இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 ஜூன், 2025

ஜூன் 27 - ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அகிலன் பிறந்தநாள்


இந்திய மொழிகளின் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் ஞானபீட விருதை தனது சித்திரப்பாவை நாவலுக்காகப் பெற்ற எழுத்தாளர் அகிலனின் பிறந்தநாள் இது.

இன்றய புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்காளூரில் 1922ஆம் ஆண்டு பிறந்தவர் திரு அகிலன். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவர் தனது பள்ளிப்படிப்பை பெருங்காளூரில் முடித்தார். படிக்கும் வயதிலேயே காந்திய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். நாடு விடுதலை அடைந்த பிறகு ரயில்வே அஞ்சல் துறையிலும் பின்னர் அனைத்திந்திய வானொலி நிலையத்திலும் வேலை பார்த்தார்.

பள்ளியில் படிக்கும்போதே சிறுகதைகள் எழுதத் தொடங்கிய அகிலனுக்கு அவரது படைப்புகளை எழுதும் களமாக வானொலி நிலையம் விளங்கியது. இவரது முதல் புதினம் 'மங்கிய நிலவு" 1944ஆம் ஆண்டு வெளிவந்தது. 20 புதினங்கள், 200 சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள் மொழிபெயர்ப்பு என்று எழுத்தின் எல்லா வகைகளிலும் அகிலன் தனது முத்திரையைப் பதித்தார்.

இவர் எழுதிய சித்திரப்பாவை புதினத்திற்காக ஞானபீட விருது, ராஜேந்திர சோழனின் இலங்கைப் படையெடுப்பின் பின்னணியில் எழுதிய வேங்கையின் மைந்தன் புதினத்திற்கு சாஹித்ய அகாடமி விருது, எங்கே போகிறோம் என்ற சமூக நாவலுக்கு ராஜா சர் அண்ணாமலை விருது, கண்ணான கண்ணன் என்ற சிறுவர் நூலுக்கு தமிழக அரசின் கல்வித்துறையின் சிறப்பு பரிசு என்று பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. இவரது பல படைப்புகள் ஆங்கிலம், மலாய், சீனம் என்று பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.

சோவியத் ரஷ்யா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளை சுற்றிப்பார்த்து அவை பற்றிய பயணக் கட்டுரைகளையும் அகிலன் எழுதி உள்ளார்.
இவரது பாவை விளக்கு அதே பெயரிலும், கயல்விழி என்ற நாவல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற பெயரிலும் திரைப்படமாகவும் வெளிவந்தன.

எழுத்தாளர் அகிலன் தனது 66ஆம் வயதில் 1988ஆம் ஆண்டு காலமானார்.



புதன், 9 ஏப்ரல், 2025

ஏப்ரல் 9 - ராகுல் சாங்கிருத்யாயன் பிறந்தநாள்

ஆரம்பப்பள்ளிவரையே படித்தவர், ஆனால் பேரறிஞர். பட்டம் ஏதும் பெறாதவர், ஆனால் பல்கலைக்கழக பேராசிரியர், பன்மொழி வித்தகர், புகைப்படக் கலைஞர், புத்தமதத் துறவி அதேநேரம் பொதுவுடமைவாதி, தத்துவமேதை, வாழ்க்கை முழுவதும் பயணத்திலேயே கழித்தவர், ஹிந்தி மொழியில் பயண இலக்கியம் என்ற புதிய பாதையை உருவாக்கியவர் இப்படி பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட ராகுல் சாங்கிருத்யாயன் பிறந்த தினம் இன்று.

இராகுல்ஜி 1893 ஆம் ஆண்டு கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டம் , பண்டகா என்ற கிராமத்தில் பிறந்தார். தன் வாழ்வில் இந்தியோடு, பாலி, சமஸ்கிருதம், அரபி, உருது, பாரசீகம், கன்னடம், சிங்களம், ப்ரெஞ்சு, ரஷ்யன் போன்ற 33 மொழிகளையும் தாமாகவே கற்று பன்மொழிப் புலவராய் விளங்கினார். இவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றதோடு மட்டுமன்றி நேபாளம், திபெத், இலங்கை, ஈரான், சீனம், முன்னாள் சோவியத் உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் சென்றிருக்கிறார்.

திபெத்திற்கு இவர் புத்த துறவியாகச் சென்று அங்கிருந்து பல மதிப்புள்ள புத்தகங்களையும் ஓவியங் களையும் இந்தியாவிற்குக் கொணர்ந்தார். இவை முன்னர் இந்தியாவின் நாளந்தா நூலகத்தில் இருந்தவை ஆகும். இது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் திபெத் மீது சீனா படையெடுத்த பிறகு இந்த இலக்கியங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு இருக்கும்.

இராகுல்ஜி பல்வேறு துறைகளில் 146 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். வால்கா முதல் கங்கை வரை, பொதுவுடமை தான் என்ன?, சிந்து முதல் கங்கை வரை, இந்து தத்துவ இயல், இஸ்லாமிய தத்துவ இயல், ஐரோப்பிய தத்துவ இயல், விஞ்ஞான லோகாயத வாதம் மற்றும் ஊர்சுற்றிப் புராணம் ஆகியவை அவற்றில் சில.

சிறுவயதிலேயே வீட்டைவிட்டு புறப்பட்டு விட்ட ராகுல்ஜி காசி நகரத்தில் சமிஸ்க்ரிதம் பயின்றார். அங்கிருந்து தமிழகம் வந்து தமிழ் கற்று சித்தாந்த நூல்களில் தேர்ச்சி பெற்றார். பின்னர் ஆர்யா சமாஜத்தின் கருத்துக்களால் கவரப்பட்டு அதையும் பயின்றார். அதன் பிறகு புத்த மத துறவியாக மாறி பௌத்த நூல்களைக் கற்றார். இதற்கு நடுவில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் அனுபவித்தார்.


அதிகாரபூர்வமாக பட்டம் எதையும் பெறாத ராகுல்ஜி சோவியத் ருஷ்யாவின் லெனின்கிராட் பல்கலைக்கழகத்தில் இந்தியத்துறை பேராசிரியராகப் பணியாற்றினார். ஹிந்தி, சமிஸ்க்ரிதம், பாலி, போஜ்புரி, திபெத்திய மொழி ஆகியவற்றில் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.
மத்திய ஆசியாவின் வரலாறு என்ற புத்தகத்திற்காக இவருக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. இந்திய அரசு 1963ஆம் ஆண்டு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கியது.

1963 ஏப்ரல் 14 அன்று தனது 70வது வயதில் மறைந்த ராகுல்ஜி எனும் ராகுல் சாங்கிருத்தியாயன் இன்றளவும் அவரது எண்ணற்ற எழுத்துக்களுக்காக இன்றுவரை போற்றப்படுகிறார்.

ஹிந்தி மொழியில் எழுதப்படும் சிறப்பான பயண இலக்கியத்திற்கு மஹாபண்டிதர் ராகுல் சாங்கிருத்யாயன் விருது வழங்கப்படுகிறது.