முதல் இந்திய சுதந்திரப் போர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதல் இந்திய சுதந்திரப் போர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 டிசம்பர், 2025

டிசம்பர் 9 - விடுதலை வீரர் ராவ் துலாராம்

அந்த விடுதலை வீரர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்தவர். பலமுறை ஆங்கிலேயர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தப்பித்துச் சென்றவர். பிறகு பாரதத்தை விட்டு விலகி வெளிநாட்டு ஆட்சியாளர்களின் உதவியுடன் ராணுவத்தை உருவாக்கியவர். ஆனால் தனது கனவு நிறைவேறும் முன்னால், வெளிநாட்டிலேயே மரணம் அடைந்தவர். நாம் சுபாஷ் சந்திரபோஸைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கவில்லை. அவருக்கு எண்பதாண்டுகளுக்கு முன்னம் அதே போல இருந்த ஒரு வீரரைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறோம்.


இன்றய தெற்கு ஹரியானா முதல் வடகிழக்கு ராஜஸ்தான் வரை உள்ள இடம் அஹிர்வால் பிரதேசம் என்று அறியப்படும் நாடாக இருந்தது. ரேவாரி அதன் தலைநகர். அதனை யது குலத்தைச் சார்ந்த மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். டெல்லிக்கு எண்பது கிலோமீட்டர் தொலைவில் இந்த நாடு இருந்தது. இந்த நாட்டை ஆண்டுகொண்டு இருந்த ராஜா ராவ் புரன் சிங் - ராணி ஞான் கவுர் தம்பதியினரின் மகனாக 1825ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் நாள் பிறந்தவர் துலா சிங் அஹிர். நாடாளுவதற்கு தேவையான ஆயுதப் பயிற்சி, ராணுவ வியூகங்கள் அமைத்தல் ஆகியவற்றை சிறுவயதில் இருந்தே மேற்கொண்டார் துலா சிங். அதோடு அவர் ஹிந்தி, பாரசீகம், உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் நிபுணத்துவம் பெற்று இருந்தார். தனது பதினாலாம் வயதில் தந்தையை இழந்த துலா சிங் ராஜா ராவ் துலா ராம் என்ற பெயரோடு 1839ஆம் ஆண்டு அரியணை ஏறினார்.

பாரதம் கொந்தளிப்பான காலத்தில் இருந்த நேரம் அது. வணிகம் செய்யவந்த ஆங்கிலேயர்கள் சிறிது சிறிதாக பாரதத்தை தங்கள் கைக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தனர். அதனை எதிர்த்து முதலாம் சுதந்திரப் போர் தொடங்கியது. அதில் ராஜா ராவ் துலாராமும் கலந்துகொண்டார். கடைசி முகலாய அரசராக இருந்த பகதுர் ஷா ஜாபர் அவர்களின் உதவிக்கு ஐயாயிரம் வீரர்கள் கொண்ட படையோடு அவர் சென்றார். ஏற்கனவே ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவி இருந்ததால், பல்வேறு ஆயுதங்களும் துலாராம் வசம் இருந்தது.

டெல்லிக்கு சற்று தொலைவில் உள்ள நசிபிபூரில் நடந்த சண்டையில் ஆங்கிலேயர்களை துலாராம் படைகள் தோற்கடித்தன. கர்னல் ஜான் ஜெரார்ட் மற்றும் கேப்டன் வாலஸ் ஆகியோர் இதில் கொல்லப்பட்டனர். ஆனால் பாட்டியாலா, கபூர்தலா போன்ற நாடுகளின் படைகள் ஆங்கிலேயர்களின் உதவிக்கு வர துலாராம் படைகள் பின்னடையவேண்டி இருந்தது. எப்படியும் ஆங்கிலேயர்கள் தன்னைப் பின்தொடருவார்கள் என்பதை அறிந்த துலாராம், தாந்தியா தோபேயின் துணையோடு மீண்டும் போராட்டத்தை தொடங்கினார். முழுமையான ஆதரவு இல்லாததால் முதல் சுதந்திரப் போர் வெற்றியில் முடியவில்லை.

சரணடைய விரும்பாத துலாராம், ஈரானுக்குச் சென்று அன்றய மன்னர் ஷாவைச் சந்தித்தார். ஷா அவருக்கு ராணுவ உதவி அளிப்பதாக வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் வந்த துலாராம் அந்த நாடு எமிரையும் சந்தித்து உதவி கோரினார். அவரும் உதவி செய்ய ஒத்துக்கொண்டார். ஆப்கானிஸ்தானத்தில் இருந்தே ரஷிய மன்னரோடு துலாராம் தொடர்பு கொண்டார். ஏற்கனவே இவர்கள் அனைவரோடும் ஆங்கிலேயர்களுக்கு நல்ல உறவு இல்லை. அதனால் இவர்கள் அனைவரும் துலாராமிற்கு உதவி செய்யத் தயாராக இருந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக 1863ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் நாள் துலாராம் தனது முப்பத்தி எட்டாம் வயதில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் மரணமடைந்தார்.

வீரர்கள் மரணமடையலாம், ஆனால் வீர வரலாறு மரணிக்காது. ராஜா ராவ் துலாராம் உள்ளிட்ட வீரர்களுக்கு நமது நன்றியும் வணக்கங்களும் என்றும் உரித்தாகுக. 

திங்கள், 19 மே, 2025

மே 19 - முதல் சுதந்திரப் போரின் நாயகன் நானா சாஹேப் பிறந்தநாள்

வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி சிறிது சிறிதாக பாரதம் நாட்டின் பெரும்பகுதியை தங்கள் ஆளுமைக்கு கொண்டுவந்தனர். அந்நிய ஆட்சியை வேரோடு அகற்றி சுதந்திரத்தை மீண்டும் பிரகடனம் செய்யும் முகமாக உருவான முதல் சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான கதாநாயகன் நானா சாஹேபின் பிறந்தநாள் இன்று. 


மூன்றாவது மராட்டியப் போரில் ( 1817 - 1818 ) மராட்டியர்களைத் தோற்கடித்து அவர்களிடம் இருந்து பாரத நாட்டின் பெரும்பான்மையான பகுதியின் ஆட்சியாளர்களாக ஆங்கிலேயர்கள் உருவானார்கள். மராட்டியப் படை முற்றிலும் உருக்குலைந்து இருந்தது. அடுத்த நாற்பது வருடங்களில் தங்கள் நடவடிக்கைள் மூலம் அதுவரை முக்கிய சக்தியாக விளங்கிய மராட்டியர்கள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்தனர். மராட்டியப் பகுதியில் இருந்து பேஷ்வா இரண்டாம் பாஜிராவை கான்பூர் நகருக்கு அருகில் உள்ள பிதூர் பகுதியில் வசிக்குமாறு கம்பெனி. .வாரிசு இல்லாத பேஷ்வா நாராயண் பட் - கங்காபாய் தம்பதியரின் மகனான நானா கோவிந்த் டோண்டு பந்த் என்ற இளைஞரை தத்து எடுத்துக்கொண்டார். 

1818-ல் நடைபெற்ற மூன்றாம் ஆங்கிலோ-மராட்டா போரின் தொடர்ந்த நடைபெற்றது தான் 1857 போர். இந்த இடைப்பட்ட காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவின் பொருளாதாரத்தை முற்றிலும் சிதைத்திருந்தது. பல்வேறு குடிசைத் தொழில்களும், சிறு தொழிற்சாலைகளும் அழிக்கப்பட்டன. மக்கள் பெரும் வரிவிதிப்பிற்கு உள்ளாயினர். மறைமுக மதமாற்றம் மிக தீவிரமாக நடைபெற்றது. குறிப்பாக கிறித்துவ மதத்திற்கு மாறுவதன் மூலம் பெரும் வரிவிதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணம் மக்களிடையே வேகமாக பரப்பப்பட்டது. கோயில் சார்ந்த குடியிருப்புகளும், தொழில்களும் பெரும் வன்முறைக்கு இலக்காயின. பிரிட்டிஷ் அரசாங்கத்தில் வேலை பார்த்த இந்தியர்கள் பலரும் “சுபேதார்” என்ற பணிநிலைக்கு மேல் உயர்த்தப்படவில்லை. வாரிசு இல்லாத மன்னர்களின் அரசை எந்த தர்ம நியாயமும் இல்லாமல் ஆங்கில ஆட்சி அபகரித்துக் கொண்டது. பேஷ்வாவின் வாரிசான நானா சாஹேபை ஆங்கில ஆட்சி அங்கீகரிக்க மறுத்துவிட்டது. 

மொகலாய மன்னர்களின் வரிசையில் கடைசியானவரான பகதூர் ஷா-2  தனது 62-வது வயதில் 1837-ஆம் ஆண்டு தான் ஆட்சிக் கட்டிலில் அமர முடிந்தது. அவரது தந்தையான 2-வது அக்பர் ஷா 1837-ல் இறந்தபோது, மூத்த மகன் உயிரோடு இல்லை என்பதால், 2-வது மகனான பகதூர் ஷா-2 ஆட்சியில் அமர ஆங்கிலேய ஆட்சி  ஒப்புதல் கொடுத்தது.

இந்தியாவின் பெரும்பாலான ராஜ்ஜியங்கள் ஏற்கெனவே ஆங்கிலேயர் வசம் வந்திருந்தன. பகதூர் ஷாவிற்கு ஆங்கிலேயர் பென்ஷன் கொடுத்து விட்டு, ராஜ்ஜியத்தின் நிர்வாகத்தை தங்கள் வசம் எடுத்துக் கொண்டு விட்டனர். ஒரு சிறு பகுதியில் மட்டும் பெயருக்கு வசூல் பண்ணிக்கொள்ளவும், தனது சொந்த பாதுகாப்பிற்கென ஒரு சிறுபடையை வைத்துக் கொள்ளவும் பகதூர் ஷாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. எல்லாப் பகுதிகளிலும் இருந்த அழுத்தம் பெரும் போராட்டமாக வெடித்தது. பசுவின் கொழுப்பும் பன்றியின் கொழுப்பும் இணைந்து துப்பாக்கி குண்டை உபயோகம் செய்யவேண்டி உள்ளது என்ற வதந்தி இந்த எரிமலையை பற்ற வைத்தது. 

நானா சாஹேபின் சிறு வயது நண்பர்களான தாந்தியா தோபே, ஜான்சியின் மகாராணியாக இருந்த லக்ஷ்மிபாய், அஸிமுல்லா கான் ஆகியோர் இந்த சுதந்திரப் போராட்டத்தை பல்வேறு இடங்களில் முன்னெடுத்தனர். முதல் இந்திய சுதந்திரப் போர் 29 மார்ச், 1857 அன்று துவங்கியது. மங்கள் பாண்டேயின் புரட்சியுடன் இது தொடங்கியது. இதை தொடர்ந்த அடுத்த சில மாதங்களில், புரட்சியாளர்கள் தொடர் வெற்றிகளை அடைந்தனர். அதே வருடம் மே மாதம் 10-ஆம் தேதியன்று தில்லி பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து விடுவிக்கப்பட்டது. 

தில்லியை தொடர்ந்து கான்பூர், லக்னொ, குவாலியர் மற்றும் பாண்டா ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன. அதே வருடம் ஜூன் மாதம், 4, 5, மற்றும் 6 ஆகிய தேதிகளில், அசம்கர், வாரணாசி மற்றும் அலகாபாத் ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன. ஜூன் 11 அன்று, ஃபைசாபாத், தைராபாத்/பாராபங்கி, சலன், சுல்தான்பூர் மற்றும் கோண்டா ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன. இதே சமயத்தில், மத்திய இந்தியா, ஜான்சி, நெளகான், குருசராய், பண்பூர  மற்றும் ஓராய் ஆகிய பகுதிகள் பிரிட்டிஷ் படைகளுடன் போர் நடந்தது. இந்தப் போரில் பிரிட்டிஷ் படைகள் பெரும் பின்னடைவை சந்தித்தனர். 27 ஜூனன்று கான்பூர், ஜூலை 5 லக்னொ ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன. 

பகதூர் ஷா ஜபரின்(Bahadur Shah Zafar) தலைமையில் 15 ஆகஸ்டு 1857-அன்று ஒரு இந்திய அரசாங்கம் அமைக்கப்பட்டது. இந்த அரசாங்கம் மே 1858 வரை தொடர்ந்து செயல்பட்டது. கான்பூரில் இருந்த கிழக்கிந்திய ராணுவத்தின் படையை சுதந்திரப் வீரர்களோடு நானா சாஹேப் முற்றுகை இட்டார். ஆங்கிலத் தளபதி வீலர் நானா சாஹேபிடம் சரணடைந்தார். மீண்டும் ஆங்கிலப் படை கான்பூரைத் தாக்கி அதனை தங்கள் வசம் கொண்டுவந்தனர். 

இந்தப் போரில் இந்தியர்கள் ஈட்டிய வெற்றியில் கிராமங்களுக்கு பெரும் பங்குண்டு. புரட்சிப் படைக்குத் தேவையான உணவை இந்த கிராமங்கள் போதுமானளவு அளித்துவந்தன. இதை அறிந்த பிரிட்டிஷார் பல்வேறு கிராமங்களை தரைமட்டமாக்கினர். கிராமத்து மனிதர்களை அவர்கள் பூமியிலிருந்து விரட்டினர். குறிப்பாக தற்கால டாக்கா தொடங்கி பேஷாவர்(பாகிஸ்தான்) வரையிலான நீண்ட “நெடுஞ்சாலை”யில்(Grand Trunk Road) இருந்த கிராமங்கள் அனைத்தும் சின்னாபின்னமாயின. இதனால் இந்தியப் படையின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த இடங்கள் அவர்களின் அதிகார எல்லையில் இருந்து நழுவின. இதை நன்கு உபயோகப்படுத்திக் கொண்ட பிரிட்டிஷ் அரசு இந்தியப் படை மீதான தாக்குதலுக்கு வசதியாக தங்கள் படைகளை இந்த இடங்களில் நிறுவியது. தங்கள் படைகளுக்கு தேவையான அனைத்தையும் கொண்டு செல்ல இந்த பெரும் “நெடுஞ்சாலை” அவர்களுக்கு பெரிதும் உதவியது. தாங்கள் கைப்பற்றிய இடங்களிலிருந்து பிரிட்டிஷ் படை இந்தியப் படை மீது தாக்குதலை துவங்கியது. இழந்த அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற பிரிட்டிஷ் படை மிக மூர்க்கமான தாக்குதலை நடத்தியது. இப்படி ஒரு மூர்க்கத்தனத்தை எதிர்பார்த்திராத இந்தியப் படை பெரும் இழப்பை சந்தித்தது. கொல்கத்தா முதல் கான்பூர் வரை இடங்களை கைப்பற்றியபடி முன்னேறிய பிரிட்டிஷ் படையினரின் மூர்க்கமான தாக்குதலில் லட்சக்கணக்கான இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். 

கான்பூர் ஆங்கிலேயர்கள் வசமானதைத் தொடர்ந்து நானா சாஹேப் நேபாளத்திற்கு தப்பிச் சென்றார். மீண்டும் ஒருமுறை கான்பூர் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். ஆனால் அதுவும் வெற்றிகரமாக முடியவில்லை. 

புரட்சிக் களத்தில் ஒவ்வொரு மாவீரரும் வரிசையாக களப்பலி ஆனார்கள்.  ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் வஞ்சகமாகக் கொல்லப்பட்டார். குமாரசிம்மன் உயிரிழந்தார். மெளல்வி அகமதுஷா நண்பன் என கருதிய ஒரு இந்திய சிப்பாயால் சுட்டுக் கொல்லப்பட்டார். பகதூர் ஷா நாடுகடத்தப்பட்டார். தாந்தியா தோபே கைது செய்யப்பட்டு தூக்கில் இடப்பட்டார். நேபாளத்திலும் இமயமலைக் காடுகளிலும் ஒளிந்து வாழ்ந்த நானா சாஹேப் மரணமடைந்து விட்டதாக ஆங்கில அரசு அறிவித்தது.  ஆனால் 1906 அல்லது 1907ஆம் ஆண்டில் நானா சாஹேப் மஹாகவி பாரதியைச் சந்தித்ததாக பாரதியின் நண்பர்கள் பதிவு செய்துள்ளார்கள் 

ஆனாலும் நானா சாஹேப் போன்ற தியாகிகளின் பலிதானம் வீணாகவில்லை. அவர்கள் காலடியில் இருந்து இன்னும் ஆயிரம் ஆயிரம் தேசபக்தர்கள் தோன்றினார்கள். தொடர்ந்த போராட்டத்தின் இறுதியில் பாரதம் முதல் சுதந்திரப் போருக்குப் பிறகு தொன்னூறு ஆண்டுகள் கழித்து சுதந்திரம் அடைந்தது. இன்று நாம் சுதந்திரமாக இருக்க தங்கள் வாழ்வைத் தியாகம் செய்த வீரர்கள் அனைவருக்கும் நமது வணக்கங்களும் நன்றிகளும் உரித்தாகுக.