வெள்ளி, 25 அக்டோபர், 2019

கேலிச்சித்திர கலைஞர் R K லக்ஷ்மன் பிறந்தநாள் - அக்டோபர் 24

பாரதம் அப்போதுதான் ஆங்கில ஆட்சியின் பிடியில் இருந்து விடுதலை அடைந்து இருந்தது. அந்நியர் ஆட்சி அகன்றதால் இனி நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்ற நம்பிக்கையை மக்களிடம் அரசியல்வாதிகள் விதைத்துக்கொண்டு இருந்தனர். அரசியலமைப்பு சட்டம் நிறைவேறி, பாரதம் தன்னை ஒரு ஜனநாயக குடியரசு நாடாக அறிவித்து இருந்தது. வயது வந்த அனைவரும் ஒட்டுப் போட்டு தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முதலாவது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற இன்னும் ஒரு ஆண்டு காலம் இருந்தது.



பாராளுமன்றத் தேர்தல், ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு,ஐந்தாண்டு திட்டங்கள், சீனா உடனான போர், நேரு மறைவு, லால் பகதூர் சாஸ்திரி பிரதமராகப் பொறுப்பேற்றல், பாகிஸ்தானுடனான போர், தாஷ்கண்ட் ஒப்பந்தம், சாஸ்திரி மறைவு, இந்திரா பிரதமராகுதல், காங்கிரஸ் கட்சி பிளவு அடைதல், பாரதம் சோசலிச சித்தாந்தத்தில் கரைதல், வங்கிகள் தேசியமயமாக்கல், மன்னர் மானியம் ஒழிப்பு, வங்காள தேச விடுதலைக்காக மீண்டும் இந்தியா பாகிஸ்தான் போர், நெருக்கடி நிலை, ஜனதா கட்சி ஆட்சி, இரண்டரை ஆண்டுகளில் அதுவும் கவிழ்தல், மீண்டும் இந்திரா, பஞ்சாப் தீவிரவாதம், பொற்கோவிலில் ராணுவம் நுழைதல், இந்திராவின் படுகொலை, ராஜிவ் பதவி ஏற்பு , டெல்லியில் சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள், போபால் விஷவாயு கசிவு, போபோர்ஸ் பீரங்கி ஊழல், ஜனதாதளத்தின் சார்பில் வி பி சிங், அவரைத் தொடர்ந்து சந்திரசேகர் பிரதமராகுதல், ராஜிவ் படுகொலை, நரசிம்மராவ் பிரதமராகுதல், பொருளாதார தாராளமயமாக்கல், மீண்டும் தேவ கௌடா மற்றும் குஜரால் பிரதமர் பதவிக்கு வருதல், பாரதிய ஜனதா கட்சி சார்பில் வாஜ்பாய் பதவி ஏற்றல், கார்கில் போர். மிகச் சரியாக பாரதம் விடுதலை பெற்ற ஐம்பது ஐந்து கால வரலாற்றை சுருக்கமாகச் சொன்னால், இப்படி சொல்லி முடிக்கலாம்.

இந்த வரலாற்றை அருகில் இருந்து எதுவும் பேசாமல், சாட்சியாக மட்டும் இருந்து கவனித்து பதிவு செய்த ஒரு மனிதர் உண்டு. அவருக்கு பெயர் கூடக் கிடையாது. வேண்டுமானால் நாம் அவரை திருவாளர் பொதுஜனம் ( The common man ) என்று பெயரிட்டு அழைக்கலாம். அவரது உடையை இந்தியாவில் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியிலும் மொத்தமாகப் பார்க்க முடியாது. ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஒவ்வொன்றாய் எடுத்துப் போட்டு உருவான ஆடை அது. ஒரு பஞ்சாபி தென்னிந்தியரில் இருந்து மாறுபட்டு இருக்கலாம். ஒரு வங்காளி பீஹாரியைப் போல இல்லாமல் இருக்கலாம். ஆனால் மொத்த பாரதப் பிரஜைக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது, நாட்டில் தன்மீது அரசியல்வாதிகளால், பணம் படைத்தவர்களால் நடத்தப்படும் கொடுமைகள் அத்தனையும் பார்த்துக் கொண்டு, செய்வதறியாமல் தவித்து நிற்பதோடு, வாயைத் திறக்காமல் அத்தனையையும் சகித்துக் கொண்டு இருப்பதுதான். அப்படியான மக்களின் பிரதிநிதி பேசவா செய்வார் ? அவர் எல்லாவற்றையும் பேசாமலேயே பார்த்துக் கொண்டு இருப்பார். ஆனால் அவர் பேசவேண்டியவற்றை அவரது முகபாவங்களே காட்டி விடும். அப்படியான மக்களின் பிரதிநிதியை உருவாக்கிய கேலிச்சித்திர கலைஞர் ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி லக்ஷ்மன் சுருக்கமாக ஆர் கே லக்ஷ்மன் அவர்களின் பிறந்த தினம் இன்று.



பாரதத்தின் முக்கியமான கதை சொல்லிகளின் ஒருவரான திரு ஆர் கே நாராயணனின் சகோதரர் ஆர் கே லக்ஷ்மன். இவர் தந்தை பள்ளி தலைமை ஆசிரியர். ஆறு மகன்களும், இரண்டு பெண்களும் உள்ள பெரிய குடும்பத்தின் கடைசி பிள்ளை லக்ஷ்மன். தந்தை மைசூரில் பணி புரிந்ததால், லக்ஷ்மன் படிப்பு மைசூர் நகரிலேயே நடைபெற்றது. சிறு வயதில் இருந்தே தரைகளிலும், சுவர்களிலும், பள்ளி புத்தகங்களிலும் படங்கள் வரைவது லக்ஷ்மணின் பழக்கம். இவரின் சிறு வயதிலேயே தந்தை இறந்து விட்டதால், தனது சகோதர்கள் ஆதரவில் லக்ஷ்மன் வளர்ந்தார். மைசூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். படிக்கும் போதே பல்வேறு பத்திரிகைகளுக்கு படம் வரைந்து கொடுப்பது இவரின் பகுதி நேரத் தொழிலாக இருந்தது.

ஸ்வராஜ்யா, பிளிட்ஸ், ஹிந்து போன்ற பத்திரிகைகளுக்கு படம் வரைந்து கொண்டிருந்த லக்ஷ்மன், Times of India பத்திரிகையில் இணைந்து கொண்டார். அப்போது அவரோடு சித்திரக்காரராக பணியாற்றியவர் மகாராஷ்டிராவின் முக்கியத் தலைவராக பின்னாளில் உருவெடுத்த பால் தாக்கரே. அப்போது உருவானவர்தான் இந்த திருவாளர் பொதுஜனம்.

சிறுது சிறிதாக உருமாறி, பாரத பிரஜைகளின் ஒட்டு மொத்த உருவமாக, அவர்களின் மனசாட்சியாக மாறியவர் அவர். ஐம்பதாண்டுகால பாரத நாட்டின் வரலாற்றை திருவாளர் பொதுஜனத்தின் பார்வையில் பார்ப்பது என்பது நமது வரலாற்றை நாமே மீள்பார்வையை பார்ப்பதாகும். கேப்டன் கோபிநாத் தொடங்கிய டெக்கான் விமான நிறுவனத்தின் அடையாளமாகவும் திருவாளர் பொதுஜனமே இருந்தார். திருவாளர் பொதுஜனத்திற்கு பூனா நகரிலும் மும்பையிலும் சிலைகள் உள்ளன.



 புகழ்பெற்ற நடனக் கலைஞரும் திரைப்பட நடிகையுமான பேபி கமலா என்பவரை லக்ஷ்மன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த மணவாழ்வு வெற்றிகரமாக அமையவில்லை. முறையான விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் கமலா என்ற பெயர் கொண்ட இன்னொரு பெண்மணியை அவர் மணந்து கொண்டார்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மன் 2015ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் காலமானார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக