செவ்வாய், 7 அக்டோபர், 2025

அக்டோபர் 7 - துர்காவதி தேவி பிறந்ததினம்

லாகூர் புகைவண்டி நிலையத்திற்கு நேர்த்தியாக உடையணிந்த ஒரு கனவான் அவரது மனைவியோடு வந்தார். மனைவியின் கையில் ஒரு சிறு ஆண் குழந்தை. அவர்களோடு அவர்களின் வேலையாளும் கூட வந்தார். மூவருக்குமான பயணச்சீட்டை வாங்கிக்கொண்டு அந்த கணவானும் அவர் குடும்பமும் முதல்வகுப்பு பெட்டியில் ஏறிக்கொண்டனர். அவரது வேலையாள் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தார். கான்பூரில் அவர்கள் இறங்கி வேறு ஒரு புகைவண்டியில் லக்னோ சென்றனர். லக்னோ நகரில் அந்த வேலையாள் அந்தக் குடும்பத்தைப் பிரிந்து வாரனாசிக்குச் சென்றுவிட்டார். கனவானும் அவரது குடும்பமும் அங்கிருந்து ஹௌரா நகருக்குச் சென்றனர். சில காலம் கழித்து அந்தப் பெண்மணி மட்டும் தன் மகனோடு லாகூர் திரும்பினார்.

சாதாரணமான நிகழ்ச்சியாகத்தான் தோன்றுகிறது, அப்படித்தானே. ஆனால் பயணம் செய்த அந்த கனவான் பகத்சிங், அவரது வேலையாள் ராஜகுரு. காவல் அதிகாரி சாண்ட்ராஸ் படுகொலையை அடுத்து ஆங்கில அரசு வலைவீசித் தேடிக்கொண்டு இருந்த குற்றவாளிகள் அவர்கள். நாம்  அறிந்த பகத்சிங் திருமணம் ஆகாதவர். அப்படியானால் அந்தப் பெண்மணி யார் ? அவருக்கும் பகத்சிங்குக்கும் என்ன தொடர்பு ?


எட்டும் அறிவினில் மட்டுமல்ல வீரத்திலும், தியாகத்திலும் ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று வாழ்ந்து காட்டிய பாரத நாரிமணிகளின் வரிசையில் ஒளிவீசும் தாரகையாகத் திகழ்பவர் அந்தப் பெண்மணி. அவர் பெயர் துர்காவதி தேவி, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு  துர்கா பாபி அதாவது அண்ணி துர்காதேவி. இந்த நாட்டில் மறக்கடிக்கப்பட்ட தியாகிகளில் மிக முக்கியமானவர் துர்காவதி தேவி. மிகப் பெரிய செயல்களைச் செய்து விட்டு, எந்த பலனையும், எந்த அங்கீகாரத்தையும் எதிர்பாராமல் வாழ்ந்து மறைந்த மகோன்னதமான பெண்மணி அவர்.

1907ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி பிறந்தவர் துர்காதேவி அவர்கள். சிறுவயதிலேயே தனது தாயை இழந்து அதனால் உறவினர்களால் வளர்க்கப்பட்டவர். அன்றய காலசூழ்நிலையில் தனது பதினொன்றாம் வயதில் லாகூர் நகரைச் சார்ந்த பகவதி சரண் வோரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பகவதி சரண் வோராவும் மிகப் பெரும் தேசபக்தர், சிந்தனையாளர், புரட்சியாளர். நவ்ஜவான் பாரத் சபா மற்றும் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் அஸோஸியேஷன் என்ற புரட்சியாளர்கள் குழுவின் செயலாளராக இருந்து, அந்த புரட்சிப் பாதையின் கொள்கை விளக்க பிரகடனத்தை உருவாக்கியவர் திரு வோரா அவர்கள்.

காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து என்று வோராவின் போராட்டத்திற்கு துர்காதேவி உறுதுணையாக இருந்தார். புரட்சியாளர் கர்டார் சிங்கின் பதினோராவது பலிதான தினத்தை லாகூர் நகரில் கொண்டாடியது, லாகூர் சிறையில் அறுபத்திமூன்று நாட்கள் உண்னாவிரதம் இருந்து உயிர் நீத்த ஜதீந்திரநாத் தாஸின் இறுதி ஊர்வலத்தை லாகூர் நகரில் இருந்து கொல்கத்தா நகர் வரை தலைமையேற்று நடத்தியது என்று துர்காதேவி பல்வேறு போராட்ட களங்களில் செயல்பட்டார்.

சைமன் கமிஷனை புறக்கணித்து லாகூர் நகரில் நடைபெற்ற ஊர்வலத்தை தலைமையேற்று நடத்திய லாலா லஜபதி ராயை ஆங்கில காவலர்கள் தாக்கினர். படுகாயமுற்ற லாலா லஜபதி ராய் சிலநாட்களில் உயிர் துறந்தார். தலைவரின் மரணத்திற்கு பதிலடியாக காவல் அதிகாரி சாண்ட்ரஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை நிகழ்த்தியது ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் அஸோஸியேஷன. இதைச் செய்தது பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர்.

இருபத்தி ஏழு வயதான சீக்கிய இளைஞனை ஆங்கில அரசு தேட ஆரம்பித்தது. லாகூரில் இருந்து தப்பித்து கொல்கொத்தா செல்ல புரட்சியாளர்கள் முடிவு செய்தனர். ஆனால் ஆங்கில அரசிடம் மாட்டாமல் எப்படி தப்பிக்க ? அப்போதுதான் உதவிக்கு துர்காதேவி வந்தார். பகத்சிங்கின் மனைவியாக சென்றது துர்காதேவிதான். அன்றய காலகட்டத்தில் ( ஏன் இன்றும் கூட )  இன்னொரு ஆண்மகனின் மனைவியாக நடிக்க எந்த அளவு தியாக சிந்தனை இருக்கவேண்டும் என்பதை இன்றும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. பாதுகாப்பாக புரட்சியாளர்களைத் தப்ப வைத்துவிட்டு அதன் பின்னர் துர்காதேவி மீண்டும் லாகூர் திரும்பினார்.

லாலா லஜபதி ராயின் மரணத்திற்குப் பழிவாங்கிய பிறகு சிறிது காலம் தலைமறைவாக இருந்த புரட்சியாளர்கள் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வெடிகுண்டு வீச முடிவு செய்தனர். படுகேஸ்வர்தத்துடன் இந்த சாகசத்தை மேற்கொள்ள பகத்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். காது கேட்காத அரசுக்கு எங்கள் பேச்சு புரிவதில்லை, எனவே சத்தமாக பேசுவோம் என்று புரட்சியார்கள் தீர்மானித்தார்கள். நாடாளுமன்றத்தில் குண்டு வீசி, துண்டுப் பிரசுரங்களை விட்டெறிந்து இன்குலாப் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பி படுகேஸ்வர் தத்தும் பகத்சிங்கும் கைதானார்கள்.

சர்வ நிச்சயமாக அவர்கள் தூக்கிலிப்படுவார்கள் என்பது புரட்சியாளர்களுக்குத் தெரியும். இதற்கு எதிர்வினையாக வைஸ்ராய் இர்வின் பயணம் செய்யும் ரயில் வண்டியை வெடிகுண்டு வைத்துக் கவிழ்க்க துர்காதேவியின் கணவர் பகவதி சரண் வோரா முயற்சி செய்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக இர்வின் உயிர் தப்பினார். இர்வின் உயிர் தப்பியதற்கு ஆண்டவனுக்கு நன்றி தெரிவித்து புரட்சியாளர்களைக் கண்டித்து காந்தி வெடிகுண்டுகளை வழிபடுதல் ( The Cult of Bomb ) என்ற கட்டுரையை எழுதினார்.

இந்த கட்டுரைக்கு பதிலாக வெடிகுண்டுகளின் தத்துவம் ( Philosophy of Bomb ) என்ற கட்டுரையை பகவதி சரண்வோரா எழுதினார். " பாரதத்திற்கு மீது ஆங்கிலேய அரசு இழைக்காத குற்றம் என்பது எதுவுமே இல்லை, திட்டமிட்ட முறையில் ஆங்கில அரசு பாரதத்தை ஓட்டாண்டியாக மாற்றி உள்ளது. ஒரு இனமாகவும் பொது மக்களாகவும் இந்த அநீதியை நாங்கள் மறக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை. சர்வ நிச்சயமாக நாங்கள் பழி தீர்ப்போம். சர்வாதிகாரத்திற்கு எதிராக பழி தீர்ப்பது என்பது மக்களின் கடமை. கோழைகள் பின்வாங்கி சமாதானத்தையும் அமைதியையும் யாசிக்கட்டும். ஆனால் நாங்கள் எங்களுக்கு கருணையே அல்லது மன்னிப்போ தேவை இல்லை, அதை நாங்கள் கேட்கவும் இல்லை. நாங்கள் நடத்துவது போர் - அதற்கு வெற்றி அல்லது வீர மரணம் என்பதுதான் முடிவாக இருக்கும்" என்று அவர் முழங்கினார்.

சிறையில் இருந்த புரட்சியாளர்களை விடுவிக்க சிறை வளாகத்தில் வெடிகுண்டு வீச வோரா முடிவு செய்தார். ஆனால் குண்டு தயாரிக்கும் முயற்சியில் துரதிஷ்டவசமாக அந்த வெடிகுண்டு வெடித்து வோரா மரணமடைந்தார். கணவர் இறந்த துயரத்தில் இருக்கக் கூட துர்காதேவிக்கு நேரம் இருக்கவில்லை. யாருக்கும் தெரியாமல் கணவரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு மீண்டும் பகத்சிங்கையும் மற்ற புரட்சியாளர்களையும் காப்பாற்றும் முயற்சியில் அவர் ஈடுபடலானார். கையெழுத்து இயக்கம், வழக்கு நடத்த பணம் வசூலித்தல், காந்தி உள்பட பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசுதல் என்று பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார்.

1932ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துர்காதேவி ஆங்கில காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவரது செயல்பாடுகள் காவல்துறைக்கு முழுவதும் தெரியாததால் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனைதான் அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் சென்னைக்கு வந்த துர்காதேவி சிறு குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் முறையைக் கற்றுக் கொண்டு காஜியாபாத்திலும் பின்னர் லக்னோ நகரிலும் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, ஒரு சாதாரண பெண்மணி போல மற்றவர்கள் அறியாமல் வாழ்ந்து தனது 92ஆம் வயதில் 1999ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி துர்காதேவி பாரதமாதாவின் காலடியில் கலந்தார்.

புகழ்பெறவேண்டும் என்றோ மக்கள் பாராட்ட வேண்டும் என்றோ தியாகிகள் நாட்டுக்காக உழைப்பதில்லை. அது ஸ்வதர்மம் என்று எண்ணியே அவர்கள் உழைக்கிறார்கள். அவர்களைப் போற்றுவதும், அவர்களின் தியாகத்தை நினைவில் கொள்வதும் நம்மையும் அவர்கள் நடந்த பாதையில் நடக்கும் சக்தியைக் கொடுக்கும்.

பாரத நாட்டின் புகழ்பெற்ற தியாகிகள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள். 

அக்டோபர் 7 - குரு கோவிந்த சிம்மனின் பலிதான தினம்

இன்றிருக்கும் வகையில் சீக்கிய மதத்தை வடிவமைத்தவரும், சீக்கிய இனத்தவரை போராடும் குணம்கொண்ட குழுவாக மாற்றியவரும், மாவீரரும், கவிஞரும், தத்துவ ஞானியும், சீக்கியர்களின் பத்தாவது குருவுமான குரு கோவிந்த சிம்மனின் பலிதான தினம் இன்று.



சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான குரு தேஜ் பகதூரின் ஒரே மகன் குரு கோவிந்தசிங். 1666ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் நாள் இன்றய பாட்னா நகரில் பிறந்தவர் கோவிந்தசிங் அவர்கள். அவரது இயற்பெயர் கோவிந்த் ராய். முதல் நாலாண்டுகளை பாட்னா நகரில் கழித்த கோவிந்தராய் அதன் பிறகு பஞ்சாபிற்கும் பின் இமயமலை அடிவாரத்தில் வசித்து வந்தார். அங்கேதான் அவரது படிப்பு ஆரம்பமானது.

1675ஆம் ஆண்டு காஷ்மீர் பண்டிதர்கள் குரு தேஜ்பகதூரை காண வந்தனர். பண்டிதர்களை இஸ்லாமியர்களாக மதம் மாற்றினால், அதனைத் தொடர்ந்து மற்ற மக்களை எளிதாக மதம் மாற்றிவிட முடியும் என்று எண்ணிய முகலாய அதிகாரிகளின் வற்புறுத்தல் மற்றும் பயமுறுத்துதலில் இருந்து தங்களை காப்பாற்றுமாறு அவர்கள் குரு தேஜ்பகதூரிடம் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து குரு தேஜ்பகதூரை மதம் மாற்ற முடிந்தால், தாங்களும் அதன் பிறகு மாறுகிறோம் என்று அவர்களை அவுரங்கசீப்பிடம் பதில் அளிக்க குரு தேஜ்பகதூர் அறிவுரை கூறினார்.

ஹிந்துஸ்தானத்தின் பாதுஷா அவங்கசீப்பை நேரில் வந்து காணுமாறு தேஜ்பகதூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இஸ்லாம் மதத்தை ஏற்க மறுத்த குரு தேஜ்பகதூர் 1675ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சீக்கியர்களின் பத்தாவது குருவாக கோவிந்த் ராய் நியமிக்கப்பட்டார்.

1699 ஆம் ஆண்டு பைசாகி திருவிழாவின்போது சட்லெஜ் நதிக்கரையில் அமைத்துள்ள அனந்தபூர் நகருக்கு வருமாறு சீக்கியர்களுக்கு குரு கோவிந்த்ராய் அழைப்பு விடுத்தார். நாடெங்கெங்கும் இருந்து சீக்கியர்கள் குழுமிய அந்த கூட்டத்தில் தர்மத்தைக் காப்பாற்ற அங்கேயே பலிதானமாக யார் தயாராக இருக்கிறார் என்று குரு வினவ, ஒருவர் முன்வந்தார். அவரை அழைத்துக்கொண்டு தனது கூடாரத்திற்குள் சென்ற குரு சிறிது நேரத்தில் ரத்தம் சொட்டும் வாளோடு வெளியே வந்தார். " இன்னும் பலிதானிகள் தேவை" இடி முழுக்கம் என எழுந்தது குருவின் குரல்.
அடுத்தவர் வந்தார், குருவோடு கூடாரத்திற்குள் சென்றார், குரு மீண்டும் வெளியே வந்து தர்மம் காக்கும் போரில் இன்னும் ஆள் தேவை என்று கூற அடுத்தது வீரர்கள் வந்தனர். மொத்தம் ஐந்து பேர் தங்களைப் பலியிட முன்வந்தனர். சிறிது நேரத்தில் அந்த ஐவரோடும் வெளியே தோன்றிய குரு அப்போதுதான் சீக்கிய மார்க்கத்தை முழுவதுமாக மாற்றியமைத்தார்.

பாய் தயாசிங், பாய் தரம்சிங், பாய் ஹிம்மத்சிங், பாய் மோகும்சிங், பாய் சாஹிப்சிங் என்று அறியப்படும் அந்த ஐவரும்தான் கல்சாவின் முதல் வித்தாக அமைந்தனர். இரும்பு கொள்கலத்தில் சர்க்கரை சேர்க்கப்பட்ட தண்ணீரை தனது இருபுறமும் கூர்மையான குத்துவாளால் கலக்கி புனித குரு கிரந்தசாஹிப் மந்திரங்கள் ஓத அந்த ஐவருக்கும் அளித்து அவர்களை முறைப்படி சீக்கியர்களாக குரு கோவிந்தசிங் அறிவித்தார். பிறகு அவர்கள் கல்சாவின் புது உறுப்பினராக குருவை ஏற்றுக்கொண்டனர். சீக்கியம் என்ற மதம் முழுமையாக உருவான தினம் அதுதான். கேஷ் ( வெட்டப்படாத தலைமுடி ) கங்கா ( மரத்திலான ஆன சீப்பு ) காரா ( இரும்பினால் ஆனா கைவளை ) கிர்பான் ( கத்தி ) காசீரா ( அரையாடை ) ஆகிய ஐந்தும் சீக்கியர்களின் அடையாளமாகியது. புகையிலை பயன்படுத்துவது, ஹலால் முறையில் கொல்லப்பட்ட இறைச்சியை உண்பது ஆகியவை தடை செய்யப்பட்டது. இஸ்லாமியர்களின் கொடுமைகளில் இருந்து இந்துக்களையும் சீக்கியர்களையும் காப்பாற்றுவது ஒவ்வொரு சீக்கியர்களின் கடமையாக அறிவிக்கப்பட்டது. குரு கோவிந்த்சிங்கின் காலத்திற்குப் பிறகு நிரந்தர குருவாக குரு கிரந்த சாஹிபே இருக்கும் என்றும், இனி சீக்கியர்கள் தங்கள் பெயருக்குப் பின்னர் சிங் என்ற அடைமொழியை இணைத்துக் கொள்ளவேண்டும் என்று குரு ஆணையிட்டார்.

ஏற்கனவே சீர்கெட்டிருந்த மொகலாயர்களோடான உறவு குரு தேஜ்பகதூரின் பலிதானத்திற்குப் பிறகு இன்னும் விரிவடைந்தது. குருவின் படைகளும் மொகலாய படைகளும் பல்வேறு இடங்களில் மோதின. ஹிந்து தர்மத்தில் கிளைத்தெழுந்த சீக்கிய குரு தர்ம யுத்தத்தையே எப்போதும் மேற்கொண்டார். தேவையில்லாமல் போரில் இறங்குவதோ, பொதுமக்களை துன்புறுத்துவதோ அல்லது எந்த ஒரு வழிபாட்டுத்தளத்தை அழிப்பதோ ஒருபோதும் சீக்கியர்களால் முன்னெடுக்கப்படவில்லை.

குருவின் தாயாரும் அவரின் இரு சிறு பிள்ளைகளும் முகலாய தளபதி வாசிம்கான் என்பவனால் சிறை பிடிக்கப்பட்டனர். எட்டு வயதும் ஐந்து வயதான குழந்தைகளை சித்தரவதை செய்து முகலாயர்கள் கொண்டார்கள். இதனை கேட்டு மனமுடைந்து குருவின் தாயாரும் மரணமைடைந்தார்கள். பதினேழு மற்றும் பதிமூன்று வயதான மற்ற இரண்டு பிள்ளைகளும் போர்க்களத்தில் பலியானார்கள்.

1707ஆம் ஆண்டு அவுரங்கசீப் மரணமடைய, முகலாயப் பேரரசில் வாரீசுப் போர் உருவானது. கோதாவரி நதி கரையில் முகாமிட்டிருந்த குருவை கொலை செய்ய முகலாயத் தளபதி வாசிம்கான் இரண்டு ஆப்கானியர்களை அனுப்பினான். பலநாட்களுக்குப் பிறகு அவர்கள் குருவின் கூடாரத்தில் நுழைந்து அவரை தாக்கி படுகாயமுற வைத்தார்கள். அவர்களில் ஒருவரை குரு கோவிந்தசிங்கே கொன்றார், மற்றவனை குருவின் படைவீரர்கள் கொன்றார்கள். தனது  மொத்த குடும்பத்தையும் தர்மம் காக்கும் போரில் பலிதானமாகிய குரு கோவிந்தசிங் 1708ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் நாள் மரணமடைந்தார்.

தர்மத்தை காக்க சீக்கியர்கள் மீண்டும் இஸ்லாமியர்களோடு மோதிக் கொண்டேதான் இருந்தார்கள். பாண்டாசிங் பகதூர், மஹாராஜா ரஞ்சித்சிங் ஆகியோரின் அயராத முயற்சியாலும், தொடர்ந்த மராட்டியர்களின் தாக்குதலாலும் முகலாய பேரரசு நாட்டில் இருந்து அகற்றப்பட்டது.

நெருக்கடியான காலகட்டத்தில் தர்மத்தை காக்க அவதரித்த குரு கோவிந்தசிங்கை என்றும் நாம் நினைவில் வைத்துப் போற்றுவோம்.