திங்கள், 30 ஜூன், 2025

ஜூன் 30 - பாரத ரத்னா C N R ராவ் பிறந்தநாள்


சி வி ராமன், அப்துல்கலாம் ஆகியோரைத் தொடர்ந்து அறிவியல் துறைக்கான பங்களிப்புக்கு பாரத நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற மூன்றாவது இந்தியரான திரு சிந்தாமணி நாகேஸ ராமச்சந்திர ராவ் அவர்களின் பிறந்தநாள் இன்று

பெங்களூரு நகரைச் சார்ந்த ஹனுமந்த நாகேஸ ராவ் - நாகம்மா தம்பதியினருக்கு 1934ஆம் ஆண்டு பிறந்தவர் திரு ராவ். ஒரே மகனான அவருக்கு தாய் இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தையும் தந்தை ஆரம்பநிலை அறிவியல் மற்றும் ஆங்கிலத்தை வீட்டில் இருந்தவாறே கற்பித்தனர். நேரடியாகவே ஆறாம் வகுப்பில் சேர்ந்த திரு ராவ் 1947ஆம் வயதில் தனது பதின்மூன்றாம் வயதில் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

தனது பதினேழாம் வயதில் வேதியல்துறையில் இளங்கலை பட்டத்தை மைசூர் பல்கலைக்கழகத்தில் இருந்தும், முதுகலைப் பட்டத்தை பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் இருந்தும் அதன் பின்னர் தனது இருபத்தி நான்காம் வயதில் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து தனது முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

அதன் பிறகு பாரதம் திரும்பிய ராவ் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் ( Indian Institute of Science - Bangalore ) விரிவுரையாளராகவும் அதன் பின்னர் கான்பூர் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ( Indian Institute of Technology - Kanpur ) பேராசிரியராகவும், பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சிறப்பு அழைப்பாளராகவும் பணியாற்றிவருகிறார்.

பல்வேறு அறிஞர்களோடு இணைந்து திரு ராவ் ஏறத்தாழ இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளையும் ஐம்பதிற்கும் மேலான நூல்களையும் எழுதி உள்ளார். பாரத பிரதமரின் அறிவியல் ஆலோசகராகவும் திரு ராவ் பணியாற்றியுள்ளார். இவரது பங்களிப்புக்காக ஐம்பதிற்கும் பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்து உள்ளன.

1968ஆம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாயக் விருது, 1974ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது, 1985ஆம் ஆண்டு பத்மவிபூஷன் விருது ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டது.  இவை அனைத்துக்கும் மகுடம் வைத்தது போல 2014ஆம் ஆண்டு பாரதத்தின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருது திரு ராவ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இன்றய காலகட்டத்தில் நாட்டிற்கு பல்வேறு துறை விற்பன்னர்களின் தேவை மிக அதிகமாக உள்ளது. திரு ராவ் போன்று திறமையான அறிஞர்கள் நாட்டின் எல்லா பகுதிகளில் இருந்தும் வரட்டும். அவர்களுக்கு ராவ் போன்றவர்களின் வாழ்கை உந்துசக்தியாக இருக்கட்டும். 

ஞாயிறு, 29 ஜூன், 2025

ஜூன் 29 - அணுசக்தி விஞ்ஞானி P K ஐயங்கார் பிறந்தநாள்


பாரத நாட்டின் முக்கியமான அணுசக்திதுறை விஞ்ஞானியான திரு பத்மநாப கோபாலகிருஷ்ண ஐயங்காரின் பிறந்தநாள் இன்று.

1931ஆம் ஆண்டில் பிறந்த திரு ஐயங்கார் இயற்பியல்துறையில் தனது முதுகலைப் படிப்பை கேரள மாநிலத்தில் உள்ள திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் முடித்தார். Tata Institute of Fundamental Research நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கிய ஐயங்கார், இந்திய அணு சக்தி துறை தொடங்கப்பட்ட உடன் அதில் இணைத்தார். கனடா நாட்டின் புகழ்பெற்ற புரூக்ஹவுஸ் என்ற அறிஞரோடு இணைத்து பணியாற்ற நாட்டின் சார்பாக அனுப்பப்பட்டார்.

பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயற்பியல்துறை தலைவராகவும் பின்னர் அதே நிறுவனத்தின் தலைவராகவும் திரு ஐயங்கார் பணியாற்றினார். 1974ஆம் ஆண்டு முதல் முதலாக பாரதம் அணுகுண்டு வெடிப்பு சோதனையை நிகழ்த்தியபோது அதில் முக்கிய பங்கு வகித்தார். அவரது சேவையைப் பாராட்டி அவருக்கு 1975ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு இந்திய அணுசக்திதுறையின் ( Atomic Energy Commission of India ) மத்திய அரசின் அணுசக்தித்துறையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

அவரது தலைமையின்கீழ் அணுசக்தித்துறையில் பல்வேறு புதிய ஆராச்சிகளும் முன்னெடுப்புகளும் தொடங்கப்பட்டன. ஆராய்ச்சிசாலையில் இருந்து கிடைக்கும் தகவல்களைக் கொண்டு உடனடியாக மக்களுக்கு பயன்படும் தொழில்நுட்பங்கள் தகுதியான தொழில்சாலைகளுக்கு வழங்கப்பட தனியான பிரிவை அவரை நிறுவினார்.

ஹோமிபாபா, விக்ரம் சாராபாய், ராஜாராமண்ணா என்ற வரிசையில் நாட்டின் புகழ்பெற்ற விஞ்ஞானியான திரு ஐயங்கார் 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் நாள் தனது எண்பதாவது வயதில் காலமானார்.  

சனி, 28 ஜூன், 2025

ஜூன் 28 - தாராளமயமாக்கலின் நாயகன் பிரதமர் நரசிம்மராவ் பிறந்தநாள்

நேரு குடும்பத்தைச் சேராத முதல் காங்கிரஸ் பிரதமர், தென்னிந்தியாவைச் சார்ந்த முதல் பிரதமர், தனது  பதவிக்காலத்தை முழுவதும் பூர்த்தி செய்த நேரு குடும்பத்தைச் சாராத முதல் பிரதமர், வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், எழுத்தாளர்,   பத்திரிகையாளர்பல்மொழி விற்பன்னர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பிரதமர் என்ற பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் திரு நரசிம்மராவ் அவர்கள். 

1921ஆம் ஆண்டு அன்றய ஹைராபாத் நிஜாமின் ஆளுகைக்கு உள்பட்ட இன்றய தெலுங்கானா மாநிலத்தில் பிறந்தவர் திரு ராவ். சிறுவயதிலேயே உறவினர் குடும்பத்தினருக்கு தத்து கொடுக்கப்பட்டார். தனது ஆரம்ப கல்வியை கரீம்நகர் மாவட்டத்திலும் பட்டப்படிப்பை உஸ்மானியா பல்கலைக்கழகத்திலும் முடித்தார். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை பூர்த்தி செய்தார்.

தெலுங்கு, மராட்டி, ஹிந்தி, சமிஸ்க்ரிதம், தமிழ், ஒரிய மொழி, வங்க மொழி, குஜராத்தி, கன்னடம், உருது ஆகிய பாரதீய மொழிகளிலும் ஆங்கிலம், பிரெஞ்சு, அரபி, பெர்சியன், ஸ்பானிஷ், ஜெர்மன் ஆகிய உலக மொழிகளிலும் புலமை பெற்றவர் நரசிம்மராவ்.

படிக்கும் காலத்திலேயே ஹைதெராபாத் நிஸாமின் ஆட்சியை எதிர்த்து கொரில்லா முறையில் போரிடும் ஒரு குழுவை உருவாக்கினார். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக தனது வாழ்வின் இறுதி வரை பணியாற்றினார். 1957, 1962, 1967, 1972 ஆகிய நான்கு சட்டமன்ற தேர்தல்களில் மந்தானி தொகுதியில் வெற்றி பெற்று ஆந்திர சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 1977,1980 மற்றும் 1991ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல்களில் ஆந்திர மாநிலத்தில் இருந்தும், 1984 மற்றும் 1989 தேர்தல்களில் மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்தும் 1996ஆம் ஆண்டு ஒடிஷா மாநிலத்தில் இருந்தும் நாடாளுமன்றத்துக்கு தேர்வானார்.

1971ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் 4ஆவது முதல்வராக பதவி ஏற்றார். நில உச்சவரம்பு திட்டம் போன்ற நில சீர்திருத்த சட்டங்களை கடுமையாக அமுல் படுத்தினார். 1977ஆம் ஆண்டு நாடு முழுவதும் இந்திராவுக்கு எதிரான அலை வீசிய போதும் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்வானார்.

1980ஆம் ஆண்டு மீண்டும் பிரதமரான இந்திராவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த ராவ், மத்திய அமைச்சராக பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றினார். மத்திய உள்துறை, வெளியுறவு துறை, பாதுகாப்பு போன்ற துறைகளில் அவர் தனது பங்களிப்பை அளித்தார்.

கட்சி அவரின் திறமைகளை பயன்படுத்தாத காலங்களில் அவர் கட்சி தலைமையை குறைகூறுவதற்கு பதிலாக பல்வேறு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள முன்னேற்றங்களை பற்றி தெரிந்து கொண்டார். அதுபோன்ற காலகட்டங்களில் சில நூல்களை எழுதினார், பல நூல்களை மொழிபெயர்ப்பு செய்தார். எண்பதுகளின் ஆரம்ப காலங்களிலேயே அவர் கணிப்பொறியை உபயோகிப்பது பற்றி கற்றுக்கொண்டார். ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறுபது வயதில் கற்றுக்கொள்வது என்பது எவ்வளவு கடினம் என்பது நமக்கெல்லாம் தெரியும்தானே

1991ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் அநேகமாக அரசியலில் இருந்து விலகும் எண்ணத்திலேயே நரசிம்ம ராவ் இருந்தார். ஆனால் காலத்தின் கணக்கு வேறுமாதிரியாக இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த ராஜிவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டார். தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆனால் நாடாளுமன்றத்தில் அதிக இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி இருந்தது. சோனியா தலைமை ஏற்கவேண்டும் என்று ஒரு சாரார் கூற, நேரு குடும்பத்தின் தலையீடு இனி வேண்டாம் என்று சிலர் கூற, பாரதம் முழுவதும் தெரிந்த தலைவர்கள் எவரும் காங்கிரஸ் கட்சியில் இல்லாமல் போக, வயதானவரும், பெருமளவு ஆதரவாளர்கள் இல்லாதவரும், அடுக்கு மொழி வசனங்களால் பொதுமக்களை உணர்ச்சிவசப் படுத்தும் மொழி ஆளுமை இல்லாதவரும், தற்காலிக தலைவராக மட்டுமே இருப்பார் என்ற கருத்தில் சமரச தலைவராகவும், பிரதமராகவும் நரசிம்மராவை காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுத்தது. 

ஆந்திர மாநிலத்தின் நந்தியால் தொகுதியில் இருந்து ராவ் மக்களவைக்கு தேர்வானார். வாமனரூபம் என்று தவறாக எடை போடப்பட்ட நரசிம்மம் ஓங்கி உலகளந்த திரிவிக்ரமனாக தனது ஆளுமையை காட்டியது

அதிக எண்ணிக்கையிலான கட்சி என்ற நிலையில் இருந்து அவர் அறுதி பெரும்பான்மை கொண்ட கட்சி என்ற நிலைக்கு மாறினார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி உறுப்பினர்களுக்கு அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க லஞ்சம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

ஏழைகளுக்கு உதவுவது என்பது நல்ல எண்ணம்தான். ஆனால் உதவ வேண்டும் என்பதற்காகவே மக்களை ஏழைகளாக வைத்திருப்பது என்பது சரியல்ல. முதல் பிரதமர் நேருவிற்கு இருந்த அதீத சோசலிச சிந்தாந்த விருப்பு என்பது இந்திரா காலத்தில் தொழிலதிபர்கள் மீதான வெறுப்பாக மாறியது. நூறு ரூபாய் சம்பாதித்தால் தொண்ணூற்று ஐந்து ரூபாயை அரசுக்கு வரியாக அளிக்கவேண்டும் என்ற திட்டங்கள் இந்த நாட்டில் இருந்தன. ஒரு தொழிலதிபர் என்ன தயாரிக்க வேண்டும், எப்படி தயாரிக்கவேண்டும், அதை எங்கே எப்படி, எந்த எண்ணிக்கையில் தயாரித்து  எந்த அளவு லாபத்தில் விற்கவேண்டும் என்பதை டெல்லியில் அமர்ந்துகொண்டு சில அதிகாரிகள் தீர்மானித்துக் கொண்டு இருந்தார்கள்.

ஒரு தொலைபேசி இணைப்பு கிடைக்க ஏழு ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்த காலம், இரு சக்கர வாகனம் வேண்டும் என்றால் அதன் விலையைப் போல ஒரு மடங்கு பணத்தை லஞ்சமாக அளிக்க வேண்டும் அல்லது அந்நிய நாடு செலவாணி கொடுத்து வாங்க வேண்டும். நான்கு சக்கர வாகனம் என்றால் அது பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே என்று இருந்த காலம். தவறான பொருளாதார கொள்கையால் நாடு திவாலாகும் நிலையில் இருந்தது. வெளிநாட்டு இறக்குமதி கூடி, ஏற்றுமதி குறைந்து, அந்நிய செலவாணி என்பது இல்லாமலேயே இருந்தது. ரிசர்வ் வங்கியின் கையில் இருந்த தங்கம் அடகு வைக்கப்பட்டு, அந்நிய செலவாணி கடனாகப் பெறப்பட்டது.

பொருளாதார சீர்குலைவு, கடந்த மூன்று ஆண்டுகளாக நிலையான மத்திய அரசு இல்லாததால் உருவான குழப்பம், பிரதமராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜிவ் காந்தியின் கொடூரமான மரணம் என்று எல்லா திசையிலும் பிரச்சனைகள், இதற்க்கு நடுவில் பாரத நாட்டில் நாடாளுமன்றத்தின் இரண்டு அவையிலும் உறுப்பினராக இல்லாத 70 வயதான ராவ் நாட்டின் ஒன்பதாவது பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டார். நிலைமையை புரிந்து கொண்ட ராவ் துணிச்சலான முடிவுகளை எடுக்கத் தொடங்கினார். அதிகாரியாக மட்டுமே பணி புரிந்த மன்மோகன்சிங்கை மத்திய நிதியமைச்சராக நியமித்தார். பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டது. தொழித்துறையின் பல்வேறு கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப் பட்டன. இந்திய நாணயத்தின் மதிப்பு குறைக்கப்பட்டது. வருமானவரி, சுங்கவரி உள்பட பல்வேறு வரிவிகிதங்கள் குறைக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டன. குறிப்பிட்ட சில துறைகளைத் தவிர மற்ற தொழில்களில் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப் பட்டது. அரசின் பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. அடக்கி வைக்கப்பட்டு இருந்த தேசத்தின் ஆன்மா விழித்துக் கொண்டது. மிகக் குறுகிய காலத்தில் பாரத பொருளாதாரம் பல்வேறு முனைகளில் பெரும் முன்னேற்றத்தை அடைந்தது.

ராவின் ஆட்சி காலத்தில் பாரதம் அணுகுண்டு சோதனை செய்யும் நிலைமைக்கு வெகு அருகில் இருந்தது. ஆனால் புத்தர் மீண்டும் ஒரு முறை சிரிக்க இன்னும் கொஞ்ச காலம் காத்துக் கொண்டு இருக்க வேண்டி இருந்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய கும்மட்டம் உடைக்கப்பட்டது. அதை தொடர்ந்து நாடெங்கும் கலவரம் வெடித்தது. மும்பை நகரில் தொடர் குண்டுவெடிப்பு, லத்தூர் நகரில் நிலநடுக்கம் என்று பல்வேறு இன்னல்கள் உருவானது.

மும்பை பங்குச்சந்தையின் தரகர் ஹர்ஷத் மேத்தா பிரதமருக்கு தான் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டினார். பரபரப்பான திருப்பங்களும், பல்வேறு குற்றச்சாட்டுகளும் இருந்தாலும் நரசிம்மராவ் தனது பதவிக்காலத்தை முழுவதுமாக பூர்த்தி செய்தார். ஆனாலும் 1996ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான வெற்றியைப் பெற முடியவில்லை. முதன் முதலாக வாஜ்பாய் தலைமையில் பாஜக அரசு பதவி ஏற்றது. அவரும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவி விலக தேசிய முன்னணியின் சார்பில் தேவ கௌடா பதவி ஏற்றார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை சீதாராம் கேசரிக்கும் அவர் பின் சோனியா காந்திக்கும் சென்றது. காங்கிரஸ் கட்சி ராவைப் புறக்கணிக்கத் தொடங்கியது. அவர் கொண்டு வந்த பொருளாதா சீர்திருத்தங்களின் பெருமையை அது ராஜிவ் காந்திக்கு சொந்தமானது என்று கூறத் தொடங்கியது.

பொதுவாழ்வில் இருந்து மெல்ல மெல்ல விலகிய ராவ் 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் நாள் டெல்லியில் காலமானார். அவரது உடலைக் கூட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் வைத்து மரியாதை செலுத்த சோனியா காந்தி சம்மதிக்கவில்லை. அவரது இறுதிச் சடங்குகள் அவர் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக ஆந்திராவில் நடத்தப் பட்டது. பாரத தேசம் என்பதும் அதன் தலைமைப் பதவி என்பதும் நேரு குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானது, வேறு யாருக்கும் அதற்கான தகுதியோ பெருமையோ இல்லை என்ற நேரு குடும்பத்தின் கருத்து மிகவும் தெளிவாக வெளியானது.

மிகவும் கடினமான காலகட்டத்தில் இந்த நாட்டை வழிநடத்திச் சென்று, இன்று கிடைத்திருக்கும் பல்வேறு வசதிகளுக்கும் முன்னேற்றத்திற்கும் காரணமான திரு நரசிம்மராவை அவரது பிறந்தநாள் அன்று நினைவு கூர்ந்து அவரது சேவைகளுக்காக நன்றி செலுத்துகிறோம். 

வெள்ளி, 27 ஜூன், 2025

ஜூன் 27 - ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அகிலன் பிறந்தநாள்


இந்திய மொழிகளின் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் ஞானபீட விருதை தனது சித்திரப்பாவை நாவலுக்காகப் பெற்ற எழுத்தாளர் அகிலனின் பிறந்தநாள் இது.

இன்றய புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்காளூரில் 1922ஆம் ஆண்டு பிறந்தவர் திரு அகிலன். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவர் தனது பள்ளிப்படிப்பை பெருங்காளூரில் முடித்தார். படிக்கும் வயதிலேயே காந்திய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். நாடு விடுதலை அடைந்த பிறகு ரயில்வே அஞ்சல் துறையிலும் பின்னர் அனைத்திந்திய வானொலி நிலையத்திலும் வேலை பார்த்தார்.

பள்ளியில் படிக்கும்போதே சிறுகதைகள் எழுதத் தொடங்கிய அகிலனுக்கு அவரது படைப்புகளை எழுதும் களமாக வானொலி நிலையம் விளங்கியது. இவரது முதல் புதினம் 'மங்கிய நிலவு" 1944ஆம் ஆண்டு வெளிவந்தது. 20 புதினங்கள், 200 சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள் மொழிபெயர்ப்பு என்று எழுத்தின் எல்லா வகைகளிலும் அகிலன் தனது முத்திரையைப் பதித்தார்.

இவர் எழுதிய சித்திரப்பாவை புதினத்திற்காக ஞானபீட விருது, ராஜேந்திர சோழனின் இலங்கைப் படையெடுப்பின் பின்னணியில் எழுதிய வேங்கையின் மைந்தன் புதினத்திற்கு சாஹித்ய அகாடமி விருது, எங்கே போகிறோம் என்ற சமூக நாவலுக்கு ராஜா சர் அண்ணாமலை விருது, கண்ணான கண்ணன் என்ற சிறுவர் நூலுக்கு தமிழக அரசின் கல்வித்துறையின் சிறப்பு பரிசு என்று பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. இவரது பல படைப்புகள் ஆங்கிலம், மலாய், சீனம் என்று பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.

சோவியத் ரஷ்யா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளை சுற்றிப்பார்த்து அவை பற்றிய பயணக் கட்டுரைகளையும் அகிலன் எழுதி உள்ளார்.
இவரது பாவை விளக்கு அதே பெயரிலும், கயல்விழி என்ற நாவல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற பெயரிலும் திரைப்படமாகவும் வெளிவந்தன.

எழுத்தாளர் அகிலன் தனது 66ஆம் வயதில் 1988ஆம் ஆண்டு காலமானார்.



வியாழன், 26 ஜூன், 2025

26 ஜூன் - பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிறந்தநாள்


இளம் தலைமுறை பாஜக தலைவராகவும், நீண்ட காலமாக சங்க பரிவார் அமைப்புகளில் பணிபுரிந்தவராகவும், மோதி அரசின் முக்கியமான மந்திரியாகவும் விளங்கும் தர்மேந்திர பிரதான் அவர்களின் பிறந்தநாள் இன்று.

1969ஆம் ஆண்டு ஒரிசா மாநிலத்தில் தல்சேர் நகரில் மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டு இருந்த திரு தேபேந்திர பிரதானின் மகனாகப் பிறந்தவர் இவர். இவரது தந்தையே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தைச் சேர்ந்தவர். அவர் 13ஆவது நாடாளுமன்ற தேர்தலில் வென்று வாஜ்பாய் அரசின் தரைவழி போக்குவரத்துதுறை அமைச்சராகப் பணியாற்றியவர்.

ஏறத்தாழ தனது 14ஆம் வயது முதலே ஆர்எஸ்எஸ் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தர்மேந்திர பிரதான் பரிவார் அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். அகில பாரத வித்யார்த்தி பரீக்ஷித் அமைப்பின் தேசிய செயலாளர், பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பின் தேசிய தலைவர், பாஜகவின் தேசிய செயலாளர், பின்னர் கட்சியின் பொது செயலாளர், சட்டிஸ்கர், பீகார், கர்நாடகா போன்ற மாநிலங்களின் பொறுப்பாளர் என்று இவரது அரசியல் வாழ்க்கை விரிவடைந்தது.

ஒடிசா மாநிலத்தின் 12ஆவது சட்டமன்றத்திற்கு 2000ஆவது ஆண்டில் பல்லஹடா தொகுதியில் இருந்து பிரதான் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒடிசா மாநிலத்தின் தேபகர் தொகுதியில் வெற்றி பெற்றார். பின்னர் பிஹார் மாநிலத்தில் இருந்தும் மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்தும் தலா ஒரு முறை ராஜ்யசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதிற்கு இவரது பங்களிப்பும் மிக முக்கியமான ஒன்றாகும்.

2014இல் அமைக்கப்பட்ட பாஜக அரசின் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுதுறை அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டார். அதோடு திறன் மேம்பாட்டுதுரையின் அமைச்சராகவும் பணியாற்றினார். தற்போதைய அரசின் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுதுறை மற்றும் இரும்பு மற்றும் எக்கு துறைக்கான மந்திரியாகும் பணியாற்றி வருகிறார்.
தனது முதலாவது பதவிக்காலத்தில் பிரதமர் மோதி, வசதி படைத்தவர்களை எரிவாயு உருளைகளுக்கான ( lPG Cylinder ) மானியத்தை விட்டுத் தருமாறு வேண்டினார். அப்படி மிச்சமாகும் பணத்தைக் கொண்டு வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு எந்தவிதமான முன்பணமும் இல்லாமல் எரிவாயு உருளைகள் கொடுக்கும் திட்டத்தை அவர் அறிவித்தார். துறைக்கான அமைச்சராக பிரதான் இந்த திட்டத்தை சிறப்பாக அமுல்படுத்தினார். 

கிராமப்புறத்தில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மகளீருக்கு என்று தொடங்கிய இந்த திட்டம், படிப்படியாக பட்டியல் இனத்தவர், பிறகு வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள அனைவருக்கும் என்று விரிவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி இதுவரை ஏழு கோடிக்கும் அதிகமான இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளது. ஏழை தாய்மார்களின் உடல் நலத்திற்கும் அவர்களின் நேரத்தை மிச்சம் செய்யவும் இந்த திட்டம் பேருதவியாக உள்ளது. சமையல் எரிவாயு உருளைகளுக்கான மானியத்தை நேரடியாக வங்கியில் செலுத்துவதன் மூலம் பல்வேறு போலி கணக்குகள் கண்டறியப் பட்டு, பல்லாயிரம் கோடி ரூபாய்கள் தவறாக சென்று கொண்டு இருந்ததை பிரதான் தடுத்து நிறுத்தி உள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் 13 மாவட்டங்களில் உள்ள வீடுகளும் தொழில்சாலைகளும் பயன்பெறும் வண்ணம் 6000 கோடி ரூபாய் முதலீட்டில் திரவ இயற்கை எரிவாயு முனையத்தை ( L N G Terminal ) உருவாக்கி உள்ளார்.

இளமையும் தன்முனைப்பும் கூடிய திரு பிரதான் அவர்கள் நெடுங்காலம் நாட்டுக்கு சேவை செய்யவேண்டும் என்று அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறோம்



புதன், 25 ஜூன், 2025

ஜூன் 25 - இந்தியாவின் முதல் பெண் முதல்வர் சுசேதா கிருபளானி அவர்களின் பிறந்தநாள்


புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீராங்கனை, காந்தியின் அணுக்க தொண்டர், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், இந்திய அரசியலமைப்பு சபையின் உறுப்பினர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய குழுவில் ஒருவர், பாரதம் சுதந்திரம் அடைந்த நாளில் இந்திய அரசியலமைப்பு சபையில் புகழ்பெற்ற வந்தேமாதரம் பாடலைப் பாடி நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தவர், உத்திரப்பிரதேசத்தின் முதல்வர், பாரதத்தின் முதல் பெண் முதலமைச்சர், பாரதத்தின் மக்களவைக்கு மூன்று முறை தேர்வானவர்  என்று பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தக்காரரான சுசேதா கிருபளானி அவர்களின் பிறந்தநாள் இன்று.

வங்காளத்தைச் சார்ந்த சுசேதா அன்றய பஞ்சாப் மாநிலத்தின் அம்பாலா நகரில் 1908ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை ஒரு மருத்துவர். வேலை காரணமாக பல்வேறு இடங்களுக்கு இவர் தந்தை மாற்றப்பட்டதால், சுசேதாவின் கல்வியும் பல்வேறு நகரங்களில் நடந்தது. இறுதியாக டெல்லி ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றில் தனது முதுகலை பட்டத்தை சுசேதா பெற்றார். அன்றய பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் விடுதலைப் போராட்டத்திற்கு போராளிகளைத் தயாரித்து அனுப்பும் களமாக இருந்து வந்தது. அங்கே வரலாற்று துரையின் பேராசிரியராக சுசேதா பணியாற்றத் தொடங்கினார்.

நாடெங்கும் மூண்டிருந்த சுதந்திர வேட்கை சுசேதாவையும் பற்றிக்கொண்டது. இந்த எண்ணத்தை இன்னும் வலுபெறச் செய்தது ஆச்சாரிய கிருபளானியின் நட்பு. காங்கிரஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரும், சோசலிஸ சிந்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டவருமான ஆச்சாரிய கிருபளானி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழத்திற்கு அடிக்கடி வருவது வழக்கம். அங்கே படிக்கும் மாணவர்களோடு உரையாடி அவர்களை தேசியத்தின் பக்கம் திருப்புவதை அவர் செய்து கொண்டு இருந்தார். தேசிய சிந்தனை அவர்கள் இருவரையும் மணவாழ்வில் இணைத்தது. அது காதல் திருமணம் மட்டுமல்ல ஜாதி மறுப்பு திருமணம் கூட. சுசேதா வங்காளி, கிருபளானி சிந்தி, அதுமட்டுமல்ல அவர்களுக்கிடையே 20 வயது வித்தியாசம் கூட. காந்தி உள்பட பலர் தடுத்தும் அவர்களின் எண்ணங்களுக்கு மாறாக இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இன்னும் தீவிரமாக சுசேதா விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சுசேதா பெரும் பங்கு வகித்தார். 1946ஆம் ஆண்டுகளில் நடந்த ஹிந்து முஸ்லீம் கலவரங்களை கட்டுப்படுத்த கலவர பகுதிகளில் பயணம் செய்தார். காந்தியோடு இணைந்து நவகாளிக்கு சென்றார். அகில இந்திய மஹிளா காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கினார்.

நாடு சுதந்திரம் அடைந்த போது, கருத்து வேறுபாடுகளால் ஆச்சாரிய கிருபளானி காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து விலகி கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி என்ற சோசலிஸ கட்சியைத் தொடங்கினார். அந்த கட்சியின் வேட்பாளராக 1952ஆம் ஆண்டு நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். ஆனால் சிறிது காலத்திலேயே சுசேதா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மீண்டும் 1957ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார். 1967ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தின் கோண்டா தொகுதியில் இருந்து தேர்வானார்.


இதற்கிடைப்பட்ட காலத்தில் உத்திரப்பிரதேச சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960 முதல் 1963 வரை உபியின் மந்திரியாகவும் பின்னர் 1963ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் நாள் உத்திரப்பிரதேசத்தின் நான்காவது முதலமைச்சராகப் பதவி ஏற்றார். 1967ஆம் ஆண்டு வரை அவர் முதல்வராகப் பணியாற்றினார். இதன் மூலம் இந்திய நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்றார்.

1971ஆம் ஆண்டு பொதுவாழ்வில் இருந்து விலகிய சுசேதா கிருபளானி 1974ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் நாள் காலமானார். பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியின் வாக்கை மெய்யாகிக் காட்டிய சுசேதா கிருபளானி அவர்கள் நினைவு பாரதத்தின் பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை 

சனி, 21 ஜூன், 2025

ஜூன் 21 - மேஜர் பத்மநாப ஆச்சார்யா பிறந்ததினம்


அது 1999ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் நாள். ஹைதராபாத் நகரில் உள்ள மேஜர் பத்மநாப ஆச்சாரியாவின் வீட்டு தொலைபேசி மணி அடிக்கிறது. அதனை எடுத்தவர் மேஜர் ஆச்சாரியாவின் மனைவி சாருலதா. அவர் அப்போது ஆறு மாதம் கர்ப்பம். சாருலதா தன்னை அறிமுகம் செய்து கொண்ட உடன் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்படுகிறது. சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அழைப்பு, அப்போதும் எடுத்தவர் சாருலதா. மீண்டும் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. அடுத்தமுறை அழைப்பை எடுத்தவர் மேஜர் பத்மநாப ஆச்சார்யாவின் தந்தை விங் கமாண்டர் ஜெகநாத ஆச்சார்யா. பாரத விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி அவர். பாகிஸ்தானோடு நடைபெற்ற 1965 மற்றும் 1971ஆம் நடைபெற்ற போர்களில் பங்குபெற்றவர். விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்றபிறகு அவர் ராணுவ ஆராய்ச்சி சாலையில் பணியாற்றிவந்தார்.

எந்த ராணுவவீரரின் குடும்பத்தினரும் கேட்க விரும்பாத செய்திதான் தொலைபேசி வழியே பகிரப்பட்டது. " உங்கள் மகன் மேஜர் பத்மநாப ஆச்சார்யா தீரத்துடன் போரிட்டார். வரலாற்றில் தனக்கான இடத்தை தன் உயிரைக் கொடுத்து அவர் பெற்றுக்கொண்டார்" என்று பத்மநாப ஆச்சார்யாவின் வீரமரணத்தைப் பற்றிய தகவல் அவர் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.

கார்கில் போரில் வீரமரணமடைந்த மேஜர் பத்மநாப ஆச்சார்யா அவர்களின் பிறந்ததினம் இன்று. அவரின் பலிதானத்தை கௌரவிக்கும் வகையில் பாரதநாடு அவருக்கு ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் இரண்டாவது மிக உயரிய விருதான மகாவீர் சக்ரா விருதை அளித்தது.

ஒரிசா மாநிலத்தைச் சார்ந்த பத்மநாப ஆச்சார்யா இன்றய தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் வளர்ந்தவர். அவரது தந்தை ஜகந்நாத் ஆச்சார்யா பாரதநாட்டின் விமானப்படை அதிகாரியாக சேவை செய்தவர்.  1969ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் நாள் பிறந்த பத்மநாப ஆச்சார்யாவும் தனது தந்தையைப் பின்பற்றி பாரத ராணுவத்தின் ராஜ்புதான துப்பாக்கிப் படையில் தனது சேவையைத் தொடங்கினார்.

1999ஆம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போரில் டோலோலிங் மலை உச்சியில் இருந்த பகைவர்களை விரட்டி அந்த இடத்தைக் கைப்பற்றும் பொறுப்பு மேஜர் ஆச்சார்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏறத்தாழ ஐயாயிரம் அடி உயரத்தில் இருந்த முகாம் அது. உச்சியில் இருக்கும் பகைவர்களைத் தாக்கி அதனைக் கைப்பற்றுவது என்பது நேரடியாக மரணத்தைச் சந்திக்கும் வேலை. ஆனால் அந்த சவாலை பாரத ராணுவம் எதிர்கொண்டது. கடுமையான உயிரிழப்பை தாங்கி ராஜ்புதான துப்பாக்கிப் படை மலையின் உச்சியை அடைந்தது. படையை முன்னிருந்து நடத்திய ஆச்சார்யா எதிரியின் குண்டுகளால் படுகாயம் அடைந்தார். ஆனாலும் மருத்துவ சிகிச்சை பெறாமல், முன்னேறிச் சென்று தனது படையினரோடு எதிரிகளை சர்வநாசம் செய்து தனக்கு இடப்பட்ட பணியை வெற்றிகரமாக முடித்தார். அதற்கான களத்தில் அவர் பணயமாக வைத்தது அவரது உயிரை.

எல்லா நேரங்களிலும் எல்லா காலங்களிலும் நாட்டின் மரியாதையும், பாதுகாப்பும் முதலில், நான் நடத்திச் செல்லும் படையின் பாதுகாப்பு அடுத்ததாக, எனது பாதுகாப்பு அதற்கும் பின்னால்தான், பாரத ராணுவத்தில் பணியாற்றச் சேரும் அதிகாரிகள் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி இது. அந்த உறுதிமொழியை தனது உதிரத்தால், உயிரால் காப்பாற்றிய வீரர் மேஜர் பத்மநாப ஆச்சார்யா.

தன் தந்தையின் முகத்தைக் கூடப் பார்க்காதவர் மேஜர் ஆச்சார்யாவின் மகள் அபராஜிதா. அவர் தன் தந்தையின் நினைவாக அவரது படங்களும், அவர் எழுதிய கடிதங்களையும் தொகுத்து மேஜர் ஆச்சார்யாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்.  மேஜர் ஆச்சார்யாவின் மனைவி சாருலதா, போரில் பலியான வீரர்களின் குடும்பத்தினரின் உளவியல் சவால்களைச் சரிசெய்யும் சேவை அமைப்பை நடத்தி வருகிறார்.

பத்மநாப ஆச்சார்யாவின் இளைய சகோதர் பத்மசாம்ப ஆச்சார்யாவும் பாரத ராணுவத்தின் ராஜ்புதான துப்பாக்கிப் படையின் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். 

நம்பற்குரியர் அவ்வீரர், தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர் என்ற பாரதியின் வரிகளுக்கு இலக்கணமாக விளங்கும் மேஜர் பத்மநாப ஆச்சார்யா உள்ளிட்ட வீரர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.   

வெள்ளி, 20 ஜூன், 2025

ஜூன் 20 - தொழிலதிபர் லக்ஷ்மன்ராவ் கிர்லோஸ்கர் பிறந்தநாள்

புதுமையான பல தொழில்களை பாரத நாட்டில் உருவாக்கியவரும், கிர்லோஸ்கர் குழுமத்தின் நிறுவனருமான லக்ஷ்மன்ராவ் கிர்லோஸ்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று.

அன்றய மும்பாய் ராஜதானியின் அங்கமாக இருந்த பெல்காம் மாவட்டத்தில் வசித்துவந்த வேத பண்டிதரான காசிநாத் பண்ட் என்ற மஹாராஷ்டிர பிராமணரின் மகனாக 1869ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் நாள் பிறந்தவர் திரு லக்ஷ்மன்ராவ் கிர்லோஸ்கர். தன்னைப் போலவே தன் மகனும் வேத விற்பன்னராக இருப்பான் என்று தந்தை நினைக்க, லக்ஷ்மண்ராவின் விருப்பமோ ஓவியங்கள் வரைவதிலும், இயந்திரப் பொருள்களை உருவாக்குவதிலும்தான் இருந்தது.

தனது மூத்த சகோதரர் ராமண்ணா பொருளுதவி செய்ய லக்ஷ்மணராவ் மும்பையில் உள்ள ஜே ஜே நுண்கலைக் கல்லூரியில் ஓவியம் படிக்கச் சென்றார். ஆனால் இரண்டு ஆண்டுகளில் அவரது பார்வையில் ஏற்பட்ட குறைபாட்டால் அவர் அந்தத் துறையை விட்டு விட்டு இயந்திரங்களை உருவாக்கத் தேவையான ஓவியங்களை வரைவது பற்றிய படிப்பிற்கு மாற்றிக்கொள்ள நேரிட்டது. படிப்பை முடித்த பிறகு அவர் விக்டோரியா ஜூபிலி தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார். பல்வேறு இயந்திரங்களைப் பற்றிய தகவல்களைத் தாங்கிவரும் வெளிநாட்டுப் புத்தகங்களை வாசிப்பதன் மூலமும், கல்வி நிலையத்தில் உள்ள ஆய்வுகூடத்தில் அந்த மாதிரிகளை உருவாகிப் பார்ப்பதன் மூலமும் லக்ஷ்மணராவ் தன்னை செதுக்கிக் கொண்டார்.

இதற்கிடையில் 1890களில் ராமண்ணா - லக்ஷ்மணராவ் சகோதர்கள் பெல்காம் நகரில் ஒரு மிதிவண்டி விற்பனை நிலையத்தைத் தொடங்கினார்கள். மும்பையில் இருந்து லக்ஷ்மணராவ் மிதிவண்டிகளை வாங்கி அனுப்ப, ராமண்ணா அதனை விற்பனை செய்துகொண்டு இருந்தார். கிர்லோஸ்கர் குழுமத்தின் விதை இந்த விற்பனை நிலையத்தில்தான் ஊன்றப்பட்டது. தகுதி இருந்தும் லக்ஷ்மன்ராவுக்கு கல்வி நிலையத்தில் பதவி உயர்வு கிடைக்கவில்லை, அது ஒரு ஆங்கிலோ இந்தியருக்கு அளிக்கப்பட்டது. மனம் நொந்த லக்ஷ்மணராவ் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு பெல்காம் திரும்பினார். சகோதர்கள் இருவரும் அமெரிக்காவில் இருந்து காற்றாடி ஆலைகளை இறக்குமதி செய்து விற்கத் தொடங்கினார். ஆனால் அதற்கான வாடிக்கையாளர்கள் அதிகமாக இல்லை.

பாரதம் போன்ற விவசாய நாட்டில் விவசாயத்துறைக்கான இயந்திரங்களுக்கு நல்ல தேவை இருக்கும் என்பதைக் கணித்த லக்ஷ்மணராவ் இரும்புக் கலப்பைகளை உருவாக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் விவசாயிகள் அதனை பயன்படுத்தத் தயங்கினர். தொடர்ச்சியாக  விவசாயிகளோடு  பேசி, இரும்புக் கலப்பையின் சாதகங்களை எடுத்துக் கூறி லக்ஷ்மணராவ் அதனை விற்பனை செய்தார். அதனைத் தொடர்ந்து கால்நடைகளுக்கான தீவனத்தை சிறு துண்டுகளாக வெட்டும் இயந்திரம் ஒன்றை லக்ஷ்மன்ராவ் வடிவமைத்தார்.

லக்ஷ்மணராவின் இயந்திரங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவ குறுநில மன்னர் ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்தார். கிர்லோஸ்கர் குழுமத்தின் முதல் தொழில்சாலை அங்கே நிறுவப்பட்டது. வெளிநாட்டில் இருந்து வெளியாகும் பல  பத்திரிகைகளைத் தொடர்ச்சியாகப் படிக்கும் லக்ஷ்மணராவ், அதுபோலவே தொழிலாளர்களுக்கான எல்லா வசதியும் உள்ள குடியிருப்புகளோடு தனது தொழில்சாலையை உருவாக்கினார். அன்றய காலகட்டத்தில் தனது தொழில்சாலையிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தீண்டாமையை பின்பற்றக் கூடாது என்பதில் அவர் முனைப்பாக இருந்தார். அதுபோலவே தனது நிறுவனம் தயாரிக்கும் எல்லாப் பொருள்களும் உலகத்தரத்தில் இருக்க வேண்டும் என்பதிலும் லக்ஷ்மணராவ் கிர்லோஸ்கர் உறுதியாக இருந்தார்.

மிகச் சாதாரணமாக மிதிவண்டி விற்பனை செய்வதில் தொடங்கிய பயணம் இன்று பல்வேறு இயந்திரங்களை உருவாகும் மிகப் பெரும் தொழில் குழுமமாக கிர்லோஸ்கர் குழுமம் வளர்ந்துள்ளது.

தொழில்துறையில் திரு லக்ஷ்மணராவ் கிர்லோஸ்கரின் சாதனைகளை ஒரே இந்தியா தளம் நன்றியோடு நினைவு கூறுகிறது.  

வியாழன், 19 ஜூன், 2025

ஜூன் 19 - சீக்கியர்களின் ஆறாவது குரு ஹர் கோபிந்த் பிறந்த நாள்


சீக்கியர்களை போர்க்குணம் கொண்ட இனக்குழுவாக வடிவமைத்த குரு ஹர்கோபிந்த் அவர்களின் பிறந்த தினம் இன்று. சீக்கியர்களின் ஐந்தாவது குருவான அர்ஜன் தேவ் அவர்களின் மகனாக 1595ஆம் ஆண்டு பிறந்தவர் இவர். குரு அர்ஜன் தேவ் அவர்களின் பலிதானத்திற்குப் பிறகு சீக்கியர்களின் குருவாக ஹர்கோபிந்த் தனது பதினோராம் வயதில் பதவி ஏற்றார்.

கொடுமையான சித்திரவத்தையினால் குரு அர்ஜன்தேவ் மரணமடைய, பெரும்பலம் வாய்ந்த மொகலாய சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து நிற்க சீக்கியர்கள் உறுதி பூண்டனர். அந்த எண்ணத்தை ஆற்றுப்படுத்தி, தொடர்ந்த பயிற்சிகள் மூலம் சீக்கியர்களை போர்க்குணம் கொண்ட இனமாகிய பொறுப்பு குரு ஹர்கோபிந்த் அவர்கள் மீது விழுந்தது. அதுவரை ஹிந்து சமுதாயத்தில் உள்ள ஒரு ஜாதி வேறுபாடுகளை களையும் அமைப்பாக இருந்த சீக்கியம் இவர் காலத்திலேயே தனக்கான ஒரு தனி அடையாளத்தைக் கைகொள்ளத் தொடங்கியது.

தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு மெய்காவல் படையை உருவாக்கிக் கொள்ளவும், மொகலாய அடக்குமுறையில் இருந்த மக்களைக் காக்க ஆயுதம் எந்த எப்போதும் தயாராக இருக்கவும் குரு அர்ஜன் தேவ் இவருக்கு ஆணையிட்டார். அதன் படி எழுநூறு குதிரைகள் கொண்ட படையையும், அறுபது பேர் கொண்ட பீரங்கி படையையும் குரு ஹர்கோவிந்த் உருவாக்கினார். குரு எப்போதும் இரண்டு வாள்களை அணிந்து இருந்தார், அதில் ஓன்று இவ்வுலக அதிகாரத்தையும், மற்றொன்று அவரது ஆன்மீக அதிகாரத்தையும் குறித்தது. அம்ரித்ஸர் நகரைச் சுற்றி குரு கோட்டையை எழுப்பினார். பொற்கோவிலில் உள்ள ஹர்மந்தர் சாஹிப் இவரால் உருவாக்கப் பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து குரு சீக்கிய மதத்தைப் பரப்பினார்.

வளர்ந்து வரும் சீக்கிய மதத்தையும், அவர்களின் ராணுவ பலத்தையும் கண்டு பொறாமல் முகலாய மன்னர் ஜஹாங்கிர் குருவை குவாலியர் கோட்டையில் சிறை வைத்தார். ஆனால் அப்போது லாகூர் நகரில் ஆளுநராக இருந்த வாஜிர் கான் மற்றும் குருவின் நண்பர்கள் ஜஹாங்கீரின் மனதை மாற்றி குருவை விடுவிக்க வைத்தனர். ஆனால் குரு ஹர்கோவிந்த் தன்னோடு சிறையில் இருந்த 52 ஹிந்து மன்னர்களையும் விடுவிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, அவர்களையும் விடுவிக்க வைத்தார். விடுதலையான குரு அம்ரித்ஸர் நகருக்கு வந்தது ஒரு தீபாவளி நாள் அன்று. அதனால் இன்றும் சீக்கியர்கள் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

ஜஹாங்கீருக்கும் சீக்கியர்களுக்கு ஏற்பட்ட நல்லுறவு சிலகாலமே நீடித்தது. புதிதாக பதவிக்கு வந்த ஷாஜஹான் மீண்டும் சீக்கியர்களோடு மோத ஆரம்பித்தார். தொடர்ச்சியான போராட்டங்கள் ஆரம்பமானது. முழுமையாக இஸ்லாமும் சீக்கியமும் எதிர் அணிகளில் இருப்பதற்கான விதை ஷாஜஹானால் ஊன்றப்பட்டது.

வெளிப்பார்வைக்கு மன்னன், ஆனால் உள்ளுக்குள் துறவி, எளியவர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும் ஆயுதம் ஏந்திய வீரன், உலகத்தைத் துறக்காமல் மாயையைத் துறந்த குரு என்று தன்னை பிரகடம் செய்துகொண்ட குரு தனது 48ஆவது வயதில் காலமானார்.

எத்தனையோ குருமார்கள் இந்த மண்ணில் அவர்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்  

புதன், 18 ஜூன், 2025

ஜூன் 18 - சர்சங்கசாலக் சுதர்ஷன் ஜி பிறந்தநாள் -


ராஷ்டிரிய ஸ்வயம்சேவகசங்கத்தின் ஐந்தாவது சர்சங்கசாலக்காக பணியாற்றிய மானநிய சுதர்ஷன் ஜி அவர்களின் பிறந்தநாள் இன்று.

இன்றய சட்டிஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் நகரில் 1931ஆம் ஆண்டு பிறந்தவர் சுதர்ஷன்ஜி அவர்கள். ஜபல்பூர் பொறியியல் கல்லூரியில் தொலைதொடர்பு பொறியியலில் பட்டம் பெற்றவர் இவர்.

பல ஸ்வயம்சேவகர்களைப் போலவே சுதர்ஷன்ஜியும் மிகச் சிறிய வயதிலேயே சங்கத்தின் தொடர்புக்குள் வந்து விட்டார். தனது ஒன்பதாம் வயதிலேயே சங்கத்தின் ஷாகாவில் பங்கெடுக்கத் தொடங்கிய சுதர்ஷன்ஜி பட்டப்படிப்பு முடித்தவுடன் தனது 23ஆம் வயதிலேயே முழுநேர ஊழியராக ( பிரச்சாரக் ) சங்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டார். 

மத்திய பிரதேசத்தில் தொடங்கிய இவரது சங்கபணி வடகிழக்கு மாநிலங்களில் பரவி பின்னர் இந்தியா முழுவதுமாக விரிவடைந்தது.
படிப்படியாக சங்கத்தின் பல்வேறு பொறுப்புகள் சுதர்ஷன் ஜியைத் தேடி வந்தது. சங்கத்தின் அகில பாரத துணை பொது செயலாளராக அவர் பணியாற்றினார். 2000ஆவது ஆண்டில் சங்கத்தின் அன்றய சர்சங்கசாலக் ஸ்ரீ ராஜேந்திரசிங் ஜி, தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினார். சங்கத்தின் அடுத்த தலைவராக ஸ்ரீ சுதர்ஷன்ஜி பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த ஒன்பது ஆண்டுகள் அவர் இந்தப் பொறுப்பில் இருந்தார்.

கன்னட மொழி, மராத்தி, ஹிந்தி, ஆங்கிலம், சட்டிஸ்கரி போன்ற 13 மொழிகளில் புலமை பெற்ற சுதர்ஷன்ஜியின் தலைமையில் சங்கம் இன்னும் விரிவாகப் பரவியது. ஆழ்ந்த படிப்பும், இந்தியா முழுவதும் சுற்றி வந்த நேரடி அனுபவமும் இணைந்த சுதர்ஷன் ஜி ஸ்வதேசி பொருளாதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்தார். பரிவார் அமைப்புகள் அனைத்திலும் இளைய தலைவர்கள் உருவாவதிலும், அவர்களை வார்த்தெடுப்பதிலும் சுதர்ஷன்ஜி மிகுந்த கவனம் செலுத்தினார்.
2009ஆம் ஆண்டு சுதர்ஷன்ஜி தலைமைப் பொறுப்பை மோகன் பகவத்ஜி அவர்களிடம் ஒப்படைத்தார்.

தனது 81ஆம் வயதில் சுதர்ஷன்ஜி ராய்ப்பூர் நகரில் காலமானார். அவரது விருப்பத்தின்படி அவரது கண்கள் தானமாக அளிக்கப்பட்டது. எதோ ஒரு இடத்தில இருந்து வலிமையான பாரத நாட்டை சுதர்ஷன் ஜி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.  

திங்கள், 16 ஜூன், 2025

ஜூன் 16 - இந்தியவியல் சிந்தனையாளர் அரவிந்தன் நீலகண்டன் பிறந்தநாள்

புகழ்பெற்ற இந்தியவியல் சிந்தனையாளரும், களப்பணியாளரும், எழுத்தாளருமாகிய அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் பிறந்தநாள் இன்று.

அரவிந்தன் நீலகண்டன் தமிழகத்தில் ஹிந்து எழுச்சிக்கு அடித்தளமாக விளங்கும் நாகர்கோவில் நகரைச் சார்ந்தவர். இவரது தந்தை நாகர்கோயில் ஹிந்துக் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தவர். இவர் தாயார் அதே கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தவர். பெற்றோர் இருவருமே கல்விப் புலத்தில் இருந்ததால் சிறுவயது முதலே பல்வேறு புத்தகங்களை படித்து அது பற்றி விவாதிக்கும் வாய்ப்பு அரவிந்தனுக்கு கிட்டியது. கூட்டுப்புழு பட்டாம்பூச்சியாக மலர்வது போல, பல்வேறு புத்தகங்களை ஐயம் திரிபுர கற்ற அரவிந்தன் இந்தியவியல் சிந்தனையாளராக மலர்ந்தார்.

வேளாண்மைத் துறை மாணவராகத் தொடங்கிய அரவிந்தன் நீலகண்டன் பொருளாதாரம் மற்றும் உளவியல் துறைகளில் முதுகலைப் பட்டங்களும் பெற்றார். இவரது கட்டுரைகள் திண்ணை இணையத்தளத்தில் வெளியாகத் தொடங்கின. அதன் பின்னர் தினமணி, சொல்வனம், தமிழ் பேப்பர் ஆகிய பத்திரிகைகள் இவரது கட்டுரைகளை வெளியிட்டன. தமிழ் ஹிந்து இணைய இதழின் ஆசிரியர் குழுவில் பங்களித்தார். வலம் பத்திரிகை மற்றும் ஸ்வராஜ்யா போன்ற இதழ்களின் ஆசிரியர் குழுவில் தற்போது பணியாற்றி வருகிறார்.

இந்தியாவைத் துண்டாட நினைக்கும் பல்வேறு சக்திகள் பற்றி ராஜிவ் மல்ஹோத்ராவுடன் இணைந்து, பல்வேறு ஆரய்ச்சிகளுக்குப் பிறகு ‘உடையும் இந்தியா’ என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.
‘நம்பக்கூடாத கடவுள்’, ‘ஆழி பெரிது’, ‘ஹிந்துத்துவச் சிறுகதைகள்’, ‘இந்திய அறிதல் முறைகள்' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதி உள்ளார். ‘பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்’ என்ற புத்தகத்தில் கம்யூனிச சித்தாந்தத்தின் கோர முகத்தைப் பற்றியும், அதனால் உலகத்திற்கு ஏற்பட்ட இன்னல்கள் பற்றியும் விரிவாக ஆய்வுமுறையில் பதிவு செய்துள்ளார். இன்றுவரை இப்புத்தகம் எந்த ஒரு கம்யூனிஸ்ட்டாலும் மறுக்கப்படவில்லை என்பது முக்கியமான செய்தி.

நான்கு பக்க கட்டுரைக்கு எட்டுப் பக்கத்திற்கு ஆதாரங்களை அளித்து எழுதுவது என்பது இவர் பாணி. அதனாலேயே இவர் எழுதும் கட்டுரைகளுக்கோ அல்லது புத்தகங்களுக்கோ, எதிர் முகாமில் இருந்து வசைபாடல்கள் இருக்குமே அன்றி, தர்க்கபூர்வமான எதிர்ப்புகள் என்பது பொதுவாக இருப்பதில்லை.

நண்பரும், ஆசானும், சகோதரனும், ‘ஒரே இந்தியா’ தள நிர்வாகிகளின் ஆதர்ச நாயகனுமான அரவிந்தன் நீலகண்டனுக்கு மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் ஒரே இந்தியா தளம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.


பாரத நாட்டுக்கு இன்னும் ஆயிரம் ஆயிரம் அரவிந்தர்கள் தேவை.

சனி, 14 ஜூன், 2025

ஜூன் 14 - தொழிலதிபர் குமார்மங்கலம் பிர்லா பிறந்தநாள்

பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறப்பது என்பது எப்படி ஒரு பெரும் வாய்ப்போ அதுபோலவே அது பெரும் சவால்கூட. குடும்பத்தின் பெருமையைக் காப்பதுவும், குடும்ப முன்னோர்களின் சாதனையைத் தாண்டிச் செல்வது என்பதும் மிகக் கடினமான ஓன்று. அந்த சவாலை சந்தித்து வெற்றிகரமாக விளங்கும் குமார்மங்கலம் பிர்லாவின் பிறந்தநாள் இன்று.


புகழ்பெற்ற பிர்லா குடும்பத்தின் நான்காம் தலைமுறை வாரிசு குமாரமங்கலம் பிர்லா. கொல்கத்தா நகரில் பிறந்த பிர்லா, மும்பையில் வளர்ந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்ற பிர்லா அதனைத் தொடர்ந்து லண்டன் மேலாண்மைக் கல்லூரியில் மேலாண்மைத் துறையில் முதுகலைப் பட்டத்தையும் பின்னர் பட்டயக் கணக்காளர் படிப்பையும் முடித்தார். 

பிர்லா குழுமத்தின் அன்றய தலைவரும், குமாரமங்கலம் பிர்லாவின் தந்தையுமான ஆதித்ய விக்ரம் பிர்லா புற்றுநோய் காரணமாக 1995ஆம் ஆண்டு தனது ஐம்பது ஒன்றாம் வயதில் மரணமடைய தனது இருபத்தி எட்டாம் வயதில் பிர்லா குழுமத்தின் தலைவராக குமாரமங்கலம் பிர்லா பொறுப்பேற்றுக் கொள்ள நேர்ந்தது. அவரது தலைமையில் பிர்லா குழுமம் இருபத்தி நான்கு ஆண்டுகளில் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் வியாபாரத்தில் இருந்து நாற்பத்தி எட்டு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு வளர்ச்சி அடைந்தது. 

அலுமினியம், தாமிரம், சிமெண்ட், துணிவகைகள், சூரிய மின்சக்தி, விவசாயப் பொருள்கள், தொலைத்தொடர்பு, சில்லறை வர்த்தகம், நிதி சம்மந்தமான சேவைகள் என்று பல்வேறு துறைகளில் பிர்லா குழுமத்தை முக்கியமான ஒன்றாக குமார்மங்கலம் பிர்லா மாற்றி உள்ளார். கடந்த இருபது ஆண்டுகளில் கனடா, சீனா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள  நாற்பது நிறுவனங்களை கையகப்படுத்தி பல துறைகளில் முக்கியமான நிறுவனமாக பிர்லா குழுமத்தை உயர்த்தி உள்ளார். நாற்பத்தி இரண்டு நாடுகளைச் சார்ந்த 1,20,000 தொழிலாளர்கள் பிர்லா குழுமத்தில் வேலை செய்கிறார்கள். 

தொழில் நிறுவனங்களை நடத்துவதோடு பிர்லா குழுமம் நாட்டில் பல முக்கியமான கல்வி நிலையங்களையும் நடத்தி வருகிறது. புகழ்வாய்ந்த பிர்லா தொழில்நுட்பக் கல்லூரியின் வேந்தராகவும் குமார்மங்கலம் பிர்லா பணியாற்றி வருகிறார். அஹமதாபாத் நகரில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிலையத்தின் நிர்வாகக் குழுவின் தலைவராகவும் அவர் உள்ளார். 

குமார்மங்கலம் பிர்லா முக்கியமான தொழிலதிபர் என்பதோடு தனது குழுமத்தின் மூலம் பல்வேறு சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டு உள்ளார். ஏறத்தாழ ஐயாயிரம் கிராமங்களில் எழுபத்தி ஐந்து லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் கல்வி, சுகாதார வசதிகளை செய்து வருகிறார். நாற்பத்தி ஐயாயிரம் மாணவர்கள் படிக்கும் ஐம்பத்தி ஆறு பள்ளிகளையும் இருபத்தி இரண்டு மருத்துவமனைகளையும் பிர்லா குழுமம் சமுதாயத்தில் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட மக்களின் சேவைக்காக நடத்தி வருகிறது, இது போன்ற சேவைப் பணிகளுக்காக வருடம் ஒன்றுக்கு இருநூற்றி ஐம்பது கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் செலவாகிறது. 

குமார்மங்கலம் பிர்லாவின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் கர்நாடகாவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், வாரணாசியில் உள்ள ஹிந்து சர்வகலாசாலை, கோவிந்தவல்லப பந்த் வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் அவருக்கு கௌரவ முனைவர் பட்டத்தை அளித்துள்ளன. 

பாரத நாட்டு இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக ஆகவும், அதில் வரும் பணத்தை சமுதாயப் பணிகளுக்காகச் செலவிடவும் குமார்மங்கலம் பிர்லா வழிகாட்டியாக விளங்குகிறார் என்றால் அது மிகையாகாது. 

தொழிலதிபர் குமார்மங்கலம் பிர்லா இன்னும் பல ஆண்டுகள் நீண்ட ஆயுளோடு வாழ்ந்து, நாட்டுக்கு சேவை புரிய வேண்டும் என்ற வேண்டுதலோடு அவருக்கு மனப்பூர்வமான வாழ்த்துகளை ஒரே இந்தியா தளம் தெரிவித்துக் கொள்கிறது. 

வெள்ளி, 13 ஜூன், 2025

ஜூன் 13 - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பிறந்தநாள்

மோதி தலைமையிலான அரசின் ரயில்வே மற்றும் வர்த்தகத்துறையின் மத்திய அமைச்சரான திரு பியூஸ் கோயல் அவர்களின் பிறந்தநாள் இன்று.


வேத்பிரகாஷ் கோயல் சந்திரகாந்தா தம்பதியரின் மகனாக 1964ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் நாள் பிறந்தவர் திரு பியூஸ் கோயல் அவர்கள்.  லாகூர் நகரைச் சார்ந்த வேதபிரகாஷ் கோயல் பாரதநாட்டின் ராஜ்யசபை உறுப்பினராகவும், வாஜ்பாய் தலைமையிலான அரசில் கப்பல் போக்குவரத்து துறையின் அமைச்சராகவும் பணியாற்றியவர். அவர் பாஜகவின் தேசியப் பொருளாளராகவும் பதவி வகித்தவர். திருமதி சந்திரகாந்தா மூன்று முறை மும்பை மாதுங்கா தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பியூஸ் கோயல் பட்டயக் கணக்காளர் தேர்வில் நாட்டிலேயே இரண்டாவது இடத்திலும்,  சட்டப் படிப்பில் மும்பை பல்கலைக்கழகத்தில் இரண்டாவது இடத்திலும் தேர்ச்சி பெற்றவர். முதலீட்டுத் துறையில் மிகுந்த அனுபவம் பெற்ற பியூஸ் கோயல் தனியார் துறையில் வேலை செய்த போது, பல்வேறு நிறுவனங்களுக்கு யுத்திகள் வகுப்பதிலும், நிறுவனங்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது பற்றியும் ஆலோசகராக விளங்கினார்.

பாஜக சார்பில் 2010ஆம் ஆண்டு மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்து ராஜ்யசபைக்குத் தேர்வான பியூஸ் கோயல், பாஜகவில் தேசியப் பொருளாளர் உள்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தார்.

2014ஆம் ஆண்டு அமைந்த மோதியின் அரசின் மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மற்றும் நிலக்கரி ஆகிய துறைகளின் அமைச்சராகச் செயலாற்றினார். அதுவரை மின்சார இணைப்பே இல்லாமல் இருந்த 18,000 கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுத்தது இவரின் சாதனை. அது போல மிகக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் எல் ஈ டி விளக்குகளை குறைந்த விலையில்  விற்பனை செய்து, மின் பயன்பாட்டைக் குறைத்து, மரபு சாரா எரிசக்தி தயாரிப்பில் பெரும் முன்னேற்றத்தைக் கொண்டுவந்தது, எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல் நிலக்கரி சுரங்கத்தை குத்தகைக்கு விட்டது என்று பல்வேறு சாதனைகளை பியூஸ் கோயல் செய்தார்.

2017ஆம் ஆண்டு ரயில்வே  துறையின் அமைச்சராக கோயல் பொறுப்பேற்றுக் கொண்டார். அன்றய நிதியமைச்சர் அருண் ஜெட்லீ உடல்நிலை குன்றி இருந்த போது, தற்காலிக நிதியமைச்சர் என்ற முறையில் 2019ஆம் ஆண்டுக்கான இடைக்கால மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கோயல் தாக்கல் செய்தார்.

2019ஆம் ஆண்டு அமைந்த மோதியின் இரண்டாவது அரசின் ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக கோயல் பணியாற்றிவருகிறார். பேங்க் ஆப் பரோடா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் கோயல் பணியாற்றி உள்ளார்.

பாஜகவின் அடுத்த தலைமுறை தலைவர்களில் முக்கியமானவரான திரு பியூஸ் கோயல் அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் நாட்டுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற பிரார்தனைகளோடு அவருக்கு ஒரே இந்தியா தளம் தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.  

புதன், 11 ஜூன், 2025

ஜூன் 11 - புரட்சிவீரர் ராம் பிரசாத் பிஸ்மில் பிறந்தநாள்

பாரத நாட்டின் விடுதலை என்பது பல்வேறு தியாகிகள் தங்களையே ஆகுதியாக்கி அதனால் கிடைத்த பலனாகும்.  அப்படியான தியாகிகளின் வரிசையில் முக்கியமான ராம் பிரசாத் பிஸ்மில் அவர்களின் பிறந்ததினம் இன்று. 

தனது ஒரு கையில் ஏந்திய துப்பாக்கியினால் உமிழும் தோட்டாக்கள் மூலமாகவும், மறுகையில் ஏந்திய பேனா முனையில் இருந்து வெளியாகும் கவிதைகள் மூலமாகவும்  ஒரே நேரத்தில் ஆங்கிலேயர்களின் நிம்மதியைக் குலைத்த வீரர் அவர்.

 இன்றய உத்திரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் பகுதியில் முரளிதர் - மூல்மதி தம்பதியரின் மகனாக 1897ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் நாள் பிறந்தவர். தன் தந்தையிடம் ஹிந்தி மொழியையும் அதனைத் தொடர்ந்து ஒரு இஸ்லாமிய மதகுருவிடம் உருது மொழியையும் ராம் பிரசாத் கற்றுத் தேர்ந்தார். அன்றய காலகட்டத்தில் மிகவும் பிரசித்தியோடு இருந்த ஆரியசமாஜத்தில் அவர் தன்னை இணைத்துக் கொண்டார். ஹிந்து ஞானமரபுதான் அன்னியர்களை எதிர்த்துப் போரிடவேண்டும்  உத்வேகத்தை மக்களுக்கு எப்போதும் அளித்து வந்துள்ளது. ஆர்யசமாஜத்தில் இருந்த ஸ்வாமி சோமதேவ் என்பவர்தான் ராம் பிரசாத்தின் வழிகாட்டியாக அமைந்தார்.

ராம்பிரசாத் மாத்ரிவேதி ( தாய்நாட்டின் பலிபீடம் ) என்ற அமைப்பை உருவாக்கி இருந்தார். அப்போது ஸ்வாமி சோமதேவ் ராம்பிரசாத்தை கென்லாலால் தீக்ஷித் என்ற பள்ளி ஆசிரியரோடு தொடர்பு கொள்ள வலியுறுத்தினார். கென்லாலால் தீக்ஷித் சிவாஜி சமிதி என்ற இயக்கத்தை உருவாக்கி இளைஞர்கள் மனதில் தேசபக்திக் கனலை எரியவிடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.  இருவரும் இணைந்து உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆயுதம் தாங்கிய போராளிகளை ஒருங்கிணைக்க ஆரம்பித்தனர்.

தனது மைன்புரியின் உறுதிமொழி என்ற கவிதையோடு நாட்டுமக்களுக்கு ஒரு செய்தி என்ற துண்டறிக்கையைத் தயாரித்து ராம்பிரசாத்தும் கென்லாலால் தீக்ஷித்தும் விநியோகித்தனர். ஆயுதம் வாங்க பணம் வேண்டும், அந்தப் பணத்தை ஆங்கில அரசிடமே கொள்ளையடிப்பது என்று வீரர்கள் தீர்மானித்து, மூன்று முறை ஆங்கில ஆட்சியாளர்களின் கருவூலத்தைக் கொள்ளை அடித்தனர். டெல்லிக்கு ஆக்ராவிற்கும் நடுவே கொள்ளை அடிக்க முயற்சி செய்யும் போது காவல்துறையோடு பெரும் சண்டை நடந்தது. ராம்பிரசாத் யமுனா நதியில் குதித்தார். அவர் இறந்து விட்டார் என்று எல்லோரும் எண்ணிக்கொண்டு இருக்க, நதியின் உள்ளே நீந்தித் தப்பித்தது ராம்பிரசாத் சிலகாலம் தலைமறைவாக வாழ்ந்தார். கென்டாலால் தீக்ஷித் ஆக்ரா கோட்டையில் சிறைவைக்கப் பட்டார். அவரும் சிறையில் இருந்து துணிகரமாகத் தப்பித்து தலைமறைவானார். மைன்புரி சதிவழக்கில் எல்லாக் குற்றவாளிகளும் விடுதலையானார். ராம்பிரசாத்தும் கென்லாலால் தீக்ஷித்தும் காணாமல் போய் விட்டார்கள் என்று நீதிபதி தீர்ப்பு எழுதினார்.

இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ராம்பிரசாத் பல்வேறு நூல்களை எழுதினார். வங்காள மொழியில் இருந்தும் ஆங்கில மொழியில் இருந்தும் புத்தகங்களை ஹிந்தி மொழியில் மொழிபெயர்த்தார். ராம், பிஸ்மில், அக்யாத் என்று பல்வேறு புனைபெயர்களை அவர் பயன்படுத்தினார். மைன்புரி சதிவழக்கில் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து ராம்பிரசாத் ஷாஜஹான்பூர் திரும்பினார். எந்த அரசு விரோத செயல்களிலும் தான் ஈடுபடமாட்டேன் என்று அவர் காவல்துறையிடம் உறுதிமொழி அளித்தார். அதை அரசும் நம்பவில்லை, ராம்பிரசாத்தும் உறுதிமொழிக்கு ஏற்ப நடக்கவேண்டும் என்று நினைக்கவில்லை.

1921ஆம் ஆண்டு அஹமதாபாத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ராம்பிரசாத் தன் நண்பர்களோடு கலந்துகொண்டார். அந்த மாநாட்டில்தான் மௌலானா ஹஸ்ரத் மொஹைனி முன்மொழிந்த பூர்ண ஸ்வராஜ்யம் என்ற கோரிக்கை முதல் முதலாக நிறைவேற்றப்பட்டது. பூரண ஸ்வராஜ்யம் தேவையில்லை டொமினியன் அந்தஸ்து போதும் என்ற  காந்தியின் கருத்து  இளைஞர்களின் ஆவேசத்தின் முன் பயனில்லாமல் போனது. மாநாடு முடிந்து ஷாஜஹான்பூர் திரும்பிய ராம்பிரசாத் இளைஞர்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். அஹிம்சை முறையில் விடுதலை அடைய முடியாது என்பது அவரின் எண்ணமாக இருந்தது.

காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். ஆனால் சவுரிசவுராவில் நடைபெற்ற வன்முறையால் நாடு இன்னும் அஹிம்சை முறைக்குத் தயாராகவில்லை என்று கூறி காந்தி இயக்கத்தை ஒத்தி வைத்தார். 1922 ஆம் ஆண்டு கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இளைஞர்கள் எதிர்ப்பையும் மீறி காந்தி தனது நிலையில் உறுதியாக இருந்தார்.  காந்தியின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்து காங்கிரஸ் இயக்கத்தின் அந்த ஆண்டுத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ் பதவி விலகினார். சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு போன்றவர்கள் இணைந்து ஸ்வராஜ்ய கட்சியை உருவாக்கினார்கள். தேர்தலைச் சந்தித்து நேரடி அரசியலில் ஈடுபட ஸ்வராஜ்ய கட்சி முடிவு செய்தது. காந்தியின் அகிம்சை வழி பயன்தராது, ஆயுதம் தாங்கிய போராட்டம்தான் சரி என்று முடிவுக்கு இளைஞர்கள் வந்தனர்.

லாலா ஹர்தயாள் வழிகாட்ட, சச்சிந்திரநாத் சன்யால், ஜடுகோபால் முகர்ஜீ ஆகியோரின் உதவியோடு ராம்பிரசாத் புதிய இயக்கம் ஒன்றை உருவாக்க அதன் சட்டதிட்டங்களை வடிவமைத்தார். ஹிந்துஸ்தான் ரிபப்லிக் அசோசியேஷன் உருவானது. இதில் கிளைத்து எழுந்தவர்கள்தான் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, சந்திரசேகர ஆசாத், ஜதின்தாஸ் போன்ற போராளிகள்.

ஆயுதம் வாங்க பணம் வேண்டும், பணம் திரட்டும் வழியோ ஏற்கனவே தெரியும். ஆங்கில அரசு பெரும் பணத்தை லக்னோ நகருக்கு கொண்டு செல்லும் தகவல் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குக்  கிடைத்தது. ககோரி பகுதியில் ரயிலை நிறுத்தி கஜானாவை கொள்ளை அடிக்க முடிவானது. மன்மதநாத் குப்தா, அஷ்பாகுல்லா கான் ஆகியோரின் துணையோடு பணம் கொள்ளையடிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு விடுதலை வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

புகழ்பெற்ற ககோரி சதிவழக்கு ஆரம்பமானது. சசீந்திரநாத் சன்யால், சசீந்திரநாத் பக்ஷி ஆகியோர் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். மன்மதநாத் குப்தாவிற்கு பதினான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை, என்று பலருக்கு சிறைத்தண்டனை வழங்கப் பட்டது. ராம்பிரசாத் பிஸ்மில், தாகூர் ரோஷன்சிங், ராஜேந்திரநாத் லஹரி, அஷ்பாகுல்லா கான் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ச்சியான மேல்முறையீடுகளிலும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

ராம்பிரசாத் பிஸ்மில் கோரக்பூர் சிறையிலும், ரோஷன்சிங் பிரயாக்ராஜ் சிறையிலும் அஷ்பாகுல்லா கான் ஃபைஸாபாத் சிறையிலும் 1927ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் நாள் தூக்கிலிடப் பட்டார்கள். ராஜேந்திரநாத் லஹரி இரண்டுநாட்களுக்கு முன்பாக கோண்டா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

முப்பது ஆண்டுகளே வாழ்ந்த ராம்பிரசாத் பிஸ்மில் பாரத நாட்டில் வரலாற்றில் ஒளிவிடும் விண்மீனாக விளங்குகிறார். மகத்தான தியாகியின் நினைவுக்கு இன்று நாம் அஞ்சலி செலுத்துவோம்.