம் ஆண்டு  பத்மஸ்ரீ, 1966ஆம் ஆண்டு பத்மபூஷன் அதனைத் தொடர்ந்து 1999ஆம் ஆண்டு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை பாரத அரசு அளித்தது. 1963ஆம் ஆண்டு மகாசாய் விருது, 1986ஆம் ஆண்டு க்ரிஷி ரத்னா ஆகிய விருதுகள் அவரை வந்தடைந்தன. ஆனால் இவை அனைத்தையும் விட அவருக்கு நெருக்கமாக இருந்தது மக்கள் அவருக்கு அளித்த பாரத நாட்டின் பால்காரர் - Milkman of India - என்ற பட்டம்தான். 

வாழ்க்கையில் பாலே குடிக்காத அந்த தேசத்தின் பால்காரர் 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் நாள் காலமானார். வாழ்க்கை முழுவதும் ஆனந்த் கிராமத்திலேயே வாழ்ந்து அந்த  மக்களுக்காகவே யோசித்த குரியனின் இறுதிச் சடங்குகள் அதே பால் உற்பத்தியாளர்கள் கூடி நிற்க ஆனந்த் கிராமத்திலேயே நடந்தது. தனி ஒரு மனிதன் என்னவெல்லாம் செய்யலாம் என்று யாராவது கேட்டால் அதன் பதில் வர்கீஸ் குரியனின் வாழ்க்கையில் இருக்கிறது என்று உறுதியாகக் கூறலாம். 

திங்கள், 25 நவம்பர், 2019

தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்கடே - நவம்பர் 24

கன்னட மாநிலத்தின் தெற்குப் பகுதியில் மங்களூர் நகருக்கு 75 கிலோமீட்டர் தொலைவில் நேத்ராவதி நதியின் கரையில் அமைந்துள்ள சிறு நகரம் தர்மசலா. மஞ்சுநாத ஸ்வாமி என்ற பெயரில் சிவபெருமான் குடிகொண்டு இருக்கும் நகரம் அது. அந்த கோவிலின் பரம்பரை அறங்காவலராக, தர்மாதிகாரியாக எட்டு நூறாண்டுகளாக செயல்பட்டுக்கொண்டு வரும் சமண சமயத்தைச் சார்ந்த  பெர்கடே குடும்பத்தின் வாரிசாக ஹெக்கடே என்ற பட்டதோடு இருபத்தியோராம் தர்மாதிகாரியாக இருக்கும் திரு வீரேந்திர ஹெக்கடே அவர்களின் பிறந்ததினம் இன்று.


திரு ரத்னவர்ம ஹெக்கடே -  திருமதி ரத்னம்மா ஹெக்கடே தம்பதியரின் முதல் மகனாக 1948ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் நாள் பிறந்தவர் திரு வீரேந்திரா. தந்தையின் மறைவுக்குப் பிறகு  தர்மசாலாவில் இருபத்தியோராம் தர்மாதிகாரியாக 1968ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் திரு வீரேந்திரா நியமிக்கப்பட்டார். அது முதல் அவர் வீரேந்திர ஹெக்கடே என்று அழைக்கப்படத் தொடங்கினார்.

தர்மத்தின் இருப்பிடத்தின் அதிகாரி என்பதால், பெர்கடே குடும்பத்தினர் பசியில் இருந்து, பிணையில் இருந்து, பயத்தில் இருந்து அறியாமையில் இருந்து விடுதலை என்ற சேவையை எட்டு நூற்றாண்டுகளாகச் செய்து வருகின்றனர். மாறிவரும் சமுதாயத்தின் தேவைங்களை இனம் கண்டு வீரேந்திர ஹெக்கடே இந்த சேவைகளை கடந்த ஐம்பதாண்டுகளாக முன்னெடுத்து வருகிறார்.

மஞ்சுநாத ஸ்வாமி கோவிலுக்கு வரும் அனைவருக்கும் இலவசமாக உணவு அளிக்கப்படுகிறது. கேரள மற்றும் கர்நாகத்தில் அனைத்து கோவில்களிலும் நடைபெறும் இயல்பான ஒன்றுதான் இது. ஆனால் முழுவதும் மரபு சாரா எரிசக்தியைப் பயன்படுத்தி உணவு தயாரிப்பதிலும், உணவு பரிமாறப்படும் இலைகள் முதல் அனைத்து உணவுப் பொருள்களையும் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் உருவாக்குவதிலும் தர்மசாலா கோவில் தனித்து விளங்குகிறது. வீரேந்திர ஹெக்கடே பொறுப்புக்கு வந்த பிறகு பக்தர்கள் உணவருந்த பிரமாண்டமான உணவுக்கூடத்தை உருவாக்கினார். நாள் ஒன்றுக்கு சராசரியாக முப்பதாயிரம் பக்தர்களும் பண்டிகை தினங்களில் எழுபதாயிரம் பக்தர்களும் இங்கே உணவு உண்கிறார்கள்.

கர்நாடகத்தின் தெற்குப் பகுதி என்பது மலைப் பிரதேசம். அங்கிருந்து மருத்துவ உதவிக்காக நகரங்களுக்குச் செல்ல முடியாத கிராமவாசிகளுக்காக வீரேந்திர ஹெக்கடே நடமாடும் மருத்துவமனைகளை அமைத்துள்ளார். தேவையான மருந்து மற்றும் உபகாரணங்களோடு மருத்துவர்கள் கிராமப்புற மக்களைத் தேடிச் சென்று சேவை புரிகின்றனர். தர்மசாலாவில் அருகில் உள்ள உஜிரி  நகரில் 100 படுக்கை கொண்ட மருத்துவமனை, மங்களூர்  நகரில் கண்மருத்துவமனை, தார்வாத் நகரில் ஒரு பல் மருத்துவமனை மற்றும் 400 படுக்கைகள் கொண்ட பொது மருத்துவமனை பல்வேறு அரசு மருத்துவமனைகளில் தனி கட்டிடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அழிப்பது என்று மருத்துவத் துறையிலும் ஹெக்கடேயின் சேவை மகத்தானது.

மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு கல்வி நிறுவனங்களையும் ஹெக்கடே தொடங்கி உள்ளார். ஆரம்பக் கல்வி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள், கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டப் படிப்பு, மருத்துவம், மேலாண்மை என்று பல்வேறு துறைகளில் உயர் கல்விக்கான நிறுவனங்களை ஹெக்கடே நடத்தி வருகிறார்.

பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற முன்னேற்றம், கிராமப்புற சுயசார்பு, கைத்தொழில் வளர்ச்சி,  நலிவடைந்த கோவில்களை சீரமைப்பு செய்தல் என்று பல்வேறு துறைகளில் வீரேந்திர ஹெக்கடே செயலாற்றி வருகிறார். இது போக பல்வேறு வழக்குகளைத் தீர்த்து வைக்கும் நீதிபதியாகவும் அவர் உள்ளார். அவரது தீர்ப்பை பொதுவாக மக்கள் மீறுவது இல்லை.

பலனில் பற்று வைக்காமல் கடமையை கடமைக்காகவே செய் என்று கீதை கூறுகிறது. எந்த செயலுக்கும் அதற்கான பலன் வந்தே சேரும் ஆனால் பலனுக்காகவே செயல் செய்வது தவறு என்பது கீதை காட்டும் பாதை. நீண்ட காலம் சமுதாய சேவையை தனது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்ட வீரேந்திர ஹெக்கடே அவர்களுக்கு பல்வேறு பட்டங்களும் விருதுகளும் தானாகவே வந்து சேர்ந்தது. 2009ஆம் ஆண்டு  கர்நாடக அரசு அவருக்கு கர்நாடக ரத்னா என்ற விருதை வழங்கியது. பாரத அரசு 2000ஆம் ஆண்டில்  பத்ம பூஷன் விருதையும் பின்னர் 2015ஆம் ஆண்டு நாட்டின் இரண்டாவது மதிப்பு மிக்க விருதான பத்மவிபூஷண் விருதையும் வழங்கி அவரை சிறப்பித்தது.

அறம் காக்க அறம் நம்மைக் காக்கும் என்ற மொழிக்கு உதாரணமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் திரு வீரேந்திர ஹெக்கடே அவர்களுக்கு  ஒரே இந்தியா தளம் தனது வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
வீரேந்திர ஹெக்கடேயின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக என்றும் இருக்கும். 

ஞாயிறு, 24 நவம்பர், 2019

குரு தேஜ் பகதூர் பலிதானதினம் - நவம்பர் 24

சீக்கியர்களின் குரு பரம்பரையின் ஒன்பதாவது குருவான குரு தேஜ் பகதூரின் பலிதான தினம் இன்று. தர்மத்தின் வழி நிற்பதா இல்லை மரணத்தைத் தழுவுவதா என்ற கேள்வி எழுந்த போது, அழியும் உடலுக்காக அழியாத தர்மத்தை விடக்கூடாது என்று செயலில் காட்டியவர் குரு தேஜ்பகதூர்.


சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோவிந்த் அவர்களின் மகனாக 1621ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் நாள் அமிர்தசர் நகரில் பிறந்தவர் குரு தேஜ் பகதூர். இவரின் இயற்பெயர் தியாகாமால் என்பதாகும். தேஜ் பகதூர் என்ற பெயருக்கு வாள் சண்டையில் விற்பன்னர் என்று பொருள். இவரது வீரத்தினால் குரு இந்தப் பெயரில் அறியப்பட்டார். அன்று அமிர்தசர் நகரம் சீக்கியர்களின் அறிவிக்கப்படாத தலைநகரமாக விளங்கியது. சீக்கிய குருமார்களின் இருப்பிடமாக அது இருந்தது, குதிரையேற்றத்திலும், பல்வேறு தற்காப்பு பயிற்சியிலும் சிறந்து விளங்கிய தேஜ் பகதூர் வேதங்களையும் உபநிஷதங்களையும் தெளிவாகக் கற்றுத் தேர்ந்திருந்தார். மாதா குஜிரி என்பவரை குரு திருமணம் செய்திருந்தார்.

தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் குரு ஹர்கோவிந்த் அம்ரித்சர் நகரின் அருகில் உள்ள பக்கலா என்ற சிறுநகருக்கு  குடிபெயர்ந்தார். தேஜ் பகதூரும் அங்கேயே வசிக்கத் தொடங்கினார். குரு ஹர் ராய், குரு ஹர் கிருஷ்ணன் ஆகியோரைத்  தொடந்து சீக்கியர்களின் ஒன்பதாவது குருவாக குரு தேஜ்பகதூர் 1664ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.

பெரும் வீரராக மட்டுமல்லாது குரு தேஜ் பகதூர் சிறந்த கவிஞராகவும், தத்துவ ஞானியாகவும் விளங்கினார். வட இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு விஜயம் செய்து சீக்கிய தர்மத்தைப் பரப்பவும், பல்வேறு மக்களை நல்வழிப் படுத்தவும் என்று அவர் செயலாற்றிக்கொண்டு இருந்தார். அவரது முயற்சியால் பல்வேறு இடங்களில் சீக்கியர்கள் குடிநீர் குளங்களை அமைத்தும் லங்கர் என்று அழைக்கப்படும் இலவச உணவு வழங்கும் நிலையங்களையும் அமைத்தனர். கிழக்கே அசாம் முதல் மத்திய பாரதத்தில் பிலாஸ்பூர், மேற்கே வடமேற்கு எல்லைப்புற மாகாணங்கள் வடக்கே காஷ்மீர் என்று பல்வேறு இடங்களுக்கு குரு விஜயம் செய்தார். மதுரா, ஆக்ரா வாரணாசி என்று பல்வேறு நகரங்களுக்கு சென்று குரு தர்மப் பிரச்சாரம் செய்து வந்தார். பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய நகரமாக விளங்கும் அனந்தபூர் சாஹிப் நகரம் குரு தேஜ் பகதூர் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த  சாஹிப்பில் குரு தேஜ் பகதூர் இயற்றிய எழுநூற்று எண்பதுக்கும் மேலான பிரார்த்தனை பாடல்கள் இடம்பெற்று உள்ளன.

சீக்கிய குருமார்களின் காலம் பாரத நாட்டில் முகலாய அரசு நடைபெற்றுக் கொண்டு இருந்த காலம். ஹிந்து தர்மத்தின் ஒரு பகுதியாகத்தான் குரு நானக் முதல் குரு தேஜ் பகதூர் வரை சீக்கிய நம்பிக்கைகளை வடிவமைத்துக் கொண்டு இருந்தனர். ஆலயங்களை அழிப்பதும், பசுக்களை கொல்வதும், உருவ வழிபாட்டை  தடை செய்வதும், மக்களை இஸ்லாம் மதத்திற்கு கட்டாயமாக மாற்றுவதும் என்று பல்வேறு முகலாய அரசர்கள் ஈடுபட்டு வந்தனர். அதிலும் அவுரங்கசீப் காலத்தில் இந்த கொடுமைகள் அளவே இல்லாமல் இருந்தது. காஷ்மீரத்தில் உள்ள பண்டிதர்களை வலுக்கட்டாயமாக இஸ்லாமுக்கு மாற்ற அரசு நெருக்கடி கொடுத்தது. குரு தேஜ் பகதூரிடம் காஷ்மீர  பண்டிதர்கள் அடைக்கலம் நாடி வந்தனர். குரு தேஜ் பகதூரை  மதமாற்ற முடிந்தால் மற்றவர்களும் மாறுவார்கள் என்று குரு முகலாய அரசுக்கு பதில் அனுப்பினார்.

முகலாய அரண்மனைக்கு வருமாறு ஆணை பிறந்தது. எது நடக்கும் என்று உணர்ந்த குரு தேஜ் பகதூர் ஒன்பது வயதான தனது மகன் கோவிந்தசிம்மனை பத்தாவது குருவாக நியமித்து விட்டு டெல்லிக்கு பயணமானார். அவரோடு பாய் சதிதாஸ், பாய் மதிதாஸ், பாய் தயாள்தாஸ் ஆகியோரும் இணைந்து கொண்டனர். 1675ஆம் ஆண்டு 12 ஆம் நாள் டெல்லிக்கு அருகே குருவும் அவரது நண்பர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்த அவர்கள் கொடுமையான முறையில் சித்திரவதைக்கு உள்ளானார்கள். பாய் சதிதாஸ் உயிரோடு எரித்து கொல்லப்பட்டார். பாய் மதிதாஸ் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டார். பாய் தயாள்தாஸ் கொதிக்கும் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவை அனைத்தையும் கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த குரு பார்க்கும் வகையில் நடந்தது. இறுதியாக இஸ்லாம் மதத்திற்கு மாறினால் விடுதலை செய்யப்படுவீர்கள் என்று குருவிற்கு சொல்லப்பட்டது. தர்மத்தை கைவிடுவதைக் காட்டிலும் உயிரை விடுவது மேல் என்று குரு பதிலளிக்க, குருவின் தலையை வெட்டி அவரை கொலை செய்தனர் முகலாயர்கள்.

குரு அர்ஜான்சிங்கின் பலிதானம் சீக்கியர்களை ஒன்றிணைத்தது. குரு தேஜ் பகதூரின் பலிதானம் சீக்கியர்களை  இறுதிவரை தனிமனிதர்களின் வழிபாடு உரிமைக்கு போராடும் இனமாக மாற்றியது. குரு தேஜ் பகதூரின் மகனும் சீக்கியர்களின் பத்தாவது குருவுமான குரு கோவிந்தசிம்மன் போராட்ட குணமுடைய இனமாக சீக்கிய இனத்தை வார்த்தெடுத்தார். குரு தேஜ் பகதூரின் பலிதானத்தைத் தொடர்ந்து பல காஷ்மீர பண்டிதர்கள் சீக்கியர்களாக மாறி, கல்சா அமைப்பில் இணைந்து இஸ்லாமியர்களை எதிர்த்துப் போராடத் தொடங்கினார்கள்.

வெறும் உபதேசங்களால் அல்லாது உதாரணத்தால் வாழ்ந்து காட்டிய குருவின் வாழ்வும் பலிதானமும் நம்மை வழிநடத்தட்டும். 

சனி, 23 நவம்பர், 2019

தொழிலதிபர் வால்சந்த் ஹிராசந்த் பிறந்தநாள் - நவம்பர் 23


பாரத நாட்டின் இருபதாம் நூற்றாண்டின் முக்கிய தொழிலதிபரும், வால்சந்த் குழுமத்தைத் தொடங்கியவருமான வால்சந்த் ஹிராசந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று. வியாபாரம் செய்யும் பின்னணியில் தொடங்கிய இவர் கப்பல்துறை, கப்பல் கட்டும் தொழில், கார் உற்பத்தி, விமான கட்டுமானம், கட்டடம் கட்டுதல், சர்க்கரை  உற்பத்தி, ராணுவ தளவாடங்கள் தயாரித்தல் என்று பல்வேறு துறைகளில் தடம் பதித்தவராவார்.

குஜராத் மாநிலத்தைச் சார்ந்த சமண மரபினர் திரு ஹிராசந்த் நேம்சந்த் ஜோஷி. இவர் மஹாராஷ்டிர மாநிலத்தில் பருத்தி வியாபாரம் செய்து வந்தார். இவரின் மகனாக 1882ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் நாள் பிறந்தவர் வால்சந்த் ஹிராசந்த். சோலாப்பூர் அரசு பள்ளியிலும் அதனைத் தொடர்ந்து மும்பை தூய சவேரியார் கல்லூரியில் இளங்கலை பட்டமும் பெற்றார் வால்சந்த். அன்றய வழக்கப்படி படிக்கின்ற காலத்திலேயே இவருக்கு திருமணம் ஆகி விட்டது. ஆனால் சிறிது காலத்திலேயே இவர் மனைவி இறந்துவிட மறுமணம் செய்துகொண்டார்.

படித்து முடித்தபின் தந்தையின் தொழிலில் இணைந்த ஹிராசந்த், அதன் பின்னர் ரயில்வே துறையின் கட்டடங்கள் கட்டும் ஒப்பந்தகாரராக உருவானார். தொடர்ந்து ஆங்கில அரசுக்கு பல்வேறு கட்டடங்களையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் இவர் செய்து கொடுக்கத் தொடங்கினார். அதே நேரத்தில் இந்திய தேசிய கட்சியின் ஆதரவாளராகவும் இருந்தார். அண்ணிபெசன்ட் அம்மையாரோடு இணைந்து Free Press of India என்ற செய்தி நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் அநேகமாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரமற்ற செய்தி நிறுவனமாகவே இயங்கியது.

சில காலம் டாடா குழுமத்தோடு இணைந்து கட்டிடத்துறையில் செயல்பட்ட வால்சந்த் பிறகு டாடா குழுமத்தின் பங்குகளையும் வாங்கிக்கொண்டார். இன்று நாட்டின் முக்கியமான கட்டுமான நிறுவனமாக விலங்கு Hindustan Construction Company என்ற நிறுவனமும் இவர் நிறுவியதுதான். வால்சந்த் அவர்கள் சர்க்கரை தயாரிக்க 1908ஆம் ஆண்டு Walchandnagar Industries என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனம் காலப்போக்கில் சர்க்கரை ஆலைகளை உருவாக்குதல், சிமெண்ட் தயாரிப்பு, பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி என்று பல்வேறு திசைகளில் வெற்றிகரமாகப் பயணித்தது. இன்று நாட்டுக்குத் தேவையான ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் பணியிலும் இந்தக் குழுமம் ஈடுபட்டு உள்ளது. பொக்ரானில் பாரதம் நடத்திய அணுகுண்டு வெடிப்பு சோதனையை அடுத்து அமெரிக்கா இந்த நிறுவனத்தின் மீது தடை விதித்தது, பின்னர் அது விளக்கிக்கொள்ளப்பட்டது.

குவாலியர் அரச குடும்பத்தினரிடம் இருந்து கப்பல் ஒன்றை வாங்கி வால்சந்த் சிந்தியா கப்பல் கம்பெனி என்ற பெயரில் ஒரு புது தொழிலைத் தொடங்கினார். சில காலத்தில் விசாகப்பட்டினதில் கப்பல் கட்டும் தளத்தை நிறுவினார். கப்பல் தொழிலோடு இணைந்ததுதான் காப்பீடு நிறுவனம், எனவே அதையும் அவர் ஆரம்பித்தார். மைசூர் அரச குடும்பத்தோடு இணைந்து பெங்களூர் நகரில் விமான தயாரிப்பிலும் வால்சந்த் ஈடுபட்டார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கப்பல் கட்டும் தளத்தையும், விமான தயாரிப்பு நிறுவனத்தையும் அன்றய அரசு நாட்டுடமை ஆக்கியது. அவை இன்று Hindustan Shipyard Ltd, Hindustan Aeronautical Ltd என்று அறியப்படுகின்றன. இதோடு வால்சந்த் கார் தயாரிக்கும் தொழிலிலும் ஈடுபட்டார். சென்ற நூற்றாண்டின் எண்பதுகள் வரை புகழ்பெற்ற விளங்கிய Premier Padmini கார்கள் இவரது தயாரிப்பே.

மஹாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளையும் வால்சந்த் நிறுவினார். தேசிய கப்பல் உரிமையாளர்கள் சங்கம், இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு, மகாராஷ்டிரா மாநில தொழில்  தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஆகியவற்றில் நீண்ட காலம் தலைவராகவும் வால்சந்த் பணியாற்றினார்.

பாரதம் சுதந்திரம் அடைந்த நேரத்தில் இந்தியாவின் முதல் பத்து  முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருந்த வால்சந்த் ஹிராசந்த் 1953ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் நாள் காலமானார். 

வெள்ளி, 22 நவம்பர், 2019

மணமகளா மருத்துவரா - ருக்மாபாய் - நவம்பர் 22.

சிறுவயதில் நடைபெற்ற தனது திருமணம் செல்லாது என்று போராடி மருத்துவராக மாறிய ஒரு வீரப்பெண்ணின் கதை இது. மராத்தி குடும்பத்தைச் சார்ந்தவர் ஜெயந்திபாய். பதினான்கு வயதில் திருமணமாகி பதினைந்து வயதில் தாயாகி பதினேழு வயதில் கணவரை இழந்தவர் ஜெயந்திபாய். கணவனை இழந்த பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து ஜெயந்திபாய் சகாராம் அர்ஜுன் என்னும் மருத்துவரை மறுமணம் செய்துகொண்டார். ஜெயந்திபாய்க்கு முதல் திருமணத்தில் பிறந்த ருக்மாபாய் தன் தாயோடும் சகாராம் அர்ஜுனோடும் வசித்து வந்தார். அன்றய வழக்கத்தின்படி ருக்மாபாயின் பதினோராம் வயதில் அவருக்கு பத்தொன்பது வயதான தாதாஜி பிகாஜி என்பவரோடு திருமணம் நடந்தது.


குடும்பம் நடத்துவதற்கான வயதும் பக்குவமும் வராத காரணத்தால் ருக்மாபாய் தன் பெற்றோர்களோடு வசித்து வந்தார். அப்போது சகாராம் ருக்மாவிற்கு கல்வி கற்பதில் ஆர்வத்தை உருவாக்கினார். திருமணமாகி சிலகாலம் கழிந்த பிறகு தாதாஜி பிகாஜி தன் மனைவி ருக்மாபாய் தன்னோடு வந்து குடும்பம் நடத்தவேண்டும் என்று கூறினார். அன்றய காலகட்டத்தில் இது இயல்பான ஒன்றுதான். ஆனால் படிப்பின்மீதோ கல்வியின்மீதோ எந்த நாட்டமும் இல்லாத கணவரோடு வாழ ருக்மாபாய் மறுத்துவிட்டார். தனது முயற்சிகள் ஏதும் பலனைக்காததால் தாதாஜி பிகாஜி தன் மனைவி தன்னோடு வசிக்கவேண்டும் என கட்டளையிட வேண்டும் என நீதிமன்றத்தை அணுகினார்.

பிகாஜி எதிர் ருக்மாபாய் வழக்கு ( 1885 ) என்ற இந்த வழக்கு அந்த காலகட்டத்தில் பெரும் சர்சையைக் கிளப்பியது. ஹிந்து சட்டங்களுக்கும் ஆங்கில கிருஸ்துவ சட்டங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள், மாறுதல் என்பது தன்னிச்சையாக சம்பந்தப்பட்ட சமுதாயத்தின் உள்ளே இருந்து வரவேண்டுமா அல்லது சட்டத்தின் மூலமாக வெளியே இருந்து திணிக்கப்பட்ட வேண்டுமா, பலகாலங்களாக நடைமுறையில் உள்ள முறைகளை மதிக்கவேண்டுமா அல்லது அவைகளை காலத்திற்கு ஏற்ப மாற்றலாமா  என்ற விவாதங்கள் எழுந்தன. தனது வாழ்க்கையை தானே தீர்மானிக்கும் மனமுதிர்ச்சி இல்லாத காலத்தில் நடைபெற்ற திருமணம் செல்லாது என்று நீதிபதி ராபர்ட் ஹில் பின்ஹே தீர்ப்பளித்தார்.

இதனை ஏற்காத தாதாஜி பிகாஜி மேல்முறையீடு செய்தார். ருக்மாபாய் தன் கணவரோடு வாழவேண்டும் அல்லது ஆறுமாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி பாரன் தீர்ப்பளித்தார். தன்மீது திணிக்கப்பட்ட மணவாழ்க்கையை விட சிறைத்தண்டனை ஏற்பது மேல் என்று ருக்மாபாய் முடிவு செய்தார். இதற்கிடையில் இங்கிலாந்து பேரரசி விக்டோரியா மஹாராணி நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்து ருக்மாபாயின் திருமணம் செல்லாது என்று உத்தரவு பிறப்பித்தார். இரண்டாயிரம் ரூபாய் இழப்பீடு பெற்றுக்கொண்டு தாதாஜி பிகாஜி தனது திருமண உரிமையை வீட்டுக் கொடுத்தார். 1891ஆம் ஆண்டு ஆங்கில அரசு தனது ஆட்சிக்கு உள்பட்ட இந்தியப் பிரதேசங்களிலும் பெண்களின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை பத்தில் இருந்து பனிரெண்டாக உயர்த்தியது.

ஒருபுறம் சட்டப் போராட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தாலும் ருக்மாபாய் மனதில் தனது வளர்ப்பு தந்தையைப் போல தானும் மருத்துவராக  வேண்டும் என்ற கனவு இருந்தது. மருத்துவம் படிக்க லண்டன் சென்ற ருக்மாபாய் 1894ஆம் ஆண்டு லண்டன் பெண்கள் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார். காதம்பரி கங்குலி, ஆனந்தி ஜோஷி ஆகியோரோடு மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற முன்னோடி பெண்மணிகளில் ஒருவராக அறியப்படலானார். 1895ஆம் ஆண்டு சூரத் பெண்கள் மருத்துவமனையில் பணியாற்றத் தொடங்கிய ருக்மாபாய் பின்னர் ராஜ்கோட் நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மருத்துவமனையில் பணியாற்றினார். வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் மும்பையில் வசித்து வந்தார்.

பல்வேறு தடைகளைத் தாண்டி சாதனை படைத்த ருக்மாபாய் தனது தொன்னூறாவது வயதில் 1955ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் நாள் காலமானார். 

புதன், 20 நவம்பர், 2019

தடையற்ற பொருளாதார ஆதரவாளர் மினு மசானி - நவம்பர் 20



காங்கிரஸ் கட்சிக்குள் சோசலிச சித்தாந்தத்தை முன்னெடுத்தவர், ஆனால் அந்த முறை பயன்தராது என்று உணர்ந்தபோது மிகச் குறைந்த அரசு கண்காணிப்பில் இயங்கும் தொழில்முறைக்கு ஆதரவாக செயல்பட்டவர், நேருவுக்கு ஒரு காலத்தில் நெருங்கிய தோழராகவும், பின்னர் அவரது கடுமையான விமர்சகராகவும் மாறியவர், கடவுள் நம்பிக்கை இல்லாத, மாட்டுக்கறி உண்ணும் பார்சி ஆனால் காலம் முழுவதும் மது அருந்தாத, மாமிசம் உண்ணாத ராஜாஜி தொடங்கிய ஸ்வராஜ்யா கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் என்று பல்முக ஆளுமை மினு மசானியின் பிறந்தநாள் இன்று.

மும்பை பல்கலைக்கழத்தின் துணைவேந்தராகவும் மும்பை மாநகராட்சி ஆணையராகவும் இருந்த சர் ருஸ்தம் மசானியின் மகனாக 1905ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் பிறந்தவர் மினோச்சேர் ருஸ்தம் மசானி, சுருக்கமாக மினு மசானி. மும்பையில் கல்வி கற்ற மினு மசானி லண்டனில் பொருளாதாரமும், அதனைத் தொடர்ந்து சட்டமும் பயின்றார்.

1929ஆம் ஆண்டு பாரதம் திரும்பிய மினு மசானி மும்பையில் வழங்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். ஆனால் அடுத்த வருடமே காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு வழக்குரைஞர் தொழிலை நிறுத்திக் கொண்டார். விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக பலமுறை சிறை தண்டனை அனுபவித்தார். 1932ஆம் ஆண்டு நாசிக் சிறையில் இருந்த போது ஜெயப்ரகாஷ் நாராயணனின் பழக்கம் ஏற்பட்டது. அன்றய இளைஞர்களுக்கு அதுவும் வெளிநாட்டில் படித்துவிட்டு வந்தவர்களுக்கு இயல்பாகவே கம்யூனிச சித்தாந்தத்தின் மீது ஒரு பிடிப்பு இருந்தது. உலகில் பெரும்பாலான நாடுகள் சில ஐரோப்பிய நாடுகளின் அடிமையாக இருக்கும் நேரத்தில், பாட்டாளி மக்களால் நடத்தப்படும் சோவியத் யூனியன் ஒரு கனவு தேசமாக தெரிந்ததால் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

1934ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாகவே இந்தியன் சோசலிஸ்ட் காங்கிரஸ் என்ற அமைப்பை சோசலிச சித்தாந்தத்தில் பிடிப்புள்ளவர்கள் தொடங்கினார்கள். அதில் மினு மசானி முக்கியமான ஒருவர். இளைய தலைமுறை தலைவராக உருவாக்கிக்கொண்டு இருந்த நேருவும் சோசலிச சித்தாந்தத்தைத்தான் முன்னெடுத்தார். அதனால் இயல்பாகவே மசானி நேருவின் நெருங்கிய நண்பரானார். மினு மசானி மும்பை மாநகராட்சியின் மேயராகவும் அதன் பின்னர் அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடு விடுதலையான பிறகு பிரேசில் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டார். நாடு திரும்பிய மசானி Freedom First என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்திவந்தார்.

சோவியத் ரஷ்யா பற்றி கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பங்கள் உண்மையில்லை என்பதை மிகவிரைவில் மினு மசானி புரிந்து கொண்டார். ஆனால் அவரின் இந்தப் புரிதல் அவர் மீது நேருவுக்கு ஒரு ஒவ்வாமையை உருவாக்கியது. நேரு நாட்டை சோஷலிச பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பினார். ரஷ்யா போலவே விவசாய நிலங்களை எல்லாம் அரசின் கீழ் கொண்டுவந்து கூட்டுப் பண்ணை முறையை உருவாக்க வேண்டும் என்று விரும்பினார். சோசலிச முறை பாரத நாட்டின் பிரச்சனைகளை தீர்க்காது என்று கருதிய மசானி 1957ஆம் ஆண்டு தேர்தலில் ராஞ்சி தொகுதியில் சுயேட்ச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சுதந்திரம் கிடைத்து பத்து ஆண்டுகள்தான் ஆகி இருந்தது. நாட்டின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவராக நேரு விளங்கினார். ஆனால் மக்களாட்சி முறைக்கு இது கேடு, நேருவின் கொள்கைகள் நாட்டை முன்னேற்றாது என்று எண்ணிய ராஜாஜி ஸ்வதந்தரா கட்சியைத் தொடங்கினார். அரசு என்பது அரசாட்சி செய்யவேண்டும், வணிகம் செய்வது அரசின் வேலை இல்லை என்பது ஸ்வதந்த்ரா கட்சியின் கொள்கை. சுருக்கமாகச் சொன்னால் 1990இல் நரசிம்மராவ் முன்னெடுத்த தாராளமயமாக்கள்தான். பேராசிரியர் என் ஜி ரெங்கா போன்ற தலைவர்கள் ஸ்வதந்தரா கட்சியில் இருந்தார்கள். கட்சியின் தலைவராக மினு மசானி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்வதந்தரா கட்சி சார்பாக 1971ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் மசானி.

பாரதிய ஜனசங்கம் அப்போது பெரிய கட்சியாக உருவாகவில்லை. நாடாளுமன்றத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக ஸ்வதந்தரா கட்சி விளங்கியது. நேருவிற்குப் பின் இந்திரா இன்னும் வேகமாக சோசலிச சித்தாந்தத்தை முன்னெடுத்தார். தொழிலதிபர்களை பணக்காரர்களை எதிர்மறையாகக் காட்டுவதன் மூலம், நாட்டின் பெரும்பாலான ஏழை மக்களின் ஓட்டைப் பெற்றுவிடலாம் என்று அவர் எண்ணினார். மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசிய மயமாக்கல் என்று இந்திரா அதிரடி ஆட்டங்களை ஆடினார். இவை சட்டபூர்வமானது அல்ல என்று மசானி நாடாளுமன்றத்தில் வாதாடினார். நீதிமன்ற உத்தரவுகளை புறம்தள்ளி அவசரச் சட்டங்களின் மூலம் தனது எண்ணத்தை இந்திரா நிறைவேற்றிக்கொண்டார்.

வங்க தேச விடுதலையை அடுத்து நடந்த 1971ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்திரா பெரும் வெற்றியைப் பெற்றார். கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று மசானி கட்சியின் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்தார். அடுத்த வருடத்தில் ராஜாஜி இறக்க, ஸ்வதந்த்ரா கட்சி இல்லாமலே போனது. ஆனால் ராஜாஜியும் அவரது சகாக்களும் கூறியது உண்மை என்று காலம் நிரூபித்தது. சோசலிச முறை தோல்வி அடைய, சுதந்திரப் பொருளாதார முறைக்கு நாடு திரும்பியது.

1971ஆம் ஆண்டுக்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகிய மினு மசானி தனது பத்திரிகையை நடத்துவதிலும் பல்வேறு புத்தகங்களை எழுதுவதிலும் இயங்கி கொண்டு இருந்தார். 1975ஆம் ஆண்டு இந்திரா பிரகடனம் செய்த நெருக்கடி நிலை சமயத்தில் மசானியின் Freedom First பத்திரிகையும் தணிக்கைக்கு உள்ளானது. அப்போதும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதாடி தணிக்கையை மசானி ரத்து செய்ய வைத்தார்.

ஒரு காலத்தில் பாரத நாட்டு அரசியலில் தவிர்க்கமுடியாத அங்கமாக இருந்த மினு மசானி தனது தொண்ணூற்றி இரண்டாம் வயதில் 1998ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் நாள் காலமானார். 

செவ்வாய், 19 நவம்பர், 2019

ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் - நவம்பர் 19

பாரதப் பெண்களின் வீரத்திற்கு உதாரணம் சொல்லவேண்டும் என்றால் அனைவரும் ஒருமித்த குரலில் கூறும் பதில் ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் என்றுதான் இருக்கும். அந்த வீரத்தாயின் பிறந்ததினம் இன்று. 


ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், 19 நவம்பர் 1828 ஆம் ஆண்டு  வாரணாசி நகரில்  ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மணிகர்ணிகா என்பதாகும். தனது நான்காவது வயதிலேயே தாயை இழந்து, தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். சிறுவயதிலேயே குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் மற்றும் கத்திச்சண்டை போன்றவற்றில் பயிற்சி பெற்று இருந்தார்.
1842 ஆம் ஆண்டு ஜான்சியின் மஹாராஜாவாக இருந்த கங்காதர்ராவ் நிவால்கர் என்பவரை மணந்து கொண்டார். அதன் பிறகு லக்ஷ்மிபாய் என்று அழைக்கப்படலானார். இவர்களுக்கு 1851ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தான், ஆனால் சில மாதங்களிலேயே அந்த மகன் இறந்துவிட்டான்.

1853 ல், மகாராஜா கங்காதர் ராவின் உடல்நிலை பலவீனமானதால், அவர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தனர். இந்தத் தத்தெடுப்பின் மீது ஆங்கிலேயர்கள் பிரச்சனை எழுப்பக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்த லட்சுமிபாய் அவர்கள், உள்ளூர் ஆங்கிலேய பிரதிநிதிகளை சாட்சியாக வைத்து இந்த தத்தெடுப்பை நடத்தினார். நவம்பர் 21 ஆம் தேதி, 1853 ஆம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் மரணமடைந்தார். அந்த காலகட்டத்தில்,  பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ‘லார்ட் தல்ஹௌசீ’ என்பவர் ஆட்சியில் இருந்தார்.

ராணி லட்சுமிபாய் அவர்கள், தத்தெடுத்த குழந்தைக்கு ‘தாமோதர் ராவ்’ என்று பெயரிட்டார். இந்துமத மரபின் படி, அக்குழந்தையே லட்சுமிபாய் அவர்களின் சட்ட வாரிசாக இருந்தது. இருப்பினும், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அந்த குழந்தையை சட்ட வாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். மறுப்பு கோட்பாட்டின் (Doctrine of Lapse) படி,  லார்ட் தல்ஹௌசீ அவர்கள் ஜான்சி அரசைப் பறிமுதல் செய்ய முடிவுசெய்தார். ராணி லட்சுமிபாய் அவர்கள், ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரிடம் சென்று ஆலோசனைக் கோரினார். அதன்பிறகு, அவர் லண்டனில் அவரது வழக்கிற்கான ஒரு முறையீட்டை மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஆங்கிலேய அதிகாரிகள், லட்சுமிபாய் அவர்களின் அரசு நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், ராணி லட்சுமிபாய் அவர்களை ஜான்சி கோட்டையை விட்டு செல்லுமாறு ஒரு ஆணை நிறைவேற்றப்பட்டதால், ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், ஜான்சியிலுள்ள ‘ராணி மஹாலுக்கு’ சென்றார். அந்நேரத்திலும், லட்சுமிபாய் அவர்கள், ஜான்சி அரசைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.

ராணி லக்ஷ்மி பாய் அவர்களை ஜான்சியை விட்டு வெளியேறி சொல்லி பிறப்பித்த ஆணை, ஜான்சியை எழுச்சியின் இடமாக மாற்றியது. ஜான்சி ராணி அவர்கள் தனது நிலையை வலுப்படுத்த தொடங்கினார். பிறரது ஆதரவை நாடிய அவர், அவரது ஆதரவாளர்களைக் கொண்டு ஒரு தொண்டர் படையை உருவாக்கினார். அவர் உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை, அதில் பெண்களும் கூட தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நடந்த கிளர்ச்சியில், ராணி லட்சுமிபாய், அவரது தளபதிகளுடன் இணைந்து போர் புரிந்தார்.

1857 ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து அக்டோபர் வரை இருந்து,  ராணி லக்ஷ்மி பாய் அவர்கள் அவரது அண்டை நாடுகளான ஓர்ச்சா மற்றும் டாடியாவை படையெடுத்து, அந்நாட்டுப் படைகளின் மூலமாக ஜான்சியைப் பாதுகாத்தார். இதுவே, ஜனவரி 1858ல், பிரிட்டிஷ் இராணுவம், ஜான்சியை நோக்கி படையெடுத்தற்கான காரணமாகும். ஜான்சிக்கும், பிரிட்டிஷ் ராணுவத்திற்குமான மோதல் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தது. இறுதியாக, இரண்டே வாரங்களில் ஆங்கிலேய அரசு ஜான்சி நகரத்தைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. எனினும், அவர் ஒரு ஆண்மகன் வேடம் பூண்டிருந்ததால், அவரை யாரும் அடையாளம் காணவில்லை. தனது வளர்ப்பு மகனை மடியில் ஏந்தியபடியே தப்பித்தார்.

ஆங்கிலேயர் பிடியிலிருந்து தப்பித்த ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், கல்பியில் தஞ்சம் அடைந்தார். அங்கு அவர், 1857ல் நடந்த கிளர்ச்சியில் பங்கேற்ற மாவீரன் தாந்தியா தோபேவை சந்தித்தார். ஆங்கிலேயர்களின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. ஆங்கிலேயப் படையை எதிர்த்து, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் ஜான்சிராணி போரிட்டார். ஆனால், ஆங்கிலேயர்களின் நவீன போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல், 18 ஜூன் 1858 ஆம் ஆண்டு ஜான்சி ராணி அவர்கள் இறந்தார். ராணியின் உடலைக்கூட எதிரிகள் கைப்பற்றி விடக்கூடாது என்று அவரின் வீரர்கள் ராணியின் உடலை எரித்து விட்டனர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் அணிக்கு ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் அணி என்றுதான் பெயரிட்டார். காலங்களைக் கடந்தும் அந்த வீரப்பெண்மணியின் வரலாறு நாடு மக்களை மெய்சிலிர்க்க வைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

திங்கள், 18 நவம்பர், 2019

திரைப்பட இயக்குனர் V சாந்தாராம் - நவம்பர் 18

வெற்றிகரமான இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் என்ற பல முகங்களைக் கொண்ட திரு சாந்தாராமின் பிறந்தநாள் இன்று. திரைப்படங்களில் ஒலியையும் ஒளியையும் புகுத்திய கலைஞர்களில் இவர் ஒரு முன்னோடி.


1901  ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் நாள் இன்றய மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோல்ஹாபூர் நகரில் பிறந்தவர் சாந்தாராம். இள வயதிலேயே கலையார்வம் கொண்டவராக விளங்கிய சாந்தாராம், பாபுராவ் என்பவர் நடத்திய திரைப்பட நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். 1921ஆம் ஆண்டு சுரேகா ஹரன் என்ற மௌன படத்தில் அறிமுகமானார். நேதாஜி பால்கர் என்ற படத்தை முதல்முதலாக 1927ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்டார். சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் படைத் தளபதி நேதாஜி பாலகர் பற்றிய படம் இது.

அதனைத் தொடர்ந்து 1929ஆம் ஆண்டு நண்பர்கள் சிலரோடு இணைந்து பிரபாத் திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் 1932ஆம் ஆண்டு தயாரான அயோத்திசா ராஜா என்ற படம்தான் மராட்டி மொழியில் தயாரான முதல் படம். அதற்கு முன் அநேகமாக மௌனப் படங்கள்தான் பாரதத்தில் தயாரிக்கப் பட்டு வந்தன. ஒரே நேரத்தில் மராத்தி மொழியிலும் ஹிந்தி மொழியிலும் சாந்தாராம் இயக்கி இருந்தார்.

சமகால வாழ்க்கையைப் பதிவு செய்ததிலும், பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில் இயக்குனர் சாந்தாராம் இன்றும் நினைக்கப்படுகிறார். காவல்துறையைச் சார்ந்த ஒருவருக்கும் பாலியல் தொழில் செய்து வந்த பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட காதலை மனூஸ் என்ற மராத்தி மொழிப் படத்தில் கையாண்டார் சாந்தாராம். மஹாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய ஹிந்து சமயத் துறவியான ஏகநாதரைப் பற்றி தர்மாத்மா, வயதான முதியவரை திருமணம் செய்ய மறுக்கும் இளம் பெண்ணைப் பற்றி துனியா ந மானே ஆகியவை இவர் ஆரம்ப காலங்களில் இயக்கிய முக்கியமான படங்களாகும்.

பிரபாத் திரைப்பட நிறுவனத்தில் இருந்து விலகி 1942ஆம் ஆண்டு ராஜ்கமல் கலாமந்திர் என்ற திரைப்பட நிறுவனத்தை அவர் தொடங்கினார். ஏறத்தாழ அறுபதாண்டு காலத்திற்கும் மேலாக சாந்தாராம் திரைத்துறையில் பங்களித்து வந்தார். ஜனக் ஜனக் பாயல் பஜே என்ற பெயரில் இவர் இயக்கிய திரைப்படம்தான் முதல் வண்ணப்படம். நடனக் கலைஞர்களை கதாநாயகர்களாகக் கொண்ட இந்தப் படம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது.

சிறைத்தண்டனை என்பது கைதிகளை நல்வழிப்படுத்தவே அமைக்கப்பட்டவை என்ற எண்ணத்தை விதைக்கும் தோ ஹங்கேன் பாரா ஹாத் ( இரண்டு கண்களும் பனிரெண்டு கைகளும் ) என்ற படம் திரையுலகில் ஒரு மைல்கல் என்று கூறலாம். பெர்லின் நகரில் நடந்த திரைப்பட விழாவில் வெள்ளிகரடி விருதையும் அமெரிக்காவிற்கு வெளியே எடுக்கப்பட்ட படங்களில் சிறந்த படம் என்ற விருதையும் பெற்ற படம் இது. பல்லாண்டு வாழ்க என்ற பெயரில் எம் ஜி ஆர் நடிப்பில் தமிழிலும் இந்தப்படம் எடுக்கப்பட்டது.

திரைப்படத் துறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது சாந்தாராமுக்கு 1985ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இவரது மரணத்திற்குப் பின்னர் 1992ஆம் ஆண்டு இவருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் நாள் இயக்குநர் சாந்தாராம் காலமானார். 

ஞாயிறு, 17 நவம்பர், 2019

பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதி ராய் - நவம்பர் 17


அந்நிய வல்லாதிக்கத்திற்கு எதிராக போராடிய வீரர்களின் தலைவர்களாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் இருந்தவர்கள் மூவர். மஹாராஷ்டிராவைச் சார்ந்த லோகமானிய பால கங்காதர திலகர், வங்காளத்தைச் சார்ந்த பிபின் சந்திர பால், பஞ்சாபைச் சார்ந்த லாலா லஜபதி ராய் ஆகியோரே அந்த மும்மூர்த்திகள். சுதேசி இயக்கம், அன்னியப் பொருள்களை வாங்காது இருத்தல், முழுமையான சுதந்திரம் என்பதே அவர்களின் இலக்காக இருந்தது. கூட்டங்கள் போட்டு தீர்மானம் நிறைவேற்றி அரசிடம் மனு கொடுப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பது இவர்களின் எண்ணம். ஆயுதம் ஏந்திப் போராடிய பல வீரர்கள் இவர்களின் சீடர்களாக இருந்தார்கள்.

1865ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் நாள் பஞ்சாபி மாநிலத்தில் உள்ள துடுக்கி என்ற கிராமத்தில் வசித்து வந்த முன்ஷி ராதாகிருஷ்ண அகர்வால் - குலாப் தேவி தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் லஜபதி ராய். பள்ளிப் படிப்பை முடித்த லஜபதி ராய் லாகூர் நகரில் உள்ள அரசு கல்லூரியில் சட்டம் படிக்கத் தொடங்கினார். அந்த சமயத்தில் ஆரிய சமாஜத்தின் கொள்கைகளால் கவரப்பட்டு சமாஜத்தின் உறுப்பினர் ஆனார். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே ஆர்ய கெசட் என்ற பத்திரிகையை தொடங்கி அதன் ஆசிரியராகவும் இருந்தார். ஹிந்து மதம் என்ற குடையின் கீழ்தான் மக்களை ஓன்று திரட்டி விடுதலைக்காக போராடுவதுதான் வெற்றிகரமாக இருக்கும் என்பதே லஜபதி ராயின் நிலைப்பாடாக இருந்தது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிஸார் நகரில் தனது வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய லஜபதி ராய் சிறிது காலத்திலேயே லாகூர் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றத் தொடங்கினார். ஹிஸார் நகரில் இருந்த போது அங்கே காங்கிரஸ் கட்சியின் கிளையையும், ஆரிய சமாஜத்தின் கிளையையும் தொடங்கினார். 1888 மற்றும் 1889 ஆம் ஆண்டுகளில் ஹிஸார் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.

காங்கிரஸ் இயக்கத்தின் போராட்டங்களை முன்னெடுத்ததைத் தொடர்ந்து எந்த விசாரணையும் இல்லாமல் ஆங்கில அரசு இவரை இன்றய மியான்மர் நாட்டில் உள்ள மண்டலே நகருக்கு நாடு கடத்தியது. சில காலத்திலேயே அந்த உத்தரவு திருப்பிப் பெறப்பட, லஜபதி ராய் தாயகம் திரும்பினார். 1907ஆம் ஆண்டு சூரத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு முக்கியமான ஒன்றாகும். அதில்தான் காங்கிரஸ் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று இரண்டு பிரிவாக உடைந்தது. அந்த மாநாட்டின் தலைவர் பதவிக்கு லஜபதி ராய் போட்டியிட்டார். ஆனால் மாநாட்டில் ஏற்பட்ட குழப்பத்தாலும், கைகலப்பாலும் அவர் வெற்றி பெற முடியவில்லை.

ஆங்கில கல்விக்கு எதிராக தயானந்த் வேதிக் ஆங்கில பள்ளிகள் ( Dayanath Anglo Vedic Schools - DAV Schools ) என்ற கல்வி நிலையங்களை லஜபதி ராய் உருவாக்கினார். லாகூர் நகரில் தேசிய கல்லூரி என்ற நிலையத்தை உருவாக்கினார். இந்தக் கல்லூரி மாணவர்தான் புரட்சியாளர் பகத்சிங். பஞ்சாப் நேஷனல் வங்கி, லக்ஷ்மி இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களும் லஜபதி ராய் துவங்கியவைதான். விடுதலை அடைவது மட்டுமல்லாது, அதனைத் தொடர்ந்து புனர்நிர்மாணப் பணிகள் பற்றியும் லஜபதி ராய் ஆழமாகச் சிந்தித்து செயலாற்றினார் என்பது அவர் நிறுவிய பல்வேறு நிறுவனங்கள் மூலம் புலனாகிறது.

முதலாம் உலகப் போர் நடந்த சமயத்தில் லஜபதி ராய் இங்கிலாந்து நாட்டிலும் அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அமெரிக்காவில் இருந்த பல்வேறு இந்திய விடுதலை வீரர்களை ஒன்றிணைக்கும் பணியில் அவர் ஈடுபட்டு இருந்தார்.

1920ஆம் ஆண்டு நாடு திரும்பிய லஜபதி ராய் அந்த ஆண்டு கொல்கத்தா நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜாலியன்வாலாபாக் படுகொலையை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை லஜபதி ராய் தலைமைதாங்கி நடத்தினார். காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தின் பஞ்சாப் மாநிலத்தின் தளபதியாக செயல்பட்ட லஜபதி ராய், திடீர் என்று காந்தி அந்தப் போராட்டத்தை விலக்கிக் கொண்டதை ஏற்க மறுத்தார். சுதந்திர காங்கிரஸ் கட்சி என்ற அமைப்பை உருவாக்கினார். காங்கிரஸ் தொடர்ந்து முஸ்லிம்களுக்காக  அளவுக்கு அதிகமாக வளைந்து கொடுக்கிறது என்ற நிலைப்பாடு உடைய லஜபதி ராய் 1923ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே நாட்டில் வாழ முடியாது, எனவே இரண்டு நாடுகளாக நாட்டைப் பிரித்து, மக்களை இடம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பத்திரிகையில் எழுதினார். இது பெரும் சர்சையைக் கிளப்பியது.

இந்தியர்கள் எவரும் இல்லாத சைமன் கமிஷனை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு செய்தது. 1928ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் நாள் சைமன் கமிஷனை புறக்கணித்து லாகூர் நகரில் நடைபெற்ற ஊர்வலத்தை லாலா லஜபதி ராய் தலைமைதாங்கி நடத்தினார். காவல்துறை கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஸ்காட் தடியடி நடத்தி ஊர்வலத்தை கலைக்க உத்தரவிட்டார். காவலர்கள் லாலா லஜபதி ராயை லத்தியால் தாக்கினர். "இது என் மீது விழும் அடியல்ல, ஆங்கில ஏகாதிபத்தியத்தின் சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் ஆணிகள்" என்று லஜபதி ராய் முழங்கினார்.

அறுபத்தி மூன்று வயதான தலைவர் தன்மீது தொடுக்கப்பட்ட தாக்குதலால் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் 1928ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் நாள் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் மரணமடைந்தார்.

தலைவரின் மரணம் இளைஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. பழி வாங்குவோம் என்று ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபபிளிக் படை உறுதி பூண்டது. ஜான் சாண்டர்ஸ் என்ற காவல் அதிகாரியை சுட்டுக் கொன்று பகத்சிங்கும் ராஜகுருவும் ஆங்கில ஆட்சிக்கு சவால் விட்டனர்.

பாரத  கல்வி முறை பற்றி, ஆங்கில அரசு பாரத நாட்டைச் சுரண்டியது பற்றி, தனது நாடுகடத்தல் தண்டனை பற்றி, ஆர்ய சமாஜ் பற்றி என்று பல்வேறு நூல்களை லஜபதி ராய் எழுதி உள்ளார்.

மும்பையில் வணிகவியல் கல்லூரி, மீரட் நகரில் மருத்துவக் கல்லூரி, பஞ்சாப் மாநிலத்தில் மோகா நகரில் தொழில்நுட்பக் கல்லூரி, ஹிஸார் நகரில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவை இன்று லாலா லஜபதி ராய் பெயரைத் தாங்கி நடந்து வருகின்றன.

லஜ்பத் நகர் உள்ளிட்ட டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கு லாலா லஜபதி ராய் பெயரைச் சூட்டி நாடு அந்த வீரரை மரியாதை செலுத்தி உள்ளது. 

சனி, 16 நவம்பர், 2019

புரட்சியாளர் விஷ்ணு குமார் பிங்கிலே நினைவுநாள் - நவம்பர் 16.


பாரத நாட்டின் விடுதலை என்பது கத்தியின்றி ரத்தமின்றி அடைந்ததல்ல. தன்னலம் கருதாத எண்ணற்ற வீரர்களின் தியாகத்தின் மீது கட்டமைக்கப்பட்டது அது. நாட்டின் விடுதலையை மனதில் கொண்டு உலகத்தின் பல பகுதிகளில் அதற்கான முன்னெடுப்பைச் செய்த தியாகிகள் பலர். ஆனால் இன்று அவர்களில் பலரை திட்டமிட்டு மறைத்து விட்டனர் சிலர். அப்படி பெருவாரியான மக்களால் அறியப்படாத விஷ்ணு குமார் பிங்கிலேவின் பலிதான நாள் இன்று.

பூனா நகரில் வசித்துவந்த ஒரு மஹாராஷ்டிர பிராமண குடும்பத்தின் ஒன்பதாவது குழந்தையாக 1888ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்தவர் விஷ்ணு குமார் பிங்கிலே. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே வீர சாவர்க்கரால் கவரப்பட்டு தேசிய உணர்ச்சியில் ஊன்றியவர் அவர். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு மாஹிம் பகுதியில் நடைபெற்றுவந்த பயோனீர் அல்கலி ஒர்க்ஸ் என்ற தொழில்சாலையில் பணிக்கு சேர்ந்தார் அவர். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் திரு கோவிந்தராவ் போட்தார் என்பவர். தேசியவாதியாக அவர் வெடிகுண்டு தயாரிப்பில் விற்பன்னர். போட்தார் பிங்கிலேவை பல்வேறு புரட்சியாளர்களோடு அறிமுகம் செய்து வைத்தார், அதுபோக பிங்கிலேவிற்கு வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியையும் அளித்தார்.

பிங்கிலேவின் நடவடிக்கைகளை அரசு கண்காணிக்கத் தொடங்கியது. எனவே பிங்கிலே பாரத நாட்டை விட்டு அமெரிக்கா செல்ல முடிவு செய்தார். அங்கே வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் ( Mechanical Engineering ) படிக்க அனுமதி கிடைத்து இருந்தது. மிக ரகசியமாக இந்த தகவலை வைத்து இருந்த பிங்கிலே ரயில் பெட்டியில் ஏறுவதற்கு சற்று முன்னரே தனது அண்ணனிடம் தான் அமெரிக்கா செல்லும் தகவலைச் சொன்னார்.

அமெரிக்காவில் ஹிந்து, முஸ்லீம், சீக்கிய, பார்சி என்று பல்வேறு மதங்களைச் சார்ந்த புரட்சியாளர்கள் இணைந்து கதர் கட்சி என்ற அமைப்பை நடத்தி வந்தனர். கதர் என்ற உருது மொழி சொல்லின் பொருள் புரட்சி என்பதாகும். ஆயுதம் தாங்கிய போராட்டம் வழியே ஆங்கில ஆட்சியை அகற்ற முடியும் என்பது அவர்கள் எண்ணம். பாய் பரமானத், சோஹன் சிங், பகவான் சிங், ஹர் தயாள், தாரகநாத் தாஸ், கர்த்தார் சிங், அப்துல் ஹஸிஸ் முஹம்மத் பரக்கத்துல்லா, ராஷ்பிஹாரி போஸ் ஆகியோர் அதில் முக்கியமான தலைவர்கள்.

முதலாம் உலகப் போர் தொடங்கிய நேரம் அது. பாரதம் முழுவதும் ஒரே நேரத்தில் போராட்டங்களை உருவாக்கி ஆங்கில ஆட்சியை அகற்ற வேண்டும், அதற்கு ஜெர்மனி துணை நிற்கும் என்ற உறுதி மொழி அளிக்கப்பட்டது. 1914ஆம் ஆண்டு பிங்கிலே மீண்டும் தாயகம் திரும்பினார். ஏற்கனவே லோகமான்ய திலகரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட லாலா லஜபதி ராய், அரவிந்த கோஷ் ஆகியோர் வட இந்தியா முழுவதும் புரட்சிக்கனலை தூண்டிவிட்டுக் கொண்டுதான் இருந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயுதம் தாங்கிய புரட்சிக்கு பல்வேறு இளைஞர்கள் தயாராகி கொண்டுதான் இருந்தார்கள்.

கொல்கத்தா நகருக்கு வந்து சேர்ந்த பிங்கிலே அங்கிருந்து பனாரஸ், லாகூர், அம்ரித்ஸர் ஆகிய நகரங்களில் உள்ள புரட்சியாளர்களோடு தொடர்பு கொண்டார். அன்றய பிரிட்டிஷ் ராணுவத்திலும் ஊடுருவிய புரட்சியாளர்கள் பல இடங்களில் உள்ள இந்திய சிப்பாய்களையும் தங்களுக்கு ஆதரவாக ஏற்கனவே மாற்றி வைத்து இருந்தனர். 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரே நேரத்தில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கும் ராணுவ வீரர்கள் ஆங்கில ஆட்சியை எதிர்த்து போராடத் துவங்கவேண்டும் என்பது திட்டம். ஆனால் இதற்கு நடுவே போராட்டக்காரர்களின் திட்டங்களை அரசு வேவு பார்க்கத் தொடங்கி இருந்தது. எனவே திட்டமிட்ட நாளுக்கு முன்னமே பல பகுதிகளில் இருந்த சிப்பாய்கள் ஆட்சியை எதிர்த்து போராடத் தொடங்கினார்கள். ஆனால் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் போனதால் அரசு அந்த முயற்சியை முறியடித்து விட்டது. கதர் புரட்சி என்றும் முதலாம் லாகூர் சதிவழக்கு என்று இந்த முயற்சி வரலாற்றில் பதிவானது.

மொத்தம் 291 புரட்சியாளர்கள் மீது வழக்கு பதிவானது. இதில் 42 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, 114 பேர் ஆயுள் தண்டனை பெற்று அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். 93 பேர் பல்வேறு காலத்திற்கான தண்டனைக்கு உள்ளானார்கள்.

1915ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் நாள் விஷ்ணு குமார் பிங்கிலே லாகூர் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார். அப்போது அவருக்கு வயது இருபத்தி ஏழு மட்டுமே.

வீரர்களின் தியாகத்தை மனதில் வைப்போம். பெற்ற சுதந்திரத்தை கண் போல் காப்போம். 

வெள்ளி, 15 நவம்பர், 2019

ஆச்சார்ய வினோபா பாவே - நினைவுநாள் நவம்பர் 15

"எனது சீடனாக வந்து எனது ஆசிரியராக மாறியவர்" என்று காந்தியால் புகழப்பட்டவர், தனிநபர் சத்தியாகிரஹத்தின் முதல் போராளி,  நாடு முழுவதும் சுற்றிவந்து நிலச்சுவான்தார்கள் இடமிருந்து நிலங்களைப் பெற்று அதனை நிலமற்ற ஏழைத் தொழிலாளிகளுக்கு அளித்த பூதான இயக்கத்தின் தந்தை, பலமொழி அறிஞர், காந்தியின் ஆன்மீக வாரிசு என்று அறியப்படும்  ஆச்சாரிய வினோபா பாவேயின் நினைவுநாள் இன்று.



இன்று மும்பையின் பகுதியாக விளங்கும் கொலாபா பகுதியில் வசித்து வந்த நரஹரி சம்புராவ் - ருக்மணி தேவி தம்பதியரின் மூத்த மகனாக 1895ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் பிறந்தவர் விநாயக் நரஹரிராவ் என்னும் வினோபா பாவே. இறைநம்பிக்கையை கொண்ட தாயாலும் பாட்டியாலும் வளர்க்கப்பட்டதால் சிறுவயதிலேயே இதிகாச புராணங்களையும், கீதையையும் வினோபா முழுமையாகக் கற்று இருந்தார்.

1916ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தேர்வு எழுத மும்பைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டிய  இருந்த வினோபா  தனது கல்விச் சான்றிதழ்கள் எல்லாவற்றையும் தீயில் வீசிவிட்டு மும்பை செல்லாமல் காசிக்கு பயணமானார். ஆன்மீக சாதனையில் ஈடுபடத்தான் அவர் நினைத்து இருந்தார். ஆனால் காலம் அவர்க்கு வேறு வழியைக் காட்ட தீர்மானித்தது. காசியில் இருந்தபடி காந்தியோடு கடித தொடர்பை ஏற்படுத்தினார். காந்தி அவரை அஹமதாபாத் நகரில் அவர் தங்கி இருந்த கோசரப் ஆசிரமத்திற்கு வருமாறு அழைத்தார். அந்த சந்திப்பு வினோபாவை முழுவதுமாக மாற்றியது.

தனிப்பட்ட ஆன்மீக சாதனைகளை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு அவர் தேசப்பணிக்கு தன்னை அர்ப்பணம் செய்துகொண்டார். காந்தியின் அறிவுரையின்படி மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வார்தா பகுதியில் அமைந்துள்ள ஆஸ்ரமத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அங்கே அவர் மஹாராஷ்டிரா தர்மா என்ற மராட்டி மாத இதழை நடத்தலானார். பின்னர் அந்த இதழ் வார இதழாக வெளிவரத் தொடங்கியது. அதில் தொடர்ந்து உபநிஷதங்களின் உரைகளை எழுதலானார். கதர், கைத்தொழில், சுகாதாரம், கல்வி என்று காந்தியின் பல்வேறு தேச புனர்நிர்மாணப் பணிகளை வினோபா மேற்கொண்டார். கேரள மாநிலம் வைக்கம் நகரில் உள்ள வைக்கம் நகரில் கோவிலுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதற்கான போராட்டத்திற்காக அனுப்பப்பட்டார். காந்தி தொடங்கிய தனிநபர் சத்தியாகிரஹப் போராட்டத்தின் முதல் வீரராக வினோபா காந்தியால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்ற நூற்றாண்டின் இருபதுகளிலும் முப்பதுகளில் வினோபா பல முறை கைது செய்யப்பட்டார். சிறையில் படிப்பதும் எழுதுவதும் அவரது வேலையாக மாறியது. இஷாவாக்கிய விருத்தி, ஸ்திரப் ப்ரகிய தர்ஷன், ஸ்வராஜ்ய சாஸ்திரா  ஆகிய நூல்களை அவர் சிறையில் இருந்த போது எழுதினார். சிறையில் மற்ற கைதிகளுக்கு அவர் மராட்டி மொழியில் கீதையைப் பற்றி பேசியதின் தொகுப்பு கீதைப் பேருரைகள் என்ற பெயரில் புத்தகமாக பல்வேறு மொழிகளில் இன்று கிடைக்கிறது. கீதைக்கான சிறந்த உரைகளில் வினோபாவேயின் உரை முக்கியமான ஒன்றாகும். தமிழகத்தின் வேலூர் சிறையில் இருந்த காலத்தில் நான்கு தென்னிந்திய மொழிகளையும் கற்றுக்கொண்டார்.

நாடு விடுதலையான பிறகு நேரடி அரசியலில் ஈடுபடாமல் சமுதாயப் பணிகளிலேயே வினோபா தொடர்ந்து செயல்பட்டார். இன்றய தெலுங்கானா மாநிலத்தில் அன்று கம்யூனிஸ்ட் கட்சி செயல்பாட்டாளர்கள் நிலச் சுவான்தார்களை கொன்று நிலமற்ற ஏழை மக்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அவர்களை அடக்க ராணுவமும் காவல்துறையும் களமிறங்கியது. இருவருக்கும் நடுவே மக்கள் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தனர். இந்த சமயத்தில் வினோபா அந்தப் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நிலமற்ற நாற்பது  தாழ்த்தப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை அவர் அங்கே உள்ள மக்களிடம் முன்வைத்தார். தனக்கு சொந்தமான நிலத்தில் நூறு ஏக்கர் நிலத்தை ராமச்சந்திர ரெட்டி என்ற நிலச்சுவான்தார் அந்த மக்களுக்கு அளிக்க முன்வந்தார். குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் போதும் எனவே எண்பது ஏக்கர்களை மட்டும் பெற்றுக் கொள்கிறோம் என்று அந்த ஹரிஜன சகோதர்கள் கூறினார்கள். இந்த சிறிய விதை பூதான இயக்கமாக உருவானது.

நிலமற்ற ஏழை மக்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்றால் ஏறத்தாழ ஐந்து கோடி ஏக்கர் நிலம் வேண்டும் என்று கணக்கிடப்பட்டது. கிராமம் கிராமமாகச் சென்று "நான் உங்கள் ஐந்தாவது மகன், எனக்கான பங்கைக் தாருங்கள்" என்று வினோபா கோரிக்கை வைத்தார். சராசரியாக ஒரு நாளுக்கு இருநூறில் இருந்து முன்னூறு ஏக்கர் நிலம் அவருக்கு அளிக்கப்பட்டது. 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கிய அவரது பாதயாத்திரை 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் நிறைவு பெற்றது. ஏறத்தாழ 40 லட்சம் ஏக்கர் நிலத்தை அவர் பெற்று மக்களுக்கு அளித்தார். தானமும் தர்மமும் பாரதநாட்டின் பிரிக்க முடியாத அம்சம் என்று வினோபா நிரூபித்தார். மீண்டும் 1965ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு பிஹார் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு மக்களிடம் தற்சார்ப்பு பொருளாதாரம் பற்றிய ஆவலை உருவாக்கினார். சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த கொள்ளைக்காரர்கள் பலர் வினோபாவின் அறிவுரையினை ஏற்று அரசிடம் சரணடைந்தார்கள்.

1970ஆம் ஆண்டு முதல் ஒரே இடத்தில் தங்கி ஆத்ம சாதனையை மேற்கொள்ளப் போவதாக வினோபா அறிவித்தார். 1974ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் ஆண்டு முதல் 1975ஆம் ஆண்டு டிசம்பர் 25வரை ஓராண்டு பேசாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தது அதனை செயல்படுத்தினார்.

பாரத நாட்டு வரலாற்றில் அது ஒரு சோதனையான காலகட்டம். உயரிய விழுமியங்களை விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சி பதவியாசை கொண்டு விளங்கியது. லஞ்சமும், ஊழலும், வேலையில்லா திண்டாட்டமும் நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. சர்வோதயா இயக்கத்தில் ஆச்சாரிய வினோபாவின் தளபதியாக விளங்கிய ஜெயப்ரகாஷ் நாராயணன் தலைமையில் மாணவர்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். பிரதமர் இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அலஹாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்திரா நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். நாட்டின் ஜனநாய உரிமைகள் எல்லாவற்றையும் அவர் இல்லாமல் செய்தார். சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் தளபதிகளாக செயல்பட்ட தலைவர்கள் அனைவரும் இதனை எதிர்த்தனர். ஆனால் எனோ வினோபா இந்திராவை ஆதரித்தார். மிகப் பெரும் மனிதர்களும் தவறிழைக்கும் நேரங்கள் உண்டு என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல

1982ஆம் ஆண்டு உணவருந்த மறுத்து சமண முறைப்படி உபவாசம் இருந்து நவம்பர் 15ஆம் தேதி ஆச்சாரிய வினோபா பாவே தனது உடலைத் துறந்தார். இறப்பிற்கு பிறகு அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி மரியாதை செலுத்தியது.

இப்படிப்பட்ட மக்களையும் பாரதத் தாய் ஈன்றெடுத்துள்ளாள் என்பதையாவது நாம் அறிந்து கொள்வோம். 

வியாழன், 14 நவம்பர், 2019

ஆதித்ய விக்ரம் பிர்லா - நவம்பர் 14

புகழ்பெற்ற தொழிலதிபரும் பிர்லா குடும்பத்தின் மிக முக்கியமான உறுப்பினருமான ஆதித்ய விக்ரம் பிர்லாவின் பிறந்தநாள் இன்று.


வியாபாரத்தில் மட்டுமே கால்பதித்து இருந்த பிர்லா குடும்பத்தை உற்பத்திதுறையிலும் முன்னெடுத்தவர் ஞான்ஷ்யாம்தாஸ் பிர்லா என்ற ஜி டி பிர்லா. ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த மார்வாடி வகுப்பைச் சார்ந்த ஜி டி பிர்லா முதல்முதலில் கொல்கத்தா நகரில் சணல் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கினார். அங்கிருந்து ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் முக்கியமான தொழில் குழுமமாக பிர்லா குடும்பம் விளங்குகிறது. ஜி டி பிர்லாவின் மகனான பசந்த் குமார் பிர்லாவின் மகனாக 1943ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி பிறந்தவர் ஆதித்ய விக்ரம் பிர்லா.

அன்று நாட்டின் முன்னணி தொழில் நகரமாக விளங்கியது கொல்கத்தா நகரம். ஆதித்ய பிர்லா கொல்கத்தா நகரின் தூய சவேரியார் கல்லூரியில் படித்து பின்னர் அமெரிக்காவில் உள்ள உலகின் முன்னணி கல்வி நிறுவனமான மசாசூட் பல்கலைக்கழகத்தில் ரசாயன பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். பள்ளிப் படிப்பை படிக்கும் போதே சமிஸ்க்ரித மொழியை ஆதித்ய பிர்லா கற்றுத் தேர்ந்தார்.

அமெரிக்காவில் கல்வி பயின்ற பிர்லா 1965ஆம் ஆண்டு பாரதம் திரும்பி, தங்கள் குடும்பத் தொழில்களில் தன்னை இணைத்துக் கொண்டார். ஆனால் அன்றய நிலைமை தொழிலதிபர்களுக்கு சாதகமாக இல்லை. சோசலிசம் என்ற தவறான கொள்கையின் விளைவாக எதை தயாரிக்க வேண்டும், எந்த அளவு தயாரிக்க வேண்டும், எந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அரசே முடிவு செய்யும் போக்குதான் இருந்தது. பல்வேறு தொழில்சாலைகளை நிறுவ பிர்லா குழுமம் அளித்த விண்ணப்பங்கள் அரசால் நிராகரிக்கப்பட்டன. மனது வெறுத்துப் போன ஆதித்ய பிர்லா வேறு நாடுகளில் தனது தொழில்சாலைகளை நிறுவலாம் என்று முடிவு செய்தார்.

1969ஆம் ஆண்டு முதல் ஆதித்ய பிர்லா தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற தூரக் கிழக்கு நாடுகளில் தனது தொழிலை விரிவுபடுத்தத் தொடங்கினார். விஸ்கோஸ் இழைகள், நூல் தயாரிப்பு, பனைமர எண்ணெய் தயாரிப்பு, ரேயான் இழை தயாரிப்பு என்று பல்வேறு தொழிற்சாலைகளை அவர் இந்த நாடுகளில் நிறுவினார். அரசின் தவறான கொள்கை முடிவுகள் அவரை இந்த நிலைக்கு தள்ளியது. நாடு பொருளாதார துறையில் முன்னேற்றம் அடைய இந்தக் கொள்கைகள் தடையாக இருந்தன.

1983ஆம் ஆண்டு ஜி டி பிர்லா காலமானார். அவர் தனது பல்வேறு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை ஆதித்ய பிர்லா வசம் ஒப்படைத்து இருந்தார். பிர்லா குழுமத்தின் தலைமை அதிகாரியாக, குழுமத்தின் முகமாக, நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் முக்கியமான ஒருவராக ஆதித்ய பிர்லா அறியப்பட்டார்.

ஆனால் காலத்தின் கணக்கு வேறு மாதிரியாக இருந்தது. 1993ஆம் ஆண்டு ஆதித்ய பிர்லா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. ஆதித்ய பிர்லாவின் தந்தையான பசந்த் குமார் பிர்லாவும், இருபத்தி ஐந்து வயதே ஆன மகன் குமாரமங்கலம் பிர்லாவும் பிர்லா குழுமத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். பால்டிமோர் நகரில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் ஆதித்ய பிர்லா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போதுதான் நாடு சுதந்திரமான பொருளாதாரக் கொள்கைக்கு மாறி இருந்தது. தொழில் நடத்துவதும், லாபம் சம்பாதிப்பதும் பாவகரமான செயல் அல்ல என்று அரசு எண்ணத் தொடங்கி இருந்தது. இன்னும் பல உயரங்களை அடைந்திருக்க வேண்டிய ஆதித்ய விக்ரம் பிர்லா 1995ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் நாள் மரணமடைந்தார்.

ஆதித்ய பிர்லாவின் நினைவாக ஆண்டுதோறும் நாட்டின் தலைசிறந்த பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகளில் படிக்கும் சிறந்த மாணவர்களில் நாற்பது பேரின் படிப்புக்கான தொகையை பிர்லா குழுமம் செலுத்தி வருகிறது. பூனே நகரில் பிர்லா குழுமம் ஆதித்ய விக்ரம் பிர்லா பெயரில் ஒரு மருத்துவமனையை நிறுவி நடத்தி வருகிறது.

பாரத நாட்டின் மிகச் சிறந்த தொழிலதிபரான ஆதித்ய விக்ரம் பிர்லாவின் பங்களிப்புக்காக ஒரே இந்தியா தளம் அவருக்கு நன்றி செலுத்துகிறது. 

திங்கள், 11 நவம்பர், 2019

அபுல் கலாம் ஆசாத் - நவம்பர் 11.



உலகத்தின் ஞான ஒளியாக பாரதம் என்றுமே திகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆப்கானிய வம்சாவளியைச் சார்ந்த ( பாரதம் என்பது இன்றய ஆப்கானிஸ்தான் வரை பரவி இருந்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ) டெல்லியில் வசித்து வந்த மௌலானா சையத் முஹம்மத் கைருதீன் பின் அஹமத் அல் ஹுசைனி என்பவர் இஸ்லாமிய தத்துவத்தில் பெரும் அறிஞராக இருந்தார். அவரை இஸ்லாத்தின் அஸ்திவாரமாக மெக்கா நகருக்கு வரவழைத்து அவரிடம் அரேபியர்கள் இஸ்லாமிய தத்துவத்தின் விளக்கத்தை கேட்டறிந்தார்கள் என்றால் அவரது ஆழ்ந்த புலமையை நாம் அறியலாம். மெக்கா நகரில் அவர் வசித்து வந்த காலத்தில் அரேபிய நாடு முழுவதும் அறியப்பட்ட அறிஞரான ஷேக் முஹம்மத் பின் சாஹீர் அல்வட்ரி என்பவரின் மகளான ஆலா பின்த் முஹம்மத் என்பவரை மணந்து கொண்டார். இந்த தம்பதியரின் மகனாக இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா நகரில் 1888ஆம் ஆண்டு பிறந்தவர்தான் செய்யத் குலாம் முஹைதீன் அஹமத் பின் கைருதீன் அழ ஹுசைனி என்ற மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள்.

1890ஆம் ஆண்டே ஆசாத்தின் பெற்றோர்கள் பாரதம் திரும்பி கொல்கத்தா நகரில் வசிக்கத் தொடங்கினார்கள். அபுல் கலாம் ஆசாத் தனது படிப்பை தனது வீட்டிலேயே ஆரம்பித்தார். தகுதியான ஆசிரியர்கள் அவருக்கு ஹிந்தி, பாரசீகம், ஆங்கிலம், வங்காளம், அரபி உருது ஆகிய மொழிகளையும், கணிதம், வரலாறு, அறிவியல் தத்துவம் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கவியல்  ஆகிய பாடங்களையும் கற்றுக் கொடுத்தனர். இயல்பிலேயே சூட்டிகையான மாணவனாக இருந்த ஆசாத், மிக விரைவில் பல்மொழி புலவராகவும், பல துறை அறிஞராகவும் அறியப்பட்டார். பதின்ம வயதிலேயே பத்திரிகை நடத்தவும், தனக்கு மூத்த மாணவர்களுக்கு பாடம் நடத்தவும் அவர் ஆரம்பித்தார்.

படித்த படிப்பின் படி அவர் ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞராகத்தான் இருந்திருக்க வேண்டும், ஆனால் அவரது படிப்பு அவரை ஒரு பத்திரிகையாளராக மாற்றியது. இளம் பருவத்தில் அவர் ஆயுதம் தாங்கிப் போராடும் போராளிகளின் கூட்டத்தில் ஒருவராகத்தான் இருந்தார். ஷியாம் சந்திர சக்கரவர்த்தி, அரவிந்த கோஷ் போன்ற வீரர்களின் நண்பராக இருந்தார். பல முஸ்லிம்களின் எண்ணத்திற்கு எதிராக வங்காளப் பிரிவினையை அவர் எதிர்த்தார்.

அமிர்தஸர் நகரில் இயங்கிக்கொண்டு இருந்த வக்கீல் என்ற செய்தித்தாளில் ஆசாத் பணியாற்றினார். பின்னர் 1912ஆம் ஆண்டு அல் ஹிலால் என்ற உருது மொழி நாளிதழை தொடங்கினார். அதில் தொடர்ந்து  ஆங்கில ஆட்சியை எதிர்த்தும், ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதின் அவசியம் பற்றியும் எழுதிக்கொண்டு இருந்தார். முதலாம் உலகப் போர் தொடங்கியதை அடுத்து ஆங்கில அரசு இந்தப் பத்திரிகையை தடை செய்தது. சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல ஆசாத் அல் பலாஹ் என்ற பத்திரிகையை ஆரம்பித்து ஆங்கில ஆட்சியைத் தாக்கி எழுதலானார். வழக்கம் போல ஆங்கில அரசு இவரை கைது செய்து ராஞ்சி சிறையில் அடைத்தது. மும்பை, பஞ்சாப், டெல்லி, ஆக்ரா ஆகிய மாகாணங்கள் தங்கள் எல்லைக்குள் ஆசாத் வரக்கூடாது என்று ஆணை பிறப்பித்தது.

சிறைவாசம் முடித்து ஆசாத் விடுதலையாகும் சமயம் பாரதத்தின் அரசியல் களம் மொத்தமாக மாறி இருந்தது. அடக்குமுறையின் உச்சமாக ரௌலட் சட்டம் அமுலில் இருந்தது. ஜாலியன்வாலாபாக் நகரில் அப்பாவி பொதுமக்களை காக்கை குருவி சுடுவது போல அரசு சுட்டுக் தள்ளி இருந்தது. அரசியல் களத்தின் தலைமை சந்தேகமே இல்லாமல் காந்தியின் கையில் வந்து சேர்ந்திருந்தது. ஆசாத் காந்தியின் நெருங்கிய தோழரும் தொண்டருமாக உருவானார். அன்னியத் துணிகளைத் துறந்து ராட்டை சுற்றி, நூல் நூற்று காந்தியோடு ஆசிரமங்களில் தங்கி எளிய வாழ்க்கை வாழ்ந்து என்று ஆசாத் முழுவதுமாக மாறிப் போனார். காந்திக்கு மட்டுமல்ல ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, நேதாஜி ஆகிய தலைவர்களின் தோழராகவும், நாட்டின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் ஆசாத் அறியப்படலானார்.

1922ஆம் ஆண்டு ஆசாத் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் காங்கிரஸ் கட்சிக்கு புது தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவது வழக்கம். மிக இளைய வயதில் தேர்வான தலைவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆசாத். மீண்டும் 1940ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜின்னா சுதந்திரம் அடையும் சமயத்தில் நாடு மதரீதிரியாகப் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்திருந்த நேரம் அது. அந்த குரலுக்கு முஸ்லீம் மக்கள் பலரின் ஆதரவும் இருந்தது.ஆனால் கணிசமான இஸ்லாமியர்கள் அதனை எதிர்த்து நின்றதும் வரலாறு. அதில் முக்கியமான குரல் ஆசாத்தின் குரல்.

" இந்த நாட்டு மக்களின் மதமாக ஹிந்து மதம் பல்லாயிரம் ஆண்டுகளாக விளங்குகிறது, அது போலவே ஆயிரம் ஆண்டுகளாக இஸ்லாம் மதமும் இந்த நாட்டின் மக்களின் மதமாக உள்ளது. நான் ஹிந்து மதத்தைப் பின்பற்றும் இந்தியன் என்று பெருமையோடு கூறுவது போல, நான் இஸ்லாம் மார்கத்தைப் பின்பற்றும் பாரதீயன் என்றும் நான் கிறிஸ்துவை வழிபடும் இந்தியன் என்று பெருமையோடு கூறலாம். நமது வழிபாடு முறைகள்தான் வேறுபட்டு உள்ளது, ஆனால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்களே" இது ஆசாத் அளித்த தலைமையுரையில் ஒரு பகுதி.

தவிர்க்க முடியாமல் நாடு மதத்தின் அடிப்படையில் துண்டாடப் பட்டது. இஸ்லாமின் பிறப்பிடமான மெக்கா நகரில் பிறந்த அபுல் கலாம் ஆசாத் உள்பட பல இஸ்லாமியர்கள் பாரத நாட்டிலேயே இருப்பது என்ற முடிவை எடுத்தனர். ஆசாத் நேருவின் நண்பராகவும், உற்ற தோழராகவும், அமைச்சரவை சகாவாகவும் விளங்கினார். நாட்டின் கல்வி அமைச்சராக அவர் பணியாற்றினார்.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஐ ஐ டிகள் போன்ற பல கல்வி நிறுவனங்கள் அவரின் முயற்சியால் உருவானவைதான். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டின் கல்விக்காக பெரிதாக எதுவும் செய்யவில்லை. விடுதலை அடையும் சமயத்தில் மக்களில் கல்வி பெற்றவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. தொடக்கக்கல்வி, முதியோர் கல்வி, பெண்கள் கல்வி, தொழிற்கல்வி என்று பல்வேறு தளங்களில் பெரும் சவால்களை ஆசாத் எதிர்கொண்டு நாட்டின் கல்வித் திட்டத்தை வடிவமைத்தார்.

அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாளை நாடு தேசிய கல்வி நாளாக அனுசரிக்கிறது.

ஞாயிறு, 10 நவம்பர், 2019

முதுபெரும் தலைவர் சுரேந்திரநாத் பானர்ஜி - நவம்பர் 10.

ஆயிரம் வருடங்களுக்கு மேலாக அன்னியர்கள் ஆட்சியை எதிர்த்துப் போராடியதுதான் பாரத நாட்டின் உண்மையான வரலாறு. தொடர் ஓட்டம் போல அந்தந்த காலகட்டத்தில் வெவ்வேறு தேசபக்தர்கள் தோன்றி சுதந்திர கனலை அணையவிடாமல் தகுதியான அடுத்தகட்ட தலைவர்களை உருவாக்கி அவர்கள் வசம் அந்த புனிதப் பணியை விட்டுவிட்டுச் சென்ற நெடிய வரலாறு நம் தேசத்தின் வரலாறு. அவ்வாறு பத்தொன்பதாம் நூற்றாண்டில் வங்காளத்தில் தோன்றிய முதுபெரும் தலைவர் சுரேந்திரநாத் பந்தோபாத்யாவின் பிறந்ததினம் இன்று.



 கொல்கத்தா நகரில் வசித்துவந்த துர்காசரண் பானர்ஜி என்ற மருத்துவரின் மகனாக 1848ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் நாள் பிறந்தவர் சுரேந்திரநாத் பானர்ஜி. கொல்கத்தா நகரில் இன்று மாநிலக் கல்லூரி என்று அறியப்படும் ஹிந்து கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த சுரேந்திரநாத் பானர்ஜி 1868ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வை எழுத லண்டன் சென்றார். 1869ஆம் ஆண்டு அந்த தேர்வில் அவர் வெற்றி பெற்றார். ஆனால் அவர் வயதில் எழுத சர்ச்சையால் ஆங்கில அரசு அவரின் வெற்றியை செல்லாது என அறிவித்தது. எனவே மீண்டும் 1871ஆம் ஆண்டு அதே தேர்வை எழுதி வெற்றிபெற்றார். அதனைத் தொடர்ந்து ஆங்கில அரசு அவரை இன்று பங்களாதேஷ் நாட்டில் இருக்கும் சில்ஹெட் நகரின் உதவி ஆட்சித் தலைவராக நியமித்தது. ஆனால் மிகச் சிறிய தவறை காரணம் காட்டி அரசு அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்கியது. பாரத மக்கள் யாருக்கும் ஆட்சி செய்யும் தகுதி இல்லை என ஆங்கில அரசின் கருத்துதான் இதற்கான பின்புலம். தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து மேல் முறையீடு செய்ய சுரேந்திரநாத் பானர்ஜி மீண்டும் லண்டன் சென்றார். ஆனால் அவருக்கு ஆங்கில ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை. ஆனால் லண்டன் நகரில் தங்கியிருந்த காலத்தில் அவர் படித்த புத்தகங்கள் அவரின் சிந்தனைப் போக்கை மாற்றி அமைத்தது.

1875ஆம் ஆண்டு நாடு திரும்பிய பானர்ஜி வித்யாசாகர் கல்லூரி ( மெட்ரோபாலிட்டன் கல்லூரி ) ஸ்காட் சர்ச் கல்லூரி ஆகிய நிறுவனங்களில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் அவர் ரிப்பன் கல்லூரி என்ற என்ற கல்வி நிலையத்தை நிறுவினார். இன்று அது சுரேந்திரர்நாத் பானர்ஜி கல்லூரி என்று அழைக்கப்படுகிறது. 1876ஆம் ஆண்டு அவர் இந்திய தேசிய இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். அதன் கூட்டங்களில் மதங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள், நாட்டின் முன்னேற்றத்திற்க்காக நாம் அனைவரும் இணைத்து செயல் புரிய வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பேசினார்.

1879ஆம் ஆண்டு பெங்காலி என்ற ஆங்கிலப் பத்திரிகையை நிறுவினார். அதன் அவர் எழுதிய தலையங்கம் ஒன்றுக்காக கைது செய்யப்பட்டார்.அவரை விடுதலை செய்யக் கோரி வங்காளத்தில் மட்டுமல்லாமல் டெல்லி, ஆக்ரா, பூனா, லாகோர் ஆகிய நகரங்களிலும் கடையடைப்பு நடைபெற்றது என்றால் அவரது ஆளுமையை நாம் புரிந்துகொள்ளலாம். பானர்ஜி உருவாக்கிய இந்திய தேசிய இயக்கம் வருடம்தோறும் அந்த ஆண்டுக்கான பொதுக்கூட்டத்தை நடத்துவது வாடிக்கையாக இருந்தது.

ஒத்த கருத்தோடு உருவான இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் பானர்ஜி தனது இயக்கத்தை 1886ஆம் ஆண்டு இணைத்துக் கொண்டார். 1895 மற்றும் 1902ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகள் இவர் தலைமையில்தான் நடைபெற்றது. 1905ஆம் ஆண்டு கார்ஸன் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். அதனை எதிர்த்து முழுமூச்சில் சுரேந்திரநாத் பானர்ஜி பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அடுத்த தலைமுறை தலைவர்களாக உருவான கோபால கிருஷ்ண கோகுலே, சரோஜினி நாயுடு ஆகியோரின் குருநாதராக சுரேந்த்ரநாத் பானர்ஜி விளங்கினார். பானர்ஜி மிதவாதிகளின் தலைவராக இருந்தார். அந்நிய துணி மறுப்பு, சுதேசி இயக்கம் ஆகியவைகள் அவர் முன்னெடுத்த முக்கியமான செயல்களாகும். அன்றய வங்காளத்தின் முடிசூடா மன்னர் என அவர் புகழப்பெற்றார்.

போராட்ட களம் மனுக்களை எழுதி, அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கும் மிதவாதிகள் கையில் இருந்து பால கங்காதர திலகர்,  லாலா லஜபதி ராய் போன்ற தீவிர செயல்பாட்டில் நம்பிக்கை வைத்த தலைவர்கள் கைக்கு மாறியது. பல்வேறு இடங்களில் ஆயுதம் தாங்கிய போராட்ட வீரர்கள் தோன்ற ஆரம்பித்தனர். தென்னாபிரிக்கா நாட்டில் இருந்து காந்தி பாரதம் வந்தார். காட்சிகள் மாறின, காலங்கள் மாறின, மக்களின் எண்ணம் மாறியது. மிண்டோ மார்லி சீர்திருத்தங்களை பானர்ஜி வரவேற்றார். ஆனால் பெருவாரியான மக்கள் அந்த சீர்திருத்தங்களால் எந்தப் பயனும் இல்லை என்று எண்ணினார்கள். காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் பலன் தராது என்றும் மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ளலாம் என்று பானெர்ஜி கூறினார். பல்வேறு புதிய தலைவர்கள் அரசியல் வானில் சுடர்விட்டுப் பிரகாசிக்க, பானர்ஜி மெல்ல மெல்ல தனது முக்கியத்தை இழந்தார். 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் நாள் சுரேந்தர்நாத் பானர்ஜி காலமானார்.

பெரும் கட்டிடங்களின் அஸ்திவாரங்கள் வெளியே தெரிவதில்லை, ஆனால் அவை இல்லாமல் கட்டிடங்கள் இல்லை. அதுபோல பாரத நாட்டின் ஆங்கில அரசை எதிர்த்து நடந்த போராட்டங்களில் சுரேந்திரநாத் பானர்ஜி போன்றவர்களின் ஆரம்பகால செயல்பாடு இல்லாமல் இருந்திருந்தால், சுதந்திரம் இன்னும் பல பத்தாண்டுகள் பின்னால் சென்றிருக்கும் என்பதுதான் உண்மை.

நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுரேந்திரநாத் பானர்ஜிக்கு ஒரே இந்தியா தளம் தனது வணக்கத்தையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறது. 

வெள்ளி, 8 நவம்பர், 2019

பீஷ்ம பிதாமகர் லால் கிருஷ்ண அத்வானி பிறந்தநாள் - நவம்பர் 8

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த பிரச்சாரகரும், நான்கு முறை ராஜ்யசபை மற்றும் எட்டு முறை மக்களவை என்று நாற்பதாண்டு கால பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் பீஷ்ம பிதாமகருமான திரு லால் கிருஷ்ண அத்வானி அவர்களின் பிறந்தநாள் இன்று.


இன்று பாகிஸ்தானில் இருக்கும் கராச்சி நகரில் 1927ஆம் ஆண்டு கிருஷ்ணசந்த் அத்வானி - ஞாநிதேவி தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் லால் கிருஷ்ண அத்வானி. உண்மையில் அவர் பெயர் லால் என்பதுதான். தந்தையின் பெயரையும் குடும்பப் பெயரையும் இணைத்து சொல்வது வட இந்திய முறை. எனவே அவர் லால் கிருஷ்ணசந்த் அத்வானி என்று அழைக்கப்பட்டார். அதுவே பின்னர் லால் கிருஷ்ண அத்வானி என்று ஆனது.

தனது ஆரம்பிக் கல்வியை செயின்ட் பட்ரிக்ஸ் பள்ளியில் முடித்த அத்வானி பின்னர் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் நகரின் அரசுக் கல்லூரியிலும் படித்தார். பிரிவினைக்குப் பிறகு மும்பை நகருக்கு குடிபெயர்ந்த அத்வானி மும்பை சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். பள்ளியில் படிக்கும் போதே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் இணைந்து கராச்சி நகரில் சங்கத்தை வளர்க்கும் பணியில் சிறப்பாக செயலாற்றனார். பாரதம் வந்த பிறகு ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் பகுதியின் பிரச்சாரக்காக இருந்தார்.

1951இல் பாரதிய ஜனசங் கட்சி தொடங்கப்பட்ட சமயத்தில் கட்சியின் ராஜஸ்தான் மாநில செயலாளராக இருந்த எஸ் எஸ் பண்டாரியின் உதவியாளராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1957ஆம் ஆண்டு கட்சியின் பணிக்காக அத்வானி டெல்லி நகருக்கு குடி பெயர்ந்தார். கட்சியின் டெல்லி கிளையின் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் உயர்ந்தார். சங்கத்தின் பத்திரிகையான ஆர்கனைஸர் பத்திரிகையை ஆசிரியராக இருந்து நடத்திய கே ஆர் மல்கானிக்கு உறுதுணையாக அத்வானி இருந்தார்.

1970ஆம் ஆண்டு ஜனசங் கட்சியின் சார்பில் நாட்டின்டெல்லியில் இருந்து  ராஜ்யசபைக்கு நியமிக்கப்பட்டார். 1973ஆம் ஆண்டு ஜனசங் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் ஒரு முறை குஜராத் மாநிலத்தின் சார்பில் ராஜ்யசபை உறுப்பினராக தேர்வானார். இதனிடையில் இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலையின் போது சிறைவாசம் அனுபவித்தார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய் தலைமையில் அரசு அமைத்தது. அந்த அரசில் செய்தி ஒளிபரப்புதுறையின் அமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் இரண்டரை ஆண்டு காலத்தில் ஜனதா கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது. பழைய ஜனசங்கம் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய வடிவம் கொண்டது. மத்தியப் பிரதேசத்தின் சார்பாக இரண்டு முறை ராஜ்யசபை உறுப்பினராக அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாரதிய ஜனதா கட்சி தனது முதல் பொதுத்தேர்தலை 1984ஆம் ஆண்டு எதிர்கொண்டது. இந்திராவின் படுகொலையை அடுத்து நடந்த தேர்தலில் கட்சி இரண்டே இரண்டு இடங்களில்தான் வெற்றிபெற்றது. அதில் இருந்து இன்று பெரும்பான்மை பலத்தோடு மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சிப் பொறுப்பை பாஜக வகிக்கிறது என்றால் அதன் பெருமை கட்சியின் பீஷ்மர் அத்வானியையே சாரும்.

அடுத்தடுத்த தேர்தல்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சியை வெற்றி பெற வைத்து 1996ஆம் ஆண்டு தேர்தல் முடிவுக்குப் பின்னர் பாஜக முதல் முறையாக மத்தியில் அரசு அமைத்தது. வாஜ்பாய் தலைமையில் அமைந்த அந்த ஆட்சியில் அத்வானி உள்துறை அமைச்சராகப் பதவியேற்றார். பதின்மூன்று நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் வாஜ்பாய் ஆட்சியை விட்டு விலகினார். இரண்டாண்டு காலம் கூட்டணி ஆட்சி என்று நாடு தடுமாறியது. 1998ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தது. கூட்டணியில் இருந்த ஜெயலலிதா தனது ஆதரவை விலக்கிக்கொள்ள மீண்டும் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் அதனைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் பாஜக மீண்டும் அரியணை ஏறியது. முதல்முறையாக ஐந்தாண்டுகள் ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சியைச் சாராத பிரதமர் என்ற பெருமையை வாஜ்பாய் பெற்றார். கட்சியில் வாஜ்பாய் அவர்களுக்கு அடுத்த நிலையில் அத்வானி விளங்கினார்.

ஆனாலும் 2004 மற்றும் 2009 ஆகிய தேர்தல்களில் பாஜக ஆட்சி அமைக்கும் அளவிற்கான இடங்களைப் பெற முடியாமல் போனது. தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பாஜக இளைய தலைமுறை தலைவர்களை முன்னெடுக்கத் தொடங்கியது. அத்வானி வழிகாட்டும் குழுவின் உறுப்பினராக மாறினார்.

தனது நீண்ட நெடிய அரசியல் வாழ்வில் பாஜகவிற்க்காக இடையறாது உழைத்த அத்வானி அவர்களின் சேவைக்கு ஒரே இந்தியா தளம் தலைவணங்குகிறது. இன்னும் நீண்ட ஆயுளோடு அத்வானி இளம் தலைவர்களையே சரியான முறையில் வழிநடத்த ஆண்டவன் அருளட்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறது. 

வியாழன், 7 நவம்பர், 2019

குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா - நவம்பர் 7

சிறுகுழந்தைகளுக்கு மொழியை அறிமுகம் செய்ய இசையோடு இணைந்த பாடல்கள், அதுவும் எளிமையான சிறிய வார்த்தைகளால் உருவான பாடல்கள்தான் சரியான வழியாக இருக்கமுடியும். அப்படி அற்புதமான பாடல்களை, அதுவும் நல்ல கருத்துக்களை, நற்பண்புகளை இளமையிலேயே குழந்தைகள் மனதில் பதிய வைக்கும் பாடல்களை எழுதிய அழ வள்ளியப்பாவின் பிறந்ததினம் இன்று



புதுக்கோட்டை மாவட்டத்தில் ராயவரத்தில் நகரத்தார் சமுதாயத்தைச் சார்ந்த அழகப்ப செட்டியார் - உமையாள் ஆச்சி தம்பதியரின் மகனாக 1922ஆம் பிறந்தவர் வள்ளியப்பன். ராயவரத்தில் உள்ள எஸ் கே டி காந்தி துவக்கப்பள்ளியிலும் பின்னர் கடியபட்டி பூமீஸ்வரஸ்வாமி உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.
உயர்நிலைப் படிப்பை முடித்தபின் வாழ்வாதாரம் தேடி சென்னைக்கு வந்தார் கவிஞர்.

தனது பதினெட்டாம் வயதில் "சக்தி" என்ற பத்திரிகையில் பணிக்குச் சேர்ந்தார். சிறுது காலத்தில் இந்தியன் வங்கியில் எழுத்தாளராக தன்னை இணைத்துக்கொண்டார். வங்கிப் பணியில் இருந்த காலத்திலேயே பல்வேறு கதைகளையும் பாடல்களையும் எழுதினார். வள்ளியப்பா ஏறத்தாழ இரண்டாயிரம் பாடல்களையும் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். கோகுலம் என்ற சிறுவர் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

நமது நதிகள் : தென்னாட்டு நதிகள் என்ற தலைப்பில் பல்வேறு நதிகளைப் பற்றி வள்ளியப்பா எழுதிய நூலை தேசிய புத்தக டிரஸ்ட் பதினான்கு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு உள்ளது. பாட்டிலே காந்தி கதை என்று சிறு குழந்தைகளுக்கு காந்தியின் வரலாற்றை அறிமுகம் செய்து வைத்த இவரது புத்தகம் மிகவும் புகழ்வாய்ந்த ஓன்று. உலகம் எங்கும் கொண்டாடப்படும் ஈசாப் நீதிக்கதைகளை எளிய பாடல்கள் மூலம் வள்ளியப்பா எழுதினார்.

ரோஜாச் செடி, உமாவின் பூனை, அம்மாவும் அத்தையும், மணிக்கு மணி , மலரும் உள்ளம், கதை சொன்னவர் கதை, மூன்று பரிசுகள், எங்கள் கதையைக் கேளுங்கள், பர்மா ரமணி, எங்கள் பாட்டி, மிருகங்களுடன் மூன்று மணி, நல்ல நண்பர்கள், பாட்டிலே காந்தி கதை, குதிரைச் சவாரி, நேரு தந்த பொம்மை, நீலா மாலா, பாடிப் பணிவோம், வாழ்க்கை வினோதம், சின்னஞ்சிறு வயதில், பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் ஆகிய படைப்புகள் என்றும் புகழ்பெற்றவை. 1944-ல் ‘மலரும் உள்ளம்' எனும் அவரது முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது. 1961-ல் அவர் வெளியிட்ட ‘சிரிக்கும் பூக்கள்' எனும் கவிதைத் தொகுப்பு, ‘குழந்தைக் கவிஞர்’ எனும் பட்டத்தை அவருக்குப் பெற்றுத்தந்தது.

குழந்தைகளுக்காக எழுதிவரும் எழுத்தாளர்களுக்கெல்லாம் தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருந்ததோடு, அவர்களை ஊக்குவிப்பவராகவும் இருந்த வள்ளியப்பா, தமிழில் குழந்தை இலக்கியம் தழைக்கவும், எழுதுபவர்கள் பெருகவும் 1950-ல் 'குழந்தை எழுத்தாளர்கள் சங்கம்' என்ற அமைப்பை நிறுவினார். அதன் பல்வேறு பொறுப்புகளிலும் திறம்பட செயல்பட்டார்.

பாரதியாரின் 81வது பிறந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாட தமிழக் அரசு நியமித்த குழுவில் இடம்பெற்றார். 1979ல் "வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்" என்ற தலைப்பில் கல்கி நினைவு நாள் விழாவில் பேருரை நிகழ்த்தியது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது! மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு அரசின் விழாக்குழுவின் சார்பில் "குழந்தை இலக்கியத்தில் தமிழ்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி மாநாட்டுப்பார்வையாளர்களைக் கவர்ந்தார்!

"பிள்ளை கவியரசு" மற்றும் "மழலை கவிச்செம்மல்" போன்ற பட்டங்கள் திரு.அழ.வள்ளியப்பா அவர்களைத் தேடி வந்தது! 1982ல் "தமிழ் பேரவைச் செம்மல்" என்ற பட்டத்தை மதுரை காமராஜ் பலகலைக்கழகம் வழங்கிச் சிறப்பித்தது.  குழந்தைப் பாடல்களைப் படைப்பதோடு நின்று விடாமல், குழந்தை எழுத்தாளர்கள் பலரை உருவாக்கிய பெருமையும் வள்ளியப்பாவுக்கு உண்டு.மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் வள்ளியப்பா பற்றி இப்படிக் குறிப்பிட்டார்:“தமிழில் நான்கு வகையான பாக்கள் உண்டு என்பது தெரியும். ஆனால், என்னைப் பொறுத்த வரை பா வகைகள் ஐந்து. அவை ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, வள்ளியப்பா!” ''வள்ளியப்பா ஒரு புள்ளியப்பா - அவர்வரையும் பாக்கள் வெள்ளியப்பா!வளரும் பிள்ளைக்குப் பள்ளியப்பா - இளைஞர் வருங்காலத்திற்குத் தங்கமப்பா!”என்பது கொத்தமங்கலம் சுப்புவின்புகழாரம்.

''அணிலே, அணிலே, ஓடிவா!அழகு அணிலே ஓடிவா!கொய்யா மரம் ஏறிவா!குண்டுப்பழம் கொண்டு வா!பாதிப் பழம் உன்னிடம்பாதிப் பழம் என்னிடம்கூடிக்கூடி இருவரும்கொறித்துக் கொறித்துத் தின்னலாம்”  -
எளிய, இனிய, தெளிவான இப் பாடல் வாயிலாகப் பகிர்ந்து உண்ணும் நற்பண்பினை குழந்தைகளின் பிஞ்சு மனங்களில் பதிய வைத்துவிடுகின்றார் வள்ளியப்பா.

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம்அழகான மாம்பழம் அல்வா போல் மாம்பழம்தங்க நிற மாம்பழம் உங்களுக்கும் வேண்டுமா?இங்கு ஓடி வாருங்கள்;பங்கு போட்டுத் தின்னலாம்.மல்கோவா மாம்பழம் போலவே இனித்திடும் வள்ளியப்பாவின் சுவையான குழந்தைப் பாடல் இது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்ட வள்ளியப்பா, 'குழந்தை இலக்கியத்தைப் பல்கலைக்கழக அளவில் பாடமாக வைக்க வேண்டும்' என்று வலியுறுத்திப் பேசி முடித்த நிலையில் மயங்கிச் சாய்ந்தார். 1989 மார்ச் 16-ல் கவிஞரின் உயிர் பிரிந்தது! 

செவ்வாய், 5 நவம்பர், 2019

தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் - நவம்பர் 5

பாரத நாட்டின் மறுமலர்ச்சி அலை என்பது முதலில் வங்காளத்தில்தான் தொடங்கியது. பெரும் அறிவாளிகளும், கவிஞர்களும், சிந்தனையாளர்களும், வழக்கறிஞர்களும்,  தத்துவ ஞானிகளும் விடுதலைப் போராட்ட வீரர்களும் என்று அலையலையாக தோன்றி பாரதத்தின் பாதையை வங்காளிகளே சமைத்தனர். வங்காளத்தில் தோன்றிய விடுதலைப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர் சித்தரஞ்சன் தாஸ். தேசத்தின் தேச மக்களின் நண்பர் என்ற பொருள்படும் தேசபந்து என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர் அவர்.


இன்றய பங்களாதேஷ் நாட்டில் உள்ள டாக்கா நகரில் பூபன் மோகன் தாஸ் - நிஷாரிணி தேவி தம்பதியரின் 1870ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் நாள் பிறந்தவர் சித்தரஞ்சன் தாஸ். தனது சகோதர்கள் அடியொற்றி சித்தரஞ்சன் தாஸும் வழக்கறிஞர் பட்டம் பெறுவதற்காக லண்டன் மாநகரம் சென்றார். அன்றய லண்டன் நகரம் பாரத நாட்டின் தேசபக்தர்களை உருவாக்கும் இடமாகவும் இருந்தது. லண்டன் நகரில் அரவிந்த கோஷ், சரோஜினி நாயுடு, அதுல் பிரசாத் சென் ஆகிய தேசபக்தர்கள் நட்பு சித்தரஞ்சன் தாஸுக்கு ஏற்பட்டது.

வழக்கறிஞர் பட்டம் பெற்று நாடு திரும்பிய சித்தரஞ்சன் தாஸ் வங்காளத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞராக உருவானார். நீதிபதி கிங்ஸ்போர்ட என்பவரை கொலை செய்ய நடந்த முயற்சியை விசாரிக்கும் அலிப்பூர் சதி வழக்கில் அரவிந்த கோஷுக்கு வாதாடி வெற்றி பெற்று அவரை சிறைத்தண்டனையில் இருந்து தாஸ் விடுவித்தார். அன்றய வங்காளத்தில் இயங்கிக்கொண்டு இருந்த அனுசீலன் சமிதியின் செயல்பாடுகளுக்கு சித்தரஞ்சன் தாஸ் மிகவும் உதவிகரமாக இருந்தார்.

அதனைத் தொடர்ந்து காந்தியின் வழிமுறைகளை ஏற்றுக்கொண்ட சித்தரஞ்சன் தாஸ் அன்னியத் துணி பகிஷ்கரிப்பு, கதர் துணியை ஆதரித்தல், ஒத்துழையாமை இயக்கம் என்று போராடத் தொடங்கினார். சட்டமன்றங்களில் நுழைந்து அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும் என்ற கருத்துக்கு எதிராக காந்தி இருந்ததால் மோதிலால் நேருவுடன் இணைந்து ஸ்வராஜ்யா கட்சியை தாஸ் ஆரம்பித்தார். கொல்கத்தா மாநகராட்சி அமைக்கப்பட்ட போது, தேர்தலில் போட்டியிட்டு அதன் முதல் மேயராகப் பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் சித்தரஞ்சன் தாஸின் சீடராகவும், உதவியாளராகவும் இருந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்.

தாஸின் மனைவி பஸந்தி தேவி  அம்மையார். தன்னளவிலேயே அவரும் முக்கியமான சுதந்திரப் போராட்ட வீராங்கனையாக விளங்கினார். 1921ஆம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு பஸந்தி தேவியும் சித்தரஞ்சன் தாஸின் சகோதரி ஊர்மிளா தேவியும் கைதானார்கள். பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு குறிப்பாக சுபாஷ் சந்திரபோஸுக்கு அவர் காட்டிய பாசம் பலர் பஸந்தி தேவியை தங்கள் தாயாகவே எண்ண வைத்தது.

சித்தரஞ்சன் தாஸ் மிகச் சிறந்த கவிஞரும் கூட. அவரது கவிதைகள் சாகர் சங்கீத் என்ற பெயரில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டு உள்ளது. அரவிந்தர் வங்காள மொழியில் அமைந்த இந்த கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

சுதந்திரம் என்ற பெயரில் நாளிதழையும் நாராயணா என்ற பெயரில் நாளிதழ் ஒன்றையும் சித்தரஞ்சன் தாஸ் நடத்திவந்தார். பிபின் சந்திர பால், சரத்சந்திர சட்டோபாத்யாய, ஹரிப்ரசாத் சாஸ்திரி உள்ளிட்ட வங்காளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் இந்த பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதி வந்தார்கள்.

தொடர்ச்சியான செயல்பாட்டால் சித்தரஞ்சன் தாஸின் உடல்நலம் சீர்கெட்டது. ஓய்வெடுக்கவும் உடல்நலத்தைப் பேணவும் அவரை மலைப்பிரதேசத்தில் சிறுது காலம் இருக்கச் சொல்லி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். சித்தரஞ்சன் தாஸ் டார்ஜலிங் நகருக்குச் சென்றார். 1925ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் நாள் டார்ஜிலிங் நகரில் தாஸ் மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் கொல்கத்தா நகரில் நடைபெற்றது. சித்தரஞ்சன் தாஸின் இறுதி ஊர்வலம் காந்தியின் தலைமையில் நடந்தது.

தனது சொத்துக்களை எல்லாம் நாட்டு மக்களுக்கு எழுதி வைத்திருந்தார் சித்தரஞ்சன் தாஸ். அவர் அளித்த நிலத்தில் இன்று சித்தரஞ்சன் தாஸ் புற்றுநோய் மருத்துவமனை இயங்கி வருகிறது.
ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளே வாழ்ந்தாலும் அதற்குள் மகத்தான சேவைகளை புரிந்த தலைவரை ஒரே இந்தியா தளம் நன்றியோடு நினைவு கொள்கிறது. 

திங்கள், 4 நவம்பர், 2019

காந்தியின் ஐந்தாவது மகன் - ஜம்னாலால் பஜாஜ் நவம்பர் 4



தாளாற்றித் தந்த  பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு - குறள் 212.

அறத்தின் வழிநின்று ஒருவன் ஈட்டிய பொருள் எல்லாம் தகுதியானவர்களுக்கு, தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்கே ஆகும். சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் பிரதமர் மோதி சுட்டிக் காட்டிய குறள் இது. இதன்படி வாழ்ந்த பெருமகனார் தொழிலதிபர் ஜம்னாலால் பஜாஜ் அவர்கள்.

கனிராம் பிரடிபாய் தம்பதியரின் மூன்றாவது மகனாக ராஜஸ்தான் மாநிலத்தில் காசி கா பாஸ் என்ற கிராமத்தில் பிறந்தவர் ஜம்னாலால். இயல்பாகவே தொழில்முனைவோர்களான மார்வாடி வகுப்பைச் சேர்ந்தவர் இவர். வசதியான குடும்பத்தைச் சாராத ஜம்னாலாலை பஷிராஜ் - சாதிபாய் தம்பதியினர் தங்கள் வாரிசாக தத்து எடுத்துக் கொண்டனர். ராஜஸ்தானைச் சார்ந்த இவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் வார்தாவில் வசித்து வந்தனர்.

சேத் பஷிராஜ் மேற்பார்வையில் ஜம்னாலால் வியாபார நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். சரியான நேரத்தில் சரியான விலையில் பொருள்களை வாங்கவும், அதனை லாபத்தில் விற்கவும், அதற்கான கணக்குகளை பராமரிக்கவும் திறமைசாலியாக விளங்கினார். ஜம்னாலால் தொடங்கிய தொழில்கள்தான் இன்று பஜாஜ் குழுமமாக பரந்து விரிந்து நிற்கிறது.

பொதுவாகவே வியாபாரிகளும் தொழிலதிபர்களும் கூடியவரை அரசைப் பகைத்துக் கொள்ளாமலே இருப்பார்கள். ஜம்னாலாலும் அப்படிதான் இருந்தார். முதல் உலகப் போரில் அவர் ஆங்கில அரசுக்கு அளித்த ஒத்துழைப்பை அங்கீகாரம் செய்யும் விதமாக அரசு அவரை கவுரவ நீதிபதியாக நியமித்தது. ஜம்னாலாலுக்கு ராவ் பகதூர் என்ற பட்டத்தையும் அளித்தது.

திலகர், கோகுலே இவர்களின் சகாப்தம் முடிந்து காந்தியின் காலம் தொடங்கிய நேரம் அது. ஜம்னாலால் காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். அஹிம்சை, தாழ்த்தப்பட்ட சகோதர்களின் நல்வாழ்வு, எளிய வாழ்க்கை என்ற கொள்கைகளை அந்த தொழிலதிபர் பேசவில்லை, செயல்படுத்தத் தொடங்கினார். காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் தன் குடும்பத்தினரோடு வாழ ஆரம்பித்தார்.

காந்தியின் நெருக்கம் ஜம்னாலாலை ஆங்கில அரசு அளித்த ராவ் பகதூர் பட்டத்தையும் கௌரவ நீதிபதி பதவியையும் துறக்கத் தூண்டியது. அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம், கொடி சத்தியாகிரக போராட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு ஜம்னாலால் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

காந்தி சேவா சங்கத்தின் தலைவராகவும், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு  உறுப்பினராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக பல்லாண்டு பொறுப்பு வகித்தார்.

தேசத்தின் புனர்நிர்மாணப் பணி என்பது ஹரிஜன சகோதர்களை விட்டு விட்டு நடக்க முடியாது என்பதை உளப்பூர்வமாக நம்பிய ஜம்னாலால் தங்கள் குடும்ப கோவிலை ஹரிஜன மக்களின் தரிசனத்திற்காக திறந்து விட்டார். பல்வேறு கோவில்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவரின் தொடர்ந்த முயற்சியால் திறக்கப்பட்டது. பல்வேறு குளங்களிலும், கிணறுகளிலும் ஹரிஜன சகோதர்கள் பயன்பாட்டுக்கு இருந்த தடை நீங்கியது.

தென்னக மக்களும் ஹிந்தி மொழியைப் படிக்க வேண்டும் என்பதற்காக தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சாரக் சபா என்ற அமைப்பை ஜம்னாலால் நிறுவினார். கதர் துணி உற்பத்தி, கைத்தொழில் வழியாக கிராம முன்னேற்றம் ஆகிய துறைகளில் ஜம்னாலால் தொடர்ந்து இயங்கி வந்தார்.

தொழிலில் தனது பங்கு முழுவதையும் ஆதாரமாகக் கொண்டு ஜம்னாலால் பஜாஜ் தொண்டு நிறுவனம் என்ற அமைப்பை நிறுவினார். இந்த நிறுவனத்தின் சட்ட திட்டங்களை வழக்கறிஞர் என்ற முறையில் காந்திதான் எழுதினார் என்றால் காந்திக்கு ஜம்னாலால் மீதான அன்பும் மரியாதையும் புலனாகிறதுதானே.

தனது நான்கு குழந்தைகளோடு ஜம்னாலால் பஜாஜை காந்தி தனது ஐந்தாவது மகனாகவே நடத்திவந்தார். "நான் தர்மகர்த்தா முறையில் பாரத தொழிலதிபர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று எழுதும் போதெல்லாம் என் கண்ணில் நிழலாடுவது இந்த தொழில்துறை இளவரசர்தான்" என்று ஜம்னாலாலைப் புகழ்ந்து அவரின் இறப்பிற்குப் பின்னர் காந்தி எழுதி உள்ளார்.

தனது ஐம்பத்தி ஏழாவது வயதில் 1942ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் நாள் ஜம்னாலால் பஜாஜ் காலமானார்.

ஜம்னாலால் பஜாஜ் தொடங்கிய நிறுவனங்கள் இன்று பல்வேறு தொழில்களில் காலூன்றி பஜாஜ் குழுமமாக உருவாகி உள்ளது. 

ஞாயிறு, 3 நவம்பர், 2019

ஹிந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் பிரிதிவிராஜ் கபூர் பிறந்தநாள் - நவம்பர் 3.



இசையும் நாடகமும் பாரத நாகரீகத்தில் பிரிக்க முடியாத  ஒரு அங்கம். அதனால்தான் நாடகத்தின் நீட்சியான சினிமாவும் மக்களின் எண்ணத்தோடு ஒட்டியே உள்ளது. பாரத திரையுலக வரலாற்றில் குறிப்பாக ஹிந்தி திரையுலகத்தில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக விளங்கிய பிரிதிவிராஜ் கபூரின் பிறந்ததினம் இன்று. இன்றய பாகிஸ்தான் பகுதியில் 1906ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் நாள் பிறந்தவர் பிரிதிவிராஜ். அவர் தந்தை அன்றய ஆங்கில காவல்துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர்.

சிறுவயதில் இருந்தே நாடகங்களில் ஈடுபாடு கொண்டிருந்த பிரிதிவிராஜ், தான் படித்துக்கொண்டு இருந்த சட்டப் படிப்பை பாதியில் கைவிட்டு சினிமாவில் நடிக்க மும்பைக்கு சென்றார். 1929ஆம் ஆண்டு தயாரான சினிமா கேர்ள் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அது ஒரு பேசாத ஊமைப் படம். இந்தியாவில் தயாரான முதல் பேசும் படமான ஆலம் ஆரா என்ற படத்தில் இவர் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். 1941ஆம் ஆண்டு வெளியான சிக்கந்தர் என்ற படத்தில் அலெக்சாண்டர் வேடத்தில் பிரிதிவிராஜ் நடித்தார். மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற அந்தப் படம்தான் பிரிதிவிராஜ் கபூரை ஹிந்தி திரைப்பட உலகத்தின் முன்னணி கதாநாயகனாக நிலைநிறுத்தியது.

அன்றய காலத்தில் திரைப்பட நடிகர்கள் நாடகங்களிலும் நடிப்பது வழக்கமாக இருந்தது. பல்வேறு திரைப்படங்களிலும் நாடகங்களிலும்  நடித்துக்கொண்டு இருந்த பிரிதிவிராஜ் பிரிதிவி தியேட்டர்ஸ் என்ற நாடகக்குழுவை தொடங்கினார். நாடு சுதந்திரம் அடையும் காலம் வெகுவிரைவில் இருந்தது, ஆனால் மதத்தின் பெயரால் நாடு பிளவுபடும் என்பதும் உறுதியான காலம் அது. நாட்டை எதிர்நோக்கும் மிகப் பெரும் பிரச்சனையான பிரிவினைதான் பிரிதிவிராஜ் கபூரின் நாடகங்களின் மையக் கருத்தாக இருந்தது. தீவார், பதான், கதர், ஆஹுதி என்று தொடர்ந்து நான்கு நாடகங்கள் நாடு பிளவுபட்டால் அதனால் விளையும் இன்னல்களைப் பற்றி கபூரின் நாடகக்குழு அரங்கேற்றியது. திரைத்துறை நாடகத்தை விழுங்கியது. நாடகங்களுக்கான ஆதரவு குறைய, பிரிதிவிராஜ் புது நாடங்களை மேடையேற்றுவது இல்லாமலானது. ஏறத்தாழ பதினைந்தாண்டு காலத்தில் பிரிதிவி தியேட்டர்ஸ் 2,600 முறை பல்வேறு நாடகங்களை நாட்டின் பல்வேறு நகரங்களில் நடத்தியது.

பிரிதிவிராஜ் கபூரின் மகன்களான ராஜ்கபூர், ஷம்மிகபூர் மற்றும் சஷிகபூர் ஆகியோரும் திரையுலகின் முக்கிய நடிகர்களாக விளங்கினார்கள். ராஜ்கபூர் தயாரித்த ஆவாரா என்ற திரைப்படத்திலும், மகன் ராஜ்கபூர் பேரன் ரன்திர்கபூர்  ஆகியோருடன் இணைந்து கல் ஆஜ் அவுர் கல் எந்த படத்திலும் பிரிதிவிராஜ்கபூர் நடித்துள்ளார். மூன்று தலைமுறைகள் இணைந்து நடித்த மிகச் சில படங்களில் இதுவும் ஓன்று.

முகலாய இளவரன் சலீமுக்கும் நாட்டிய தாரகை அனார்கலிக்கும் இடையே உருவான காதலை பேசிய படமான முகல் இ ஆசம் என்ற படத்தில் பிரிதிவிராஜ் கபூர் முகலாயப் அரசர் அக்பரின் வேடத்தில் நடித்தார். மிகப் பெரும் பொருள்செலவில் உருவான இந்தப் படம், பெரும் வெற்றியைப் பெற்றது. இந்திய திரைப்பட வரலாற்றில் குறிப்பிடத் தக்க படங்களில் ஒன்றாக இந்தப்படம் விளங்குகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரிதிவிராஜ் கபூர் 1972ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

இவரின் கலையுலக சேவையைப் பாராட்டி அரசு 1969ஆம் ஆண்டு பத்மபூஷன் பட்டத்தை அளித்தது. திரையுலகத்தில் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது மரணத்திற்குப் பிறகு இவருக்கு வழங்கப்பட்டது.