பாஜக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாஜக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 ஜூலை, 2025

ஜூலை 22 - தேவேந்திர பட்னவிஸ் பிறந்தநாள்



பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் இன்றய மஹாராஷ்டிரா முதல்வருமான திரு தேவேந்திர பட்னவிஸ் அவர்களின் பிறந்தநாள் இன்று. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தால் வார்த்தெடுக்கப்பட்ட பாட்னவிஸ் மஹாராஷ்டிரா மாநிலத்தில் மிக இளைய வயதில் முதல்வராகத் தேர்வானவர்களில் இரண்டாமவர். இவர் தனது நாற்பத்தி நான்காவது வயதில் முதல்வர் பதவியை அடைந்தார். திரு சரத்பவார் தனது முப்பத்தி எட்டாவது வயதில் மஹாராஷ்டிரா முதல்வரானார்.

பட்னவிஸ் 1970ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் நாள் பிறந்தவர். இவர் தந்தை கங்காதர் பட்னவிஸ் பாரதிய ஜனசங்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவர். அவர் மஹாராஷ்டிரா மாநிலம் மேலவையின் உறுப்பினராகப் பணியாற்றியவர். கங்காதர் பட்னவிஸ் நெருக்கடி நிலையின் போது சிறை தண்டனை அனுபவித்தவர்.

தனது பள்ளிக்கல்வியை நாக்பூர் நகரின் சரஸ்வதி வித்யாலயாவில் முடித்த பட்னவிஸ், தந்து சட்டப் படிப்பை நாக்பூர் அரசு சட்டக் கல்லூரியில் 19992ஆம் ஆண்டு முடித்தார். வணிக மேலாண்மை மற்றும் திட்ட மேலாண்மை துறைகளில் முதுகலை பட்டய படிப்பையும் இவர் படித்துள்ளார்.

படிக்கும் காலத்திலேயே அகில பாரதிய விதார்த்தி பரீக்ஷித் அமைப்பில் இணைத்துக் கொண்ட பட்னவிஸ் பாரதிய ஜனதா கட்சியிலும், நேரடி அரசியலிலும் பல்வேறு பதவிகளை பெற்றுள்ளார். 1992 மற்றும் 1997 ஆகிய இரண்டு முறை பட்னவிஸ் நாக்பூர் மாநகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாக்பூர் மாநகராட்சியின் மிக இளைய மேயர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

1999 மற்றும் 2004ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் நாக்பூர் மேற்கு தொகுதியில் இருந்தும் 2009 மற்றும் 2014ஆம் ஆண்டு தேர்தல்களில் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் இருந்தும் பட்னவிஸ் மஹாராஷ்டிரா சட்டசபைக்கு தேர்வானார். 2014ஆம் ஆண்டு மாநிலத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பட்னவிஸ் அவர்களின் மிகப்பெரும் சாதனை என்பது வறட்சியால் பாதிக்கப்பட்ட மராத்வாடா பகுதிகளை அதில் இருந்து மீட்டெடுத்ததுதான். 2015ஆம் ஆண்டு அந்தப் பகுதியை பெரும் குடிநீர் தட்டுப்பாடு தாக்கியது. 3,600 கிராமங்களுக்கு 4,640 டேங்கர் லாரிகளில் அரசு குடிநீர் வழங்க வேண்டி இருந்தது. ஆனால் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தியத்தின் மூலம் 2017ஆம் ஆண்டுக்குள்ளாக 886 கிராமங்களுக்கு 669 டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் அளவிற்கு பட்னவிஸ் அரசு நிலைமையை சரிசெய்து விட்டது.

இந்தியாவின் வணிக தலைநகரமாகவும், பொருளாதாரரீதியில் மிக முன்னேறிய மாநிலமாகவும் உள்ள மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக அரசு உள்கட்டுமானப் பணிகளை பெருமளவில் முன்னெடுக்கிறது.

அரசியலில் ஐம்பது என்பது மிக இளைய வயதுதான். இன்னும் நெடுங்காலம் உடல்நலத்தோடு வாழ்ந்து திரு பட்னவிஸ் பாரத நாட்டுக்கு தனது சேவையை ஆற்றவேண்டும் என்று ஒரே இந்தியா தளம் வாழ்த்துகிறது. 

வியாழன், 10 ஜூலை, 2025

ஜூலை 10 - மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பிறந்தநாள் -


பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் தற்போதய மத்திய ராணுவ அமைச்சருமான ராஜ்நாத்சிங் அவர்களின் பிறந்தநாள் இன்று.

உத்திரப்பிரதேசத்தைச் சார்ந்த ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் 1951ஆம் ஆண்டு பிறந்தவர் ராஜ்நாத்சிங். இயற்பியல் துறையில் முதுகலைப் பட்டத்தை கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் பெற்ற இவர் கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றிவந்தார். தனது 13ஆம் வயதிலேயே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ராஜ்நாத், 1974ஆம் ஆண்டு பாரதிய ஜனசங்கத்தின் மிர்சாபூர் நகரின் செயலாளராகவும் இருந்தார்.  அடுத்த ஆண்டே மாவட்ட தலைவராகவும் அதன்பின்னர் 1977ஆம் ஆண்டு உத்திரபிரதேச  சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

பாஜகவின் இளைஞர் பிரிவின் மாநிலத் தலைவராக 1984ஆம் ஆண்டிலும், பின்னர் தேசிய செயலாளராக 1986ஆம் ஆண்டிலும், இளைஞர் அணி தேசிய தலைவராக 1988ஆம் ஆண்டிலும் தேர்வானார்.

1988ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மேல்சபைக்கு தேர்வான ராஜ்நாத் 1991ஆம் மாநிலத்தின் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 1994ஆம் ஆண்டு நாடாளுமன்ற மேல்சபைக்கு நியமிக்கப்பட்ட ராஜ்நாத், பாஜகவின் கொறடாவாகப் பணியாற்றினார். 1997ஆம் ஆண்டு பாஜகவின் உத்திரப்பிரதேச மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1999ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அரசின் தரைவழி போக்குவரத்துதுறையின் அமைச்சராக ஏறத்தாழ ஓராண்டு காலம் பணியாற்றினார். வாஜ்பாயின் கனவு திட்டமான தங்க நாற்கர சாலை அமைக்கும் திட்டத்தில் ராஜ்நாத்தின் பங்கு மகத்தானது.
2000 - 2002ஆம் ஆண்டுகளில் உத்திரப்பிரதேச மாநில முதல்வராகப் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் அவர் பாஜகவின் தேசிய செயலாளராகவும் இருந்தார்.

மீண்டும் 2002ஆம் ஆண்டு மத்திய விவசாயத்துறை அமைச்சராகவும், பின்னர் உணவு பதப்படுத்தும் துறையின் அமைச்சராகவும் இருந்தார்.
2005 - 2009 காலகட்டத்திலும் அதன் பின்னர் 2013 - 2014 காலகட்டத்திலும் பாஜகவின் தேசிய தலைவராகவும் இருந்தார். அப்போதுதான் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனிப் பெரும்பான்மை பெற்று பாஜக மத்திய அரசை அமைத்தது.

மோதி தலைமையிலான அரசின் உள்துறை அமைச்சராகவும், தற்போது பாதுகாப்புதுறை அமைச்சராகவும் ராஜ்நாத்சிங் பணியாற்றிவருகிறார்.

விஜயலக்ஷ்மி பண்டிட், ஷீலா கௌல், H N பகுகுணா அதன் பின்னர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ஐந்து முறை வாஜ்பாய் ஆகிய நட்சத்திர வேட்பாளர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய லக்னோ தொகுதியில் இருந்து 2014 மற்றும் 2019 ஆண்டு தேர்தல்களில் ராஜ்நாத் வெற்றி பெற்று உள்ளார்.

நாற்பதாண்டு காலத்திற்கும் மேலாக தேசத்திற்காக உழைத்து வரும் திரு ராஜ்நாத்சிங் அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.  

செவ்வாய், 1 ஜூலை, 2025

ஜூலை 1 - வெங்கையா நாயுடு பிறந்தநாள்

பாஜகவின் மூத்த தலைவரும் பாரதநாட்டின் 13ஆவது குடியரசு துணைத்தலைவருமாகிய திரு வெங்கையா நாயுடு அவர்களின் பிறந்தநாள் இன்று.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1949 ஆம் ஆண்டு பிறந்தவர் திரு நாயுடு. தனது பள்ளிப்படிப்பையும், அரசியல் அறிவியல் துறையில் பட்டபடிப்பையும் நெல்லூரில் முடித்த நாயுடு விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை நிறைவு செய்தார். சிறுவயதிலேயே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட திரு நாயுடு அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பில் ஆந்திர பல்கலைக்கழகங்களின் மாணவர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

1972ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெய் ஆந்திரா போராட்டத்திலும் அதன் பின்னர் 1974ஆம் ஆண்டு ஜெயப்ரகாஷ் நாராயணன் தலைமையில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான போராட்டங்களிலும் முன்னிலை வகித்தார். பிரதமர் இந்திரா அறிவித்த நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடி சிறை சென்றார்.

1978 மற்றும் 1983ஆம் ஆண்டுகளுக்கான சட்டமன்ற தேர்தல்களில் ஆந்திராவின் உதயகிரி தொகுதியில் இருந்து தேர்வானார். கடுமையான உழைப்பும், அற்புதமான பேச்சாற்றலும் கொண்ட திரு நாயுடு பாஜகவின் முன்னணி தலைவராக உருவாகத் தொடங்கினார்.

1998, 2004 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து பாஜக சார்பில் ராஜ்யசபைக்கு தேர்வானார். 2016ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபை உறுப்பினரானார். வாஜ்பாய் தலைமையிலான அரசின் கிராமப்புற வளர்ச்சித்துறையின் அமைச்சராகப் பணியாற்றினார். மோதி தலைமையிலான அரசின் நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி, ஏழ்மை ஒழிப்பு ஆகிய துறைகளிலும் பின்னர் பாராளுமன்ற விவகாரங்கள் துறையிலும் , செய்தி மக்கள் தொடர்பு துறையிலும் அமைச்சராகப் பணியாற்றினார்.

2003ஆம் ஆண்டு பாஜகவின் தேசிய தலைவராகப் பொறுப்பேற்ற திரு நாயுடு 2004ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பின்னர் அந்தப் பொறுப்பில் இருந்து விலகினார். பல்லாண்டுகள் பாஜகவின் மூத்த உதவி தலைவராகவும், செய்தி தொடர்பாளராகவும் அவர் பணிபுரிந்தார்.

2017ஆம் ஆண்டு பாஜக சார்பில் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதுவரை டாக்டர் ராதாகிருஷ்னன் மற்றும் முகமத் ஹமீத் அன்சாரி ஆகிய இருவரும் இரண்டு முறை குடியரசு துணைத்தலைவர் பதவியை வகித்துள்ளார். 2022ஆம் ஆண்டு நடைபெறும் குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தலில் நாயுடு அவர்களே பாஜகவின் வேட்பாளராக நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பொதுவாக குடியரசு துணைத்தலைவரையே அடுத்த தேர்தலில் குடியரசு தலைவராக முன்மொழிவது பழக்கம் என்பதால் இந்தியாவின் மிக உயரிய பதவியை திரு நாயுடு வகிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

வியாழன், 26 ஜூன், 2025

26 ஜூன் - பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிறந்தநாள்


இளம் தலைமுறை பாஜக தலைவராகவும், நீண்ட காலமாக சங்க பரிவார் அமைப்புகளில் பணிபுரிந்தவராகவும், மோதி அரசின் முக்கியமான மந்திரியாகவும் விளங்கும் தர்மேந்திர பிரதான் அவர்களின் பிறந்தநாள் இன்று.

1969ஆம் ஆண்டு ஒரிசா மாநிலத்தில் தல்சேர் நகரில் மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டு இருந்த திரு தேபேந்திர பிரதானின் மகனாகப் பிறந்தவர் இவர். இவரது தந்தையே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தைச் சேர்ந்தவர். அவர் 13ஆவது நாடாளுமன்ற தேர்தலில் வென்று வாஜ்பாய் அரசின் தரைவழி போக்குவரத்துதுறை அமைச்சராகப் பணியாற்றியவர்.

ஏறத்தாழ தனது 14ஆம் வயது முதலே ஆர்எஸ்எஸ் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தர்மேந்திர பிரதான் பரிவார் அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். அகில பாரத வித்யார்த்தி பரீக்ஷித் அமைப்பின் தேசிய செயலாளர், பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பின் தேசிய தலைவர், பாஜகவின் தேசிய செயலாளர், பின்னர் கட்சியின் பொது செயலாளர், சட்டிஸ்கர், பீகார், கர்நாடகா போன்ற மாநிலங்களின் பொறுப்பாளர் என்று இவரது அரசியல் வாழ்க்கை விரிவடைந்தது.

ஒடிசா மாநிலத்தின் 12ஆவது சட்டமன்றத்திற்கு 2000ஆவது ஆண்டில் பல்லஹடா தொகுதியில் இருந்து பிரதான் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒடிசா மாநிலத்தின் தேபகர் தொகுதியில் வெற்றி பெற்றார். பின்னர் பிஹார் மாநிலத்தில் இருந்தும் மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்தும் தலா ஒரு முறை ராஜ்யசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதிற்கு இவரது பங்களிப்பும் மிக முக்கியமான ஒன்றாகும்.

2014இல் அமைக்கப்பட்ட பாஜக அரசின் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுதுறை அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டார். அதோடு திறன் மேம்பாட்டுதுரையின் அமைச்சராகவும் பணியாற்றினார். தற்போதைய அரசின் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுதுறை மற்றும் இரும்பு மற்றும் எக்கு துறைக்கான மந்திரியாகும் பணியாற்றி வருகிறார்.
தனது முதலாவது பதவிக்காலத்தில் பிரதமர் மோதி, வசதி படைத்தவர்களை எரிவாயு உருளைகளுக்கான ( lPG Cylinder ) மானியத்தை விட்டுத் தருமாறு வேண்டினார். அப்படி மிச்சமாகும் பணத்தைக் கொண்டு வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு எந்தவிதமான முன்பணமும் இல்லாமல் எரிவாயு உருளைகள் கொடுக்கும் திட்டத்தை அவர் அறிவித்தார். துறைக்கான அமைச்சராக பிரதான் இந்த திட்டத்தை சிறப்பாக அமுல்படுத்தினார். 

கிராமப்புறத்தில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மகளீருக்கு என்று தொடங்கிய இந்த திட்டம், படிப்படியாக பட்டியல் இனத்தவர், பிறகு வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள அனைவருக்கும் என்று விரிவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி இதுவரை ஏழு கோடிக்கும் அதிகமான இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளது. ஏழை தாய்மார்களின் உடல் நலத்திற்கும் அவர்களின் நேரத்தை மிச்சம் செய்யவும் இந்த திட்டம் பேருதவியாக உள்ளது. சமையல் எரிவாயு உருளைகளுக்கான மானியத்தை நேரடியாக வங்கியில் செலுத்துவதன் மூலம் பல்வேறு போலி கணக்குகள் கண்டறியப் பட்டு, பல்லாயிரம் கோடி ரூபாய்கள் தவறாக சென்று கொண்டு இருந்ததை பிரதான் தடுத்து நிறுத்தி உள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் 13 மாவட்டங்களில் உள்ள வீடுகளும் தொழில்சாலைகளும் பயன்பெறும் வண்ணம் 6000 கோடி ரூபாய் முதலீட்டில் திரவ இயற்கை எரிவாயு முனையத்தை ( L N G Terminal ) உருவாக்கி உள்ளார்.

இளமையும் தன்முனைப்பும் கூடிய திரு பிரதான் அவர்கள் நெடுங்காலம் நாட்டுக்கு சேவை செய்யவேண்டும் என்று அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறோம்



வெள்ளி, 13 ஜூன், 2025

ஜூன் 13 - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பிறந்தநாள்

மோதி தலைமையிலான அரசின் ரயில்வே மற்றும் வர்த்தகத்துறையின் மத்திய அமைச்சரான திரு பியூஸ் கோயல் அவர்களின் பிறந்தநாள் இன்று.


வேத்பிரகாஷ் கோயல் சந்திரகாந்தா தம்பதியரின் மகனாக 1964ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் நாள் பிறந்தவர் திரு பியூஸ் கோயல் அவர்கள்.  லாகூர் நகரைச் சார்ந்த வேதபிரகாஷ் கோயல் பாரதநாட்டின் ராஜ்யசபை உறுப்பினராகவும், வாஜ்பாய் தலைமையிலான அரசில் கப்பல் போக்குவரத்து துறையின் அமைச்சராகவும் பணியாற்றியவர். அவர் பாஜகவின் தேசியப் பொருளாளராகவும் பதவி வகித்தவர். திருமதி சந்திரகாந்தா மூன்று முறை மும்பை மாதுங்கா தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பியூஸ் கோயல் பட்டயக் கணக்காளர் தேர்வில் நாட்டிலேயே இரண்டாவது இடத்திலும்,  சட்டப் படிப்பில் மும்பை பல்கலைக்கழகத்தில் இரண்டாவது இடத்திலும் தேர்ச்சி பெற்றவர். முதலீட்டுத் துறையில் மிகுந்த அனுபவம் பெற்ற பியூஸ் கோயல் தனியார் துறையில் வேலை செய்த போது, பல்வேறு நிறுவனங்களுக்கு யுத்திகள் வகுப்பதிலும், நிறுவனங்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது பற்றியும் ஆலோசகராக விளங்கினார்.

பாஜக சார்பில் 2010ஆம் ஆண்டு மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்து ராஜ்யசபைக்குத் தேர்வான பியூஸ் கோயல், பாஜகவில் தேசியப் பொருளாளர் உள்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தார்.

2014ஆம் ஆண்டு அமைந்த மோதியின் அரசின் மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மற்றும் நிலக்கரி ஆகிய துறைகளின் அமைச்சராகச் செயலாற்றினார். அதுவரை மின்சார இணைப்பே இல்லாமல் இருந்த 18,000 கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுத்தது இவரின் சாதனை. அது போல மிகக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் எல் ஈ டி விளக்குகளை குறைந்த விலையில்  விற்பனை செய்து, மின் பயன்பாட்டைக் குறைத்து, மரபு சாரா எரிசக்தி தயாரிப்பில் பெரும் முன்னேற்றத்தைக் கொண்டுவந்தது, எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல் நிலக்கரி சுரங்கத்தை குத்தகைக்கு விட்டது என்று பல்வேறு சாதனைகளை பியூஸ் கோயல் செய்தார்.

2017ஆம் ஆண்டு ரயில்வே  துறையின் அமைச்சராக கோயல் பொறுப்பேற்றுக் கொண்டார். அன்றய நிதியமைச்சர் அருண் ஜெட்லீ உடல்நிலை குன்றி இருந்த போது, தற்காலிக நிதியமைச்சர் என்ற முறையில் 2019ஆம் ஆண்டுக்கான இடைக்கால மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கோயல் தாக்கல் செய்தார்.

2019ஆம் ஆண்டு அமைந்த மோதியின் இரண்டாவது அரசின் ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக கோயல் பணியாற்றிவருகிறார். பேங்க் ஆப் பரோடா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் கோயல் பணியாற்றி உள்ளார்.

பாஜகவின் அடுத்த தலைமுறை தலைவர்களில் முக்கியமானவரான திரு பியூஸ் கோயல் அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் நாட்டுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற பிரார்தனைகளோடு அவருக்கு ஒரே இந்தியா தளம் தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.  

வியாழன், 5 ஜூன், 2025

ஜூன்- 5அரசாளும் துறவி யோகி ஆதித்யநாத் பிறந்ததினம்

நாடாளும் அரசர்கள் பற்றற்று துறவிகள் போல இருக்கவேண்டும் என்பது பாரத சித்தாந்தம். ஆனால் ஒரு துறவியே அரசாள்வது என்பது ஒரு புதிய பார்வை. அப்படி நாட்டின் மிகப்பெரும் மாநிலமான உத்திரப்பிரதேசத்தை ஆட்சி செய்யும் கோரக்பூர் மடத்தின் பீடாதிபதியான யோகி ஆத்யநாத் அவர்களின் பிறந்ததினம் இன்று.


உத்திரப்பிரதேச வனத்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த ஆனந்த்சிங் பிஷ்ட் என்பவரின் மகனாக 1972ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி பிறந்தவர் அஜய்மோகன் பிஷ்ட். ஆம் இதுதான் யோகியின் இயற்பெயர். நான்கு சகோதர்களும் மூன்று சகோதரிகளும் கொண்ட பெரிய குடும்பத்தின் இரண்டாவது மகன் யோகி. ஹேமாவதி நந்தன் பகுகுணா பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெட்ரா அஜய்மோகன் ராம்ஜன்மபூமி இயக்கத்தில் கலந்து கொண்டார். அப்போது கோரக்பூர் மடத்தின் அன்றய பீடாதிபதியாக மஹந்த் அவைத்யநாத் அவர்களின் சீடரானார். உலக வாழ்வைத் துறந்தது துறவியான அஜய்மோகனுக்கு ஆதித்யநாத் என்ற யோகபட்டம் அளிக்கப்பட்டது.

கோரக்பூர் மடத்தின் அதிபதிகள் பல்லாண்டுகளாகவே ராமஜன்ம பூமியை விடுவிக்கும் இயக்கத்தில் பெரும்பங்காற்றியவர்கள். அந்தப் பாதையை யோகி ஆதித்யனாத்தும் பின்தொடர்ந்தார். மஹந்த் அவைத்யநாத் மஹாசமாதி அடைந்த பிறகு யோகி கோரக்பூர் மடத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். கோரக்பூர் மடம் கல்வி நிலையங்கள் நடத்துவது, மருத்துவமனைகளை நடத்துவது போன்ற பல்வேறு சமூகப் பணிகளையும் செய்து வருகிறது. உத்திரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் நடைபெறும் அந்த சமூகப் பணிகளை இன்னும் யோகி விரிவுபடுத்தினார்.

தீவிரமான ஹிந்துத்துவ சிந்தனை கொண்ட கோரக்பூர் மடாதிபதிகள் திக்விஜயநாத், அவைத்யநாத் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்திருக்கிறார்கள். யோகியும் தனது 26ஆம் வயதில் கோரக்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து 1998ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஐந்து முறை தொடர்ச்சியாக அந்தத் தொகுதியின் பிரதிநிதியாக யோகி பணியாற்றினார். 16ஆவது நாடாளுமன்றத்தில் யோகி 77% கூட்டங்களில் கலந்து கொண்டு 284 கேள்விகளை எழுப்பி 56 விவாதங்களில் கலந்து கொண்டு தன் தொகுதியின் வளர்ச்சிக்காகப் பணியாற்றி உள்ளார்.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற உத்திரப்பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும் வெற்றியைப் பெற்றது. பாஜக யோகி ஆதித்யநாத்தை உத்திரப்பிரதேசத்தின் முதல்வராக நியமித்தது. பல ஆண்டுகளாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, வளர்ச்சிப் பணிகளில் பின்தங்கி இருந்த மாநிலத்தை மாற்ற யோகி பல்வேறு கடினமான முடிவுகளை எடுக்கத் தொடங்கினார். சட்ட விரோதமாக நடைபெற்று வந்த இறைச்சிக்கூடங்கள் மூடப்பட்டன. பல்வேறு சமூக விரோதிகள் இரும்புக்கரம் கொண்டு அடைக்கப்பட்டனர். பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கல்வி மட்டும்தான் தொடர்ச்சியான மாறுதலைக் கொண்டு வரும் என்பதை முழுமையாக அறிந்த யோகி, கல்வித்துறையில் பல்வேறு மாறுதல்களைக் கொண்டு வந்தார். மாநிலத்தில் உள்ள ஒருலட்சத்து அறுபதாயிரம் பள்ளிகளின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் காயகல்ப் திட்டம் அறிவிக்கப்பட்டது. சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதிகள், மின் இணைப்பு, புதிய வகுப்பறைகள், சுற்றுச்சுவர் ஆகியவற்றை உருவாகும் திட்டம் இது. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இவை முன்னெடுக்கப்பட்டது.  பல்வேறு அமைச்சர்களும் அதிகாரிகளும் எதிர்பாராத நேரங்களில் பள்ளிகளைப் பார்வையிட்டு போதுமான வசதிகள் இருக்கிறதா என்பதை கண்காணிக்கிறார்கள். இதுவரை நாற்பத்தி ஆறாயிரம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் எழுபதாயிரம் ஆசிரியர்களை நியமிக்கும் திட்டமும் உள்ளது. அதுபோல மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கும் வழிகளும் அதற்கான முன்னெடுக்களும் பெரும் அளவில் நடைபெற்று வருகிறது.

கொரோனா நோய்த்தோற்று உத்திரப்பிரதேசத்திற்கு புதிய சவால்களையும் வாய்ப்புகளையும் ஒரே நேரத்தில் அளித்துள்ளது. பாரதம் முழுவதும் பரவியுள்ள பல லட்சம் தொழிலார்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் பெரும் பணி யோகியின் முன் உள்ளது. அதே நேரத்தில் சீனாவில் இருந்து வெளியேறும் யோசனையில் உள்ள பல்வேறு நிறுவனங்களை உத்திரப்பிரதேசத்திற்கு வரவழைக்கும் வாய்ப்பையும் இந்த நோய்தோற்று யோகிக்கு தந்துள்ளது. அதற்கான முயற்சியில் யோகி முழு மூச்சாக இயங்கிக்கொண்டு உள்ளார்.

உத்திரப்பிரதேசத்தை முன்னேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள யோகி ஆதித்யநாத் வெற்றி அடையட்டும் என்ற வாழ்த்துகளை ஒரே இந்தியா தளம் தெரிவித்துக்கொள்கிறது. 

செவ்வாய், 27 மே, 2025

27 மே - பாஜக முன்னணி தலைவர் நிதின் கட்கரி பிறந்தநாள்


பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான திரு நிதின் கட்கரியின் பிறந்தநாள் இன்று. மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரைச் சார்ந்த கட்கரி, இளவயது முதலே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். பாரதீய ஜனதாவின் இளைஞர் பிரிவிலும், அகில பாரத வித்யார்த்தி பரீட்சித்திலும் பணியாற்றியவர். இவர் வணிகவியல் துறையில் முதுகலை பட்டமும் சட்டமும் பயின்றவர்.

மிகச் சிறுவயதிலேயே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டதால், தனது முப்பத்திரண்டாவது வயதிலேயே மஹாராஷ்டிரா மாநில மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989, 1990, 1996, 2002 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மஹாராஷ்டிரா மேலவை உறுப்பினராகத் தேர்வானார். மஹாராஷ்டிரா மாநில மேலவையில் எதிர்கட்சித் தலைவராகவும், பாஜகவின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றினார்.

1995ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு சாலைப்பணிகளை மேற்கொண்டார். அந்தக் காலகட்டத்தில் பல்வேறு சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டப்பட்டன. அவற்றில் முக்கியமானது மும்பை - பூனா நகரை இணைக்கும் அதிவிரைவு சாலை. உள்கட்டுமானப் பணிகளில் தனியார் பங்களிப்பை உறுதி செய்து தனியார்களையும் முதலீடு செய்யவைத்தது அவரின் செயல்பாடாக இருந்துவந்தது.

2009ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை பாஜகவின் தேசிய தலைவராகவும் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில்தான் மோதியை பிரதமர் வேட்பாளராக கட்சி அறிவித்தது. பாஜகவிற்கு அடுத்தடுத்து இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றிவாய்ப்பை இழந்த காலகட்டத்தில் கட்சியை ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் பொறுப்பு அவர்மீது சுமத்தப்பட்டது. அதனை கட்கரி திறமையாக கையாண்டார்.

2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் நாக்பூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானார். 2014ஆம் ஆண்டு உருவான மோதி தலைமையிலான பாஜக அரசின் மிக முக்கியமான துறைகளை நிர்வகித்து வந்தார். தேசிய நெடுஞ்சாலைத்துறைகளின் அமைச்சராக 2014 - 2019 பணியாற்றிய போது நாளொன்றுக்கு பதினாறு கிலோமீட்டர் அளவிற்கு சாலைகள் அமைக்கப்பட்டது.

பாஜக அரசின் சாதனைகளில் முக்கியமான ஒன்றான உள்கட்டமைப்பு வசதியை உருவாக்குவதில் கட்கரியின் பங்கு மகத்தானது. தற்போது கோதாவரி நதியை தமிழகத்திற்கு கொண்டுவரும் பிரமாண்டமான திட்டத்தின் மூலம் தமிழகத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம் என்று கட்கரி அறிவித்துள்ளார்.

மீண்டும் அமையவிருக்கும் பாஜவின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகிக்க இருக்கும் திரு கட்கரிக்கு நமது நல்வாழ்த்துகள். 

சனி, 10 மே, 2025

மே 10 - ராணுவத் தளபதி ஜெனரல் V K சிங்

பாரத ராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் தற்போதைய பாஜக மந்திரிசபையின் முக்கியமான அங்கமாகவும் விளங்கும் ஜெனரல் விஜய் குமார் சிங் அவர்களின் பிறந்தநாள் இன்று.


ஹரியானா மாநிலத்தைச் சார்ந்த ஜெனரல் வி கே சிங் பாரம்பரியமான ராணுவக் குடும்பத்தைச் சார்ந்தவர். அவர் தந்தையும், தாத்தாவும் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். ராஜஸ்தான் மாநில பிலானி நகரில் உள்ள பிர்லா பள்ளியில் படித்த வி கே சிங் பின்னர் பூனா நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு பள்ளியில் பயின்றார். 1970 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் ராஜ்புத் பிரிவில் பணியாற்றத் தொடங்கிய சிங், பாரத ராணுவக் கல்லூரியிலும் அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள ராணுவக் கல்லூரியிலும் மேல்படிப்பு படித்தார்.

படிப்படியாக ராணுவசேவையில் முன்னேறிய சிங்,  பாரத ராணுவத்தின் கிழக்கு பிரிவின் தலைவராகப் பணியாற்றினார். 2010ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் நாள் பாரத ராணுவத்தின் 24ஆவது தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இரண்டு ஆண்டுகள் அவர் இந்தப் பொறுப்பில் இருந்தார்.

ராணுவசேவையில் இருந்து ஓய்வுபெற்ற திரு சிங் ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டார். பின்னர் பாஜகவில் இணைந்து 2014ஆம் ஆண்டு காசியாபாத் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டு அமைக்கப்பட்ட பாஜகவின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறையின் இணை அமைச்சராகவும், வடகிழக்கு மாநில வளர்ச்சிக்கான அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.

அந்தக் காலகட்டத்தில் தெற்கு சூடானிலும், ஏமன் நாட்டிலும் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு நடுவில் அந்த நாடுகளில் வேலை நிமித்தம் வசித்துவந்த இந்தியர்களை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரும் சவாலான பொறுப்பை ஜெனரல் சிங் முன்னிருந்து வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். டெல்லியில் இருந்து மேற்பார்வை பார்த்துக்கொண்டு இருக்காமல், ஜெனரல் சிங் ராணுவத் தளபதி போல கொந்தளிப்பான இடங்களில் நேராகச் சென்று அங்கிருந்து மீட்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கி வழிகாட்டினார்.

2019ஆம் ஆண்டும் காசியாபாத் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெனரல் சிங், தற்போதைய மந்திரிசபையில் நெடுஞ்சாலைத்துறையின் இணை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.

ஜெனரல் வி கே சிங் அவர்களுக்கு ஒரே இந்தியா செய்தித்தளம் மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.