வெள்ளி, 27 ஜூன், 2025

ஜூன் 27 - ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அகிலன் பிறந்தநாள்


இந்திய மொழிகளின் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் ஞானபீட விருதை தனது சித்திரப்பாவை நாவலுக்காகப் பெற்ற எழுத்தாளர் அகிலனின் பிறந்தநாள் இது.

இன்றய புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்காளூரில் 1922ஆம் ஆண்டு பிறந்தவர் திரு அகிலன். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவர் தனது பள்ளிப்படிப்பை பெருங்காளூரில் முடித்தார். படிக்கும் வயதிலேயே காந்திய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். நாடு விடுதலை அடைந்த பிறகு ரயில்வே அஞ்சல் துறையிலும் பின்னர் அனைத்திந்திய வானொலி நிலையத்திலும் வேலை பார்த்தார்.

பள்ளியில் படிக்கும்போதே சிறுகதைகள் எழுதத் தொடங்கிய அகிலனுக்கு அவரது படைப்புகளை எழுதும் களமாக வானொலி நிலையம் விளங்கியது. இவரது முதல் புதினம் 'மங்கிய நிலவு" 1944ஆம் ஆண்டு வெளிவந்தது. 20 புதினங்கள், 200 சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள் மொழிபெயர்ப்பு என்று எழுத்தின் எல்லா வகைகளிலும் அகிலன் தனது முத்திரையைப் பதித்தார்.

இவர் எழுதிய சித்திரப்பாவை புதினத்திற்காக ஞானபீட விருது, ராஜேந்திர சோழனின் இலங்கைப் படையெடுப்பின் பின்னணியில் எழுதிய வேங்கையின் மைந்தன் புதினத்திற்கு சாஹித்ய அகாடமி விருது, எங்கே போகிறோம் என்ற சமூக நாவலுக்கு ராஜா சர் அண்ணாமலை விருது, கண்ணான கண்ணன் என்ற சிறுவர் நூலுக்கு தமிழக அரசின் கல்வித்துறையின் சிறப்பு பரிசு என்று பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. இவரது பல படைப்புகள் ஆங்கிலம், மலாய், சீனம் என்று பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.

சோவியத் ரஷ்யா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளை சுற்றிப்பார்த்து அவை பற்றிய பயணக் கட்டுரைகளையும் அகிலன் எழுதி உள்ளார்.
இவரது பாவை விளக்கு அதே பெயரிலும், கயல்விழி என்ற நாவல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற பெயரிலும் திரைப்படமாகவும் வெளிவந்தன.

எழுத்தாளர் அகிலன் தனது 66ஆம் வயதில் 1988ஆம் ஆண்டு காலமானார்.



வியாழன், 26 ஜூன், 2025

26 ஜூன் - பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிறந்தநாள்


இளம் தலைமுறை பாஜக தலைவராகவும், நீண்ட காலமாக சங்க பரிவார் அமைப்புகளில் பணிபுரிந்தவராகவும், மோதி அரசின் முக்கியமான மந்திரியாகவும் விளங்கும் தர்மேந்திர பிரதான் அவர்களின் பிறந்தநாள் இன்று.

1969ஆம் ஆண்டு ஒரிசா மாநிலத்தில் தல்சேர் நகரில் மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டு இருந்த திரு தேபேந்திர பிரதானின் மகனாகப் பிறந்தவர் இவர். இவரது தந்தையே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தைச் சேர்ந்தவர். அவர் 13ஆவது நாடாளுமன்ற தேர்தலில் வென்று வாஜ்பாய் அரசின் தரைவழி போக்குவரத்துதுறை அமைச்சராகப் பணியாற்றியவர்.

ஏறத்தாழ தனது 14ஆம் வயது முதலே ஆர்எஸ்எஸ் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தர்மேந்திர பிரதான் பரிவார் அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். அகில பாரத வித்யார்த்தி பரீக்ஷித் அமைப்பின் தேசிய செயலாளர், பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பின் தேசிய தலைவர், பாஜகவின் தேசிய செயலாளர், பின்னர் கட்சியின் பொது செயலாளர், சட்டிஸ்கர், பீகார், கர்நாடகா போன்ற மாநிலங்களின் பொறுப்பாளர் என்று இவரது அரசியல் வாழ்க்கை விரிவடைந்தது.

ஒடிசா மாநிலத்தின் 12ஆவது சட்டமன்றத்திற்கு 2000ஆவது ஆண்டில் பல்லஹடா தொகுதியில் இருந்து பிரதான் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒடிசா மாநிலத்தின் தேபகர் தொகுதியில் வெற்றி பெற்றார். பின்னர் பிஹார் மாநிலத்தில் இருந்தும் மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்தும் தலா ஒரு முறை ராஜ்யசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதிற்கு இவரது பங்களிப்பும் மிக முக்கியமான ஒன்றாகும்.

2014இல் அமைக்கப்பட்ட பாஜக அரசின் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுதுறை அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டார். அதோடு திறன் மேம்பாட்டுதுரையின் அமைச்சராகவும் பணியாற்றினார். தற்போதைய அரசின் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுதுறை மற்றும் இரும்பு மற்றும் எக்கு துறைக்கான மந்திரியாகும் பணியாற்றி வருகிறார்.
தனது முதலாவது பதவிக்காலத்தில் பிரதமர் மோதி, வசதி படைத்தவர்களை எரிவாயு உருளைகளுக்கான ( lPG Cylinder ) மானியத்தை விட்டுத் தருமாறு வேண்டினார். அப்படி மிச்சமாகும் பணத்தைக் கொண்டு வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு எந்தவிதமான முன்பணமும் இல்லாமல் எரிவாயு உருளைகள் கொடுக்கும் திட்டத்தை அவர் அறிவித்தார். துறைக்கான அமைச்சராக பிரதான் இந்த திட்டத்தை சிறப்பாக அமுல்படுத்தினார். 

கிராமப்புறத்தில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மகளீருக்கு என்று தொடங்கிய இந்த திட்டம், படிப்படியாக பட்டியல் இனத்தவர், பிறகு வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள அனைவருக்கும் என்று விரிவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி இதுவரை ஏழு கோடிக்கும் அதிகமான இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளது. ஏழை தாய்மார்களின் உடல் நலத்திற்கும் அவர்களின் நேரத்தை மிச்சம் செய்யவும் இந்த திட்டம் பேருதவியாக உள்ளது. சமையல் எரிவாயு உருளைகளுக்கான மானியத்தை நேரடியாக வங்கியில் செலுத்துவதன் மூலம் பல்வேறு போலி கணக்குகள் கண்டறியப் பட்டு, பல்லாயிரம் கோடி ரூபாய்கள் தவறாக சென்று கொண்டு இருந்ததை பிரதான் தடுத்து நிறுத்தி உள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் 13 மாவட்டங்களில் உள்ள வீடுகளும் தொழில்சாலைகளும் பயன்பெறும் வண்ணம் 6000 கோடி ரூபாய் முதலீட்டில் திரவ இயற்கை எரிவாயு முனையத்தை ( L N G Terminal ) உருவாக்கி உள்ளார்.

இளமையும் தன்முனைப்பும் கூடிய திரு பிரதான் அவர்கள் நெடுங்காலம் நாட்டுக்கு சேவை செய்யவேண்டும் என்று அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறோம்



புதன், 25 ஜூன், 2025

ஜூன் 25 - இந்தியாவின் முதல் பெண் முதல்வர் சுசேதா கிருபளானி அவர்களின் பிறந்தநாள்


புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீராங்கனை, காந்தியின் அணுக்க தொண்டர், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், இந்திய அரசியலமைப்பு சபையின் உறுப்பினர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய குழுவில் ஒருவர், பாரதம் சுதந்திரம் அடைந்த நாளில் இந்திய அரசியலமைப்பு சபையில் புகழ்பெற்ற வந்தேமாதரம் பாடலைப் பாடி நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தவர், உத்திரப்பிரதேசத்தின் முதல்வர், பாரதத்தின் முதல் பெண் முதலமைச்சர், பாரதத்தின் மக்களவைக்கு மூன்று முறை தேர்வானவர்  என்று பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தக்காரரான சுசேதா கிருபளானி அவர்களின் பிறந்தநாள் இன்று.

வங்காளத்தைச் சார்ந்த சுசேதா அன்றய பஞ்சாப் மாநிலத்தின் அம்பாலா நகரில் 1908ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை ஒரு மருத்துவர். வேலை காரணமாக பல்வேறு இடங்களுக்கு இவர் தந்தை மாற்றப்பட்டதால், சுசேதாவின் கல்வியும் பல்வேறு நகரங்களில் நடந்தது. இறுதியாக டெல்லி ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றில் தனது முதுகலை பட்டத்தை சுசேதா பெற்றார். அன்றய பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் விடுதலைப் போராட்டத்திற்கு போராளிகளைத் தயாரித்து அனுப்பும் களமாக இருந்து வந்தது. அங்கே வரலாற்று துரையின் பேராசிரியராக சுசேதா பணியாற்றத் தொடங்கினார்.

நாடெங்கும் மூண்டிருந்த சுதந்திர வேட்கை சுசேதாவையும் பற்றிக்கொண்டது. இந்த எண்ணத்தை இன்னும் வலுபெறச் செய்தது ஆச்சாரிய கிருபளானியின் நட்பு. காங்கிரஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரும், சோசலிஸ சிந்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டவருமான ஆச்சாரிய கிருபளானி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழத்திற்கு அடிக்கடி வருவது வழக்கம். அங்கே படிக்கும் மாணவர்களோடு உரையாடி அவர்களை தேசியத்தின் பக்கம் திருப்புவதை அவர் செய்து கொண்டு இருந்தார். தேசிய சிந்தனை அவர்கள் இருவரையும் மணவாழ்வில் இணைத்தது. அது காதல் திருமணம் மட்டுமல்ல ஜாதி மறுப்பு திருமணம் கூட. சுசேதா வங்காளி, கிருபளானி சிந்தி, அதுமட்டுமல்ல அவர்களுக்கிடையே 20 வயது வித்தியாசம் கூட. காந்தி உள்பட பலர் தடுத்தும் அவர்களின் எண்ணங்களுக்கு மாறாக இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இன்னும் தீவிரமாக சுசேதா விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சுசேதா பெரும் பங்கு வகித்தார். 1946ஆம் ஆண்டுகளில் நடந்த ஹிந்து முஸ்லீம் கலவரங்களை கட்டுப்படுத்த கலவர பகுதிகளில் பயணம் செய்தார். காந்தியோடு இணைந்து நவகாளிக்கு சென்றார். அகில இந்திய மஹிளா காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கினார்.

நாடு சுதந்திரம் அடைந்த போது, கருத்து வேறுபாடுகளால் ஆச்சாரிய கிருபளானி காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து விலகி கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி என்ற சோசலிஸ கட்சியைத் தொடங்கினார். அந்த கட்சியின் வேட்பாளராக 1952ஆம் ஆண்டு நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். ஆனால் சிறிது காலத்திலேயே சுசேதா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மீண்டும் 1957ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார். 1967ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தின் கோண்டா தொகுதியில் இருந்து தேர்வானார்.


இதற்கிடைப்பட்ட காலத்தில் உத்திரப்பிரதேச சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960 முதல் 1963 வரை உபியின் மந்திரியாகவும் பின்னர் 1963ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் நாள் உத்திரப்பிரதேசத்தின் நான்காவது முதலமைச்சராகப் பதவி ஏற்றார். 1967ஆம் ஆண்டு வரை அவர் முதல்வராகப் பணியாற்றினார். இதன் மூலம் இந்திய நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்றார்.

1971ஆம் ஆண்டு பொதுவாழ்வில் இருந்து விலகிய சுசேதா கிருபளானி 1974ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் நாள் காலமானார். பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியின் வாக்கை மெய்யாகிக் காட்டிய சுசேதா கிருபளானி அவர்கள் நினைவு பாரதத்தின் பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை 

சனி, 21 ஜூன், 2025

ஜூன் 21 - மேஜர் பத்மநாப ஆச்சார்யா பிறந்ததினம்


அது 1999ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் நாள். ஹைதராபாத் நகரில் உள்ள மேஜர் பத்மநாப ஆச்சாரியாவின் வீட்டு தொலைபேசி மணி அடிக்கிறது. அதனை எடுத்தவர் மேஜர் ஆச்சாரியாவின் மனைவி சாருலதா. அவர் அப்போது ஆறு மாதம் கர்ப்பம். சாருலதா தன்னை அறிமுகம் செய்து கொண்ட உடன் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்படுகிறது. சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அழைப்பு, அப்போதும் எடுத்தவர் சாருலதா. மீண்டும் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. அடுத்தமுறை அழைப்பை எடுத்தவர் மேஜர் பத்மநாப ஆச்சார்யாவின் தந்தை விங் கமாண்டர் ஜெகநாத ஆச்சார்யா. பாரத விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி அவர். பாகிஸ்தானோடு நடைபெற்ற 1965 மற்றும் 1971ஆம் நடைபெற்ற போர்களில் பங்குபெற்றவர். விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்றபிறகு அவர் ராணுவ ஆராய்ச்சி சாலையில் பணியாற்றிவந்தார்.

எந்த ராணுவவீரரின் குடும்பத்தினரும் கேட்க விரும்பாத செய்திதான் தொலைபேசி வழியே பகிரப்பட்டது. " உங்கள் மகன் மேஜர் பத்மநாப ஆச்சார்யா தீரத்துடன் போரிட்டார். வரலாற்றில் தனக்கான இடத்தை தன் உயிரைக் கொடுத்து அவர் பெற்றுக்கொண்டார்" என்று பத்மநாப ஆச்சார்யாவின் வீரமரணத்தைப் பற்றிய தகவல் அவர் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.

கார்கில் போரில் வீரமரணமடைந்த மேஜர் பத்மநாப ஆச்சார்யா அவர்களின் பிறந்ததினம் இன்று. அவரின் பலிதானத்தை கௌரவிக்கும் வகையில் பாரதநாடு அவருக்கு ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் இரண்டாவது மிக உயரிய விருதான மகாவீர் சக்ரா விருதை அளித்தது.

ஒரிசா மாநிலத்தைச் சார்ந்த பத்மநாப ஆச்சார்யா இன்றய தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் வளர்ந்தவர். அவரது தந்தை ஜகந்நாத் ஆச்சார்யா பாரதநாட்டின் விமானப்படை அதிகாரியாக சேவை செய்தவர்.  1969ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் நாள் பிறந்த பத்மநாப ஆச்சார்யாவும் தனது தந்தையைப் பின்பற்றி பாரத ராணுவத்தின் ராஜ்புதான துப்பாக்கிப் படையில் தனது சேவையைத் தொடங்கினார்.

1999ஆம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போரில் டோலோலிங் மலை உச்சியில் இருந்த பகைவர்களை விரட்டி அந்த இடத்தைக் கைப்பற்றும் பொறுப்பு மேஜர் ஆச்சார்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏறத்தாழ ஐயாயிரம் அடி உயரத்தில் இருந்த முகாம் அது. உச்சியில் இருக்கும் பகைவர்களைத் தாக்கி அதனைக் கைப்பற்றுவது என்பது நேரடியாக மரணத்தைச் சந்திக்கும் வேலை. ஆனால் அந்த சவாலை பாரத ராணுவம் எதிர்கொண்டது. கடுமையான உயிரிழப்பை தாங்கி ராஜ்புதான துப்பாக்கிப் படை மலையின் உச்சியை அடைந்தது. படையை முன்னிருந்து நடத்திய ஆச்சார்யா எதிரியின் குண்டுகளால் படுகாயம் அடைந்தார். ஆனாலும் மருத்துவ சிகிச்சை பெறாமல், முன்னேறிச் சென்று தனது படையினரோடு எதிரிகளை சர்வநாசம் செய்து தனக்கு இடப்பட்ட பணியை வெற்றிகரமாக முடித்தார். அதற்கான களத்தில் அவர் பணயமாக வைத்தது அவரது உயிரை.

எல்லா நேரங்களிலும் எல்லா காலங்களிலும் நாட்டின் மரியாதையும், பாதுகாப்பும் முதலில், நான் நடத்திச் செல்லும் படையின் பாதுகாப்பு அடுத்ததாக, எனது பாதுகாப்பு அதற்கும் பின்னால்தான், பாரத ராணுவத்தில் பணியாற்றச் சேரும் அதிகாரிகள் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி இது. அந்த உறுதிமொழியை தனது உதிரத்தால், உயிரால் காப்பாற்றிய வீரர் மேஜர் பத்மநாப ஆச்சார்யா.

தன் தந்தையின் முகத்தைக் கூடப் பார்க்காதவர் மேஜர் ஆச்சார்யாவின் மகள் அபராஜிதா. அவர் தன் தந்தையின் நினைவாக அவரது படங்களும், அவர் எழுதிய கடிதங்களையும் தொகுத்து மேஜர் ஆச்சார்யாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்.  மேஜர் ஆச்சார்யாவின் மனைவி சாருலதா, போரில் பலியான வீரர்களின் குடும்பத்தினரின் உளவியல் சவால்களைச் சரிசெய்யும் சேவை அமைப்பை நடத்தி வருகிறார்.

பத்மநாப ஆச்சார்யாவின் இளைய சகோதர் பத்மசாம்ப ஆச்சார்யாவும் பாரத ராணுவத்தின் ராஜ்புதான துப்பாக்கிப் படையின் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். 

நம்பற்குரியர் அவ்வீரர், தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர் என்ற பாரதியின் வரிகளுக்கு இலக்கணமாக விளங்கும் மேஜர் பத்மநாப ஆச்சார்யா உள்ளிட்ட வீரர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.   

வெள்ளி, 20 ஜூன், 2025

ஜூன் 20 - தொழிலதிபர் லக்ஷ்மன்ராவ் கிர்லோஸ்கர் பிறந்தநாள்

புதுமையான பல தொழில்களை பாரத நாட்டில் உருவாக்கியவரும், கிர்லோஸ்கர் குழுமத்தின் நிறுவனருமான லக்ஷ்மன்ராவ் கிர்லோஸ்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று.

அன்றய மும்பாய் ராஜதானியின் அங்கமாக இருந்த பெல்காம் மாவட்டத்தில் வசித்துவந்த வேத பண்டிதரான காசிநாத் பண்ட் என்ற மஹாராஷ்டிர பிராமணரின் மகனாக 1869ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் நாள் பிறந்தவர் திரு லக்ஷ்மன்ராவ் கிர்லோஸ்கர். தன்னைப் போலவே தன் மகனும் வேத விற்பன்னராக இருப்பான் என்று தந்தை நினைக்க, லக்ஷ்மண்ராவின் விருப்பமோ ஓவியங்கள் வரைவதிலும், இயந்திரப் பொருள்களை உருவாக்குவதிலும்தான் இருந்தது.

தனது மூத்த சகோதரர் ராமண்ணா பொருளுதவி செய்ய லக்ஷ்மணராவ் மும்பையில் உள்ள ஜே ஜே நுண்கலைக் கல்லூரியில் ஓவியம் படிக்கச் சென்றார். ஆனால் இரண்டு ஆண்டுகளில் அவரது பார்வையில் ஏற்பட்ட குறைபாட்டால் அவர் அந்தத் துறையை விட்டு விட்டு இயந்திரங்களை உருவாக்கத் தேவையான ஓவியங்களை வரைவது பற்றிய படிப்பிற்கு மாற்றிக்கொள்ள நேரிட்டது. படிப்பை முடித்த பிறகு அவர் விக்டோரியா ஜூபிலி தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார். பல்வேறு இயந்திரங்களைப் பற்றிய தகவல்களைத் தாங்கிவரும் வெளிநாட்டுப் புத்தகங்களை வாசிப்பதன் மூலமும், கல்வி நிலையத்தில் உள்ள ஆய்வுகூடத்தில் அந்த மாதிரிகளை உருவாகிப் பார்ப்பதன் மூலமும் லக்ஷ்மணராவ் தன்னை செதுக்கிக் கொண்டார்.

இதற்கிடையில் 1890களில் ராமண்ணா - லக்ஷ்மணராவ் சகோதர்கள் பெல்காம் நகரில் ஒரு மிதிவண்டி விற்பனை நிலையத்தைத் தொடங்கினார்கள். மும்பையில் இருந்து லக்ஷ்மணராவ் மிதிவண்டிகளை வாங்கி அனுப்ப, ராமண்ணா அதனை விற்பனை செய்துகொண்டு இருந்தார். கிர்லோஸ்கர் குழுமத்தின் விதை இந்த விற்பனை நிலையத்தில்தான் ஊன்றப்பட்டது. தகுதி இருந்தும் லக்ஷ்மன்ராவுக்கு கல்வி நிலையத்தில் பதவி உயர்வு கிடைக்கவில்லை, அது ஒரு ஆங்கிலோ இந்தியருக்கு அளிக்கப்பட்டது. மனம் நொந்த லக்ஷ்மணராவ் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு பெல்காம் திரும்பினார். சகோதர்கள் இருவரும் அமெரிக்காவில் இருந்து காற்றாடி ஆலைகளை இறக்குமதி செய்து விற்கத் தொடங்கினார். ஆனால் அதற்கான வாடிக்கையாளர்கள் அதிகமாக இல்லை.

பாரதம் போன்ற விவசாய நாட்டில் விவசாயத்துறைக்கான இயந்திரங்களுக்கு நல்ல தேவை இருக்கும் என்பதைக் கணித்த லக்ஷ்மணராவ் இரும்புக் கலப்பைகளை உருவாக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் விவசாயிகள் அதனை பயன்படுத்தத் தயங்கினர். தொடர்ச்சியாக  விவசாயிகளோடு  பேசி, இரும்புக் கலப்பையின் சாதகங்களை எடுத்துக் கூறி லக்ஷ்மணராவ் அதனை விற்பனை செய்தார். அதனைத் தொடர்ந்து கால்நடைகளுக்கான தீவனத்தை சிறு துண்டுகளாக வெட்டும் இயந்திரம் ஒன்றை லக்ஷ்மன்ராவ் வடிவமைத்தார்.

லக்ஷ்மணராவின் இயந்திரங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவ குறுநில மன்னர் ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்தார். கிர்லோஸ்கர் குழுமத்தின் முதல் தொழில்சாலை அங்கே நிறுவப்பட்டது. வெளிநாட்டில் இருந்து வெளியாகும் பல  பத்திரிகைகளைத் தொடர்ச்சியாகப் படிக்கும் லக்ஷ்மணராவ், அதுபோலவே தொழிலாளர்களுக்கான எல்லா வசதியும் உள்ள குடியிருப்புகளோடு தனது தொழில்சாலையை உருவாக்கினார். அன்றய காலகட்டத்தில் தனது தொழில்சாலையிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தீண்டாமையை பின்பற்றக் கூடாது என்பதில் அவர் முனைப்பாக இருந்தார். அதுபோலவே தனது நிறுவனம் தயாரிக்கும் எல்லாப் பொருள்களும் உலகத்தரத்தில் இருக்க வேண்டும் என்பதிலும் லக்ஷ்மணராவ் கிர்லோஸ்கர் உறுதியாக இருந்தார்.

மிகச் சாதாரணமாக மிதிவண்டி விற்பனை செய்வதில் தொடங்கிய பயணம் இன்று பல்வேறு இயந்திரங்களை உருவாகும் மிகப் பெரும் தொழில் குழுமமாக கிர்லோஸ்கர் குழுமம் வளர்ந்துள்ளது.

தொழில்துறையில் திரு லக்ஷ்மணராவ் கிர்லோஸ்கரின் சாதனைகளை ஒரே இந்தியா தளம் நன்றியோடு நினைவு கூறுகிறது.  

வியாழன், 19 ஜூன், 2025

ஜூன் 19 - சீக்கியர்களின் ஆறாவது குரு ஹர் கோபிந்த் பிறந்த நாள்


சீக்கியர்களை போர்க்குணம் கொண்ட இனக்குழுவாக வடிவமைத்த குரு ஹர்கோபிந்த் அவர்களின் பிறந்த தினம் இன்று. சீக்கியர்களின் ஐந்தாவது குருவான அர்ஜன் தேவ் அவர்களின் மகனாக 1595ஆம் ஆண்டு பிறந்தவர் இவர். குரு அர்ஜன் தேவ் அவர்களின் பலிதானத்திற்குப் பிறகு சீக்கியர்களின் குருவாக ஹர்கோபிந்த் தனது பதினோராம் வயதில் பதவி ஏற்றார்.

கொடுமையான சித்திரவத்தையினால் குரு அர்ஜன்தேவ் மரணமடைய, பெரும்பலம் வாய்ந்த மொகலாய சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து நிற்க சீக்கியர்கள் உறுதி பூண்டனர். அந்த எண்ணத்தை ஆற்றுப்படுத்தி, தொடர்ந்த பயிற்சிகள் மூலம் சீக்கியர்களை போர்க்குணம் கொண்ட இனமாகிய பொறுப்பு குரு ஹர்கோபிந்த் அவர்கள் மீது விழுந்தது. அதுவரை ஹிந்து சமுதாயத்தில் உள்ள ஒரு ஜாதி வேறுபாடுகளை களையும் அமைப்பாக இருந்த சீக்கியம் இவர் காலத்திலேயே தனக்கான ஒரு தனி அடையாளத்தைக் கைகொள்ளத் தொடங்கியது.

தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு மெய்காவல் படையை உருவாக்கிக் கொள்ளவும், மொகலாய அடக்குமுறையில் இருந்த மக்களைக் காக்க ஆயுதம் எந்த எப்போதும் தயாராக இருக்கவும் குரு அர்ஜன் தேவ் இவருக்கு ஆணையிட்டார். அதன் படி எழுநூறு குதிரைகள் கொண்ட படையையும், அறுபது பேர் கொண்ட பீரங்கி படையையும் குரு ஹர்கோவிந்த் உருவாக்கினார். குரு எப்போதும் இரண்டு வாள்களை அணிந்து இருந்தார், அதில் ஓன்று இவ்வுலக அதிகாரத்தையும், மற்றொன்று அவரது ஆன்மீக அதிகாரத்தையும் குறித்தது. அம்ரித்ஸர் நகரைச் சுற்றி குரு கோட்டையை எழுப்பினார். பொற்கோவிலில் உள்ள ஹர்மந்தர் சாஹிப் இவரால் உருவாக்கப் பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து குரு சீக்கிய மதத்தைப் பரப்பினார்.

வளர்ந்து வரும் சீக்கிய மதத்தையும், அவர்களின் ராணுவ பலத்தையும் கண்டு பொறாமல் முகலாய மன்னர் ஜஹாங்கிர் குருவை குவாலியர் கோட்டையில் சிறை வைத்தார். ஆனால் அப்போது லாகூர் நகரில் ஆளுநராக இருந்த வாஜிர் கான் மற்றும் குருவின் நண்பர்கள் ஜஹாங்கீரின் மனதை மாற்றி குருவை விடுவிக்க வைத்தனர். ஆனால் குரு ஹர்கோவிந்த் தன்னோடு சிறையில் இருந்த 52 ஹிந்து மன்னர்களையும் விடுவிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, அவர்களையும் விடுவிக்க வைத்தார். விடுதலையான குரு அம்ரித்ஸர் நகருக்கு வந்தது ஒரு தீபாவளி நாள் அன்று. அதனால் இன்றும் சீக்கியர்கள் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

ஜஹாங்கீருக்கும் சீக்கியர்களுக்கு ஏற்பட்ட நல்லுறவு சிலகாலமே நீடித்தது. புதிதாக பதவிக்கு வந்த ஷாஜஹான் மீண்டும் சீக்கியர்களோடு மோத ஆரம்பித்தார். தொடர்ச்சியான போராட்டங்கள் ஆரம்பமானது. முழுமையாக இஸ்லாமும் சீக்கியமும் எதிர் அணிகளில் இருப்பதற்கான விதை ஷாஜஹானால் ஊன்றப்பட்டது.

வெளிப்பார்வைக்கு மன்னன், ஆனால் உள்ளுக்குள் துறவி, எளியவர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும் ஆயுதம் ஏந்திய வீரன், உலகத்தைத் துறக்காமல் மாயையைத் துறந்த குரு என்று தன்னை பிரகடம் செய்துகொண்ட குரு தனது 48ஆவது வயதில் காலமானார்.

எத்தனையோ குருமார்கள் இந்த மண்ணில் அவர்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்  

புதன், 18 ஜூன், 2025

ஜூன் 18 - சர்சங்கசாலக் சுதர்ஷன் ஜி பிறந்தநாள் -


ராஷ்டிரிய ஸ்வயம்சேவகசங்கத்தின் ஐந்தாவது சர்சங்கசாலக்காக பணியாற்றிய மானநிய சுதர்ஷன் ஜி அவர்களின் பிறந்தநாள் இன்று.

இன்றய சட்டிஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் நகரில் 1931ஆம் ஆண்டு பிறந்தவர் சுதர்ஷன்ஜி அவர்கள். ஜபல்பூர் பொறியியல் கல்லூரியில் தொலைதொடர்பு பொறியியலில் பட்டம் பெற்றவர் இவர்.

பல ஸ்வயம்சேவகர்களைப் போலவே சுதர்ஷன்ஜியும் மிகச் சிறிய வயதிலேயே சங்கத்தின் தொடர்புக்குள் வந்து விட்டார். தனது ஒன்பதாம் வயதிலேயே சங்கத்தின் ஷாகாவில் பங்கெடுக்கத் தொடங்கிய சுதர்ஷன்ஜி பட்டப்படிப்பு முடித்தவுடன் தனது 23ஆம் வயதிலேயே முழுநேர ஊழியராக ( பிரச்சாரக் ) சங்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டார். 

மத்திய பிரதேசத்தில் தொடங்கிய இவரது சங்கபணி வடகிழக்கு மாநிலங்களில் பரவி பின்னர் இந்தியா முழுவதுமாக விரிவடைந்தது.
படிப்படியாக சங்கத்தின் பல்வேறு பொறுப்புகள் சுதர்ஷன் ஜியைத் தேடி வந்தது. சங்கத்தின் அகில பாரத துணை பொது செயலாளராக அவர் பணியாற்றினார். 2000ஆவது ஆண்டில் சங்கத்தின் அன்றய சர்சங்கசாலக் ஸ்ரீ ராஜேந்திரசிங் ஜி, தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினார். சங்கத்தின் அடுத்த தலைவராக ஸ்ரீ சுதர்ஷன்ஜி பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த ஒன்பது ஆண்டுகள் அவர் இந்தப் பொறுப்பில் இருந்தார்.

கன்னட மொழி, மராத்தி, ஹிந்தி, ஆங்கிலம், சட்டிஸ்கரி போன்ற 13 மொழிகளில் புலமை பெற்ற சுதர்ஷன்ஜியின் தலைமையில் சங்கம் இன்னும் விரிவாகப் பரவியது. ஆழ்ந்த படிப்பும், இந்தியா முழுவதும் சுற்றி வந்த நேரடி அனுபவமும் இணைந்த சுதர்ஷன் ஜி ஸ்வதேசி பொருளாதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்தார். பரிவார் அமைப்புகள் அனைத்திலும் இளைய தலைவர்கள் உருவாவதிலும், அவர்களை வார்த்தெடுப்பதிலும் சுதர்ஷன்ஜி மிகுந்த கவனம் செலுத்தினார்.
2009ஆம் ஆண்டு சுதர்ஷன்ஜி தலைமைப் பொறுப்பை மோகன் பகவத்ஜி அவர்களிடம் ஒப்படைத்தார்.

தனது 81ஆம் வயதில் சுதர்ஷன்ஜி ராய்ப்பூர் நகரில் காலமானார். அவரது விருப்பத்தின்படி அவரது கண்கள் தானமாக அளிக்கப்பட்டது. எதோ ஒரு இடத்தில இருந்து வலிமையான பாரத நாட்டை சுதர்ஷன் ஜி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.