புதன், 3 டிசம்பர், 2025

டிசம்பர் 3 - தொழிலதிபர் நவ்ரோஜி கோத்ரேஜ் பிறந்தநாள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பார்சி இனத்தைச் சார்ந்த இரண்டு சகோதர்கள் பூட்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் பட்டம் பெற்ற அர்தேஷிர் கோத்ரேஜும் அவர் சகோதரர் பிரோஷா கோத்ரேஜும் 1897ஆம் ஆண்டு தொடங்கிய அந்த முயற்சி இன்று பூட்டுகள், இரும்புப் பெட்டிகள், சோப் தயாரிப்பு, கால்நடைகளுக்கான உணவுவகைகள், விண்வெளி ஆராய்ச்சிக்கான உபகரணங்கள், நிறுவனங்களுக்கான மேசை, நாற்காலி என்று பல்வேறு துறைகளில் தங்கள் தரத்தினால் தனி இடத்தைப் பிடித்துள்ள கோத்ரேஜ் குழுமமாக மாறி உள்ளது. கோத்ரேஜ் குழுமத்தின் இரண்டாம் தலைமுறை வாரிசான நவ்ரோஜி கோத்ரேஜ் என்று அறியப்பட்ட நேவல் பிரோஷா கோத்ரேஜ் அவர்களின் பிறந்தநாள் இன்று. 

பிரோஷா கோத்ரேஜின் இளைய மகனாக 1916ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் நாள் பிறந்தவர் நவ்ரோஜி கோத்ரெஜ். தனது மூன்றாம் வயதிலேயே தாயாரை இழந்த நவ்ரோஜி மற்றும் அவர் சகோதர்களை கராச்சி நகரில் வசித்து வந்த அவரது பாட்டி பராமரித்து வளர்த்து வந்தார். சிறுவயதிலிருந்தே இயந்திரங்கள் மீது ஆர்வம் கொண்டிருந்த நவ்ரோஜி, பள்ளிப் படிப்பை முடித்த உடனேயே தந்தையின் தொழில்சாலைக்கு தொழில் கற்க வந்துவிட்டார். வருங்கால முதலாளியாக குளிர்பதன அறையில் அமர்ந்து கொண்டிருக்காமல், தொழிலாளிகளில் ஒருவராக பல்வேறு பொருள்களைத் தயாரிக்கும் தளத்தில் அதிகநேரம் செலவிட்டதால் இயல்பாகவே நவ்ரோஜிக்கு உழைப்பின் மரியாதை தெரிந்ததோடு, பணியாளர்களை நிறுவனத்தின் வளர்ச்சியின் பங்குதாரர்களாகப் பார்க்கும் பக்குவமும் கைவசமானது. 

பல்வேறு இயந்திரங்களோடும் கருவிகளோடும் தன் மனதைப் பறிகொடுத்த நவ்ரோஜி, சுதேசித் தயாரிப்பில் தட்டச்சு இயந்திரத்தை ( Manual Typewriter ) தயாரிக்க முடிவு செய்தார். அன்றய காலகட்டத்தில் ஆசிய கண்டத்திலேயே எந்த நாட்டிலும் தட்டச்சு இயந்திரம் தயாரிக்கப்படவில்லை. ஆயிரத்திற்கும் அதிகமான உதிரிபாகங்களை இணைத்து தட்டச்சு இயந்திரத்தைத் தயாரிப்பது எனப்து மிகச் சவாலான வேலை. அதனை வெற்றிகரமாக செயலாக்கிக் காட்டியவர் நவ்ரோஜி கோத்ரேஜ். 1955ஆம் ஆண்டு ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில்  பாரதம் சோசலிஸ பாதையில் செல்லும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த மாநாட்டில்தான் முதல்முதலாக பாரதத்திலேயே தயாரான கோத்ரெஜ் தட்டச்சு இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை நேரு பார்வையிடும் படத்தை  இன்றும் பல்வேறு கோத்ரெஜ் அலுவலங்கங்களில் நாம் காணலாம். 


1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை கோத்ரெஜ் நிறுவனம் தயாரித்து வழங்கியது. பின்னர் முதல் இந்திய குளிர்சாதனப் பெட்டியை ( Refrigerator ) 1958ஆம் ஆண்டு கோத்ரெஜ் உருவாக்கியது. இதற்கெல்லாம் நவ்ரோஜியின் இயந்திரங்கள் மீதான புரிதல் பெரும் பங்காற்றியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்காக பல்வேறு துணைக்கருவிகளையும் 1976ஆம் ஆண்டு முதல் கோத்ரெஜ் தயாரித்து வருகிறது. இதற்கான தனிப் பிரிவையே நவ்ரோஜி உருவாக்கினார். 

தொழில் செய்வது, அதையும் சிறப்பாக, லாபகரமாகச் செய்வது என்பது ஓன்று. ஆனால் அதனை தர்மகர்த்தா முறையில் செய்வது என்பது வேறொன்று. கோத்ரெஜ் நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்கு மூலதனம் கோத்ரெஜ் குழுமத்தின் அறக்கட்டளைகள் வசம் உள்ளன. ஆண்டுதோறும் நிறுவனம் ஈட்டும் லாபத்தில் இருந்து பல்வேறு சேவைகளை அவை செய்து வருகின்றன. மக்கள்தொகை கட்டுப்பாடு, இயற்கை வளங்களை காப்பாற்றுதல் ஆகியவை அறக்கட்டளையின் முக்கியப் பணிகளாக உள்ளன. தங்களுக்கு சொந்தமான விக்ரோலி பகுதியில் உள்ள சதுப்பு நிலக் காடுகளை அழிக்காமல் இன்றும் கோத்ரேஜ் நிர்வாணம் பராமரித்து வருகிறது. அநேகமாக இன்று மும்பை நகரின் நுரையீரலாக இந்தக் காடுகள் செயல்பட்டு வருகின்றன. 

சுத்தமும் சுகாதாரமும் வசதிகளும் கூடிய பணியாளர் குடியிருப்பை நவ்ரோஜி உருவாக்கினார். அவரின் தந்தை பெயரில் பிரோஷாநகர் என்ற பெயரில் அது  உருவானது.தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க உதயச்சால் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று பெருவாரியாகப் பேசப்படும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு, தொழிலாளர் மனித வள மேம்பாடு என்ற சொற்கள் புழக்கத்திற்கு வருவதற்கு முன்னமே அவற்றை செயலாகிக் காட்டியவர் நவ்ரோஜி கோத்ரேஜ் அவர்கள். 

தொழில்துறை வளர்ச்சிக்கு நவ்ரோஜியின் பங்களிப்பை மரியாதை செலுத்தும் விதமாக அரசு அவருக்கு 1976ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கிச் சிறப்பித்தது. 

பாரத நாட்டின் தொழில் வளர்ச்சிக்கான நவ்ரோஜி பிரோஷா கோத்ரேஜின் பங்களிப்பை ஒரே இந்தியா தளம் நன்றியோடு நினைவு கொள்கிறது. 

செவ்வாய், 2 டிசம்பர், 2025

டிசம்பர் 2 - அம்புலிமாமாவின் மாமா - B நாகி ரெட்டி


இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளுக்கு முன்னர் தங்கள் பாலியத்தை அனுபவித்தவர்களுக்குத் தெரியும் அது ஒரு சுகமான காலம் என்று. தொலைபேசியும் இணையத் தொடர்போடு கூடிய கைபேசியும் இல்லாத காலம் அது. குழந்தைகள் பிறந்த உடனேயே படிக்கவேண்டும், நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கவேண்டும், கணினித் துறையில் வேலைக்குச் சேரவேண்டும், உடனே வெளிநாடு செல்லவேண்டும் என்ற அழுத்தம் இல்லாமல் இருந்த காலம். வீடுகளில் தாத்தாவும் பாட்டியும், மாதத்தில் பாதி நாட்கள் தங்கி இருக்கும் உறவினர்களும் என்று பேசவும் பகிரவும் ஆள்கள் எப்போதும் இருந்த காலம். ஆங், அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்தினபாலா,  லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் என்று பாடத்தைத் தாண்டியும் படிக்க புத்தகங்கள் இருந்த காலம் அது. சிறுவர்களுக்கான நூல்களில் முன்னோடியும், அறுபதாண்டுகளுக்கு மேலாக ஆங்கிலத்தோடு சேர்த்து பதின்மூன்று மொழிகளில் வெளியான அம்புலிமாமா என்ற பத்திரிகையை நடத்தி வந்த திரு நாகி ரெட்டியின் பிறந்தநாள் இன்று.

இன்றய ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தைச் சார்ந்தவர் திரு நாகி ரெட்டி அவர்கள். இவரின் தந்தை சென்னையில் தங்கி இருந்து வெளிநாடுகளுக்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்துகொண்டு இருந்தார். நாகி ரெட்டியின் மூத்த சகோதரர் நரசிம்ம ரெட்டி. திரைப்படத் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருந்த நரசிம்ம ரெட்டியைப் பின்தொடர்ந்து நாகி ரெட்டியும் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடலானார். நாகி ரெட்டி தனது நண்பரான சக்ரபாணி என்பவரோடு இணைந்து தமிழிலும், தெலுங்கிலும் பல்வேறு வெற்றிப்படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.

பாதாள பைரவி, மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற வெற்றிப்படங்களை நாகி ரெட்டி தயாரித்து வெளியிட்டார். சென்னையின் முக்கியமான திரைப்படத் தளமாக விளங்கிய விஜயா வாகினி ஸ்டுடியோவும் இந்த இரட்டையர்களுக்கு சொந்தமானதுதான். கன்னடம், மற்றும் ஹிந்தி மொழியிலும் இந்த நிறுவனம் திரைப்படங்களைத் தயாரித்து உள்ளது. ஸ்டுடியோவில் இருந்து திரைப்படங்கள் வெளியேறி திறந்தவெளிகளில் படமாக்கப்பட்டன. நான்கு தென்மாநிலப் படங்களும் சென்னையில் தயாரித்து குறைந்து அந்தந்த மாநிலங்களில் தயாரிக்கும் நிலை உருவானது. நாகிரெட்டி சென்னை வடபழனியில் நடைபெற்று வந்த தனது ஸ்டுடியோவை மருத்துவமனையாக மாற்றினார். 

ஆனால் இது அனைத்தையும் விட நாகி ரெட்டியின் மகத்தான பங்களிப்பு என்பது ஏறத்தாழ அறுபதாண்டு காலத்திற்கும் மேலாக சந்தமாமா என்ற சிறுவர் பத்திரிகையை பல மொழிகளிலும் நடத்தியதுதான். 1947ஆம் ஆண்டு ஜூலை மாதம் சாந்தாமாமா என்று தெலுங்கிலும் அம்புலிமாமா என்று தமிழிலும் ஒரே நேரத்தில் சிறார் பத்திரிகையை நாகி ரெட்டி தொடங்கினார். 


1949ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கன்னட மொழியில், 1949 ஆகஸ்ட் மாதம் ஹிந்தியில், 1952ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மராத்தி மற்றும் மலையாள மொழியில், 1954ஆம் ஆண்டு குஜராத்தி மொழியில், 1955ஆம் ஆண்டு ஆங்கிலத்தில், 1956ஆம் ஆண்டு ஒரிய மற்றும் சிந்தி மொழியில், 1972ஆம் ஆண்டு வங்காள மொழியில், 1975ஆம் ஆண்டு பஞ்சாபி மொழியில், 1976ஆம் ஆண்டு அஸ்ஸாமிய மொழியில், 1978ஆம் ஆண்டு சிங்கள மொழியில், 1984ஆம் ஆண்டு ஸமிஸ்க்ரித மொழியில், சந்தாலி மொழியில் 2004ஆம் ஆண்டு என்று பாரதத்தின் முக்கிய மொழிகளில் எல்லாவற்றிலும் இந்தப் பத்திரிகை வெளிவந்தது.

பாரத நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும் கதைகள், பல்வேறு மொழிகளில் உள்ள நீதிக்கதைகள் என்று பாரதத்தின் பாரம்பரியத்தை சிறுவர்களிடம் எடுத்துச் சென்றதில் சந்தமாமா பத்திரிகை பெரும் பங்காற்றியது.

இரண்டாயிரம் ஆண்டுக்குப் பிறகு நாகி ரெட்டியின் குடும்பத்தினர் பத்திரிகையின் பங்குகளை வேறு சிலரோடு பகிர்ந்து கொண்டார்கள். தொழிலாளர் பிரச்னை காரணமாக ஓராண்டு இந்தப் பத்திரிகை வெளிவராமல் இருந்தது. மீண்டும் வெளிவரத் தொடங்கிய சந்தமாமா பத்திரிகை இன்று வெளிவருவது இல்லை. ஆனாலும் அறுபதாண்டுகளாக கலாச்சாரத்தை சிறுவர்களுக்கு போதித்த ஒரு பெரும் பங்களிப்பு எல்லாக் காலத்திலும் திரு நாகி ரெட்டியை நம் மனதில் நீங்காத இடத்தில் வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

திரைத்துறையில் நாகி ரெட்டியின் பங்களிப்பை பல்வேறு மாநில அரசாங்கங்கள் அங்கீகரித்து பல்வேறு விருதுகளை வழங்கி உள்ளன. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, ஆந்திர அரசின் நந்தி விருது, கன்னட மொழியின் சிறந்த திரைப்படத்திற்கான விருது, பிலிம்பேர் விருதுகள் என்று பல விருதுகள் இவரை வந்தடைந்தன. அனைத்திலும் சிகரம் போல பாரத அரசு திரைதுறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை நாகி ரெட்டிக்கு 1986ஆம் ஆண்டு வழங்கியது.

எங்களின் இளமைப் பருவத்தை இனியதாக மாற்றிய திரு நாகி ரெட்டி அவர்களை இன்று நாங்கள் நன்றியோடு நினைவு கூறுகிறோம். 

திங்கள், 1 டிசம்பர், 2025

டிசம்பர் 1 - காகா காலேல்கர்பிறந்ததினம்

இந்த மனிதனை எந்த வரையறையில் சேர்க்க ? சுதந்திரப் போராட்ட வீரர், காந்தியின் சீடர், சமூக சீர்திருத்தவாதி, பத்திரிகையாளர், எழுத்தாளர் என்று பல்வேறு திசைகளில் ஒளிவீசும் ரத்தினமாகத் திகழ்ந்த தாத்தாத்ரேய பாலகிருஷ்ண காலேல்கர் என்ற காகா காலேல்கரின் பிறந்ததினம் இன்று.

மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் பிறந்து, பூனா பெர்கூசன் கல்லூரியில் தத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்று, பரோடா நகரில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி, சுதந்திர உணர்ச்சியை தூண்டும் இடமாக அந்த பள்ளி விளங்கியதால் ஆங்கில அரசு அந்த பள்ளியைத் தடை செய்த பிறகு பத்திரிகையாளராகப் பணியாற்றி, பின்னர் கால்நடையாகவே இமயமலை பகுதிகளில் சுத்தித் திரிந்து, ஆச்சாரிய கிருபளானியோடு தொடர்பு ஏற்பட்டு, அவரோடு பர்மா சென்று, பின்னர் காந்தியைக் கண்டு, அவரின் சீடராக மாறி, சபர்மதி ஆசிரமத்தில் தங்கி, பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று என்று அநேகமாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பலரின் வாழ்க்கை போலத்தான் இவரின் வாழ்வும் இருந்தது.

இவரின் கைத்தடியைத்தான் தண்டி யாத்திரியையின் போது காந்தி பயன்படுத்தினார். எனவே தான் காந்தியின் கைத்தடி என்று காலேல்கர் தன்னை அறிமுகம் செய்து கொள்வது உண்டு. காந்தியின் ஆணைக்கேற்ப ஹிந்தி மொழியை பரப்பும் செயலிலும் காலேல்கர் ஈடுபட்டு இருந்தார். சென்னையில் உள்ள தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சாரக சபாவின் முதல் பட்டமளிப்பு விழா இவரின் தலைமையில்தான் நடைபெற்றது. 1952 ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை இவர் பாரத நாட்டின் ராஜ்யசபை உறுப்பினராகப் பணியாற்றினார். நாட்டின் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் வாழ்க்கை நிலையை ஆராய்ந்து அவர்கள் முன்னேற்றத்திற்காக அரசுக்கு பரிந்துரை செய்ய என்று நிறுவப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் நல்வாழ்வுக் குழுவின் தலைவராகவும் காலேல்கர் பணியாற்றினார். 


மராத்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட காலேல்கர் காந்தியின் தூண்டுதலின் பேரில் குஜராத்தி மொழியைக் கற்றுக்கொண்டு ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, ஆங்கிலம்  ஆகிய மொழிகளில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அதிலும் முக்கியமானது லோக மாதா அதாவது உலகின் தாய் என்ற தலைப்பில் குஜராத்தி மொழியில் அவர் எழுதி தமிழில் ஜீவன் லீலா என்ற பெயரில் மொழிபெயராக்கப்பட்ட பாரத நாட்டின் நதிகளை நேரில் பார்த்து அவர் எழுதிய பயணக் கட்டுரைகளின் தொகுப்பு.


பள்ளிக்கல்வியும் பாடப்புத்தகங்களும் கற்றுக்கொடுக்காத பாடத்தை மனிதர்களுக்கு  பயணம் கற்றுக்கொடுக்கிறது. எதையோ தேடி வரலாறு முழுவதும் மனிதன் பயணம் செய்துகொண்டேதான் இருக்கிறான். பொருள் தேடியோ போர் நிமித்தமாக தலைவன் பிரிவதை பாலைத்திணை என்று தமிழ் வரையறை செய்கிறது. பத்திரிகைப் பணிக்காகவும் தேச விடுதலைக்கான இயக்க வேலைக்காகவும் காலேல்கர் பாரதநாடு முழுவதும் பயணம் செய்தார். எதனாலோ அவருக்கு நீர்நிலைகள்மீது ஒரு தணியாத ஆர்வம் இருந்தது. தான் தேடிதேடிப் பார்த்த நதிகளைப் பற்றி கட்டுரைகளாக அவர் பதிவு செய்து இருக்கிறார்.   


நதிக்கரைகள்தான் மனித நாகரிகத்தின் தொட்டிலாக உள்ளது. மலைகளில் சிறுதுளியாகத் தொடங்கி வழியில் பல்வேறு ஓடைகளை இணைத்துக் கொண்டு நீர்வீழ்ச்சியாக குதித்து, நின்று நிதானமாக ஓடி, தான் செல்லும் இடத்தையெல்லாம் குளிர்வித்து, செழிப்பாக்கி, பாலைவனங்களைச் சோலையாக்கி, விவசாய பூமியாக்கி, இறுதியில் கடலில் சங்கமிக்கும் இடங்கள் வரை காலேல்கர் தேடித்தேடி சென்று பார்த்தார். 


பாரதநாட்டின் பண்பாடு என்பது நதிகளை தெய்வமாக எண்ணித் தொழுவது. காலேல்கரின் தனது பயணங்களில் வெறும் கேளிக்கைக்காக கடல்களையும் நதிகளையும் காணச்  செல்லவில்லை. அவரைப் பொறுத்தவரை இந்தப் பயணங்கள் என்பது ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபடுவதை ஒத்தது. இந்தக் கட்டுரைகளில் நீர்நிலைகள் மீதான அவரது நெருக்கமும் பக்தியும் தென்படுகிறது.  நாட்டின் ஒவ்வொரு இடத்தைப் பற்றித் தனக்குத் தெரிந்திருக்க வேண்டும், அவற்றோடு தனக்கு ஒரு நெருக்கமான உறவு இருக்கவேண்டும் என்ற அவரின் விருப்பமும் தவிப்பும் நமக்குப் புலனாகிறது. இந்தப் புத்தகத்தின் முன்னுரையை அவர் " நின்று, கரம்குவித்துத் தொழுதல்" என்று தலைப்பிட்டிருப்பதை நோக்கினால் நீர்நிலைகளை அவர் தெய்வமாக எண்ணுவதை, ஆறுகளைத் தேடிச் செல்லும் பயணங்களை அவர் ஆன்மீக அனுபவத்தை நாடிச் செல்லும் ஒரு பக்தனின் பயணமாக கருதுவதை உணர்ந்து கொள்ள முடியும் 


இந்த நூலில் உள்ளவை வெறும் பயணம் பற்றிய தகவல்களோ அல்லது நதிகளைப் பற்றிய குறிப்புகளோ மட்டும் அல்ல. மனிதனின் வாழ்க்கைக்கும் நதிகளுக்கு இடையேயான ஒரு உணர்வுபூர்வமான இணைப்பின் ஒரு ஆய்வு இது. இந்த நாட்டின் எல்லா நதிகளைப் பற்றி எதோ ஒரு புராணக்கதை உள்ளது. எதோ ஒரு தெய்வத்தோடு அல்லது ஒரு முனிவரோடு இந்த நதிகள் இணைக்கப்பட்டு உள்ளன. 


புத்தகத்தின் முதல் கட்டுரை பெல்காம் பகுதியில் வைத்தியனாத மலையிலிருந்து உற்பத்தியாகி பெலகுந்தி கிராமத்தை நோக்கி ஓடிவரும் மார்க்கண்டி நதியைப்பற்றியதாகும். இது 1928-ல் எழுதப்பட்டது. எழுபதாவது கட்டுரையான ‘மழைப்பாட்டு’ கார்வார் கடற்கரையில் பெய்யும் மழையனுபத்தை முன்வைத்து எழுதப்பட்டது. இது 1952-ல் எழுதப்பட்டது. இடைப்பட்ட முப்பத்திநான்கு ஆண்டு காலத்தில், தேசம் முழுதும் அலைந்து கங்கை, யமுனை, பிரம்மபுத்திரை, ஜீலம், இரவி, கிருஷ்ணா, தபதி, கோதாவரி, துங்கபத்திரை, காவேரி, நர்மதை, ஷராவதி, ஐராவதி, பினாகினி, லவணவாரி, அகநாசினி, தூத்கங்கா, ராவி, கடப்பிரபா, கூவம், அடையாறு என எண்ணற்ற ஆறுகளையும் நீர்நிலைகளையும் பார்த்து நெஞ்சை நிறைத்துக்கொண்ட அனுபவங்களை வெவ்வேறு தருணங்களில் தனித்தனி கட்டுரைகளாக எழுதினார். அதற்குப் பின்னரே அவை நூல்வடிவம் கண்டன.


மார்க்கண்டி நதி அவர் பிறந்து வளர்ந்த இடத்தைச் சுற்றி ஓடும் நதி சிவனின் அருளால் எமனின் பாசக்கயிறிலிருந்து பிழைத்து என்றென்றும் பதினாறு வயதுடையவனாகவே வாழ்ந்த மார்க்கண்டேயனின் பெயரால் அந்த நதி அழைக்கப்படுகிறது. அதைத் தன் குழந்தைப்பருவத் தோழி என்று குறிப்பிடுகிறார். தம் குடும்பத்துக்குச் சொந்தமான வயல்வெளியைத் தொட்டபடி ஓடும் அந்த நதிக்கரையில் மணிக்கணக்கில் நின்று வேடிக்கை பார்த்த அனுபவங்களை அதில் விவரிக்கிறார். கார்வார் கடற்கரையில் பெய்யும் மழைத்தாரைகளை கடலைத் வெட்டும் ஆயுதங்கள் என கவித்துவம் ததும்ப  எழுதுகிறார். 


பாரதநாட்டின் எல்லா மக்களின் நினைவிலும் இருப்பது கங்கை நதி. அந்த நதியின் ஓட்டத்தை மூன்று கட்டங்களாக வகுத்துரைக்கிறார் காலேல்கர்.  கங்கையின் பிறப்பிடமான கங்கோத்ரியிலிருந்து ஹரித்துவார் வரையிலான கங்கையின் ஓட்டம் முதல் கட்டம். இது நதியின் குழந்தைப் பருவம். ஹரித்துவார் முதல் பிரயாகை வரையிலான கங்கையின் ஓட்டம் இரண்டாவது கட்டம். இது கங்கையின் குமரிப் பருவம். பிரயாகையிலிருந்து கடலுடன் சங்கமமாகும் வரையிலான கங்கையின் ஓட்டம் மூன்றாவது கட்டம். அவற்றை ’திரிபதகா’ என்னும் சொல்லால் மூன்று அவதாரங்கள் என்றே குறிப்பிடுகிறார் காலேல்கர். மூன்று கட்டங்களில் ஹரித்துவாரிலிருந்து பிரயாகை வரைக்குமான கங்கையின் ஓட்டத்துக்கு உலக மதிப்பு மிகுதி. கோவிலுக்கு அருகில் உள்ள துறைகள், அவற்றையொட்டி ஓடும் மடுக்கள் எல்லாமே கங்கையின் அழகை பல மடங்காகப் பெருகவைக்கின்றன. எல்லாவற்றையும் விட முக்கியமானது அங்கு வீசும் காற்று. இமயத்தின் பனிச்சிகரத்திலிருந்து வீசும் காற்று முதன்முதலாக மானுடரையும் அவர்களுடைய குடியிருப்பையும் இந்த இடத்தில்தான் தொட்டுக் கடந்து செல்கிறது. கங்கையைச் சகுந்தலையாகவும் யமுனையை திரௌபதி என்றும் மாற்றி அவர் குறிப்பிடுகிறார். அயோத்தி நகர் வழியாக பாயும் சரயுநதி, ராஜா  ரத்திதேவனோடு தொடர்புடைய சம்பல் நதி, கஜேந்திர மோட்ஷம் நடைபெற்ற சோணபத்ரநதி, கண்டகி நதி என்று பல்வேறு நதிகளைப் பற்றியும் அவர் எழுதி இருக்கிறார். 

தண்டால் மலைப்பகுதியில் கங்கையும் யமுனையும் சந்திப்பது போல நெருங்கி வந்து பிறகு சங்கமிக்காமல் பிரிந்து போய்விடும். தண்டால் மலையருகில் யமுனையின் கரையில் வாசம் செய்தபடி தினமும் கங்கையில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஒரு முனிவர். வயதான காலத்தில் அவரால் தன் இருப்பிடத்திலிருந்து கங்கைக்கரை வரையிலான தொலைவை நடக்கமுடியாமல் போய்விட்டது. நீராடாமல் பூசைகளில் ஈடுபட முடியாமல் அவர் தவிப்பதைப் பார்த்து, கங்கை தன் ஓட்டத்தையே சற்று மாற்றிக்கொண்டு அவர் வசிக்குமிடத்துக்கு அருகிலேயே ஒரு சிற்றருவியாகப் பாய்ந்து வந்தது. முனிவர் மறைந்துபோனாலும் அச்சிற்றருவி இன்றும் பெருக்கெடுத்துப் பாய்ந்தபடி இருக்கிறது. இந்தத் தொன்மக் கதையையும் காலேல்கர் பதிவு செய்து இருக்கிறார். 

காந்தி ஒருமுறை தன் பிரயாணத்தின் ஒரு பகுதியாக சாகர் என்னும் இடத்தில் தங்கியிருக்கிறார். அங்கிருந்து நாற்பது ஐம்பது மைல்கள் தொலைவில் இருக்கும் ஜோக் நீர்வீழ்ச்சியை பார்த்துவிட்டு வரலாம் என்னும் திட்டத்தை காந்தியிடம் முன்வைத்தார் காலேல்கர். காந்தியோ தனக்கு நேரமில்லை என்றும் “நீ வேண்டுமானால் சென்று வா. நீ போய்வந்தால் மாணவர்களுக்கு ஒரு சில பாடங்களைச் சொல்ல வசதியாக இருக்கும்” என்று சொல்லி மறுத்துவிட்டார். ”ஜோக் உலகத்தின் அற்புதக்காட்சிகளில் ஒன்று” என்றெல்லாம் சொல்லி காந்தியைக் கரைக்க முற்பட்டார் காலேல்கர். காந்தியோ அவரிடம் மீண்டும் “960 அடி என்பதெல்லாம் ஒரு உயரமா? மழைத்தண்ணீர் அதைவிட உயரமான இடமான ஆகாயத்திலிருந்து விழுகிறது தெரியுமா? அது எவ்வளவு பெரிய அதிசயம்?” என்று சொல்லி மேலும் வாதத்துக்கு வழியின்றி முடித்துவிட்டார். பிறகு வேறு வழியில்லாமல் மேலும் சிலரைச் சேர்த்துக்கொண்டு காலேல்கர் ஜோக் அருவியைப் பார்க்கக் கிளம்பிவிடுகிறார். ஷராவதி ஆற்றங்கரை வரைக்கும் நீண்டிருக்கும் காட்டை நடந்து கடப்பது ஒரு பயணம். பிறகு அருவிக்கரை வரைக்கும் படகுப்பயணம். ஒவ்வொரு கட்டத்தையும் நேர்த்தியான சொல்லோவியங்களென தீட்டி வைத்திருக்கிறார் காலேல்கர். ரோரர், ராகெட், லேடி ஆகிய அருவிக்கிளைகளுக்கு அவர் ருத்ர, வீரபத்ர, பார்வதி என்னும் புதிய பெயர்களைச் சூட்டி அப்பெயர்த்தேர்வுகளுக்கான காரணங்களையும் சுவாரசியமாகச் சொல்கிறார்.

கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி, கோமதி ஆகிய நதிகளில் நீராடுவதைப்பற்றியும் அவற்றின் கரைகளில் செய்யப்படும் தானதர்மங்களைப் பற்றியும் ஏராளமாகச் சொல்லப்பட்ட போதிலும் அந்நதிகளை வலம்வருவதைப்பற்றி எக்குறிப்பும் புராணங்களில் இல்லை. அதற்கு விதிவிலக்கு நர்மதை. அந்த நதியை வலம்வருவது இன்றளவும் ஒரு சடங்காக உள்ளது. அதற்கு பரிகம்மா என்பது பெயர். முதலில் நர்மதை உற்பத்தியாகும் இடத்திலிருந்து தொடங்கி தென்கரை வழியாக கடலில் சங்கமமாகும் இடம்வரைக்கும் செல்லவேண்டும். பிறகு படகின் மூலம் வடகரையைத் தொடவேண்டும். அங்கிருந்து கால்நடையாக அமர்கண்டக் செல்லவேண்டும். வலம்வரும் போது எங்கும் நதியைக் கடக்கக்கூடாது. நதியின் பிரவாகத்தைவிட்டு வெகுதொலைவு செல்லவும் கூடாது. நீர் அருந்தவேண்டுமானால் நர்மதையின் நீரையே அருந்தவேண்டும். இப்படி நர்மதையை வலம்வந்த  காலேல்கரின் அனுபவம் அவரோடு சேர்ந்து நாமும் நடப்பதுபோல உள்ளது. தன் விழிகளால் கண்ட ஒவ்வொரு காட்சியையும் காலேல்கர் நம்மையும் காண வைத்துவிடுகிறார். ஜபல்பூருக்கு அருகில் பேடாகாட் என்னும் இடத்தில் நர்மதையின் ஓட்டத்துக்குக் காவலாக இருபுறங்களிலும் ஓங்கி உயரமாக நின்றிருக்கும் சலவைக்கல் மலைகளை முழுநிலவில் காண்பது மகத்தானதொரு அனுபவம். நிலவின் ஒளி முதலில் சலவைக்கல் மலையில் பட்டு பிரதிபலிப்பதையும், பிறகு ஆற்றின் மேற்பரப்பில் பிரதிபலிப்பதையும் பார்ப்பது மயக்கத்தையும் திகிலையும் ஊட்டும் ஒரு பேரனுபவம்.

டேராடூனுக்கு அருகில் உள்ள நதியின் பெயர் தீஸ்தா. அதாவது த்ரி- ஸ்ரோத்ரா. தனித்தனியாக நதிகள் மூன்று இடங்களில் உற்பத்தியாகி பிறகு அனைத்தும் இணைந்து ஒரே நதியாக ஓடுகிறது. கஞ்சன் ஜங்கா சிகரத்தின் அருகில் உற்பத்தியாகி வரும் லாசூங் சூ என்பது ஒரு நதி. பாவ்ஹூன்ரீ சிகரத்தின் அருகில் உற்பத்தியாகி வரும் லாசேன் சூ என்பது இரண்டாவது நதி. தாலூங் சூ என்பது மூன்றாவது நதி. இம்மூன்றும் இணைந்து தீஸ்தா என்னும் பெயருடன் ஓடத் தொடங்குகிறது. சிறிது தொலைவிலேயே இத்துடன் திக்சூ, ரோரோசூ, ரோங்கனீசூ, ரங்க்போசூ, ரங்கீத்சூ போன்ற ஆறுகள் வந்து இணைந்துகொள்கின்றன. எங்கெல்லாம் இரு ஆறுகள் கலக்கின்றனவோ, அங்கெல்லாம் கோம்போ எனப்படும் புத்தர் கோவில் காணப்படுகிறது.

வேத காலத்தில் விதஸ்தா என்று அழைக்கப்பட்ட நதியின் இன்றைய பெயர் ஜீலம். ‘உலகில் எங்காவது சொர்க்கம் இருக்குமெனில் அது இங்குதான் இருக்கிறது, இங்குதான் இருக்கிறது, இங்குதான் இருக்கிறது’ என அழுத்தம் திருத்தமாக ஒன்றுக்கு மூன்று முறை முகலாயச் சக்கரவர்த்தியான ஜஹாங்கீர் சொன்ன வாக்கியங்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இன்றும் ஜீலம் நதிக்கரையில் வீற்றிருந்து அதன் அழகை சொல்லாமல் சொன்னபடி உள்ளது. ஆறு இங்குமங்கும் சுற்றிக்கொண்டு மெதுவாக ஓடுவதால் அது அசைவதே தெரிவதில்லை. வராஹமூலம் என அந்தக் காலத்தில் அழைக்கப்பட்ட பாராமுல்லா என்னும் இடத்தைக் கடந்தபிறகே ஜீலம் வேகம் கொள்கிறது.

கார்வார் அருகில் தேவ்கட் என்னுமிடத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தைக் காணச் சென்ற அனுபவமும் கார்வாரிலிருந்து கோகர்ணத்தைக் காணச் சென்ற அனுபவமும் சாகசப்பயணங்களுக்கு நிகரான சித்தரிப்புகளைக் கொண்டிருக்கின்றன. கோதாவரியின் சரித்திரத்தோடு ராமர்-சீதை கதையையும், சந்த ஞானேஸ்வரரின் கதையையும் இணைத்துச் சித்தரிப்பது வாசிப்பில் ஒருவித ஆர்வத்தையே தூண்டுகிறது. கல்கத்தாவிலிருந்து பர்மாவுக்குச் செல்லும் வழியிலும் ஆப்பிரிக்கப் பயணப் பாதைகளிலும் கண்ட பலவிதமான ஆறுகளைப்பற்றிய தகவல்களை காலேல்கர் தொகுத்துச் சொல்லும் விதமே, அவற்றை நாமும் உடனே சென்று பார்த்துவிடவேண்டும் என்னும் ஆவலை உருவாக்குகிறது. நேபாளத்தில் பாக்மதியையும் டேராடூனில் சஹஸ்ரதாராவையும் அசாமில் பரசுராமகுண்டத்தையும் பார்க்கச் சென்ற அனுபவங்கள் அனைத்தும் ஒரு சிறுகதைக்குரிய அனுபவங்களைப்போல உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் வசீகரம் நிறைந்த ஒரு சொல்லோவியம். காலேல்கரின் முயற்சியை ஒருவகையில் சொல்லோவியங்களால் நம் தேசத்தின் வரைபடத்தைத் தீட்டும் முயற்சி என்றே சொல்லலாம். பி.எம்.கிருஷ்ணசாமியின் மொழிபெயர்ப்பில் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது கிட்டும் அனுபவம் காஷ்மீரிலிருந்து தனுஷ்கோடி வரைக்கும் பயணம் செய்த அனுபவத்துக்கு நிகரானது. 

இலக்கியத்திற்க்காக சாஹித்ய அகாடமி விருதும் பொது சேவைக்காக பத்ம விபூஷண் விருதும் இவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. 


 

ஞாயிறு, 30 நவம்பர், 2025

நவம்பர் 30 - ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்தநாள்

பாரத நாட்டின் புகழ்மிக்க அறிவியல் அறிஞர்கள் பெயர்களைக் கூறு என்று சொன்னால் அநேகமாக அனைவரும் முதலில் கூறும் பெயர் ஜெகதீஷ் சந்திர போஸ் என்றுதான் இருக்கும். இயற்பியல், உயிரியல், தாவிரவியல், உயிர் இயற்பியல் என்று அறிவியலின் பல்வேறு துறைகளில் வல்லுநராகவும், அதோடு வங்காள மொழியில் அறிவியல் சார்ந்து புனைகதைகளை எழுதும் துறையின் ஆரம்பகால எழுத்தாளராகவும் விளங்கிய ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்ததினம் இன்று. 


வங்காள காயஸ்தா பிரிவைச் சார்ந்த பகவான் சந்திர போஸ் இந்திய ஆட்சிப்பணியில் துணை ஆணையாளராகவும் துணை நீதிபதியாகவும் பணியாற்றிக்கொண்டு இருந்தவர். அவர் ப்ரம்மசமாஜத்தின் முக்கியமான உறுப்பினராகவும் இருந்தவர். 1858ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் பிறந்தவர் ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்கள். தாய் மொழியில்தான் குழந்தைகள் தங்கள் ஆரம்பக்கல்வியை பயிலவேண்டும் என்ற எண்ணம் தந்தைக்கு இருந்ததால் ஜெகதீஷ் சந்திர போஸ் வங்காள மொழியில்தான் தனது ஆரம்பிக் கல்வியை முடித்தார். சமுதாயத்தின் பல்வேறு படிநிலையில் உள்ள மாணவர்களோடு சேர்ந்து படித்ததால், போஸின் சிந்தனை விசாலமாக உருவானது. 

இதனைத் தொடர்ந்து சவேரியார் பள்ளியிலும், சவேரியார் கல்லூரியிலும் தனது படிப்பைத் தொடர்ந்தார் போஸ். அருள் தந்தை யூகினே லபோர்ட் என்பவரின் வழிகாட்டுதல் உயிரியல் துறையில் போஸுக்கு ஈடுபாடு அதிகமானது. இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வு எழுத லண்டன் செல்லவேண்டும் என்பது ஜெகதீஸ் சந்திர போஸின் விருப்பம். ஆனால் தன் மகன் பிறரால் கட்டுப்படுத்தப் படாது சுயேட்சையாக இருக்கவேண்டும் என்பது அவர் தந்தையின் ஆசை. எனவே லண்டன் சென்று மருத்துவம் படிக்கலாம் என்று போஸ் முடிவு செய்தார். ஆனால் உடல்நலம் இல்லாத காரணத்தால் மருத்துவத்தை கைவிட்டு விட்டு உயிரியல் துறையில் சேர்ந்து படித்து முனைவர் பட்டம் பெற்றார் போஸ். 

பாரதம் திரும்பிய போஸ், கல்கத்தா நகரில் உள்ள மாநிலக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். ஆங்கிலேயர்களின் நிறவெறியும், அதனால் போஸின் ஆராய்ச்சிகளுக்கு போதுமான பொருளாதார உதவி கிடைக்காததும் என்று பல்வேறு சவால்களை போஸ் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் செயல் வீரர்கள் இந்த பிரச்சனைகளை ஒருநாளும் பொருள்படுத்துவது இல்லை. 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி என்பது அறிவியல் பல்வேறு துறைகளில் பெரும் முன்னேற்றத்தை அடைந்த காலம். முதலில் ஒரு அறிஞர் ஒரு கருத்தை கோட்பாடாக முன்மொழிவார். பிறகு ஆராய்ச்சிகள் மூலம் அது சரியா இல்லை தவறா என்று வேறு யாராவது கண்டுபிடித்து உலகுக்கு அறிவிப்பார்கள். இப்படி ஜேம்ஸ் மாக்ஸ்வெல் என்ற அறிஞர் மின்காந்த அலைகள் பற்றிய கோட்பாட்டை அறிவித்தார். ஹென்ரிச் ஹெர்ட்ஸ் என்பவர் மின்காந்த அலைகள் இருப்பதை அதிகாரபூர்வமாக கண்டைந்து சொன்னார். மின்காந்த அலைகளின் அலைவரிசையை குறுக்குவதன் மூலம் சுவர்களைத் தாண்டி அந்த அலைகளை அனுப்ப முடியும், அதன் மூலம் கம்பி இல்லாமலே தந்தியை அனுப்பலாம் என்பதை போஸ் நிரூபித்துக் காட்டினார்.  படைப்போ அல்லது கண்டுபிடிப்போ இயற்கை ஒரு தனி மனிதன் மூலம் வெளிப்படுத்துவதுதான் என்ற பாரத எண்ணத்தின் படி வாழ்ந்த போஸ் தனது கண்டுபிடிப்புகளுக்கு எந்தவிதமான காப்புரிமையையும் கோரவில்லை. வானொலிப் பெட்டியில் இருந்து கைபேசி வரை, கணினி வரை இன்று செயல்படும் பல்வேறு சாதனங்களின் பின்னால் போஸின் பங்கு உள்ளது என்பது பாரத மக்களான நமக்கு பெருமையான ஓன்று. 

தாவரங்களுக்கு உயிர் உண்டு, வலி உண்டு என்பதையும் தன் ஆராய்ச்சி மூலம் போஸ் நிரூபித்தார். போஸின் ஆராய்ச்சிப் பணிகளுக்கு பொருளாதார உதவிகளைத் திரட்டவும், அவரது கட்டுரைகளை மொழி பெயர்க்கவும் ஸ்வாமி விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதா பேருதவி செய்தார். அறிவியல் சார்ந்து சில சிறுகதைகளையும் போஸ் எழுதி உள்ளார். 

ஒரு நல்ல ஆசிரியரின் பெருமை என்பது சிறந்த மாணவர்களை உருவாக்குவது. அப்படி சத்யேந்திரநாத் போஸ், மேகநாத் சாகா, பி சி மஹலனோபிஸ் சிசிர் குமார் மித்ரா போன்ற புகழ்பெற்ற அறிஞர்களை போஸ் வார்த்தெடுத்தார். 

பல்துறை விற்பன்னராக விளங்கிய ஜெகதீஷ் சந்திர போஸ் தனது எழுபத்தி எட்டாம் வயதில் 1937 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் நாள் காலமானார். 

வெள்ளி, 28 நவம்பர், 2025

நவம்பர் 28 - மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் பலிதான தினம்

2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள், பாரத மக்களால் ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாத நாள். நேரடியாக மோதத் துணிவில்லாத பாகிஸ்தான் கையளவே உள்ள தீவிரவாதிகளை மும்பைக்கு அனுப்பி, அப்பாவி மக்களைக் கொன்று வெறியாட்டம் போட்ட நாள் அது. இருபத்தி ஆறு வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட நூற்று எழுபத்தி நான்குபேர் இந்த கோழைத்தனமான தாக்குதலில் மரணமடைந்தார். தீவிரவாதிகளை முறியடிக்கும் பணியில் நாட்டின் வீர மகன்கள் தங்களை ஆகுதி ஆகினார்கள். கடினமான இந்தப்பணியில் மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் பலிதானியான தினம் இன்று.


கேரளத்தைச் சார்ந்த திரு உன்னிகிருஷ்ணன் தனது வேலை நிமித்தமாக பெங்களூர் நகருக்கு குடியேறுகிறார். அவர் மனைவி திருமதி தனலக்ஷ்மி. இந்தத் தம்பதியரின் மகனாக 1977ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் நாள் பிறந்தவர் சந்தீப். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே ராணுவத்தில்தான் பணியாற்றவேண்டும் என்ற ஆசை சந்தீப்புக்கு துளிர் விடுகிறது. தேசிய பாதுகாப்பு நிலையத்தில் இணைந்து தனது இளங்கலை படிப்பை மேற்கொள்கிறார். படிப்பு முடிந்தபின்பு பாரத ராணுவத்தின் பிஹார் படைப் பிரிவில் பிரிகேடியர் பதவியில் சேர்கிறார். பணியின் நிமித்தமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் தனது திறமையை நிரூபித்துக் காட்டினார் சந்தீப்.

அதனைத் தொடர்ந்து பாரத ராணுவத்தின் சிறப்பு மிக்க தேசிய பாதுகாப்பு அணியில் ( National Security Guards ) தனது சேவையைத் தொடர்கிறார் சந்தீப். சிறிது காலத்திலேயே அந்த அணியின் அதிரடிப் படையில் சேருமாறு சந்தீப்புக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. கார்கில் போரில் மிகச் சிறிய அணியைத் தலைமையேற்று முக்கியமான ராணுவ தளங்களை நாட்டுக்காக மீட்டுத் தந்தார்.

2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் நாள் ஒரே நேரத்தில் மும்பை நகரின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தங்கள் தாக்குதலைத் தொடங்கினார்கள். ஓப்ராய் மற்றும் தாஜ் ஹோட்டல்களில் புகுந்த தீவிரவாதிகள் அங்கே தங்கியுள்ள பயணிகளை பயணக்கைதியாக வைத்துக்கொண்டு தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள். அங்கே இருந்து தீவிரவாதிகளை உயிரோடு அல்லது பிணமாகவோ அகற்றி, பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆணை சந்தீப்புக்கு அளிக்கப்படுகிறது. பத்து அதிரடிப்படை வீரர்களோடு டெல்லியில் இருந்து மும்பைக்கு விரைகிறது அதிரடிப்படை.

எந்த தளத்தில், எந்த அறையில் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்பது தெரியாது. எனவே ஒவ்வொரு அறையாக கைப்பற்றவேண்டும். எந்த ஒரு அறையிலும் பயணியாக வந்த பொதுமக்களில் யாராவது இருக்கலாம், தீவிரவாதி இருக்கலாம், அல்லது தீவிரவாதி பொதுமக்களோடு இருக்கலாம், அல்லது அந்த அறையே காலியாக ஆளே இல்லாமல் இருக்கலாம். இப்படி ஒரு தளத்தை கைப்பற்றியபின், அங்கே மீண்டும் தீவிரவாதிகள் வந்து விடாமல் இருக்க அதிரடிப்படையின் வீரர்கள் காவல் இருக்க வேண்டும். குறைந்த படையோடு அடுத்த தளத்தை கைப்பற்றவேண்டும். இப்படி ஒவ்வொரு அறையாக, ஒவ்வொரு தளமாக கைப்பற்றி காக்கவேண்டும். நினைக்கவே சங்கடமான வேலை இது. இதனை பாரதத்தின் அதிரடிப்படை வெற்றிகரமாக செய்து காட்டியது. உலகத்தின் பல்வேறு ராணுவங்கள் இந்த அனுபவத்தை, வெற்றியை தங்கள் பாடத் திட்டத்தில் ஒரு பகுதியாக வைத்துள்ளன என்றால், இந்த வேலையின் முக்கியத்துவத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இந்த கடினமான செயலை பத்து வீரர்களோடு முன்னெடுத்தவர் மேஜர் சந்தீப். மூன்றாவது தளத்தில் ஒரு அறையில் சில பெண் பயணிகளோடு தீவிரவாதி இருக்கலாம் என்று கணித்து, சுனில் யாதவ் என்ற அதிரடிப்படை வீரர் அந்த அறையின் கதவை உடைத்துத் திறந்தார். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுனில் யாதவ் காயமடைந்தார். தனது சகாவை காப்பாற்றி அந்த இடத்தில இருந்து அப்புறப்படுத்த சந்தீப் உன்னிகிருஷ்ணன் தீவிரவாதிமீதான தாக்குதலைத் தொடர்ந்தார். அந்த சண்டையில் துப்பாக்கி குண்டு பட்டு மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் பலிதானியானார்.

மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் உடல் பெங்களூர் நகருக்கு கொண்டு வரப்பட்டது. ஆயிரமாயிரம் மக்கள் அந்த வீரருக்கு தங்கள் அஞ்சலியைத் தெரிவிக்க அவர் வீட்டுக்கு வந்தார்கள். முழு ராணுவ மரியாதையோடு அவருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

பெங்களூர் நகரின் முக்கியமான சாலைக்கு மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. ராமமூர்த்தி நகர் பகுதியில் அவரது மார்பளவுச் சிலை நிறுவப்பட்டுள்ளது. அமைதிகாலத்தில் அளிக்கப்படும் மிக உயரிய ராணுவ விருதான அசோக சக்ரா விருது அவருக்கு மரணத்திற்குப் பிறகு அளிக்கப்பட்டது.

மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம்தனிலே நிலைக்கின்றார் என்ற வரிகளுக்கு ஏற்ப மக்கள் மனதில் மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். நாட்டைக் காக்க இன்னும் ஆயிரமாயிரம் உன்னி கிருஷ்ணன்கள் வருவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

வியாழன், 27 நவம்பர், 2025

நவம்பர் 27 - நாடாளுமன்றத்தின் முதல் சபாநாயகர் கணேஷ் மாவலங்கர் பிறந்தநாள்

தேசியவாதி, சுதந்திரப் போராட்ட வீரர், வழக்கறிஞர், கல்வியாளர், பாராளுமன்றவாதி என்ற பல்முக ஆளுமையாகத் திகழ்ந்த கணேஷ் வாசுதேவ மாவலங்கரின் பிறந்தநாள் இன்று.


மகாராஷ்டிர மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தைச் சார்ந்த மாவலங்கர் 1888 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் பரோடா நகரில் நாள் பிறந்தவர். தனது ஆரம்ப கல்வியை அன்றய பம்பாய் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் முடித்த மாவலங்கர் மேற்படிப்புக்காக இன்றய குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமதாபாத் நகருக்கு குடிபெயர்ந்தார். 1908ஆம் ஆண்டு குஜராத் கல்லூரியில் தனது இளங்கலை அறிவியல் பட்டத்தைப் பெற்று அதனைத் தொடர்ந்து 1912ஆம் ஆண்டு மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார். அதனைத் தொடர்ந்து அஹமதாபாத் நகரில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.

அந்த காலகட்டத்தில் நாட்டில் சூறாவளியாக வீசிக்கொண்டு இருந்த சுதந்திர வேட்கை மாவலங்கரையும் பற்றிக் கொண்டது.  குஜராத் மாநிலத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்ததால், காந்தி, வல்லபாய் படேல் ஆகியோரோடு தொடர்பு ஏற்பட்டது. அஹமதாபாத் நகராட்சியின் உறுப்பினராக 1919ஆம் ஆண்டு தேர்வானார். 1919 - 1922, 1925 - 1928, 1930 - 1933, 1934 - 1937  ஆகிய காலகட்டத்திலும் அவர் அஹமதாபாத் நகராட்சியின் உறுப்பினராக பணியாற்றினார்.

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும் மாவலங்கர் நியமிக்கப்பட்டார். ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டதால் குஜராத் மாநிலத்தின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக மாவலங்கர் அறியப்படலானார். பல்வேறு  போராட்டங்களில் கலந்து கொண்டு ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

1934ஆம் ஆண்டு பம்பாய் மாநிலத்தின் சட்டசபைக்கு தேர்வான மாவலங்கர் 1937 ஆம் ஆண்டு பம்பாய் சட்டசபையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து உருவான அரசியல் சாசன சபையின் சபாநாயகராகவும் அவர் பணியாற்றினார். 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுதேர்தலில் அஹமதாபாத் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற மாவலங்கர் முதல் நாடாளுமன்ற சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெற்றிகரமான வழக்கறிஞராகவும், அதே நேரத்தில் தகுதியான பாராளுமன்றவாதியாகவும் இருந்த மாவலங்கர், குஜராத் மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கும் பெரும் தொண்டாற்றினார். அஹமதாபாத் கல்விச் சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினரான இவர், அதன் தலைவராகவும் இருந்தார். குஜராத் வித்யாபீடத்தின் சட்டதுறை பேராசிரியராக பணியாற்றனார். குஜராத் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினராக இருந்தார். காந்தியோடு தனது அனுபவங்கள், சிறையில் தான் சந்தித்த பல்வேறு கைதிகள் பற்றி, தனது வழக்கறிஞர் வாழ்க்கையைப் பற்றி என்று பல்வேறு புத்தகங்களையும் மாவலங்கர் எழுதி உள்ளார்.

1956ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாரடைப்பால் அவதிப்பட்ட மாவலங்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 1946ஆம் ஆண்டில் இருந்து தற்காலிக நாடாளுமன்றம், அரசியலமைப்பு சபை, சுதந்திர பாரதத்தின் முதல் நாடாளுமன்றம் ஆகியவற்றை பத்தாண்டுகள் வழிநடத்திய கணேஷ் வாசுதேவ மாவலங்கர் 1956ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் காலமானார். எத்தனையோ பிரச்சனைகள் இருந்தும் ஜனநாயக வழியில் பாரதம் நடைபோடுகிறது என்றால் அது மாவலங்கர் போன்ற அறிஞர்கள் அமைத்துக் கொடுத்த அடிப்படைகளே காரணம் என்று உறுதியாகச் சொல்லலாம். 

புதன், 26 நவம்பர், 2025

நவம்பர் 26 - பாரதத்தின் பால்காரர் - வர்கீஸ் குரியன்

எனக்கும் ஒரு கனவு இருந்தது - அந்த மனிதரின் சுயசரித்திரத்தின் பெயர் இதுதான். ஆனால் அவருக்கு சிறுவயதில் இருந்த கனவு அல்ல அது. வேண்டா வெறுப்பாக ஒரு வேலையை ஏற்றுக் கொண்டு, பாஷை தெரியாத ஒரு குக்கிராமத்தில் தனது பயணத்தைக் தொடங்கி, ஆனால் இந்த தர்மக்ஷேத்திரத்தை தனது குருஷேத்திரமாக ஏற்றுக் கொண்டு, அந்த மக்களின் வாழ்க்கைக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தனி மனிதரின் கதை அது. தனி மனிதனாக ஒரு பெரும் வியாபார சாம்ராஜ்யத்தை உருவாக்கி, ஆனாலும் அதில் தான் ஒரு வேலையாள் மட்டும்தான், நான் இதற்கு உரிமையாளன் அல்ல இது எனது சுதர்மம் என்ற மனப்பாங்கோடு கீதை காட்டிய வழியில் நடந்த மனிதரின் கதை. 


கேரளாவைச் சார்ந்த சிரியன் கிருஸ்துவ குடும்பத்தில் 1921ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் பிறந்தவர் வர்கீஸ் குரியன். அவரது தந்தை ஒரு மருத்துவர், தாயாரும் கல்வி கற்றவர். தந்தை பணிபுரிந்த கோபிச்செட்டி பாளையத்தில் பள்ளி கல்வியையும், அதனைத் தொடர்ந்து சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் பட்டத்தையும், கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியலில் பட்டத்தையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து சிறிது காலம் டாடா குழுமத்தில் பணி புரிந்தார். 

இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த சமயம் அது, நாடு வெகு விரைவில் சுதந்திரம் அடைந்து விடும் என்ற நம்பிக்கை எல்லா இடங்களிலும் பிரகாசமாக இருந்தது, பொருளாதாரரீதியாக இரண்டு நூறாண்டுகளாக சுரண்டப்பட்டு இருந்த தேசத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும், அதற்கு பல்வேறு தொழில்நுட்பங்களை அறிந்த இளைஞர் பட்டாளம் தேவை என்பதால் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று படித்து நாட்டுக்கு தனது திறமையை அர்ப்பணம் செய்யத் தயாராக உள்ள இளைஞர்களை கண்டறிந்து அவர்களின் கல்விக்கான பொருளாதார உதவியை அரசு செய்ய முடிவெடுத்தது. அதில் தேர்வான குழுவில் வர்கீஸ் குரியனும் ஒருவர். பால் பதனிடும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு வருமாறு அரசு அவருக்கு உதவித்தொகை அளித்தது. ஆனால் குரியன் உலோகவியலும், அணு அறிவியலையும் கற்றுத் தேர்ந்தார். கூடவே பால் பதனிடும் நுட்பத்தையும் கற்றுக் கொண்டார். நாடு திரும்பிய குரியனை குஜராத் மாநிலத்தின் கைரா  மாவட்டத்தின் ஆனந்த் என்ற ஒரு சிறு கிராமத்தில் பணியாற்ற அரசு பணித்தது. வேண்டா வெறுப்பாக அந்த வேலையை  ஏற்றுக்கொண்டார். எப்போது அந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குப் போகலாம் என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தார். 

காலம் குரியனுக்கு வேறு ஒரு பாதையை தீர்மானித்து வைத்திருந்தது. தேசபக்தரும் கூட்டுறவு இயக்கத்தில் பெரும் நம்பிக்கை கொண்ட திரிபவன்தாஸ் படேல் என்பவரின் அறிமுகம் குரியனுக்கு கிடைத்தது. பால் வியாபாரம் செய்யும் பலர் ஏழ்மை நிலையில் இருப்பது குரியனின் மனதைப் பாதித்தது. அவர்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று அவர் முடிவு செய்தார். அன்று தொடங்கிய அவரது பயணம் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக அந்த மக்களோடு தொடர்ந்தது. பல லட்சம் ஏழை விவசாயிகளின் பொருளாதார நிலைமையை முன்னேற்றி, பாரத நாட்டை பால் உற்பத்தியில் உலகின் முக்கியமான  நாடாக மாற்றி, பெரும் நிறுவனங்களை உருவாக்கி என்று அவரின் வாழ்க்கையே பலருக்கு உதாரணமாகத் திகழ்கிறது. 

ஆண்டில் எல்லா நாட்களிலும் ஒரே அளவில் பால் கிடைப்பது இல்லை. அதிகமாக பால் கிடைக்கும் நேரங்களில் அதை விற்க முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்தனர். இதனை மாற்ற கூட்டுறவு முறையில் பாலை வாங்கி அதனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் முறையை குரியன் அறிமுகம் செய்தார். பால் மீதமாகும் நேரங்களில் அதனை பால் பவுடராக மற்றும் நுட்பத்தை குரியன் அறிமுகம் செய்தார். அதுவும் எருமைப்பாலில் இருந்து பால் பவுடர் தயாரிக்கும் நுட்பம் என்பது அதுவரை உலகில் எங்கும் இல்லாத ஓன்று. பிரச்சனைக்கு தீர்வுகளை சமுதாயத்தோடு இணைந்த தொழில்நுட்பதின் மூலம் கண்டறியும் குரியனின் செயல்திறனால் குஜராத்தில் உள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உருவானது. 

ஆனந்த் பகுதியில் குரியன் செயல்படுத்திய முறையை நாடு முழுவதும் முன்னெடுக்க அரசு அவரைக் கேட்டுக்கொண்டது. வெண்மைப் புரட்சி என்ற பெயரில் நாடு முழுவதும் பால் உற்பத்தியைப் பேருக்கும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. தட்டுப்பாடு என்ற நிலைமையில் இருந்து பால் பொருள்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு பால் உற்பத்தியை அவர் அதிகப்படுத்தினார். அதோடு இணைந்து பல்வேறு நிறுவனங்களை குரியன் உருவாக்கினார். குஜராத் பால் உற்பத்தியார்கள் கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு ( Gujarat Cooperative Milk Manufacturer Federation ), தேசிய பால் மேம்பாட்டு வாரியம் ( National Dairy Development Board ) என்று பால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும்,  அதோடு இணைந்து அறிவியல் முறையில் தொழில்நுட்பத்தை இணைந்து கிராம முன்னேற்றத்திற்காக மேலாண்மை கல்லூரியையும்  கிராம மேலாண்மை நிறுவனம் ( Institute of Rural Management - Anand ) அவர் உருவாக்கினார். 

எல்லாக் காலத்திலும் பால் உற்பத்தியாளர்கள்தான் இந்த நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள், தான் வேலைக்காரன் மட்டும்தான் என்ற எண்ணத்தில் இருந்து குரியன் மாறவே இல்லை. குரியனின் சேவைக்கு பல்வேறு இடங்களில் இருந்து அங்கீகாரம் வந்து சேர்ந்தது. 1965ஆம் ஆண்டு  பத்மஸ்ரீ, 1966ஆம் ஆண்டு பத்மபூஷன் அதனைத் தொடர்ந்து 1999ஆம் ஆண்டு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை பாரத அரசு அளித்தது. 1963ஆம் ஆண்டு மகாசாய் விருது, 1986ஆம் ஆண்டு க்ரிஷி ரத்னா ஆகிய விருதுகள் அவரை வந்தடைந்தன. ஆனால் இவை அனைத்தையும் விட அவருக்கு நெருக்கமாக இருந்தது மக்கள் அவருக்கு அளித்த பாரத நாட்டின் பால்காரர் - Milkman of India - என்ற பட்டம்தான். 

வாழ்க்கையில் பாலே குடிக்காத அந்த தேசத்தின் பால்காரர் 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் நாள் காலமானார். வாழ்க்கை முழுவதும் ஆனந்த் கிராமத்திலேயே வாழ்ந்து அந்த  மக்களுக்காகவே யோசித்த குரியனின் இறுதிச் சடங்குகள் அதே பால் உற்பத்தியாளர்கள் கூடி நிற்க ஆனந்த் கிராமத்திலேயே நடந்தது. தனி ஒரு மனிதன் என்னவெல்லாம் செய்யலாம் என்று யாராவது கேட்டால் அதன் பதில் வர்கீஸ் குரியனின் வாழ்க்கையில் இருக்கிறது என்று உறுதியாகக் கூறலாம். 

செவ்வாய், 25 நவம்பர், 2025

நவம்பர் 24 - தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்கடே பிறந்ததினம்

கன்னட மாநிலத்தின் தெற்குப் பகுதியில் மங்களூர் நகருக்கு 75 கிலோமீட்டர் தொலைவில் நேத்ராவதி நதியின் கரையில் அமைந்துள்ள சிறு நகரம் தர்மசலா. மஞ்சுநாத ஸ்வாமி என்ற பெயரில் சிவபெருமான் குடிகொண்டு இருக்கும் நகரம் அது. அந்த கோவிலின் பரம்பரை அறங்காவலராக, தர்மாதிகாரியாக எட்டு நூறாண்டுகளாக செயல்பட்டுக்கொண்டு வரும் சமண சமயத்தைச் சார்ந்த  பெர்கடே குடும்பத்தின் வாரிசாக ஹெக்கடே என்ற பட்டதோடு இருபத்தியோராம் தர்மாதிகாரியாக இருக்கும் திரு வீரேந்திர ஹெக்கடே அவர்களின் பிறந்ததினம் இன்று.


திரு ரத்னவர்ம ஹெக்கடே -  திருமதி ரத்னம்மா ஹெக்கடே தம்பதியரின் முதல் மகனாக 1948ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் நாள் பிறந்தவர் திரு வீரேந்திரா. தந்தையின் மறைவுக்குப் பிறகு  தர்மசாலாவில் இருபத்தியோராம் தர்மாதிகாரியாக 1968ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் திரு வீரேந்திரா நியமிக்கப்பட்டார். அது முதல் அவர் வீரேந்திர ஹெக்கடே என்று அழைக்கப்படத் தொடங்கினார்.

தர்மத்தின் இருப்பிடத்தின் அதிகாரி என்பதால், பெர்கடே குடும்பத்தினர் பசியில் இருந்து, பிணையில் இருந்து, பயத்தில் இருந்து அறியாமையில் இருந்து விடுதலை என்ற சேவையை எட்டு நூற்றாண்டுகளாகச் செய்து வருகின்றனர். மாறிவரும் சமுதாயத்தின் தேவைங்களை இனம் கண்டு வீரேந்திர ஹெக்கடே இந்த சேவைகளை கடந்த ஐம்பதாண்டுகளாக முன்னெடுத்து வருகிறார்.

மஞ்சுநாத ஸ்வாமி கோவிலுக்கு வரும் அனைவருக்கும் இலவசமாக உணவு அளிக்கப்படுகிறது. கேரள மற்றும் கர்நாகத்தில் அனைத்து கோவில்களிலும் நடைபெறும் இயல்பான ஒன்றுதான் இது. ஆனால் முழுவதும் மரபு சாரா எரிசக்தியைப் பயன்படுத்தி உணவு தயாரிப்பதிலும், உணவு பரிமாறப்படும் இலைகள் முதல் அனைத்து உணவுப் பொருள்களையும் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் உருவாக்குவதிலும் தர்மசாலா கோவில் தனித்து விளங்குகிறது. வீரேந்திர ஹெக்கடே பொறுப்புக்கு வந்த பிறகு பக்தர்கள் உணவருந்த பிரமாண்டமான உணவுக்கூடத்தை உருவாக்கினார். நாள் ஒன்றுக்கு சராசரியாக முப்பதாயிரம் பக்தர்களும் பண்டிகை தினங்களில் எழுபதாயிரம் பக்தர்களும் இங்கே உணவு உண்கிறார்கள்.

கர்நாடகத்தின் தெற்குப் பகுதி என்பது மலைப் பிரதேசம். அங்கிருந்து மருத்துவ உதவிக்காக நகரங்களுக்குச் செல்ல முடியாத கிராமவாசிகளுக்காக வீரேந்திர ஹெக்கடே நடமாடும் மருத்துவமனைகளை அமைத்துள்ளார். தேவையான மருந்து மற்றும் உபகாரணங்களோடு மருத்துவர்கள் கிராமப்புற மக்களைத் தேடிச் சென்று சேவை புரிகின்றனர். தர்மசாலாவில் அருகில் உள்ள உஜிரி  நகரில் 100 படுக்கை கொண்ட மருத்துவமனை, மங்களூர்  நகரில் கண்மருத்துவமனை, தார்வாத் நகரில் ஒரு பல் மருத்துவமனை மற்றும் 400 படுக்கைகள் கொண்ட பொது மருத்துவமனை பல்வேறு அரசு மருத்துவமனைகளில் தனி கட்டிடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அழிப்பது என்று மருத்துவத் துறையிலும் ஹெக்கடேயின் சேவை மகத்தானது.

மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு கல்வி நிறுவனங்களையும் ஹெக்கடே தொடங்கி உள்ளார். ஆரம்பக் கல்வி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள், கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டப் படிப்பு, மருத்துவம், மேலாண்மை என்று பல்வேறு துறைகளில் உயர் கல்விக்கான நிறுவனங்களை ஹெக்கடே நடத்தி வருகிறார்.

பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற முன்னேற்றம், கிராமப்புற சுயசார்பு, கைத்தொழில் வளர்ச்சி,  நலிவடைந்த கோவில்களை சீரமைப்பு செய்தல் என்று பல்வேறு துறைகளில் வீரேந்திர ஹெக்கடே செயலாற்றி வருகிறார். இது போக பல்வேறு வழக்குகளைத் தீர்த்து வைக்கும் நீதிபதியாகவும் அவர் உள்ளார். அவரது தீர்ப்பை பொதுவாக மக்கள் மீறுவது இல்லை.

பலனில் பற்று வைக்காமல் கடமையை கடமைக்காகவே செய் என்று கீதை கூறுகிறது. எந்த செயலுக்கும் அதற்கான பலன் வந்தே சேரும் ஆனால் பலனுக்காகவே செயல் செய்வது தவறு என்பது கீதை காட்டும் பாதை. நீண்ட காலம் சமுதாய சேவையை தனது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்ட வீரேந்திர ஹெக்கடே அவர்களுக்கு பல்வேறு பட்டங்களும் விருதுகளும் தானாகவே வந்து சேர்ந்தது. 2009ஆம் ஆண்டு  கர்நாடக அரசு அவருக்கு கர்நாடக ரத்னா என்ற விருதை வழங்கியது. பாரத அரசு 2000ஆம் ஆண்டில்  பத்ம பூஷன் விருதையும் பின்னர் 2015ஆம் ஆண்டு நாட்டின் இரண்டாவது மதிப்பு மிக்க விருதான பத்மவிபூஷண் விருதையும் வழங்கி அவரை சிறப்பித்தது.

அறம் காக்க அறம் நம்மைக் காக்கும் என்ற மொழிக்கு உதாரணமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் திரு வீரேந்திர ஹெக்கடே அவர்களுக்கு  ஒரே இந்தியா தளம் தனது வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
வீரேந்திர ஹெக்கடேயின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக என்றும் இருக்கும். 

திங்கள், 24 நவம்பர், 2025

நவம்பர் 24 - குரு தேஜ் பகதூர் பலிதானதினம்

சீக்கியர்களின் குரு பரம்பரையின் ஒன்பதாவது குருவான குரு தேஜ் பகதூரின் பலிதான தினம் இன்று. தர்மத்தின் வழி நிற்பதா இல்லை மரணத்தைத் தழுவுவதா என்ற கேள்வி எழுந்த போது, அழியும் உடலுக்காக அழியாத தர்மத்தை விடக்கூடாது என்று செயலில் காட்டியவர் குரு தேஜ்பகதூர்.


சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோவிந்த் அவர்களின் மகனாக 1621ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் நாள் அமிர்தசர் நகரில் பிறந்தவர் குரு தேஜ் பகதூர். இவரின் இயற்பெயர் தியாகாமால் என்பதாகும். தேஜ் பகதூர் என்ற பெயருக்கு வாள் சண்டையில் விற்பன்னர் என்று பொருள். இவரது வீரத்தினால் குரு இந்தப் பெயரில் அறியப்பட்டார். அன்று அமிர்தசர் நகரம் சீக்கியர்களின் அறிவிக்கப்படாத தலைநகரமாக விளங்கியது. சீக்கிய குருமார்களின் இருப்பிடமாக அது இருந்தது, குதிரையேற்றத்திலும், பல்வேறு தற்காப்பு பயிற்சியிலும் சிறந்து விளங்கிய தேஜ் பகதூர் வேதங்களையும் உபநிஷதங்களையும் தெளிவாகக் கற்றுத் தேர்ந்திருந்தார். மாதா குஜிரி என்பவரை குரு திருமணம் செய்திருந்தார்.

தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் குரு ஹர்கோவிந்த் அம்ரித்சர் நகரின் அருகில் உள்ள பக்கலா என்ற சிறுநகருக்கு  குடிபெயர்ந்தார். தேஜ் பகதூரும் அங்கேயே வசிக்கத் தொடங்கினார். குரு ஹர் ராய், குரு ஹர் கிருஷ்ணன் ஆகியோரைத்  தொடந்து சீக்கியர்களின் ஒன்பதாவது குருவாக குரு தேஜ்பகதூர் 1664ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.

பெரும் வீரராக மட்டுமல்லாது குரு தேஜ் பகதூர் சிறந்த கவிஞராகவும், தத்துவ ஞானியாகவும் விளங்கினார். வட இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு விஜயம் செய்து சீக்கிய தர்மத்தைப் பரப்பவும், பல்வேறு மக்களை நல்வழிப் படுத்தவும் என்று அவர் செயலாற்றிக்கொண்டு இருந்தார். அவரது முயற்சியால் பல்வேறு இடங்களில் சீக்கியர்கள் குடிநீர் குளங்களை அமைத்தும் லங்கர் என்று அழைக்கப்படும் இலவச உணவு வழங்கும் நிலையங்களையும் அமைத்தனர். கிழக்கே அசாம் முதல் மத்திய பாரதத்தில் பிலாஸ்பூர், மேற்கே வடமேற்கு எல்லைப்புற மாகாணங்கள் வடக்கே காஷ்மீர் என்று பல்வேறு இடங்களுக்கு குரு விஜயம் செய்தார். மதுரா, ஆக்ரா வாரணாசி என்று பல்வேறு நகரங்களுக்கு சென்று குரு தர்மப் பிரச்சாரம் செய்து வந்தார். பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய நகரமாக விளங்கும் அனந்தபூர் சாஹிப் நகரம் குரு தேஜ் பகதூர் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த  சாஹிப்பில் குரு தேஜ் பகதூர் இயற்றிய எழுநூற்று எண்பதுக்கும் மேலான பிரார்த்தனை பாடல்கள் இடம்பெற்று உள்ளன.

சீக்கிய குருமார்களின் காலம் பாரத நாட்டில் முகலாய அரசு நடைபெற்றுக் கொண்டு இருந்த காலம். ஹிந்து தர்மத்தின் ஒரு பகுதியாகத்தான் குரு நானக் முதல் குரு தேஜ் பகதூர் வரை சீக்கிய நம்பிக்கைகளை வடிவமைத்துக் கொண்டு இருந்தனர். ஆலயங்களை அழிப்பதும், பசுக்களை கொல்வதும், உருவ வழிபாட்டை  தடை செய்வதும், மக்களை இஸ்லாம் மதத்திற்கு கட்டாயமாக மாற்றுவதும் என்று பல்வேறு முகலாய அரசர்கள் ஈடுபட்டு வந்தனர். அதிலும் அவுரங்கசீப் காலத்தில் இந்த கொடுமைகள் அளவே இல்லாமல் இருந்தது. காஷ்மீரத்தில் உள்ள பண்டிதர்களை வலுக்கட்டாயமாக இஸ்லாமுக்கு மாற்ற அரசு நெருக்கடி கொடுத்தது. குரு தேஜ் பகதூரிடம் காஷ்மீர  பண்டிதர்கள் அடைக்கலம் நாடி வந்தனர். குரு தேஜ் பகதூரை  மதமாற்ற முடிந்தால் மற்றவர்களும் மாறுவார்கள் என்று குரு முகலாய அரசுக்கு பதில் அனுப்பினார்.

முகலாய அரண்மனைக்கு வருமாறு ஆணை பிறந்தது. எது நடக்கும் என்று உணர்ந்த குரு தேஜ் பகதூர் ஒன்பது வயதான தனது மகன் கோவிந்தசிம்மனை பத்தாவது குருவாக நியமித்து விட்டு டெல்லிக்கு பயணமானார். அவரோடு பாய் சதிதாஸ், பாய் மதிதாஸ், பாய் தயாள்தாஸ் ஆகியோரும் இணைந்து கொண்டனர். 1675ஆம் ஆண்டு 12 ஆம் நாள் டெல்லிக்கு அருகே குருவும் அவரது நண்பர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்த அவர்கள் கொடுமையான முறையில் சித்திரவதைக்கு உள்ளானார்கள். பாய் சதிதாஸ் உயிரோடு எரித்து கொல்லப்பட்டார். பாய் மதிதாஸ் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டார். பாய் தயாள்தாஸ் கொதிக்கும் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவை அனைத்தையும் கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த குரு பார்க்கும் வகையில் நடந்தது. இறுதியாக இஸ்லாம் மதத்திற்கு மாறினால் விடுதலை செய்யப்படுவீர்கள் என்று குருவிற்கு சொல்லப்பட்டது. தர்மத்தை கைவிடுவதைக் காட்டிலும் உயிரை விடுவது மேல் என்று குரு பதிலளிக்க, குருவின் தலையை வெட்டி அவரை கொலை செய்தனர் முகலாயர்கள்.

குரு அர்ஜான்சிங்கின் பலிதானம் சீக்கியர்களை ஒன்றிணைத்தது. குரு தேஜ் பகதூரின் பலிதானம் சீக்கியர்களை  இறுதிவரை தனிமனிதர்களின் வழிபாடு உரிமைக்கு போராடும் இனமாக மாற்றியது. குரு தேஜ் பகதூரின் மகனும் சீக்கியர்களின் பத்தாவது குருவுமான குரு கோவிந்தசிம்மன் போராட்ட குணமுடைய இனமாக சீக்கிய இனத்தை வார்த்தெடுத்தார். குரு தேஜ் பகதூரின் பலிதானத்தைத் தொடர்ந்து பல காஷ்மீர பண்டிதர்கள் சீக்கியர்களாக மாறி, கல்சா அமைப்பில் இணைந்து இஸ்லாமியர்களை எதிர்த்துப் போராடத் தொடங்கினார்கள்.

வெறும் உபதேசங்களால் அல்லாது உதாரணத்தால் வாழ்ந்து காட்டிய குருவின் வாழ்வும் பலிதானமும் நம்மை வழிநடத்தட்டும். 

ஞாயிறு, 23 நவம்பர், 2025

நவம்பர் 23 - தொழிலதிபர் வால்சந்த் ஹிராசந்த் பிறந்தநாள்


பாரத நாட்டின் இருபதாம் நூற்றாண்டின் முக்கிய தொழிலதிபரும், வால்சந்த் குழுமத்தைத் தொடங்கியவருமான வால்சந்த் ஹிராசந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று. வியாபாரம் செய்யும் பின்னணியில் தொடங்கிய இவர் கப்பல்துறை, கப்பல் கட்டும் தொழில், கார் உற்பத்தி, விமான கட்டுமானம், கட்டடம் கட்டுதல், சர்க்கரை  உற்பத்தி, ராணுவ தளவாடங்கள் தயாரித்தல் என்று பல்வேறு துறைகளில் தடம் பதித்தவராவார்.

குஜராத் மாநிலத்தைச் சார்ந்த சமண மரபினர் திரு ஹிராசந்த் நேம்சந்த் ஜோஷி. இவர் மஹாராஷ்டிர மாநிலத்தில் பருத்தி வியாபாரம் செய்து வந்தார். இவரின் மகனாக 1882ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் நாள் பிறந்தவர் வால்சந்த் ஹிராசந்த். சோலாப்பூர் அரசு பள்ளியிலும் அதனைத் தொடர்ந்து மும்பை தூய சவேரியார் கல்லூரியில் இளங்கலை பட்டமும் பெற்றார் வால்சந்த். அன்றய வழக்கப்படி படிக்கின்ற காலத்திலேயே இவருக்கு திருமணம் ஆகி விட்டது. ஆனால் சிறிது காலத்திலேயே இவர் மனைவி இறந்துவிட மறுமணம் செய்துகொண்டார்.

படித்து முடித்தபின் தந்தையின் தொழிலில் இணைந்த ஹிராசந்த், அதன் பின்னர் ரயில்வே துறையின் கட்டடங்கள் கட்டும் ஒப்பந்தகாரராக உருவானார். தொடர்ந்து ஆங்கில அரசுக்கு பல்வேறு கட்டடங்களையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் இவர் செய்து கொடுக்கத் தொடங்கினார். அதே நேரத்தில் இந்திய தேசிய கட்சியின் ஆதரவாளராகவும் இருந்தார். அண்ணிபெசன்ட் அம்மையாரோடு இணைந்து Free Press of India என்ற செய்தி நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் அநேகமாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரமற்ற செய்தி நிறுவனமாகவே இயங்கியது.

சில காலம் டாடா குழுமத்தோடு இணைந்து கட்டிடத்துறையில் செயல்பட்ட வால்சந்த் பிறகு டாடா குழுமத்தின் பங்குகளையும் வாங்கிக்கொண்டார். இன்று நாட்டின் முக்கியமான கட்டுமான நிறுவனமாக விலங்கு Hindustan Construction Company என்ற நிறுவனமும் இவர் நிறுவியதுதான். வால்சந்த் அவர்கள் சர்க்கரை தயாரிக்க 1908ஆம் ஆண்டு Walchandnagar Industries என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனம் காலப்போக்கில் சர்க்கரை ஆலைகளை உருவாக்குதல், சிமெண்ட் தயாரிப்பு, பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி என்று பல்வேறு திசைகளில் வெற்றிகரமாகப் பயணித்தது. இன்று நாட்டுக்குத் தேவையான ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் பணியிலும் இந்தக் குழுமம் ஈடுபட்டு உள்ளது. பொக்ரானில் பாரதம் நடத்திய அணுகுண்டு வெடிப்பு சோதனையை அடுத்து அமெரிக்கா இந்த நிறுவனத்தின் மீது தடை விதித்தது, பின்னர் அது விளக்கிக்கொள்ளப்பட்டது.

குவாலியர் அரச குடும்பத்தினரிடம் இருந்து கப்பல் ஒன்றை வாங்கி வால்சந்த் சிந்தியா கப்பல் கம்பெனி என்ற பெயரில் ஒரு புது தொழிலைத் தொடங்கினார். சில காலத்தில் விசாகப்பட்டினதில் கப்பல் கட்டும் தளத்தை நிறுவினார். கப்பல் தொழிலோடு இணைந்ததுதான் காப்பீடு நிறுவனம், எனவே அதையும் அவர் ஆரம்பித்தார். மைசூர் அரச குடும்பத்தோடு இணைந்து பெங்களூர் நகரில் விமான தயாரிப்பிலும் வால்சந்த் ஈடுபட்டார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கப்பல் கட்டும் தளத்தையும், விமான தயாரிப்பு நிறுவனத்தையும் அன்றய அரசு நாட்டுடமை ஆக்கியது. அவை இன்று Hindustan Shipyard Ltd, Hindustan Aeronautical Ltd என்று அறியப்படுகின்றன. இதோடு வால்சந்த் கார் தயாரிக்கும் தொழிலிலும் ஈடுபட்டார். சென்ற நூற்றாண்டின் எண்பதுகள் வரை புகழ்பெற்ற விளங்கிய Premier Padmini கார்கள் இவரது தயாரிப்பே.

மஹாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளையும் வால்சந்த் நிறுவினார். தேசிய கப்பல் உரிமையாளர்கள் சங்கம், இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு, மகாராஷ்டிரா மாநில தொழில்  தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஆகியவற்றில் நீண்ட காலம் தலைவராகவும் வால்சந்த் பணியாற்றினார்.

பாரதம் சுதந்திரம் அடைந்த நேரத்தில் இந்தியாவின் முதல் பத்து  முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருந்த வால்சந்த் ஹிராசந்த் 1953ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் நாள் காலமானார். 

சனி, 22 நவம்பர், 2025

நவம்பர் 22 - மருத்துவர் ருக்மாபாய் பிறந்ததினம்

சிறுவயதில் நடைபெற்ற தனது திருமணம் செல்லாது என்று போராடி மருத்துவராக மாறிய ஒரு வீரப்பெண்ணின் கதை இது. மராத்தி குடும்பத்தைச் சார்ந்தவர் ஜெயந்திபாய். பதினான்கு வயதில் திருமணமாகி பதினைந்து வயதில் தாயாகி பதினேழு வயதில் கணவரை இழந்தவர் ஜெயந்திபாய். கணவனை இழந்த பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து ஜெயந்திபாய் சகாராம் அர்ஜுன் என்னும் மருத்துவரை மறுமணம் செய்துகொண்டார். ஜெயந்திபாய்க்கு முதல் திருமணத்தில் பிறந்த ருக்மாபாய் தன் தாயோடும் சகாராம் அர்ஜுனோடும் வசித்து வந்தார். அன்றய வழக்கத்தின்படி ருக்மாபாயின் பதினோராம் வயதில் அவருக்கு பத்தொன்பது வயதான தாதாஜி பிகாஜி என்பவரோடு திருமணம் நடந்தது.


குடும்பம் நடத்துவதற்கான வயதும் பக்குவமும் வராத காரணத்தால் ருக்மாபாய் தன் பெற்றோர்களோடு வசித்து வந்தார். அப்போது சகாராம் ருக்மாவிற்கு கல்வி கற்பதில் ஆர்வத்தை உருவாக்கினார். திருமணமாகி சிலகாலம் கழிந்த பிறகு தாதாஜி பிகாஜி தன் மனைவி ருக்மாபாய் தன்னோடு வந்து குடும்பம் நடத்தவேண்டும் என்று கூறினார். அன்றய காலகட்டத்தில் இது இயல்பான ஒன்றுதான். ஆனால் படிப்பின்மீதோ கல்வியின்மீதோ எந்த நாட்டமும் இல்லாத கணவரோடு வாழ ருக்மாபாய் மறுத்துவிட்டார். தனது முயற்சிகள் ஏதும் பலனைக்காததால் தாதாஜி பிகாஜி தன் மனைவி தன்னோடு வசிக்கவேண்டும் என கட்டளையிட வேண்டும் என நீதிமன்றத்தை அணுகினார்.

பிகாஜி எதிர் ருக்மாபாய் வழக்கு ( 1885 ) என்ற இந்த வழக்கு அந்த காலகட்டத்தில் பெரும் சர்சையைக் கிளப்பியது. ஹிந்து சட்டங்களுக்கும் ஆங்கில கிருஸ்துவ சட்டங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள், மாறுதல் என்பது தன்னிச்சையாக சம்பந்தப்பட்ட சமுதாயத்தின் உள்ளே இருந்து வரவேண்டுமா அல்லது சட்டத்தின் மூலமாக வெளியே இருந்து திணிக்கப்பட்ட வேண்டுமா, பலகாலங்களாக நடைமுறையில் உள்ள முறைகளை மதிக்கவேண்டுமா அல்லது அவைகளை காலத்திற்கு ஏற்ப மாற்றலாமா  என்ற விவாதங்கள் எழுந்தன. தனது வாழ்க்கையை தானே தீர்மானிக்கும் மனமுதிர்ச்சி இல்லாத காலத்தில் நடைபெற்ற திருமணம் செல்லாது என்று நீதிபதி ராபர்ட் ஹில் பின்ஹே தீர்ப்பளித்தார்.

இதனை ஏற்காத தாதாஜி பிகாஜி மேல்முறையீடு செய்தார். ருக்மாபாய் தன் கணவரோடு வாழவேண்டும் அல்லது ஆறுமாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி பாரன் தீர்ப்பளித்தார். தன்மீது திணிக்கப்பட்ட மணவாழ்க்கையை விட சிறைத்தண்டனை ஏற்பது மேல் என்று ருக்மாபாய் முடிவு செய்தார். இதற்கிடையில் இங்கிலாந்து பேரரசி விக்டோரியா மஹாராணி நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்து ருக்மாபாயின் திருமணம் செல்லாது என்று உத்தரவு பிறப்பித்தார். இரண்டாயிரம் ரூபாய் இழப்பீடு பெற்றுக்கொண்டு தாதாஜி பிகாஜி தனது திருமண உரிமையை வீட்டுக் கொடுத்தார். 1891ஆம் ஆண்டு ஆங்கில அரசு தனது ஆட்சிக்கு உள்பட்ட இந்தியப் பிரதேசங்களிலும் பெண்களின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை பத்தில் இருந்து பனிரெண்டாக உயர்த்தியது.

ஒருபுறம் சட்டப் போராட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தாலும் ருக்மாபாய் மனதில் தனது வளர்ப்பு தந்தையைப் போல தானும் மருத்துவராக  வேண்டும் என்ற கனவு இருந்தது. மருத்துவம் படிக்க லண்டன் சென்ற ருக்மாபாய் 1894ஆம் ஆண்டு லண்டன் பெண்கள் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார். காதம்பரி கங்குலி, ஆனந்தி ஜோஷி ஆகியோரோடு மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற முன்னோடி பெண்மணிகளில் ஒருவராக அறியப்படலானார். 1895ஆம் ஆண்டு சூரத் பெண்கள் மருத்துவமனையில் பணியாற்றத் தொடங்கிய ருக்மாபாய் பின்னர் ராஜ்கோட் நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மருத்துவமனையில் பணியாற்றினார். வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் மும்பையில் வசித்து வந்தார்.

பல்வேறு தடைகளைத் தாண்டி சாதனை படைத்த ருக்மாபாய் தனது தொன்னூறாவது வயதில் 1955ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் நாள் காலமானார். 

வெள்ளி, 21 நவம்பர், 2025

நவம்பர் 21 - நாயக் ஜாதுநாத் சிங் பிறந்ததினம்

1947 - 1948 ஆண்டுகளில் நடைபெற்ற பாகிஸ்தானோடான போரில் மகத்தான வீரச் செயலுக்கான பரம்வீர் சக்ரா விருது பெற்றவர் நாயக் ஜாதுநாத்சிங்.

 1916 நவம்பர் 21ல் உத்தரப் பிரதேசத்திலுள்ள ஷாஜஹான்பூர் அருகே கஜூரி என்ற கிராமத்தில் பிரபால்சிங் ரத்தோர் ஜமுனா கன்வார் தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் ஜாதுநாத். ஏழு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண்ணும் என்ற எட்டுப்பேர் கொண்ட பெரிய குடும்பத்தின் மூன்றாவது மகன் இவர். பொருளாதாரத்தில் கடினமான சூழ்நிலையில் இருந்த குடும்பத்தில் பிறந்ததால் இவர் நான்காம் வகுப்புவரைதான் படிக்க முடிந்தது. பிறகு விவசாயத்தில் தனது தந்தைக்கு ஜாதுநாத் உதவியாக இருந்தார். வட இந்தியாவின் பல பகுதிகளில் மற்போர் ஒரு முக்கியமான விளையாட்டும் பொழுதுபோக்கும் ஆகும். சிறு வயதில் இருந்தே மற்போரில் ஈடுபட்டு பல பரிசுகளையும் பதக்கங்களையும் ஜாதுநாத் வென்றார். ஹனுமான் போன்ற பலசாலி என்று மக்கள் அவரைப் புகழ்ந்தார்கள். 

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜாதுநாத் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இணைந்துகொண்டார். முறையான ராணுவப் பயிற்சிகள் முடிந்த பிறகு ஜாதுநாத் ராஜ்புத் படைப்பிரிவுக்கு அனுப்பப்பட்டார். ராஜ்புத் படைப்பிரிவு ஏறத்தாழ இருநூற்று இருபத்தி ஐந்து ஆண்டு கால வரலாறு கொண்ட பாரத ராணுவத்தின் பழமையான படைப்பிரிவாகும். 1798ஆம் ஆண்டு முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் இந்தப் படைக்கு உண்டு. இந்தப் படையின் குறிக்கோள் "ஸர்வத்ர விஜய்" அதாவது எல்லா இடங்களிலும் வெற்றி அல்லது எல்லாப் போர்களிலும் வெற்றி என்பதாகும். இவர்களின் போர் முழக்கம் " போல் பஜ்ரங்கபலி கி ஜெய்" என்பது. ஒரு பரம்வீர் சக்ரா, மூன்று அசோக சக்ரா, ஐந்து பரம் விஷிஸ்ட சேவா பதக்கங்கள், ஏழு மஹாவீர் சக்ரா, பனிரெண்டு கீர்த்தி சக்ரா, ஐந்து அதி விஷிஸ்ட சேவா பதக்கங்கள், அறுபத்தி ஆறு வீர் சக்ரா, இருபது சூரிய சக்ரா, எட்டு யுத்த சேவா பதக்கங்கள், முன்னூற்றி பதின்மூன்று சேவா பதக்கங்கள், பத்தொன்பது விஷிட்ட சேவா பதக்கங்கள் என்று பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்த பெருமை இந்தப் படைப்பிரிவுக்கு உண்டு. பாரத ராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் பணியாற்றிய ஜெனரல் கரியப்பா மற்றும் ஜெனரல் வி கே சிங் ஆகியோர் ராஜ்புத் படைப்பிரிவைச் சார்ந்தவர்கள். 

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இந்தப் படை பர்மா நாட்டின் அர்கான் பகுதியில் நடைபெற்ற போரில் கலந்து கொண்டது. இவரது ராஜ்புத் படைப்பிரிவு அங்கே கிராமம் கிராமாக முன்னேறி ஜப்பானியப் படைகளை வென்றது. ஒரு கட்டத்தில் இவரது படைப்பிரிவு ஜப்பானிய தாக்குதலில் தனிமைப்படுத்தப்பட்டது. கடும் போருக்குப் பிறகு உயிருடன் இருந்தவர்களை மீட்டு இந்தியா கொண்டுவந்தனர்.

1945ல் இவரது படைப்பிரிவு அந்தமான் தீவுகளைக் காக்க அங்கிருக்கும் படையுடன் சேர்ந்துகொள்ள ஆணைவந்தது. அங்கே இருந்த ஜப்பானியப் படை சரணடைந்ததும் அக்டோபர் 1945ல் இவரது படைப்பிரிவு தில்லி வந்தது. சிப்பாய் ஜாதுநாத் நாயக்காக பதவி உயர்வு பெற்றார். தேச விடுதலைக்குப் பிறகு புதிய படைப்பிரிவுக்குப் போன ஜாதுநாத் அங்கே பயிற்சிகளில் ஈடுபட்டு வீரர்களை பலசாலிகளாக மல்யுத்ததிலும் பயிற்றுவித்தார்.

அதே காலகட்டத்தில் காஷ்மீரைக் கைப்பற்ற பட்டாணியர்களை பாகிஸ்தான் அனுப்பியது. காஷ்மீரைக் கைப்பற்ற பாரத ராணுவம் களம் இறங்கியது. ஒரே சமயத்தில் ஸ்ரீநகரையும் ஜம்மு பகுதியிலும் பாகிஸ்தான் ஊடுருவியது. வடக்கே பூஞ்ச் பகுதி முதல் தென்கிழக்கே கதுவா வரை கைப்பற்றுவது அவர்களின் இலக்கு. பூஞ்ச், கோட்லி, மிர்பூர், ஜங்கர், நௌஷாரா, ரஜோரி ஆகிய நகரங்களை அவர்கள் சுற்றி வளைத்தனர். பாரத ராணுவம் வரும்வரை ஜம்மு காஷ்மீர் மகாராஜாவின் படை ஊடுருவல்காரர்களைத் தடுத்து நிறுத்திக் கொண்டு இருந்தது. 

ஊடுருவல்காரர்கள் அனைவரையும் விரட்டி காஷ்மீரைக் காப்பாற்ற ராணுவத்திற்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. மேஜர் ஜெனரல் கல்வந்சிங் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். குர்தாஸ்புர் நகரில் இருந்து ஒரு படைப்பிரிவு ஜம்முவிற்கு விரைந்தது. ஜங்கர் மற்றும் நௌஷாரா பகுதிகளைக் காப்பாற்றுவது முக்கியமான சவாலாக இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக ஜங்கர் பகுதியை பாரத ராணுவத்தால் காப்பாற்ற முடியவில்லை. 1947ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் பாகிஸ்தானியர்கள் இந்த நகரத்தைக் கைப்பற்றினார்கள். மேலும் பாகிஸ்தானியர்கள் ஊடுருவாமல் தடுக்க நௌஷாரா நகரின் வடமேற்குத் திசையில் இருந்து தொடர்ச்சியான தாக்குதல்களை பாரத ராணுவம் மேற்கொண்டது. புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிரிகேடியர் முகமது உஸ்மான் தனது படையை சிறிய அணிகளாகப் பிரித்து பல்வேறு இடங்களில் நிறுத்தினார், நௌஷாரா நகரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது டைன்தர் என்ற இடம். இதனைக் காவல் காக்கும் பொறுப்பு ஜாதுநாத்சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. ஒரு சிறிய படைப்பிரிவு அவருக்கு அளிக்கப்பட்டது. அந்தப் படைக்கு அவர் தலைமை தாங்கினார். 

1948ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் நாள். அதிகாலை நேரம், சூரியன் அப்போதுதான் உதித்துக்கொண்டு இருந்தது. தொலைவில் ஆள் நடமாட்டம் இருப்பதாய் ஜாதுநாத் சிங் பார்த்தார். மலைமுகத்தில் இருந்து அலையலையாக பாகிஸ்தானிய ராணுவம் கீழே இறங்கிக்கொண்டு இருந்தது. நூற்றுக்கணக்கான வீரர்கள் எதிரே வந்துகொண்டு இருந்தார்கள். ஜாதுநாத்சிங்கிற்கும் அவரது மிகச் சிறிய படைக்கும் ஓன்று போரிட்டு வீரமரணம் அடைவது அல்லது எதிரியிடம் சரணடைவது என்ற இரண்டு வாய்ப்புகளில் ஒன்றுதான் இருந்தது. உயிரோடு திரும்பிச் செல்வது என்பது இயலாத ஓன்று என்பது நிச்சயமாகத் தெரிந்தது. 

வீரர்கள் பிறக்கிறார்களா அல்லது உருவாக்கப்படுகிறார்களா ? இது இன்றும் விடை தெரியாத கேள்வி. சவாலான நேரத்தில் எடுக்கப்படும் முடிவுதான் ஒருவரை வீரர் என்று பிரகடனப் படுத்துகிறது. ஸர்வத்ர விஜய் - அதாவது எதிர்கொள்ளும் போரில் எல்லாம் வெற்றி, இதுதான் ராஜ்புத் படைப்பிரிவின் குறிக்கோள். உயிரைக் கொடுத்து முடிந்தவரை எதிரிப் படையை அழித்து, அவர்கள் முன்னேற்றத்தைத் தடுப்பது என்று ஜாதுநாத்சிங் முடிவு செய்தார். 

இருபுறமும் துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்கத் தொடங்கியது. இயந்திரத் துப்பாக்கிகள் தோட்டாக்களை உமிழும் சப்தமும், கையெறி குண்டுகளால் ஏற்படும் புகையும் அந்த மலைப்பிரதேசத்தில் எதிரொலிக்கத் தொடங்கியது. பணமும், பொருளும், கைபற்றிச் செல்ல இருக்கும் பெண்களும் பட்டாணியர்களை வெறியேற்ற,  நாட்டின் மானத்தையும்  படைப்பிரிவின் கௌரவத்தையும் காப்பாற்றும் தேவைக்காக ஜாதுநாத்சிங்கின் சிறிய படை அவர்களைத் தடுத்து நிற்க அந்த நிலம் ரத்தத்தால் சிகப்பு நிறமாக மாறத் தொடங்கியது. இறந்து விழும் ஒவ்வொரு பட்டாணியருக்கும் குறைந்தது இரண்டு பேர் அதே இடத்தில இருந்து தாக்கத் தொடங்கினார்கள். முதல் தாக்குதலை ஜாதுநாத்சிங்கின் படை வெற்றிகரமாக முறியடித்தது. ஆனால் பாரதப் படையில் பல வீரர்கள் படுகாயம் அடைந்தார்கள். 

பட்டாணியர்கள் இரண்டாவது முறையாகத் தங்கள் தாக்குதலைத் தொடர்ந்தார்கள். மீண்டும் கடுமையான சண்டை, இதில் ஜாதுநாத்சிங்கின் படைவீரர்கள் அனைவரும் வீரமரணம் அடைந்தார்கள். எதிரிகள் பக்கமும் கடுமையான உயிர்சேதம். மீண்டும் பின்வாங்கிய பட்டாணியர்கள் மீதமுள்ள தங்கள் ஆட்களையும் சேர்த்துக்கொண்டு அடுத்த தாக்குதலைத் தொடங்கினார்கள். தனி ஒருவனாக அவர்களை ஜாதுநாத்சிங் எதிர்கொண்டார். 

ரத்தம் சொட்டும் கையோடு பதுங்குகுழியில் இருந்து வெளியே வந்து எதிரிகளை நோக்கி ஜாதுநாத்சிங் சுடத் தொடங்கினார். தனது பாதுகாப்பைப் பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாமல் ஜாதுநாத்சிங் தாக்கத் தொடங்கியது எதிரிகளை குழப்பியது. ஏற்கனவே பலரை இழந்திருந்த பட்டாணியர்கள் நிலைகுலைந்து பின்வாங்கினார்கள். எட்டு குண்டுகளை உடல்முழுவதும் தாங்கி ஜாதுநாத்சிங் வீரமரணம் அடைந்தார். . 

எல்லையைக் காத்து நிற்கும் வீரர்களுக்கு துணையாக நமது படையின் பெரும் பிரிவு ஓன்று வந்து சேர்ந்தது.  தோற்று ஓடும் பட்டாணியர்களையும்,  அதனைப் பார்த்தவாறே கண்களைத் திறந்தபடி வீரமரணம் அடைந்த ஜாதுநாத்சிங் மற்றும் அவரது சகாக்களை உயிரற்ற உடலாகத்தான் பார்க்க நேர்ந்தது. 

ஜாதுநாத்சிங்கின் மகத்தான வீரத்தைக் கெளரவம் செய்யும் வகையில் பாரத நாடு அவருக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கியது.  

வியாழன், 20 நவம்பர், 2025

நவம்பர் 20 - தடையற்ற பொருளாதார ஆதரவாளர் மினு மசானி பிறந்தநாள்



காங்கிரஸ் கட்சிக்குள் சோசலிச சித்தாந்தத்தை முன்னெடுத்தவர், ஆனால் அந்த முறை பயன்தராது என்று உணர்ந்தபோது மிகச் குறைந்த அரசு கண்காணிப்பில் இயங்கும் தொழில்முறைக்கு ஆதரவாக செயல்பட்டவர், நேருவுக்கு ஒரு காலத்தில் நெருங்கிய தோழராகவும், பின்னர் அவரது கடுமையான விமர்சகராகவும் மாறியவர், கடவுள் நம்பிக்கை இல்லாத, மாட்டுக்கறி உண்ணும் பார்சி ஆனால் காலம் முழுவதும் மது அருந்தாத, மாமிசம் உண்ணாத ராஜாஜி தொடங்கிய ஸ்வராஜ்யா கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் என்று பல்முக ஆளுமை மினு மசானியின் பிறந்தநாள் இன்று.

மும்பை பல்கலைக்கழத்தின் துணைவேந்தராகவும் மும்பை மாநகராட்சி ஆணையராகவும் இருந்த சர் ருஸ்தம் மசானியின் மகனாக 1905ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் பிறந்தவர் மினோச்சேர் ருஸ்தம் மசானி, சுருக்கமாக மினு மசானி. மும்பையில் கல்வி கற்ற மினு மசானி லண்டனில் பொருளாதாரமும், அதனைத் தொடர்ந்து சட்டமும் பயின்றார்.

1929ஆம் ஆண்டு பாரதம் திரும்பிய மினு மசானி மும்பையில் வழங்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். ஆனால் அடுத்த வருடமே காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு வழக்குரைஞர் தொழிலை நிறுத்திக் கொண்டார். விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக பலமுறை சிறை தண்டனை அனுபவித்தார். 1932ஆம் ஆண்டு நாசிக் சிறையில் இருந்த போது ஜெயப்ரகாஷ் நாராயணனின் பழக்கம் ஏற்பட்டது. அன்றய இளைஞர்களுக்கு அதுவும் வெளிநாட்டில் படித்துவிட்டு வந்தவர்களுக்கு இயல்பாகவே கம்யூனிச சித்தாந்தத்தின் மீது ஒரு பிடிப்பு இருந்தது. உலகில் பெரும்பாலான நாடுகள் சில ஐரோப்பிய நாடுகளின் அடிமையாக இருக்கும் நேரத்தில், பாட்டாளி மக்களால் நடத்தப்படும் சோவியத் யூனியன் ஒரு கனவு தேசமாக தெரிந்ததால் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

1934ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாகவே இந்தியன் சோசலிஸ்ட் காங்கிரஸ் என்ற அமைப்பை சோசலிச சித்தாந்தத்தில் பிடிப்புள்ளவர்கள் தொடங்கினார்கள். அதில் மினு மசானி முக்கியமான ஒருவர். இளைய தலைமுறை தலைவராக உருவாக்கிக்கொண்டு இருந்த நேருவும் சோசலிச சித்தாந்தத்தைத்தான் முன்னெடுத்தார். அதனால் இயல்பாகவே மசானி நேருவின் நெருங்கிய நண்பரானார். மினு மசானி மும்பை மாநகராட்சியின் மேயராகவும் அதன் பின்னர் அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடு விடுதலையான பிறகு பிரேசில் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டார். நாடு திரும்பிய மசானி Freedom First என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்திவந்தார்.

சோவியத் ரஷ்யா பற்றி கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பங்கள் உண்மையில்லை என்பதை மிகவிரைவில் மினு மசானி புரிந்து கொண்டார். ஆனால் அவரின் இந்தப் புரிதல் அவர் மீது நேருவுக்கு ஒரு ஒவ்வாமையை உருவாக்கியது. நேரு நாட்டை சோஷலிச பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பினார். ரஷ்யா போலவே விவசாய நிலங்களை எல்லாம் அரசின் கீழ் கொண்டுவந்து கூட்டுப் பண்ணை முறையை உருவாக்க வேண்டும் என்று விரும்பினார். சோசலிச முறை பாரத நாட்டின் பிரச்சனைகளை தீர்க்காது என்று கருதிய மசானி 1957ஆம் ஆண்டு தேர்தலில் ராஞ்சி தொகுதியில் சுயேட்ச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சுதந்திரம் கிடைத்து பத்து ஆண்டுகள்தான் ஆகி இருந்தது. நாட்டின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவராக நேரு விளங்கினார். ஆனால் மக்களாட்சி முறைக்கு இது கேடு, நேருவின் கொள்கைகள் நாட்டை முன்னேற்றாது என்று எண்ணிய ராஜாஜி ஸ்வதந்தரா கட்சியைத் தொடங்கினார். அரசு என்பது அரசாட்சி செய்யவேண்டும், வணிகம் செய்வது அரசின் வேலை இல்லை என்பது ஸ்வதந்த்ரா கட்சியின் கொள்கை. சுருக்கமாகச் சொன்னால் 1990இல் நரசிம்மராவ் முன்னெடுத்த தாராளமயமாக்கள்தான். பேராசிரியர் என் ஜி ரெங்கா போன்ற தலைவர்கள் ஸ்வதந்தரா கட்சியில் இருந்தார்கள். கட்சியின் தலைவராக மினு மசானி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்வதந்தரா கட்சி சார்பாக 1971ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் மசானி.

பாரதிய ஜனசங்கம் அப்போது பெரிய கட்சியாக உருவாகவில்லை. நாடாளுமன்றத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக ஸ்வதந்தரா கட்சி விளங்கியது. நேருவிற்குப் பின் இந்திரா இன்னும் வேகமாக சோசலிச சித்தாந்தத்தை முன்னெடுத்தார். தொழிலதிபர்களை பணக்காரர்களை எதிர்மறையாகக் காட்டுவதன் மூலம், நாட்டின் பெரும்பாலான ஏழை மக்களின் ஓட்டைப் பெற்றுவிடலாம் என்று அவர் எண்ணினார். மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசிய மயமாக்கல் என்று இந்திரா அதிரடி ஆட்டங்களை ஆடினார். இவை சட்டபூர்வமானது அல்ல என்று மசானி நாடாளுமன்றத்தில் வாதாடினார். நீதிமன்ற உத்தரவுகளை புறம்தள்ளி அவசரச் சட்டங்களின் மூலம் தனது எண்ணத்தை இந்திரா நிறைவேற்றிக்கொண்டார்.

வங்க தேச விடுதலையை அடுத்து நடந்த 1971ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்திரா பெரும் வெற்றியைப் பெற்றார். கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று மசானி கட்சியின் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்தார். அடுத்த வருடத்தில் ராஜாஜி இறக்க, ஸ்வதந்த்ரா கட்சி இல்லாமலே போனது. ஆனால் ராஜாஜியும் அவரது சகாக்களும் கூறியது உண்மை என்று காலம் நிரூபித்தது. சோசலிச முறை தோல்வி அடைய, சுதந்திரப் பொருளாதார முறைக்கு நாடு திரும்பியது.

1971ஆம் ஆண்டுக்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகிய மினு மசானி தனது பத்திரிகையை நடத்துவதிலும் பல்வேறு புத்தகங்களை எழுதுவதிலும் இயங்கி கொண்டு இருந்தார். 1975ஆம் ஆண்டு இந்திரா பிரகடனம் செய்த நெருக்கடி நிலை சமயத்தில் மசானியின் Freedom First பத்திரிகையும் தணிக்கைக்கு உள்ளானது. அப்போதும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதாடி தணிக்கையை மசானி ரத்து செய்ய வைத்தார்.

ஒரு காலத்தில் பாரத நாட்டு அரசியலில் தவிர்க்கமுடியாத அங்கமாக இருந்த மினு மசானி தனது தொண்ணூற்றி இரண்டாம் வயதில் 1998ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் நாள் காலமானார். 

புதன், 19 நவம்பர், 2025

நவம்பர் 19 - ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் பிறந்ததினம்

பாரதப் பெண்களின் வீரத்திற்கு உதாரணம் சொல்லவேண்டும் என்றால் அனைவரும் ஒருமித்த குரலில் கூறும் பதில் ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் என்றுதான் இருக்கும். அந்த வீரத்தாயின் பிறந்ததினம் இன்று. 


ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், 19 நவம்பர் 1828 ஆம் ஆண்டு  வாரணாசி நகரில்  ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மணிகர்ணிகா என்பதாகும். தனது நான்காவது வயதிலேயே தாயை இழந்து, தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். சிறுவயதிலேயே குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் மற்றும் கத்திச்சண்டை போன்றவற்றில் பயிற்சி பெற்று இருந்தார்.
1842 ஆம் ஆண்டு ஜான்சியின் மஹாராஜாவாக இருந்த கங்காதர்ராவ் நிவால்கர் என்பவரை மணந்து கொண்டார். அதன் பிறகு லக்ஷ்மிபாய் என்று அழைக்கப்படலானார். இவர்களுக்கு 1851ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தான், ஆனால் சில மாதங்களிலேயே அந்த மகன் இறந்துவிட்டான்.

1853 ல், மகாராஜா கங்காதர் ராவின் உடல்நிலை பலவீனமானதால், அவர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தனர். இந்தத் தத்தெடுப்பின் மீது ஆங்கிலேயர்கள் பிரச்சனை எழுப்பக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்த லட்சுமிபாய் அவர்கள், உள்ளூர் ஆங்கிலேய பிரதிநிதிகளை சாட்சியாக வைத்து இந்த தத்தெடுப்பை நடத்தினார். நவம்பர் 21 ஆம் தேதி, 1853 ஆம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் மரணமடைந்தார். அந்த காலகட்டத்தில்,  பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ‘லார்ட் தல்ஹௌசீ’ என்பவர் ஆட்சியில் இருந்தார்.

ராணி லட்சுமிபாய் அவர்கள், தத்தெடுத்த குழந்தைக்கு ‘தாமோதர் ராவ்’ என்று பெயரிட்டார். இந்துமத மரபின் படி, அக்குழந்தையே லட்சுமிபாய் அவர்களின் சட்ட வாரிசாக இருந்தது. இருப்பினும், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அந்த குழந்தையை சட்ட வாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். மறுப்பு கோட்பாட்டின் (Doctrine of Lapse) படி,  லார்ட் தல்ஹௌசீ அவர்கள் ஜான்சி அரசைப் பறிமுதல் செய்ய முடிவுசெய்தார். ராணி லட்சுமிபாய் அவர்கள், ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரிடம் சென்று ஆலோசனைக் கோரினார். அதன்பிறகு, அவர் லண்டனில் அவரது வழக்கிற்கான ஒரு முறையீட்டை மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஆங்கிலேய அதிகாரிகள், லட்சுமிபாய் அவர்களின் அரசு நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், ராணி லட்சுமிபாய் அவர்களை ஜான்சி கோட்டையை விட்டு செல்லுமாறு ஒரு ஆணை நிறைவேற்றப்பட்டதால், ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், ஜான்சியிலுள்ள ‘ராணி மஹாலுக்கு’ சென்றார். அந்நேரத்திலும், லட்சுமிபாய் அவர்கள், ஜான்சி அரசைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.

ராணி லக்ஷ்மி பாய் அவர்களை ஜான்சியை விட்டு வெளியேறி சொல்லி பிறப்பித்த ஆணை, ஜான்சியை எழுச்சியின் இடமாக மாற்றியது. ஜான்சி ராணி அவர்கள் தனது நிலையை வலுப்படுத்த தொடங்கினார். பிறரது ஆதரவை நாடிய அவர், அவரது ஆதரவாளர்களைக் கொண்டு ஒரு தொண்டர் படையை உருவாக்கினார். அவர் உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை, அதில் பெண்களும் கூட தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நடந்த கிளர்ச்சியில், ராணி லட்சுமிபாய், அவரது தளபதிகளுடன் இணைந்து போர் புரிந்தார்.

1857 ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து அக்டோபர் வரை இருந்து,  ராணி லக்ஷ்மி பாய் அவர்கள் அவரது அண்டை நாடுகளான ஓர்ச்சா மற்றும் டாடியாவை படையெடுத்து, அந்நாட்டுப் படைகளின் மூலமாக ஜான்சியைப் பாதுகாத்தார். இதுவே, ஜனவரி 1858ல், பிரிட்டிஷ் இராணுவம், ஜான்சியை நோக்கி படையெடுத்தற்கான காரணமாகும். ஜான்சிக்கும், பிரிட்டிஷ் ராணுவத்திற்குமான மோதல் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தது. இறுதியாக, இரண்டே வாரங்களில் ஆங்கிலேய அரசு ஜான்சி நகரத்தைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. எனினும், அவர் ஒரு ஆண்மகன் வேடம் பூண்டிருந்ததால், அவரை யாரும் அடையாளம் காணவில்லை. தனது வளர்ப்பு மகனை மடியில் ஏந்தியபடியே தப்பித்தார்.

ஆங்கிலேயர் பிடியிலிருந்து தப்பித்த ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், கல்பியில் தஞ்சம் அடைந்தார். அங்கு அவர், 1857ல் நடந்த கிளர்ச்சியில் பங்கேற்ற மாவீரன் தாந்தியா தோபேவை சந்தித்தார். ஆங்கிலேயர்களின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. ஆங்கிலேயப் படையை எதிர்த்து, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் ஜான்சிராணி போரிட்டார். ஆனால், ஆங்கிலேயர்களின் நவீன போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல், 18 ஜூன் 1858 ஆம் ஆண்டு ஜான்சி ராணி அவர்கள் இறந்தார். ராணியின் உடலைக்கூட எதிரிகள் கைப்பற்றி விடக்கூடாது என்று அவரின் வீரர்கள் ராணியின் உடலை எரித்து விட்டனர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் அணிக்கு ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் அணி என்றுதான் பெயரிட்டார். காலங்களைக் கடந்தும் அந்த வீரப்பெண்மணியின் வரலாறு நாடு மக்களை மெய்சிலிர்க்க வைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

செவ்வாய், 18 நவம்பர், 2025

நவம்பர் 18 - திரைப்பட இயக்குனர் V சாந்தாராம் பிறந்தநாள்

வெற்றிகரமான இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் என்ற பல முகங்களைக் கொண்ட திரு சாந்தாராமின் பிறந்தநாள் இன்று. திரைப்படங்களில் ஒலியையும் ஒளியையும் புகுத்திய கலைஞர்களில் இவர் ஒரு முன்னோடி.


1901  ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் நாள் இன்றய மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோல்ஹாபூர் நகரில் பிறந்தவர் சாந்தாராம். இள வயதிலேயே கலையார்வம் கொண்டவராக விளங்கிய சாந்தாராம், பாபுராவ் என்பவர் நடத்திய திரைப்பட நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். 1921ஆம் ஆண்டு சுரேகா ஹரன் என்ற மௌன படத்தில் அறிமுகமானார். நேதாஜி பால்கர் என்ற படத்தை முதல்முதலாக 1927ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்டார். சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் படைத் தளபதி நேதாஜி பாலகர் பற்றிய படம் இது.

அதனைத் தொடர்ந்து 1929ஆம் ஆண்டு நண்பர்கள் சிலரோடு இணைந்து பிரபாத் திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் 1932ஆம் ஆண்டு தயாரான அயோத்திசா ராஜா என்ற படம்தான் மராட்டி மொழியில் தயாரான முதல் படம். அதற்கு முன் அநேகமாக மௌனப் படங்கள்தான் பாரதத்தில் தயாரிக்கப் பட்டு வந்தன. ஒரே நேரத்தில் மராத்தி மொழியிலும் ஹிந்தி மொழியிலும் சாந்தாராம் இயக்கி இருந்தார்.

சமகால வாழ்க்கையைப் பதிவு செய்ததிலும், பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில் இயக்குனர் சாந்தாராம் இன்றும் நினைக்கப்படுகிறார். காவல்துறையைச் சார்ந்த ஒருவருக்கும் பாலியல் தொழில் செய்து வந்த பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட காதலை மனூஸ் என்ற மராத்தி மொழிப் படத்தில் கையாண்டார் சாந்தாராம். மஹாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய ஹிந்து சமயத் துறவியான ஏகநாதரைப் பற்றி தர்மாத்மா, வயதான முதியவரை திருமணம் செய்ய மறுக்கும் இளம் பெண்ணைப் பற்றி துனியா ந மானே ஆகியவை இவர் ஆரம்ப காலங்களில் இயக்கிய முக்கியமான படங்களாகும்.

பிரபாத் திரைப்பட நிறுவனத்தில் இருந்து விலகி 1942ஆம் ஆண்டு ராஜ்கமல் கலாமந்திர் என்ற திரைப்பட நிறுவனத்தை அவர் தொடங்கினார். ஏறத்தாழ அறுபதாண்டு காலத்திற்கும் மேலாக சாந்தாராம் திரைத்துறையில் பங்களித்து வந்தார். ஜனக் ஜனக் பாயல் பஜே என்ற பெயரில் இவர் இயக்கிய திரைப்படம்தான் முதல் வண்ணப்படம். நடனக் கலைஞர்களை கதாநாயகர்களாகக் கொண்ட இந்தப் படம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது.

சிறைத்தண்டனை என்பது கைதிகளை நல்வழிப்படுத்தவே அமைக்கப்பட்டவை என்ற எண்ணத்தை விதைக்கும் தோ ஹங்கேன் பாரா ஹாத் ( இரண்டு கண்களும் பனிரெண்டு கைகளும் ) என்ற படம் திரையுலகில் ஒரு மைல்கல் என்று கூறலாம். பெர்லின் நகரில் நடந்த திரைப்பட விழாவில் வெள்ளிகரடி விருதையும் அமெரிக்காவிற்கு வெளியே எடுக்கப்பட்ட படங்களில் சிறந்த படம் என்ற விருதையும் பெற்ற படம் இது. பல்லாண்டு வாழ்க என்ற பெயரில் எம் ஜி ஆர் நடிப்பில் தமிழிலும் இந்தப்படம் எடுக்கப்பட்டது.

திரைப்படத் துறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது சாந்தாராமுக்கு 1985ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இவரது மரணத்திற்குப் பின்னர் 1992ஆம் ஆண்டு இவருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் நாள் இயக்குநர் சாந்தாராம் காலமானார். 

திங்கள், 17 நவம்பர், 2025

நவம்பர் 17 - பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் நினைவுதினம்


அந்நிய வல்லாதிக்கத்திற்கு எதிராக போராடிய வீரர்களின் தலைவர்களாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் இருந்தவர்கள் மூவர். மஹாராஷ்டிராவைச் சார்ந்த லோகமானிய பால கங்காதர திலகர், வங்காளத்தைச் சார்ந்த பிபின் சந்திர பால், பஞ்சாபைச் சார்ந்த லாலா லஜபதி ராய் ஆகியோரே அந்த மும்மூர்த்திகள். சுதேசி இயக்கம், அன்னியப் பொருள்களை வாங்காது இருத்தல், முழுமையான சுதந்திரம் என்பதே அவர்களின் இலக்காக இருந்தது. கூட்டங்கள் போட்டு தீர்மானம் நிறைவேற்றி அரசிடம் மனு கொடுப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பது இவர்களின் எண்ணம். ஆயுதம் ஏந்திப் போராடிய பல வீரர்கள் இவர்களின் சீடர்களாக இருந்தார்கள்.

1865ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் நாள் பஞ்சாபி மாநிலத்தில் உள்ள துடுக்கி என்ற கிராமத்தில் வசித்து வந்த முன்ஷி ராதாகிருஷ்ண அகர்வால் - குலாப் தேவி தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் லஜபதி ராய். பள்ளிப் படிப்பை முடித்த லஜபதி ராய் லாகூர் நகரில் உள்ள அரசு கல்லூரியில் சட்டம் படிக்கத் தொடங்கினார். அந்த சமயத்தில் ஆரிய சமாஜத்தின் கொள்கைகளால் கவரப்பட்டு சமாஜத்தின் உறுப்பினர் ஆனார். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே ஆர்ய கெசட் என்ற பத்திரிகையை தொடங்கி அதன் ஆசிரியராகவும் இருந்தார். ஹிந்து மதம் என்ற குடையின் கீழ்தான் மக்களை ஓன்று திரட்டி விடுதலைக்காக போராடுவதுதான் வெற்றிகரமாக இருக்கும் என்பதே லஜபதி ராயின் நிலைப்பாடாக இருந்தது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிஸார் நகரில் தனது வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய லஜபதி ராய் சிறிது காலத்திலேயே லாகூர் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றத் தொடங்கினார். ஹிஸார் நகரில் இருந்த போது அங்கே காங்கிரஸ் கட்சியின் கிளையையும், ஆரிய சமாஜத்தின் கிளையையும் தொடங்கினார். 1888 மற்றும் 1889 ஆம் ஆண்டுகளில் ஹிஸார் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.

காங்கிரஸ் இயக்கத்தின் போராட்டங்களை முன்னெடுத்ததைத் தொடர்ந்து எந்த விசாரணையும் இல்லாமல் ஆங்கில அரசு இவரை இன்றய மியான்மர் நாட்டில் உள்ள மண்டலே நகருக்கு நாடு கடத்தியது. சில காலத்திலேயே அந்த உத்தரவு திருப்பிப் பெறப்பட, லஜபதி ராய் தாயகம் திரும்பினார். 1907ஆம் ஆண்டு சூரத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு முக்கியமான ஒன்றாகும். அதில்தான் காங்கிரஸ் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று இரண்டு பிரிவாக உடைந்தது. அந்த மாநாட்டின் தலைவர் பதவிக்கு லஜபதி ராய் போட்டியிட்டார். ஆனால் மாநாட்டில் ஏற்பட்ட குழப்பத்தாலும், கைகலப்பாலும் அவர் வெற்றி பெற முடியவில்லை.

ஆங்கில கல்விக்கு எதிராக தயானந்த் வேதிக் ஆங்கில பள்ளிகள் ( Dayanath Anglo Vedic Schools - DAV Schools ) என்ற கல்வி நிலையங்களை லஜபதி ராய் உருவாக்கினார். லாகூர் நகரில் தேசிய கல்லூரி என்ற நிலையத்தை உருவாக்கினார். இந்தக் கல்லூரி மாணவர்தான் புரட்சியாளர் பகத்சிங். பஞ்சாப் நேஷனல் வங்கி, லக்ஷ்மி இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களும் லஜபதி ராய் துவங்கியவைதான். விடுதலை அடைவது மட்டுமல்லாது, அதனைத் தொடர்ந்து புனர்நிர்மாணப் பணிகள் பற்றியும் லஜபதி ராய் ஆழமாகச் சிந்தித்து செயலாற்றினார் என்பது அவர் நிறுவிய பல்வேறு நிறுவனங்கள் மூலம் புலனாகிறது.

முதலாம் உலகப் போர் நடந்த சமயத்தில் லஜபதி ராய் இங்கிலாந்து நாட்டிலும் அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அமெரிக்காவில் இருந்த பல்வேறு இந்திய விடுதலை வீரர்களை ஒன்றிணைக்கும் பணியில் அவர் ஈடுபட்டு இருந்தார்.

1920ஆம் ஆண்டு நாடு திரும்பிய லஜபதி ராய் அந்த ஆண்டு கொல்கத்தா நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜாலியன்வாலாபாக் படுகொலையை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை லஜபதி ராய் தலைமைதாங்கி நடத்தினார். காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தின் பஞ்சாப் மாநிலத்தின் தளபதியாக செயல்பட்ட லஜபதி ராய், திடீர் என்று காந்தி அந்தப் போராட்டத்தை விலக்கிக் கொண்டதை ஏற்க மறுத்தார். சுதந்திர காங்கிரஸ் கட்சி என்ற அமைப்பை உருவாக்கினார். காங்கிரஸ் தொடர்ந்து முஸ்லிம்களுக்காக  அளவுக்கு அதிகமாக வளைந்து கொடுக்கிறது என்ற நிலைப்பாடு உடைய லஜபதி ராய் 1923ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே நாட்டில் வாழ முடியாது, எனவே இரண்டு நாடுகளாக நாட்டைப் பிரித்து, மக்களை இடம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பத்திரிகையில் எழுதினார். இது பெரும் சர்சையைக் கிளப்பியது.

இந்தியர்கள் எவரும் இல்லாத சைமன் கமிஷனை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு செய்தது. 1928ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் நாள் சைமன் கமிஷனை புறக்கணித்து லாகூர் நகரில் நடைபெற்ற ஊர்வலத்தை லாலா லஜபதி ராய் தலைமைதாங்கி நடத்தினார். காவல்துறை கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஸ்காட் தடியடி நடத்தி ஊர்வலத்தை கலைக்க உத்தரவிட்டார். காவலர்கள் லாலா லஜபதி ராயை லத்தியால் தாக்கினர். "இது என் மீது விழும் அடியல்ல, ஆங்கில ஏகாதிபத்தியத்தின் சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் ஆணிகள்" என்று லஜபதி ராய் முழங்கினார்.

அறுபத்தி மூன்று வயதான தலைவர் தன்மீது தொடுக்கப்பட்ட தாக்குதலால் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் 1928ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் நாள் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் மரணமடைந்தார்.

தலைவரின் மரணம் இளைஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. பழி வாங்குவோம் என்று ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபபிளிக் படை உறுதி பூண்டது. ஜான் சாண்டர்ஸ் என்ற காவல் அதிகாரியை சுட்டுக் கொன்று பகத்சிங்கும் ராஜகுருவும் ஆங்கில ஆட்சிக்கு சவால் விட்டனர்.

பாரத  கல்வி முறை பற்றி, ஆங்கில அரசு பாரத நாட்டைச் சுரண்டியது பற்றி, தனது நாடுகடத்தல் தண்டனை பற்றி, ஆர்ய சமாஜ் பற்றி என்று பல்வேறு நூல்களை லஜபதி ராய் எழுதி உள்ளார்.

மும்பையில் வணிகவியல் கல்லூரி, மீரட் நகரில் மருத்துவக் கல்லூரி, பஞ்சாப் மாநிலத்தில் மோகா நகரில் தொழில்நுட்பக் கல்லூரி, ஹிஸார் நகரில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவை இன்று லாலா லஜபதி ராய் பெயரைத் தாங்கி நடந்து வருகின்றன.

லஜ்பத் நகர் உள்ளிட்ட டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கு லாலா லஜபதி ராய் பெயரைச் சூட்டி நாடு அந்த வீரரை மரியாதை செலுத்தி உள்ளது. 


ஞாயிறு, 16 நவம்பர், 2025

நவம்பர் 16 - புரட்சியாளர் விஷ்ணு குமார் பிங்கிலே நினைவுநாள்


பாரத நாட்டின் விடுதலை என்பது கத்தியின்றி ரத்தமின்றி அடைந்ததல்ல. தன்னலம் கருதாத எண்ணற்ற வீரர்களின் தியாகத்தின் மீது கட்டமைக்கப்பட்டது அது. நாட்டின் விடுதலையை மனதில் கொண்டு உலகத்தின் பல பகுதிகளில் அதற்கான முன்னெடுப்பைச் செய்த தியாகிகள் பலர். ஆனால் இன்று அவர்களில் பலரை திட்டமிட்டு மறைத்து விட்டனர் சிலர். அப்படி பெருவாரியான மக்களால் அறியப்படாத விஷ்ணு குமார் பிங்கிலேவின் பலிதான நாள் இன்று.

பூனா நகரில் வசித்துவந்த ஒரு மஹாராஷ்டிர பிராமண குடும்பத்தின் ஒன்பதாவது குழந்தையாக 1888ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்தவர் விஷ்ணு குமார் பிங்கிலே. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே வீர சாவர்க்கரால் கவரப்பட்டு தேசிய உணர்ச்சியில் ஊன்றியவர் அவர். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு மாஹிம் பகுதியில் நடைபெற்றுவந்த பயோனீர் அல்கலி ஒர்க்ஸ் என்ற தொழில்சாலையில் பணிக்கு சேர்ந்தார் அவர். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் திரு கோவிந்தராவ் போட்தார் என்பவர். தேசியவாதியாக அவர் வெடிகுண்டு தயாரிப்பில் விற்பன்னர். போட்தார் பிங்கிலேவை பல்வேறு புரட்சியாளர்களோடு அறிமுகம் செய்து வைத்தார், அதுபோக பிங்கிலேவிற்கு வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியையும் அளித்தார்.

பிங்கிலேவின் நடவடிக்கைகளை அரசு கண்காணிக்கத் தொடங்கியது. எனவே பிங்கிலே பாரத நாட்டை விட்டு அமெரிக்கா செல்ல முடிவு செய்தார். அங்கே வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் ( Mechanical Engineering ) படிக்க அனுமதி கிடைத்து இருந்தது. மிக ரகசியமாக இந்த தகவலை வைத்து இருந்த பிங்கிலே ரயில் பெட்டியில் ஏறுவதற்கு சற்று முன்னரே தனது அண்ணனிடம் தான் அமெரிக்கா செல்லும் தகவலைச் சொன்னார்.

அமெரிக்காவில் ஹிந்து, முஸ்லீம், சீக்கிய, பார்சி என்று பல்வேறு மதங்களைச் சார்ந்த புரட்சியாளர்கள் இணைந்து கதர் கட்சி என்ற அமைப்பை நடத்தி வந்தனர். கதர் என்ற உருது மொழி சொல்லின் பொருள் புரட்சி என்பதாகும். ஆயுதம் தாங்கிய போராட்டம் வழியே ஆங்கில ஆட்சியை அகற்ற முடியும் என்பது அவர்கள் எண்ணம். பாய் பரமானத், சோஹன் சிங், பகவான் சிங், ஹர் தயாள், தாரகநாத் தாஸ், கர்த்தார் சிங், அப்துல் ஹஸிஸ் முஹம்மத் பரக்கத்துல்லா, ராஷ்பிஹாரி போஸ் ஆகியோர் அதில் முக்கியமான தலைவர்கள்.

முதலாம் உலகப் போர் தொடங்கிய நேரம் அது. பாரதம் முழுவதும் ஒரே நேரத்தில் போராட்டங்களை உருவாக்கி ஆங்கில ஆட்சியை அகற்ற வேண்டும், அதற்கு ஜெர்மனி துணை நிற்கும் என்ற உறுதி மொழி அளிக்கப்பட்டது. 1914ஆம் ஆண்டு பிங்கிலே மீண்டும் தாயகம் திரும்பினார். ஏற்கனவே லோகமான்ய திலகரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட லாலா லஜபதி ராய், அரவிந்த கோஷ் ஆகியோர் வட இந்தியா முழுவதும் புரட்சிக்கனலை தூண்டிவிட்டுக் கொண்டுதான் இருந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயுதம் தாங்கிய புரட்சிக்கு பல்வேறு இளைஞர்கள் தயாராகி கொண்டுதான் இருந்தார்கள்.

கொல்கத்தா நகருக்கு வந்து சேர்ந்த பிங்கிலே அங்கிருந்து பனாரஸ், லாகூர், அம்ரித்ஸர் ஆகிய நகரங்களில் உள்ள புரட்சியாளர்களோடு தொடர்பு கொண்டார். அன்றய பிரிட்டிஷ் ராணுவத்திலும் ஊடுருவிய புரட்சியாளர்கள் பல இடங்களில் உள்ள இந்திய சிப்பாய்களையும் தங்களுக்கு ஆதரவாக ஏற்கனவே மாற்றி வைத்து இருந்தனர். 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரே நேரத்தில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கும் ராணுவ வீரர்கள் ஆங்கில ஆட்சியை எதிர்த்து போராடத் துவங்கவேண்டும் என்பது திட்டம். ஆனால் இதற்கு நடுவே போராட்டக்காரர்களின் திட்டங்களை அரசு வேவு பார்க்கத் தொடங்கி இருந்தது. எனவே திட்டமிட்ட நாளுக்கு முன்னமே பல பகுதிகளில் இருந்த சிப்பாய்கள் ஆட்சியை எதிர்த்து போராடத் தொடங்கினார்கள். ஆனால் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் போனதால் அரசு அந்த முயற்சியை முறியடித்து விட்டது. கதர் புரட்சி என்றும் முதலாம் லாகூர் சதிவழக்கு என்று இந்த முயற்சி வரலாற்றில் பதிவானது.

மொத்தம் 291 புரட்சியாளர்கள் மீது வழக்கு பதிவானது. இதில் 42 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, 114 பேர் ஆயுள் தண்டனை பெற்று அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். 93 பேர் பல்வேறு காலத்திற்கான தண்டனைக்கு உள்ளானார்கள்.

1915ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் நாள் விஷ்ணு குமார் பிங்கிலே லாகூர் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார். அப்போது அவருக்கு வயது இருபத்தி ஏழு மட்டுமே.

வீரர்களின் தியாகத்தை மனதில் வைப்போம். பெற்ற சுதந்திரத்தை கண் போல் காப்போம். 

சனி, 15 நவம்பர், 2025

நவம்பர் 15 - ஆச்சார்ய வினோபா பாவே நினைவுநாள்

"எனது சீடனாக வந்து எனது ஆசிரியராக மாறியவர்" என்று காந்தியால் புகழப்பட்டவர், தனிநபர் சத்தியாகிரஹத்தின் முதல் போராளி,  நாடு முழுவதும் சுற்றிவந்து நிலச்சுவான்தார்கள் இடமிருந்து நிலங்களைப் பெற்று அதனை நிலமற்ற ஏழைத் தொழிலாளிகளுக்கு அளித்த பூதான இயக்கத்தின் தந்தை, பலமொழி அறிஞர், காந்தியின் ஆன்மீக வாரிசு என்று அறியப்படும்  ஆச்சாரிய வினோபா பாவேயின் நினைவுநாள் இன்று.



இன்று மும்பையின் பகுதியாக விளங்கும் கொலாபா பகுதியில் வசித்து வந்த நரஹரி சம்புராவ் - ருக்மணி தேவி தம்பதியரின் மூத்த மகனாக 1895ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் பிறந்தவர் விநாயக் நரஹரிராவ் என்னும் வினோபா பாவே. இறைநம்பிக்கையை கொண்ட தாயாலும் பாட்டியாலும் வளர்க்கப்பட்டதால் சிறுவயதிலேயே இதிகாச புராணங்களையும், கீதையையும் வினோபா முழுமையாகக் கற்று இருந்தார்.

1916ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தேர்வு எழுத மும்பைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டிய  இருந்த வினோபா  தனது கல்விச் சான்றிதழ்கள் எல்லாவற்றையும் தீயில் வீசிவிட்டு மும்பை செல்லாமல் காசிக்கு பயணமானார். ஆன்மீக சாதனையில் ஈடுபடத்தான் அவர் நினைத்து இருந்தார். ஆனால் காலம் அவர்க்கு வேறு வழியைக் காட்ட தீர்மானித்தது. காசியில் இருந்தபடி காந்தியோடு கடித தொடர்பை ஏற்படுத்தினார். காந்தி அவரை அஹமதாபாத் நகரில் அவர் தங்கி இருந்த கோசரப் ஆசிரமத்திற்கு வருமாறு அழைத்தார். அந்த சந்திப்பு வினோபாவை முழுவதுமாக மாற்றியது.

தனிப்பட்ட ஆன்மீக சாதனைகளை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு அவர் தேசப்பணிக்கு தன்னை அர்ப்பணம் செய்துகொண்டார். காந்தியின் அறிவுரையின்படி மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வார்தா பகுதியில் அமைந்துள்ள ஆஸ்ரமத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அங்கே அவர் மஹாராஷ்டிரா தர்மா என்ற மராட்டி மாத இதழை நடத்தலானார். பின்னர் அந்த இதழ் வார இதழாக வெளிவரத் தொடங்கியது. அதில் தொடர்ந்து உபநிஷதங்களின் உரைகளை எழுதலானார். கதர், கைத்தொழில், சுகாதாரம், கல்வி என்று காந்தியின் பல்வேறு தேச புனர்நிர்மாணப் பணிகளை வினோபா மேற்கொண்டார். கேரள மாநிலம் வைக்கம் நகரில் உள்ள வைக்கம் நகரில் கோவிலுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதற்கான போராட்டத்திற்காக அனுப்பப்பட்டார். காந்தி தொடங்கிய தனிநபர் சத்தியாகிரஹப் போராட்டத்தின் முதல் வீரராக வினோபா காந்தியால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்ற நூற்றாண்டின் இருபதுகளிலும் முப்பதுகளில் வினோபா பல முறை கைது செய்யப்பட்டார். சிறையில் படிப்பதும் எழுதுவதும் அவரது வேலையாக மாறியது. இஷாவாக்கிய விருத்தி, ஸ்திரப் ப்ரகிய தர்ஷன், ஸ்வராஜ்ய சாஸ்திரா  ஆகிய நூல்களை அவர் சிறையில் இருந்த போது எழுதினார். சிறையில் மற்ற கைதிகளுக்கு அவர் மராட்டி மொழியில் கீதையைப் பற்றி பேசியதின் தொகுப்பு கீதைப் பேருரைகள் என்ற பெயரில் புத்தகமாக பல்வேறு மொழிகளில் இன்று கிடைக்கிறது. கீதைக்கான சிறந்த உரைகளில் வினோபாவேயின் உரை முக்கியமான ஒன்றாகும். தமிழகத்தின் வேலூர் சிறையில் இருந்த காலத்தில் நான்கு தென்னிந்திய மொழிகளையும் கற்றுக்கொண்டார்.

நாடு விடுதலையான பிறகு நேரடி அரசியலில் ஈடுபடாமல் சமுதாயப் பணிகளிலேயே வினோபா தொடர்ந்து செயல்பட்டார். இன்றய தெலுங்கானா மாநிலத்தில் அன்று கம்யூனிஸ்ட் கட்சி செயல்பாட்டாளர்கள் நிலச் சுவான்தார்களை கொன்று நிலமற்ற ஏழை மக்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அவர்களை அடக்க ராணுவமும் காவல்துறையும் களமிறங்கியது. இருவருக்கும் நடுவே மக்கள் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தனர். இந்த சமயத்தில் வினோபா அந்தப் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நிலமற்ற நாற்பது  தாழ்த்தப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை அவர் அங்கே உள்ள மக்களிடம் முன்வைத்தார். தனக்கு சொந்தமான நிலத்தில் நூறு ஏக்கர் நிலத்தை ராமச்சந்திர ரெட்டி என்ற நிலச்சுவான்தார் அந்த மக்களுக்கு அளிக்க முன்வந்தார். குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் போதும் எனவே எண்பது ஏக்கர்களை மட்டும் பெற்றுக் கொள்கிறோம் என்று அந்த ஹரிஜன சகோதர்கள் கூறினார்கள். இந்த சிறிய விதை பூதான இயக்கமாக உருவானது.

நிலமற்ற ஏழை மக்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்றால் ஏறத்தாழ ஐந்து கோடி ஏக்கர் நிலம் வேண்டும் என்று கணக்கிடப்பட்டது. கிராமம் கிராமமாகச் சென்று "நான் உங்கள் ஐந்தாவது மகன், எனக்கான பங்கைக் தாருங்கள்" என்று வினோபா கோரிக்கை வைத்தார். சராசரியாக ஒரு நாளுக்கு இருநூறில் இருந்து முன்னூறு ஏக்கர் நிலம் அவருக்கு அளிக்கப்பட்டது. 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கிய அவரது பாதயாத்திரை 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் நிறைவு பெற்றது. ஏறத்தாழ 40 லட்சம் ஏக்கர் நிலத்தை அவர் பெற்று மக்களுக்கு அளித்தார். தானமும் தர்மமும் பாரதநாட்டின் பிரிக்க முடியாத அம்சம் என்று வினோபா நிரூபித்தார். மீண்டும் 1965ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு பிஹார் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு மக்களிடம் தற்சார்ப்பு பொருளாதாரம் பற்றிய ஆவலை உருவாக்கினார். சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த கொள்ளைக்காரர்கள் பலர் வினோபாவின் அறிவுரையினை ஏற்று அரசிடம் சரணடைந்தார்கள்.

1970ஆம் ஆண்டு முதல் ஒரே இடத்தில் தங்கி ஆத்ம சாதனையை மேற்கொள்ளப் போவதாக வினோபா அறிவித்தார். 1974ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் ஆண்டு முதல் 1975ஆம் ஆண்டு டிசம்பர் 25வரை ஓராண்டு பேசாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தது அதனை செயல்படுத்தினார்.

பாரத நாட்டு வரலாற்றில் அது ஒரு சோதனையான காலகட்டம். உயரிய விழுமியங்களை விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சி பதவியாசை கொண்டு விளங்கியது. லஞ்சமும், ஊழலும், வேலையில்லா திண்டாட்டமும் நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. சர்வோதயா இயக்கத்தில் ஆச்சாரிய வினோபாவின் தளபதியாக விளங்கிய ஜெயப்ரகாஷ் நாராயணன் தலைமையில் மாணவர்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். பிரதமர் இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அலஹாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்திரா நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். நாட்டின் ஜனநாய உரிமைகள் எல்லாவற்றையும் அவர் இல்லாமல் செய்தார். சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் தளபதிகளாக செயல்பட்ட தலைவர்கள் அனைவரும் இதனை எதிர்த்தனர். ஆனால் எனோ வினோபா இந்திராவை ஆதரித்தார். மிகப் பெரும் மனிதர்களும் தவறிழைக்கும் நேரங்கள் உண்டு என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல

1982ஆம் ஆண்டு உணவருந்த மறுத்து சமண முறைப்படி உபவாசம் இருந்து நவம்பர் 15ஆம் தேதி ஆச்சாரிய வினோபா பாவே தனது உடலைத் துறந்தார். இறப்பிற்கு பிறகு அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி மரியாதை செலுத்தியது.

இப்படிப்பட்ட மக்களையும் பாரதத் தாய் ஈன்றெடுத்துள்ளாள் என்பதையாவது நாம் அறிந்து கொள்வோம். 

வெள்ளி, 14 நவம்பர், 2025

நவம்பர் 14 - ஆதித்ய விக்ரம் பிர்லா பிறந்தநாள்

புகழ்பெற்ற தொழிலதிபரும் பிர்லா குடும்பத்தின் மிக முக்கியமான உறுப்பினருமான ஆதித்ய விக்ரம் பிர்லாவின் பிறந்தநாள் இன்று.


வியாபாரத்தில் மட்டுமே கால்பதித்து இருந்த பிர்லா குடும்பத்தை உற்பத்திதுறையிலும் முன்னெடுத்தவர் ஞான்ஷ்யாம்தாஸ் பிர்லா என்ற ஜி டி பிர்லா. ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த மார்வாடி வகுப்பைச் சார்ந்த ஜி டி பிர்லா முதல்முதலில் கொல்கத்தா நகரில் சணல் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கினார். அங்கிருந்து ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் முக்கியமான தொழில் குழுமமாக பிர்லா குடும்பம் விளங்குகிறது. ஜி டி பிர்லாவின் மகனான பசந்த் குமார் பிர்லாவின் மகனாக 1943ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி பிறந்தவர் ஆதித்ய விக்ரம் பிர்லா.

அன்று நாட்டின் முன்னணி தொழில் நகரமாக விளங்கியது கொல்கத்தா நகரம். ஆதித்ய பிர்லா கொல்கத்தா நகரின் தூய சவேரியார் கல்லூரியில் படித்து பின்னர் அமெரிக்காவில் உள்ள உலகின் முன்னணி கல்வி நிறுவனமான மசாசூட் பல்கலைக்கழகத்தில் ரசாயன பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். பள்ளிப் படிப்பை படிக்கும் போதே சமிஸ்க்ரித மொழியை ஆதித்ய பிர்லா கற்றுத் தேர்ந்தார்.

அமெரிக்காவில் கல்வி பயின்ற பிர்லா 1965ஆம் ஆண்டு பாரதம் திரும்பி, தங்கள் குடும்பத் தொழில்களில் தன்னை இணைத்துக் கொண்டார். ஆனால் அன்றய நிலைமை தொழிலதிபர்களுக்கு சாதகமாக இல்லை. சோசலிசம் என்ற தவறான கொள்கையின் விளைவாக எதை தயாரிக்க வேண்டும், எந்த அளவு தயாரிக்க வேண்டும், எந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அரசே முடிவு செய்யும் போக்குதான் இருந்தது. பல்வேறு தொழில்சாலைகளை நிறுவ பிர்லா குழுமம் அளித்த விண்ணப்பங்கள் அரசால் நிராகரிக்கப்பட்டன. மனது வெறுத்துப் போன ஆதித்ய பிர்லா வேறு நாடுகளில் தனது தொழில்சாலைகளை நிறுவலாம் என்று முடிவு செய்தார்.

1969ஆம் ஆண்டு முதல் ஆதித்ய பிர்லா தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற தூரக் கிழக்கு நாடுகளில் தனது தொழிலை விரிவுபடுத்தத் தொடங்கினார். விஸ்கோஸ் இழைகள், நூல் தயாரிப்பு, பனைமர எண்ணெய் தயாரிப்பு, ரேயான் இழை தயாரிப்பு என்று பல்வேறு தொழிற்சாலைகளை அவர் இந்த நாடுகளில் நிறுவினார். அரசின் தவறான கொள்கை முடிவுகள் அவரை இந்த நிலைக்கு தள்ளியது. நாடு பொருளாதார துறையில் முன்னேற்றம் அடைய இந்தக் கொள்கைகள் தடையாக இருந்தன.

1983ஆம் ஆண்டு ஜி டி பிர்லா காலமானார். அவர் தனது பல்வேறு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை ஆதித்ய பிர்லா வசம் ஒப்படைத்து இருந்தார். பிர்லா குழுமத்தின் தலைமை அதிகாரியாக, குழுமத்தின் முகமாக, நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் முக்கியமான ஒருவராக ஆதித்ய பிர்லா அறியப்பட்டார்.

ஆனால் காலத்தின் கணக்கு வேறு மாதிரியாக இருந்தது. 1993ஆம் ஆண்டு ஆதித்ய பிர்லா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. ஆதித்ய பிர்லாவின் தந்தையான பசந்த் குமார் பிர்லாவும், இருபத்தி ஐந்து வயதே ஆன மகன் குமாரமங்கலம் பிர்லாவும் பிர்லா குழுமத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். பால்டிமோர் நகரில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் ஆதித்ய பிர்லா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போதுதான் நாடு சுதந்திரமான பொருளாதாரக் கொள்கைக்கு மாறி இருந்தது. தொழில் நடத்துவதும், லாபம் சம்பாதிப்பதும் பாவகரமான செயல் அல்ல என்று அரசு எண்ணத் தொடங்கி இருந்தது. இன்னும் பல உயரங்களை அடைந்திருக்க வேண்டிய ஆதித்ய விக்ரம் பிர்லா 1995ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் நாள் மரணமடைந்தார்.

ஆதித்ய பிர்லாவின் நினைவாக ஆண்டுதோறும் நாட்டின் தலைசிறந்த பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகளில் படிக்கும் சிறந்த மாணவர்களில் நாற்பது பேரின் படிப்புக்கான தொகையை பிர்லா குழுமம் செலுத்தி வருகிறது. பூனே நகரில் பிர்லா குழுமம் ஆதித்ய விக்ரம் பிர்லா பெயரில் ஒரு மருத்துவமனையை நிறுவி நடத்தி வருகிறது.

பாரத நாட்டின் மிகச் சிறந்த தொழிலதிபரான ஆதித்ய விக்ரம் பிர்லாவின் பங்களிப்புக்காக ஒரே இந்தியா தளம் அவருக்கு நன்றி செலுத்துகிறது.