பொருளாதாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொருளாதாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 செப்டம்பர், 2025

செப்டம்பர் 15 - சமகால சாணக்யன் சுப்ரமணியம் ஸ்வாமி பிறந்தநாள்

புகழ்பெற்ற பொருளாதார நிபுணர், பல்வேறு பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் பணி, தேர்ந்த ராஜதந்திரி, ஐம்பதாண்டு கால பாரத அரசியலில் தவிர்க்க முடியாத மனிதர், பெரும்பலம் வாய்ந்த அரசியல்வாதிகளை சட்டத்தின் மூலம் செல்லாக் காசாக மாற்றிய சட்ட நிபுணர், உலகம் முழுவதும் பரந்து விரிந்த தொடர்புகளும் செல்வாக்கும் கொண்ட மனிதர்  என்று பல்வேறு ஆளுமைகளின் மொத்த உருவம் திரு சுப்ரமணியம் ஸ்வாமியின் பிறந்தநாள் இன்று.



மதுரையை அடுத்த சோழவந்தான் பகுதியை தனது ஆதாரமாகக் கொண்ட சீதாராம சுப்ரமணியம் - பத்மாவதி தம்பதியரின் மகனாக 1939ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பிறந்தவர் சுப்ரமணியம் சுவாமி.  சீதாராம சுப்ரமணியம் இந்திய புள்ளியியல் துறையில் பணியாற்றிக் கொண்டு இருந்தார். மத்திய புள்ளியியல் நிலையத்தின் இயக்குனராகவும், இந்திய அரசின் புள்ளியியல் ஆலோசகராகவும் அவர் பணியாற்றியதால், ஸ்வாமியின் குடும்பம் டெல்லியில் வசிக்க வேண்டி இருந்தது. டெல்லி ஹிந்து கல்லூரியில் கணித பட்டப் படிப்பையும் அதன் பின்னர் கொல்கத்தா நகரில் உள்ள இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனத்தில் புள்ளியியல் துறையில் முதுகலைப் பட்டத்தையும் சுவாமி முடித்தார்.

இதனைத் தொடர்ந்து தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சுவாமி தொடங்கினார். அவரின் வழிகாட்டியாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் சைமன் கூஸ்நட்ஸ் அமைந்தார். தனது இருபத்தி ஆறாம் வயதுக்குள் பொருளாதார முனைவர் பட்டத்தையும் அதோடு குறிப்பிடத்தக்க பொருளாதார மேதையாகவும் சுவாமி அடையாளம் காணப்பட்டார். நோபல் பரிசு பெற்ற மேதை பால் சாமுவேல்சன் என்பவரோடு இணைந்து ஸ்வாமி எழுதிய குறியீட்டு எண்கள் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள் ஸ்வாமியை உலகமெங்கும் பிரபலப்படுத்தியது.

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக தனது பயணத்தை சுவாமி தொடங்கினார். அமர்த்தியா சென்னின் அழைப்பை ஏற்று டெல்லி பொருளாதார நிறுவனத்தில் பணி புரிய சுவாமி பாரதம் திரும்பினார். ஆனால் அன்றய அரசின் சோசலிச பொருளாதார கொள்கைகளை அவர் விமர்சித்த காரணத்தால், அந்தப் பணி அவருக்கு மறுக்கப்பட்டது. அதனால் டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பொருளாதார கணித துறையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஆனாலும் இரண்டாண்டுகளில் அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ஸ்வாமி மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். போராட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு சுவாமி அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டார்.

சுப்ரமணியம் ஸ்வாமியை பதவி நீக்கம் செய்து , அவரை தீவிர அரசியலில் ஈடுபட வைத்த பெருமை அன்றய பிரதமர் இந்திரா காந்தியையே சாரும். முதலில் ஜெயப்ரகாஷ் நாராயணனோடு இணைந்து சர்வோதயா இயக்கத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்த ஸ்வாமி, பின்னர் பொதுவாழ்வில் ஊழலை ஒழிக்க ஜெ பி தொடங்கிய இயக்கத்தின் முக்கிய தலைவராக உருவானார். 1974ஆம் ஆண்டு ஜனசங்கம் அவரை உத்திர பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபைக்கு அனுப்பியது.

அந்தகாலத்தில்தான் இந்திரா நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. பல்வேறு தலைவர்கள் தலைமறைவாக சர்வாதிகாரத்தை எதிர்த்து போராட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தனர். ஸ்வாமியும் தலைமறைவானார். பாராளுமன்றம் நடந்து கொண்டு இருந்த ஒரு நாளில் பாராளுமண்டத்திற்கு ஸ்வாமி நுழைந்தார், உரிமை பிரச்சனை ஒன்றை கிளப்பி விட்டு மீண்டும் மாயமாக மறைந்தார். அப்போது காவல்துறைக்கு அவர் ஒரு தேடப்படும் குற்றவாளி. இந்த தடாலடி செயல் இரும்பு பெண்மணி என்று பெயர் பெற்ற இந்திரா காந்தியையே நிலைகுலைய வைத்தது.

1977 ஆம் ஆண்டு நெருக்கடி நிலைமை விலக்கிக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் இந்திரா தோல்வியுற்றார். மும்பை வட கிழக்கு பாராளுமன்ற தொகுதியில் இருந்து ஸ்வாமி மக்களவைக்கு தேர்வானார். 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இதே தொகுதியில் இருந்து அவர் தேர்வானார். 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் இருந்தும், 1988 ஆம் ஆண்டு முதல் 1994 வரை உத்திரப்பிரதேசத்தில் இருந்து ஜனதா கட்சி சார்பில் ராஜ்யசபைக்கும் அவர் தேர்வானார். சந்திரசேகரின் அமைச்சரவையில் சட்ட மற்றும் வர்த்தக துறைகளின் அமைச்சராகவும் அவர் பணியாற்றினார்.

அப்போது அவர் வடிவமைத்த கொள்கைகளின் அடிப்படையில்தான் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த நரசிம்மராவ் அரசு பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்தது. நெடுங்காலம் ஜனதா கட்சியை நடத்திக்கொண்டு இருந்த சுப்ரமணியம் சுவாமி 2013 ஆம் ஆண்டு தனது கட்சியை பாரதிய ஜனதா கட்சியோடு இணைத்தார். 2016 ஆம் ஆண்டு பாஜக அவரை ராஜ்யசபா உறுப்பினராக நியமித்தது.

தனது நீண்ட அரசியல் வாழ்வில் பல்வேறு ஊழல்களை, அதிகார துஷ்பிரயோகங்களை ஸ்வாமி வெளிக்கொண்டு வந்துள்ளார்.  ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகள், இரண்டாம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீடுகளில் நடைபெற்ற முறைகேடுகள், நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் பங்குகளை முறைகேடாக சோனியா காந்தியும் அவர் மகன் ராகுல் காந்தியும் அடைந்தது ஆகியவை ஸ்வாமி முன்னெடுத்த முக்கியமான வழக்குகளாகும்.

பாரத அரசியல் வானில் அவரை மதிக்கலாம், வெறுக்கலாம் ஆனால் புறம்தள்ள முடியாத ஆளுமையாக விளங்கும் திரு சுப்ரமணியம் ஸ்வாமியின் எண்பதாவது பிறந்தநாள் இன்று. தனது வாழ்க்கையையே பலருக்கு படிப்பினையாக அமைத்திருக்கும் திரு ஸ்வாமிக்கு ஒரே இந்தியா தளம் தனது வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறது. 

வியாழன், 17 ஜூலை, 2025

ஜூலை 17 - ரிசர்வ் பேங்க் முன்னாள் கவர்னர் ஐ ஜி படேல் நினைவுநாள்


இந்தியாவின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் ரிசர்வ் வங்கியின் நான்காவது கவர்னர் இந்திரபிரசாத் கோர்தன்பாய் படேலின் நினைவுதினம் இன்று. குஜராத் மாநிலத்தைச் சார்ந்த திரு படேல் 1924ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள் பிறந்தவர்.

பொருளாதாரத்தில் தனது இளங்கலை பட்டத்தை மும்பை பல்கலைக் கழகத்திலும், முதுகலைப் பட்டத்தை இங்கிலாந்து நாட்டில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும் படித்தார். வெளிநாடு சென்று படிக்க, அன்றைய பரோடா மன்னர் இவருக்கு பண உதவி செய்தார். புகழ்பெற்ற ஹார்வேர்ட் பல்கலைக் கழகத்தில் பொருளாதார முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

இந்தியா திரும்பிய திரு படேல் பரோடா கல்லூரியில் பேராசிரியராகவும் அதன் பின்னர் அதே கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார்.

1949ஆம் ஆண்டு International Monetary Fund தனது ஆராய்ச்சிப் பிரிவுக்கு படேலை அழைத்துக் கொண்டது. ஐந்தாண்டுகள் அந்தப் பணியில் இருந்த திரு படேல், அதன் பிறகு இந்தியா திரும்பி இந்திய அரசின் நிதிதுறையின் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றினார். மீண்டும் 1972ஆம் ஆண்டு ஐநா சபையின் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பில் பணி செய்துவிட்டு, 1977ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 

அவர் ஆளுநராகப் பணியாற்றிய காலத்தில் அன்றய ஜனதா அரசு உயர்மதிப்பீடு கொண்ட ரூபாய் நோட்டுகள் ( 1000, 5000, 10,000 ) செல்லாது என்று அறிவித்தது.

தனது நீண்ட பணிக்காலத்தில் வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் தேசியமயமாக்கம், தொழில் தொடங்கவும், விரிவு படுத்தவும் மிக அதிகமான அரசின் கட்டுப்பாடு, 100% அந்நிய முதலீடு கொண்ட நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறியது போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு படேல் சாட்சியாக இருந்தார்.

அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற படேலை இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் பொருளாதார கல்லூரி ( London School of Economics ) தனது இயக்குனர் குழுவில் ஒருவராக நியமித்தது. இந்த பதவிக்கு தேர்வான முதல் இந்தியர் இவர்தான்.

1991ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவி ஏற்ற நேரத்தில், படேலைதான் நிதியமைச்சராக பொறுப்பு ஏற்கும்படி கோரினார். ஆனால் எதனாலோ படேல் அந்த அழைப்பை ஏற்கவில்லை.

பொருளாதாரத் துறையில் சிறப்பான பங்களிப்புக்காக திரு படேல் அவர்களுக்கு பாரத அரசு பத்ம விபூஷண் விருது வழங்கி மரியாதை செலுத்தியது.

2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் நாள் படேல் தனது எண்பதாவது வயதில் நியூயார்க் நகரில் காலமானார். 

சனி, 28 ஜூன், 2025

ஜூன் 28 - தாராளமயமாக்கலின் நாயகன் பிரதமர் நரசிம்மராவ் பிறந்தநாள்

நேரு குடும்பத்தைச் சேராத முதல் காங்கிரஸ் பிரதமர், தென்னிந்தியாவைச் சார்ந்த முதல் பிரதமர், தனது  பதவிக்காலத்தை முழுவதும் பூர்த்தி செய்த நேரு குடும்பத்தைச் சாராத முதல் பிரதமர், வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், எழுத்தாளர்,   பத்திரிகையாளர்பல்மொழி விற்பன்னர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பிரதமர் என்ற பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் திரு நரசிம்மராவ் அவர்கள். 

1921ஆம் ஆண்டு அன்றய ஹைராபாத் நிஜாமின் ஆளுகைக்கு உள்பட்ட இன்றய தெலுங்கானா மாநிலத்தில் பிறந்தவர் திரு ராவ். சிறுவயதிலேயே உறவினர் குடும்பத்தினருக்கு தத்து கொடுக்கப்பட்டார். தனது ஆரம்ப கல்வியை கரீம்நகர் மாவட்டத்திலும் பட்டப்படிப்பை உஸ்மானியா பல்கலைக்கழகத்திலும் முடித்தார். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை பூர்த்தி செய்தார்.

தெலுங்கு, மராட்டி, ஹிந்தி, சமிஸ்க்ரிதம், தமிழ், ஒரிய மொழி, வங்க மொழி, குஜராத்தி, கன்னடம், உருது ஆகிய பாரதீய மொழிகளிலும் ஆங்கிலம், பிரெஞ்சு, அரபி, பெர்சியன், ஸ்பானிஷ், ஜெர்மன் ஆகிய உலக மொழிகளிலும் புலமை பெற்றவர் நரசிம்மராவ்.

படிக்கும் காலத்திலேயே ஹைதெராபாத் நிஸாமின் ஆட்சியை எதிர்த்து கொரில்லா முறையில் போரிடும் ஒரு குழுவை உருவாக்கினார். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக தனது வாழ்வின் இறுதி வரை பணியாற்றினார். 1957, 1962, 1967, 1972 ஆகிய நான்கு சட்டமன்ற தேர்தல்களில் மந்தானி தொகுதியில் வெற்றி பெற்று ஆந்திர சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 1977,1980 மற்றும் 1991ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல்களில் ஆந்திர மாநிலத்தில் இருந்தும், 1984 மற்றும் 1989 தேர்தல்களில் மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்தும் 1996ஆம் ஆண்டு ஒடிஷா மாநிலத்தில் இருந்தும் நாடாளுமன்றத்துக்கு தேர்வானார்.

1971ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் 4ஆவது முதல்வராக பதவி ஏற்றார். நில உச்சவரம்பு திட்டம் போன்ற நில சீர்திருத்த சட்டங்களை கடுமையாக அமுல் படுத்தினார். 1977ஆம் ஆண்டு நாடு முழுவதும் இந்திராவுக்கு எதிரான அலை வீசிய போதும் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்வானார்.

1980ஆம் ஆண்டு மீண்டும் பிரதமரான இந்திராவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த ராவ், மத்திய அமைச்சராக பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றினார். மத்திய உள்துறை, வெளியுறவு துறை, பாதுகாப்பு போன்ற துறைகளில் அவர் தனது பங்களிப்பை அளித்தார்.

கட்சி அவரின் திறமைகளை பயன்படுத்தாத காலங்களில் அவர் கட்சி தலைமையை குறைகூறுவதற்கு பதிலாக பல்வேறு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள முன்னேற்றங்களை பற்றி தெரிந்து கொண்டார். அதுபோன்ற காலகட்டங்களில் சில நூல்களை எழுதினார், பல நூல்களை மொழிபெயர்ப்பு செய்தார். எண்பதுகளின் ஆரம்ப காலங்களிலேயே அவர் கணிப்பொறியை உபயோகிப்பது பற்றி கற்றுக்கொண்டார். ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறுபது வயதில் கற்றுக்கொள்வது என்பது எவ்வளவு கடினம் என்பது நமக்கெல்லாம் தெரியும்தானே

1991ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் அநேகமாக அரசியலில் இருந்து விலகும் எண்ணத்திலேயே நரசிம்ம ராவ் இருந்தார். ஆனால் காலத்தின் கணக்கு வேறுமாதிரியாக இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த ராஜிவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டார். தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆனால் நாடாளுமன்றத்தில் அதிக இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி இருந்தது. சோனியா தலைமை ஏற்கவேண்டும் என்று ஒரு சாரார் கூற, நேரு குடும்பத்தின் தலையீடு இனி வேண்டாம் என்று சிலர் கூற, பாரதம் முழுவதும் தெரிந்த தலைவர்கள் எவரும் காங்கிரஸ் கட்சியில் இல்லாமல் போக, வயதானவரும், பெருமளவு ஆதரவாளர்கள் இல்லாதவரும், அடுக்கு மொழி வசனங்களால் பொதுமக்களை உணர்ச்சிவசப் படுத்தும் மொழி ஆளுமை இல்லாதவரும், தற்காலிக தலைவராக மட்டுமே இருப்பார் என்ற கருத்தில் சமரச தலைவராகவும், பிரதமராகவும் நரசிம்மராவை காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுத்தது. 

ஆந்திர மாநிலத்தின் நந்தியால் தொகுதியில் இருந்து ராவ் மக்களவைக்கு தேர்வானார். வாமனரூபம் என்று தவறாக எடை போடப்பட்ட நரசிம்மம் ஓங்கி உலகளந்த திரிவிக்ரமனாக தனது ஆளுமையை காட்டியது

அதிக எண்ணிக்கையிலான கட்சி என்ற நிலையில் இருந்து அவர் அறுதி பெரும்பான்மை கொண்ட கட்சி என்ற நிலைக்கு மாறினார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி உறுப்பினர்களுக்கு அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க லஞ்சம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

ஏழைகளுக்கு உதவுவது என்பது நல்ல எண்ணம்தான். ஆனால் உதவ வேண்டும் என்பதற்காகவே மக்களை ஏழைகளாக வைத்திருப்பது என்பது சரியல்ல. முதல் பிரதமர் நேருவிற்கு இருந்த அதீத சோசலிச சிந்தாந்த விருப்பு என்பது இந்திரா காலத்தில் தொழிலதிபர்கள் மீதான வெறுப்பாக மாறியது. நூறு ரூபாய் சம்பாதித்தால் தொண்ணூற்று ஐந்து ரூபாயை அரசுக்கு வரியாக அளிக்கவேண்டும் என்ற திட்டங்கள் இந்த நாட்டில் இருந்தன. ஒரு தொழிலதிபர் என்ன தயாரிக்க வேண்டும், எப்படி தயாரிக்கவேண்டும், அதை எங்கே எப்படி, எந்த எண்ணிக்கையில் தயாரித்து  எந்த அளவு லாபத்தில் விற்கவேண்டும் என்பதை டெல்லியில் அமர்ந்துகொண்டு சில அதிகாரிகள் தீர்மானித்துக் கொண்டு இருந்தார்கள்.

ஒரு தொலைபேசி இணைப்பு கிடைக்க ஏழு ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்த காலம், இரு சக்கர வாகனம் வேண்டும் என்றால் அதன் விலையைப் போல ஒரு மடங்கு பணத்தை லஞ்சமாக அளிக்க வேண்டும் அல்லது அந்நிய நாடு செலவாணி கொடுத்து வாங்க வேண்டும். நான்கு சக்கர வாகனம் என்றால் அது பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே என்று இருந்த காலம். தவறான பொருளாதார கொள்கையால் நாடு திவாலாகும் நிலையில் இருந்தது. வெளிநாட்டு இறக்குமதி கூடி, ஏற்றுமதி குறைந்து, அந்நிய செலவாணி என்பது இல்லாமலேயே இருந்தது. ரிசர்வ் வங்கியின் கையில் இருந்த தங்கம் அடகு வைக்கப்பட்டு, அந்நிய செலவாணி கடனாகப் பெறப்பட்டது.

பொருளாதார சீர்குலைவு, கடந்த மூன்று ஆண்டுகளாக நிலையான மத்திய அரசு இல்லாததால் உருவான குழப்பம், பிரதமராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜிவ் காந்தியின் கொடூரமான மரணம் என்று எல்லா திசையிலும் பிரச்சனைகள், இதற்க்கு நடுவில் பாரத நாட்டில் நாடாளுமன்றத்தின் இரண்டு அவையிலும் உறுப்பினராக இல்லாத 70 வயதான ராவ் நாட்டின் ஒன்பதாவது பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டார். நிலைமையை புரிந்து கொண்ட ராவ் துணிச்சலான முடிவுகளை எடுக்கத் தொடங்கினார். அதிகாரியாக மட்டுமே பணி புரிந்த மன்மோகன்சிங்கை மத்திய நிதியமைச்சராக நியமித்தார். பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டது. தொழித்துறையின் பல்வேறு கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப் பட்டன. இந்திய நாணயத்தின் மதிப்பு குறைக்கப்பட்டது. வருமானவரி, சுங்கவரி உள்பட பல்வேறு வரிவிகிதங்கள் குறைக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டன. குறிப்பிட்ட சில துறைகளைத் தவிர மற்ற தொழில்களில் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப் பட்டது. அரசின் பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. அடக்கி வைக்கப்பட்டு இருந்த தேசத்தின் ஆன்மா விழித்துக் கொண்டது. மிகக் குறுகிய காலத்தில் பாரத பொருளாதாரம் பல்வேறு முனைகளில் பெரும் முன்னேற்றத்தை அடைந்தது.

ராவின் ஆட்சி காலத்தில் பாரதம் அணுகுண்டு சோதனை செய்யும் நிலைமைக்கு வெகு அருகில் இருந்தது. ஆனால் புத்தர் மீண்டும் ஒரு முறை சிரிக்க இன்னும் கொஞ்ச காலம் காத்துக் கொண்டு இருக்க வேண்டி இருந்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய கும்மட்டம் உடைக்கப்பட்டது. அதை தொடர்ந்து நாடெங்கும் கலவரம் வெடித்தது. மும்பை நகரில் தொடர் குண்டுவெடிப்பு, லத்தூர் நகரில் நிலநடுக்கம் என்று பல்வேறு இன்னல்கள் உருவானது.

மும்பை பங்குச்சந்தையின் தரகர் ஹர்ஷத் மேத்தா பிரதமருக்கு தான் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டினார். பரபரப்பான திருப்பங்களும், பல்வேறு குற்றச்சாட்டுகளும் இருந்தாலும் நரசிம்மராவ் தனது பதவிக்காலத்தை முழுவதுமாக பூர்த்தி செய்தார். ஆனாலும் 1996ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான வெற்றியைப் பெற முடியவில்லை. முதன் முதலாக வாஜ்பாய் தலைமையில் பாஜக அரசு பதவி ஏற்றது. அவரும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவி விலக தேசிய முன்னணியின் சார்பில் தேவ கௌடா பதவி ஏற்றார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை சீதாராம் கேசரிக்கும் அவர் பின் சோனியா காந்திக்கும் சென்றது. காங்கிரஸ் கட்சி ராவைப் புறக்கணிக்கத் தொடங்கியது. அவர் கொண்டு வந்த பொருளாதா சீர்திருத்தங்களின் பெருமையை அது ராஜிவ் காந்திக்கு சொந்தமானது என்று கூறத் தொடங்கியது.

பொதுவாழ்வில் இருந்து மெல்ல மெல்ல விலகிய ராவ் 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் நாள் டெல்லியில் காலமானார். அவரது உடலைக் கூட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் வைத்து மரியாதை செலுத்த சோனியா காந்தி சம்மதிக்கவில்லை. அவரது இறுதிச் சடங்குகள் அவர் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக ஆந்திராவில் நடத்தப் பட்டது. பாரத தேசம் என்பதும் அதன் தலைமைப் பதவி என்பதும் நேரு குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானது, வேறு யாருக்கும் அதற்கான தகுதியோ பெருமையோ இல்லை என்ற நேரு குடும்பத்தின் கருத்து மிகவும் தெளிவாக வெளியானது.

மிகவும் கடினமான காலகட்டத்தில் இந்த நாட்டை வழிநடத்திச் சென்று, இன்று கிடைத்திருக்கும் பல்வேறு வசதிகளுக்கும் முன்னேற்றத்திற்கும் காரணமான திரு நரசிம்மராவை அவரது பிறந்தநாள் அன்று நினைவு கூர்ந்து அவரது சேவைகளுக்காக நன்றி செலுத்துகிறோம். 

புதன், 2 அக்டோபர், 2024

பரஸ்பர நிதித் திட்டங்கள் கால அளவினாலும், முதலீட்டுக் குறிக்கோள்களாலும் வேறுபடும்.இவைகளை மூன்று பெரும் பிரிவுகளாக நாம் பகுத்துக் கொள்ளலாம்.

1, எப்போதெல்லாம் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம் என்பதைப் பொறுத்து

2, முதலீட்டாளர்களின் முதலீட்டை நிறுவனம் எப்படி முதலீடு செய்கிறது என்பதைப் பொறுத்து.

3, நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்பதைப் பொறுத்து.



இதில் Open Ended Scheme என்பதில் முதலீட்டாளர் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம், எப்போது வேண்டுமானாலும் முதலீட்டைத் திரும்பப் பெறலாம். 













வெள்ளி, 13 மார்ச், 2020

திவாலாகிறாரா அம்பானி ?


பங்குச்சந்தையில் ரத்தக் களரி. அநேகமாக எல்லா நிறுவனங்களின் பங்குகளும் விலை குறைந்து கொண்டே போகிறது. பிரதமர் மோதியின் செல்லப் பிள்ளைகள் என்று இதுவரை போராளிகளால் தூற்றப்பட்ட அம்பானி மற்றும் அதானியின் நிறுவனங்களின் பங்குகளும் விலை குறைந்துள்ளன. அவர்கள் திவாலாகப் போகிறார்கள், அவர்களையே இந்த அரசு காப்பாற்ற முடியவில்லை என்று வழக்கம் போல நமது போராளிகள் கூக்குரல் போடத் தொடங்கி இருக்கிறார்கள்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்தப் பங்குகள் ஏறத்தாழ 634 கோடி. அதில் 49% பங்குகள் அம்பானியின் வசம் உள்ளது. அதாவது 300 கோடிக்கும் சற்று அதிகமான பங்குகள் அவர் வசம் உள்ளது. அம்பானியின் சொத்து மதிப்பு என்பது அன்றய தினம் ஒரு பங்கின் மதிப்பை 300 கோடியால் பெருகினால் வரும் தொகைதான்.

கடந்த 52 வார காலத்தில் 1,600 ரூபாய் அளவில் விற்பனையான பங்கு இன்று 1,060 ரூபாய்க்கு கிடைக்கிறது. எனவே அம்பானியின் சொத்து மதிப்பு மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது என்று போராளிகள் சொல்கிறார்கள்.

நேற்றுவரை பாரத நாட்டுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருந்த அம்பானி ( அதானியும் ) ஓட்டாண்டியானால் இவர்களுக்கு என்ன பிரச்னை ? எதற்கு இப்படியான பெரும் பணக்காரர்களுக்கு இவர்கள் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள் ?

வேறு ஒன்றும் இல்லை, மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் விதவையானால் போதும் என்ற பரந்த மனப்பான்மையின் விளைவுதான் இது.

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா என்று காகிதத்தில் எழுதி நக்கிப் பார்த்தால் அது இனிக்காது. அதை அங்கே நெல்லையப்பர் கோவில் எதிரில் மாலை ஆறு மணிக்கு மேலே வரிசையில் இன்று வாங்கி சாப்பிட்டுப் பார்த்தால்தான் அதன் சுவை தெரியும்.

அதுபோல பங்கு மதிப்பை கைவசம் உள்ள பங்குகளின் எண்ணிக்கை கொண்டு பெருக்கி சொத்து மதிப்பை கணக்கிடுவது சிறிய முதலீட்டாளர்களுக்கு வேண்டுமானால் சரியாக வரும், பெரும்தொழிலதிபர்களின் சொத்தை அப்படி கணக்கிடுவது சரிவராது.

ஏன்னென்றால் ஒருவேளை பங்கு ஓன்று 1,600 ரூபாய்க்கு விற்பனையான சமயத்தில் தனது 300 கோடி பங்குகளை விற்பனை செய்ய அம்பானி முடிவு செய்தால், உடனடியாக பங்கின் விலை அதள பாதாளத்தில் விழுந்து விடும்.

நாம் வைத்திருக்கும் நூறு அல்லது இருநூறு பங்குகளை விற்பதால் எந்த நிறுவன பங்கின் விலையும் பெரிய அளவில் மாறாது, ஆனால் பெரிய அளவில் பங்குகள் விற்பனைக்கு வந்தால் விலை வீழ்ச்சி அடையும் என்பது பொருளாதாரத்தின் பால பாடம்.

தொழில்செய்பவருக்கு லாபம் மிக அவசியம், ஆனால் தொழில் நடத்துவதில் உள்ள சவால்தான் பணத்தைக் காட்டிலும் அவர்களை தூண்டுவது.

ஆகவே போராளிகளே ! அம்பானியும், அதானியும் அவர்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள். உங்கள் வேலையை மட்டும் நீங்கள் செய்தால் போதும்.

https://www.ril.com/ar2018-19/ril-annual-report-2019.pdf

2018 - 19ஆம் ஆண்டுக்கான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையை இதோடு இணைத்து இருக்கிறேன். படித்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்யவும். 

புதன், 23 செப்டம்பர், 2015

அறிஞரின் சொல்

எனது இனிய நண்பரும், பட்டயக்  கணக்காளருமான    திருசெந்துறை ராமமூர்த்தி சங்கர் தனது முகநூலில் எழுதிய பதிவு.

முதலீடு

அறிவுரை சொல்பவர்கள் தாங்கள் அதைப் பின்பற்றுகிறோம் என்று உறுதிமொழி கொடுக்கவேண்டும் என்பது முக்கியம். நான் எனது முதலீடுகளை அரசுடைமை வங்கிகளில் மட்டும் வைத்திருக்கிறேன். தனியார் வங்கிகளில் சில இணைய வசதிகளுக்காகவும் , கல்லூரி, பள்ளி ஃபீஸ் தேவைகளுக்கும். இன்னும் போஸ்ட் ஆஃபீஸ் , ஓய்வூதிய சேமிப்பு தொடங்க மட்டுமே ஆசை. பங்குச்சந்தையில் முதலீடுகள் இல்லை. அதிகபட்சம் , முதலீட்டின் மேல் 10% .....அதற்குமேல் எந்த முதலீடும் கிடையாது.

1. 10 அதிகபட்சம் 12 சதவிகித வட்டிக்கு மேல் எந்த ஒரு வியாபாரமும் கொடுக்கமுடியாது. பத்தாண்டு சராசரியில் அதற்குமேல் வர வாய்ப்பே இல்லை. எனவே 18 , 21 என்று தர எந்தத் தொழிலும் கிடையாது. அப்படி ஆசை காட்டும் மனிதர்கள் நிச்சயம் சட்டபூர்வமான தொழில்களையோ அல்லது முழுதும் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் தொழில்களையோ செய்ய முடியாது. இன்றைய வளர்ச்சி என்பது எதிர்காலத்திடமிருந்து வாங்கப்பட்ட கடன் என்பது பொருளாதாரத்தின் ஒரு விதி.

2. பேராசையோ , பெண்ணாசையோ ஒரு க்ஷண நேர சபலம். தாண்டுங்கள். பணத்திற்கு யாராவது ஆசை காட்டினால் ஒரு நிமிடம் அனுபவ், திருமகள், ஆர்.பி.எஃப் போன்ற நிறுவனங்களை நினைத்துக் கொள்ளூங்கள். இந்த அசல் தொகை போனால் உங்கள் உழைப்பும், குடும்ப எதிர்காலமும் கேள்விக்குறி என்ற விஷயத்தை யோசியுங்கள். இயல்பாகவே அந்த ஆசை காட்டும் நபர்கள் இனிக்க இனிக்கப் பேச்சுத் திறன் உடையவர்களாக இருப்பார்கள். ஓடுமீனாவதும், உறுமீனாவதும் உங்கள் கையில் . 13 வருடங்களுக்கு முன் ஓரு மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பெனியில் மனைவி, நண்பர்கள் பணம் போடச்சொன்னபோது நான் சொன்னது " இது என் முதலீடு இல்லை. செலவு. நான் இதை என் பணமாக மற்ந்துவிட்டேன். உங்கள் முதலீடாக வாழ்த்துகள்!" அது என் மனைவிக்கு அறிவு முதலீடானது. அதுவே எங்களுக்கு ஒரே அனுபவ்!

3. முதலீடு செய்யுமுன் மனைவி, பெற்றவர்கள் , வளர்ந்த குழந்தைகள் போன்றவர்களிடம் விவாதியுங்கள். தவறுகள் பெருமளவு குறையும். பரஸ்பர நம்பிக்கைகள் வளரும். அவர்களுக்காகச் செய்யும் முதலீடுகளில் அவர்களின் நியாமும் இருக்கச் செய்யவேண்டியது கடமை. விவாதிக்கும் போது உங்களுக்குத் தெரியாத பல நிறைகுறைகள் தெளிவாகும்.

4. பங்குச்சந்தையிலும் அதிக நல்ல தரமான ஆலோசனையாளர்களையே அணுகுங்கள். கட்டைவிரல் விதியாக 65:35 என்று பாதுகாப்பை வாரந்தோறும் உறுதி செய்யச் சொல்லுங்கள். அதிலும் 15 % உச்சவரம்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

5. வரி ஏய்ப்புக்கு திட்டம் சொல்லும் யாரையும் சேர்க்காதீர்கள். வரி ஏய்ப்பிற்கும் , வரி திட்டமிடுதலுக்கும் உள்ள வேறுபாட்டை படித்து, கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இது உங்கள் முதலீட்டு ஆலோசனைகளைச் செம்மையாக்கும். ஓழுங்காக வரி கட்டும்போதே , சில விதிமுறைகளப் புரிந்துகொண்டு செயல்படாததால் அபராதம் கட்டிய அனுபவம் எங்களுக்கு உண்டு.

6. அடிப்படையாக இலவசம் என்று எதுவும் கிடையாது. ஒரு ஹாண்ட் பேக் , விமான டிக்கெட் இலவசமாகத் தர அவர்களுக்கு நீங்கள் பாசக்காரத் தம்பியோ அண்ணனோ இல்லை என்று உணருங்கள். அவர்களுக்கு உங்களிடமிருக்கும் பணமோ, அல்லது பேராசையோ மோப்பம் பிடிக்கும் திறன் இருக்கிறது என்று பாராட்டிவிட்டு உருப்படியான வேறு வேலைகளைப் பார்க்கச் செல்லுங்கள்.

7. இது சற்று வித்தியாசமானது. உறவினர்களின் எந்தத் தொழிலிலும் முதலீடு செய்யாதீர்கள். உறவு, பணம் இரண்டையும் இழக்க நேரும்.

8. உங்கள் குழந்தைகளிடம் சிறுசேமிப்பை, 10 வயதிலிருந்தே வளருங்கள். அவர்களுக்கு வங்கிகளின் செயல்பாட்டை புரியவைப்பது மிகவும் பயனுள்ளது. என் மகனுக்குத் தெரிய வைத்தேன். மகளுக்கு இனிதான்...இங்கு அதற்கான வசதிகள் இல்லை.

நாங்கள் விளையாட்டாய்ச் சொல்வதுண்டு. புத்தரே பணத்தை ஒரு ஃபைனான்ஸ் கம்பெனியில் போட்டிருந்தார். பணம் போனதும் " கயா" ( போச்சு) என்ற ஞானம் வந்தது புத்தகயாவில் ஆசையே அழிவிற்கு வித்து என்று உலகிற்குச் சொன்னார். (அந்த மாமுனிக்கு நமஸ்காரம்)

பணத்தை இழந்தபின் " நான் தான் சொன்னேனே ! " என்று வருபவர்கள் அவர்கள் அதைவிடப் பெருந்தொகையை இழந்தவர்களாக இருப்பார்கள். தங்களை ஆறுதல் படுத்திக்கொள்ள இதுபோல் சொல்வதுண்டு. அவர்களை மன்னித்து விடுங்கள்.



https://www.facebook.com/T.R.Sankar/posts/10153117932356451



திரு சங்கர் அவர்களுக்கு நன்றி 

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

பரஸ்பர நிதி - சாதகங்கள்

இன்றைய நிலையில் தென்னைமரத்தில் தேள் கொட்டினால், பனைமரத்தில் நெறி கட்டுவது போல, உலகின் எதோ ஒரு முலையில் எதோ ஒரு நாட்டில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி உலகின் பல இடங்களில் எதிரொலிக்கிறது. இவைகளை எல்லாம் அறிந்து, அதனால் ஏற்படும் பொருளாதார விளைவுகளை யூகிக்கும் மதி நுட்பம் எல்லோருக்கும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. பரஸ்பரநிதி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பொருளாதார வல்லுனர்கள் நம்மைக் காட்டிலும் இந்தத் துறையில் தேர்ச்சி அடைந்தவர்களாக இருப்பார்கள். எனவே பரஸ்பரநிதி மூலமாக முதலீடு செய்வதன் முக்கியமான பலன் என்பது துறை சார்ந்த வல்லுனர்களின் ஆலோசனை என்பதே ஆகும். இந்த ஆலோசனைக்காக நிறுவனம் வாடிகையாளர்களிடம் வசூலிக்கும் கட்டணம் என்பது மிகக் குறைவு.

அடுத்தபடியாக நேரடியாகப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப் பெரிய அளவிலான பணம் தேவைப்படும். சிறந்த நிறுவனங்களின் பங்குகளின் விலை மிக அதிகமாக இருக்கும். மேலும் முதலீட்டாளர் நட்டம் அடைவதைத் தவிர்க்க வேண்டும் என்றால், பல்வேறு நிறுவனங்களின் பங்குகளில் தனது முதலீட்டைப் பரவலாக்கவேண்டும். இது பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே முடிந்த செயலாக இருக்கும். பல நிறுவனங்களில் ரூபாய் ஐநூறு அல்லது ரூபாய் ஆயிரத்தில் நமது முதலீட்டைத் தொடங்கலாம். வங்கிக் கணக்கும், வருமானவரித்துறை வழங்கும் நிரந்தரக் கணக்கு எண் இவை இரண்டும் இருந்தால், முதலீட்டை ஆரம்பித்து விடலாம். 

மேலும், முதலீட்டாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்றார்ப்போல உள்ள முதலீட்டைத் தேர்வு செய்யும் வசதி மற்றும் மிகக் குறைவான கால அவகாசத்தில் தங்கள் முதலீட்டைப் பணமாக மாற்றிக்கொள்ளும் வசதி ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.

மேலும் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை மாதாமாதம் பரஸ்பரநிதியில் சேமிக்கும் போது, Rupee - Cost Average என்கிற முறையில் நீண்ட கால நோக்கில் கிடைக்கும் வளர்ச்சி அதிகமாக இருக்கும். நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு நமக்குக் கிடைப்பது UNITS என்று அழைக்கப்படும் அலகுகள். இந்த அலகுகளின் விலை அதிகமாக இருக்கும் போது, நமக்குக் கிடைக்கும் அலகுகளின் எண்ணிக்கை குறைவாகவும், அவைகளின் விலை குறைவாக இருக்கும் போது நமக்குக் கிடைக்கும் அலகுகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கும். நீண்ட கால நோக்கில் பார்க்கும்போது, ஒரே தவணையாக முதலீடு செய்வதைவிட, மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதுதான் சரியான வழிமுறை. 

உதாரணமாக இந்தப் படங்களப் பாருங்கள்

இரண்டு வருட கால அளவில் மாதம் ஒன்றுக்கு ரூபாய் ஆயிரம் வீதம் ஒரு பரஸ்பரநிதி நிறுவனத்தில் ஒருவர் முதலீடு செய்து வந்தார். ஒவ்வொரு மாதம் முதல் தேதி அன்று அந்த நிதியின் Net Asset Value மற்றும் அவருக்குக் கிடைக்கும் அலகுகளின் எண்ணிக்கை இதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

இரண்டு வருடம் முடிவில் அவர் சேமித்த தொகை ரூபாய் இருபத்தி நான்காயிரம். அவர் வசம் இருக்கும் அலகுகளின் எண்ணிக்கை 1451.65. அந்த அலகுகளின் மொத்த மதிப்பு ரூபாய் 35,404.27. அவருக்குக் கிட்டிய வளர்ச்சி 46.44%. 

ஆனால் அவர் அதே இருபத்தி நான்காயிரத்தை 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரே தடவையாக முதலீடு செய்து இருந்தால் அவரிடம் 2133.72 அலகுகள் இருந்து இருக்கும். அவைகளின் மொத்த மதிப்பு ரூபாய் 52,041.43
ஆக இருந்து இருக்கும்.

ஆனால் இந்த இரண்டாண்டு காலகட்டத்தில் பங்குச்சந்தை பெரிய அளவில் பின்னடைவைச் சந்திக்கவில்லை. இதே நிதியில் ஒருவர் 2011 ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டு வருட காலத்திற்கு இதே ஆயிரம் ரூபாயை சேமித்து வந்தால் கிடைத்து இருக்கும் வளர்ச்சியை இந்தப் படங்கள் காட்டுகிறது.

இந்தக் காலகட்டத்தில் அவருக்குக் கிடைத்து இருக்கும் அலகுகளின் எண்ணிக்கை 2233.20 என்றும் அவரது அலகுகளின் மதிப்பு 26,356.24 என்றும் இருக்கும். அதாவது அவரது சேமிப்பின் வளர்ச்சி என்பது 10.1% இருக்கும்.

ஒருவேளை அவர் 2011 ஆகஸ்ட் மாதம் முதல் இன்று வரை ( 2015 ஆகஸ்ட்) வரை தனது மாதாந்திர சேமிப்பை ரூபாய் ஆயிரம்வீதம் இதே நிதியில் சேமித்து இருந்தார் என்றால் அவர் வசம் 3684 அலகுகளும், அதன் மதிப்பாக ரூபாய் 89,877/- இருந்து இருக்கும். அதாவது அவர் சேமிப்பின் வளர்ச்சி என்பது 33.89% ஆக இருக்கும்.

முன்னமே  சொன்னதுதான், சிறிய அளவிலான சேமிப்பு, அதுவும் நீண்ட கால நோக்கில், நடுவில் முறிக்காமல் சேமிப்பை வளரவிட்டால் கிடைக்கும் வளர்ச்சி என்பது மிக அதிகமாக இருக்கும்.

எல்லா நிதித் திட்டங்களும் இந்த அளவு வளர்ச்சியைத் தருமா என்றால் தராது என்பதுதான் பதில். உதாரணமாக இதே காலகட்டத்தில் மற்றொரு நிதித் திட்டம் எந்த அளவு வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்று பார்ப்போம்.


அதே ஆயிரம் ரூபாய் மாத முதலீடு, அதே கால அளவு, ஆனால் அவர் செலுத்திய நாற்பத்தி எட்டாயிரம் என்பது ஐம்பத்தி ஐந்தாயிரத்து நூற்றி ஐம்பது நான்காக மட்டுமே உயர்ந்து உள்ளது. அதாவது பணவீக்கவிகிதத்தைக் கணக்கில் கொண்டு பார்த்தால் இது ஒரு நல்ல சரியான லாபகரமான முதலீடு இல்லை. 

எல்லா முதலீடும் ஒரே போன்ற வளர்ச்சியைக் காண்பதில்லை என்பதை நிருபிக்கவும், எல்லா முதலீட்டிலும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு என்பதைக் காட்டவுமே இதைப் பகிர்ந்தேன். 

எதோ ஒரு பரஸ்பரநிதித் திட்டம் என்று முடிவு செய்யாமல், சரியான நிர்வாகம் உள்ள, ஏற்கனவே சந்தையில் அறிமுகம் உள்ள அனுபவசாலிகள் இருக்கும் திட்டங்களில் முதலீடு செய்வதே சரி. 

திங்கள், 6 ஏப்ரல், 2015

பங்குச் சந்தை

நம்மிடம் உள்ள முதலீட்டுக்கான வழிகளில் மிக அதிகமான வளர்ச்சியைக் கொடுக்கக் கூடியது பங்குகளில் முதலீடு செய்வது மட்டுமே. மிகக் கவர்ச்சிகரமானதும் மிக அபாயமான சந்தை முதலீட்டைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

நமக்கு காய்கறிச் சந்தை, மீன் சந்தை இவைகளைப் பற்றித் தெரியும். சந்தை என்பது வாங்குபவர்களும் விற்ப்பவர்களும் அதோடு வேடிக்கை பார்பவர்களும் கூடும் இடம். பண்டமாற்று முறையிலோ அல்லது பணப் பரிமாற்றம் மூலமாகவோ பொருள்களும் சேவைகளும் கைமாறும் இடம்.

பங்குச் சந்தை என்பதும் அதுபோல பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யப்படும் இடமாகும். முன்பெல்லாம் நாம் காய்கனி வாங்க அவைகள் விற்பனை செய்யப் படும் இடத்திற்க்குச் சென்றாக வேண்டும். அதுபோல பங்குகள் வாங்க, விற்க பங்குச் சந்தைக்குச் செல்லவேண்டும். இன்று அறிவியல் முன்னேற்றம் காரணமாக காய்கனிகளை தொலைபேசி மூலமாகவோ இல்லை இணையதளம் மூலமாகவோ வாங்குவது போலவே பங்குகளையும் தொலைபேசி மூலமாக, இணையம் மூலமாக வாங்கவோ விற்கவோ முடியும்.

பங்குகள் - ஒரு அறிமுகம். 
ஒரு தொழிலைத் தொடங்கவும், காலப் போக்கில் அது வளர்ச்சி அடையும்போதும் அதற்க்கு முதலீடு தேவைப்படும். தொழில்முனைவர் பொதுவாக தங்கள் கைவசம் உள்ள பணத்தை அவர் தொழிலில் முதலீடு செய்வார். அதற்க்கு மேலும் பணம் தேவைப்பட்டால் பங்குதாளர்களைச் சேர்த்துக் கொண்டோ, இல்லை வங்கிகளில்/தனியாரிடம் கடன் வாங்கியோ அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வார். கடன் வழங்குபவர்களுக்கு தொழிலின் லாப நட்டதைப் பற்றி பெரிய அளவில் கவலை இருக்காது. அவர்களுக்கு அவர்கள் கொடுத்த பணம் வட்டியோடு திரும்பி வருமா என்ற கேள்விதான் முக்கியமாக இருக்கும். ஆனால் பங்குதாளர்களுக்கு நிறுவனத்தின் லாபத்திலும் நட்டத்திலும் பங்கு உண்டு.

பெரும் அளவில் பணம் தேவைப்படும் தொழில்களில் பொதுமக்களையும் பங்குதாளர்களாக சேர்த்துக் கொள்வது உண்டு. அப்போது அந்த முதலீட்டாளர்கள் தொழிலில் உள்ள லாப நட்டத்தையும் பகிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு தொழிலைத் தொடங்க எனக்கு ஐந்து கோடி ரூபாய் தேவைப்படுகிறது. என்வசம் இரண்டு கோடி ரூபாய்தான் இருக்கிறது என்றால், மீதி மூன்று கூடி ரூபாய்க்கு நான் பங்குகளை விற்கலாம். என்மீது நம்பிக்கை உள்ளவர்கள் (அப்படி யாரேனும் இருந்தால்) அந்தப் பங்குகளை வாங்கிக் கொண்டு நான் தொடங்கும் தொழிலில் பங்கெடுத்துக் கொள்வார்கள். பொதுவாக பங்குகளின் முகமதிப்பு பத்து ரூபாயாக இருக்கும். அப்போது இந்தத் தொழிலுக்காக நான் அம்பது லட்சம் பங்குகளை வெளியிட்டு, அதில் இருபது லட்சம் பங்குகளை வைத்துக் கொண்டு, முப்பது லட்சம் பங்குகளை வெளியீடு செய்வேன். நிறுவனத்தின் லாப நட்டதை ஒட்டி, இந்தப் பங்குகளின் விலை மாற்றம் அடையும். இப்படி வெளியிடப் படும் பங்குகள் தான் பங்குச் சந்தையில் விற்பனையாகிறது.

ஒருவேளை நான் ஏற்க்கனவே லாபகரமாக நடத்திக்கொண்டு இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்ய எனக்குப் பணம் வேண்டி இருந்து அதற்காக நான் பங்குகளை வெளியிட்டால், முகமதிப்பான பத்து ரூபாய்க்கு மேல் ஒரு தொகையை (Premium) அதிகமாக வைத்து வெளியிடலாம். புதிதாக ஆரம்பிக்கும் தொழில் லாபமடைய கொஞ்ச நாட்கள் பிடிக்கும். ஆனால் நடந்து கொண்டு இருக்கும் தொழில் உடனடியாக லாபம் தருவதால் இந்த அதிகப் பணம் கொடுக்கப்படுகிறது.

தொழில்முனைவோரின் பின்னணி, அவரது அனுபவம், ஏற்க்கனவே அவர் நடத்தி வரும் தொழில்கள், அவர் தொடங்க / விரிவாக்கம் செய்ய உள்ள தொழில், அதற்க்கான சந்தை இவைகளைப் பொருத்து முதலீட்டாளர்கள் அந்தப் பங்கை வாங்க முன்வருவார்கள்.

மும்பை பங்குச் சந்தை 
இந்தியாவில் மும்பையிலும் அதுபோன்ற பெருநகரங்களிலும் பங்குச் சந்தைகள் இயங்கி வருகின்றன. அவைகளில் மிகவும் பழமையானதும், அளவில் பெரியதும் மும்பை பங்குச் சந்தைதான். மும்பை பங்குச் சந்தை ஆசியாவின் மிகப் பழமையான ஒரு நிறுவனம். இது 1875ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் ஐயாயிரத்திற்கும் அதிகமான நிறுவங்களின் பங்குகள் பரிமாற்றம் ஆகின்றன.

மும்பை பங்குச் சந்தை இணையத்தளம் 

பங்குச்சந்தை குறியீடு ( Sensex ) 
இந்த நிறுவனங்களில் இருந்து வெவ்வேறு துறையில் இருந்து, அளவில் பெரிய முப்பது நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு பங்குச் சந்தை குறியீடு எண் நிர்ணயம் செய்யப் படுகிறது. மும்பை பங்குச் சந்தையில் 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி அன்று இந்த குறியீடு எண் 100 என்று எடுத்துக் கொண்டு, நாள்தோறும் இந்த முப்பது பங்குகளின் விற்பனை விலையை வைத்து இது நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த முப்பது நிறுவனங்கள் என்பது நிலையான ஓன்று இல்லை. இவை அவ்வப்போது மாற்றி அமைக்கப்படுவது. 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி இந்த எண் 27,957.49 என்று குறிக்கப்பட்டு உள்ளது.

அதாவது  36 வருடங்களில் சந்தையின் மதிப்பு 280 மடங்கு அதிகரித்து உள்ளது. ஏறத்தாழ வருடாவருடம் சந்தையின் மதிப்பு இரட்டிப்பாகிறது என்று கொள்ளலாம்.

எல்லாப் பங்குகளும் இதே அளவில் கூடி இருக்கிறது என்பது இல்லை, சில பங்குகள் இந்த அளவைத் தாண்டியும் கூடி இருக்கலாம். சில பங்குகள் விலை குறைந்தும் இருக்கலாம். குறியீட்டு எண் என்பது ஒரு கைகாட்டி மரம் போலத்தான் என்பதை நினைவில் வையுங்கள்.

கடந்துவந்த பாதை 





சந்தை முதல் பத்து வருடத்தில் பத்து மடங்கு உயர்ந்து உள்ளது. ஆனால் நாலாயிரத்தில் இருந்து ஐந்தாயிரம் வளர்ச்சி அடைய ஏறத்தாழ எழு வருடங்களும், அதில் இருந்து ஏழாயிரம் எண்ணிக்கையைத் தொட ஆறு வருடங்களும் ஆகி இருக்கிறது. குறியீட்டு எண் இருபதாயிரத்தில் இருந்து இருபத்தி இரண்டாயிரம் வர எழு வருடங்கள் ஆகி உள்ளது. ஆனால் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு உள்ளாக ஒரே வருடத்தில் இருபத்தி இரண்டாயிரத்தில் இருந்து முப்பதாயிரம் அளவிற்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது. போதுமான கால அவகாசம் கொடுத்து இருந்தால் பங்குச் சந்தையில் கிடைக்கும் வளர்ச்சி வேறு எந்த முதலீட்டிலும் கிடைக்கும் வாய்ப்பு இல்லை.

தொடக்கம் முதல் இந்த வருடம் வரை சந்தையின் போக்கு.


1979 முதல் 1989 வரையான முதல் பத்து வருட வளர்ச்சி.

1989 முதல் 1999 வரையான இரண்டாவது பத்து வருட வளர்ச்சி


1999 முதல் 2009 வரை

2009 முதல் 2015 வரை

குறைந்த பட்சம் எழு வருடங்களுக்குக் குறையாமல் கால அவகாசம் தருவது உங்கள் பணத்தைப் பெருக்கும் வழியாக இருக்கும்.

காளையும் கரடியும் 
பங்குகளின் மதிப்பு என்பது எல்லா நேரத்திலும் நிறுவனங்களின் அடிப்படையை வைத்து இருப்பது இல்லை. எதிர்பார்ப்புகளை, கணிப்புகளை வைத்தே முதலீட்டாளர்கள் பங்குகளின் விலைகளை நிர்ணயம் செய்கிறார்கள். உதாரணமாக தற்போதைய அரசாங்கத்தின் மீது உள்ள நம்பிக்கை பங்குகளின் விலையை ஏற்றிவைத்து உள்ளது. ஒரு வேளை சந்தையின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ப தற்போதைய அரசு செயல்படவில்லை என்றால் இந்த விலைகள் கீழே போகவும் கூடும். சந்தை ஏறுமுகமாக இருந்தால் அது காளையின் பிடியில் உள்ளது என்றும், இறங்குமுகமாக இருந்தால் அது கரடியின் பிடியில் உள்ளது என்றும் கூறுவார்கள். காளை அதன் கொம்புகளால் முட்டித் தூக்குவதாலும், கரடி தன் கைகளால் பிடித்து அழுத்துவதாலும் இந்தப் பெயர்கள் குறிக்கப்படுகின்றன.



1979ஆம் வருடம் உங்களிடம் ஒரு லட்ச ரூபாய் இருந்து, நீங்கள் அதனை எங்கேயும் முதலீடு செய்யாமல் உங்கள் கையிலேயே வைத்து இருந்தீர்கள் என்றால், உங்களிடம் அதே ஒரு லட்ச ரூபாய் இருக்கும், ஆனால் பணவீக்க விகிதத்தால் அந்தப் பணத்தின் வாங்கும் சக்தி ரூபாய் ஆறாயிரமாக இருக்கும். அதே பணத்தை நீங்கள் வங்கியில் நிரந்தர வைப்பு நிதியில் (Fixed Deposit) முதலீடு செய்து இருந்தால் அந்தப் பணம் பதினேழு லட்சமாக வளர்ந்து இருக்கும், ஆனால் பணவீக்கவிகிதத்தால் அதன் வாங்கும் மதிப்பு ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாயாகத்தான் இருக்கும்.

இதே பணத்தை நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்து இருந்தால் அதன் மதிப்பு இன்று முப்பத்தி ஆறு லட்சமாக இருக்கும், ஆனால் பணவீக்க விகிதத்தைக் கணக்கில் எடுத்தால், அதன் மதிப்பு 2.3 லட்ச ரூபாயாக இருக்கும்.

இதே ஒரு லட்ச ரூபாயை அன்று நீங்கள் சந்தை குறியீடு எண்களைக் குறிக்கும் பங்குகளில் முதலீடு செய்து இருந்தால், அதன் மதிப்பு இன்று 2.32 கோடி ரூபாயாக இருக்கும், ஆனால் பணவீக்க விகிதத்தால் அதன் மதிப்பு பதினான்கு லட்ச ரூபாயாக இருக்கும். இதில் சந்தை குறியீட்டு எண்களாக இருக்கும் நிறுவனங்கள் நிலையாக இருப்பதில்லை என்பதை நினைவில் வைக்கவும்.

( அதாவது 1979ஆம் வருடத்தில் 14 லட்ச ரூபாய்க்கு எதை வாங்க முடியுமோ அதைதான் 2015ஆம் வருடத்தில் உங்கள்வசம் இருக்கும் 2.32 கோடி ரூபாயால் வாங்க முடியும் )

 மாற்றம் ஒன்றே மாறாதது. சந்தை எப்போதும் ஏறுமுகமாகவோ இல்லை இறங்குமுகமாகவோ நிலையாக இருப்பது இல்லை. குறைந்த விலையில் வாங்கி, விலை அதிகமாகும்போது விற்றால் லாபம் கிடைக்கும். மிக எளிதாகத் தோன்றினாலும், பலர் பங்குச்சந்தையில் பணத்தை இழக்கவே செய்கின்றனர். இதற்க்கு இரண்டு காரணங்கள், ஓன்று அடிப்படை தெரியாமல் பங்கு வர்த்தகத்தில் இறங்குவது, இரண்டாவது இன்னும் இன்னும் மேலே விலை உயரும் என்ற பேராசை.

 இந்த இரண்டு காரணங்களால் பணத்தை இழந்தவர்கள், சூடு பட்ட பூனை பாலைப் பார்த்து பயந்து ஓடுவது போல பங்குச் சந்தையை சூதாட்டம் என்று மற்றவர்களைப் பயமுறுத்துகின்றனர்.

அப்படி என்றால் பங்குச் சந்தை முதலீடு புதையலா இல்லை புதைகுழியா ? வாருங்கள் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

தொடர்புடைய பதிவுகள் 
1. முதலீட்டுக்கான சில வாய்ப்புகள் 
2. எச்சரிக்கை - சிறிது நிதானம் தேவை
3. பணவீக்கம் ஒரு எளிய அறிமுகம்   

சனி, 4 ஏப்ரல், 2015

விதி எண் 72


முதலீட்டுக்கான வாய்ப்புகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து விட்டு வேறு சில விசயங்களைப் பற்றிப் பார்ப்போம். நம் அனைவருக்கும் பணம் இரட்டிப்பாகவேண்டும் என்ற ஆசை கட்டாயமாக இருக்கும். அதற்க்கு நமக்கு பணம் வளர்ச்சி அடையும் வேகத்தைப் பற்றித் தெரிந்து இருக்க வேண்டும்.

பள்ளி நாட்களில் நாம் சாதாரன வட்டி மற்றும் கூட்டு வட்டி பற்றி படித்து இருப்போம். கூட்டு வட்டி என்பது வட்டிக்கு மேல்கிடைக்கும் வட்டி ஆகும். கூட்டுவட்டி முறையில் பணம் வளரும் வேகம் மிக அதிகமாக இருக்கும். உதாரணமாக பத்தாயிரம் ரூபாய் 12% வட்டி விகிதத்தில் வளர்ச்சி அடைந்தால் ஆறு வருடத்தில் ( 1,200 * 6) சாதாரண வட்டி முறையில் நமக்கு Rs 7,200/- கிடைக்கும். அதுவே கூட்டுவட்டி என்றால் Rs 9,738/-  கிடைக்கும்.


அதாவது கூட்டுவட்டி முறையில் ஆண்டு ஒன்றிற்கு 12% வளர்ச்சி அடைந்தது என்றல் உங்கள் பணம் ஆறு வருடங்களில் இரட்டிப்பாகும். ஒரு முறை முதலீடு செய்துவிட்டு, அந்தப் பணத்தை எடுக்காமல், வட்டியையும் மறுமுதலீடு செய்து அதில் கிடைக்கும் வளர்ச்சி செய்தால் கிடைக்கும் வளர்ச்சி பற்றி இங்கே பார்த்தோம்.

ஆனால் ஆறு வருடங்கள் ஆண்டு ஒன்றிக்கு பத்தாயிரம் ரூபாய் தொடர்ச்சியாக முதலீடு செய்து அந்தப் பணம் 12% வளர்ச்சி அடைந்தால், ஆறு வருட முடிவில் என்ன கிடைக்கும் என்றால்


அதாவது நீங்கள் முதலீடு செய்த பணம் அறுபதாயிரம் ரூபாய்கள், ஆனால் ஆறு வருட முடிவில் உங்களுக்கு அது தொண்ணூறாயிரம் ரூபாயாகப் பெருகி இருக்கும்.

அது என்ன விதி எண் 72 ?
அது உங்கள் பணம் வளரும் வேகத்தைக் குறிக்கும் எண். உதாரணமாக உங்கள் முதலீடு வருடம் ஒன்றிக்கு 8% வளர்ச்சி காணுகிறது என்றால், அது இரட்டிப்பாகும் காலம்

                         விதி எண்             72
                          -------------   =        -------   =     9 வருடங்கள்.
                         வளர்ச்சி                8

அது போல உங்கள் பணம் நான்கு வருடத்தில் இரட்டிப்பாக வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதற்குத் தேவையான வளர்ச்சி

                   விதி எண்             72
                   ----------------  =       ----   = 18 சதவிகிதம்
                   வருடம்                 4


உதாரணமாக உங்களால் மாதம் 2,500/- ரூபாய் சேமிக்க முடியும் என்று எடுத்துக் கொள்ளவோம். அதை முழுவதும் பாதுகாக்கப் பட்ட தேசியமயமாகிய வங்கியில் 7% வளர்ச்சியில் சேமிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த சேமிப்பை நீங்கள் வேலை செய்யும் காலம் முழுவதும் தொடர்ந்தால், அதாவது முப்பது வருடம் முறையாகச் சேமித்தால் உங்கள் சேமிப்பு என்பது ரூபாய் ஒன்பது லட்சமாக இருக்கும். சரிதானே. அப்போது முப்பது வருட முடிவில் உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கும் என்று நினைகிறீர்கள் ?

உங்களிடம் முப்பது லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும். நம்ம முடியவில்லை அல்லவா ? இதைப் பாருங்கள்






நாட்கள் செல்லச் செல்ல உங்கள் பணம் பெருகும் வேகம் அதிகரிப்பதைப் பாருங்கள். ரோமாபுரி நகரம் ஒரே நாளில் கட்டப்படவில்லை நண்பர்களே. எல்லா மிகப் பெரும் சாதனைகளுக்கும் தேவை கடின உழைப்பு, அளவற்ற பொறுமை. போதுமான கால அளவும், சரியான முதலீட்டைக் கண்டுகொள்ளும் திறனும் இருந்தால் நீங்களும் கோடிஸ்வரன் ஆகலாம். பணம் சம்பாதிப்பது என்பது ஓன்று, அதனைப் பாதுகாத்துப் பெருக்குவது என்பது வேறொன்று என்பதை மறக்கவேண்டாம்.

இதே முப்பதாயிரம் ரூபாய் வருடம்தோறும் 12 சதவீத வளர்ச்சி அடைந்தது என்றால் முப்பது வருட முடிவில் உங்கள்வசம் எண்பதுலட்ச ரூபாய்கள் இருக்கும்.






இப்போது மாதம் ஒன்றிற்கு ஐந்தாயிரம் ரூபாய் மற்றும் எட்டாயிரம் ரூபாய் வெவ்வேறு அளவில் வளர்ச்சி அடைந்தால் முப்பது வருட முடிவில் உங்கள் வசம் எவ்வளவு இருக்கும் என்று பார்ப்போம்.



ஆக, சில கோடி ரூபாய்களை கைவசமாக்குவது என்பது இயலாத விஷயம் இல்லை. முடிந்த அளவு சேமிப்பு, அதுவும் தொடர்ச்சியான சேமிப்பு, நீண்ட கால அளவு காத்திருக்கும் பொறுமை இருந்தால் உங்கள் கனவுகளை நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

எப்போது சேமிக்கத் தொடங்கப் போகிறீர்கள் ?
இன்றே இப்போதே என்பதுதான் பதிலா ?

தொடர்புடைய பதிவுகள் 
1. முதலீட்டுக்கான சில வாய்புகள்
2. எச்சரிக்கை - சிறிது நிதானம் தேவை
3. பணவீக்கம் - ஒரு எளிய அறிமுகம்