செவ்வாய், 11 நவம்பர், 2025

நவம்பர் 11 - அபுல் கலாம் ஆசாத் பிறந்ததினம்



உலகத்தின் ஞான ஒளியாக பாரதம் என்றுமே திகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆப்கானிய வம்சாவளியைச் சார்ந்த ( பாரதம் என்பது இன்றய ஆப்கானிஸ்தான் வரை பரவி இருந்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ) டெல்லியில் வசித்து வந்த மௌலானா சையத் முஹம்மத் கைருதீன் பின் அஹமத் அல் ஹுசைனி என்பவர் இஸ்லாமிய தத்துவத்தில் பெரும் அறிஞராக இருந்தார். அவரை இஸ்லாத்தின் அஸ்திவாரமாக மெக்கா நகருக்கு வரவழைத்து அவரிடம் அரேபியர்கள் இஸ்லாமிய தத்துவத்தின் விளக்கத்தை கேட்டறிந்தார்கள் என்றால் அவரது ஆழ்ந்த புலமையை நாம் அறியலாம். மெக்கா நகரில் அவர் வசித்து வந்த காலத்தில் அரேபிய நாடு முழுவதும் அறியப்பட்ட அறிஞரான ஷேக் முஹம்மத் பின் சாஹீர் அல்வட்ரி என்பவரின் மகளான ஆலா பின்த் முஹம்மத் என்பவரை மணந்து கொண்டார். இந்த தம்பதியரின் மகனாக இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா நகரில் 1888ஆம் ஆண்டு பிறந்தவர்தான் செய்யத் குலாம் முஹைதீன் அஹமத் பின் கைருதீன் அழ ஹுசைனி என்ற மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள்.

1890ஆம் ஆண்டே ஆசாத்தின் பெற்றோர்கள் பாரதம் திரும்பி கொல்கத்தா நகரில் வசிக்கத் தொடங்கினார்கள். அபுல் கலாம் ஆசாத் தனது படிப்பை தனது வீட்டிலேயே ஆரம்பித்தார். தகுதியான ஆசிரியர்கள் அவருக்கு ஹிந்தி, பாரசீகம், ஆங்கிலம், வங்காளம், அரபி உருது ஆகிய மொழிகளையும், கணிதம், வரலாறு, அறிவியல் தத்துவம் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கவியல்  ஆகிய பாடங்களையும் கற்றுக் கொடுத்தனர். இயல்பிலேயே சூட்டிகையான மாணவனாக இருந்த ஆசாத், மிக விரைவில் பல்மொழி புலவராகவும், பல துறை அறிஞராகவும் அறியப்பட்டார். பதின்ம வயதிலேயே பத்திரிகை நடத்தவும், தனக்கு மூத்த மாணவர்களுக்கு பாடம் நடத்தவும் அவர் ஆரம்பித்தார்.

படித்த படிப்பின் படி அவர் ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞராகத்தான் இருந்திருக்க வேண்டும், ஆனால் அவரது படிப்பு அவரை ஒரு பத்திரிகையாளராக மாற்றியது. இளம் பருவத்தில் அவர் ஆயுதம் தாங்கிப் போராடும் போராளிகளின் கூட்டத்தில் ஒருவராகத்தான் இருந்தார். ஷியாம் சந்திர சக்கரவர்த்தி, அரவிந்த கோஷ் போன்ற வீரர்களின் நண்பராக இருந்தார். பல முஸ்லிம்களின் எண்ணத்திற்கு எதிராக வங்காளப் பிரிவினையை அவர் எதிர்த்தார்.

அமிர்தஸர் நகரில் இயங்கிக்கொண்டு இருந்த வக்கீல் என்ற செய்தித்தாளில் ஆசாத் பணியாற்றினார். பின்னர் 1912ஆம் ஆண்டு அல் ஹிலால் என்ற உருது மொழி நாளிதழை தொடங்கினார். அதில் தொடர்ந்து  ஆங்கில ஆட்சியை எதிர்த்தும், ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதின் அவசியம் பற்றியும் எழுதிக்கொண்டு இருந்தார். முதலாம் உலகப் போர் தொடங்கியதை அடுத்து ஆங்கில அரசு இந்தப் பத்திரிகையை தடை செய்தது. சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல ஆசாத் அல் பலாஹ் என்ற பத்திரிகையை ஆரம்பித்து ஆங்கில ஆட்சியைத் தாக்கி எழுதலானார். வழக்கம் போல ஆங்கில அரசு இவரை கைது செய்து ராஞ்சி சிறையில் அடைத்தது. மும்பை, பஞ்சாப், டெல்லி, ஆக்ரா ஆகிய மாகாணங்கள் தங்கள் எல்லைக்குள் ஆசாத் வரக்கூடாது என்று ஆணை பிறப்பித்தது.

சிறைவாசம் முடித்து ஆசாத் விடுதலையாகும் சமயம் பாரதத்தின் அரசியல் களம் மொத்தமாக மாறி இருந்தது. அடக்குமுறையின் உச்சமாக ரௌலட் சட்டம் அமுலில் இருந்தது. ஜாலியன்வாலாபாக் நகரில் அப்பாவி பொதுமக்களை காக்கை குருவி சுடுவது போல அரசு சுட்டுக் தள்ளி இருந்தது. அரசியல் களத்தின் தலைமை சந்தேகமே இல்லாமல் காந்தியின் கையில் வந்து சேர்ந்திருந்தது. ஆசாத் காந்தியின் நெருங்கிய தோழரும் தொண்டருமாக உருவானார். அன்னியத் துணிகளைத் துறந்து ராட்டை சுற்றி, நூல் நூற்று காந்தியோடு ஆசிரமங்களில் தங்கி எளிய வாழ்க்கை வாழ்ந்து என்று ஆசாத் முழுவதுமாக மாறிப் போனார். காந்திக்கு மட்டுமல்ல ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, நேதாஜி ஆகிய தலைவர்களின் தோழராகவும், நாட்டின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் ஆசாத் அறியப்படலானார்.

1922ஆம் ஆண்டு ஆசாத் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் காங்கிரஸ் கட்சிக்கு புது தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவது வழக்கம். மிக இளைய வயதில் தேர்வான தலைவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆசாத். மீண்டும் 1940ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜின்னா சுதந்திரம் அடையும் சமயத்தில் நாடு மதரீதிரியாகப் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்திருந்த நேரம் அது. அந்த குரலுக்கு முஸ்லீம் மக்கள் பலரின் ஆதரவும் இருந்தது.ஆனால் கணிசமான இஸ்லாமியர்கள் அதனை எதிர்த்து நின்றதும் வரலாறு. அதில் முக்கியமான குரல் ஆசாத்தின் குரல்.

" இந்த நாட்டு மக்களின் மதமாக ஹிந்து மதம் பல்லாயிரம் ஆண்டுகளாக விளங்குகிறது, அது போலவே ஆயிரம் ஆண்டுகளாக இஸ்லாம் மதமும் இந்த நாட்டின் மக்களின் மதமாக உள்ளது. நான் ஹிந்து மதத்தைப் பின்பற்றும் இந்தியன் என்று பெருமையோடு கூறுவது போல, நான் இஸ்லாம் மார்கத்தைப் பின்பற்றும் பாரதீயன் என்றும் நான் கிறிஸ்துவை வழிபடும் இந்தியன் என்று பெருமையோடு கூறலாம். நமது வழிபாடு முறைகள்தான் வேறுபட்டு உள்ளது, ஆனால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்களே" இது ஆசாத் அளித்த தலைமையுரையில் ஒரு பகுதி.

தவிர்க்க முடியாமல் நாடு மதத்தின் அடிப்படையில் துண்டாடப் பட்டது. இஸ்லாமின் பிறப்பிடமான மெக்கா நகரில் பிறந்த அபுல் கலாம் ஆசாத் உள்பட பல இஸ்லாமியர்கள் பாரத நாட்டிலேயே இருப்பது என்ற முடிவை எடுத்தனர். ஆசாத் நேருவின் நண்பராகவும், உற்ற தோழராகவும், அமைச்சரவை சகாவாகவும் விளங்கினார். நாட்டின் கல்வி அமைச்சராக அவர் பணியாற்றினார்.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஐ ஐ டிகள் போன்ற பல கல்வி நிறுவனங்கள் அவரின் முயற்சியால் உருவானவைதான். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டின் கல்விக்காக பெரிதாக எதுவும் செய்யவில்லை. விடுதலை அடையும் சமயத்தில் மக்களில் கல்வி பெற்றவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. தொடக்கக்கல்வி, முதியோர் கல்வி, பெண்கள் கல்வி, தொழிற்கல்வி என்று பல்வேறு தளங்களில் பெரும் சவால்களை ஆசாத் எதிர்கொண்டு நாட்டின் கல்வித் திட்டத்தை வடிவமைத்தார்.

அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாளை நாடு தேசிய கல்வி நாளாக அனுசரிக்கிறது.

திங்கள், 10 நவம்பர், 2025

நவம்பர் 10 - முதுபெரும் தலைவர் சுரேந்திரநாத் பானர்ஜி பிறந்ததினம்

ஆயிரம் வருடங்களுக்கு மேலாக அன்னியர்கள் ஆட்சியை எதிர்த்துப் போராடியதுதான் பாரத நாட்டின் உண்மையான வரலாறு. தொடர் ஓட்டம் போல அந்தந்த காலகட்டத்தில் வெவ்வேறு தேசபக்தர்கள் தோன்றி சுதந்திர கனலை அணையவிடாமல் தகுதியான அடுத்தகட்ட தலைவர்களை உருவாக்கி அவர்கள் வசம் அந்த புனிதப் பணியை விட்டுவிட்டுச் சென்ற நெடிய வரலாறு நம் தேசத்தின் வரலாறு. அவ்வாறு பத்தொன்பதாம் நூற்றாண்டில் வங்காளத்தில் தோன்றிய முதுபெரும் தலைவர் சுரேந்திரநாத் பந்தோபாத்யாவின் பிறந்ததினம் இன்று.



 கொல்கத்தா நகரில் வசித்துவந்த துர்காசரண் பானர்ஜி என்ற மருத்துவரின் மகனாக 1848ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் நாள் பிறந்தவர் சுரேந்திரநாத் பானர்ஜி. கொல்கத்தா நகரில் இன்று மாநிலக் கல்லூரி என்று அறியப்படும் ஹிந்து கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த சுரேந்திரநாத் பானர்ஜி 1868ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வை எழுத லண்டன் சென்றார். 1869ஆம் ஆண்டு அந்த தேர்வில் அவர் வெற்றி பெற்றார். ஆனால் அவர் வயதில் எழுத சர்ச்சையால் ஆங்கில அரசு அவரின் வெற்றியை செல்லாது என அறிவித்தது. எனவே மீண்டும் 1871ஆம் ஆண்டு அதே தேர்வை எழுதி வெற்றிபெற்றார். அதனைத் தொடர்ந்து ஆங்கில அரசு அவரை இன்று பங்களாதேஷ் நாட்டில் இருக்கும் சில்ஹெட் நகரின் உதவி ஆட்சித் தலைவராக நியமித்தது. ஆனால் மிகச் சிறிய தவறை காரணம் காட்டி அரசு அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்கியது. பாரத மக்கள் யாருக்கும் ஆட்சி செய்யும் தகுதி இல்லை என ஆங்கில அரசின் கருத்துதான் இதற்கான பின்புலம். தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து மேல் முறையீடு செய்ய சுரேந்திரநாத் பானர்ஜி மீண்டும் லண்டன் சென்றார். ஆனால் அவருக்கு ஆங்கில ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை. ஆனால் லண்டன் நகரில் தங்கியிருந்த காலத்தில் அவர் படித்த புத்தகங்கள் அவரின் சிந்தனைப் போக்கை மாற்றி அமைத்தது.

1875ஆம் ஆண்டு நாடு திரும்பிய பானர்ஜி வித்யாசாகர் கல்லூரி ( மெட்ரோபாலிட்டன் கல்லூரி ) ஸ்காட் சர்ச் கல்லூரி ஆகிய நிறுவனங்களில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் அவர் ரிப்பன் கல்லூரி என்ற என்ற கல்வி நிலையத்தை நிறுவினார். இன்று அது சுரேந்திரர்நாத் பானர்ஜி கல்லூரி என்று அழைக்கப்படுகிறது. 1876ஆம் ஆண்டு அவர் இந்திய தேசிய இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். அதன் கூட்டங்களில் மதங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள், நாட்டின் முன்னேற்றத்திற்க்காக நாம் அனைவரும் இணைத்து செயல் புரிய வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பேசினார்.

1879ஆம் ஆண்டு பெங்காலி என்ற ஆங்கிலப் பத்திரிகையை நிறுவினார். அதன் அவர் எழுதிய தலையங்கம் ஒன்றுக்காக கைது செய்யப்பட்டார்.அவரை விடுதலை செய்யக் கோரி வங்காளத்தில் மட்டுமல்லாமல் டெல்லி, ஆக்ரா, பூனா, லாகோர் ஆகிய நகரங்களிலும் கடையடைப்பு நடைபெற்றது என்றால் அவரது ஆளுமையை நாம் புரிந்துகொள்ளலாம். பானர்ஜி உருவாக்கிய இந்திய தேசிய இயக்கம் வருடம்தோறும் அந்த ஆண்டுக்கான பொதுக்கூட்டத்தை நடத்துவது வாடிக்கையாக இருந்தது.

ஒத்த கருத்தோடு உருவான இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் பானர்ஜி தனது இயக்கத்தை 1886ஆம் ஆண்டு இணைத்துக் கொண்டார். 1895 மற்றும் 1902ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகள் இவர் தலைமையில்தான் நடைபெற்றது. 1905ஆம் ஆண்டு கார்ஸன் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். அதனை எதிர்த்து முழுமூச்சில் சுரேந்திரநாத் பானர்ஜி பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அடுத்த தலைமுறை தலைவர்களாக உருவான கோபால கிருஷ்ண கோகுலே, சரோஜினி நாயுடு ஆகியோரின் குருநாதராக சுரேந்த்ரநாத் பானர்ஜி விளங்கினார். பானர்ஜி மிதவாதிகளின் தலைவராக இருந்தார். அந்நிய துணி மறுப்பு, சுதேசி இயக்கம் ஆகியவைகள் அவர் முன்னெடுத்த முக்கியமான செயல்களாகும். அன்றய வங்காளத்தின் முடிசூடா மன்னர் என அவர் புகழப்பெற்றார்.

போராட்ட களம் மனுக்களை எழுதி, அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கும் மிதவாதிகள் கையில் இருந்து பால கங்காதர திலகர்,  லாலா லஜபதி ராய் போன்ற தீவிர செயல்பாட்டில் நம்பிக்கை வைத்த தலைவர்கள் கைக்கு மாறியது. பல்வேறு இடங்களில் ஆயுதம் தாங்கிய போராட்ட வீரர்கள் தோன்ற ஆரம்பித்தனர். தென்னாபிரிக்கா நாட்டில் இருந்து காந்தி பாரதம் வந்தார். காட்சிகள் மாறின, காலங்கள் மாறின, மக்களின் எண்ணம் மாறியது. மிண்டோ மார்லி சீர்திருத்தங்களை பானர்ஜி வரவேற்றார். ஆனால் பெருவாரியான மக்கள் அந்த சீர்திருத்தங்களால் எந்தப் பயனும் இல்லை என்று எண்ணினார்கள். காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் பலன் தராது என்றும் மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ளலாம் என்று பானெர்ஜி கூறினார். பல்வேறு புதிய தலைவர்கள் அரசியல் வானில் சுடர்விட்டுப் பிரகாசிக்க, பானர்ஜி மெல்ல மெல்ல தனது முக்கியத்தை இழந்தார். 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் நாள் சுரேந்தர்நாத் பானர்ஜி காலமானார்.

பெரும் கட்டிடங்களின் அஸ்திவாரங்கள் வெளியே தெரிவதில்லை, ஆனால் அவை இல்லாமல் கட்டிடங்கள் இல்லை. அதுபோல பாரத நாட்டின் ஆங்கில அரசை எதிர்த்து நடந்த போராட்டங்களில் சுரேந்திரநாத் பானர்ஜி போன்றவர்களின் ஆரம்பகால செயல்பாடு இல்லாமல் இருந்திருந்தால், சுதந்திரம் இன்னும் பல பத்தாண்டுகள் பின்னால் சென்றிருக்கும் என்பதுதான் உண்மை.

நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுரேந்திரநாத் பானர்ஜிக்கு ஒரே இந்தியா தளம் தனது வணக்கத்தையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறது. 

சனி, 8 நவம்பர், 2025

நவம்பர் 8 - பீஷ்ம பிதாமகர் லால் கிருஷ்ண அத்வானி பிறந்தநாள்

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த பிரச்சாரகரும், நான்கு முறை ராஜ்யசபை மற்றும் எட்டு முறை மக்களவை என்று நாற்பதாண்டு கால பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் பீஷ்ம பிதாமகருமான திரு லால் கிருஷ்ண அத்வானி அவர்களின் பிறந்தநாள் இன்று.


இன்று பாகிஸ்தானில் இருக்கும் கராச்சி நகரில் 1927ஆம் ஆண்டு கிருஷ்ணசந்த் அத்வானி - ஞாநிதேவி தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் லால் கிருஷ்ண அத்வானி. உண்மையில் அவர் பெயர் லால் என்பதுதான். தந்தையின் பெயரையும் குடும்பப் பெயரையும் இணைத்து சொல்வது வட இந்திய முறை. எனவே அவர் லால் கிருஷ்ணசந்த் அத்வானி என்று அழைக்கப்பட்டார். அதுவே பின்னர் லால் கிருஷ்ண அத்வானி என்று ஆனது.

தனது ஆரம்பிக் கல்வியை செயின்ட் பட்ரிக்ஸ் பள்ளியில் முடித்த அத்வானி பின்னர் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் நகரின் அரசுக் கல்லூரியிலும் படித்தார். பிரிவினைக்குப் பிறகு மும்பை நகருக்கு குடிபெயர்ந்த அத்வானி மும்பை சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். பள்ளியில் படிக்கும் போதே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் இணைந்து கராச்சி நகரில் சங்கத்தை வளர்க்கும் பணியில் சிறப்பாக செயலாற்றனார். பாரதம் வந்த பிறகு ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் பகுதியின் பிரச்சாரக்காக இருந்தார்.

1951இல் பாரதிய ஜனசங் கட்சி தொடங்கப்பட்ட சமயத்தில் கட்சியின் ராஜஸ்தான் மாநில செயலாளராக இருந்த எஸ் எஸ் பண்டாரியின் உதவியாளராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1957ஆம் ஆண்டு கட்சியின் பணிக்காக அத்வானி டெல்லி நகருக்கு குடி பெயர்ந்தார். கட்சியின் டெல்லி கிளையின் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் உயர்ந்தார். சங்கத்தின் பத்திரிகையான ஆர்கனைஸர் பத்திரிகையை ஆசிரியராக இருந்து நடத்திய கே ஆர் மல்கானிக்கு உறுதுணையாக அத்வானி இருந்தார்.

1970ஆம் ஆண்டு ஜனசங் கட்சியின் சார்பில் நாட்டின்டெல்லியில் இருந்து  ராஜ்யசபைக்கு நியமிக்கப்பட்டார். 1973ஆம் ஆண்டு ஜனசங் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் ஒரு முறை குஜராத் மாநிலத்தின் சார்பில் ராஜ்யசபை உறுப்பினராக தேர்வானார். இதனிடையில் இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலையின் போது சிறைவாசம் அனுபவித்தார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய் தலைமையில் அரசு அமைத்தது. அந்த அரசில் செய்தி ஒளிபரப்புதுறையின் அமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் இரண்டரை ஆண்டு காலத்தில் ஜனதா கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது. பழைய ஜனசங்கம் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய வடிவம் கொண்டது. மத்தியப் பிரதேசத்தின் சார்பாக இரண்டு முறை ராஜ்யசபை உறுப்பினராக அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாரதிய ஜனதா கட்சி தனது முதல் பொதுத்தேர்தலை 1984ஆம் ஆண்டு எதிர்கொண்டது. இந்திராவின் படுகொலையை அடுத்து நடந்த தேர்தலில் கட்சி இரண்டே இரண்டு இடங்களில்தான் வெற்றிபெற்றது. அதில் இருந்து இன்று பெரும்பான்மை பலத்தோடு மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சிப் பொறுப்பை பாஜக வகிக்கிறது என்றால் அதன் பெருமை கட்சியின் பீஷ்மர் அத்வானியையே சாரும்.

அடுத்தடுத்த தேர்தல்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சியை வெற்றி பெற வைத்து 1996ஆம் ஆண்டு தேர்தல் முடிவுக்குப் பின்னர் பாஜக முதல் முறையாக மத்தியில் அரசு அமைத்தது. வாஜ்பாய் தலைமையில் அமைந்த அந்த ஆட்சியில் அத்வானி உள்துறை அமைச்சராகப் பதவியேற்றார். பதின்மூன்று நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் வாஜ்பாய் ஆட்சியை விட்டு விலகினார். இரண்டாண்டு காலம் கூட்டணி ஆட்சி என்று நாடு தடுமாறியது. 1998ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தது. கூட்டணியில் இருந்த ஜெயலலிதா தனது ஆதரவை விலக்கிக்கொள்ள மீண்டும் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் அதனைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் பாஜக மீண்டும் அரியணை ஏறியது. முதல்முறையாக ஐந்தாண்டுகள் ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சியைச் சாராத பிரதமர் என்ற பெருமையை வாஜ்பாய் பெற்றார். கட்சியில் வாஜ்பாய் அவர்களுக்கு அடுத்த நிலையில் அத்வானி விளங்கினார்.

ஆனாலும் 2004 மற்றும் 2009 ஆகிய தேர்தல்களில் பாஜக ஆட்சி அமைக்கும் அளவிற்கான இடங்களைப் பெற முடியாமல் போனது. தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பாஜக இளைய தலைமுறை தலைவர்களை முன்னெடுக்கத் தொடங்கியது. அத்வானி வழிகாட்டும் குழுவின் உறுப்பினராக மாறினார்.

தனது நீண்ட நெடிய அரசியல் வாழ்வில் பாஜகவிற்க்காக இடையறாது உழைத்த அத்வானி அவர்களின் சேவைக்கு ஒரே இந்தியா தளம் தலைவணங்குகிறது. இன்னும் நீண்ட ஆயுளோடு அத்வானி இளம் தலைவர்களையே சரியான முறையில் வழிநடத்த ஆண்டவன் அருளட்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறது. 

வெள்ளி, 7 நவம்பர், 2025

நவம்பர் 7 - குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா பிறந்ததினம்

சிறுகுழந்தைகளுக்கு மொழியை அறிமுகம் செய்ய இசையோடு இணைந்த பாடல்கள், அதுவும் எளிமையான சிறிய வார்த்தைகளால் உருவான பாடல்கள்தான் சரியான வழியாக இருக்கமுடியும். அப்படி அற்புதமான பாடல்களை, அதுவும் நல்ல கருத்துக்களை, நற்பண்புகளை இளமையிலேயே குழந்தைகள் மனதில் பதிய வைக்கும் பாடல்களை எழுதிய அழ வள்ளியப்பாவின் பிறந்ததினம் இன்று



புதுக்கோட்டை மாவட்டத்தில் ராயவரத்தில் நகரத்தார் சமுதாயத்தைச் சார்ந்த அழகப்ப செட்டியார் - உமையாள் ஆச்சி தம்பதியரின் மகனாக 1922ஆம் பிறந்தவர் வள்ளியப்பன். ராயவரத்தில் உள்ள எஸ் கே டி காந்தி துவக்கப்பள்ளியிலும் பின்னர் கடியபட்டி பூமீஸ்வரஸ்வாமி உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.
உயர்நிலைப் படிப்பை முடித்தபின் வாழ்வாதாரம் தேடி சென்னைக்கு வந்தார் கவிஞர்.

தனது பதினெட்டாம் வயதில் "சக்தி" என்ற பத்திரிகையில் பணிக்குச் சேர்ந்தார். சிறுது காலத்தில் இந்தியன் வங்கியில் எழுத்தாளராக தன்னை இணைத்துக்கொண்டார். வங்கிப் பணியில் இருந்த காலத்திலேயே பல்வேறு கதைகளையும் பாடல்களையும் எழுதினார். வள்ளியப்பா ஏறத்தாழ இரண்டாயிரம் பாடல்களையும் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். கோகுலம் என்ற சிறுவர் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

நமது நதிகள் : தென்னாட்டு நதிகள் என்ற தலைப்பில் பல்வேறு நதிகளைப் பற்றி வள்ளியப்பா எழுதிய நூலை தேசிய புத்தக டிரஸ்ட் பதினான்கு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு உள்ளது. பாட்டிலே காந்தி கதை என்று சிறு குழந்தைகளுக்கு காந்தியின் வரலாற்றை அறிமுகம் செய்து வைத்த இவரது புத்தகம் மிகவும் புகழ்வாய்ந்த ஓன்று. உலகம் எங்கும் கொண்டாடப்படும் ஈசாப் நீதிக்கதைகளை எளிய பாடல்கள் மூலம் வள்ளியப்பா எழுதினார்.

ரோஜாச் செடி, உமாவின் பூனை, அம்மாவும் அத்தையும், மணிக்கு மணி , மலரும் உள்ளம், கதை சொன்னவர் கதை, மூன்று பரிசுகள், எங்கள் கதையைக் கேளுங்கள், பர்மா ரமணி, எங்கள் பாட்டி, மிருகங்களுடன் மூன்று மணி, நல்ல நண்பர்கள், பாட்டிலே காந்தி கதை, குதிரைச் சவாரி, நேரு தந்த பொம்மை, நீலா மாலா, பாடிப் பணிவோம், வாழ்க்கை வினோதம், சின்னஞ்சிறு வயதில், பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் ஆகிய படைப்புகள் என்றும் புகழ்பெற்றவை. 1944-ல் ‘மலரும் உள்ளம்' எனும் அவரது முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது. 1961-ல் அவர் வெளியிட்ட ‘சிரிக்கும் பூக்கள்' எனும் கவிதைத் தொகுப்பு, ‘குழந்தைக் கவிஞர்’ எனும் பட்டத்தை அவருக்குப் பெற்றுத்தந்தது.

குழந்தைகளுக்காக எழுதிவரும் எழுத்தாளர்களுக்கெல்லாம் தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருந்ததோடு, அவர்களை ஊக்குவிப்பவராகவும் இருந்த வள்ளியப்பா, தமிழில் குழந்தை இலக்கியம் தழைக்கவும், எழுதுபவர்கள் பெருகவும் 1950-ல் 'குழந்தை எழுத்தாளர்கள் சங்கம்' என்ற அமைப்பை நிறுவினார். அதன் பல்வேறு பொறுப்புகளிலும் திறம்பட செயல்பட்டார்.

பாரதியாரின் 81வது பிறந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாட தமிழக் அரசு நியமித்த குழுவில் இடம்பெற்றார். 1979ல் "வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்" என்ற தலைப்பில் கல்கி நினைவு நாள் விழாவில் பேருரை நிகழ்த்தியது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது! மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு அரசின் விழாக்குழுவின் சார்பில் "குழந்தை இலக்கியத்தில் தமிழ்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி மாநாட்டுப்பார்வையாளர்களைக் கவர்ந்தார்!

"பிள்ளை கவியரசு" மற்றும் "மழலை கவிச்செம்மல்" போன்ற பட்டங்கள் திரு.அழ.வள்ளியப்பா அவர்களைத் தேடி வந்தது! 1982ல் "தமிழ் பேரவைச் செம்மல்" என்ற பட்டத்தை மதுரை காமராஜ் பலகலைக்கழகம் வழங்கிச் சிறப்பித்தது.  குழந்தைப் பாடல்களைப் படைப்பதோடு நின்று விடாமல், குழந்தை எழுத்தாளர்கள் பலரை உருவாக்கிய பெருமையும் வள்ளியப்பாவுக்கு உண்டு.மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் வள்ளியப்பா பற்றி இப்படிக் குறிப்பிட்டார்:“தமிழில் நான்கு வகையான பாக்கள் உண்டு என்பது தெரியும். ஆனால், என்னைப் பொறுத்த வரை பா வகைகள் ஐந்து. அவை ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, வள்ளியப்பா!” ''வள்ளியப்பா ஒரு புள்ளியப்பா - அவர்வரையும் பாக்கள் வெள்ளியப்பா!வளரும் பிள்ளைக்குப் பள்ளியப்பா - இளைஞர் வருங்காலத்திற்குத் தங்கமப்பா!”என்பது கொத்தமங்கலம் சுப்புவின்புகழாரம்.

''அணிலே, அணிலே, ஓடிவா!அழகு அணிலே ஓடிவா!கொய்யா மரம் ஏறிவா!குண்டுப்பழம் கொண்டு வா!பாதிப் பழம் உன்னிடம்பாதிப் பழம் என்னிடம்கூடிக்கூடி இருவரும்கொறித்துக் கொறித்துத் தின்னலாம்”  -
எளிய, இனிய, தெளிவான இப் பாடல் வாயிலாகப் பகிர்ந்து உண்ணும் நற்பண்பினை குழந்தைகளின் பிஞ்சு மனங்களில் பதிய வைத்துவிடுகின்றார் வள்ளியப்பா.

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம்அழகான மாம்பழம் அல்வா போல் மாம்பழம்தங்க நிற மாம்பழம் உங்களுக்கும் வேண்டுமா?இங்கு ஓடி வாருங்கள்;பங்கு போட்டுத் தின்னலாம்.மல்கோவா மாம்பழம் போலவே இனித்திடும் வள்ளியப்பாவின் சுவையான குழந்தைப் பாடல் இது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்ட வள்ளியப்பா, 'குழந்தை இலக்கியத்தைப் பல்கலைக்கழக அளவில் பாடமாக வைக்க வேண்டும்' என்று வலியுறுத்திப் பேசி முடித்த நிலையில் மயங்கிச் சாய்ந்தார். 1989 மார்ச் 16-ல் கவிஞரின் உயிர் பிரிந்தது! 

புதன், 5 நவம்பர், 2025

நவம்பர் 5 - தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் பிறந்ததினம்

பாரத நாட்டின் மறுமலர்ச்சி அலை என்பது முதலில் வங்காளத்தில்தான் தொடங்கியது. பெரும் அறிவாளிகளும், கவிஞர்களும், சிந்தனையாளர்களும், வழக்கறிஞர்களும்,  தத்துவ ஞானிகளும் விடுதலைப் போராட்ட வீரர்களும் என்று அலையலையாக தோன்றி பாரதத்தின் பாதையை வங்காளிகளே சமைத்தனர். வங்காளத்தில் தோன்றிய விடுதலைப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர் சித்தரஞ்சன் தாஸ். தேசத்தின் தேச மக்களின் நண்பர் என்ற பொருள்படும் தேசபந்து என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர் அவர்.


இன்றய பங்களாதேஷ் நாட்டில் உள்ள டாக்கா நகரில் பூபன் மோகன் தாஸ் - நிஷாரிணி தேவி தம்பதியரின் 1870ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் நாள் பிறந்தவர் சித்தரஞ்சன் தாஸ். தனது சகோதர்கள் அடியொற்றி சித்தரஞ்சன் தாஸும் வழக்கறிஞர் பட்டம் பெறுவதற்காக லண்டன் மாநகரம் சென்றார். அன்றய லண்டன் நகரம் பாரத நாட்டின் தேசபக்தர்களை உருவாக்கும் இடமாகவும் இருந்தது. லண்டன் நகரில் அரவிந்த கோஷ், சரோஜினி நாயுடு, அதுல் பிரசாத் சென் ஆகிய தேசபக்தர்கள் நட்பு சித்தரஞ்சன் தாஸுக்கு ஏற்பட்டது.

வழக்கறிஞர் பட்டம் பெற்று நாடு திரும்பிய சித்தரஞ்சன் தாஸ் வங்காளத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞராக உருவானார். நீதிபதி கிங்ஸ்போர்ட என்பவரை கொலை செய்ய நடந்த முயற்சியை விசாரிக்கும் அலிப்பூர் சதி வழக்கில் அரவிந்த கோஷுக்கு வாதாடி வெற்றி பெற்று அவரை சிறைத்தண்டனையில் இருந்து தாஸ் விடுவித்தார். அன்றய வங்காளத்தில் இயங்கிக்கொண்டு இருந்த அனுசீலன் சமிதியின் செயல்பாடுகளுக்கு சித்தரஞ்சன் தாஸ் மிகவும் உதவிகரமாக இருந்தார்.

அதனைத் தொடர்ந்து காந்தியின் வழிமுறைகளை ஏற்றுக்கொண்ட சித்தரஞ்சன் தாஸ் அன்னியத் துணி பகிஷ்கரிப்பு, கதர் துணியை ஆதரித்தல், ஒத்துழையாமை இயக்கம் என்று போராடத் தொடங்கினார். சட்டமன்றங்களில் நுழைந்து அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும் என்ற கருத்துக்கு எதிராக காந்தி இருந்ததால் மோதிலால் நேருவுடன் இணைந்து ஸ்வராஜ்யா கட்சியை தாஸ் ஆரம்பித்தார். கொல்கத்தா மாநகராட்சி அமைக்கப்பட்ட போது, தேர்தலில் போட்டியிட்டு அதன் முதல் மேயராகப் பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் சித்தரஞ்சன் தாஸின் சீடராகவும், உதவியாளராகவும் இருந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்.

தாஸின் மனைவி பஸந்தி தேவி  அம்மையார். தன்னளவிலேயே அவரும் முக்கியமான சுதந்திரப் போராட்ட வீராங்கனையாக விளங்கினார். 1921ஆம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு பஸந்தி தேவியும் சித்தரஞ்சன் தாஸின் சகோதரி ஊர்மிளா தேவியும் கைதானார்கள். பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு குறிப்பாக சுபாஷ் சந்திரபோஸுக்கு அவர் காட்டிய பாசம் பலர் பஸந்தி தேவியை தங்கள் தாயாகவே எண்ண வைத்தது.

சித்தரஞ்சன் தாஸ் மிகச் சிறந்த கவிஞரும் கூட. அவரது கவிதைகள் சாகர் சங்கீத் என்ற பெயரில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டு உள்ளது. அரவிந்தர் வங்காள மொழியில் அமைந்த இந்த கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

சுதந்திரம் என்ற பெயரில் நாளிதழையும் நாராயணா என்ற பெயரில் நாளிதழ் ஒன்றையும் சித்தரஞ்சன் தாஸ் நடத்திவந்தார். பிபின் சந்திர பால், சரத்சந்திர சட்டோபாத்யாய, ஹரிப்ரசாத் சாஸ்திரி உள்ளிட்ட வங்காளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் இந்த பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதி வந்தார்கள்.

தொடர்ச்சியான செயல்பாட்டால் சித்தரஞ்சன் தாஸின் உடல்நலம் சீர்கெட்டது. ஓய்வெடுக்கவும் உடல்நலத்தைப் பேணவும் அவரை மலைப்பிரதேசத்தில் சிறுது காலம் இருக்கச் சொல்லி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். சித்தரஞ்சன் தாஸ் டார்ஜலிங் நகருக்குச் சென்றார். 1925ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் நாள் டார்ஜிலிங் நகரில் தாஸ் மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் கொல்கத்தா நகரில் நடைபெற்றது. சித்தரஞ்சன் தாஸின் இறுதி ஊர்வலம் காந்தியின் தலைமையில் நடந்தது.

தனது சொத்துக்களை எல்லாம் நாட்டு மக்களுக்கு எழுதி வைத்திருந்தார் சித்தரஞ்சன் தாஸ். அவர் அளித்த நிலத்தில் இன்று சித்தரஞ்சன் தாஸ் புற்றுநோய் மருத்துவமனை இயங்கி வருகிறது.
ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளே வாழ்ந்தாலும் அதற்குள் மகத்தான சேவைகளை புரிந்த தலைவரை ஒரே இந்தியா தளம் நன்றியோடு நினைவு கொள்கிறது. 

செவ்வாய், 4 நவம்பர், 2025

நவம்பர் 4 - தொழிலதிபர் ஜம்னாலால் பஜாஜ் பிறந்ததினம்



தாளாற்றித் தந்த  பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு - குறள் 212.

அறத்தின் வழிநின்று ஒருவன் ஈட்டிய பொருள் எல்லாம் தகுதியானவர்களுக்கு, தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்கே ஆகும். சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் பிரதமர் மோதி சுட்டிக் காட்டிய குறள் இது. இதன்படி வாழ்ந்த பெருமகனார் தொழிலதிபர் ஜம்னாலால் பஜாஜ் அவர்கள்.

கனிராம் பிரடிபாய் தம்பதியரின் மூன்றாவது மகனாக ராஜஸ்தான் மாநிலத்தில் காசி கா பாஸ் என்ற கிராமத்தில் பிறந்தவர் ஜம்னாலால். இயல்பாகவே தொழில்முனைவோர்களான மார்வாடி வகுப்பைச் சேர்ந்தவர் இவர். வசதியான குடும்பத்தைச் சாராத ஜம்னாலாலை பஷிராஜ் - சாதிபாய் தம்பதியினர் தங்கள் வாரிசாக தத்து எடுத்துக் கொண்டனர். ராஜஸ்தானைச் சார்ந்த இவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் வார்தாவில் வசித்து வந்தனர்.

சேத் பஷிராஜ் மேற்பார்வையில் ஜம்னாலால் வியாபார நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். சரியான நேரத்தில் சரியான விலையில் பொருள்களை வாங்கவும், அதனை லாபத்தில் விற்கவும், அதற்கான கணக்குகளை பராமரிக்கவும் திறமைசாலியாக விளங்கினார். ஜம்னாலால் தொடங்கிய தொழில்கள்தான் இன்று பஜாஜ் குழுமமாக பரந்து விரிந்து நிற்கிறது.

பொதுவாகவே வியாபாரிகளும் தொழிலதிபர்களும் கூடியவரை அரசைப் பகைத்துக் கொள்ளாமலே இருப்பார்கள். ஜம்னாலாலும் அப்படிதான் இருந்தார். முதல் உலகப் போரில் அவர் ஆங்கில அரசுக்கு அளித்த ஒத்துழைப்பை அங்கீகாரம் செய்யும் விதமாக அரசு அவரை கவுரவ நீதிபதியாக நியமித்தது. ஜம்னாலாலுக்கு ராவ் பகதூர் என்ற பட்டத்தையும் அளித்தது.

திலகர், கோகுலே இவர்களின் சகாப்தம் முடிந்து காந்தியின் காலம் தொடங்கிய நேரம் அது. ஜம்னாலால் காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். அஹிம்சை, தாழ்த்தப்பட்ட சகோதர்களின் நல்வாழ்வு, எளிய வாழ்க்கை என்ற கொள்கைகளை அந்த தொழிலதிபர் பேசவில்லை, செயல்படுத்தத் தொடங்கினார். காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் தன் குடும்பத்தினரோடு வாழ ஆரம்பித்தார்.

காந்தியின் நெருக்கம் ஜம்னாலாலை ஆங்கில அரசு அளித்த ராவ் பகதூர் பட்டத்தையும் கௌரவ நீதிபதி பதவியையும் துறக்கத் தூண்டியது. அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம், கொடி சத்தியாகிரக போராட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு ஜம்னாலால் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

காந்தி சேவா சங்கத்தின் தலைவராகவும், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு  உறுப்பினராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக பல்லாண்டு பொறுப்பு வகித்தார்.

தேசத்தின் புனர்நிர்மாணப் பணி என்பது ஹரிஜன சகோதர்களை விட்டு விட்டு நடக்க முடியாது என்பதை உளப்பூர்வமாக நம்பிய ஜம்னாலால் தங்கள் குடும்ப கோவிலை ஹரிஜன மக்களின் தரிசனத்திற்காக திறந்து விட்டார். பல்வேறு கோவில்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவரின் தொடர்ந்த முயற்சியால் திறக்கப்பட்டது. பல்வேறு குளங்களிலும், கிணறுகளிலும் ஹரிஜன சகோதர்கள் பயன்பாட்டுக்கு இருந்த தடை நீங்கியது.

தென்னக மக்களும் ஹிந்தி மொழியைப் படிக்க வேண்டும் என்பதற்காக தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சாரக் சபா என்ற அமைப்பை ஜம்னாலால் நிறுவினார். கதர் துணி உற்பத்தி, கைத்தொழில் வழியாக கிராம முன்னேற்றம் ஆகிய துறைகளில் ஜம்னாலால் தொடர்ந்து இயங்கி வந்தார்.

தொழிலில் தனது பங்கு முழுவதையும் ஆதாரமாகக் கொண்டு ஜம்னாலால் பஜாஜ் தொண்டு நிறுவனம் என்ற அமைப்பை நிறுவினார். இந்த நிறுவனத்தின் சட்ட திட்டங்களை வழக்கறிஞர் என்ற முறையில் காந்திதான் எழுதினார் என்றால் காந்திக்கு ஜம்னாலால் மீதான அன்பும் மரியாதையும் புலனாகிறதுதானே.

தனது நான்கு குழந்தைகளோடு ஜம்னாலால் பஜாஜை காந்தி தனது ஐந்தாவது மகனாகவே நடத்திவந்தார். "நான் தர்மகர்த்தா முறையில் பாரத தொழிலதிபர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று எழுதும் போதெல்லாம் என் கண்ணில் நிழலாடுவது இந்த தொழில்துறை இளவரசர்தான்" என்று ஜம்னாலாலைப் புகழ்ந்து அவரின் இறப்பிற்குப் பின்னர் காந்தி எழுதி உள்ளார்.

தனது ஐம்பத்தி ஏழாவது வயதில் 1942ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் நாள் ஜம்னாலால் பஜாஜ் காலமானார்.

ஜம்னாலால் பஜாஜ் தொடங்கிய நிறுவனங்கள் இன்று பல்வேறு தொழில்களில் காலூன்றி பஜாஜ் குழுமமாக உருவாகி உள்ளது. 


திங்கள், 3 நவம்பர், 2025

நவம்பர் 3 - ஹிந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் பிரிதிவிராஜ் கபூர் பிறந்தநாள்



இசையும் நாடகமும் பாரத நாகரீகத்தில் பிரிக்க முடியாத  ஒரு அங்கம். அதனால்தான் நாடகத்தின் நீட்சியான சினிமாவும் மக்களின் எண்ணத்தோடு ஒட்டியே உள்ளது. பாரத திரையுலக வரலாற்றில் குறிப்பாக ஹிந்தி திரையுலகத்தில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக விளங்கிய பிரிதிவிராஜ் கபூரின் பிறந்ததினம் இன்று. இன்றய பாகிஸ்தான் பகுதியில் 1906ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் நாள் பிறந்தவர் பிரிதிவிராஜ். அவர் தந்தை அன்றய ஆங்கில காவல்துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர்.

சிறுவயதில் இருந்தே நாடகங்களில் ஈடுபாடு கொண்டிருந்த பிரிதிவிராஜ், தான் படித்துக்கொண்டு இருந்த சட்டப் படிப்பை பாதியில் கைவிட்டு சினிமாவில் நடிக்க மும்பைக்கு சென்றார். 1929ஆம் ஆண்டு தயாரான சினிமா கேர்ள் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அது ஒரு பேசாத ஊமைப் படம். இந்தியாவில் தயாரான முதல் பேசும் படமான ஆலம் ஆரா என்ற படத்தில் இவர் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். 1941ஆம் ஆண்டு வெளியான சிக்கந்தர் என்ற படத்தில் அலெக்சாண்டர் வேடத்தில் பிரிதிவிராஜ் நடித்தார். மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற அந்தப் படம்தான் பிரிதிவிராஜ் கபூரை ஹிந்தி திரைப்பட உலகத்தின் முன்னணி கதாநாயகனாக நிலைநிறுத்தியது.

அன்றய காலத்தில் திரைப்பட நடிகர்கள் நாடகங்களிலும் நடிப்பது வழக்கமாக இருந்தது. பல்வேறு திரைப்படங்களிலும் நாடகங்களிலும்  நடித்துக்கொண்டு இருந்த பிரிதிவிராஜ் பிரிதிவி தியேட்டர்ஸ் என்ற நாடகக்குழுவை தொடங்கினார். நாடு சுதந்திரம் அடையும் காலம் வெகுவிரைவில் இருந்தது, ஆனால் மதத்தின் பெயரால் நாடு பிளவுபடும் என்பதும் உறுதியான காலம் அது. நாட்டை எதிர்நோக்கும் மிகப் பெரும் பிரச்சனையான பிரிவினைதான் பிரிதிவிராஜ் கபூரின் நாடகங்களின் மையக் கருத்தாக இருந்தது. தீவார், பதான், கதர், ஆஹுதி என்று தொடர்ந்து நான்கு நாடகங்கள் நாடு பிளவுபட்டால் அதனால் விளையும் இன்னல்களைப் பற்றி கபூரின் நாடகக்குழு அரங்கேற்றியது. திரைத்துறை நாடகத்தை விழுங்கியது. நாடகங்களுக்கான ஆதரவு குறைய, பிரிதிவிராஜ் புது நாடங்களை மேடையேற்றுவது இல்லாமலானது. ஏறத்தாழ பதினைந்தாண்டு காலத்தில் பிரிதிவி தியேட்டர்ஸ் 2,600 முறை பல்வேறு நாடகங்களை நாட்டின் பல்வேறு நகரங்களில் நடத்தியது.

பிரிதிவிராஜ் கபூரின் மகன்களான ராஜ்கபூர், ஷம்மிகபூர் மற்றும் சஷிகபூர் ஆகியோரும் திரையுலகின் முக்கிய நடிகர்களாக விளங்கினார்கள். ராஜ்கபூர் தயாரித்த ஆவாரா என்ற திரைப்படத்திலும், மகன் ராஜ்கபூர் பேரன் ரன்திர்கபூர்  ஆகியோருடன் இணைந்து கல் ஆஜ் அவுர் கல் எந்த படத்திலும் பிரிதிவிராஜ்கபூர் நடித்துள்ளார். மூன்று தலைமுறைகள் இணைந்து நடித்த மிகச் சில படங்களில் இதுவும் ஓன்று.

முகலாய இளவரன் சலீமுக்கும் நாட்டிய தாரகை அனார்கலிக்கும் இடையே உருவான காதலை பேசிய படமான முகல் இ ஆசம் என்ற படத்தில் பிரிதிவிராஜ் கபூர் முகலாயப் அரசர் அக்பரின் வேடத்தில் நடித்தார். மிகப் பெரும் பொருள்செலவில் உருவான இந்தப் படம், பெரும் வெற்றியைப் பெற்றது. இந்திய திரைப்பட வரலாற்றில் குறிப்பிடத் தக்க படங்களில் ஒன்றாக இந்தப்படம் விளங்குகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரிதிவிராஜ் கபூர் 1972ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

இவரின் கலையுலக சேவையைப் பாராட்டி அரசு 1969ஆம் ஆண்டு பத்மபூஷன் பட்டத்தை அளித்தது. திரையுலகத்தில் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது மரணத்திற்குப் பிறகு இவருக்கு வழங்கப்பட்டது. 

ஞாயிறு, 2 நவம்பர், 2025

நவம்பர் 2 - அருண் ஷோரி பிறந்தநாள்

நில்லாமல்  ஓடிக்கொண்டு இருக்கும் காலம் இரக்கமற்றது. மிகப்பெரும் ஆதர்சனங்களாக இருந்தவர்கள் தங்கள் நிலையில் இருந்து வீழும் துர்பாக்கியத்தைப் பார்க்கும் வாய்ப்பை அது பலருக்கு அளித்து விடுகிறது. நிறைவேறாத ஆசைகள், கலந்த கனவுகள், ஒட்டாமல் போன உறவுகள் என்று இந்த வரிசை மிகப் பெரியதாக இருக்கிறது. ஒருகாலத்தில் அப்படி பெரும் ஆளுமையாக விளங்கிய பொருளாதார நிபுணரும், பத்திரிகையாளருமான அருண் ஷோரி அவர்களின் பிறந்தநாள் இன்று.



மிகப் பெரிய அளவில் அருண் ஷோரி வெளியுலகத்திற்கு தெரியவந்தது எண்பதுகளின் தொடக்கத்தில். அப்போது அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஆசிரியர். பழுத்த காந்தியவாதியும், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் அதிபரும், பிறவிப் போராளியுமாகிய ராம்நாத் கோயங்காவின் தளபதியாக அருண் ஷோரி செயல்பட்டு வந்தார். கத்தியைக் காட்டிலும் பேனாவின் முனை கூர்மையானது என்பதை பாரத மக்களுக்கு அருண் ஷோரி நிரூபித்துக் காட்டினார். அவரது எழுத்துக்கள் அன்றய மஹாராஷ்டிரா முதல்வர் அந்துலேவை ஊழல் குற்றசாட்டுகளால் துளைத்தது. அந்துலே பதவி விலக வேண்டி வந்தது. கோயங்காவும், ஷோரியும், ஆடிட்டர் குருமூர்த்தியும் குறிவைத்தது இந்திரா மீதும் அவர் மகன் ராஜீவ் மீதும். அந்துலேவைத் தொடர்ந்து, போபோர்ஸ் பீரங்கி ஊழல் விவகாரம், ரிலையன்ஸ் திருபாய் அம்பானியின் முறைகேடுகள் என்று தங்கள் எழுத்துக்களால் அவர்கள் நாட்டின் மனசாட்சியை உலுக்கி எடுத்தனர்.

அன்றய இந்திய ஆட்சிப் பணியில் இருந்த ஹரிதேவ் ஷோரியின் மகனாக 1941ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் நாள் பிறந்தவர் அருண் ஷோரி. ஹரிதேவ் ஷோரி நுகர்வோர் உரிமைக்கான பல்வேறு சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தவர். டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத் துறையில் இளங்கலை பட்டத்தையும், அமெரிக்காவில் உள்ள சைராகஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றவர் அருண் ஷோரி. அதனைத் தொடர்ந்து உலகவங்கியில் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வந்தார். அதே காலகட்டத்தில் 1972 - 1974ஆம் ஆண்டுகளில் பாரத நாட்டின் திட்டக்குழுவின் ஆலோசகராகவும் இருந்தார்.

1975ஆம் ஆண்டில் இந்திரா நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். அதனை எதிர்த்து ராம்நாத் கோயங்கா அவரது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை மூலம் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருந்தார். அந்த போராட்டத்தில் அருண் ஷோரியும் கலந்துகொண்டார். தொடர்ச்சியாக அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுத ஆரம்பித்தார். 1979ஆம் ஆண்டு கோயங்கா எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக அருண் ஷோரியை நியமித்தார். ஷோரியின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் செயல்களை விமர்சிக்கும் பணி இன்னும் முனைப்போடு நடைபெற்றது. அவரது சேவைகளை பாராட்டி அவருக்கு 1982ஆம் ஆண்டு மகாசாய் விருது வழங்கப்பட்டது.

பத்திரிகையில் எழுதுவது மட்டுமல்லாமல் பல்வேறு புத்தகங்களையும் அருண் ஷோரி எழுதியுள்ளார். பொய்யான கடவுளை வழிபடுதல் என்று அம்பேத்கார் பற்றிய புத்தகம், பத்வாகளின் உலகம் என்று ஷரியா சட்டங்களைப் பற்றி, இந்திய நீதித்துறை செயல்படும் விதம் பற்றி அனிதாவுக்கு பிணை ஆணை கிடைத்தது, இறைவனுக்கு தாயின் மனம் தெரியுமா என்று நரம்பு சீர்கேட்டால் அவதிப்படும் தனது மகனைப் பற்றி என்று பல்வேறு புத்தகங்களை அருண் ஷோரி எழுதி உள்ளார்.

1998 முதல் 2010ஆம் ஆண்டு வரை இரண்டு முறை ஷோரி பாஜகவின் மத்திய மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். வாஜ்பாய் அரசின் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தனியார்மயமாக்கல் ஆகிய துறைகளின் அமைச்சராகவும் ஷோரி பணியாற்றி உள்ளார்.

ராஜ்யசபை உறுப்பினராகப் பணியாற்றியபோது அவர்க்கு அளிக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியை கான்பூர் ஐ ஐ டி நிறுவனத்தில் உயிர் தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வகம் அளிக்க அவர் வழங்கினார்.

தற்போதய அருண் ஷோரியின் எண்ணப்போக்கு ஒரே இந்தியா தளத்தின் அலைவரிசைக்கு ஒத்ததாக இல்லை என்றாலும், ஆசிரியர் குழுவின் ஆதர்ச நாயகர்களில் ஒருவராக ஒரு காலத்தில் அருண் ஷோரி விளங்கியது என்னவோ உண்மைதான்.

மனம் திருந்திய மைந்தராக தேசத்தின் புனர்நிர்மாணப் பணிக்கு அருண் ஷோரி திரும்பவேண்டும் என்ற பிரார்தனையோடு அவர்க்கு எங்கள் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 

வியாழன், 30 அக்டோபர், 2025

அக்டோபர் 30 - பிரமோத் மகாஜன் பிறந்தநாள்

காலம் தனக்கு தேவையான மனிதர்களை தேவையான நேரத்தில்  தேவையான இடத்தில் வைத்து விடுகிறது, அதனால்தான் சிலரை சில இடங்களில் இருந்து, சிலரை உலகத்தில் இருந்தே விலக்கி விடுகிறது. காலத்தினால் வெளியேற்றப்பட்ட, பாஜகவின்இரண்டாம் தலைமுறை அரசியல்வாதியும், பாரத அரசியல் வானில் பிரகாசமான விளக்காக திகழ்ந்து இருக்க வேண்டியவருமான  பிரமோத் மகாஜன் அவர்களின் பிறந்தநாள் இன்று.



இன்றய தெலுங்கானா மாநிலத்தின் மஹபூப்நகர் பகுதியைச் சார்ந்த வெங்கடேஷ் தேவிதாஸ் மகாஜன் - பிரபாவதி தம்பதியரின் ஐந்து குழந்தைககளில் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் திரு பிரமோத் மகாஜன். இந்த தம்பதியரே மஹாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தின் அம்பஜ்ஜோகி நகருக்கு குடிபெயர்ந்ததால், ப்ரமோதின் இளமைக்காலம் முதலே அவர் மஹாராஷ்டிரா மாநிலத்தவராகவே வளர்ந்து வந்தார். தனது பள்ளிப்படிப்பை யோகேஸ்வரி வித்யாலயாவில் முடித்த மகாஜன் இயற்பியல் துறையில் இளங்கலை பட்டமும், இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். படிக்கும் காலத்திலேயே நாடகத்துறையில் சிறந்து விளங்கிய பிரமோத், தன்னோடு நடித்த ரேகாவை காதலித்து மணந்து கொண்டார். நான்காண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பிரமோத் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.

மிகக் சிறுவயதில் இருந்தே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் இருந்த பிரமோத் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தருண் பாரத் என்ற மராத்தி செய்தித்தாளின் ஆசிரியராகவும் இருந்தார். இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடிநிலை காலத்தில் கைது செய்யப்பட்டு நாசிக் சிறையில் அடைக்கப்பட்டார். பாரதிய ஜனதா கட்சி உருவான காலத்தில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்ப்பில் கட்சிப் பணிக்காக அனுப்பப்பட்டவர்களில் பிரமோத்தும் ஒருவர். தனது பணித்திறமையால், பல்வேறு மாற்றுக் கட்சியினரோடு இருந்த தொடர்பால் அவர் பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார்.

மஹாராஷ்டிர மாநில பாஜகவின் பொதுச் செயலாளர், கட்சியின் தேசிய செயலாளர், கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் என்று பல்வேறு பொறுப்புகள் அவரைத் தேடி வந்தது. இந்திரா கொலையானதைத் தொடர்ந்து நடைபெற்ற 1984ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்டார், ஆனால் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். 1996ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். அவரது சேவைகளை அங்கீகாரம் செய்யும் விதமாக பாஜக அவரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நான்கு முறை நியமித்தது.

1996ஆம் ஆண்டு முதல்முதலாக வாஜ்பாய்  அமைந்த பாஜக அரசில் பிரமோத் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1998ஆம் ஆண்டு முதலில் பிரதமரின் ஆலோசகராகப் பணியாற்றிய மகாஜன், பின்னர் செய்தித் தொடர்பு, உணவு பதனிடும் துறை, பாராளுமன்ற விவகாரத்துறை, நீர்வளம் மற்றும் தகவல் தொடர்பு ஆகிய துறைகளின் அமைச்சராகவும் இருந்தார். பின்னர் அவர் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பிரமோத் மகாஜன் பாஜகவின் முக்கிய தலைவர்களான வாஜ்பாய் மற்றும் அத்வானியின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தார். வாஜ்பாய் அவரை லக்ஷ்மணன் என்றே அழைப்பது வழக்கம்.

1995ஆம் ஆண்டு பாஜக சிவசேனாவோடு கூட்டணி வைத்து மஹாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டு பெரும் வெற்றியைப் பெற்றது. கூட்டணி அமையவும், தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை அமைப்பதிலும் பிரமோத்தின் பங்கு பாராட்டுதலுக்குரியது. 2003ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் மாநிலத் தேர்தலின் போது, அந்த மாநிலத்தின் பொறுப்பாளராக பிரமோத் பணியாற்றினார். அங்கும் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் "இந்தியா ஒளிர்கிறது" என்ற முழக்கத்தோடு பாஜக நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் அந்தத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் அளவிற்கு தேவையான வெற்றிகளை ஈட்ட முடியவில்லை. தோல்விக்கான பொறுப்பை மகாஜன் ஏற்றுக்கொண்டார்.

2006ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் நாள் பிரமோத் மகாஜன் அவர் வீட்டில் அவரது உடன்பிறந்த தம்பியால் சுடப்பட்டார். மிக அருகில் இருந்து வெளியான துப்பாக்கி குண்டுகளால் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சைகள் பலனளிக்காமல் பிரமோத் மே மாதம் 3ஆம் தேதி காலமானார்.

பிரமோத் மஹாஜனின் சகோதரி கணவர் கோபிநாத் முண்டேயும் பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். ப்ரமோதின் மகள் பூனம் மகாஜன் தற்போது பாஜகவின் இளைஞர் அணி தலைவியாக உள்ளார்.

விதி விளையாடாமல் இருந்திருந்தால், பிரதமர் பதவிக்கே வந்திருக்க வேண்டிய பிரமோத் மகாஜன் பிறந்தநாளில் கட்சிக்கான அவரது சேவையை ஒரே இந்தியா தளம் நன்றியோடு நினைவு கொள்கிறது. 

புதன், 29 அக்டோபர், 2025

அக்டோபர் 29 - கலையரசி கமலாதேவி சட்டோபாத்யாய நினைவு நாள்



பாரத நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் மீண்டும் மீண்டும் பார்க்கலாம். சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமான பங்கு வகித்த பலர், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு எந்த ஒரு பதவிக்கும் ஆசைப்படாமல், தேசத்தின் புனர்நிர்மாணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டது என்பது பல நாடுகளில் நாம் காண முடியாத ஓன்று. அப்படி அரசியலை விட்டு விட்டு வேறு தளங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களில் முக்கியமானவர் கமலாதேவி சட்டோபாத்தியாய அவர்கள்.

மங்களூரில் மாவட்ட ஆட்சியாளராகப் பணியாற்றிவந்த ஆனந்தைய தாரேஸ்வர் - கிரிஜாபாய் தம்பதியரின் நான்காவது மகளாக 1903ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி பிறந்தவர் கமலாதேவி. கமலாதேவியின் பாட்டி சமிஸ்க்ரித நூல்கள் வழியாக பாரத நாட்டின் வரலாற்றை அறிந்தவராக இருந்தார். அவரின் வழிகாட்டல் கமலாதேவிக்கு தேசத்தின் பாரம்பரியத்தைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்தது. தங்கள் வீட்டிற்கு வழக்கமாக வரும் கோவிந்த ரானடே, கோபால கிருஷ்ண கோகுலே, அன்னி பெசன்ட் அம்மையார் ஆகியோரின் அறிமுகம் கமலாதேவியின் சிந்தனைகளை வடிவமைத்தன

இதற்கிடையில் கடுமையான சோதனைகளை கமலாதேவி சந்திக்க நேர்ந்தது.  அவரது மூத்த சகோதரி சகுணா வெகு இளமையில் உயிர் நீத்தார். கமலாவுக்கு 7 வயதாகும் போது அவரது தந்தையாரும் மறைந்தார். மறைந்த தந்தையார் உயில் எதுவும் எழுதி வைத்து விட்டுச் செல்லவில்லை என்பதால் அந்த நாள் வழக்கப்படி கணவரது சொத்துக்கள் எல்லாம் மனைவியை வந்தடையாமல் கணவரது வழி உறவினர் ஒருவரது மகனைச் சென்றடைந்தது. அப்போது அதுதான் சட்டம். அந்த சொத்துக்களை பெற்றுக்கொண்ட பயனாளி, மாதாமாதம் கமலாதேவி குடும்பத்தினருக்கு வாழ்க்கை நடத்த குறிப்பிட்ட அளவு பணத்தை அளிக்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் கமலாதேவியின் தாயார் கிரிஜாபாய் அந்தத் தீர்ப்பை நிராகரித்தார். தனக்குத் தனது கணவரது சொத்துக்களின் மீது உரிமை இல்லாவிட்டால் அது தனக்கும், தன் குழந்தைகளுக்கும் தேவையில்லை என்று கூறி  தனது தாய் வீட்டில் இருந்து தனக்களிக்கப்பட்ட சீதனத்தைக் கொண்டு மட்டுமே எதிர்கால வாழ்க்கையை நடத்துவது என முடிவு செய்து கொண்டார்.

கமலாதேவிக்கு அவரின் 14ஆம் வயதில் திருமணமானது. ஆனால் இரண்டே வருடத்தில் அவர் கணவர் மரணமடைந்தார்.  இளம் விதவையாக சென்னை ராணி மேரிக் கல்லூரியில் சமூகவியல் கற்க மாணவியாகச் சேர்ந்தார் கமலா. அங்கே கமலாவின் சக வகுப்புத் தோழியாக அமைந்தவர் சுஹாசினி சட்டோபாத்யாய். இவர் கவிக்குயில் சரோஜினி தேவியின் இளைய சகோதரி. இவர்களது நட்பு கிடைத்ததும் கமலாவுக்கு மென்கலைகளில் நாட்டம் மிகுந்தது. அதோடு சுஹாசினி, தன் தோழிக்கு, தனது மூத்த சகோதரரும், மாபெரும் கலை ஆர்வலரும், நாடகக் கலைஞருமான  ஹரிந்தரநாத் சட்டோபாத்யாவை  அறிமுகம் செய்து வைத்தார். இருவரின் கலை ஆர்வமும் ஒன்றாக இருக்க இருவரும் காதலிக்கத் தொடங்கினர். தனது 20ஆவது வயதில்  ஹரிந்திர நாத்தைத் திருமணம் செய்து கொள்வது என கமலாதேவி முடிவெடுத்தார்.

அன்றய காலகட்டத்தில் இது ஒரு பெரும் புரட்சி.  திருமணம் முடிந்து ஓரிரு ஆண்டுகளில் தனது ஒரே மகன் ராமா பிறந்ததும் கணவருடன் மேற்கல்விக்காக லண்டன் சென்று விட்டார் கமலா தேவி. அவர் லண்டனில் இருக்கும் போது தான் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் மற்றும் இன்னபிற காந்திய வழிப் போராட்டங்கள் குறித்தெல்லாம் அறிய நேர்ந்தார். அவருக்கு காந்தியின் அஹிம்சா வழிப் போராட்டங்களின் பால் ஈர்ப்பு ஏற்பட்டது இப்படித்தான்.

கமலாதேவியும், ஹரிந்திர நாத்தும் இணைந்து தங்கள் வாழ்வில் தடைகள் பல இருப்பினும் அவற்றை எல்லாம் வெற்றிகரமாகக் கடந்து பல மேடை நாடகங்களை அரங்கேற்றினர். கமலா திரைப்படங்களிலும் நடித்தார். கன்னடத்தில் முதல் மெளனப் படத்தில் நடித்தவர் என்ற பெருமை கமலாதேவிக்கு உண்டு. அது தவிர 1931 ஆம் ஆண்டில் பிரபல கன்னட நாடக ஆசிரியரான சூத்ரகாவின், மிருக்‌ஷ்கடிகா (வசந்தசேனா)  என்ற கன்னடப் படத்திலும் கமலா நடித்தார். 1943 ஆன் ஆண்டில் தான்சேன் என்ற இந்தித் திரைப்படத்திலும், தொடர்ந்து சங்கர் பார்வதி, தன்னா பகத் உள்ளிட்ட திரைப்படங்களிலும் கமலா நடித்திருந்தார்.

ஆனாலும் கமலாதேவியின் திருமண வாழ்வு ஆனந்தமாக இல்லை. அதனால் கமலாதேவி தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். இதுவும் அன்று விவாதப் பொருளானது. . ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட கமலாவுக்கு நேரமில்லை. அவர் அச்சமயத்தில் வெகு தீவிரமாக காந்தியப் போராட்டங்களுக்கு தம்மை ஒப்புக் கொடுத்து விட்டிருந்தார்.

கமலாதேவி இலண்டனில் இருந்தபோது, இந்தியாவில் காந்தி  ஒத்துழையாமை இயக்கத்துக்கு 1923இல் அழைப்புவிடுத்ததை அறிந்து இந்தியா திரும்பி, சேவாதளம் அமைப்பில் இணைந்தார். விரைவில் கமலாதேவி சேவா தளம் மகளிர் பிரிவின் பொறுப்பாளராக ஆனார். சேவாதளத்தின் சார்பில் அனைத்திந்திய அளவில் பெண்களைத் தேர்வு செய்வது, பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகளில் கமலா ஈடுபட்டார்.

1926, இல் இவர் அனைத்திந்திய மகளிர் மாநாடு (AIWC) அமைப்பின் நிறுவனரான  மார்கரெட் என்பவரைச் சந்தித்தார். அவரின் தாக்கத்தால் சென்னை மாகாண சட்டசபைக்கு போட்டியிட்டார். இவர்தான் இந்தியாவில் சட்டமன்றத்துக்கு போட்டியிட்ட முதல் பெண். ஆயினும் தேர்தலில் இவர் 55 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

அதற்கடுத்த ஆண்டில், அனைத்து - இந்திய மகளிர் மாநாடு (AIWC) நிறுவப்பட  அதன் முதல் அமைப்புச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து வந்த ஆண்டுகளில், AIWC யின் கிளைகள் இந்தியா முழுவதும் இயங்கத் துவங்கின, தன்னார்வத் திட்டங்கள் பலவற்றைக் கொண்டு மதிப்பு மிகுந்த தேசிய அமைப்புகளில் ஒன்றாக மாறியது AIWC. கமலாதேவி, இந்தியா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் விரிவாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பெண்களுக்கான கல்வி, சமுதாய வளர்ச்சிக்கான திட்டங்கள் முதலியவை குறித்து ஆராய்ந்தார். அதன் பயனாக டெல்லியில் பெண்களுக்கான ஹோம் சயின்ஸ் (Lady Irvin College for Home Science) கல்லூரியை ஆரம்பித்தார்.

காந்தியடிகளால் 1930-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உப்பு சத்தியாகிரகக் குழு உறுப்பினர்களான ஏழு பேர்களில் கமலாவும் ஒருவர். மும்பை கடற்கரையில் பெண்கள் பிரிவில் உப்பு சத்தியாக்கிரகம் செய்தார். உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின்போது சுதேசி உப்பை மும்பை பங்குச் சந்தையில் விற்க முயன்ற போது கமலா கைது செய்யப்பட்டார்.  இதற்கு ஓராண்டு கழித்து 1936 ல் காங்கிரஸ் சோஸலிஸ்ட் கட்சியின் தலைவராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டு,  ஜெயபிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா, மினுமசானி முதலிய தலைவர்களுடன் இணைந்து இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்டார்.

இரண்டாம் உலகப்போர் துவங்கிய காலத்தில் கமலாதேவி இங்கிலாந்தில் இருந்தார், அவர் உடனடியாக உலகின் மற்ற நாடுகளுக்கு இந்தியாவின் பிரதிநிதியாகச் சென்று இந்திய விடுதலைக்கான ஆதரவைத் திரட்டுவதில் முனைந்தார்.

இந்தியா சுதந்திரமடையும் போது இந்தியா – பாகிஸ்தான் என இரண்டு நாடுகளான பிரிந்தன. இதனையொட்டி நாட்டில் இந்து –முஸ்லீம் கலவரம் ஏற்பட்டது. இக்கலவரத்தில் பல்லாயிரம்பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர். பல லட்சம் இந்துக்களும், முஸ்லீம்களும் அகதிகளாக்கப்பட்டனர். இந்நிலையில் கமலா தேவி, பாதிக்கப்பட்ட மக்களுக்காக பரிதாபாத் நகரத்தில் சேவை மையம் அமைத்து 50,000 மக்களுக்கு மருத்துவ உதவியும், உணவு வசதியும், தங்குமிடமும்  செய்து கொடுத்தார்.

அகதிகளாக வந்தவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவேண்டும் அல்லவா. அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு தேவையான பொருளாதாரத்தை  உருவாக்கும் பொருட்டு
 மறக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருந்த கைவினைத் தொழில்களை சீரமைத்துத் தரும்  பணியினையும் இரண்டாம் கட்டமாக தொடங்கினார். இந்திய கைவினைப் பொருள்கள் மற்றும் கைத்தறித்துறை மரபைக் காக்கவும் சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் அத்துறைக்கு பெரும் புத்துயிர் அளிக்கவும் கமலாதேவி பொறுப்பெடுத்துக் கொண்டார். நவீன இந்தியாவில் இன்று நாம் காணும் கைத்தறி மற்றும் கைவினைப் பொருள் வளர்ச்சி மற்றும் நவீன முன்னேற்றங்கள் அனைத்துக்கும் அடித்தளமிட்டவர்  கமலா தேவி  என்றால் மிகையில்லை

இவரது பணிகளை அங்கீகரிக்கும் விதமாக  இந்திய அரசு  பத்மபூஷன்  விருதை 1955 ல் அளித்தது. பின்னர் இரண்டாவது மிக உயரிய  விருதான பத்மவிபூஷண்  விருதை 1987 ல் பெற்றார். 1966 ல் ராமன் மகசேசே விருதை பெற்றார். மேலும் சங்கீத நாடக அகாதெமி விருது,  1974 இல் இசை, நடனம், நாடகம் ஆகியவற்றுக்காக இந்திய தேசிய அகாதெமி வழங்கிய வாழ்நாள் சாதனைக்கான விருதையும் பெற்றார்.

யுனெஸ்கோ அமைப்பு கைவினைப்பொருட்களை ஊக்குவிக்கும் இவரது பணிகளுக்காக 1977 ல் சிறப்பு விருது வழங்கியது.  ரவீந்திர நாத் தாஹூரின் சாந்தி நிகேதனும் கூட கமலாதேவியின் சமூக முன்னேற்ற மற்றும் கலைத்துறை சேவைகளுக்காக அதன் மிக உயர்ந்த விருதை கமலாவுக்கு அளித்து அவரைச் சிறப்பு செய்து கெளரவித்தது

வாழ்க்கை முழுவதும் ஓயாமல் இயங்கிக்கொண்டு இருந்த கமலாதேவி சட்டோபாத்யாய 1988ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் நாள் காலமானார். 

செவ்வாய், 28 அக்டோபர், 2025

அக்டோபர் 28 - இந்திரா நூயி பிறந்தநாள்

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம், எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி


மஹாகவியின் இந்த வாக்கு இன்று உண்மையாகிக் கொண்டுள்ளது. பாரதத்தில் மட்டுமல்ல பாரெங்கும் பாரதப் பெண்கள் இன்று தங்கள் திறமையால் வெற்றிக்கொடி கட்டி வருகின்றனர். அதில் குறிப்பிடத்தக்கவர் திருமதி இந்திரா நூயி அவர்கள். அதிலும் இவர் தமிழகத்தைச் சார்ந்தவர் என்பது நமெக்கெல்லாம் இன்னும் பெருமை.

சென்னையைச் சார்ந்த மத்தியதர குடும்பத்தில் 1955ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி பிறந்தவர் திருமதி இந்திரா. தனது கல்வியை சென்னையில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியிலும், பின்னர் சென்னை கிருஸ்துவக் கல்லூரியிலும் முடித்த இந்திரா பின்னர் கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிலையத்தில் மேலாண்மைப்  பட்டத்தையும் பெற்றார்.

டூடல் என்ற நிறுவனத்திலும், அதனைத் தொடர்ந்து ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திலும் பணியாற்றி, பின்னர் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்கத் தொடங்கினார். அமெரிக்காவில் பாஸ்டன் கன்சல்டிங் குரூப், மோட்டோரோலா மற்றும் ஏசியா பிரவுன் போவெரி போன்ற நிறுவனங்களில் பணியாற்றினார்.

1994ஆம் ஆண்டு பெப்சி நிறுவனத்தில் மூத்த உதவித் தலைவர் பதவி இந்திரா நூயியை தேடி வந்தது. அதிலிருந்து இருபத்தி நான்கு ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் அவர் பணியாற்றினார். பல்வேறு பொறுப்புகளில் நிறுவனத்திற்குச் சேவை செய்து அவரது கடின உழைப்பில் மட்டுமே வளர்ந்து, பின்னர் 2001 ல் பெப்சிகோ வின் தலைமை நிதி அதிகாரி மற்றும் தலைவர் ஆனார். மேலும் அவர் இயக்குர் குழுவிலும் இருப்பார் என அறிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப பெப்சி மற்றும் இதர விற்பனைப் பொருட்களின் வடிவம், அளவு, தரம் ஆகியவற்றில் பல மாறுதல்களைப் புகுத்தினார். இவரது வருகைக்குப் பிறகு 45 ஆண்டுக்கும் மேலான அந்நிறுவன வளர்ச்சி பெரிய முன்னேற்றப் பாதைக்குச் சென்றது. இதனால் 2006-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் ஐந்தாவது தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்தார்.

ஒவ்வொரு நாட்டிலும், குறிப்பிட்ட மாநிலங்களுக்குள்ளாக அந்த மக்களுக்குப் பரிட்சயமான பிரபலங்களைக் கொண்டு பெப்சி விளம்பரங்களைப் பல வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தினார். இந்தியாவில் முன்னணி விளையாட்டு வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்களைக் கொண்டு பெப்சி குளிர்பானத்திற்கான விளம்பரங்களை அதிக அளவில் செய்தார். இதனால் உலகம் முழுக்க பெப்சியின் விற்பனை வளர்ச்சி கணிசமாக உயர்ந்தது. குறிப்பாக பெப்சியின் விற்பனை வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு மிக அதிகம். இந்தியாவில் விற்பனையாகும் முதல் ஐந்து குளிர்பானங்களில் பெப்சியும் ஒன்று.

இந்திராவின் திறமைக்கு சி.இ.ஓ பதவியுடன் கூடுதலாக 2007-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைவர் பொறுப்பும் அவரைத் தேடிவந்தது. ஃபார்ச்சுன் பத்திரிகையின் 2006, 2007, 2008, 2009-ம் ஆண்டுகளின் உலகின் வலிமைமிக்க பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்தார். அந்தச் சமயங்களில் ஓர் இந்தியப் பெண்மணியாக உலகம் முழுக்க இவரது பணித் திறன் பெருமையாக பேசப்பட்டது.

1981ஆம் ஆண்டு ராஜ் நூயி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இந்திராவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவரது திறமையைப் பாராட்டி பல்வேறு விருதுகளும், பட்டங்களும் இவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. 2007 ஆம் ஆண்டு பாரத அரசு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி சிறப்பித்தது.

எல்லாத் தடைகளையும் பாரத மகளீர் தாண்டி சாதனை படைப்பார்கள் என்ற உண்மையை உலகமெங்கும் உரக்கச் சொன்ன இந்திரா நூயி அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஞாயிறு, 26 அக்டோபர், 2025

அக்டோபர் 26 - புரட்சிவீரர் மன்மதநாத் குப்தா நினைவுநாள் -

அக்டோபர் 26, வருடம் 2000. அது ஒரு தீபாவளி திருநாள். பதின்ம வயதிலேயே  சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, அந்நிய ஆட்சியை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடி அதனால் தனது நாற்பதாம் வயதுக்குள் இருபதாண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பெரும் போராளி தீபவரிசை நாட்டை அலங்கரித்து வழியனுப்ப தொண்ணுற்றி ஒன்றாம் வயதில் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட நாள் இன்றுதான்.



"எங்களை புரட்சியாளர்கள் என்று மக்கள் சொல்கிறார்கள், ஆனால் உண்மையில் நாங்கள் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்யத் துணிந்த சாதாரண மனிதர்கள்தான்" என்று கூறிய மன்மதநாத் குப்தாவின் நினைவுநாள் இன்று.

வங்காளத்தை தங்கள் பூர்விகமாகக் கொண்ட, வாரணாசியில் வசித்து வந்த  வீரேஸ்வர் குப்தாவிற்கு மகனாக 1908ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் நாள் பிறந்தவர் மன்மதநாத் குப்தா. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர் மன்மதநாத். 1921ஆம் ஆண்டு அன்றய வேல்ஸ் இளவரசரான எட்டாம் எட்வர்ட் வருகையை ஒட்டி வாரணாசியில் மன்னர் வரவேற்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் மக்களைக் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறி அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுக்கும் துண்டு பிரசுரங்களை 13 வயதான மன்மதநாத் விநியோகிக்கும் செய்துகொண்டு இருந்தார். அரசுக்கு எதிரான நடவடிக்கை என்று அன்றய காவல்துறை அவரை கைது செய்தது. மூன்று மாத சிறைவாசம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விடுதலைப் போருக்கும், சிறைவாழ்வுக்கும் மன்மதநாத் குப்தாவுக்குமான நீண்ட உறவு அன்றுதான் தொடங்கியது.

விடுதலையாகி வந்த மன்மதநாத் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். ஒத்துழையாமை இயக்கத்திற்கு காந்தி அழைப்பு விடுத்தார். ஆனால் சவுரி சவுராவில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து போராட்டத்தை காந்தி திரும்பப் பெற்றார். மனம் வெறுத்த இளைஞர்கள் தீவிரவாத நடவடிக்கைதான் சரியாக இருக்கும் என்று எண்ணத் தலைப்பட்டனர். பலர் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் அஸோஸியேஷன் என்ற அமைப்பில் இணைந்தனர். ராம் பிரசாத் பிஸ்மி, அஷ்பாகுல்லாகான், சந்திரசேகர ஆசாத், பகத்சிங் என்ற பெரும் வீரர்கள் ஒரே அணியாகத் திரண்டனர். அவர்களில் ஒருவராக மன்மதநாத் குப்தாவும் இருந்தார்.

போராட்டத்திற்கு ஆயுதம் வேண்டும், ஆயுதம் வாங்கப் பணம் வேண்டும், பணத்தை ஆங்கில ஆட்சியிடமே கொள்ளை அடிக்கலாம் என்ற திட்டம் உருவானது. அரசின் பணத்தோடு வந்த புகைவண்டி ஒன்றை ககோரி என்ற இடத்தில் வீரர்கள் கொள்ளை அடித்தனர். ஆனால் ஆட்சியாளர்களின் கைகள் புரட்சிவீரர்கள் பலரை கைது செய்தது. மன்மதநாத் குப்தாவும் கைதானார். பதினெட்டு வயதை எட்டவில்லை என்பதால் பதினாலு ஆண்டுகள் கடுங்காவல் சிறைவாசம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1937ஆம் ஆண்டு விடுதலையான மன்மதநாத் மீண்டும் ஆங்கில ஆட்சியை எதிர்த்து எழுதத் தொடங்கினார். 1939ஆம் ஆண்டு மீண்டும் சிறை, இந்தமுறை அந்தமான் சிறைக்கொட்டடியில், எட்டாண்டுகள் கழித்து 1946ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். முப்பத்தி எட்டு வயதுக்குள் சரிபாதி வாழ்வை சிறையில் கழித்த வீரர் மன்மதநாத்.

சுதந்திரம் அடைந்த நாட்டில் மன்மதநாத் எழுத்தாளராக உருமாறினார். ஏறத்தாழ நூற்றி இருபது புத்தகங்களுக்கு மேலாக அவர் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் வங்காள மொழியில் எழுதியுள்ளார். கத்தியின்றி ரத்தமின்றி கிடைக்கவில்லை சுதந்திரம் என்பது, அதில் ஆயுதம் தாங்கி போராடிய வீரர்களின் பங்கு மிகப் பெரியது என்ற உண்மையை போராளிகளின் பார்வையில் இருந்து அவர் பதிவு செய்து உள்ளார். அவர்கள் அபாயகரமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் ( They lived dangerously ) என்ற அவரது புத்தகம் அன்றய விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்வை பதிவு செய்துள்ளது. சந்திரசேகர ஆசாத், காந்தியும் அவர் காலமும், பகத்சிங்கும் அவர் காலமும், விடுதலைப் போராட்டத்தில் போராளிகளின் வரலாறு என்பவை அவர் எழுதிய முக்கியமான நூல்களில் சில.

செய்தி ஒளிபரப்பு துறையில் பணியாற்றிய மன்மதநாத் குப்தா திட்டக்குழுவின் சார்பில் பல்வேறு புத்தகங்களை / கையேடுகளை எழுதி வெளியிட்டுள்ளார். பால பாரதி என்ற சிறுவர் பத்திரிகை மற்றும் ஆஜ்கல் என்ற இலக்கிய பத்திரிகை மற்றும் திட்டக்குழுவின் சார்பில் வெளியான யோஜனா ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் மன்மதநாத் குப்தா இருந்தார்.

நாட்டின் வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட தியாகிகளில் ஒருவரான மன்மதநாத் குப்தா 2000ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் நாள் இந்திய மண்ணோடு கலந்தார்.

விடுதலை வீரர்கள் அனைவருக்கும் நமது வணக்கங்கள் 

வெள்ளி, 24 அக்டோபர், 2025

அக்டோபர் 24 - கேலிச்சித்திர கலைஞர் R K லக்ஷ்மன் பிறந்தநாள்

பாரதம் அப்போதுதான் ஆங்கில ஆட்சியின் பிடியில் இருந்து விடுதலை அடைந்து இருந்தது. அந்நியர் ஆட்சி அகன்றதால் இனி நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்ற நம்பிக்கையை மக்களிடம் அரசியல்வாதிகள் விதைத்துக்கொண்டு இருந்தனர். அரசியலமைப்பு சட்டம் நிறைவேறி, பாரதம் தன்னை ஒரு ஜனநாயக குடியரசு நாடாக அறிவித்து இருந்தது. வயது வந்த அனைவரும் ஒட்டுப் போட்டு தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முதலாவது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற இன்னும் ஒரு ஆண்டு காலம் இருந்தது.



பாராளுமன்றத் தேர்தல், ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு,ஐந்தாண்டு திட்டங்கள், சீனா உடனான போர், நேரு மறைவு, லால் பகதூர் சாஸ்திரி பிரதமராகப் பொறுப்பேற்றல், பாகிஸ்தானுடனான போர், தாஷ்கண்ட் ஒப்பந்தம், சாஸ்திரி மறைவு, இந்திரா பிரதமராகுதல், காங்கிரஸ் கட்சி பிளவு அடைதல், பாரதம் சோசலிச சித்தாந்தத்தில் கரைதல், வங்கிகள் தேசியமயமாக்கல், மன்னர் மானியம் ஒழிப்பு, வங்காள தேச விடுதலைக்காக மீண்டும் இந்தியா பாகிஸ்தான் போர், நெருக்கடி நிலை, ஜனதா கட்சி ஆட்சி, இரண்டரை ஆண்டுகளில் அதுவும் கவிழ்தல், மீண்டும் இந்திரா, பஞ்சாப் தீவிரவாதம், பொற்கோவிலில் ராணுவம் நுழைதல், இந்திராவின் படுகொலை, ராஜிவ் பதவி ஏற்பு , டெல்லியில் சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள், போபால் விஷவாயு கசிவு, போபோர்ஸ் பீரங்கி ஊழல், ஜனதாதளத்தின் சார்பில் வி பி சிங், அவரைத் தொடர்ந்து சந்திரசேகர் பிரதமராகுதல், ராஜிவ் படுகொலை, நரசிம்மராவ் பிரதமராகுதல், பொருளாதார தாராளமயமாக்கல், மீண்டும் தேவ கௌடா மற்றும் குஜரால் பிரதமர் பதவிக்கு வருதல், பாரதிய ஜனதா கட்சி சார்பில் வாஜ்பாய் பதவி ஏற்றல், கார்கில் போர். மிகச் சரியாக பாரதம் விடுதலை பெற்ற ஐம்பது ஐந்து கால வரலாற்றை சுருக்கமாகச் சொன்னால், இப்படி சொல்லி முடிக்கலாம்.

இந்த வரலாற்றை அருகில் இருந்து எதுவும் பேசாமல், சாட்சியாக மட்டும் இருந்து கவனித்து பதிவு செய்த ஒரு மனிதர் உண்டு. அவருக்கு பெயர் கூடக் கிடையாது. வேண்டுமானால் நாம் அவரை திருவாளர் பொதுஜனம் ( The common man ) என்று பெயரிட்டு அழைக்கலாம். அவரது உடையை இந்தியாவில் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியிலும் மொத்தமாகப் பார்க்க முடியாது. ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஒவ்வொன்றாய் எடுத்துப் போட்டு உருவான ஆடை அது. ஒரு பஞ்சாபி தென்னிந்தியரில் இருந்து மாறுபட்டு இருக்கலாம். ஒரு வங்காளி பீஹாரியைப் போல இல்லாமல் இருக்கலாம். ஆனால் மொத்த பாரதப் பிரஜைக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது, நாட்டில் தன்மீது அரசியல்வாதிகளால், பணம் படைத்தவர்களால் நடத்தப்படும் கொடுமைகள் அத்தனையும் பார்த்துக் கொண்டு, செய்வதறியாமல் தவித்து நிற்பதோடு, வாயைத் திறக்காமல் அத்தனையையும் சகித்துக் கொண்டு இருப்பதுதான். அப்படியான மக்களின் பிரதிநிதி பேசவா செய்வார் ? அவர் எல்லாவற்றையும் பேசாமலேயே பார்த்துக் கொண்டு இருப்பார். ஆனால் அவர் பேசவேண்டியவற்றை அவரது முகபாவங்களே காட்டி விடும். அப்படியான மக்களின் பிரதிநிதியை உருவாக்கிய கேலிச்சித்திர கலைஞர் ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி லக்ஷ்மன் சுருக்கமாக ஆர் கே லக்ஷ்மன் அவர்களின் பிறந்த தினம் இன்று.



பாரதத்தின் முக்கியமான கதை சொல்லிகளின் ஒருவரான திரு ஆர் கே நாராயணனின் சகோதரர் ஆர் கே லக்ஷ்மன். இவர் தந்தை பள்ளி தலைமை ஆசிரியர். ஆறு மகன்களும், இரண்டு பெண்களும் உள்ள பெரிய குடும்பத்தின் கடைசி பிள்ளை லக்ஷ்மன். தந்தை மைசூரில் பணி புரிந்ததால், லக்ஷ்மன் படிப்பு மைசூர் நகரிலேயே நடைபெற்றது. சிறு வயதில் இருந்தே தரைகளிலும், சுவர்களிலும், பள்ளி புத்தகங்களிலும் படங்கள் வரைவது லக்ஷ்மணின் பழக்கம். இவரின் சிறு வயதிலேயே தந்தை இறந்து விட்டதால், தனது சகோதர்கள் ஆதரவில் லக்ஷ்மன் வளர்ந்தார். மைசூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். படிக்கும் போதே பல்வேறு பத்திரிகைகளுக்கு படம் வரைந்து கொடுப்பது இவரின் பகுதி நேரத் தொழிலாக இருந்தது.

ஸ்வராஜ்யா, பிளிட்ஸ், ஹிந்து போன்ற பத்திரிகைகளுக்கு படம் வரைந்து கொண்டிருந்த லக்ஷ்மன், Times of India பத்திரிகையில் இணைந்து கொண்டார். அப்போது அவரோடு சித்திரக்காரராக பணியாற்றியவர் மகாராஷ்டிராவின் முக்கியத் தலைவராக பின்னாளில் உருவெடுத்த பால் தாக்கரே. அப்போது உருவானவர்தான் இந்த திருவாளர் பொதுஜனம்.

சிறுது சிறிதாக உருமாறி, பாரத பிரஜைகளின் ஒட்டு மொத்த உருவமாக, அவர்களின் மனசாட்சியாக மாறியவர் அவர். ஐம்பதாண்டுகால பாரத நாட்டின் வரலாற்றை திருவாளர் பொதுஜனத்தின் பார்வையில் பார்ப்பது என்பது நமது வரலாற்றை நாமே மீள்பார்வையை பார்ப்பதாகும். கேப்டன் கோபிநாத் தொடங்கிய டெக்கான் விமான நிறுவனத்தின் அடையாளமாகவும் திருவாளர் பொதுஜனமே இருந்தார். திருவாளர் பொதுஜனத்திற்கு பூனா நகரிலும் மும்பையிலும் சிலைகள் உள்ளன.



 புகழ்பெற்ற நடனக் கலைஞரும் திரைப்பட நடிகையுமான பேபி கமலா என்பவரை லக்ஷ்மன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த மணவாழ்வு வெற்றிகரமாக அமையவில்லை. முறையான விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் கமலா என்ற பெயர் கொண்ட இன்னொரு பெண்மணியை அவர் மணந்து கொண்டார்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மன் 2015ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் காலமானார். 

வியாழன், 23 அக்டோபர், 2025

அக்டோபர் 23 - சுபேதார் ஜோகிந்தர் சிங் - நினைவுநாள்

இந்திய ராணுவத்தின் மிக உயரிய விருதான பரமவீர்சக்ரா விருது பெற்ற சுபேதார் ஜோகிந்தர்சிங் அவர்களின் நினைவுநாள் இன்று. 1962ஆம் ஆண்டு நடைபெற்ற சீனாவுடனான போரில் பெரும் வீரத்தைக் காட்டி, உச்சகட்டமாக தன உயிரைத் தியாகம் செய்து வீரமரணம் அடைந்தவர் திரு ஜோகிந்தர்சிங் அவர்கள்.



பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த ஷேர்சிங் சஹனான் - கிருஷ்ணன் கவுர் தம்பதியரின் மகனாக 1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் நாள் பிறந்தவர் திரு ஜோகிந்தர் சிங். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் அவர் அன்றய பிரிட்டிஷ் ராணுவத்தில் சிப்பாயாகச் சேர்ந்தார். அவர் அன்றய ராணுவத்தின் சீக்கிய பிரிவில் பணியாற்றத் தொடங்கினார். ராணுவத்தில் சிறப்பு பயிற்சிகளை முடித்து அவர் வீரர்களின் பயிற்சியாளராகவும் விளங்கினார். இரண்டாம் உலகப் போரிலும், பின்னர் 1947ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் போரிலும் ஜோகிந்தர் கலந்துகொண்டார்.

1962ஆம் ஆண்டு சீனா இந்தியாமீது படையெடுத்தது. களநிலவரம் தெரியாமல் கற்பனையில் மூழ்கி இருந்த தலைமையால் இந்திய ராணுவம் தோல்வியைச் சந்தித்தது. ஆனாலும் எல்லா இடர்களுக்கு நடுவிலும், இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் துணிச்சலைக் காட்டி பெரும் சாகசங்களை நிகழ்த்தினர்.

அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள நம்கா சூ என்ற ஆற்றின் அருகே உள்ள தளத்தைக் காக்க சீக்கியப் படை பிரிவு களம் இறங்கியது. மிகக் குறைவான தளவாடங்களையும் அதைவிடக் குறைவான வீரர்களையும் கொண்ட ஒரு சிறு படைப்பிரிவு முழுவதுமாக தங்கள் உயிர்களைத் தியாகம் செய்து, முடிந்தவரை சீனப் படைகளைத் தடுத்து நின்றனர். ஆனாலும் எண்ணிக்கையில் கூடுதலாக இருந்த சீனப் படை எல்லா இந்திய வீரர்களையும் கொன்று அந்தத் தளத்தைக் கைப்பற்றியது.

அதனைத் தொடர்ந்து முன்னேறிய சீனப்படையை பும்லா கணவாய் அருகே சீக்கியப் படையின் இன்னொரு பிரிவு எதிர்கொண்டது. அந்த படைக்கு தலைமை வகித்தவர் சுபேதார் ஜோகிந்தர் சிங். மொத்தம் இருபது வீரர்கள் கொண்ட படை அது. கேந்த்ர முக்கியத்துவம் வாய்ந்த அந்தத் தளத்தை கைப்பற்ற அடுத்தடுத்து மூன்று முறை தலா 200 வீரர்கள் கொண்ட படையை சீனா அனுப்ப வேண்டி வந்தது. இரண்டு முறை வந்த படையெடுப்பை வெற்றிகரமாக முறியடித்து, எதிரிகளை முழுவதுமாக சீக்கியப் படைப்பிரிவு கொன்றது. ஆனால் அதில் நமது படையின் பாதி வீரர்கள் மரணமடைந்தார். மூன்றாம் முறை அடுத்த 200 சீன வீரர்கள் தாக்குதலை பத்தே இந்திய வீரர்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இதற்கிடையில் இந்தியப் படையின் குண்டுகள் எல்லாம் காலியாகி விட்டது.

கையில் துப்பாக்கியோடு 200 சீன வீரர்கள் ஒருபுறம், தாயகத்தைக் காக்கும் பணியில் எந்த தளவாடங்களும் இல்லாத பத்து இந்திய வீரர்கள் மறுபுறம். ஆனாலும் போரில் பின்வாங்குவது என்பது சீக்கிய வீரர்களின் வரலாற்றிலேயே இல்லாத ஓன்று. துப்பாக்கியில் குண்டு இல்லாவிட்டால் என்ன ? துப்பாக்கி முனையில் சொருகப்பட்ட கத்தி உள்ளதே. 'ஜெய் போலோ ஸோ நிஹால் ஸத் ஸ்ரீ அகால்' இதுதான் சீக்கியப் படைப்பிரிவின் போர் முழக்கம். குரு கிரந்த சாஹிபின் புனித மந்திரமான ஸத் ஸ்ரீ அகால் என்ற முழக்கத்தோடு துப்பாக்கியில் உள்ள கத்தியை ஆயுதமாக கையில் ஏந்தி சுபேதார் ஜோகிந்தர்சிங் தலைமையில் மீதம் இருந்த பத்து வீரர்களும் எதிரிகளை நேருக்கு நேராக எதிர்கொண்டனர். எதிரியின் படையில் பெரும் சேதத்தை உருவாக்கி, அவர்கள் பாரத வீரத்தை பாரெங்கும் பறை சாற்றினர்.

எண்ணிக்கையிலும், தளவாடத்திலும் அதிகமாக இருந்த சீனர்கள் அந்தப் போரில் வெற்றி அடைந்தனர். ஆனால் அதற்காக அவர்கள் அளிக்க வேண்டிய விலை மிக அதிகமாக இருந்தது. சுபேதார் ஜோகேந்தர்சிங் போர் கைதியாக சீனர்களால் சிறை பிடிக்கப்பட்டார். ஆனால் சண்டையில் ஏற்பட்ட காயங்களால் அவர் மரணம் அடைந்தார்.

பிரமிக்கத் தக்க வீரத்தைக் காட்டி, மிகப் பெரும் தியாகத்தைச் செய்து பலிதானியான சுபேதார் ஜோகேந்தர்சிங் அவர்களுக்கு பாரத ராணுவத்தின் மிகப் பெரும் விருதான பரம்வீர் சக்ரா விருது அளிக்கப்பட்டது. முழுமரியாதையோடு ஜோகிந்தர்சிங்கின் அஸ்தியை சீனா பாரத நாட்டிடம் ஒப்படைத்தது.

எண்ணற்ற ராணுவ வீரர்கள் நாட்டின் எல்லையைக் காத்து நிற்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நமது வணக்கங்கள். 

புதன், 22 அக்டோபர், 2025

22 அக்டோபர் - புரட்சிவீரர் அஷ்பாகுல்லாகான் பிறந்தநாள்

பாரதநாட்டின் விடுதலை என்பது பல்லாயிரக்கணக்கான தியாகிகளின் பலிதானத்தால் கிடைத்த ஓன்று. கத்தியின்றி ரத்தமின்றி என்று கூறப்பட்டாலும், தூக்குமேடையை முத்தமிட்டவர்கள், பீரங்கி குண்டுகளில் தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள், நாடு கடத்தப்பட்டவர்கள், பல்வேறு வெளிநாடுகளில் இருந்து புரட்சிகீதம் இசைத்தவர்கள் என்று பலப்பல தியாகசீலர்களின் உதிரத்தால் உருவானது நாம் இன்று அனுபவித்துக்கொண்டு இருக்கும் சுதந்திரம். திட்டமிட்டு பல்வேறு தியாகிகளின் வரலாறு மறைக்கப்பட்டது என்றாலும் அதனைத் தாண்டி அந்த வீரர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்வதும், அதனை ஆவணப்படுத்துவதும் நமது கடமையாக இருக்கவேண்டும். எரிநட்ஷத்திரம் போல மிகக் குறுகிய காலமே வாழ்ந்தாலும், சர்வ நிச்சயமாக மரணம்தான் என்பதை உணர்ந்து, இன்று உந்தன் பாதத்தில் தாயே! நானே அர்ப்பணம் என்று பலிதானியான புரட்சிவீரர்களில் முக்கியமானவர் அஷ்பாகுல்லாகான்.



இன்றய உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்பூரில் ஷபியுல்லாகான் - மெஹரின்நிசா   தம்பதியரின் ஆறாவது மகனாக 1900ஆவது ஆண்டில் அக்டோபர் 22ஆம் நாள் பிறந்தவர் அஷ்பாகுல்லாகான். இவர்கள் ஆப்கானிஸ்தானைச் சார்ந்த பட்டாணி இனத்தவர். அஷ்பாகுல்லாகான் வளரும் காலம் என்பது இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காலம். வங்கப் பிரிவினையும், திலகரின் பூரண ஸ்வராஜ் முழக்கமும், பின்னர் காந்தியின் விஸ்வரூபமும், ஜாலியன்வாலாபாக் படுகொலையும், பல்வேறு ஆயுதம் ஏந்திய போராட்ட முயற்சிகளும் என்று நாடு ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டு இருந்தது. இதன் தாக்கம் அஷ்பாகுல்லாகான் வாழ்க்கையிலும் எதிரொலித்தது.

1922ஆம் ஆண்டில் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார். நாடெங்கும் ஆங்கில ஆட்சிக்கு பாரத மக்கள் ஒத்துழைக்கப் போவதில்லை என்று போராடத் தொடங்கினார்கள். ஆனால் சவுரிசவுரா என்ற இடத்தில் தங்கள் கட்டுப்பாட்டை இழந்த மக்கள் ஒரு காவல் நிலயத்தைத் தாக்கி அதனை தீக்கிரையாக்கினார். இதில் சில காவலர்கள் இறக்க நேரிட்டது. மக்கள் அஹிம்சை முறையிலான போராட்டத்திற்கு இன்னும் தயாராகவில்லை என்று கூறி காந்தி போராட்டத்தை திரும்பப் பெற்றார்.

இதனால் மனசோர்வுற்ற பல்வேறு இளைஞர்கள் ஆயுதப் போராட்டப் பாதைக்கு திரும்பினார். பாரத நாடெங்கும் பல்வேறு குழுக்களாக ஆயுதப் போராட்டத்திற்கு மக்கள் தங்களைத் தயார் செய்து கொண்டுதான் இருந்தார்கள், அவர்களுக்கு உலகத்தின் பல்வேறு நாடுகளில் வசித்துவந்த பாரத மக்கள் உதவிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆயுதம் ஏந்திய போராட்டத்திற்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு என்பதுதான் உண்மை. அஷ்பாகுல்லாகான்ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோஸியேஷன் என்ற அமைப்பில் இணைந்துகொண்டார். அதாவது அஷ்பாகுல்லாகான் புகழ்பெற்ற புரட்சிவீரர்களான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, சந்திரசேகர ஆசாத் ஆகியோரின் தோழரும், சகபோராளியுமாவார்.

ஆயுதம் தாங்கிய போராட்டம் என்றால் ஆயுதம் வேண்டாமா ? ஆயுதம் வாங்க பணம் வேண்டாமா ? எப்படி பணம் சம்பாதிக்க ? ஒரே வழி கொள்ளை அடிப்பதுதான், ஆனால் அதற்காக சக பாரத மக்களிடம் கொள்ளை அடிப்பது தவறு, வேறு என்ன செய்ய ? ஆங்கில ஆட்சியாளர்களிடம் இருந்து கொள்ளை அடிப்போம், அந்தப் பணத்தை வைத்து ஆயுதம் வாங்குவோம், அந்த ஆயுதங்களைக் கொண்டு ஆங்கில ஆட்சியை விரட்டுவோம் என்று வீரர்கள் முடிவு செய்தனர்.

1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் நாள் - ஷஹரான்பூரில் இருந்து லக்நோ நகருக்கு வந்து கொண்டிருந்த புகைவண்டியை ககோரி என்ற இடத்திற்கு அருகே அபாயச்சங்கிலியை இழுத்து நிறுத்தினார்கள் புரட்சியாளர்கள். அதில் இருந்த பணம் ஏறத்தாழ ஒருலட்சம் ரூபாயை கொள்ளை அடித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். துணிகரமான இந்த செயலில் அஷ்பாகுல்லாகான் உடன் ராம் பிரசாத் பிஸ்மி, சந்திரசேகர ஆசாத், சசீந்திர பக்ஷி, கேசப் சக்கரவர்த்தி, மன்மத்நாத் குப்தா, முராரிலால் குப்தா, பன்வாரிலால், முகுந்த்லால் ஆகியோர் பங்கெடுத்தனர். இதில் நடைபெற்ற கைகலப்பில் அஹ்மத் அலி என்ற பயணி கொல்லப்பட்டார்.

நாடெங்கும் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. நாற்பது போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தமான் சிறை வாசம் உள்பட பல்வேறு தண்டனைகள் வீரர்களுக்கு விதிக்கப்பட்டது. ராம் பிரசாத் பிஸ்மி, தாகூர் ரோஷன்சிங், ராஜேந்திரநாத் லஹரி, அஷ்பாகுல்லாகான் ஆகிய நால்வருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.

1927ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் நாள் அஷ்பாகுல்லாகான் தூக்கிலிடப்பட்டு மரணம் அடைந்தார். இருபத்தியேழு ஆண்டுகளே வாழ்ந்த அந்த வீரன் நாட்டின் விடுதலைக்காக தன்னையே தியாகம் செய்தார்.

பல்லாயிரம் வீரர்களின் பெரும் தியாகத்தால் கிடைத்தது நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரம். அந்த வீரர்களை ஒரு நாளும் மறக்காமல் இருப்பது நமது கடமை. 

செவ்வாய், 21 அக்டோபர், 2025

அக்டோபர் 21 - சுர்ஜித் சிங் பர்னாலா பிறந்தநாள்

ஒரு முக்கியமான காலகட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றிய திரு சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களின் பிறந்தநாள் இன்று.



இன்றய ஹரியானா மாநிலத்தின் பேஜ்புர் கிராமத்தில் வசதியான குடும்பம் ஒன்றில் 1925ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் பிறந்தவர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்கள். இவர் தந்தை நீதிபதியாக பணியாற்றி வந்தார். தந்தையின் அடியொற்றி பர்னாலாவும் 1946ஆம் ஆண்டு லக்னோ பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் தேறி வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டார். வழக்கறிஞராகப் பணியாற்றும் போதே அரசியலில் ஈடுபட்ட திரு பர்னாலா, அகாலிதள் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக வெகு விரைவில் உருவானார்.

முதன்முதலாக 1969ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் கல்வி அமைச்சராக பர்னாலா நியமிக்கப்பட்டார். 1977ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்த காங்கிரஸ் அல்லாத அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக பர்னாலா பணியாற்றினார். அப்போதுதான் கங்கை நதி நீரை பங்களாதேஷ் நாட்டோடு பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

மொரார்ஜி தேசாய் அரசு கவிழ்ந்த சமயத்தில், அன்றய ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி பர்னாலா தலைமையில் ஒரு அரசை அமைப்பது பற்றி ஆலோசித்தார் என்று கூறப்படுவது உண்டு.

பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடிய காலகட்டத்தில், தன் பாதுகாவலர்களாலேயே அன்றய பிரதமர் இந்திரா படுகொலை செய்யப்பட்ட பிறகு 1985ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரை பர்னாலா பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தார். அவரது பதவிக்காலத்திற்கு முன்னும் பின்னும் அந்த மாநிலம் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் இருந்தது என்பதே அன்றய பஞ்சாப் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை காட்டும் அளவுகோலாகும்.

அதனைத் தொடர்ந்து 1990ஆம் ஆண்டு தமிழகத்தின் ஆளுநராக பர்னாலா நியமிக்கப்பட்டார். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அன்றய திமுக அரசு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கலைக்கப்பட்டது. அதற்கான அறிக்கையை அளிக்க பர்னாலா மறுத்துவிட்டார். பிஹார் மாநில ஆளுநராக அவர் மாற்றப்பட்டார். ஆனால் அதனை ஏற்க மறுத்து பர்னாலா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

1990ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக பணியாற்றினார். 1998ஆம் ஆண்டு அமைந்த வாஜ்பாய் ஆட்சியில் ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சராக பர்னாலா நியமிக்கப்பட்டார். 

அதன்பிறகு உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் ஆளுநராகவும், அதனைத் தொடர்ந்து ஆந்திர பிரதேசத்தின் ஆளுநராகவும், இரண்டு முறை தமிழகத்தின் ஆளுநராகவும் பர்னாலா பணியாற்றினார்.

தனது நீண்ட அரசியல் வாழ்வில் ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பர்னாலா சிறையில் இருந்தார். திரு பர்னாலா ஒரு சிறந்த ஓவியரும் கூட, பல்வேறு இயற்கை காட்சிகளை அவர் ஓவியமாகத் தீட்டி உள்ளார்.

நீண்ட அரசியல் வாழ்வுக்கு சொந்தக்காரராக விளங்கிய திரு பர்னாலா தனது 91ஆம் வயதில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் நாள் சண்டிகரில் காலமானார். 

திங்கள், 20 அக்டோபர், 2025

அக்டோபர் 20 - எழுத்தாளர் தொ மு சிதம்பர ரகுநாதன் பிறந்தநாள்

தமிழ்ச் சிறுகதை வரலாற்றை எழுதுகிறவர்களானாலும் சரி, தமிழின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைத் தொகுத்துப் போடுகிறவர்களானாலும் சரி, இணையத்தில் சிறுகதைகளைப் பதிவேற்றம் செய்யும் இணையதளக்காரர்களானாலும் சரி, ஞாபகமாகத் தவிர்த்துவிடும் ஒரு பெயர் தொ.மு.சி. ரகுநாதன். சாகித்ய அகாடெமி விருது பெற்ற அந்தப் படைப்பாளியின் பிறந்தநாள் இன்று. 



இவருடைய தாத்தா சிதம்பரத் தொண்டைமான், புகழ்பெற்ற ஒரு தமிழறிஞர். `ஸ்ரீரெங்கநாதர் அம்மானை', `நெல்லைப்பள்ளு' போன்ற நூல்களை எழுதியவர். ரகுநாதனின் அப்பா தொண்டைமான் முத்தையா, சிறந்த ஓவியர்; புகைப்படக் கலைஞர். அவருக்கும் அவருடைய இரண்டாவது மனைவி முத்தம்மாளுக்கும் இரண்டாவது மகனாக 1923 அக்டோபர் 20 அன்று  பிறந்தவர் ரகுநாதன். அவருக்கு ஓர் அண்ணன், மூன்று தமக்கையர், ஒரு தங்கை.

இந்திய ஆட்சிப்பணியில் இருந்த எழுத்தாளர் பாஸ்கர தொண்டைமான் இவரின் உடன்பிறந்த சகோதரர். சாகித்ய அகாடமி விருது பெற்ற பேராசிரியர் அ சீனிவாச ராகவன் தொ மு சியின் ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும் அமைந்தார். தொமுசியின் முதல் சிறுகதை பிரசன்ன விகடன் என்ற பத்திரிகையில் வெளியானது. சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு தொமுசி சிறைத்தண்டனை அனுபவித்தார். பின்னர் தினமணி மற்றும் முல்லை என்ற இலக்கிய பத்திரிகைகளிலும் பணியாற்றினார். 

பத்திரிகைத் துறையில் சலிப்பேற்பட்டு சென்னையிலிருந்து மீண்டும் நெல்லைக்குத் திரும்பி, 1954-ல் `சாந்தி' என்ற இலக்கிய இதழை அவரே தொடங்குகிறார்.இரண்டு ஆண்டுகள் இலக்கியத்தில் சமரசமின்றி தரமான படைப்புகளுடன் அந்த இதழ் வெளிவருகிறது. தமிழ் ஒளி, ரகுநாதன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன் உள்ளிட்ட பலரும் தங்கள் படைப்புகளை அதில் வெளியிட்டனர். பொருளாதாரக் காரணங்களால் மட்டுமே அந்த இதழ் நின்றுபோனது.

1939-ம் ஆண்டிலிருந்தே சிறுகதைகள் எழுதத் தொடங்கிய ரகுநாதனின் கதைகள், 1949-ம் ஆண்டில் தொகுப்பாக வெளியானது. அந்தத் தொகுப்பில் இருந்த `நீயும் நானும்' என்ற கதை, வாத பிரதிவாதங்களை இலக்கிய உலகில் உருவாக்கிப் பரபரப்பாகப் பேசியது. படைப்புலகில் இப்படி நுழையும்போதே பரபரப்பாகவும் அதிர்வெடிகளுடனும் நுழைந்தவரான ரகுநாதன், சாகும்பரியந்தம் வலுக்குறையாமல் அப்படியே இயங்கினார் என்பது வியப்பான செய்தி. நீயும் நானும் (1949), ஷணப்பித்தம் (1952), சேற்றிலே மலர்ந்த செந்தாமரை (1955), ரகுநாதன் கதைகள் (1957) ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளில் அவருடைய சிறுகதைகள் வந்தன. ஆனால், சோகம் என்னவெனில் அவர் தொடர்ந்து சிறுகதைகள் எழுதாமல் நிறுத்திக்கொண்டார். 1957-க்குப் பிறகு அவர் சிறுகதைகள் எழுதவில்லை. ஆய்வுகளின் மீது கவனம் செலுத்தி அந்தத் துறையில் சாதனைகள் படைத்தார்.

அவரது `பாரதி:காலமும் கருத்தும்' நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. இளங்கோவடிகள் யார் என்னும் ஆய்வு நூல், அதுகாறும் சேரன் செங்குட்டுவனின் தம்பிதான் இளங்கோவடிகள் என திராவிட இயக்கத்தார் கட்டியெழுப்பியிருந்த கற்பிதங்களை உடைத்து நொறுக்கி `இளங்கோ, மன்னர் வம்சத்தைச்  சேர்ந்தவரே அல்ல. அவர் ஒரு தனவணிகச் செட்டியார்' என்ற ஆதாரங்களுடன் நிறுவினார். 

1951-ம் ஆண்டில் ரகுநாதன் எழுதிய `பஞ்சும் பசியும்' நாவல்தான் அயல்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவல். செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட அந்த நாவல் 50 ஆயிரம் பிரதிகள் விற்பனையானது. மாக்ஸிம் கார்க்கியின் படைப்பான தாய் என்ற புகழ்பெற்ற புதினத்தை தமிழில் இவர் மொழிபெயர்த்தார். 

தன் இறுதிக்காலத்தை அவர் திருநெல்வேலியிலும் பாளையங்கோட்டையிலும் கழித்தார். 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் நாள் ரகுநாதன் காலமானார். 

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

அக்டோபர் 19 - நாமக்கல் கவிஞர் பிறந்தநாள்

தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு.
தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா 

இன்று திராவிட இயக்கத்தினராலும், தமிழ்த்தேசியவாதிகளாலும் அடிக்கடி கூறப்படும் இந்த சொற்தொடர்கள் ஒரு தேசியவாதியால் எழுதப்பட்டவை என்பது பலருக்கு தெரியாமலேயே இருக்கலாம். 



தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர், தேசியப் போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டவர், மஹாகவி பாரதியால் பாராட்டப்பட்டவர், மூதறிஞர் ராஜாஜியின் தோழர், சிறந்த ஓவியர், உப்பு சத்யாகிரஹப் போரில் "கத்தி இன்றி ரத்தம் இன்றி யுத்தம் ஓன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்" என்ற வழிநடைப் பாடலை எழுதியவர் என்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரர் நாமக்கல் கவிஞர் என்னும் ராமலிங்கம் பிள்ளை அவர்கள். 

1888ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் நாள் காவல்துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த வெங்கடராம பிள்ளை - அம்மணி அம்மாள் தம்பதியினரின் எட்டாவது மகனாகப் பிறந்தவர் ராமலிங்கம் பிள்ளை. ஏழு பெண் குழந்தைகளுக்குப் பிறகு ராமேஸ்வரத்தில் பிரார்தனை செய்து அதன் பலனாகப் பிறந்ததால் இவருக்கு ராமலிங்கம் என்று பெயரிட்டார்கள். சிறுவயதிலேயே இதிகாச புராணங்களை சொல்லி இவர் தாயார் வளர்த்தார். 

தொடக்கக்கல்வியை நாமக்கல்லிலும், பின்னர் கோவையிலும், கல்லூரிப் படிப்பை திருச்சியிலும் பயின்றார். 1909ஆம் ஆண்டு தனது அத்தை மகளை மணந்து கொண்டார். இயற்கையிலேயே ஓவியம் வரையும் திறமை இவருக்கு இருந்தது. இவர் வரைந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியத்தை பார்த்து மகிழ்ந்த மன்னரின் குடும்பம் இவருக்கு தங்கப்பதக்கம் ஒன்றை பரிசளித்து பாராட்டியது. 

1924ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் எஸ்.சீனிவாச ஐயங்கார் அறிவித்த ஒரு போட்டியில் தேசபக்திப் பாடல்களை எழுதித் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார். அதுமுதல் இவர் பல கவிதைகளைப் புனைந்து தள்ளினார். குடத்திற்குள் இட்ட விளக்காக விளங்கிய இவரது கவிதைத்திறன் 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்துக்காக எழுதிய “கத்தியின்றி” பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். இவரது பாடல்களை சங்கு கணேசன் தனது “சுதந்திரச் சங்கு” பத்திரிகையில் வெளியிட்டு வந்தார்.

காரைக்குடிக்கு பாரதியார் வந்திருப்பதாக அறிந்த நாமக்கல் கவிஞருக்கு பாரதியாரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. ஓவியம் வரைவதிலும் கெட்டிக்காரர் என்று பாரதியாருக்கு நாமக்கல் கவிஞரை அறிமுகப்படுத்தினர். கவிதையும் எழுதுவார் என்று குறிப்பிட்டனர். கவிதை ஒன்று சொல்லுமாறு பாரதியார் கேட்டார். எஸ்.ஜி.கிட்டப்பா நாடகத்துக்காக தாம் எழுதிக் கொடுத்த ‘தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்’ என்ற பாடலைப் பாடத் தொடங்கினார். பாடல் முழுவதையும் கேட்ட பாரதியார், ‘பலே பாண்டியா! பிள்ளை, நீர் ஒரு புலவன் என்பதில் ஐயமில்லை. தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்... பலே, பலே இந்த ஓர் அடியே போதும்’ என்று பாராட்டித் தட்டிக் கொடுத்தார்.

1932ஆம் ஆண்டில் நடைபெற்ற சத்தியாகிரகத்தில் கலந்துகொண்ட நாமக்கல் கவிஞர், ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.1937ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் போட்டியிட்டனர். கவிஞர் சேலம் நகராட்சி உறுப்பினராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து கவிஞரின் காங்கிரஸ் பணி தீவிரமானது.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு 1949இல் ஆகஸ்ட் 15 சுதந்திரத் திருநாளில் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் பவநகர் மகாராஜா தலைமையில் இவருக்கு ‘அரசவைக் கவிஞர்’ எனும் பதவி வழங்கப்பட்டது. 1956 ஆண்டிலும் பின்னர் 1962ஆம் ஆண்டிலும் தமிழக சட்ட மேலவை உறுப்பினராக இவர் செயல்பட்டார். 1971இல் இவருக்கு ‘பத்மபூஷன்’ விருது வழங்கப்பட்டது.

இவர் எழுதிய “மலைக்கள்ளன்” எனும் நெடுங்கதை கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோவினரால் திரைப்படமாக்கப் பட்டது. எம்.ஜி.ரமச்சந்திரன் பானுமதி நடித்த இந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற்ற ஒன்றாகும்.

சூரியன் வருவது யாராலே ?
சந்திரன் திரிவதும் எவராலே ?
காரிருள் வானில் மின்மினிபோல்
கண்ணிற் படுவன அவைஎன்ன ?
பேரிடி மின்னல் எதனாலே ?
பெருமழை பெய்வதும் எவராலே ?
யாரிதற் கெல்லாம் அதிகாரி ?
அதைநாம் எண்ணிட வேண்டாவோ ?

அல்லா வென்பார் சிலபேர்கள் ;
அரன் அரி யென்பார் சிலபேர்கள் ;
வல்லான் அவன்பர மண்டலத்தில்
வாழும் தந்தை யென்பார்கள் ;
சொல்லால் விளங்கா ‘ நிர்வாணம்’
என்றும் சிலபேர் சொல்வார்கள் ;
எல்லாமிப்படிப் பலபேசும்
ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !

அந்தப் பொருளை நாம்நினைத்தே
அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.
எந்தப் படியாய் எவர்அதனை
எப்படித் தொழுதால் நமக்கென்ன ?
நிந்தை பிறரைப் பேசாமல்
நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப் போம்அதை வணங்கிடுவோம் ;
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்

எதைக் கேட்டாலும் இல்லையில்லை என்றும் சொல்லும் கண்மூடித்தனமான நாத்திகத்தையே பகுத்தறிவு என நினைக்கும் பலரின் மத்தியில் உண்மையான பகுத்தறிவு என்ன என்பதை விளக்கிட இதைவிடத் தெளிவான வெளிப்பாடு ஒன்று இருக்குமா எனத் தெரியவில்லை. பகுத்தறிவு மட்டுமல்லாமல், எல்லா மதங்களும் கூறும் உயர்வான பரம்பொருள் ஒன்றே என்பதையும் தெள்ளத்தெளிவாக விளக்கும் கவிதை இதுவே.

இவர் 1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு 2 மணி அளவில்  மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தமிழ் கவிதைகளை ரசிப்பவர்கள் உள்ளமட்டும் நாமக்கல் கவிஞரும் உயிரோடுதான் இருப்பார்.

செவ்வாய், 14 அக்டோபர், 2025

அக்டோபர் 14 - பரமவீர் சக்ரா விருது பெற்ற அருண் கேத்ரபால் பிறந்தநாள்



2001ஆம் ஆண்டு எண்பது வயதான பாரத ராணுவ தளபதி  பிரிகேடியர் எம் எல் கேத்ரபால் பாகிஸ்தானில் உள்ள தனது பூர்விக இருப்பிடத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் சர்கோதா நகருக்கு பயணித்தார். அவரை பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய பிரிகேடியர்மொஹம்மத் நாசர் என்ற ராணுவ தளபதி லாகூர் விமானநிலையத்தில் நேரில் வரவேற்று தனது வீட்டில் தங்க வைத்தார். அங்கிருந்து சர்கோதா நகருக்கு அவரை அனுப்பி வைத்து அவர் வாழ்ந்த இடங்களை பார்க்க நாசர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்தார். மீண்டும் லாகூர் வந்த கேத்ரபால், மீண்டும் மொஹம்மத் நாசரின் வீட்டில் தாங்கினார். விருந்தோம்புதலிலோ அல்லது மரியாதையிலோ எந்த குறையும் இல்லாமல் இருந்தாலும், எதோ ஓன்று கேதர்பாலை நெருடிக்கொண்டே இருந்தது.

பிரிகேடியர் கேத்ரபால் பாரதம் திரும்பும் நாளுக்கு முந்தய இரவில், தனது பலத்தை எல்லாம் திரட்டிக் கொண்டு தளபதி நாசர் பேசத் தொடங்கினார் "ஐயா, பல நாட்களாக நான் உங்களிடம் ஓன்று சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன், ஆனால் உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்பது எனக்குத் தெரியாமலே இருந்தது. ஆனால் விதி உங்களை எனது மரியாதைக்குரிய விருந்தாளியாக அனுப்பி வைத்துள்ளது. இன்று நாம் ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகி உள்ளோம், அது என்னை இன்னும் கடினமான நிலையில் வைத்து விட்டது. பாரத நாட்டின் இணையற்ற கதாநாயகனான உங்கள் மகனைப் பற்றித்தான் நான் பேசவேண்டும். கொடுமையான அந்த நாளில் நானும் உங்கள் மகனும் வெறும் போர்வீரர்கள் மட்டும்தான், அவரவர் நாடுகளின் மரியாதையையும், எல்லைகளையும் காக்க வேண்டி நாங்கள் எதிரெதிரே நிற்கவேண்டி இருந்தது. அன்று அருணின் வீரம் என்பது இணையில்லாமல் இருந்தது. தனது பாதுகாப்பைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் ,பயம் என்பதே இல்லாமல், பீரங்கிகளை அனாயசமாக ஓட்டி வீரசாகசம் புரிந்தார் உங்கள் மகன். இருபுறமும் பலத்த சேதம். முடிவில் நாங்கள் இருவர் மட்டுமே மிஞ்சினோம். எங்களில் ஒருவர்தான் உயிரோடு இருக்க முடியும் என்பது விதியின் எண்ணமாக இருந்தது. ஆமாம், உங்கள் மகன் என் கையால்தான் மரணித்தார். போர் முடிந்த பிறகுதான் அருண் எவ்வளவு இளையவர் என்பது எனக்குத் தெரிய வந்தது. காலமெல்லாம் உங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றுதான் நான் நினைத்துக்கொண்டு இருந்தேன், ஆனால் இப்போது இதனைக் கூறும்போதுதான் நான் மன்னிப்பு கேட்க விரும்பவில்லை, ஆனால் அந்த வீரனை வணங்குகிறேன் என்பதும் அதோடு அந்த வீரனை வளர்த்து வார்த்தெடுத்த உங்களையும் வணங்குகிறேன் என்பதும் புலனாகிறது" என்றார்.

1971ஆம் ஆண்டு பாரத பாகிஸ்தான் போரில் இணையற்ற வீரத்தைக் காட்டி, உச்சகட்ட தியாகமாக தனது உயிரை அளித்த வீரன் அருண்
கேத்ரபாலின் பிறந்ததினம் இன்று. பாரம்பரியமாக ராணுவ சேவையில் இருந்த பரம்பரையைச் சார்ந்தவர் அருண். அவரது தகப்பனாரின் தாத்தா ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற சீக்கியப்படையில் பணியாற்றியவர். தாத்தா முதல் உலகப் போரில் கலந்து கொண்டவர், தந்தை எம் எல் கேத்ரபால் ராணுவத்தில் பொறியாளர் பிரிவில் இருந்தவர். எனவே அருணுக்கு ராணுவ சேவைதான் குறிக்கோளாக இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

1950ஆம் அக்டோபர் மாதம் 14ஆம் நாள் எம் எல் கேத்ரபால் - மஹேஸ்வரி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தவர் அருண். ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் படித்த அருண்,  நேஷனல் டிபென்ஸ் அக்கதெமியில் பயின்று இந்திய ராணுவத்தில் 1971ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் நாள் 17ஆவது பூனா குதிரைப் படையில் சேர்ந்தார்.

அருண் ராணுவத்தில் இணைந்த ஆறே மாதத்தில் கிழக்கு வங்க மக்களுக்கு துணையாக பாரத ராணுவம் போரில் இறங்க நேரிட்டது. வானிலும், மண்ணிலும் கடலிலும் போர் முழுவீச்சில் தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள சிலாகோட் பகுதியில் பசந்தர் நதியில் பாலம் அமைத்து அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருமாறு பூனா குதிரைப்படைக்கு உத்திரவு பிறப்பிக்கப் பட்டது ராணுவத்தில் உள்ள பொறியாளர் பிரிவு தாற்காலிகப் பாலத்தை அமைத்துக் கொண்டு இருந்த போது, பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் தொடங்கியது. ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த அந்த கேத்திரத்தை கைப்பற்றுவது யாரோ அவருக்குத்தான் வெற்றி வாய்ப்பு என்பதால் இரு நாடுகளின் படைகளும் முழுமூச்சில் போரில் ஈடுபட்டன.

களத்தில் முன்னேறிச் சென்ற பூனா குதிரைப்படை பிரிவு எதிரிகளின் பீரங்கிகளை வேட்டையாடத் தொடங்கியது. இந்தப் போரில் லெப்டினென்ட் அக்கலாவாட் வீரமரணம் அடைந்தார். இந்திய படையில் மூன்று பீரங்கி வண்டிகள் மட்டுமே இருந்தன. அருணின் தலைமையில் நமது வீரர்கள் பாகிஸ்தானின் பத்து பீரங்கிகளை அழித்தனர். அருண் மட்டுமே ஐந்து பீரங்கிகளை அழித்தார்.

அருணின் பீரங்கி வண்டி எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி எரியத் தொடங்கியது. ஆனாலும் களத்தை விட்டு அகலாது அருண் தாக்குதலைத் தொடர்ந்தார். பாகிஸ்தான் படையில் ஒரே ஒரு பீரங்கியும் இந்தியப் படையில் அருணின் பீரங்கியும் மட்டும்தான் மிஞ்சியது. கடைசி பீரங்கியை அழிப்பதற்கு முன்னர் நெஞ்சில் குண்டு பாய்ந்து அருண் வீரமரணம் எய்தினார். அப்போது அவருக்கு இருபத்தி ஒரு வயதுதான் ஆகி இருந்தது. ஏழு ராணுவ அதிகாரிகள், நான்கு இளநிலை அதிகாரிகள், இருபத்தி நான்கு ராணுவ வீரர்களை இழந்து பாரதம் இந்த வெற்றியைப் பெற்றது.

பாரத நாட்டின் மிக உயரிய விருதான பரமவீர் சக்ரா விருது அருண் கேத்ரபாலுக்கு அளிக்கப்பட்டது. மிக இளைய வயதில் இந்த விருதைப் பெற்ற சிறப்பும் அருண் அவர்களுக்கே உள்ளது.

நேஷனல் டிபென்ஸ் அக்காதெமியின் அணிவகுப்பு மைதானம், அரங்கம் மற்றும் முகப்பு வாயில் ஆகியவற்றுக்கு அருண் கேத்ரபாலின் பெயரை சூட்டி நாடு அந்த வீரருக்கு மரியாதை செலுத்தி உள்ளது.

நாட்டைக் காக்க பலிதானியாக மாறிய வீரர்களின் தியாகத்தை நாம் என்றும் நெஞ்சில் நிறுத்துவோம்.