செவ்வாய், 21 அக்டோபர், 2025

அக்டோபர் 21 - சுர்ஜித் சிங் பர்னாலா பிறந்தநாள்

ஒரு முக்கியமான காலகட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றிய திரு சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களின் பிறந்தநாள் இன்று.



இன்றய ஹரியானா மாநிலத்தின் பேஜ்புர் கிராமத்தில் வசதியான குடும்பம் ஒன்றில் 1925ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் பிறந்தவர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்கள். இவர் தந்தை நீதிபதியாக பணியாற்றி வந்தார். தந்தையின் அடியொற்றி பர்னாலாவும் 1946ஆம் ஆண்டு லக்னோ பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் தேறி வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டார். வழக்கறிஞராகப் பணியாற்றும் போதே அரசியலில் ஈடுபட்ட திரு பர்னாலா, அகாலிதள் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக வெகு விரைவில் உருவானார்.

முதன்முதலாக 1969ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் கல்வி அமைச்சராக பர்னாலா நியமிக்கப்பட்டார். 1977ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்த காங்கிரஸ் அல்லாத அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக பர்னாலா பணியாற்றினார். அப்போதுதான் கங்கை நதி நீரை பங்களாதேஷ் நாட்டோடு பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

மொரார்ஜி தேசாய் அரசு கவிழ்ந்த சமயத்தில், அன்றய ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி பர்னாலா தலைமையில் ஒரு அரசை அமைப்பது பற்றி ஆலோசித்தார் என்று கூறப்படுவது உண்டு.

பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடிய காலகட்டத்தில், தன் பாதுகாவலர்களாலேயே அன்றய பிரதமர் இந்திரா படுகொலை செய்யப்பட்ட பிறகு 1985ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரை பர்னாலா பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தார். அவரது பதவிக்காலத்திற்கு முன்னும் பின்னும் அந்த மாநிலம் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் இருந்தது என்பதே அன்றய பஞ்சாப் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை காட்டும் அளவுகோலாகும்.

அதனைத் தொடர்ந்து 1990ஆம் ஆண்டு தமிழகத்தின் ஆளுநராக பர்னாலா நியமிக்கப்பட்டார். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அன்றய திமுக அரசு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கலைக்கப்பட்டது. அதற்கான அறிக்கையை அளிக்க பர்னாலா மறுத்துவிட்டார். பிஹார் மாநில ஆளுநராக அவர் மாற்றப்பட்டார். ஆனால் அதனை ஏற்க மறுத்து பர்னாலா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

1990ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக பணியாற்றினார். 1998ஆம் ஆண்டு அமைந்த வாஜ்பாய் ஆட்சியில் ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சராக பர்னாலா நியமிக்கப்பட்டார். 

அதன்பிறகு உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் ஆளுநராகவும், அதனைத் தொடர்ந்து ஆந்திர பிரதேசத்தின் ஆளுநராகவும், இரண்டு முறை தமிழகத்தின் ஆளுநராகவும் பர்னாலா பணியாற்றினார்.

தனது நீண்ட அரசியல் வாழ்வில் ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பர்னாலா சிறையில் இருந்தார். திரு பர்னாலா ஒரு சிறந்த ஓவியரும் கூட, பல்வேறு இயற்கை காட்சிகளை அவர் ஓவியமாகத் தீட்டி உள்ளார்.

நீண்ட அரசியல் வாழ்வுக்கு சொந்தக்காரராக விளங்கிய திரு பர்னாலா தனது 91ஆம் வயதில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் நாள் சண்டிகரில் காலமானார். 

திங்கள், 20 அக்டோபர், 2025

அக்டோபர் 20 - எழுத்தாளர் தொ மு சிதம்பர ரகுநாதன் பிறந்தநாள்

தமிழ்ச் சிறுகதை வரலாற்றை எழுதுகிறவர்களானாலும் சரி, தமிழின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைத் தொகுத்துப் போடுகிறவர்களானாலும் சரி, இணையத்தில் சிறுகதைகளைப் பதிவேற்றம் செய்யும் இணையதளக்காரர்களானாலும் சரி, ஞாபகமாகத் தவிர்த்துவிடும் ஒரு பெயர் தொ.மு.சி. ரகுநாதன். சாகித்ய அகாடெமி விருது பெற்ற அந்தப் படைப்பாளியின் பிறந்தநாள் இன்று. 



இவருடைய தாத்தா சிதம்பரத் தொண்டைமான், புகழ்பெற்ற ஒரு தமிழறிஞர். `ஸ்ரீரெங்கநாதர் அம்மானை', `நெல்லைப்பள்ளு' போன்ற நூல்களை எழுதியவர். ரகுநாதனின் அப்பா தொண்டைமான் முத்தையா, சிறந்த ஓவியர்; புகைப்படக் கலைஞர். அவருக்கும் அவருடைய இரண்டாவது மனைவி முத்தம்மாளுக்கும் இரண்டாவது மகனாக 1923 அக்டோபர் 20 அன்று  பிறந்தவர் ரகுநாதன். அவருக்கு ஓர் அண்ணன், மூன்று தமக்கையர், ஒரு தங்கை.

இந்திய ஆட்சிப்பணியில் இருந்த எழுத்தாளர் பாஸ்கர தொண்டைமான் இவரின் உடன்பிறந்த சகோதரர். சாகித்ய அகாடமி விருது பெற்ற பேராசிரியர் அ சீனிவாச ராகவன் தொ மு சியின் ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும் அமைந்தார். தொமுசியின் முதல் சிறுகதை பிரசன்ன விகடன் என்ற பத்திரிகையில் வெளியானது. சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு தொமுசி சிறைத்தண்டனை அனுபவித்தார். பின்னர் தினமணி மற்றும் முல்லை என்ற இலக்கிய பத்திரிகைகளிலும் பணியாற்றினார். 

பத்திரிகைத் துறையில் சலிப்பேற்பட்டு சென்னையிலிருந்து மீண்டும் நெல்லைக்குத் திரும்பி, 1954-ல் `சாந்தி' என்ற இலக்கிய இதழை அவரே தொடங்குகிறார்.இரண்டு ஆண்டுகள் இலக்கியத்தில் சமரசமின்றி தரமான படைப்புகளுடன் அந்த இதழ் வெளிவருகிறது. தமிழ் ஒளி, ரகுநாதன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன் உள்ளிட்ட பலரும் தங்கள் படைப்புகளை அதில் வெளியிட்டனர். பொருளாதாரக் காரணங்களால் மட்டுமே அந்த இதழ் நின்றுபோனது.

1939-ம் ஆண்டிலிருந்தே சிறுகதைகள் எழுதத் தொடங்கிய ரகுநாதனின் கதைகள், 1949-ம் ஆண்டில் தொகுப்பாக வெளியானது. அந்தத் தொகுப்பில் இருந்த `நீயும் நானும்' என்ற கதை, வாத பிரதிவாதங்களை இலக்கிய உலகில் உருவாக்கிப் பரபரப்பாகப் பேசியது. படைப்புலகில் இப்படி நுழையும்போதே பரபரப்பாகவும் அதிர்வெடிகளுடனும் நுழைந்தவரான ரகுநாதன், சாகும்பரியந்தம் வலுக்குறையாமல் அப்படியே இயங்கினார் என்பது வியப்பான செய்தி. நீயும் நானும் (1949), ஷணப்பித்தம் (1952), சேற்றிலே மலர்ந்த செந்தாமரை (1955), ரகுநாதன் கதைகள் (1957) ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளில் அவருடைய சிறுகதைகள் வந்தன. ஆனால், சோகம் என்னவெனில் அவர் தொடர்ந்து சிறுகதைகள் எழுதாமல் நிறுத்திக்கொண்டார். 1957-க்குப் பிறகு அவர் சிறுகதைகள் எழுதவில்லை. ஆய்வுகளின் மீது கவனம் செலுத்தி அந்தத் துறையில் சாதனைகள் படைத்தார்.

அவரது `பாரதி:காலமும் கருத்தும்' நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. இளங்கோவடிகள் யார் என்னும் ஆய்வு நூல், அதுகாறும் சேரன் செங்குட்டுவனின் தம்பிதான் இளங்கோவடிகள் என திராவிட இயக்கத்தார் கட்டியெழுப்பியிருந்த கற்பிதங்களை உடைத்து நொறுக்கி `இளங்கோ, மன்னர் வம்சத்தைச்  சேர்ந்தவரே அல்ல. அவர் ஒரு தனவணிகச் செட்டியார்' என்ற ஆதாரங்களுடன் நிறுவினார். 

1951-ம் ஆண்டில் ரகுநாதன் எழுதிய `பஞ்சும் பசியும்' நாவல்தான் அயல்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவல். செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட அந்த நாவல் 50 ஆயிரம் பிரதிகள் விற்பனையானது. மாக்ஸிம் கார்க்கியின் படைப்பான தாய் என்ற புகழ்பெற்ற புதினத்தை தமிழில் இவர் மொழிபெயர்த்தார். 

தன் இறுதிக்காலத்தை அவர் திருநெல்வேலியிலும் பாளையங்கோட்டையிலும் கழித்தார். 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் நாள் ரகுநாதன் காலமானார். 

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

அக்டோபர் 19 - நாமக்கல் கவிஞர் பிறந்தநாள்

தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு.
தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா 

இன்று திராவிட இயக்கத்தினராலும், தமிழ்த்தேசியவாதிகளாலும் அடிக்கடி கூறப்படும் இந்த சொற்தொடர்கள் ஒரு தேசியவாதியால் எழுதப்பட்டவை என்பது பலருக்கு தெரியாமலேயே இருக்கலாம். 



தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர், தேசியப் போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டவர், மஹாகவி பாரதியால் பாராட்டப்பட்டவர், மூதறிஞர் ராஜாஜியின் தோழர், சிறந்த ஓவியர், உப்பு சத்யாகிரஹப் போரில் "கத்தி இன்றி ரத்தம் இன்றி யுத்தம் ஓன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்" என்ற வழிநடைப் பாடலை எழுதியவர் என்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரர் நாமக்கல் கவிஞர் என்னும் ராமலிங்கம் பிள்ளை அவர்கள். 

1888ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் நாள் காவல்துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த வெங்கடராம பிள்ளை - அம்மணி அம்மாள் தம்பதியினரின் எட்டாவது மகனாகப் பிறந்தவர் ராமலிங்கம் பிள்ளை. ஏழு பெண் குழந்தைகளுக்குப் பிறகு ராமேஸ்வரத்தில் பிரார்தனை செய்து அதன் பலனாகப் பிறந்ததால் இவருக்கு ராமலிங்கம் என்று பெயரிட்டார்கள். சிறுவயதிலேயே இதிகாச புராணங்களை சொல்லி இவர் தாயார் வளர்த்தார். 

தொடக்கக்கல்வியை நாமக்கல்லிலும், பின்னர் கோவையிலும், கல்லூரிப் படிப்பை திருச்சியிலும் பயின்றார். 1909ஆம் ஆண்டு தனது அத்தை மகளை மணந்து கொண்டார். இயற்கையிலேயே ஓவியம் வரையும் திறமை இவருக்கு இருந்தது. இவர் வரைந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியத்தை பார்த்து மகிழ்ந்த மன்னரின் குடும்பம் இவருக்கு தங்கப்பதக்கம் ஒன்றை பரிசளித்து பாராட்டியது. 

1924ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் எஸ்.சீனிவாச ஐயங்கார் அறிவித்த ஒரு போட்டியில் தேசபக்திப் பாடல்களை எழுதித் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார். அதுமுதல் இவர் பல கவிதைகளைப் புனைந்து தள்ளினார். குடத்திற்குள் இட்ட விளக்காக விளங்கிய இவரது கவிதைத்திறன் 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்துக்காக எழுதிய “கத்தியின்றி” பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். இவரது பாடல்களை சங்கு கணேசன் தனது “சுதந்திரச் சங்கு” பத்திரிகையில் வெளியிட்டு வந்தார்.

காரைக்குடிக்கு பாரதியார் வந்திருப்பதாக அறிந்த நாமக்கல் கவிஞருக்கு பாரதியாரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. ஓவியம் வரைவதிலும் கெட்டிக்காரர் என்று பாரதியாருக்கு நாமக்கல் கவிஞரை அறிமுகப்படுத்தினர். கவிதையும் எழுதுவார் என்று குறிப்பிட்டனர். கவிதை ஒன்று சொல்லுமாறு பாரதியார் கேட்டார். எஸ்.ஜி.கிட்டப்பா நாடகத்துக்காக தாம் எழுதிக் கொடுத்த ‘தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்’ என்ற பாடலைப் பாடத் தொடங்கினார். பாடல் முழுவதையும் கேட்ட பாரதியார், ‘பலே பாண்டியா! பிள்ளை, நீர் ஒரு புலவன் என்பதில் ஐயமில்லை. தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்... பலே, பலே இந்த ஓர் அடியே போதும்’ என்று பாராட்டித் தட்டிக் கொடுத்தார்.

1932ஆம் ஆண்டில் நடைபெற்ற சத்தியாகிரகத்தில் கலந்துகொண்ட நாமக்கல் கவிஞர், ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.1937ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் போட்டியிட்டனர். கவிஞர் சேலம் நகராட்சி உறுப்பினராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து கவிஞரின் காங்கிரஸ் பணி தீவிரமானது.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு 1949இல் ஆகஸ்ட் 15 சுதந்திரத் திருநாளில் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் பவநகர் மகாராஜா தலைமையில் இவருக்கு ‘அரசவைக் கவிஞர்’ எனும் பதவி வழங்கப்பட்டது. 1956 ஆண்டிலும் பின்னர் 1962ஆம் ஆண்டிலும் தமிழக சட்ட மேலவை உறுப்பினராக இவர் செயல்பட்டார். 1971இல் இவருக்கு ‘பத்மபூஷன்’ விருது வழங்கப்பட்டது.

இவர் எழுதிய “மலைக்கள்ளன்” எனும் நெடுங்கதை கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோவினரால் திரைப்படமாக்கப் பட்டது. எம்.ஜி.ரமச்சந்திரன் பானுமதி நடித்த இந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற்ற ஒன்றாகும்.

சூரியன் வருவது யாராலே ?
சந்திரன் திரிவதும் எவராலே ?
காரிருள் வானில் மின்மினிபோல்
கண்ணிற் படுவன அவைஎன்ன ?
பேரிடி மின்னல் எதனாலே ?
பெருமழை பெய்வதும் எவராலே ?
யாரிதற் கெல்லாம் அதிகாரி ?
அதைநாம் எண்ணிட வேண்டாவோ ?

அல்லா வென்பார் சிலபேர்கள் ;
அரன் அரி யென்பார் சிலபேர்கள் ;
வல்லான் அவன்பர மண்டலத்தில்
வாழும் தந்தை யென்பார்கள் ;
சொல்லால் விளங்கா ‘ நிர்வாணம்’
என்றும் சிலபேர் சொல்வார்கள் ;
எல்லாமிப்படிப் பலபேசும்
ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !

அந்தப் பொருளை நாம்நினைத்தே
அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.
எந்தப் படியாய் எவர்அதனை
எப்படித் தொழுதால் நமக்கென்ன ?
நிந்தை பிறரைப் பேசாமல்
நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப் போம்அதை வணங்கிடுவோம் ;
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்

எதைக் கேட்டாலும் இல்லையில்லை என்றும் சொல்லும் கண்மூடித்தனமான நாத்திகத்தையே பகுத்தறிவு என நினைக்கும் பலரின் மத்தியில் உண்மையான பகுத்தறிவு என்ன என்பதை விளக்கிட இதைவிடத் தெளிவான வெளிப்பாடு ஒன்று இருக்குமா எனத் தெரியவில்லை. பகுத்தறிவு மட்டுமல்லாமல், எல்லா மதங்களும் கூறும் உயர்வான பரம்பொருள் ஒன்றே என்பதையும் தெள்ளத்தெளிவாக விளக்கும் கவிதை இதுவே.

இவர் 1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு 2 மணி அளவில்  மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தமிழ் கவிதைகளை ரசிப்பவர்கள் உள்ளமட்டும் நாமக்கல் கவிஞரும் உயிரோடுதான் இருப்பார்.

செவ்வாய், 14 அக்டோபர், 2025

அக்டோபர் 14 - பரமவீர் சக்ரா விருது பெற்ற அருண் கேத்ரபால் பிறந்தநாள்



2001ஆம் ஆண்டு எண்பது வயதான பாரத ராணுவ தளபதி  பிரிகேடியர் எம் எல் கேத்ரபால் பாகிஸ்தானில் உள்ள தனது பூர்விக இருப்பிடத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் சர்கோதா நகருக்கு பயணித்தார். அவரை பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய பிரிகேடியர்மொஹம்மத் நாசர் என்ற ராணுவ தளபதி லாகூர் விமானநிலையத்தில் நேரில் வரவேற்று தனது வீட்டில் தங்க வைத்தார். அங்கிருந்து சர்கோதா நகருக்கு அவரை அனுப்பி வைத்து அவர் வாழ்ந்த இடங்களை பார்க்க நாசர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்தார். மீண்டும் லாகூர் வந்த கேத்ரபால், மீண்டும் மொஹம்மத் நாசரின் வீட்டில் தாங்கினார். விருந்தோம்புதலிலோ அல்லது மரியாதையிலோ எந்த குறையும் இல்லாமல் இருந்தாலும், எதோ ஓன்று கேதர்பாலை நெருடிக்கொண்டே இருந்தது.

பிரிகேடியர் கேத்ரபால் பாரதம் திரும்பும் நாளுக்கு முந்தய இரவில், தனது பலத்தை எல்லாம் திரட்டிக் கொண்டு தளபதி நாசர் பேசத் தொடங்கினார் "ஐயா, பல நாட்களாக நான் உங்களிடம் ஓன்று சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன், ஆனால் உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்பது எனக்குத் தெரியாமலே இருந்தது. ஆனால் விதி உங்களை எனது மரியாதைக்குரிய விருந்தாளியாக அனுப்பி வைத்துள்ளது. இன்று நாம் ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகி உள்ளோம், அது என்னை இன்னும் கடினமான நிலையில் வைத்து விட்டது. பாரத நாட்டின் இணையற்ற கதாநாயகனான உங்கள் மகனைப் பற்றித்தான் நான் பேசவேண்டும். கொடுமையான அந்த நாளில் நானும் உங்கள் மகனும் வெறும் போர்வீரர்கள் மட்டும்தான், அவரவர் நாடுகளின் மரியாதையையும், எல்லைகளையும் காக்க வேண்டி நாங்கள் எதிரெதிரே நிற்கவேண்டி இருந்தது. அன்று அருணின் வீரம் என்பது இணையில்லாமல் இருந்தது. தனது பாதுகாப்பைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் ,பயம் என்பதே இல்லாமல், பீரங்கிகளை அனாயசமாக ஓட்டி வீரசாகசம் புரிந்தார் உங்கள் மகன். இருபுறமும் பலத்த சேதம். முடிவில் நாங்கள் இருவர் மட்டுமே மிஞ்சினோம். எங்களில் ஒருவர்தான் உயிரோடு இருக்க முடியும் என்பது விதியின் எண்ணமாக இருந்தது. ஆமாம், உங்கள் மகன் என் கையால்தான் மரணித்தார். போர் முடிந்த பிறகுதான் அருண் எவ்வளவு இளையவர் என்பது எனக்குத் தெரிய வந்தது. காலமெல்லாம் உங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றுதான் நான் நினைத்துக்கொண்டு இருந்தேன், ஆனால் இப்போது இதனைக் கூறும்போதுதான் நான் மன்னிப்பு கேட்க விரும்பவில்லை, ஆனால் அந்த வீரனை வணங்குகிறேன் என்பதும் அதோடு அந்த வீரனை வளர்த்து வார்த்தெடுத்த உங்களையும் வணங்குகிறேன் என்பதும் புலனாகிறது" என்றார்.

1971ஆம் ஆண்டு பாரத பாகிஸ்தான் போரில் இணையற்ற வீரத்தைக் காட்டி, உச்சகட்ட தியாகமாக தனது உயிரை அளித்த வீரன் அருண்
கேத்ரபாலின் பிறந்ததினம் இன்று. பாரம்பரியமாக ராணுவ சேவையில் இருந்த பரம்பரையைச் சார்ந்தவர் அருண். அவரது தகப்பனாரின் தாத்தா ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற சீக்கியப்படையில் பணியாற்றியவர். தாத்தா முதல் உலகப் போரில் கலந்து கொண்டவர், தந்தை எம் எல் கேத்ரபால் ராணுவத்தில் பொறியாளர் பிரிவில் இருந்தவர். எனவே அருணுக்கு ராணுவ சேவைதான் குறிக்கோளாக இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

1950ஆம் அக்டோபர் மாதம் 14ஆம் நாள் எம் எல் கேத்ரபால் - மஹேஸ்வரி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தவர் அருண். ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் படித்த அருண்,  நேஷனல் டிபென்ஸ் அக்கதெமியில் பயின்று இந்திய ராணுவத்தில் 1971ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் நாள் 17ஆவது பூனா குதிரைப் படையில் சேர்ந்தார்.

அருண் ராணுவத்தில் இணைந்த ஆறே மாதத்தில் கிழக்கு வங்க மக்களுக்கு துணையாக பாரத ராணுவம் போரில் இறங்க நேரிட்டது. வானிலும், மண்ணிலும் கடலிலும் போர் முழுவீச்சில் தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள சிலாகோட் பகுதியில் பசந்தர் நதியில் பாலம் அமைத்து அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருமாறு பூனா குதிரைப்படைக்கு உத்திரவு பிறப்பிக்கப் பட்டது ராணுவத்தில் உள்ள பொறியாளர் பிரிவு தாற்காலிகப் பாலத்தை அமைத்துக் கொண்டு இருந்த போது, பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் தொடங்கியது. ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த அந்த கேத்திரத்தை கைப்பற்றுவது யாரோ அவருக்குத்தான் வெற்றி வாய்ப்பு என்பதால் இரு நாடுகளின் படைகளும் முழுமூச்சில் போரில் ஈடுபட்டன.

களத்தில் முன்னேறிச் சென்ற பூனா குதிரைப்படை பிரிவு எதிரிகளின் பீரங்கிகளை வேட்டையாடத் தொடங்கியது. இந்தப் போரில் லெப்டினென்ட் அக்கலாவாட் வீரமரணம் அடைந்தார். இந்திய படையில் மூன்று பீரங்கி வண்டிகள் மட்டுமே இருந்தன. அருணின் தலைமையில் நமது வீரர்கள் பாகிஸ்தானின் பத்து பீரங்கிகளை அழித்தனர். அருண் மட்டுமே ஐந்து பீரங்கிகளை அழித்தார்.

அருணின் பீரங்கி வண்டி எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி எரியத் தொடங்கியது. ஆனாலும் களத்தை விட்டு அகலாது அருண் தாக்குதலைத் தொடர்ந்தார். பாகிஸ்தான் படையில் ஒரே ஒரு பீரங்கியும் இந்தியப் படையில் அருணின் பீரங்கியும் மட்டும்தான் மிஞ்சியது. கடைசி பீரங்கியை அழிப்பதற்கு முன்னர் நெஞ்சில் குண்டு பாய்ந்து அருண் வீரமரணம் எய்தினார். அப்போது அவருக்கு இருபத்தி ஒரு வயதுதான் ஆகி இருந்தது. ஏழு ராணுவ அதிகாரிகள், நான்கு இளநிலை அதிகாரிகள், இருபத்தி நான்கு ராணுவ வீரர்களை இழந்து பாரதம் இந்த வெற்றியைப் பெற்றது.

பாரத நாட்டின் மிக உயரிய விருதான பரமவீர் சக்ரா விருது அருண் கேத்ரபாலுக்கு அளிக்கப்பட்டது. மிக இளைய வயதில் இந்த விருதைப் பெற்ற சிறப்பும் அருண் அவர்களுக்கே உள்ளது.

நேஷனல் டிபென்ஸ் அக்காதெமியின் அணிவகுப்பு மைதானம், அரங்கம் மற்றும் முகப்பு வாயில் ஆகியவற்றுக்கு அருண் கேத்ரபாலின் பெயரை சூட்டி நாடு அந்த வீரருக்கு மரியாதை செலுத்தி உள்ளது.

நாட்டைக் காக்க பலிதானியாக மாறிய வீரர்களின் தியாகத்தை நாம் என்றும் நெஞ்சில் நிறுத்துவோம். 

திங்கள், 13 அக்டோபர், 2025

அக்டோபர் 13 - சகோதரி நிவேதிதா மஹா சமாதி நாள்

பாரதிய மெய்யியல் ஞானத்தை நம்மவர்கள் புரிந்துகொள்வதற்கு முன்பே மேலைநாட்டவர்கள் கண்டுகொள்கிறார்கள். அப்படி கண்டுகொண்டு பாரத நாட்டுக்கும், பாரத பண்பாட்டிற்கும் தன்னலமற்ற சேவை புரிந்த சீமாட்டி, ஸ்வாமி விவேகானந்தரின் ஆன்மீக வாரிசு, மஹாகவி பாரதியின் குரு சகோதரி நிவேதிதையின் மஹாசமாதி தினம் இன்று. 



பாரத நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்தது போலவே, அயர்லாந்து நாட்டையும் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆளுமைக்குள் வைத்திருந்தார்கள். தங்கள் நாட்டை அடிமைப்பிடியில் இருந்து மீட்கப் போராடிய போராளிகளின் பரம்பரையில் பிறந்தவர் மார்கரெட் எலிசபெத் நோபிள். மத போதகராகப் பணியாற்றி வந்த சாமுவேல் ரிச்மன்ட் நோபிள் - மேரி இசபெல் ஹாமில்டன் தம்பதியினரின் மகளாக 1867ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் நாள் பிறந்தவர் மார்கெரெட் எலிசபெத் நோபிள். 

தனது கல்லூரிப் படிப்பை முடித்தபின் மார்கெரெட் நோபிள் ஆசிரியராகப் பணியாற்றிவந்தார். சிறுவயதில் இருந்தே ஏசு கிருஸ்து மீது உளமார்ந்த ஈடுபாடு கொண்டவராகவே நோபிள் விளங்கினார். மதம் என்பது கோட்பாடுகளை நம்புவதில் இல்லை, மெய்ஞானப் பொருளைக் கண்டடைவது என்ற தெளிவில் இருந்த அவரின் தேடல்களுக்கு கிருஸ்துவத்தில் பதில் கிடைக்கவில்லை. அதனால் புத்தரின் போதனைகளை கற்கத் தொடங்கினார். புத்தரின் வாழ்க்கையால் கவரப்பட்டாலும், அவரது ஆழமான கேள்விகளுக்கு பௌத்த சித்தாந்தத்திலும் அவரால் விடை காண முடியவில்லை. 

1895ஆம் ஆண்டு தோழி ஒருவரின் வீட்டில் ஸ்வாமி விவேகானந்தரின் சொற்பொழிவை கேட்க நோபிள் சென்றார். முதலில் அந்தப் பேச்சில் எந்த புதிய கருத்துக்களும் இல்லை என்றுதான் அவர் நினைத்தார். ஸ்வாமியின் கருத்துக்களோடு பல்வேறு இடங்களில் முரண்பட்ட நோபிள் ஸ்வாமியோடு தொடர்ச்சியான விவாதங்களில் ஈடுபடத் தொடங்கினார். மாணவர் தயாராக இருக்கும்போது, ஆசிரியர் தோன்றுவார் என்ற கருத்துக்கு ஏற்ப, நோபிளின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் ஸ்வாமி விவேகானந்தர் விளக்கங்களை அளித்தார். 

பாரத நாட்டின் பெண்களுக்கு சரியான கல்வியை மார்கரெட் நோபிளால் வடிவமைத்து அளிக்க முடியும் என்று எண்ணிய ஸ்வாமி விவேகானந்தர், அவரை பாரத நாட்டிற்கு வருமாறு அழைத்தார். அதனை ஏற்று நோபிள் பாரதம் வந்தார். 1898ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாரதம் வந்த எலிசபெத் நோபிளுக்கு அதே ஆண்டு மார்ச் மாதம் சன்யாசம் அளித்து அவருக்கு நிவேதிதை என்ற பெயரையும் விவேகானந்தர் சூட்டினார். 

1898 -ம் ஆண்டு. கல்கத்தாவின் ஸ்டார் தியேட்டர் அரங்கம்.ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த அந்த சபையில்தான் சுவாமி விவேகானந்தர் அந்தப் பெண்மணியை அறிமுகப்படுத்தினார்...

``இந்தியாவுக்கு இங்கிலாந்து பல நன்கொடைகளை வழங்கி உள்ளது. அவற்றுள் மிகவும் மதிப்புடையதாக சகோதரி நிவேதிதையைக் குறிப்பிடலாம். இந்தியப் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பணியாற்ற இங்கே வந்திருக்கிறார். இந்தியாவைத் தன் தாய்நாடாக அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். எனவே, அவரை நம்முடைய உற்றார் உறவினர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்வது நம் கடமை.''

அந்த அரங்கத்திலோ, பெண்மணிகளின் பிரதிநிதியாக ஒருவர்கூட இல்லை. அதைக் கண்டதுமே நிவேதிதைக்கு நம் தேசத்துப் பெண்களின் நிலை புரிந்துவிட்டது. அதேநேரம், `இங்கிலாந்தில் இருந்து வந்திருக்கும் இவர் எங்கே நம் தேசத்தைப் புரிந்துகொண்டு சேவை செய்யப்போகிறார்... ஒருவேளை தன் மத பிரசாரத்துக்காக வந்திருக்கிறாரோ’ என்றெல்லாம் அரங்கில் இருந்தவர்கள் சந்தேகப்பட்டதை அவர்களுடைய முகபாவனையில் இருந்தே நிவேதிதை  தெரிந்துகொண்டார்.

மெல்லிய புன்னகையோடு அந்த அரங்கத்தில் பேச ஆரம்பித்தார் நிவேதிதை. அந்தப் பேச்சு அவர்களின் ஐயத்தைப் போக்கியது; அவரிடத்தில் நம்பிக்கையையும் மதிப்பையும் ஏற்படுத்தியது.

``உங்களுடைய கலாசாரமும் பண்பாடும் மிகத் தொன்மையானது. கடந்த ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் அதைக் கட்டிக் காப்பாற்றி வருகிறீர்கள். சுவாமிஜி இங்கிலாந்துக்கு வருவதற்கு முன்பு, எங்கள் மக்கள் இந்தியாவைப் பற்றி மிகத் தவறான எண்ணம் கொண்டிருந்தார்கள். மதப் பிரசாரகர்கள் புகட்டியதை எல்லாம் அவர்கள் நம்பினார்கள். பலர், இந்தியாவைப் பற்றி விபரீத கட்டுக்கதைகளை எல்லாம் பரப்புகின்றனர். ஆனால், இந்தியாவின் சிறப்புகளைப் பற்றிப் பேசுவதற்கு ஒருவருமே இல்லை.

ஐரோப்பா கண்டம் இன்று செல்வத்தில் திளைத்துக்கிடக்கிறது. வெற்று மோகத்தில் மூழ்கிக்கிடக்கிறது. ஆனால், எளிய வாழ்க்கையிலும் உயர்ந்த எண்ணங்களிலுமே நிலையான இன்பம் நிறைந்திருக்கும் என்பதை இந்தியாவிடம் இருந்து ஐரோப்பா அறிந்துகொள்ளும் காலம் விரைவிலேயே வரும். அதற்கு முன்னோட்டமாக அமைந்துவிட்டது சுவாமிஜியின் ஐரோப்பிய விஜயம்.''அரங்கத்தில் ஒலித்த கரவொலி,  நிவேதிதையை நம் தேசத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டதை நிரூபித்தது.

நிவேதிதை, முதலில் கல்கத்தாவில் ஒரு வீட்டில் பெண்களுக்கான பள்ளியைத் திறந்தார். ஒரு தாய் கற்றால், அந்தக் குடும்பமே பயனடை யும் என்ற எண்ணத்தில்  தாய்மார்களுக்கு கல்வி வழங்கினார். சித்திரம் வரைதல், மண் பொம்மைகள் செய்தல் போன்ற நுண்கலைகளையும் கற்றுக் கொடுத்தார். தான் எழுதிய புத்தகங்களில் இருந்து கிடைக்கும் ராயல்டி தொகையையும், தன்னுடைய இங்கிலாந்து நண்பர்கள் கொடுத்த நன்கொடைகளையும் இந்தியப் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்தினார்.

கல்விப்பணி மட்டுமல்லாது, மருத்துவ சேவைகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். ஒருமுறை கல்கத்தாவில் பிளேக் நோய் தாக்கியபோது, குடிசைப் பகுதிகளுக்கெல்லாம் சென்று அங்கிருந்த மக்களோடு மக்களாக நின்று  உதவிகள் செய்தார்.

1899-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்றார். அங்கு தனது பள்ளிக்கான நிதியைத் திரட்டினார். மேலும் இந்தியாவைப் பற்றி மேலைநாட்டினர் கொண்டிருந்த பல தவறான நம்பிக்கைகளை மறுத்து, இந்தியாவின் பெருமைகளை விளக்கிப் பேசினார்.. லண்டன் பத்திரிகைகள், சகோதரி நிவேதிதாவை 'இந்தியாவின் போராட்ட வீராங்கனை' என்று போற்றிப் புகழ்ந்தது.

தனது வெளிநாட்டுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த நிவேதிதா 1901-ம் ஆண்டு மீண்டும் இந்தியாவுக்கு வந்தார். சமூகப் பணிகளோடு தனது ஆன்மிகம் குறித்தத் தேடலையும் தொடங்கினார். கல்விப்பணி, சமூக சேவை என்று அயராது பாடுபட்ட சகோதரி நிவேதிதாவுக்கு 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் பெரும் சோகத்தைத் தந்தது. அவருடைய குருவான சுவாமி விவேகானந்தரின் மறைவு. குருவை இழந்த நிவேதிதா சோர்ந்து விடாமல், அவரது பணிகளை இன்னும் வேகமாகச் செய்யத் தொடங்கினார். சுவாமி விவேகானந்தர் தனக்கு எழுதிப் பரிசளித்த 'நல்வாழ்த்து' என்ற கவிதையை ஒரு பொக்கிஷமாகவே கருதி பாதுகாத்தார்.  

"தாயின் இதயமும் தலைவனின் உள்ளமும்  

ஆய தென்றலின் அற்புத இனிமையும் 

ஆரிய பீடத் தழகொளி விரிக்கும் 

சீரிய எழிலும் திகழும் வலிமையும் 

கனவிலும் முன்னோர் கண்டிரா வகையில் 

உனதென ஆகி ஓங்குக மென்மேல்! 

எதிர்காலத்தில் இந்திய மகனின் 

சீர்சால் தலைவியாச் செவிலியாய்த் தோழியாய் 

நேரும் ஒருமையில் நீயே ஆகுக!" 


நிவேதிதாவின் எழுத்தும் சிந்தனையும் எப்போதும் இந்திய விடுதலை குறித்தும், மக்களின் விழிப்புஉணர்வு குறித்தும் இருந்தது. இது இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது. பெண் கல்விக்கு பெரிதும் பாடுபட்ட நிவேதிதா, பழைமையான கல்வி முறையை மாற்றி, நவீன முறையில் கல்வி அமைப்பு உருவாகப் போராடினார். `இயற்கையோடு இணைந்து குழந்தைகள் பாடம் கற்க வேண்டும்’ என்று குரல் எழுப்பினார். இந்தியாவின் பாரம்பரியம், புராணங்கள், நம்பிக்கைகள் குறித்து அறிந்துகொண்ட பின் அவற்றின் பின்னணியில் இருந்த நல்ல கருத்துகளை மேலைநாட்டினர் புரிந்துகொள்ளும் வகையில் எழுதினார். நிவேதிதாவின் பேச்சும் எழுத்துகளும்தான் அந்த நாளில் இந்தியாவைப் பற்றி அமெரிக்கர்களுக்கு நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கின. நிவேதிதா காலத்தில்தான் வங்காளம் கற்றறிந்த மேதைகளின் இடமாக மாறத் தொடங்கியது.

இந்தியக் கலைகளை பெரிதும் போற்றி, அவை வளரத் தூண்டுகோலாக இருந்தார். குறிப்பாக இந்திய ஓவியங்களை புனரமைக்க பாடுபட்டார். 1907-ம் ஆண்டு கொல்கத்தாவில் காங்கிரஸ் தலைவர் ஆனந்தமோகன் போஸின் வீட்டில்தான் முதன்முதலாக மகாகவி பாரதியார் சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தார். முதல் சந்திப்பே அவரைப் பெரிதும் பாதிப்படையச் செய்தது. அப்போதுதான் பாரதியார் தனது பாடல்கள் யாவும் இனி தேச விடுதலைக்காகவே அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்தார்.

பாரதியாரின் பாடல்களைப் பாராட்டிய சகோதரி நிவேதிதா அவரிடம் 'எங்கே உங்கள் மனைவி?' என்று கேட்டார். அவர் 'எங்கள் வழக்கப்படி பெண்களை வெளியே அழைத்து வருவதில்லை' என்று கூறினார். இதைக் கேட்டு நிவேதிதா `உங்கள் மனைவிக்கே விடுதலை கொடுக்காத நீங்கள், இந்தியாவின் விடுதலையைப் பெறுவது எப்படி சாத்தியம்?' என்று கேட்டார். அந்த ஒரு கேள்விதான் பாரதியை பழைமைவாதத்தில் இருந்து மீட்டு, புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கக் காரணமாக அமைந்தது.

"ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்தும நிலை விளக்கியதொப்ப, எனக்கு பாரததேவியின் ஸம்பூர்ண ரூபத்தைக் காட்டி, ஸ்வதேச பக்தியுபதேசம் புரிந்தருளிய குருவின் சரண மலர்களில் இச்சிறு நூலைச் சமர்ப்பிக்கின்றேன்" என 1908 ஆம் ஆண்டு தாம் எழுதிய ’ஸ்வதேச கீதங்கள்’ முதல் பகுதியை பாரதியார் நிவேதிதைக்கு சமர்ப்பணம் செய்து எழுதியிருந்தார்.

1909 ஆம் ஆண்டு ’’ஸ்வதேச கீதங்கள்’ நூலின் இரண்டாம் பாகமான ’ஜன்ம பூமி’யையும் நிவேதிதைக்கு சமர்ப்பணம் செய்தார். "எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த் தொண்டின் தன்மையையும் துறவுப் பெருமையையும் சொல்லாமல் சொல்லி உணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமத் நிவேதிதா தேவிக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்" என்று எழுதியிருந்தார்.

அரவிந்தருடன் இணைந்து இந்திய விடுதலை இயக்கத்திலும் பங்கேற்றார். தனது இந்த ஈடுபாட்டினால் ஆங்கில அரசு இராமகிருஷ்ண இயக்கத்தை முடக்காமல் இருக்க அவ்வியக்கத்தில் இருந்து தன் அதிகாரபூர்வ பிணைப்பை விலக்கிக் கொண்டார். வங்காளத்தின் அனுசீலன் சமிதி முதலான புரட்சி இயக்கங்களுடனும் தொடர்பிலிருந்தார்.

1902 டிசம்பர் 19ஆம் தேதி சென்னைக்கு வந்த சகோதரி நிவேதிதை இந்து இளைஞர் சங்கம் சார்பில் பச்சையப்பா அரங்கத்தில் டிசம்பர் 20ஆம் தேதி ’இந்தியாவின் ஒருமைப்பாடு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். சென்னையில் பல்வேறு உரையாடல், சொற்பொழிவுகள் மற்றும் பேட்டிகளிலும் கலந்து கொண்டார். சித்தாரிப்பேட்டையில் நிவேதிதை நிகழ்த்திய சொற்பொழிவு குறித்து 1902 ஆம் ஆண்டு டிசம்பர் மாத ’த மெட்ராஸ் மெயில்’ பத்திரிக்கை மிகவும் புகழ்ந்திருந்தது. 1903 ஜனவரி 20 ஆம் தேதி சென்னையில் கொண்டாடப்பட்ட சுவாமி விவேகானந்தரின் ஜெயந்தி விழாவிலும் வந்து கலந்து கொண்டு மறுநாள் கல்கத்தா திரும்பினார் சகோதரி நிவேதிதை.

உபநிடதத்தில் இருக்கும் ருத்ரப் பிரார்த்தனைப் பாடல் ஒன்று சகோதரி நிவேதிதாவுக்கு விருப்பமானது `அஸதோ மா ஸதகமய தமஸோ ம ஜ்யோதிகமய ம்ருத்யோர் மா அம்ருதம் கமய’ என்ற இந்தப் பாடலை மனமுருகிக் கேட்பார். 1911-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், டார்ஜிலிங் சென்றிருந்த சகோதரி நிவேதிதா அங்கு தட்பவெப்பநிலை ஒப்புக்கொள்ளாமல் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

தனது இறுதிக்காலம் நெருங்குவதை உணர்ந்த நிவேதிதா, அக்டோபர் 7-ம் நாள் தனது சொத்துகள், படைப்புகள் எல்லாவற்றையும் இந்தியப் பெண்களின் கல்வி வளர்ச்சிக்கென எழுதி வைத்துவிட்டார். அக்டோபர் 13-ம் நாள் அதிகாலை சூரியனைக் கண்டு மகிழ்ந்து தனக்கு விருப்பமான ருத்ரப் பிரார்த்தனைப் பாடலைப் பாடி முடித்துவிட்டு 'என்னால் சூரிய உதயத்தைப் பார்க்க முடிகிறது' என்று சொல்லியவாறே தனது 44-வது வயதில் சமாதியானார் சகோதரி நிவேதிதா.

இந்திய விடுதலைப்போராட்ட வீராங்கனையாக, பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாக, ஆன்மிகத் தேடலில் ஒரு வழிகாட்டியாக, இந்திய கல்வி முறையை சீர்திருத்திய கல்வியாளராக, பெண் விடுதலைப் போராளியாக, சிறந்த எழுத்தாளராக விளங்கியவர் சகோதரி நிவேதிதா. 44 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர், இந்திய சரித்திரத்தில் அழுத்தமாக தன் தடத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

எங்கோ அயர்லாந்தில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்து, இந்திய தேசம் வந்த இந்தச் சிறகில்லாத தேவதை எத்தனை எத்தனை சேவைகளை ஆற்றி இருக்கிறது! எத்தனையோ கலைஞர்களை உருவாக்கி, அவர்களின் வழியே இந்தியாவின் பெருமைகளை ஓங்கச் செய்த சகோதரி நிவேதிதாவின் நினைவு நாள் இன்று. கலை, கல்வி, போராட்டம், சமூக சேவை என பலவித தளங்களில் நின்று இந்தியாவைப் போற்றிய இந்த தெய்வீகத் துறவியை இந்த நாளில் போற்றுவோம். 

ஞாயிறு, 12 அக்டோபர், 2025

அக்டோபர் 12 - ராம்மனோகர் லோகியா நினைவுதினம்

பாரத நாட்டின் விடுதலைப் போராட்டம் முழுவேகத்தில் நடந்து கொண்டிருந்த சமயத்தில், விடுதலையான நாட்டில் மக்களின் வாழ்க்கைத்தரத்தை எப்படி உயர்த்துவது, வறுமையிலிருந்தும் அறியாமையிலிருந்தும் மக்களை எப்படி வெளியே கொண்டுவருவது என்பது பற்றிய விவாதங்களும் ஒருபுறம் நடந்து கொண்டுதான் இருந்தன. வெளிநாடுகளில் படித்து பட்டம் வாங்கிய, ஆனால் நாட்டு மக்களின் நலனைப் பற்றி மட்டுமே யோசித்த பல தலைவர்கள் இருந்தார்கள். அதில் முக்கியமானவர் ராம்மனோகர் லோகியா. சோசலிச சித்தாந்தத்தை நமது நாட்டுக்கு ஏற்றதுபோல மாற்றி அமைத்துத் தந்த தன்னலமற்ற அந்தத் தலைவரின் நினைவுதினம் இன்று.



இன்றய உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அக்பர்பூர் நகரில் 1910ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் நாள் மார்வாரி சமூகத்தைச் சார்ந்த ஹிராலால் - சாந்தா தம்பதியரின் மகனாகப் பிறந்தவர். சிறு வயதிலேயே தாயை இழந்த லோகியாவை அவரது தந்தையே வளர்த்து வந்தார். மும்பையிலும், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திலும் அதனைத் தொடர்ந்து கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் பயின்று அதனைத் தொடர்ந்து பொருளாதாரத் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள ஜெர்மனி சென்றார். அங்கே ஆங்கிலேயர்கள் பாரத நாட்டில் விதித்த உப்பின் மீதான வரியைப் பற்றிய ஆராய்ச்சி அவருக்கு முனைவர் பட்டத்தைப் பெற்றுத் தந்தது.

தாயகம் திரும்பிய லோகியா காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். ஏற்கனவே அவருக்கு காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பலரோடு நேரடித் தொடர்பு இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாகவே சோசலிச காங்கிரஸ் கட்சி என்ற பிரிவை உருவாக்கியவர்களில் அவரும் ஒருவர். அப்போது அவர் காங்கிரஸ் சோசலிஸ்ட் என்ற பத்திரிகையை ஆசிரியர் பொறுப்பில் இருந்து நடத்தி வந்தார். 1936ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வெளியுறவுத் துறையின் செயலாளராக ஜவஹர்லால் நேருவால் நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது இருபத்தி ஆறுதான். விடுதலை பெற்ற நாட்டின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றிய கொள்கை விளக்கத்தை அவர் அப்போது தயாரித்தார்.

1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது, போரில் இங்கிலாந்து நாட்டிற்கு உதவாமல், நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்படுத்த வேண்டும் என்று பேசியதற்காக லோகியா கைது செய்யப்பட்டார். மாணவர்களின் எதிர்பால் உடனடியாக அவர் விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் காந்தியின் ஹரிஜன் பத்திரிகையில் இன்றய சத்தியாகிரகம் என்ற கட்டுரையை எழுதி, அதில் அரசுக்கு எதிரான கருத்துக்களை எழுதினார் என்று மீண்டும் கைது செய்யப்பட்டார். 1941ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக பல்வேறு தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது லோகியாவும் விடுதலையானார்.

1941ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியது. காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். லோகியா தலைமறைவானார். உஷா மேத்தா என்பவரோடு இணைந்து மூன்று மாதங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து ரகசிய வானொலியை நடத்தியும், அருணா ஆசப் அலியோடு இணைந்து காங்கிரஸின் இன்குலாப் என்ற மாதாந்திரப் பத்திரிகையை வெளியிட்டு வந்தார். இதெல்லாம் அவர் தலைமறைவாக இருந்தபோது செய்தவை.

ஆங்கில அரசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அவர் நேபாளத்தில் சில காலம் வாழ்ந்துவந்தார். மீண்டும் பாரதம் திரும்பிய லோஹியா ஆங்கில அரசால் சிறை பிடிக்கப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். கடுமையான சித்திரவதைக்கு ஆளான லோகியாவின் உடல்நிலை சீர்கெட்டது. உலகப் போர் முடியும் தருவாயில் லோகியா விடுதலையானார்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பிரஜா சோசலிச கட்சியை உருவாக்கினார். ஒரே நேரத்தில் முதலாளிகளின் ஏகாதிபத்யத்தையும் தொழிலார்களின் சர்வாதிகாரத்தியும் விலக்கி, நமது சூழலுக்கு ஏற்ற சோசலிச சித்தாந்தத்தை உருவாக்கி அதனை பரிந்துரைத்தார்.

நாட்டின் பொது மொழியாக ஆங்கிலம் அல்ல ஹிந்தியே இருக்கவேண்டும் என்பது அவர் கருத்து. ஆங்கிலம் தெரிந்தவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆங்கில மொழி நமது அசலான சிந்தனைகளை தடை செய்கிறது என்பது அவர் எண்ணம். அதே நேரத்தில் பிராந்திய மொழிகள் வளர்ச்சி அடைய ஆங்கிலம் பெரும் தடையாக இருக்கும் என்றார். மாநிலங்கள் தங்கள் மொழிகளில் மத்திய அரசோடு தகவல் பரிமாற்றம் செய்யும், மத்திய அரசு அந்தந்த மாநிலங்களோடு அவர்கள் மொழியில் பதில் தரவேண்டும். இணைப்பு மொழியாக ஹிந்தி இருக்கவேண்டும் என்பது அவர் சிந்தனை.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கும் பிரச்சனையில் கேரளாவில் இருந்த பிரஜா சோசலிச அரசு பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் நால்வர் பலியானார்கள். இதற்குப் பொறுப்பேற்று அரசு பதவி விலகவேண்டும் என்று லோகியா கூறினார். கட்சி அதனை நிராகரித்தது. அதனைத் தொடர்ந்து லோகியா கட்சியில் இருந்து விலகினார்.

மகளிர் முன்னேற்றம், பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் முன்னேற்றம், ஒற்றை கட்சி ஆட்சி எதிர்ப்பு என்று லோகியாவின் பணி பல்வேறு தளங்களில் இருந்தது. பல்லாண்டுகள் நாட்டுக்காக பணியாற்றி இருக்கவேண்டிய ராம் மனோகர் லோகியா தனது 57ஆம் வயதில் 1967ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் நாள் காலமானார்.

லோகியாவின் சிந்தனைகளும் கட்டுரைகளும் ஒன்பது தொகுதிகளாக வெளியாகி உள்ளன. 

சனி, 11 அக்டோபர், 2025

அக்டோபர் 11 - லோக்நாயக் ஜெயப்ரகாஷ் நாராயணன் பிறந்ததினம்

லோக்நாயக் என்றால் மக்கள் தலைவர் என்று பொருள். இந்த அடைமொழிக்கு சொந்தக்காரர் பிஹார் மாநிலத்தில் பிறந்த விடுதலைப் போராட்ட வீரரும், நெருக்கடியான நேரத்தில் பாரத நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றியவருமாகிய ஜெயப்ரகாஷ் நாராயணன்.



விடுதலைப் போராட்ட வீரர், சோசலிஸ கருத்துவாக்கத்தில் அமைந்த அரசியல் கட்சிகளின் ஆரம்பப்புள்ளி, சுதந்திரத்திற்குப் பிறகு எந்த பதவிக்கும் ஆசைப்படாமல் தேசிய புனர்நிர்மாணப் பணிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர், ஆச்சார்யா வினோபா பாவே நடத்திய சர்வோதய இயக்கத்தின் பெரும் தலைவர், இந்திரா அறிவித்த நெருக்கடி நிலையை எதிர்த்த அனைவருக்கும் தளபதியாக இருந்து வழிகாட்டியவர் என்ற பெருமைக்குரியவர் திரு ஜெபி அவர்கள்.

ஜெபியின் வாழ்க்கையை மூன்று பிரிவாகப் பிரித்துப் பார்க்கலாம். சுதந்திரப் போராட்டத்தில் அவரின் பங்கு, சுதந்திரத்திற்குப் பிறகான காலகட்டத்தில் அவரது பங்களிப்பு, பிறகு 1970 முதல் ஊழலுக்கு எதிராக, நெருக்கடி நிலையை எதிர்த்த அவரது போராட்டம் என்று பார்க்கலாம்.

ஹர்ஸ்தயாள் - புல்ராணி தேவி தம்பதியரின் மகனாக 1902ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் நாள் பிறந்த ஜெபி, பீஹாரிலும் பின்னர் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் துறையில் பயின்றவர். அப்போதுதான் அவருக்கு கம்யூனிச / சோசலிச சித்தாந்தத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. ரஷ்ய நாட்டில் முனைவர் பட்டம் படிக்கச் வந்த வாய்ப்பை நிராகரித்து விட்டு 1929ஆம் ஆண்டு அவர் பாரதம் திரும்பினார்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜெபி விரைவில் முக்கியமான தலைவர்களில் ஒருவரானார். காங்கிரஸ் கட்சி தடைசெய்யப்பட்ட நேரத்தில் தலைமறைவாக இருந்து போராட்டத்தை வழிநடத்தினார். கைது செய்யப்பட்டு நாசிக் சிறையில் அடைக்கப்பட்ட ஜெபி அங்கே ராம் மனோகர் லோஹியா, மினு மஸானி, அசோக் மேத்தா, அச்சுத பட்வர்தன் ஆகியோரோடு தோழமை பூண்டார். அவர்களுக்கிடையே நடந்த தொடர் விவாதங்கள் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே காங்கிரஸ் சோசலிஸ கட்சி என்ற அமைப்பை உருவாக்குவதில் அடித்தளம் ஆனது. ஆச்சாரிய நரேந்திர தேவ் தலைவராகவும் ஜெ பி செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

நாடு விடுதலை அடைந்த உடன், நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சியாக பிரஜா சோஷலிச கட்சி விளங்கியது. நேரடி அரசியலில் ஆர்வம் காட்டாத ஜெ பி, ஆச்சாரிய வினோபா பாவேயின் சர்வோதயா இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பூதான இயக்கம் என்ற பெயரில் நாடெங்கும் பணக்காரர்களிடம் உள்ள நிலங்களைப் பெற்று அதனை நிலமற்ற ஏழைகளுக்கு அளிக்கும் பெரும்பணியும், சம்பல் பள்ளத்தாக்கில் வசித்து வந்த கொள்ளைக்காரர்களை திருத்தி அவர்களை அரசாங்கத்திடம் சரணடைய வைக்கும் பணியையும் வினோபா பாவே நடத்தி வந்தார். இந்த சேவைகளில் வினோபா பாவேவிற்கு உறுதுணையாக ஜெ பி விளங்கினார்.

சுதந்திரம் அடைந்து இருபதே ஆண்டுகளில் லட்சிய கனவுகள் கலைந்து, பதவியைத் தக்க வைக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் வலுப்படத் தொடங்கியது. அதனைத் தடுத்து நாட்டை நல்வழிக்கு திருப்பும் பொதுமக்களின் மனசாட்சியாக மீண்டும் ஜெ பி அரசியலுக்கு வரவேண்டிய நேரமும் வந்தது.

அன்றய பிஹார் மாநிலத்தில் ஊழலுக்கு எதிரான மாணவர் போராட்டம் வெடித்துக் கிளம்பியது. தங்கள் போராட்டத்திற்கு தலைமை ஏற்க மாணவர்கள் ஜெ பியை அழைத்தனர். இன்று தேசத்தின் அரசியலில் முக்கியமான தலைவர்களாக இருக்கும் லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார், ராம் விலாஸ் பாஸ்வான், முலாயம் சிங் யாதவ் ஆகியோர் அன்று ஜெபியின் பின் அணிவகுத்த இளம் தலைவர்கள்.

அன்று பிரதமராக இருந்த இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது. இந்திரா நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். எல்லா தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஜெ பியும் கைது செய்யப்பட்டு சண்டிகரில் வைக்கப்பட்டார். நெருக்கடி நிலையை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. இந்திராவை எதிர்க்க எல்லா கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு பெரும்கூட்டணியை உருவாக்க ஜெ பி முயற்சி எடுத்தார். ஏறத்தாழ பதினெட்டு மாதங்கள் நாடு தனது ஜனநாயக உரிமையை இழந்து இருந்தது. 1977 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திரா நெருக்கடி நிலையை விலக்கிக் கொண்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் இந்திராவின் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்தது.

சுதந்திரம் அடைந்த நேரத்திலும் சரி, நெருக்கடி நிலையை அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சமயத்திலும் சரி, ஜெ பி நினைத்து இருந்தால் எந்த பதவியை வேண்டுமானாலும் அடைந்து இருக்கலாம். பதவியை நாடாத உத்தமர், வாழ்நாள் முழுவதும் எளிய மக்களின் நலனைப் பற்றியே சிந்தித்த தவயோகி, நாட்டு நலனே உயிர்மூச்சாகக் கொண்ட லோகநாயகர் 1979ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள் காலமானார். நாட்டின் உயரிய விருதான பாரத்ரத்னா விருதை அவருக்கு 1998ஆம் ஆண்டு வழங்கி நாடு அவருக்கு தனது மரியாதையைச் செலுத்தியது.

சந்தேகத்தின் மேகங்கள் சூழும் போது, ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற தலைவர்களின் வாழ்க்கையே நமது வழிகாட்டியாக விளங்கும். 

வெள்ளி, 10 அக்டோபர், 2025

அக்டோபர் 10 - மால்குடி நகரின் நாயகன் ஆர் கே நாராயணன் பிறந்ததினம்

ஏற்கனவே உள்ள ஒரு நகரத்தை சுற்றி கதைக்களத்தை உருவாக்கி புதினங்களை உருவாகும் படைப்பாளிகள் உண்டு, கற்பனையில் ஒரு ஊரையே உருவாக்கி, அதில் தான் உருவாக்கும் கதாபாத்திரங்களை நடமாடவிடும் படைப்பாளிகளும் உண்டு. இரண்டாம் வகையில் உலக அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் திரு ஆர் கே நாராயணன்.



மால்குடி என்ற  சிறுகிராமம், அதன் ஒரு புறம் சரயு நதி, மறுபுறம் மெம்பி என்ற காடு, நகரின் வெளியில் ஒரு சிறு புகைவண்டி நிலையம், வெவ்வேறு சாலைகள், பல்வேறு சிறிய தொழில்முனைவர்கள், இவர்களுக்கு நடுவே ஸ்வாமிநாதன் என்ற சிறுவன், மணி, ராஜம், சோமு, சங்கர் என்று அவனின் நண்பர்கள், அவர்களைச் சுற்றிய கதை என்று உருவாக்கி படிப்பவர்களின் கண் முன்னே நடமாட்டமிட்டார் ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி ஐயர் நாராயணன் சுருக்கமாக ஆர் கே நாராயணன்.

1906ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் நாள் பள்ளி தலைமையாசிரியராகப் பணியாற்றிவந்த திரு கிருஷ்ணஸ்வாமி என்பவரின் மகனாகப் பிறந்தவர் நாராயணன். எட்டு குழந்தைகள் கொண்ட பெரிய குடும்பத்தின் இரண்டாவது மகன் இவர், இவரது சகோதர் புகழ்பெற்ற கோட்டோவிய கலைஞர் திரு ஆர் கே லக்ஷ்மணன். தந்தை தொடர்ச்சியாக வெவ்வேறு ஊர்களில் பணியாற்றும் வேலையில் இருந்ததால் நாராயணனின் கல்வி சென்னையில் நடைபெற்றது. பாட்டியின் அரவணைப்பில் புரசைவாக்கத்தில் உள்ள லூர்தெரன் பள்ளியிலும் பின்னர் சென்னை கிருஸ்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியிலும் நாராயணன் படித்தார். பள்ளிப் பருவத்திலேயே நூலகங்களில் உள்ள பல்வேறு நூல்களை அவர் படித்து முடித்துவிட்டார். அதன் பின்னர் அவர் தந்தை வேலை பார்த்துவந்த மைசூர் நகரில் தனது படிப்பை தொடர்ந்தார்.

வருங்காலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கிய நாராயணன் கல்லூரி நுழைவுத் தேர்வில் முதல் முறை வெற்றி பெறவில்லை, இளங்கலை படிப்பை ஓராண்டு கூடுதலாக எடுத்துக் கொண்டு நான்கு வருடங்களில் முடித்தார் என்பது விந்தையான செய்திதான். மிகக் குறிகிய காலம் ஆசிரியாகப் பணியாற்றி, பின்னர் முழுநேரமும் எழுத்தாளாகவே இருப்பது என்ற முடிவை அவர் எடுத்தார். சகோதர்களும் உறவினர்களும் ஆதரித்தால் ஆரம்பகாலத்தில் அவரால் பொருளாதார நெருக்கடி இல்லாமல் வாழமுடிந்தது.

1930ஆம் ஆண்டு ஸ்வாமியும் நண்பர்களும் என்ற புதினத்தை எழுதினார். மால்குடி என்ற கற்பனை ஊரை உருவாக்கி, அதன் பின்புலத்தின் நடைபெறும் கதையாக இதனை அவர் அமைத்தார். பாரதத்தில் பல பதிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்ட இந்த புதினத்தை இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த கிரஹாம் க்ரீன் படிக்க நேர்ந்தது. அவரின் முயற்சியினால் இந்தப் புத்தகம் வெளியானது. ஏறத்தாழ ஸ்வாமிநாதன் என்ற கதாபாத்திரம் நாராயணனேதான். அவரது சிறுவயதில் நடந்த நிகழ்ச்சிகளைத்தான் மெருகேற்றி அவர் எழுதி இருந்தார். இதனைத் தொடர்ந்து Bachelor of Arts, The Dark Room என்ற புதினங்களையும் அவர் எழுதினார்.

வருடங்கள் செல்லச் செல்ல மால்குடியும் வளர்ந்தது, அநேகமாக அவரது கதைகளின் களமாக மால்குடியே அமைந்தது. சிறுவர்களின் பள்ளி வாழ்க்கை பற்றி, பள்ளிகளில் உள்ள தண்டனைகள் பற்றி, சுதந்திரப் போராட்டம் பற்றி, சமுதாயத்தில் உள்ள சிக்கல்கள் பற்றி என்று வாழ்க்கையை தொட்டுச் செல்லும் பல்வேறு விஷயங்கள் பற்றி மால்குடியை களமாக வைத்து நாராயணன் பல்வேறு புதினங்களை எழுதினார். பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் படிக்கத் தொடங்கும் போது தவற விடக் கூடாத புத்தகங்களாக நாராயணனின் புத்தகங்களைச் சொல்லலாம்.

1933ஆம் ஆண்டு கோயம்பத்தூர் நகரில் வசித்துவந்த தனது சகோதரியின் வீட்டிற்கு சென்ற நாராயணன், அங்கே அருகில் வசித்து வந்த ராஜம் என்ற பதினைந்து வயது பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தார். பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ராஜம் 1939ஆம் ஆண்டு மரணம் அடைந்துவிட்டார். அதன் பிறகு ஆர் கே நாராயணன் திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்துவந்தார்.

இவரது படைப்பாற்றலைப் பாராட்டும் விதமாக பாரத அரசு இவருக்கு பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷண் பட்டங்களை வழங்கியது. The Financial Expert என்ற புதினம் இவருக்கு சாஹித்ய அகாடமி விருதை பெற்றுக் கொடுத்தது. அரசு இவரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நியமித்தது. நாட்டின் மேலவையில் பள்ளி மாணவர்கள் பெரும் சுமையை புத்தகம் என்ற பெயரில் சுமக்க வேண்டி உள்ளது என்ற கவலையை நாராயணன் வெளிப்படுத்தினார்.

ஏறத்தாழ அறுபதாண்டுகளுக்கு மேலாக படைப்பிலக்கியத்தில் இயங்கிக்கொண்டு இருந்த திரு நாராயணன் 2001ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் நாள் காலமானார்.

மால்குடியும், ஸ்வாமிநாதனும் இருக்கும்வரை நாராயணனும் இருப்பார் என்பதில் ஐயமில்லை. 

செவ்வாய், 7 அக்டோபர், 2025

அக்டோபர் 7 - துர்காவதி தேவி பிறந்ததினம்

லாகூர் புகைவண்டி நிலையத்திற்கு நேர்த்தியாக உடையணிந்த ஒரு கனவான் அவரது மனைவியோடு வந்தார். மனைவியின் கையில் ஒரு சிறு ஆண் குழந்தை. அவர்களோடு அவர்களின் வேலையாளும் கூட வந்தார். மூவருக்குமான பயணச்சீட்டை வாங்கிக்கொண்டு அந்த கணவானும் அவர் குடும்பமும் முதல்வகுப்பு பெட்டியில் ஏறிக்கொண்டனர். அவரது வேலையாள் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தார். கான்பூரில் அவர்கள் இறங்கி வேறு ஒரு புகைவண்டியில் லக்னோ சென்றனர். லக்னோ நகரில் அந்த வேலையாள் அந்தக் குடும்பத்தைப் பிரிந்து வாரனாசிக்குச் சென்றுவிட்டார். கனவானும் அவரது குடும்பமும் அங்கிருந்து ஹௌரா நகருக்குச் சென்றனர். சில காலம் கழித்து அந்தப் பெண்மணி மட்டும் தன் மகனோடு லாகூர் திரும்பினார்.

சாதாரணமான நிகழ்ச்சியாகத்தான் தோன்றுகிறது, அப்படித்தானே. ஆனால் பயணம் செய்த அந்த கனவான் பகத்சிங், அவரது வேலையாள் ராஜகுரு. காவல் அதிகாரி சாண்ட்ராஸ் படுகொலையை அடுத்து ஆங்கில அரசு வலைவீசித் தேடிக்கொண்டு இருந்த குற்றவாளிகள் அவர்கள். நாம்  அறிந்த பகத்சிங் திருமணம் ஆகாதவர். அப்படியானால் அந்தப் பெண்மணி யார் ? அவருக்கும் பகத்சிங்குக்கும் என்ன தொடர்பு ?


எட்டும் அறிவினில் மட்டுமல்ல வீரத்திலும், தியாகத்திலும் ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று வாழ்ந்து காட்டிய பாரத நாரிமணிகளின் வரிசையில் ஒளிவீசும் தாரகையாகத் திகழ்பவர் அந்தப் பெண்மணி. அவர் பெயர் துர்காவதி தேவி, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு  துர்கா பாபி அதாவது அண்ணி துர்காதேவி. இந்த நாட்டில் மறக்கடிக்கப்பட்ட தியாகிகளில் மிக முக்கியமானவர் துர்காவதி தேவி. மிகப் பெரிய செயல்களைச் செய்து விட்டு, எந்த பலனையும், எந்த அங்கீகாரத்தையும் எதிர்பாராமல் வாழ்ந்து மறைந்த மகோன்னதமான பெண்மணி அவர்.

1907ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி பிறந்தவர் துர்காதேவி அவர்கள். சிறுவயதிலேயே தனது தாயை இழந்து அதனால் உறவினர்களால் வளர்க்கப்பட்டவர். அன்றய காலசூழ்நிலையில் தனது பதினொன்றாம் வயதில் லாகூர் நகரைச் சார்ந்த பகவதி சரண் வோரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பகவதி சரண் வோராவும் மிகப் பெரும் தேசபக்தர், சிந்தனையாளர், புரட்சியாளர். நவ்ஜவான் பாரத் சபா மற்றும் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் அஸோஸியேஷன் என்ற புரட்சியாளர்கள் குழுவின் செயலாளராக இருந்து, அந்த புரட்சிப் பாதையின் கொள்கை விளக்க பிரகடனத்தை உருவாக்கியவர் திரு வோரா அவர்கள்.

காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து என்று வோராவின் போராட்டத்திற்கு துர்காதேவி உறுதுணையாக இருந்தார். புரட்சியாளர் கர்டார் சிங்கின் பதினோராவது பலிதான தினத்தை லாகூர் நகரில் கொண்டாடியது, லாகூர் சிறையில் அறுபத்திமூன்று நாட்கள் உண்னாவிரதம் இருந்து உயிர் நீத்த ஜதீந்திரநாத் தாஸின் இறுதி ஊர்வலத்தை லாகூர் நகரில் இருந்து கொல்கத்தா நகர் வரை தலைமையேற்று நடத்தியது என்று துர்காதேவி பல்வேறு போராட்ட களங்களில் செயல்பட்டார்.

சைமன் கமிஷனை புறக்கணித்து லாகூர் நகரில் நடைபெற்ற ஊர்வலத்தை தலைமையேற்று நடத்திய லாலா லஜபதி ராயை ஆங்கில காவலர்கள் தாக்கினர். படுகாயமுற்ற லாலா லஜபதி ராய் சிலநாட்களில் உயிர் துறந்தார். தலைவரின் மரணத்திற்கு பதிலடியாக காவல் அதிகாரி சாண்ட்ரஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை நிகழ்த்தியது ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் அஸோஸியேஷன. இதைச் செய்தது பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர்.

இருபத்தி ஏழு வயதான சீக்கிய இளைஞனை ஆங்கில அரசு தேட ஆரம்பித்தது. லாகூரில் இருந்து தப்பித்து கொல்கொத்தா செல்ல புரட்சியாளர்கள் முடிவு செய்தனர். ஆனால் ஆங்கில அரசிடம் மாட்டாமல் எப்படி தப்பிக்க ? அப்போதுதான் உதவிக்கு துர்காதேவி வந்தார். பகத்சிங்கின் மனைவியாக சென்றது துர்காதேவிதான். அன்றய காலகட்டத்தில் ( ஏன் இன்றும் கூட )  இன்னொரு ஆண்மகனின் மனைவியாக நடிக்க எந்த அளவு தியாக சிந்தனை இருக்கவேண்டும் என்பதை இன்றும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. பாதுகாப்பாக புரட்சியாளர்களைத் தப்ப வைத்துவிட்டு அதன் பின்னர் துர்காதேவி மீண்டும் லாகூர் திரும்பினார்.

லாலா லஜபதி ராயின் மரணத்திற்குப் பழிவாங்கிய பிறகு சிறிது காலம் தலைமறைவாக இருந்த புரட்சியாளர்கள் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வெடிகுண்டு வீச முடிவு செய்தனர். படுகேஸ்வர்தத்துடன் இந்த சாகசத்தை மேற்கொள்ள பகத்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். காது கேட்காத அரசுக்கு எங்கள் பேச்சு புரிவதில்லை, எனவே சத்தமாக பேசுவோம் என்று புரட்சியார்கள் தீர்மானித்தார்கள். நாடாளுமன்றத்தில் குண்டு வீசி, துண்டுப் பிரசுரங்களை விட்டெறிந்து இன்குலாப் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பி படுகேஸ்வர் தத்தும் பகத்சிங்கும் கைதானார்கள்.

சர்வ நிச்சயமாக அவர்கள் தூக்கிலிப்படுவார்கள் என்பது புரட்சியாளர்களுக்குத் தெரியும். இதற்கு எதிர்வினையாக வைஸ்ராய் இர்வின் பயணம் செய்யும் ரயில் வண்டியை வெடிகுண்டு வைத்துக் கவிழ்க்க துர்காதேவியின் கணவர் பகவதி சரண் வோரா முயற்சி செய்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக இர்வின் உயிர் தப்பினார். இர்வின் உயிர் தப்பியதற்கு ஆண்டவனுக்கு நன்றி தெரிவித்து புரட்சியாளர்களைக் கண்டித்து காந்தி வெடிகுண்டுகளை வழிபடுதல் ( The Cult of Bomb ) என்ற கட்டுரையை எழுதினார்.

இந்த கட்டுரைக்கு பதிலாக வெடிகுண்டுகளின் தத்துவம் ( Philosophy of Bomb ) என்ற கட்டுரையை பகவதி சரண்வோரா எழுதினார். " பாரதத்திற்கு மீது ஆங்கிலேய அரசு இழைக்காத குற்றம் என்பது எதுவுமே இல்லை, திட்டமிட்ட முறையில் ஆங்கில அரசு பாரதத்தை ஓட்டாண்டியாக மாற்றி உள்ளது. ஒரு இனமாகவும் பொது மக்களாகவும் இந்த அநீதியை நாங்கள் மறக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை. சர்வ நிச்சயமாக நாங்கள் பழி தீர்ப்போம். சர்வாதிகாரத்திற்கு எதிராக பழி தீர்ப்பது என்பது மக்களின் கடமை. கோழைகள் பின்வாங்கி சமாதானத்தையும் அமைதியையும் யாசிக்கட்டும். ஆனால் நாங்கள் எங்களுக்கு கருணையே அல்லது மன்னிப்போ தேவை இல்லை, அதை நாங்கள் கேட்கவும் இல்லை. நாங்கள் நடத்துவது போர் - அதற்கு வெற்றி அல்லது வீர மரணம் என்பதுதான் முடிவாக இருக்கும்" என்று அவர் முழங்கினார்.

சிறையில் இருந்த புரட்சியாளர்களை விடுவிக்க சிறை வளாகத்தில் வெடிகுண்டு வீச வோரா முடிவு செய்தார். ஆனால் குண்டு தயாரிக்கும் முயற்சியில் துரதிஷ்டவசமாக அந்த வெடிகுண்டு வெடித்து வோரா மரணமடைந்தார். கணவர் இறந்த துயரத்தில் இருக்கக் கூட துர்காதேவிக்கு நேரம் இருக்கவில்லை. யாருக்கும் தெரியாமல் கணவரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு மீண்டும் பகத்சிங்கையும் மற்ற புரட்சியாளர்களையும் காப்பாற்றும் முயற்சியில் அவர் ஈடுபடலானார். கையெழுத்து இயக்கம், வழக்கு நடத்த பணம் வசூலித்தல், காந்தி உள்பட பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசுதல் என்று பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார்.

1932ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துர்காதேவி ஆங்கில காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவரது செயல்பாடுகள் காவல்துறைக்கு முழுவதும் தெரியாததால் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனைதான் அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் சென்னைக்கு வந்த துர்காதேவி சிறு குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் முறையைக் கற்றுக் கொண்டு காஜியாபாத்திலும் பின்னர் லக்னோ நகரிலும் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, ஒரு சாதாரண பெண்மணி போல மற்றவர்கள் அறியாமல் வாழ்ந்து தனது 92ஆம் வயதில் 1999ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி துர்காதேவி பாரதமாதாவின் காலடியில் கலந்தார்.

புகழ்பெறவேண்டும் என்றோ மக்கள் பாராட்ட வேண்டும் என்றோ தியாகிகள் நாட்டுக்காக உழைப்பதில்லை. அது ஸ்வதர்மம் என்று எண்ணியே அவர்கள் உழைக்கிறார்கள். அவர்களைப் போற்றுவதும், அவர்களின் தியாகத்தை நினைவில் கொள்வதும் நம்மையும் அவர்கள் நடந்த பாதையில் நடக்கும் சக்தியைக் கொடுக்கும்.

பாரத நாட்டின் புகழ்பெற்ற தியாகிகள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள். 

அக்டோபர் 7 - குரு கோவிந்த சிம்மனின் பலிதான தினம்

இன்றிருக்கும் வகையில் சீக்கிய மதத்தை வடிவமைத்தவரும், சீக்கிய இனத்தவரை போராடும் குணம்கொண்ட குழுவாக மாற்றியவரும், மாவீரரும், கவிஞரும், தத்துவ ஞானியும், சீக்கியர்களின் பத்தாவது குருவுமான குரு கோவிந்த சிம்மனின் பலிதான தினம் இன்று.



சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான குரு தேஜ் பகதூரின் ஒரே மகன் குரு கோவிந்தசிங். 1666ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் நாள் இன்றய பாட்னா நகரில் பிறந்தவர் கோவிந்தசிங் அவர்கள். அவரது இயற்பெயர் கோவிந்த் ராய். முதல் நாலாண்டுகளை பாட்னா நகரில் கழித்த கோவிந்தராய் அதன் பிறகு பஞ்சாபிற்கும் பின் இமயமலை அடிவாரத்தில் வசித்து வந்தார். அங்கேதான் அவரது படிப்பு ஆரம்பமானது.

1675ஆம் ஆண்டு காஷ்மீர் பண்டிதர்கள் குரு தேஜ்பகதூரை காண வந்தனர். பண்டிதர்களை இஸ்லாமியர்களாக மதம் மாற்றினால், அதனைத் தொடர்ந்து மற்ற மக்களை எளிதாக மதம் மாற்றிவிட முடியும் என்று எண்ணிய முகலாய அதிகாரிகளின் வற்புறுத்தல் மற்றும் பயமுறுத்துதலில் இருந்து தங்களை காப்பாற்றுமாறு அவர்கள் குரு தேஜ்பகதூரிடம் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து குரு தேஜ்பகதூரை மதம் மாற்ற முடிந்தால், தாங்களும் அதன் பிறகு மாறுகிறோம் என்று அவர்களை அவுரங்கசீப்பிடம் பதில் அளிக்க குரு தேஜ்பகதூர் அறிவுரை கூறினார்.

ஹிந்துஸ்தானத்தின் பாதுஷா அவங்கசீப்பை நேரில் வந்து காணுமாறு தேஜ்பகதூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இஸ்லாம் மதத்தை ஏற்க மறுத்த குரு தேஜ்பகதூர் 1675ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சீக்கியர்களின் பத்தாவது குருவாக கோவிந்த் ராய் நியமிக்கப்பட்டார்.

1699 ஆம் ஆண்டு பைசாகி திருவிழாவின்போது சட்லெஜ் நதிக்கரையில் அமைத்துள்ள அனந்தபூர் நகருக்கு வருமாறு சீக்கியர்களுக்கு குரு கோவிந்த்ராய் அழைப்பு விடுத்தார். நாடெங்கெங்கும் இருந்து சீக்கியர்கள் குழுமிய அந்த கூட்டத்தில் தர்மத்தைக் காப்பாற்ற அங்கேயே பலிதானமாக யார் தயாராக இருக்கிறார் என்று குரு வினவ, ஒருவர் முன்வந்தார். அவரை அழைத்துக்கொண்டு தனது கூடாரத்திற்குள் சென்ற குரு சிறிது நேரத்தில் ரத்தம் சொட்டும் வாளோடு வெளியே வந்தார். " இன்னும் பலிதானிகள் தேவை" இடி முழுக்கம் என எழுந்தது குருவின் குரல்.
அடுத்தவர் வந்தார், குருவோடு கூடாரத்திற்குள் சென்றார், குரு மீண்டும் வெளியே வந்து தர்மம் காக்கும் போரில் இன்னும் ஆள் தேவை என்று கூற அடுத்தது வீரர்கள் வந்தனர். மொத்தம் ஐந்து பேர் தங்களைப் பலியிட முன்வந்தனர். சிறிது நேரத்தில் அந்த ஐவரோடும் வெளியே தோன்றிய குரு அப்போதுதான் சீக்கிய மார்க்கத்தை முழுவதுமாக மாற்றியமைத்தார்.

பாய் தயாசிங், பாய் தரம்சிங், பாய் ஹிம்மத்சிங், பாய் மோகும்சிங், பாய் சாஹிப்சிங் என்று அறியப்படும் அந்த ஐவரும்தான் கல்சாவின் முதல் வித்தாக அமைந்தனர். இரும்பு கொள்கலத்தில் சர்க்கரை சேர்க்கப்பட்ட தண்ணீரை தனது இருபுறமும் கூர்மையான குத்துவாளால் கலக்கி புனித குரு கிரந்தசாஹிப் மந்திரங்கள் ஓத அந்த ஐவருக்கும் அளித்து அவர்களை முறைப்படி சீக்கியர்களாக குரு கோவிந்தசிங் அறிவித்தார். பிறகு அவர்கள் கல்சாவின் புது உறுப்பினராக குருவை ஏற்றுக்கொண்டனர். சீக்கியம் என்ற மதம் முழுமையாக உருவான தினம் அதுதான். கேஷ் ( வெட்டப்படாத தலைமுடி ) கங்கா ( மரத்திலான ஆன சீப்பு ) காரா ( இரும்பினால் ஆனா கைவளை ) கிர்பான் ( கத்தி ) காசீரா ( அரையாடை ) ஆகிய ஐந்தும் சீக்கியர்களின் அடையாளமாகியது. புகையிலை பயன்படுத்துவது, ஹலால் முறையில் கொல்லப்பட்ட இறைச்சியை உண்பது ஆகியவை தடை செய்யப்பட்டது. இஸ்லாமியர்களின் கொடுமைகளில் இருந்து இந்துக்களையும் சீக்கியர்களையும் காப்பாற்றுவது ஒவ்வொரு சீக்கியர்களின் கடமையாக அறிவிக்கப்பட்டது. குரு கோவிந்த்சிங்கின் காலத்திற்குப் பிறகு நிரந்தர குருவாக குரு கிரந்த சாஹிபே இருக்கும் என்றும், இனி சீக்கியர்கள் தங்கள் பெயருக்குப் பின்னர் சிங் என்ற அடைமொழியை இணைத்துக் கொள்ளவேண்டும் என்று குரு ஆணையிட்டார்.

ஏற்கனவே சீர்கெட்டிருந்த மொகலாயர்களோடான உறவு குரு தேஜ்பகதூரின் பலிதானத்திற்குப் பிறகு இன்னும் விரிவடைந்தது. குருவின் படைகளும் மொகலாய படைகளும் பல்வேறு இடங்களில் மோதின. ஹிந்து தர்மத்தில் கிளைத்தெழுந்த சீக்கிய குரு தர்ம யுத்தத்தையே எப்போதும் மேற்கொண்டார். தேவையில்லாமல் போரில் இறங்குவதோ, பொதுமக்களை துன்புறுத்துவதோ அல்லது எந்த ஒரு வழிபாட்டுத்தளத்தை அழிப்பதோ ஒருபோதும் சீக்கியர்களால் முன்னெடுக்கப்படவில்லை.

குருவின் தாயாரும் அவரின் இரு சிறு பிள்ளைகளும் முகலாய தளபதி வாசிம்கான் என்பவனால் சிறை பிடிக்கப்பட்டனர். எட்டு வயதும் ஐந்து வயதான குழந்தைகளை சித்தரவதை செய்து முகலாயர்கள் கொண்டார்கள். இதனை கேட்டு மனமுடைந்து குருவின் தாயாரும் மரணமைடைந்தார்கள். பதினேழு மற்றும் பதிமூன்று வயதான மற்ற இரண்டு பிள்ளைகளும் போர்க்களத்தில் பலியானார்கள்.

1707ஆம் ஆண்டு அவுரங்கசீப் மரணமடைய, முகலாயப் பேரரசில் வாரீசுப் போர் உருவானது. கோதாவரி நதி கரையில் முகாமிட்டிருந்த குருவை கொலை செய்ய முகலாயத் தளபதி வாசிம்கான் இரண்டு ஆப்கானியர்களை அனுப்பினான். பலநாட்களுக்குப் பிறகு அவர்கள் குருவின் கூடாரத்தில் நுழைந்து அவரை தாக்கி படுகாயமுற வைத்தார்கள். அவர்களில் ஒருவரை குரு கோவிந்தசிங்கே கொன்றார், மற்றவனை குருவின் படைவீரர்கள் கொன்றார்கள். தனது  மொத்த குடும்பத்தையும் தர்மம் காக்கும் போரில் பலிதானமாகிய குரு கோவிந்தசிங் 1708ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் நாள் மரணமடைந்தார்.

தர்மத்தை காக்க சீக்கியர்கள் மீண்டும் இஸ்லாமியர்களோடு மோதிக் கொண்டேதான் இருந்தார்கள். பாண்டாசிங் பகதூர், மஹாராஜா ரஞ்சித்சிங் ஆகியோரின் அயராத முயற்சியாலும், தொடர்ந்த மராட்டியர்களின் தாக்குதலாலும் முகலாய பேரரசு நாட்டில் இருந்து அகற்றப்பட்டது.

நெருக்கடியான காலகட்டத்தில் தர்மத்தை காக்க அவதரித்த குரு கோவிந்தசிங்கை என்றும் நாம் நினைவில் வைத்துப் போற்றுவோம். 

ஞாயிறு, 5 அக்டோபர், 2025

அக்டோபர் 5 - குரு வணக்கம் - சோ ராமஸ்வாமி பிறந்ததினம்

 வரலாற்றின் பக்கங்களில் இந்தியா என்றுமே ஒரு கொந்தளிப்பான நாடாகத்தான் இருந்துவந்தது. உலக சரித்திரத்தில் மிக முக்கியமான நாகரீகமாக, உலக வர்த்தகத்தில் முக்கியமான பங்கேற்பாளராக, அளவற்ற செல்வம் நிறைந்த நாடாக, அதனாலே அந்தச் செல்வத்தைக் கவர நினைத்த பலருக்கு ஒரு கனவு தேசமாக, மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பாளர்களால் படையெடுக்கப்பட்ட தேசமாக, மீண்டும் மீண்டும் தன் வாழ்வுக்கான போராட்டத்தை நடத்திய தேசம் என்றே இந்த நாட்டின் சரித்திரத்தைச் சொல்லிவிடலாம்.

இந்தக் கொந்தளிப்புக்கு சிறிதும் குறைந்ததல்ல சுதந்திரம் அடைந்த பிறகான காலகட்டடமும். நாட்டின் தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் இரண்டாக்கப் பிளவுபட்டதும், ஊழலுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் நாடெங்கும் போராட்டங்கள் வெடித்ததும், அலகாபாத் நீதிமன்றத்தின் புகழ்பெற்ற தீர்ப்பின் மூலம் பதவியில் இருக்கும் பிரதமமந்திரியின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து பதவியைத் தக்கவைக்க நாடெங்கும் நெருக்கடிநிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு, மக்களின் உரிமைகள் எல்லாம் மறுக்கப்பட்டு, எதிரணியில் இருந்த தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதும் என்று இருந்த காலகட்டம் அறுபதுகளின் கடைசி வருடம் முதல் எழுபதுகளின் பாதிவரை இருந்த வரலாறு.

"நாங்கள் அவர்களை மண்டியிடச் சொன்னோம், அவர்கள் தவழவே செய்தார்கள்" இது அன்றய காலகட்டத்தின் பத்திரிகைகளை பற்றிய அதிகாரத்தின் கூற்று. அரசாங்கத்தின் கொள்கையாக தனிமனிதர்களின் துதிப்பாடல் நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. " இந்தியாவே இந்திரா, இந்திராவே இந்தியா" என்று துதிபாடிகள் புகழ்பாட, ஏழ்மையை ஒழிப்போம் என்ற கோஷங்களும், பிரதமமந்திரியின் இருபது அம்சத் திட்டமும், அவர் மகனின் ஐந்து அம்சத் திட்டமும் பொன்னுலகைக் கொண்டுவரும் என்ற பிம்பங்களும் கட்டமைக்கப்பட்ட காலம் அது.

இதன் பின்புறத்தில் தனித்து ஒலித்த குரல் திரு சோ ராமஸ்வாமியின் குரல். பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் பிறரை மிரட்டியும், யார் பதவிக்கு வரவேண்டும் யார் வரக்கூடாது என்று தரகு வேலை பார்த்தும், நாட்டின் நலனை, நாட்டு மக்கள் நலனை கருத்தில் கொள்ளாது இருக்கும் நிலையில், தனக்கென ஒரு தனி வழியை, தான் நல்லது என்று நினைக்கும் வழியைத் தேர்ந்தெடுத்து அதில் நடந்தவர் திரு சோ என்பது இன்றய தலைமுறைக்கு ஆச்சர்யம் அளிக்கக் கூடியதாகத்தான் இருக்கும்.

நாடக நடிகராக, திரைப்பட நடிகராக, கதாசிரியராக, இயக்குனராக என்று பல தொழில் செய்தவரின் எல்லாப் பாதைகளும் இறுதியாகச் சங்கமித்த இடம் பத்திரிகை ஆசிரியர் என்றானது. அதிகாரத்தின் மிக நெருக்கமான இடங்களில் இருந்தபோதும் அதை அவர் தனக்கான தனிப்பட்ட பலனுக்காக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை அவர்மீது யாரும் சுமத்த முடியாததே அவரின் தனிவாழ்வின் நேர்மைக்குச் சான்றாகும்.

அரசின் எந்தப் பதவியிலும் இல்லாத திரு சஞ்சய் காந்தி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் நினைவாக ஒரு தபால்தலை வெளியிடப்பட்டது. அதைக் கண்டிக்கும் விதமாக அந்த விபத்தில் மரணமடைந்த கேப்டன் சுபாஷ் சாஸ்சேனாவின் தபால் தலையை துக்ளக்கில் வெளியிட்டார். எம் ஜி யார் ஆட்சியை கேலி செய்து அவர் எழுதிய சர்க்கார் புகுந்த வீடு என்ற தொடர் மிகவும் புகழ்வாய்ந்தது.

இந்து மஹா சமுத்திரம், மஹாபாரதம் பேசுகிறது, வால்மீகி ராமாயணம், எங்கே பிராமணன் ஆகிய புத்தகங்கள் ஒரு பண்பாட்டுத் துறையின் ஆரம்பநிலை வாசகன் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்.

விளையாட்டாகத்தான் அவர் பத்திரிகை ஆரம்பித்தார், ஆனால் அதைத் தொடர்ந்து நடத்தவேண்டிய கட்டாயத்தை கலைஞர் செய்தார். துக்ளக் பத்திரிகையைப் பறிமுதல் செய்து, கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு புத்தகம் வாங்கவைத்த பெருமை அன்றைய முதல்வரையே சாரும். இப்படிப்பட்ட கைங்கரியத்தைச் செய்தவரைதான் மாபெரும் அரசியல் அறிஞர் என்றும், மூத்த பத்திரிகையாளர் என்றும் கருத்துரிமையின் காவலர் என்று சிலர் சொல்லித் திரிகின்றனர்.

அதையும் தாண்டி நெருக்கடிநிலைமையைக் கலைஞர் எதிர்த்ததை பாராட்டி, மத்திய அரசை விமர்சிக்கும் உரிமை கிடைக்கும்வரை மாநில அரசை விமர்சிக்கப் போவது இல்லை என்று சொன்னவர். தணிக்கைத்துறை அதிகாரிகளிடம் " என் வேலையை நீங்கள் செய்கிறீர்கள், அதனால் எனது சம்பளத்தையும் நீங்கள்தான் வாங்கிக் கொள்ளவேண்டும்" என்று கூறி திகைக்க வைத்தவர்.

அவர் ஒரு பழமைவாதி என்று சனாதனவாதி என்று இன்று சிலர் கூறுகின்றனர். அவர் என்று தனது கொள்கைகளை மறைத்து வேஷம் போட்டார் ? அவர் சரி என்று நினைத்தத்தைச் சொன்னார், எழுதினார். இந்த நாட்டுக்கு என்று ஒரு பாரம்பரியம் உண்டு, அதற்க்கு ஒரு சிறப்பு உண்டு என்று அவர் உளமார நம்பினார். போலி அறிவுஜீவிகள் போல நடித்து இருந்தால் அவருக்கும் உலகளாவிய புகழ் கிடைத்து இருக்கும், அது வேண்டாம் என்று நினைத்தார், தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார்.

பெண்ணுரிமையை அவர் ஆதரிக்கவில்லை என்று சொல்வார்கள் எது உரிமை ? கட்டற்ற உரிமை என்பது எங்குமே இருக்க முடியாது. எல்லா உரிமைகளும் கடமைகளின் மீது அமைக்கப்பட்டவைதான். புகைபிடிப்பதும், மது அருந்துவதும், கட்டற்ற பாலியல் உறவு வைத்துக் கொள்வதும்தான் பெண்ணுரிமை என்று கூறுபவர்கள் அவர்கள் குடும்பத்து பெண்களுக்கு அதையா கூறுகிறார்கள் ?

அவர் எண்ணங்களை கூறப் பயன்படுத்தினாலும், எதிர்கருத்துக்களுக்கும் சோ இடம் அளித்தே வந்தார். அதனால்தான் வலதுசாரி கருத்துடைய திரு குருமூர்த்தி அவர்களின் கட்டுரைகளையும் அதே நேரத்தில் அதற்க்கு எதிரான கம்யூனிஸ்ட் தலைவர்களின் கட்டுரைகளும் துக்ளக்கில் வெளிவந்தன. பத்திரிகை என்பது அறிவார்ந்த விவாதங்களை உருவாகும் இடமாக இருக்கவேண்டும் அதற்க்கு எதிரும் புதிருமான தகவல்களைத் தரவேண்டும் என்பது அவர் கருத்தாக இருந்தது.

பல்வேறு தலைவர்கள் அவர்களது அரசியல் வாழ்க்கையைப் பற்றிய சித்திரங்களை துக்ளக்கில் எழுதி உள்ளனர். ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் மூத்த பிரச்சாரகர் திரு சூரியநாராயணராவும் திரு அப்துல் சமது அவர்களுக்குமான உரையாடல் ஆர் எஸ் எஸ் இயக்கம் பற்றிய ஒரு தெளிவை மக்களுக்குத் தந்தது.

எண்பதுகளில் விடுதலைப் புலிகளை பற்றித் தவறாகச் சொன்னாலே கிடைக்கும் வசைகளைத் தாண்டி அவர்கள் ஒரு தீவிரவாத இயக்கம் தான், அவர்களால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்காது என்று எச்சரித்தவர் சோ மட்டும்தான். அதைத்தான் இன்று கழகக் கண்மணிகளும் கூறுகின்றனர் என்பதுதான் நகைமுரண்.

சில ஆயிரம் விற்பனையாகும் பத்திரிகையின் ஆசிரியர் என்று சிலர் எழுதியதை பார்த்தேன். வீட்டு வாசல்படியில் பாலும், வரிசையில் இருந்து சாராயமும் விற்பனையாகும் மாநிலத்தில் ரோஜாப் பூக்கும் கள்ளிச் செடிக்கும் வேறுபாடு தெரியாதவர்கள் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

முழுவாழ்விலும் பிரிவினை சக்திகளுக்கு எதிராகவே சோ நின்றிருந்தார். ஹிந்து மதத்தைத் தாக்குவது ஒன்றே பகுத்தறிவு என்று பேசியவர்களின் இடையே நெற்றி நிறைய திருநீரோடு காட்சி அளித்தார்.

தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அவர் எடுத்த நிலைப்பாடுகள் என்னால் ஏற்கமுடியாதவைதான் என்றாலும், எழுத்துக் கூட்டி வாசிக்க ஆரம்பித்த நாள்முதலாக பல வருடங்களாக நான் படித்த ஒரு பத்திரிகையின் ஆசிரியர், பெருவாரியான மக்களின் கருத்து எப்படி இருந்தாலும் என் நெஞ்சுக்கு சரியென்று தோன்றியதை எதற்கும் அஞ்சாமல் எடுத்துரைக்க வேண்டியதின் அவசியத்தைப் புரியவைத்தவர். நடுநிலைமை என்பது எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது அல்ல, ஆனால் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அறிவுத்தியவர் அவர்.

சிலநேரங்களில் ஆசிரியர்கள் ஒரே இடத்தில் நின்றுவிடலாம் , அவர்களைத் தாண்டி அவர்கள் கற்றுக்கொடுத்தவற்றில் சரியானவற்றை மாணவர்கள் முன்னெடுப்பதுதான் ஆசிரியர்களுக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும்.

சென்று வாருங்கள் ஆசிரியரே.

ஆசிரியர் சோ அவர்களின் மறைவை ஒட்டி வலம் இதழில் வெளியான கட்டுரை

சனி, 4 அக்டோபர், 2025

அக்டோபர் 4 - வீரத் துறவி சுப்ரமணிய சிவா பிறந்ததினம்

வரலாற்றைப் பதிவு செய்து வைப்பது என்பது நமது மரபணுக்களிலேயே இல்லாத ஓன்று என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது. அதனால்தான் தகுதியில்லாதவர்களை தலைவர்களாக நாம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். கொண்டாடப்பட வேண்டியவர்களை நம் நினைவில்கூட இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறார்கள். அதுபற்றிய சிந்தனையே இல்லாமல் நாமும் பிழைத்துக்கொண்டு இருக்கிறோம். 

பாரதநாட்டின் விடுதலைப் போராட்ட வரலாறு என்பது இன்னும் எழுதி முடிக்கப்படாத மஹாகாவியமாகும். எண்ணற்ற தேசபக்தர்களின் பெயர்கள் கூட இன்னும் அதில் முழுமையாகச் சேர்க்கப்படவில்லை. பல்வேறு நிகழ்ச்சிகளை பற்றிய வரலாறு ஆவணப்படுத்தப்படவில்லை. பலரைப் பற்றிய தகவல்கள் ஒப்புக்கு சேர்க்கப்பட்டுள்ளதே அன்றி முழுமையான தகவல்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படவில்லை. 

வரலாற்றின் பக்கங்களில் புதைந்து போய் இருக்கும் தியாகி சுப்ரமணியசிவத்தின் பிறந்தநாள் இன்று. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தமிழகத்தில் தேசபக்தி கனலை மூட்டிய மூவேந்தர்கள் பாரதி, சிதம்பரம், சிவம் என்ற மூவர்தாம். சுதந்திரப் போராட்ட வீரராக, பத்திரிகையாளராக, சுதேச கிளர்ச்சியாளராக, சமூக சீர்திருத்தவாதியாக, தமிழ் ஆர்வலராக, தனித்தமிழ் முயற்சியின் ஆரம்பப்புள்ளியாக, சந்நியாசியாக, செத்த பிணத்தையும் எழுந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராட வைக்கும் வல்லமைகொண்ட சொற்பொழிவாளராக என்ற பன்முக ஆளுமையாளர் சுப்ரமணிய சிவம்.   




சுப்பிரமணிய சிவா என்று அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவம் ராஜம் ஐயர் நாகலட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு 4-10-1884 ஆம் வருடம் மதுரை அருகே உள்ள வத்தலகுண்டு என்ற ஊரில் பிறந்தார்...இவருடைய இளமைப் பருவம் வறுமையில் கழிந்தது. 12-வது வயது வரை இவர் மதுரையில் படித்தார். பின்னர் திருவனந்தபுரம் சென்று அங்கே இலவச உணவு உண்டு படித்தார். பின்னர் கோயம்புத்தூரில் ஒரு வருடம் பிரவேச தேர்வுக்காக படித்தார் இக்காலமே இவரின் தேச பக்தி அரும்பத் தொடங்கிய காலம். இக்காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த போயர் யுத்தத்தில் போயர்களின் வீரச்செயல்களை பாராட்டி ஆங்கிலத்தில் பல கவிதைகள் இயற்றியுள்ளார் (அவற்றில் ஒன்று கூட இப்பொது நமக்கு கிடைக்கவில்லை )... 1899-ல் இவருக்கும் மீனாட்சியம்மைக்கும் திருமணம் நடைபெற்றது. இல்லறத்தில் நுழைந்தாலும் தேச சேவை மறந்தாரில்லை

1906-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஆரிய சமாஜத்தை சேர்ந்த தாவுர்க்கான் சந்திரவர்மா சொற்பொழிவாற்றினார். இதனை கேட்ட சுப்பிரமணிய சிவாவின் தேசபக்தி சுடர் அனலாய் எரியத் தொடங்கியது. இதன் நோக்கம் இளைஞர்களின் மனதில் தேசபக்தியை உருவாக்கி சுதந்திர உணர்வை தூண்டுவதே ஆகும். இதனை எதிர்த்த திருவாங்கூர் சமஸ்தானம் சிவாவை திருவாங்கூவுர் சமஸ்தானத்தில் இருந்து உடனே வெளியெற உத்தரவிட்டது. இதன் பின்னர் இவர் ஊர் ஊராகச் சென்று ஆங்கில அரசுக்கெதிராக பிரச்சாரம் செய்து வந்தார்.

இரும்பு காந்தத்தை ஈர்ப்பதுபோல தேசபக்தி வ உ சிதம்பரம் பிள்ளை, பாரதி, சுப்ரமணிய சிவாவை ஒன்றாகப் பிணைந்தது. வ உ சி கப்பல் மற்றும் ஓட்டவில்லை, தொழிலார்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களையும் அவர் முன்னெடுத்தார். அவருக்கு உறுதுணையாக தனது பேச்சாற்றலால் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி போராட்டத்திற்கு தூண்டும் பணியை சிவம் செய்தார். தேசபக்தர்களை சிறையில் அடைத்து அவர்களுக்கு ஆங்கில அரசு மரியாதை செலுத்தியது. மாட்சிமை பொருந்திய மன்னரின் ஆட்சியை எதிர்த்த குற்றத்திற்கு ஒரு ஆயுள் தண்டனை, சிவத்தை ஆதரித்து உணவளித்து, இடமளித்த குற்றத்திற்காக சிதம்பரம் பிள்ளைக்கு இன்னும் ஒரு ஆயுள் தண்டனை, என்று இரட்டை ஆயுள் தண்டனை அதனை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்கவேண்டும் என்று தீர்ப்பானது. 

" நான் ஒரு சந்நியாசி, முக்தியடையும் வழியைப் பிரச்சாரம் செய்வது என் வேலை. அதன் தத்துவங்களை எடுத்து விளக்கி, அதனை அடையும் மார்க்கத்தை போதிப்பது என் வேலை. சகலவிதமான வெளிபந்தங்களில் இருந்தும் விடுவித்துக் கொள்வதே ஆத்மாவிற்கு முக்தியாகும். 

இதே போன்று ஒரு தேசத்தின் முக்தியாவது அந்நிய நாடுகளின் பிடிப்பில் இருந்து விடுவித்துக் கொள்வது, பரிபூரண சுதந்திரம் அடைவது. அதையே இந்நாடு மக்களுக்கு நான் போதிக்கிறேன். அதாவது சுதேச கல்வி, சுதந்திர லட்சியம், அதை அடையும் மார்க்கம், சுதந்திரப் பாதையில் நிற்கும் எதையும் சாத்வீக முறையில் எதிர்ப்பது, புறக்கணிப்பது இவையே ஆகும்". இது நீதிமன்றத்தில் சுப்ரமணிய சிவா அளித்த வாக்குமூலம். 

விசாரணை முடிந்தது. சிவாவுக்கு 10 வருடங்கள் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது. திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட சிவா, கம்பளி மயிர் வெட்டும் பணியிலும், மாவு அரைக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டார். இதுவே, அவருக்குப் பின்னாளில் தொழுநோயாக  மாறியது. 

சிறையில் இருந்து விடுதலையான சிவம் ஞானபானு என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அன்றய தமிழ் கவிஞர்கள் நிலையை, பணத்திற்காக செல்வந்தர்களை தகுதிக்கு மேலாக அவர்கள் புகழுவதை கிண்டல் செய்யும் விதத்தில் பாரதி எழுதிய சின்ன சங்கரன் கதை இந்தப் பத்திரிகையில்தான் வெளியானது. பாரதி, வ உ சி, வ வே சு ஐயர் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஞானபானு இதழில் தொடர்ந்து எழுதினார்கள். 

திருவளர் வாழ்க்கை கீர்த்தி தீரம் நல்லறிவு வீரம்
மருவுபல் கலையின் வல்லமை என்பவெல்லாம்
வருவது ஞானத்தாலே வையகமுழுதுமெங்கள்
பெருமைதான் நிலவிநிற்கப் பிறந்தது ஞானபானு

கவலைகள் சிறுமை நோவு கைதவம் வறுமைத்துன்பம்
அவலமாமனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமையச்சம்
இவையெல்லாம் அறிவிலாமை என்பதோர் இருளிற்பேயாம்.
நவமுறு.ஞானபானு நண்ணுக, தொலைக பேய்கள்

அனைத்தையும் தேவர்க்காக்கிஅறத்தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தியாக வளர்வது நெருப்புத் தெய்வம்
தினத்தொளி ஞானம் கண்டிர் இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே கூடிவாழ்வர் மனிதர் என்றிவைக்கும் வேதம்

பண்ணிய முயற்சியெல்லாம் பயனுற வோங்கு மாங்கே,
எண்ணிய எண்ணமெல்லாம் எளிதிலே வெற்றியெய்தும்
திண்ணிய கருத்தினோடும் சிரித்திடும் முகத்தினோடும்
நண்ணிடு ஞானபானு அதனை நாம் நன்கு போற்றின்" 

ஞானபானு பத்திரிகைக்கு பாரதி எழுதிய வாழ்த்துப் பாடல் இது. 

தொழுநோயால் பீடிக்கப்பட்ட போதிலும் தேசசேவையை சிவம் கைவிடவில்லை அவரின் நோயைக் காரணம் காட்டி, சுப்ரமணிய சிவாவை ரயிலில் பயணம் செய்யக்கூடாது என்று அரசு தடை விதித்தது. கட்டை வண்டியிலும், கால்நடையாகவும் பயணம் செய்து மக்களுக்கு அந்நிய ஆட்சியின் கொடுமையை விளக்கி பிரச்சாரம் செய்தார். 

தருமபுரி அருகே உள்ள பாப்பாராபட்டியில் உள்ள தனது ஆசிரமத்தில் தேசபந்து சித்தரஞ்சன் தாசைக் கொண்டு 23-1-1923-ல் அடிக்கல் நாட்டினார். அந்த ஆலயத்தில் பல தேச பக்தர்களின் சிலைகளை நிறுவ நினைத்திருந்தார். அவற்றுள் வ.உ.சி. சிலைக்கு முதல் நிலை கொடுக்கவும் திட்டமிட்டிருந்தார்...சுப்பிரமணிய சிவாவிற்காக எதையும் செய்யத் துணிந்த வீரவாலிபர்களும், எதையும் தரத் தயாராக இருந்த செல்வந்தர்களும் பாப்பாராட்டியில் இருந்தனர்.இவர்களிடையே வந்து சேர்ந்த மறுநாள் அதாவது 23-7-1925 வியாழக்கிழமை காலை 5 மணிக்கு சுப்பிரமணிய சிவா தனது 41-வது வயதில் தனது இவ்வுலக வாழ்வை நீத்தார். 

 சிவா வாழ்ந்த 40 வயதிற்குள் 400 வருட சாதனைகளை செய்து முடித்துள்ளார். தமிழகத்தின் பல நகரங்களில் சிவாஜி நாடகம் மூலமாக தேச பக்தியை பரப்பினார். அவரும் நாடகத்தில் பங்கெற்று நடித்துள்ளார். ராம கிருஷ்ணர் மீதும் விவேகானந்தர் மீதும் ஆழ்ந்த பற்று கொண்ட சிவா அவர்களின் நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார். 

வெள்ளி, 3 அக்டோபர், 2025

அக்டோபர் 3 - பாரதத்தின் முதல் பெண் மருத்துவர் - கதம்பினி கங்குலி நினைவுதினம்

சூரியனே அஸ்தமிக்காத ஆங்கில சாம்ராஜ்யத்தில் பட்டப்படிப்பை முறைப்படி முடித்த பெண் இங்கிலாந்து நாட்டில் அல்ல பாரத நாட்டைச் சார்ந்தவர் என்பது பலருக்கு புது தகவலாக இருக்கும். புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்கள் பெண்களை படிக்க அனுமதிக்காதாத காலத்தில், கல்கட்டா பல்கலைக்கழகம் பெண்களை அனுமதித்தது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.



1861ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் பிஹாரில் உள்ள பகல்பூர் நகரில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருந்த பிரஜாகுமார் போஸ் என்பவரின் மகளாகப் பிறந்தவர் கதம்பினி. ப்ரம்மசமாஜத்தில் தீவிரமாக செயலாற்றிக்கொண்டு இருந்த தந்தை அன்றய நடைமுறைக்கு எதிராக தனது மகளை ஆங்கிலக் கல்வி பயில வைப்பதில் ஆர்வத்தோடு இருந்தார். மகள் கதம்பினியும் படிப்பில் சிறப்பானவராகவே இருந்தார்.

தனது ஆரம்பக்கல்வியை கதம்பினி முதலில் டாக்கா நகரிலும், பின்னர் கொல்கத்தா நகரிலும் முடித்தார். பள்ளியில் இவரது ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் அமைந்தவர் துவாரகாநாத் கங்குலி. பள்ளிப்படிப்பை முடித்த கதம்பினி கல்லூரிப் படிப்புக்காக கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தார். அன்று ஆங்கில சாம்ராஜ்யத்தின் எந்த கல்லூரிகளிலும் பெண்களை அனுமதிக்கும் பழக்கம் இல்லை. துவாரகாநாத் கங்குலியின் தொடர்ந்த முன்னெடுப்பால் கொல்கத்தா பல்கலைக்கழகம் கதம்பினியை நுழைவுத் தேர்வு அனுமதித்தது. அவரோடு சரளா என்ற மாணவியும் தேர்வு எழுத இருந்தார். ஆனால் திருமணம் ஆனதால் அவர் தேர்வு எழுதவில்லை. கதம்பினி நுழைவுத்தேர்வு எழுதி வெற்றி பெற்றார். அவரும் சந்திரமுகி பாசு என்ற பெண்மணியும் 1882 ஆண்டு கொல்கத்தா பல்கலைக்கழகத்தின்  தேர்வில் வெற்றிபெற்று இந்தியாவில் ஏன் ஆங்கில சாம்ராஜ்யத்தின் முதல் பெண் பட்டதாரிகள் ஆனார்கள். அவர்களின் பட்டமளிப்பு விழா 1883ஆம் ஆண்டு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மருத்துவம் படிக்க கதம்பினி முடிவு செய்தார். ஆனால் அப்போது கல்கத்தா மருத்துவக் கல்லூரி பெண்களை அனுமதிக்கவில்லை. சென்னை மருத்துவக் கல்லூரி 1875ஆம் ஆண்டிலேயே பெண்களை மருத்துவம் படிக்க அனுமதிக்கத் தொடங்கிவிட்டது. மீண்டும் போராட்டம், அதன் பிறகு 1884ஆம் ஆண்டு கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் கதம்பினி சேர்த்துக் கொள்ளப்பட்டார். பெண்களின் வெற்றி எல்லா காலங்களிலும் ஆண்களின் கண்களை உறுத்திக் கொண்டுதான் இருக்கும். அப்படியான மனநிலையில் இருந்த ஒரு பேராசிரியர்  கதம்பினியை உடல்கூறு மருத்துவத்தில் தோல்வி அடைந்தார் என்று அறிவித்தார். எனவே மருத்துவப் பட்டம் அல்லாது மருத்துவத்தில் பட்டயம்தான் அவருக்கு வழங்கப்பட்டது.

1888ஆம் ஆண்டு கதம்பினி டூபரின் சீமாட்டி மகளீர் மருத்துவமனையில் மருத்துவராக நியமிக்கப்பட்டார். இந்தியாவில் மருத்துவத்தை தொழில்முறையில் செய்யத் தொடங்கிய முதல் பெண்மணி என்ற பெருமையும் கதம்பினி அவர்களையே சாரும், ஆனாலும் அன்றய வங்காளத்தில் இருந்த ஆங்கிலப் பெண்கள், இவருக்கான மரியாதையை அளிக்கவில்லை என்று எண்ணிய கதம்பினி மருத்துவ மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்ல முடிவு செய்தார். 1893ஆம் ஆண்டு லண்டன் சென்ற கதம்பினி அங்கே மூன்று சிறப்பு தகுதிகளுக்கான தேர்வுகளை எழுதி வெற்றிபெற்று மீண்டும் தாயகம் திரும்பினார்.

முன்னர் கிடைக்காமல் இருந்த அங்கீகாரம் இப்போது கிடைக்கத் தொடங்கியது. கொல்கத்தாவின் முக்கியமான மருத்துவராக கதம்பினி அறியப்படலானார். பலகாலமாக உடல்நலம் குன்றி இருந்த நேபாள அரச வம்சத்தின் ராஜமாதாவை நலமடைய வைத்ததன் மூலம், பல்வேறு அரச குடும்பங்கள் அவரின் சிகிச்சைக்காக அணுகத் தொடங்கினார்கள். 1923ஆம் ஆண்டு அவர் மரணிக்கும் வரை அவர் தனது மருத்துவ சேவையை தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருந்தார்.

மருத்துவதோடு சேர்ந்து பல்வேறு சமுதாயப் பணிகளிலும் கதம்பினி தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1889ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மகாசபை கூட்டத்தின் நன்றியுரை இவர் அளித்ததுதான். காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய முதல் பெண்மணி என்ற பெருமையும் இவரையே சாரும்.

ஆனந்திபாய் ஜோஷி என்ற பெண்மணி 1886ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று இருந்தாலும், அவர் தனது பணியைத் தொடங்கும் முன்னே 1887ஆம் ஆண்டு காசநோயால் இறந்து போனார். எனவே பாரத நாட்டில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண் மற்றும் மருத்துவத் தொழிலில் ஈடுபட்ட முதல் பெண் என்ற பெருமை கதம்பினி அவர்களையே சாரும்.

தனது ஆசிரியரான துவாரகாநாத்தை கதம்பினி திருமணம் செய்து கொண்டார். துவாரகாநாத் ஏற்கனவே மணமாகி மனைவியை இழந்தவர், கதம்பினியை விட பத்தொன்பது வயது மூத்தவர். எனவே அன்றய ப்ரம்மசமாஜ உறுப்பினர்கள் இந்த மணத்தை ஏற்கவில்லை. ஆனால் அதனைப் பற்றி கவலைப்படாமல் திருமணம் செய்துகொண்ட கதம்பினி - துவாரகாநாத் தம்பதியினர் மகிழ்வோடுதான் இருந்தார்கள். கதம்பினியின் வெற்றிக்கு அவர் கணவர் காரணமாகவும் இருந்தார்.

பாரத பெண்களுக்கு உதாரணமாகத் திகழும் மருத்துவர் கதம்பினி கங்குலி 1923ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் நாள் காலமானார். 

வியாழன், 2 அக்டோபர், 2025

அக்டோபர் 2 - ஸ்வாமி அபேதானந்தர் பிறந்ததினம்

ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடராக, ஸ்வாமி விவேகானந்தரின் சக தோழராக, மேற்கு நாடுகளில் வேதாந்த அறிவைப் பரப்பிய ஞானியாகத் திகழ்ந்த  ஸ்வாமி அபேதானந்தரின் பிறந்ததினம் இன்று.



கொல்கத்தாவின் வடக்குப் பகுதியில் ரஸிகலால் சந்திரா - நயன்தாரா தேவி தம்பதியினருக்கு 1866ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் நாள் பிறந்தவர் ஸ்வாமிஜி. அவரின் இயற்பெயர் காளிபிரசாத் சந்திரா என்பதாகும்.

தனது 18ஆம் வயதில் பள்ளி இறுதி வகுப்பில் இருக்கும் போது, தக்ஷிணேஸ்வரில் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்திக்கச் சென்றார். காளிபிரசாத் அவரிடம் யோகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டினார். காளிபிரசாத்தின் நாக்கில் தனது வலதுகை நடுவிரலால் காளி மாதாவின் பெயரை எழுதி அவரை தியானத்தில் ஈடுபட ராமகிருஷ்ணர் தூண்டினார். தன்னை மறந்தாள், தன் நாமம் கெட்டாள், தலைப்பட்டாள் மங்கை தலைவன் தாளே என்று அப்பர் ஸ்வாமிகள் கூறியது போல, காளிபிரசாத் அன்றே ராமகிருஷ்ணரின் சீடராக மாறினார்.

தனியறையில் கதவுகளைப் பூட்டிக்கொண்டு நீண்டநேரம் சமாதியில் அமர்வது காளிபிரசாத்தின் வழக்கமாக இருந்தது. அதனால் அவரது தோழர்கள் அவரை காளி தபசி என்று அழைக்க ஆரம்பித்தனர். ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பிறகு ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர்கள் துறவறம் மேற்கொண்டு, வேதாந்த ஞானத்தை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பரப்ப உறுதி பூண்டனர். காளிபிரசாத் துறவறம் பூண்டார், அவருக்கு ஸ்வாமி அபேதானந்தா என்ற யோக பட்டம் அளிக்கப்பட்டது. இரண்டல்ல ஒன்றேதான் உண்மை என்ற அத்வைத மரபை முன்னெடுத்தவருக்கு பேதம் என்பதே இல்லை என்ற பொருளில் பெயர் அமைந்தது சரிதானே.

நாடெங்கும் கையில் ஒரு பைசாவும் இல்லாமல் அலைந்து திரியும் பரிவ்ராஜ சன்யாசிகளின் வரிசை என்பது பாரத நாடு போன்றே என்று தோன்றினை என்று கூறவும் இயலாத பழமை வாய்ந்த ஓன்று. ஸ்வாமி அபேதானந்தாவும் நாடு முழுவதும் பத்தாண்டுகளுக்கு மேலாக பாரதம் முழுவதும் சுற்றி வந்தார். இமயமலை சாரல்களிலும், கங்கோத்ரியிலும், யமுனோத்ரியிலும் அவர் தவம் செய்தார். புகழ்பெற்ற பேச்சாளராகவும், அற்புதமான எழுத்தாளராகவும், தலைசிறந்த அறிஞராகவும், அத்வைத வேதாந்தத்தில் கரைக்கண்ட ஞானியாகவும் ஸ்வாமிஜி விளங்கினார்.

1896ஆம் ஆண்டு ஸ்வாமி விவேகானந்தரின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து சென்ற அபேதானந்தர் அங்கே அத்வைத ஞானத்தைப் பரப்பினார். அடுத்த ஆண்டு அமெரிக்கா சென்று நியூயார்க் நகரில் வேதாந்த நிலையத்தை நிறுவி அமெரிக்கா முழுவதும் பாரத ஞானமுறையை அறிமுகம் செய்து வைத்தார். அமெரிக்கா மட்டுமல்லாது கனடா, மெக்ஸிகோ, ஜப்பான், ஹாங்காங் ஆகிய நாடுகளிலும் வேதாந்தத்தை பரப்பினார்.

1922ஆம் ஆண்டு நாடு திரும்பிய ஸ்வாமிஜி திபெத் சென்று அங்கே புத்த தத்துவங்களையும் படித்தறிந்தார். 1923ஆம் ஆண்டு கொல்கத்தா நகரிலும் பின்னர் 1924ஆம் ஆண்டு டார்ஜிலிங் நகரிலும் ராமகிருஷ்ண வேதாந்த மடத்தை நிறுவினார். அதன் சார்பில் இன்றும் வெளியாகும் விஷ்வவாணி என்ற பத்திரிகையின் ஆசிரியராக 1938 வரை இருந்தார்.

ராமகிருஷ்ணரின் நற்செய்தி, ராமகிருஷ்ணரின் உபதேச மஞ்சரி, கல்வி பற்றிய சிந்தனைகள், இறப்பு என்னும் புதிர் - கடோபநிஷத், ஹிந்து தர்மத்தில் பெண்களின் பங்கு, கர்மா கோட்பாடு - செயல்பாட்டின் அறிவியலும், தத்துவமும் என்று பல்வேறு புத்தகங்களை ஸ்வாமிஜி எழுதியுள்ளார்.

1939ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் நாள் ஸ்வாமிஜி மண்ணுலகை விட்டு மறைந்தார்.

எத்தனையோ மஹான்கள் இந்த நாட்டில், அவர்கள் அனைவருக்கும் எங்கள் குரு வணக்கம்.