ஜனதா கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜனதா கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 ஜூலை, 2025

ஜூலை 8 - முன்னாள் பிரதமர் சந்திரசேகர் நினைவு தினம்

பாரதநாட்டின் எட்டாவது பிரதமராக இருந்த திரு சந்திரசேகரின் நினைவுநாள் இன்று.

சந்திரசேகரைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், எண்பதுகளின் இறுதியில் இருந்த அரசியல் நிலைமை பற்றி நாம் சற்றே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். 1984ஆம் ஆண்டு இறுதியில் அன்றைய பிரதமர் இந்திரா தனது மெய்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடெங்கும் வீசிய அனுதாப அலையினால் ராஜிவ் வரலாறு காணாத வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்தார். அவர் ஆட்சிக்காலத்தில் ராணுவத்திற்கு பீரங்கி வாங்கிய வகையில் சில அரசியல்வாதிகளுக்கு போபோர்ஸ் நிறுவனம் லஞ்சம் கொடுத்தது என்று சுவீடன் நாட்டு வானொலியில் செய்தி வெளியானது. சந்தேகத்தின் நிழல் ராஜீவின் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் படிந்தது. அதனைத் தொடர்ந்து 1989ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அதிகப்படியான இடங்களைப் பெற்று இருந்தாலும் ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கவில்லை.

ஜனதாதளம் கட்சிக்கு 143 இடங்கள் கிடைத்து இருந்தது. பாரதிய ஜனதா கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் அமைச்சரவையில் சேராமல், வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முன்வர ஜனதாதள கட்சிக்கு ஆட்சி அமைக்க குடியரசுத்தலைவர் அழைப்பு விடுத்தார். பிரதமராகும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்று சந்திரசேகர் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார். பலர் வி பி சிங்கை பிரதமராக வேண்டும் என்று கூறினர். சமரச ஏற்பாடாக தேவிலால் பெயர் முன்மொழியப்பட்டது. ஆனால் திடீர் என்று தேவிலால் வி பி சிங்கை பிரதமராக அறிவித்தார். தான் ஏமாற்றப்பட்டதாக சந்திரசேகர் நினைக்கத் தொடங்கினார்.

தனது பலத்தைக் காட்ட தேவிலால் டெல்லியில் ஒரு விவசாயிகள் ஊர்வலத்திற்கு அழைப்பு விடுத்தார். அதனை எதிர்கொள்ள வி பி சிங் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அரசு செயல்படுத்தும் என்று அறிவித்தார். இட ஒதுக்கீட்டை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சி வெடித்தது. இதற்கிடையே அயோத்தி நகரில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி குஜராத் மாநிலத்தின் சோமநாதபுரம் நகரில் இருந்து ரதயாத்திரையைத் தொடங்கினார். அந்த யாத்திரையை பிஹார் மாநிலத்தில் தடை செய்து அத்வானியையும் அன்றய பிஹார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கைது செய்தார். இதனைத் தொடர்ந்து ஜனதாதள அரசுக்கு அழைத்துவந்த ஆதரவை பாஜக விலக்கிக்கொண்டது. வி பி சிங் பதவியில் இருந்து விலகினார்.
ஒரு வருடத்திற்கும் குறைவாகவே வி பி சிங் ஆட்சி செய்ய, இன்னொரு தேர்தலுக்கு நாடு தயாராகவில்லை ஜனதாதள கட்சியின் ஒரு பிரிவு உறுப்பினர்களின் ஆதரவோடு, காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவளிக்க சந்திரசேகர் பாரத நாட்டின் எட்டாவது பிரதமராகப் பதவி ஏற்றார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா மாவட்டத்தில்  ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் 1927ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் நாள் பிறந்தவர் திரு சந்திரசேகர். அரசியல் அறிவியல் துறையில் தனது முதுகலைப் பட்டத்தை அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பெற்ற சந்திரசேகர், படிக்கும் காலத்திலேயே அரசியல் ஈடுபாட்டோடு இருந்தார். புகழ்பெற்ற சோசலிஸ்ட் தலைவர்களான  ராம் மனோகர் லோஹியா மற்றும் ஆச்சாரிய நரேந்திர தேவ் ஆகியோரின் தலைமையில் செயல்பட்டார்.

பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராகவும் பின்னர் அதே கட்சியின் உத்திரப்பிரதேச மாநில பொதுச்செயலாளராகவும் பணியாற்றினார். 1962ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். 1965ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1967ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிப்படையில் பொதுவுடைமைவாதியான சந்திரசேகர் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்க்காக குரல் கொடுத்தார். சொத்துக்கள் சில தனியார் கைகளில் குவிவதை எதிர்த்த காரணத்தால் பலநேரங்களில் அவர் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையே எதிர்க்க வேண்டி இருந்தது.

சந்திரசேகரும் அவரோடு ஒத்த கருத்துள்ள பெரோஸ் காந்தி, சத்யேந்திர நாராயண் சின்ஹா, மோகன் தாரியா, ராம்தன் ஆகியோர் இளம் துருக்கியர்கள் என்று அழைக்கப் பட்டனர். தனது எண்ணங்களை வெளிப்படுத்த சந்திரசேகர் Young Indian என்ற வாரப் பத்திரிகையை தொடங்கி அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார். பொதுவாழ்வில் இருந்து விலகி இருந்த ஜெயப்ரகாஷ் நாராயணன் அரசியலில் ஊழல் அதிகமாகி விட்டது, அதனை எதிர்க்க வேண்டும் என்று நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்கினார். லட்சியவாதியான சந்திரசேகர் அந்தப் போராட்டத்தை ஆதரித்தார்.. போராட்டத்தை எதிர்கொள்ள இந்திரா நெருக்கடி நிலையைப் பிரகடம் செய்தார். ஆளும் கட்சியில் இருந்தாலும் சந்திரசேகரும் கைது செய்யப்பட்டார்.

நெருக்கடி நிலையைத் தொடர்ந்து உருவான ஜனதா கட்சிக்கு சந்திரசேகர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஆனால் முழுமையான ஆட்சிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஜனதா ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் 1980ஆம் ஆண்டு இந்திரா பிரதமரானார். இந்திராவின் மறைவை அடுத்து நடந்த பொது தேர்தலில் அநேகமாக எல்லா எதிர்க்கட்சிகளும் தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர் சந்திரசேகர் தலைமையிலான ஜனதா கட்சி, மற்றைய சோசலிச கட்சிகளோடு இணைத்து ஜனதாதள  உருவானது. 1989ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனதா தளம் ஆட்சி அமைத்தது.

சந்திரசேகர் ஆட்சியில் இருந்த போது நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தது. நாட்டின் மதிப்பீடு பொருளாதார தர நிறுவங்களால் குறைத்து மதிப்பிடப்பட்டது. இறக்குமதியை சமாளிக்க நாட்டின் தங்கத்தை அடமானம் வைக்கும் கடினமான முடிவை சந்திரசேகர் எடுத்தார். அடுத்த பொதுத்தேர்தலை சந்திக்கலாம் என்று தீர்மானித்த ராஜிவ் ஹரியானா காவல்துறை தன்னை வேவு பார்ப்பதாக கூறி சந்திரசேகர் அரசுக்கு அளித்தது வந்த ஆதரவை விலகிக்கொண்டார். நாடு அடுத்த தேர்தலுக்கு தயாரானது. தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த ராஜிவ் தமிழ்நாட்டில் மனித வெடிகுண்டால் பலியானார். அந்த தேர்தலில் அதிகப்படியான இடங்களைப் பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க, நரசிம்மராவ் பிரதமரானார்.

1977, 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து பாலியா நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான சந்திரசேகர் 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் நாள் காலமானார்.

லட்சியத்தில் உறுதியும், கொள்கையில் பிடிப்பும், நேர்மையும் கொண்ட சந்திரசேகர் போன்ற தலைவர்களின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கட்டும். 

செவ்வாய், 3 ஜூன், 2025

ஜூன் 3 - போராளியாகவே வாழ்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் பிறந்தநாள்

போராட்டகுணம் கொண்ட தொழில்சங்கவாதி, ஜனநாயகத்தைக் காக்க இந்திராவை எதிர்த்து நின்ற வீரர், சிறந்த பாராளுமன்றவாதி, மத்திய அமைச்சர், எழுத்தாளர், பல மொழி விற்பன்னர், பத்திரிகையாளர் என்ற பன்முக பரிமாணம் கொண்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் பிறந்தநாள் இன்று.

மங்களூரில் பிறந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் கிருத்துவ இறையியல் படிப்பதற்காக பெங்களூரு வந்தார். ஆனால் அதில் சலிப்புற்று மும்பைக்கு குடிபெயர்ந்தார். அங்கே சோசியலிச சித்தாந்தவாதியாக மாறி, ரயில்வேதுறை தொழிலார்களின் தலைவராக உருவானார். ராம்மனோஹர் லோகியாவின் சீடராக, சோஷலிச கொள்கைகளை முன்னெடுப்பவராக மாறினார். மும்பை மாநகராட்சியின் உறுப்பினனராக 1961 முதல் செயல்பட்டார்.

இன்றுபோல் அன்றும் பொருளாதாரத்தில் முன்னேறவேண்டும் என்ற முனைப்போடு உள்ள மக்களை ஈர்த்துக்கொண்டு இருந்தது. அந்த நகரத்தில் குடியிருக்கும் அமைப்புசாரா மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அப்போது ஜார்ஜ் வடிவமைத்தார்.
ரயில்வே துறை தொழிலாளர்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி சார்பாக தெற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1975ஆம் ஆண்டுஇந்தியாவில் எல்லா ஜனநாயக முறைகளையும் இல்லாமலாக்கி இந்திரா நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். எல்லா எதிர்க்கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமறைவானார். சர்வாதிகாரத்தை எதிர்த்து ஆயுதம் தாங்கிய புரட்சியை உருவாகும் முயற்சியில் ஈடுபட்டார். பரோடா ரயில்பாலத்தை வெடிவைத்து தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். இறுதியில் கொல்கத்தா நகரில் கைது செய்யப்பட்டார்.

1977ஆம் ஆண்டு நெருக்கடி நிலை விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து நடைபெற்ற தேர்தலில் சிறையில் இருந்தவாறே போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் அமைந்த ஜனதா கட்சியின் ஆட்சியில் தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். குறுகிய காலத்தில் ஜனதா ஆட்சி கலைய, மீண்டும் இந்திரா பிரதமரானார்.
1989ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற ஜார்ஜ் பெர்னாண்டஸ் வி பி சிங் தலைமையில் அமைந்த ஜனதாதள் அரசில் ரயில்வேத்துறை மந்திரியாகப் பதவி வகித்தார். அந்தக் காலகட்டத்தில்தான் கொங்கன் ரயில்வே திட்டம் தொடங்கப்பட்டது.

சமதா கட்சியின் நிறுவனரான 1996ஆம் ஆண்டு முதல் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாரதிய ஜனதா கட்சியுடன் நெருங்கிய உறவில் இருந்தார். வாஜ்பாய் அரசில் ராணுவ அமைச்சராகப் பணியாற்றினார். இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியதும், கார்கில் யுத்தத்தில் வெற்றி பெற்றதும் இந்த காலகட்டத்தில்தான்.
கார்கில் போரில் இறந்த வீரர்களின் உடலை கொண்டுசெல்லும் சவப்பெட்டியில் வாங்கியதில் ஊழல் செய்தார் என்று காங்கிரஸ் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை இவர் மீது சுமத்தியது. ஆனால் விசாரணை முடிவில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டார்.

கொங்கணி, துளு, ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், மலையாளம், உருது, லத்தின் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். 1967 முதல் 2004 வரை ஒன்பது முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்.


உடல்நலம் சரியில்லாது இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் 2019ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் நாள் காலமானார்.  

வியாழன், 29 மே, 2025

மே 29 - முன்னாள் பிரதமர் சரண்சிங் நினைவு தினம்


விடுதலைப் போராட்ட வீரரும், உத்தரபிரதேசத்தில் நெடுங்காலம் அமைச்சராகவும், காங்கிரஸ் அல்லாத கட்சியின் சார்பாக முதல்முதலில் முதல்வராகவும், இந்திய நாட்டின் மிகக் கூறிய கால பிரதமராகவும், வட இந்திய விவசாயிகளின் தன்னிகரில்லா தலைவராகவும் விளங்கிய சவுத்திரி சரண்சிங் நினைவுதினம் இன்று.

ஹரியானவைச் சார்ந்த முதல் விடுதலைப் போரின் முன்னணி தலைவராக இருந்த பாலாபாக் அரசர் ராஜா நாகர்சிங் பரம்பரையில் பிறந்தவர் சரண்சிங் அவர்கள். விடுதலைப் புரட்சியின் முடிவில் ராஜா நாகர்சிங் ஆங்கில அரசால் மரணதண்டனை விதிக்கப்பட, அவர் குடும்பம் ஹரியானாவில் இருந்து உத்திரபிரதேசத்திற்கு குடி பெயர்ந்தது. அந்தப் பரம்பரையில் 1902ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாள் சரண்சிங் பிறந்தார்.
அறிவியலில் முதுகலைபட்டமும், சட்டப் படிப்பும் முடித்த சரண்சிங் கசியாபாத் நகரில் தனது வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். தனது 34ஆவது வயதில் உத்திரபிரதேச சட்டசபைக்கு தேர்வானார்.
காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு பலமுறை சிறை தண்டனை அனுபவித்தார்.

1937, 1946, 1952, 1962 மற்றும் 1967ஆம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றார். இந்த காலகட்டங்களில் பல்வேறு துறைகளுக்கான அமைச்சராக பணியாற்றினார். முதல் முறை தேர்வானபோதே விவசாயிகளின் நலன்களை காக்கும் பல்வேறு திட்டங்கள் உருவாக வாதாடினார். அவைகளில் பலவற்றை இன்று பல்வேறு மாநிலங்கள் சட்டமாக்கி உள்ளது.

இந்திய மனப்பான்மைக்கு சோவியத் வழிமுறையிலான கூட்டு விவசாயம் சரிவராது, விவசாய நிலத்தின் மீதான விவசாயிகளின் உரிமை என்பது அவர்களின் சுயமதிப்பு சார்ந்தது என்று நேரு முன்வைத்த கூட்டு விவசாய முறையை எதிர்த்துப் பேசியதால் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டார்.

பின்னர் தனிக் கட்சியை உருவாக்கி உத்திர பிரதேச முதல்வராக தேர்வானார். காங்கிரஸ் கட்சி அல்லாத முதலாவது முதலமைச்சர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் சரண்சிங், பல்வேறு பதவிகளில் இருந்தாலும் ஊழலை ஏற்றுக்கொள்ளாத, உறுதியான, அரசு செலவழித்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் சரியானபடி விளக்கம் கேட்கும் நேர்மையாளராக இருந்தார்.
இந்திரா கொண்டுவந்த நெருக்கடி நிலையின் போது பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களோடு சரண்சிங்கும் கைதானார். அதனை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் உருவான ஜனதா கட்சி அரசில் உதவிப் பிரதமராக பதவி வகித்தார்.

உள்கட்சி பூசலால் மொரார்ஜி தேசாய் பதவி விலகியபோது பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் அவருக்கான ஆதரவை இந்திரா விலக்கிக் கொள்ள சரண்சிங் பதவி விலகினார்.

1985ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சரண்சிங் 1987ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் நாள் காலமானார்.

லக்னோ விமான நிலையம், மீரட் பல்கலைக்கழகம் ஆகியவைகளுக்கு இவர் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இவரது பிறந்த தினம் விவசாயிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.