சனி, 8 நவம்பர், 2025

நவம்பர் 8 - பீஷ்ம பிதாமகர் லால் கிருஷ்ண அத்வானி பிறந்தநாள்

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த பிரச்சாரகரும், நான்கு முறை ராஜ்யசபை மற்றும் எட்டு முறை மக்களவை என்று நாற்பதாண்டு கால பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் பீஷ்ம பிதாமகருமான திரு லால் கிருஷ்ண அத்வானி அவர்களின் பிறந்தநாள் இன்று.


இன்று பாகிஸ்தானில் இருக்கும் கராச்சி நகரில் 1927ஆம் ஆண்டு கிருஷ்ணசந்த் அத்வானி - ஞாநிதேவி தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் லால் கிருஷ்ண அத்வானி. உண்மையில் அவர் பெயர் லால் என்பதுதான். தந்தையின் பெயரையும் குடும்பப் பெயரையும் இணைத்து சொல்வது வட இந்திய முறை. எனவே அவர் லால் கிருஷ்ணசந்த் அத்வானி என்று அழைக்கப்பட்டார். அதுவே பின்னர் லால் கிருஷ்ண அத்வானி என்று ஆனது.

தனது ஆரம்பிக் கல்வியை செயின்ட் பட்ரிக்ஸ் பள்ளியில் முடித்த அத்வானி பின்னர் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் நகரின் அரசுக் கல்லூரியிலும் படித்தார். பிரிவினைக்குப் பிறகு மும்பை நகருக்கு குடிபெயர்ந்த அத்வானி மும்பை சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். பள்ளியில் படிக்கும் போதே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் இணைந்து கராச்சி நகரில் சங்கத்தை வளர்க்கும் பணியில் சிறப்பாக செயலாற்றனார். பாரதம் வந்த பிறகு ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் பகுதியின் பிரச்சாரக்காக இருந்தார்.

1951இல் பாரதிய ஜனசங் கட்சி தொடங்கப்பட்ட சமயத்தில் கட்சியின் ராஜஸ்தான் மாநில செயலாளராக இருந்த எஸ் எஸ் பண்டாரியின் உதவியாளராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1957ஆம் ஆண்டு கட்சியின் பணிக்காக அத்வானி டெல்லி நகருக்கு குடி பெயர்ந்தார். கட்சியின் டெல்லி கிளையின் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் உயர்ந்தார். சங்கத்தின் பத்திரிகையான ஆர்கனைஸர் பத்திரிகையை ஆசிரியராக இருந்து நடத்திய கே ஆர் மல்கானிக்கு உறுதுணையாக அத்வானி இருந்தார்.

1970ஆம் ஆண்டு ஜனசங் கட்சியின் சார்பில் நாட்டின்டெல்லியில் இருந்து  ராஜ்யசபைக்கு நியமிக்கப்பட்டார். 1973ஆம் ஆண்டு ஜனசங் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் ஒரு முறை குஜராத் மாநிலத்தின் சார்பில் ராஜ்யசபை உறுப்பினராக தேர்வானார். இதனிடையில் இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலையின் போது சிறைவாசம் அனுபவித்தார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய் தலைமையில் அரசு அமைத்தது. அந்த அரசில் செய்தி ஒளிபரப்புதுறையின் அமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் இரண்டரை ஆண்டு காலத்தில் ஜனதா கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது. பழைய ஜனசங்கம் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய வடிவம் கொண்டது. மத்தியப் பிரதேசத்தின் சார்பாக இரண்டு முறை ராஜ்யசபை உறுப்பினராக அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாரதிய ஜனதா கட்சி தனது முதல் பொதுத்தேர்தலை 1984ஆம் ஆண்டு எதிர்கொண்டது. இந்திராவின் படுகொலையை அடுத்து நடந்த தேர்தலில் கட்சி இரண்டே இரண்டு இடங்களில்தான் வெற்றிபெற்றது. அதில் இருந்து இன்று பெரும்பான்மை பலத்தோடு மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சிப் பொறுப்பை பாஜக வகிக்கிறது என்றால் அதன் பெருமை கட்சியின் பீஷ்மர் அத்வானியையே சாரும்.

அடுத்தடுத்த தேர்தல்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சியை வெற்றி பெற வைத்து 1996ஆம் ஆண்டு தேர்தல் முடிவுக்குப் பின்னர் பாஜக முதல் முறையாக மத்தியில் அரசு அமைத்தது. வாஜ்பாய் தலைமையில் அமைந்த அந்த ஆட்சியில் அத்வானி உள்துறை அமைச்சராகப் பதவியேற்றார். பதின்மூன்று நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் வாஜ்பாய் ஆட்சியை விட்டு விலகினார். இரண்டாண்டு காலம் கூட்டணி ஆட்சி என்று நாடு தடுமாறியது. 1998ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தது. கூட்டணியில் இருந்த ஜெயலலிதா தனது ஆதரவை விலக்கிக்கொள்ள மீண்டும் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் அதனைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் பாஜக மீண்டும் அரியணை ஏறியது. முதல்முறையாக ஐந்தாண்டுகள் ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சியைச் சாராத பிரதமர் என்ற பெருமையை வாஜ்பாய் பெற்றார். கட்சியில் வாஜ்பாய் அவர்களுக்கு அடுத்த நிலையில் அத்வானி விளங்கினார்.

ஆனாலும் 2004 மற்றும் 2009 ஆகிய தேர்தல்களில் பாஜக ஆட்சி அமைக்கும் அளவிற்கான இடங்களைப் பெற முடியாமல் போனது. தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பாஜக இளைய தலைமுறை தலைவர்களை முன்னெடுக்கத் தொடங்கியது. அத்வானி வழிகாட்டும் குழுவின் உறுப்பினராக மாறினார்.

தனது நீண்ட நெடிய அரசியல் வாழ்வில் பாஜகவிற்க்காக இடையறாது உழைத்த அத்வானி அவர்களின் சேவைக்கு ஒரே இந்தியா தளம் தலைவணங்குகிறது. இன்னும் நீண்ட ஆயுளோடு அத்வானி இளம் தலைவர்களையே சரியான முறையில் வழிநடத்த ஆண்டவன் அருளட்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறது. 

வெள்ளி, 7 நவம்பர், 2025

நவம்பர் 7 - குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா பிறந்ததினம்

சிறுகுழந்தைகளுக்கு மொழியை அறிமுகம் செய்ய இசையோடு இணைந்த பாடல்கள், அதுவும் எளிமையான சிறிய வார்த்தைகளால் உருவான பாடல்கள்தான் சரியான வழியாக இருக்கமுடியும். அப்படி அற்புதமான பாடல்களை, அதுவும் நல்ல கருத்துக்களை, நற்பண்புகளை இளமையிலேயே குழந்தைகள் மனதில் பதிய வைக்கும் பாடல்களை எழுதிய அழ வள்ளியப்பாவின் பிறந்ததினம் இன்று



புதுக்கோட்டை மாவட்டத்தில் ராயவரத்தில் நகரத்தார் சமுதாயத்தைச் சார்ந்த அழகப்ப செட்டியார் - உமையாள் ஆச்சி தம்பதியரின் மகனாக 1922ஆம் பிறந்தவர் வள்ளியப்பன். ராயவரத்தில் உள்ள எஸ் கே டி காந்தி துவக்கப்பள்ளியிலும் பின்னர் கடியபட்டி பூமீஸ்வரஸ்வாமி உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.
உயர்நிலைப் படிப்பை முடித்தபின் வாழ்வாதாரம் தேடி சென்னைக்கு வந்தார் கவிஞர்.

தனது பதினெட்டாம் வயதில் "சக்தி" என்ற பத்திரிகையில் பணிக்குச் சேர்ந்தார். சிறுது காலத்தில் இந்தியன் வங்கியில் எழுத்தாளராக தன்னை இணைத்துக்கொண்டார். வங்கிப் பணியில் இருந்த காலத்திலேயே பல்வேறு கதைகளையும் பாடல்களையும் எழுதினார். வள்ளியப்பா ஏறத்தாழ இரண்டாயிரம் பாடல்களையும் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். கோகுலம் என்ற சிறுவர் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

நமது நதிகள் : தென்னாட்டு நதிகள் என்ற தலைப்பில் பல்வேறு நதிகளைப் பற்றி வள்ளியப்பா எழுதிய நூலை தேசிய புத்தக டிரஸ்ட் பதினான்கு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு உள்ளது. பாட்டிலே காந்தி கதை என்று சிறு குழந்தைகளுக்கு காந்தியின் வரலாற்றை அறிமுகம் செய்து வைத்த இவரது புத்தகம் மிகவும் புகழ்வாய்ந்த ஓன்று. உலகம் எங்கும் கொண்டாடப்படும் ஈசாப் நீதிக்கதைகளை எளிய பாடல்கள் மூலம் வள்ளியப்பா எழுதினார்.

ரோஜாச் செடி, உமாவின் பூனை, அம்மாவும் அத்தையும், மணிக்கு மணி , மலரும் உள்ளம், கதை சொன்னவர் கதை, மூன்று பரிசுகள், எங்கள் கதையைக் கேளுங்கள், பர்மா ரமணி, எங்கள் பாட்டி, மிருகங்களுடன் மூன்று மணி, நல்ல நண்பர்கள், பாட்டிலே காந்தி கதை, குதிரைச் சவாரி, நேரு தந்த பொம்மை, நீலா மாலா, பாடிப் பணிவோம், வாழ்க்கை வினோதம், சின்னஞ்சிறு வயதில், பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் ஆகிய படைப்புகள் என்றும் புகழ்பெற்றவை. 1944-ல் ‘மலரும் உள்ளம்' எனும் அவரது முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது. 1961-ல் அவர் வெளியிட்ட ‘சிரிக்கும் பூக்கள்' எனும் கவிதைத் தொகுப்பு, ‘குழந்தைக் கவிஞர்’ எனும் பட்டத்தை அவருக்குப் பெற்றுத்தந்தது.

குழந்தைகளுக்காக எழுதிவரும் எழுத்தாளர்களுக்கெல்லாம் தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருந்ததோடு, அவர்களை ஊக்குவிப்பவராகவும் இருந்த வள்ளியப்பா, தமிழில் குழந்தை இலக்கியம் தழைக்கவும், எழுதுபவர்கள் பெருகவும் 1950-ல் 'குழந்தை எழுத்தாளர்கள் சங்கம்' என்ற அமைப்பை நிறுவினார். அதன் பல்வேறு பொறுப்புகளிலும் திறம்பட செயல்பட்டார்.

பாரதியாரின் 81வது பிறந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாட தமிழக் அரசு நியமித்த குழுவில் இடம்பெற்றார். 1979ல் "வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்" என்ற தலைப்பில் கல்கி நினைவு நாள் விழாவில் பேருரை நிகழ்த்தியது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது! மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு அரசின் விழாக்குழுவின் சார்பில் "குழந்தை இலக்கியத்தில் தமிழ்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி மாநாட்டுப்பார்வையாளர்களைக் கவர்ந்தார்!

"பிள்ளை கவியரசு" மற்றும் "மழலை கவிச்செம்மல்" போன்ற பட்டங்கள் திரு.அழ.வள்ளியப்பா அவர்களைத் தேடி வந்தது! 1982ல் "தமிழ் பேரவைச் செம்மல்" என்ற பட்டத்தை மதுரை காமராஜ் பலகலைக்கழகம் வழங்கிச் சிறப்பித்தது.  குழந்தைப் பாடல்களைப் படைப்பதோடு நின்று விடாமல், குழந்தை எழுத்தாளர்கள் பலரை உருவாக்கிய பெருமையும் வள்ளியப்பாவுக்கு உண்டு.மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் வள்ளியப்பா பற்றி இப்படிக் குறிப்பிட்டார்:“தமிழில் நான்கு வகையான பாக்கள் உண்டு என்பது தெரியும். ஆனால், என்னைப் பொறுத்த வரை பா வகைகள் ஐந்து. அவை ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, வள்ளியப்பா!” ''வள்ளியப்பா ஒரு புள்ளியப்பா - அவர்வரையும் பாக்கள் வெள்ளியப்பா!வளரும் பிள்ளைக்குப் பள்ளியப்பா - இளைஞர் வருங்காலத்திற்குத் தங்கமப்பா!”என்பது கொத்தமங்கலம் சுப்புவின்புகழாரம்.

''அணிலே, அணிலே, ஓடிவா!அழகு அணிலே ஓடிவா!கொய்யா மரம் ஏறிவா!குண்டுப்பழம் கொண்டு வா!பாதிப் பழம் உன்னிடம்பாதிப் பழம் என்னிடம்கூடிக்கூடி இருவரும்கொறித்துக் கொறித்துத் தின்னலாம்”  -
எளிய, இனிய, தெளிவான இப் பாடல் வாயிலாகப் பகிர்ந்து உண்ணும் நற்பண்பினை குழந்தைகளின் பிஞ்சு மனங்களில் பதிய வைத்துவிடுகின்றார் வள்ளியப்பா.

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம்அழகான மாம்பழம் அல்வா போல் மாம்பழம்தங்க நிற மாம்பழம் உங்களுக்கும் வேண்டுமா?இங்கு ஓடி வாருங்கள்;பங்கு போட்டுத் தின்னலாம்.மல்கோவா மாம்பழம் போலவே இனித்திடும் வள்ளியப்பாவின் சுவையான குழந்தைப் பாடல் இது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்ட வள்ளியப்பா, 'குழந்தை இலக்கியத்தைப் பல்கலைக்கழக அளவில் பாடமாக வைக்க வேண்டும்' என்று வலியுறுத்திப் பேசி முடித்த நிலையில் மயங்கிச் சாய்ந்தார். 1989 மார்ச் 16-ல் கவிஞரின் உயிர் பிரிந்தது! 

புதன், 5 நவம்பர், 2025

நவம்பர் 5 - தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் பிறந்ததினம்

பாரத நாட்டின் மறுமலர்ச்சி அலை என்பது முதலில் வங்காளத்தில்தான் தொடங்கியது. பெரும் அறிவாளிகளும், கவிஞர்களும், சிந்தனையாளர்களும், வழக்கறிஞர்களும்,  தத்துவ ஞானிகளும் விடுதலைப் போராட்ட வீரர்களும் என்று அலையலையாக தோன்றி பாரதத்தின் பாதையை வங்காளிகளே சமைத்தனர். வங்காளத்தில் தோன்றிய விடுதலைப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர் சித்தரஞ்சன் தாஸ். தேசத்தின் தேச மக்களின் நண்பர் என்ற பொருள்படும் தேசபந்து என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர் அவர்.


இன்றய பங்களாதேஷ் நாட்டில் உள்ள டாக்கா நகரில் பூபன் மோகன் தாஸ் - நிஷாரிணி தேவி தம்பதியரின் 1870ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் நாள் பிறந்தவர் சித்தரஞ்சன் தாஸ். தனது சகோதர்கள் அடியொற்றி சித்தரஞ்சன் தாஸும் வழக்கறிஞர் பட்டம் பெறுவதற்காக லண்டன் மாநகரம் சென்றார். அன்றய லண்டன் நகரம் பாரத நாட்டின் தேசபக்தர்களை உருவாக்கும் இடமாகவும் இருந்தது. லண்டன் நகரில் அரவிந்த கோஷ், சரோஜினி நாயுடு, அதுல் பிரசாத் சென் ஆகிய தேசபக்தர்கள் நட்பு சித்தரஞ்சன் தாஸுக்கு ஏற்பட்டது.

வழக்கறிஞர் பட்டம் பெற்று நாடு திரும்பிய சித்தரஞ்சன் தாஸ் வங்காளத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞராக உருவானார். நீதிபதி கிங்ஸ்போர்ட என்பவரை கொலை செய்ய நடந்த முயற்சியை விசாரிக்கும் அலிப்பூர் சதி வழக்கில் அரவிந்த கோஷுக்கு வாதாடி வெற்றி பெற்று அவரை சிறைத்தண்டனையில் இருந்து தாஸ் விடுவித்தார். அன்றய வங்காளத்தில் இயங்கிக்கொண்டு இருந்த அனுசீலன் சமிதியின் செயல்பாடுகளுக்கு சித்தரஞ்சன் தாஸ் மிகவும் உதவிகரமாக இருந்தார்.

அதனைத் தொடர்ந்து காந்தியின் வழிமுறைகளை ஏற்றுக்கொண்ட சித்தரஞ்சன் தாஸ் அன்னியத் துணி பகிஷ்கரிப்பு, கதர் துணியை ஆதரித்தல், ஒத்துழையாமை இயக்கம் என்று போராடத் தொடங்கினார். சட்டமன்றங்களில் நுழைந்து அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும் என்ற கருத்துக்கு எதிராக காந்தி இருந்ததால் மோதிலால் நேருவுடன் இணைந்து ஸ்வராஜ்யா கட்சியை தாஸ் ஆரம்பித்தார். கொல்கத்தா மாநகராட்சி அமைக்கப்பட்ட போது, தேர்தலில் போட்டியிட்டு அதன் முதல் மேயராகப் பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் சித்தரஞ்சன் தாஸின் சீடராகவும், உதவியாளராகவும் இருந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்.

தாஸின் மனைவி பஸந்தி தேவி  அம்மையார். தன்னளவிலேயே அவரும் முக்கியமான சுதந்திரப் போராட்ட வீராங்கனையாக விளங்கினார். 1921ஆம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு பஸந்தி தேவியும் சித்தரஞ்சன் தாஸின் சகோதரி ஊர்மிளா தேவியும் கைதானார்கள். பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு குறிப்பாக சுபாஷ் சந்திரபோஸுக்கு அவர் காட்டிய பாசம் பலர் பஸந்தி தேவியை தங்கள் தாயாகவே எண்ண வைத்தது.

சித்தரஞ்சன் தாஸ் மிகச் சிறந்த கவிஞரும் கூட. அவரது கவிதைகள் சாகர் சங்கீத் என்ற பெயரில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டு உள்ளது. அரவிந்தர் வங்காள மொழியில் அமைந்த இந்த கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

சுதந்திரம் என்ற பெயரில் நாளிதழையும் நாராயணா என்ற பெயரில் நாளிதழ் ஒன்றையும் சித்தரஞ்சன் தாஸ் நடத்திவந்தார். பிபின் சந்திர பால், சரத்சந்திர சட்டோபாத்யாய, ஹரிப்ரசாத் சாஸ்திரி உள்ளிட்ட வங்காளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் இந்த பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதி வந்தார்கள்.

தொடர்ச்சியான செயல்பாட்டால் சித்தரஞ்சன் தாஸின் உடல்நலம் சீர்கெட்டது. ஓய்வெடுக்கவும் உடல்நலத்தைப் பேணவும் அவரை மலைப்பிரதேசத்தில் சிறுது காலம் இருக்கச் சொல்லி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். சித்தரஞ்சன் தாஸ் டார்ஜலிங் நகருக்குச் சென்றார். 1925ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் நாள் டார்ஜிலிங் நகரில் தாஸ் மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் கொல்கத்தா நகரில் நடைபெற்றது. சித்தரஞ்சன் தாஸின் இறுதி ஊர்வலம் காந்தியின் தலைமையில் நடந்தது.

தனது சொத்துக்களை எல்லாம் நாட்டு மக்களுக்கு எழுதி வைத்திருந்தார் சித்தரஞ்சன் தாஸ். அவர் அளித்த நிலத்தில் இன்று சித்தரஞ்சன் தாஸ் புற்றுநோய் மருத்துவமனை இயங்கி வருகிறது.
ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளே வாழ்ந்தாலும் அதற்குள் மகத்தான சேவைகளை புரிந்த தலைவரை ஒரே இந்தியா தளம் நன்றியோடு நினைவு கொள்கிறது. 

செவ்வாய், 4 நவம்பர், 2025

நவம்பர் 4 - தொழிலதிபர் ஜம்னாலால் பஜாஜ் பிறந்ததினம்



தாளாற்றித் தந்த  பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு - குறள் 212.

அறத்தின் வழிநின்று ஒருவன் ஈட்டிய பொருள் எல்லாம் தகுதியானவர்களுக்கு, தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்கே ஆகும். சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் பிரதமர் மோதி சுட்டிக் காட்டிய குறள் இது. இதன்படி வாழ்ந்த பெருமகனார் தொழிலதிபர் ஜம்னாலால் பஜாஜ் அவர்கள்.

கனிராம் பிரடிபாய் தம்பதியரின் மூன்றாவது மகனாக ராஜஸ்தான் மாநிலத்தில் காசி கா பாஸ் என்ற கிராமத்தில் பிறந்தவர் ஜம்னாலால். இயல்பாகவே தொழில்முனைவோர்களான மார்வாடி வகுப்பைச் சேர்ந்தவர் இவர். வசதியான குடும்பத்தைச் சாராத ஜம்னாலாலை பஷிராஜ் - சாதிபாய் தம்பதியினர் தங்கள் வாரிசாக தத்து எடுத்துக் கொண்டனர். ராஜஸ்தானைச் சார்ந்த இவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் வார்தாவில் வசித்து வந்தனர்.

சேத் பஷிராஜ் மேற்பார்வையில் ஜம்னாலால் வியாபார நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். சரியான நேரத்தில் சரியான விலையில் பொருள்களை வாங்கவும், அதனை லாபத்தில் விற்கவும், அதற்கான கணக்குகளை பராமரிக்கவும் திறமைசாலியாக விளங்கினார். ஜம்னாலால் தொடங்கிய தொழில்கள்தான் இன்று பஜாஜ் குழுமமாக பரந்து விரிந்து நிற்கிறது.

பொதுவாகவே வியாபாரிகளும் தொழிலதிபர்களும் கூடியவரை அரசைப் பகைத்துக் கொள்ளாமலே இருப்பார்கள். ஜம்னாலாலும் அப்படிதான் இருந்தார். முதல் உலகப் போரில் அவர் ஆங்கில அரசுக்கு அளித்த ஒத்துழைப்பை அங்கீகாரம் செய்யும் விதமாக அரசு அவரை கவுரவ நீதிபதியாக நியமித்தது. ஜம்னாலாலுக்கு ராவ் பகதூர் என்ற பட்டத்தையும் அளித்தது.

திலகர், கோகுலே இவர்களின் சகாப்தம் முடிந்து காந்தியின் காலம் தொடங்கிய நேரம் அது. ஜம்னாலால் காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். அஹிம்சை, தாழ்த்தப்பட்ட சகோதர்களின் நல்வாழ்வு, எளிய வாழ்க்கை என்ற கொள்கைகளை அந்த தொழிலதிபர் பேசவில்லை, செயல்படுத்தத் தொடங்கினார். காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் தன் குடும்பத்தினரோடு வாழ ஆரம்பித்தார்.

காந்தியின் நெருக்கம் ஜம்னாலாலை ஆங்கில அரசு அளித்த ராவ் பகதூர் பட்டத்தையும் கௌரவ நீதிபதி பதவியையும் துறக்கத் தூண்டியது. அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம், கொடி சத்தியாகிரக போராட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு ஜம்னாலால் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

காந்தி சேவா சங்கத்தின் தலைவராகவும், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு  உறுப்பினராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக பல்லாண்டு பொறுப்பு வகித்தார்.

தேசத்தின் புனர்நிர்மாணப் பணி என்பது ஹரிஜன சகோதர்களை விட்டு விட்டு நடக்க முடியாது என்பதை உளப்பூர்வமாக நம்பிய ஜம்னாலால் தங்கள் குடும்ப கோவிலை ஹரிஜன மக்களின் தரிசனத்திற்காக திறந்து விட்டார். பல்வேறு கோவில்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவரின் தொடர்ந்த முயற்சியால் திறக்கப்பட்டது. பல்வேறு குளங்களிலும், கிணறுகளிலும் ஹரிஜன சகோதர்கள் பயன்பாட்டுக்கு இருந்த தடை நீங்கியது.

தென்னக மக்களும் ஹிந்தி மொழியைப் படிக்க வேண்டும் என்பதற்காக தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சாரக் சபா என்ற அமைப்பை ஜம்னாலால் நிறுவினார். கதர் துணி உற்பத்தி, கைத்தொழில் வழியாக கிராம முன்னேற்றம் ஆகிய துறைகளில் ஜம்னாலால் தொடர்ந்து இயங்கி வந்தார்.

தொழிலில் தனது பங்கு முழுவதையும் ஆதாரமாகக் கொண்டு ஜம்னாலால் பஜாஜ் தொண்டு நிறுவனம் என்ற அமைப்பை நிறுவினார். இந்த நிறுவனத்தின் சட்ட திட்டங்களை வழக்கறிஞர் என்ற முறையில் காந்திதான் எழுதினார் என்றால் காந்திக்கு ஜம்னாலால் மீதான அன்பும் மரியாதையும் புலனாகிறதுதானே.

தனது நான்கு குழந்தைகளோடு ஜம்னாலால் பஜாஜை காந்தி தனது ஐந்தாவது மகனாகவே நடத்திவந்தார். "நான் தர்மகர்த்தா முறையில் பாரத தொழிலதிபர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று எழுதும் போதெல்லாம் என் கண்ணில் நிழலாடுவது இந்த தொழில்துறை இளவரசர்தான்" என்று ஜம்னாலாலைப் புகழ்ந்து அவரின் இறப்பிற்குப் பின்னர் காந்தி எழுதி உள்ளார்.

தனது ஐம்பத்தி ஏழாவது வயதில் 1942ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் நாள் ஜம்னாலால் பஜாஜ் காலமானார்.

ஜம்னாலால் பஜாஜ் தொடங்கிய நிறுவனங்கள் இன்று பல்வேறு தொழில்களில் காலூன்றி பஜாஜ் குழுமமாக உருவாகி உள்ளது. 


திங்கள், 3 நவம்பர், 2025

நவம்பர் 3 - ஹிந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் பிரிதிவிராஜ் கபூர் பிறந்தநாள்



இசையும் நாடகமும் பாரத நாகரீகத்தில் பிரிக்க முடியாத  ஒரு அங்கம். அதனால்தான் நாடகத்தின் நீட்சியான சினிமாவும் மக்களின் எண்ணத்தோடு ஒட்டியே உள்ளது. பாரத திரையுலக வரலாற்றில் குறிப்பாக ஹிந்தி திரையுலகத்தில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக விளங்கிய பிரிதிவிராஜ் கபூரின் பிறந்ததினம் இன்று. இன்றய பாகிஸ்தான் பகுதியில் 1906ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் நாள் பிறந்தவர் பிரிதிவிராஜ். அவர் தந்தை அன்றய ஆங்கில காவல்துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர்.

சிறுவயதில் இருந்தே நாடகங்களில் ஈடுபாடு கொண்டிருந்த பிரிதிவிராஜ், தான் படித்துக்கொண்டு இருந்த சட்டப் படிப்பை பாதியில் கைவிட்டு சினிமாவில் நடிக்க மும்பைக்கு சென்றார். 1929ஆம் ஆண்டு தயாரான சினிமா கேர்ள் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அது ஒரு பேசாத ஊமைப் படம். இந்தியாவில் தயாரான முதல் பேசும் படமான ஆலம் ஆரா என்ற படத்தில் இவர் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். 1941ஆம் ஆண்டு வெளியான சிக்கந்தர் என்ற படத்தில் அலெக்சாண்டர் வேடத்தில் பிரிதிவிராஜ் நடித்தார். மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற அந்தப் படம்தான் பிரிதிவிராஜ் கபூரை ஹிந்தி திரைப்பட உலகத்தின் முன்னணி கதாநாயகனாக நிலைநிறுத்தியது.

அன்றய காலத்தில் திரைப்பட நடிகர்கள் நாடகங்களிலும் நடிப்பது வழக்கமாக இருந்தது. பல்வேறு திரைப்படங்களிலும் நாடகங்களிலும்  நடித்துக்கொண்டு இருந்த பிரிதிவிராஜ் பிரிதிவி தியேட்டர்ஸ் என்ற நாடகக்குழுவை தொடங்கினார். நாடு சுதந்திரம் அடையும் காலம் வெகுவிரைவில் இருந்தது, ஆனால் மதத்தின் பெயரால் நாடு பிளவுபடும் என்பதும் உறுதியான காலம் அது. நாட்டை எதிர்நோக்கும் மிகப் பெரும் பிரச்சனையான பிரிவினைதான் பிரிதிவிராஜ் கபூரின் நாடகங்களின் மையக் கருத்தாக இருந்தது. தீவார், பதான், கதர், ஆஹுதி என்று தொடர்ந்து நான்கு நாடகங்கள் நாடு பிளவுபட்டால் அதனால் விளையும் இன்னல்களைப் பற்றி கபூரின் நாடகக்குழு அரங்கேற்றியது. திரைத்துறை நாடகத்தை விழுங்கியது. நாடகங்களுக்கான ஆதரவு குறைய, பிரிதிவிராஜ் புது நாடங்களை மேடையேற்றுவது இல்லாமலானது. ஏறத்தாழ பதினைந்தாண்டு காலத்தில் பிரிதிவி தியேட்டர்ஸ் 2,600 முறை பல்வேறு நாடகங்களை நாட்டின் பல்வேறு நகரங்களில் நடத்தியது.

பிரிதிவிராஜ் கபூரின் மகன்களான ராஜ்கபூர், ஷம்மிகபூர் மற்றும் சஷிகபூர் ஆகியோரும் திரையுலகின் முக்கிய நடிகர்களாக விளங்கினார்கள். ராஜ்கபூர் தயாரித்த ஆவாரா என்ற திரைப்படத்திலும், மகன் ராஜ்கபூர் பேரன் ரன்திர்கபூர்  ஆகியோருடன் இணைந்து கல் ஆஜ் அவுர் கல் எந்த படத்திலும் பிரிதிவிராஜ்கபூர் நடித்துள்ளார். மூன்று தலைமுறைகள் இணைந்து நடித்த மிகச் சில படங்களில் இதுவும் ஓன்று.

முகலாய இளவரன் சலீமுக்கும் நாட்டிய தாரகை அனார்கலிக்கும் இடையே உருவான காதலை பேசிய படமான முகல் இ ஆசம் என்ற படத்தில் பிரிதிவிராஜ் கபூர் முகலாயப் அரசர் அக்பரின் வேடத்தில் நடித்தார். மிகப் பெரும் பொருள்செலவில் உருவான இந்தப் படம், பெரும் வெற்றியைப் பெற்றது. இந்திய திரைப்பட வரலாற்றில் குறிப்பிடத் தக்க படங்களில் ஒன்றாக இந்தப்படம் விளங்குகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரிதிவிராஜ் கபூர் 1972ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

இவரின் கலையுலக சேவையைப் பாராட்டி அரசு 1969ஆம் ஆண்டு பத்மபூஷன் பட்டத்தை அளித்தது. திரையுலகத்தில் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது மரணத்திற்குப் பிறகு இவருக்கு வழங்கப்பட்டது. 

ஞாயிறு, 2 நவம்பர், 2025

நவம்பர் 2 - அருண் ஷோரி பிறந்தநாள்

நில்லாமல்  ஓடிக்கொண்டு இருக்கும் காலம் இரக்கமற்றது. மிகப்பெரும் ஆதர்சனங்களாக இருந்தவர்கள் தங்கள் நிலையில் இருந்து வீழும் துர்பாக்கியத்தைப் பார்க்கும் வாய்ப்பை அது பலருக்கு அளித்து விடுகிறது. நிறைவேறாத ஆசைகள், கலந்த கனவுகள், ஒட்டாமல் போன உறவுகள் என்று இந்த வரிசை மிகப் பெரியதாக இருக்கிறது. ஒருகாலத்தில் அப்படி பெரும் ஆளுமையாக விளங்கிய பொருளாதார நிபுணரும், பத்திரிகையாளருமான அருண் ஷோரி அவர்களின் பிறந்தநாள் இன்று.



மிகப் பெரிய அளவில் அருண் ஷோரி வெளியுலகத்திற்கு தெரியவந்தது எண்பதுகளின் தொடக்கத்தில். அப்போது அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஆசிரியர். பழுத்த காந்தியவாதியும், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் அதிபரும், பிறவிப் போராளியுமாகிய ராம்நாத் கோயங்காவின் தளபதியாக அருண் ஷோரி செயல்பட்டு வந்தார். கத்தியைக் காட்டிலும் பேனாவின் முனை கூர்மையானது என்பதை பாரத மக்களுக்கு அருண் ஷோரி நிரூபித்துக் காட்டினார். அவரது எழுத்துக்கள் அன்றய மஹாராஷ்டிரா முதல்வர் அந்துலேவை ஊழல் குற்றசாட்டுகளால் துளைத்தது. அந்துலே பதவி விலக வேண்டி வந்தது. கோயங்காவும், ஷோரியும், ஆடிட்டர் குருமூர்த்தியும் குறிவைத்தது இந்திரா மீதும் அவர் மகன் ராஜீவ் மீதும். அந்துலேவைத் தொடர்ந்து, போபோர்ஸ் பீரங்கி ஊழல் விவகாரம், ரிலையன்ஸ் திருபாய் அம்பானியின் முறைகேடுகள் என்று தங்கள் எழுத்துக்களால் அவர்கள் நாட்டின் மனசாட்சியை உலுக்கி எடுத்தனர்.

அன்றய இந்திய ஆட்சிப் பணியில் இருந்த ஹரிதேவ் ஷோரியின் மகனாக 1941ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் நாள் பிறந்தவர் அருண் ஷோரி. ஹரிதேவ் ஷோரி நுகர்வோர் உரிமைக்கான பல்வேறு சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தவர். டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத் துறையில் இளங்கலை பட்டத்தையும், அமெரிக்காவில் உள்ள சைராகஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றவர் அருண் ஷோரி. அதனைத் தொடர்ந்து உலகவங்கியில் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வந்தார். அதே காலகட்டத்தில் 1972 - 1974ஆம் ஆண்டுகளில் பாரத நாட்டின் திட்டக்குழுவின் ஆலோசகராகவும் இருந்தார்.

1975ஆம் ஆண்டில் இந்திரா நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். அதனை எதிர்த்து ராம்நாத் கோயங்கா அவரது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை மூலம் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருந்தார். அந்த போராட்டத்தில் அருண் ஷோரியும் கலந்துகொண்டார். தொடர்ச்சியாக அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுத ஆரம்பித்தார். 1979ஆம் ஆண்டு கோயங்கா எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக அருண் ஷோரியை நியமித்தார். ஷோரியின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் செயல்களை விமர்சிக்கும் பணி இன்னும் முனைப்போடு நடைபெற்றது. அவரது சேவைகளை பாராட்டி அவருக்கு 1982ஆம் ஆண்டு மகாசாய் விருது வழங்கப்பட்டது.

பத்திரிகையில் எழுதுவது மட்டுமல்லாமல் பல்வேறு புத்தகங்களையும் அருண் ஷோரி எழுதியுள்ளார். பொய்யான கடவுளை வழிபடுதல் என்று அம்பேத்கார் பற்றிய புத்தகம், பத்வாகளின் உலகம் என்று ஷரியா சட்டங்களைப் பற்றி, இந்திய நீதித்துறை செயல்படும் விதம் பற்றி அனிதாவுக்கு பிணை ஆணை கிடைத்தது, இறைவனுக்கு தாயின் மனம் தெரியுமா என்று நரம்பு சீர்கேட்டால் அவதிப்படும் தனது மகனைப் பற்றி என்று பல்வேறு புத்தகங்களை அருண் ஷோரி எழுதி உள்ளார்.

1998 முதல் 2010ஆம் ஆண்டு வரை இரண்டு முறை ஷோரி பாஜகவின் மத்திய மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். வாஜ்பாய் அரசின் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தனியார்மயமாக்கல் ஆகிய துறைகளின் அமைச்சராகவும் ஷோரி பணியாற்றி உள்ளார்.

ராஜ்யசபை உறுப்பினராகப் பணியாற்றியபோது அவர்க்கு அளிக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியை கான்பூர் ஐ ஐ டி நிறுவனத்தில் உயிர் தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வகம் அளிக்க அவர் வழங்கினார்.

தற்போதய அருண் ஷோரியின் எண்ணப்போக்கு ஒரே இந்தியா தளத்தின் அலைவரிசைக்கு ஒத்ததாக இல்லை என்றாலும், ஆசிரியர் குழுவின் ஆதர்ச நாயகர்களில் ஒருவராக ஒரு காலத்தில் அருண் ஷோரி விளங்கியது என்னவோ உண்மைதான்.

மனம் திருந்திய மைந்தராக தேசத்தின் புனர்நிர்மாணப் பணிக்கு அருண் ஷோரி திரும்பவேண்டும் என்ற பிரார்தனையோடு அவர்க்கு எங்கள் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 

வியாழன், 30 அக்டோபர், 2025

அக்டோபர் 30 - பிரமோத் மகாஜன் பிறந்தநாள்

காலம் தனக்கு தேவையான மனிதர்களை தேவையான நேரத்தில்  தேவையான இடத்தில் வைத்து விடுகிறது, அதனால்தான் சிலரை சில இடங்களில் இருந்து, சிலரை உலகத்தில் இருந்தே விலக்கி விடுகிறது. காலத்தினால் வெளியேற்றப்பட்ட, பாஜகவின்இரண்டாம் தலைமுறை அரசியல்வாதியும், பாரத அரசியல் வானில் பிரகாசமான விளக்காக திகழ்ந்து இருக்க வேண்டியவருமான  பிரமோத் மகாஜன் அவர்களின் பிறந்தநாள் இன்று.



இன்றய தெலுங்கானா மாநிலத்தின் மஹபூப்நகர் பகுதியைச் சார்ந்த வெங்கடேஷ் தேவிதாஸ் மகாஜன் - பிரபாவதி தம்பதியரின் ஐந்து குழந்தைககளில் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் திரு பிரமோத் மகாஜன். இந்த தம்பதியரே மஹாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தின் அம்பஜ்ஜோகி நகருக்கு குடிபெயர்ந்ததால், ப்ரமோதின் இளமைக்காலம் முதலே அவர் மஹாராஷ்டிரா மாநிலத்தவராகவே வளர்ந்து வந்தார். தனது பள்ளிப்படிப்பை யோகேஸ்வரி வித்யாலயாவில் முடித்த மகாஜன் இயற்பியல் துறையில் இளங்கலை பட்டமும், இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். படிக்கும் காலத்திலேயே நாடகத்துறையில் சிறந்து விளங்கிய பிரமோத், தன்னோடு நடித்த ரேகாவை காதலித்து மணந்து கொண்டார். நான்காண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பிரமோத் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.

மிகக் சிறுவயதில் இருந்தே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் இருந்த பிரமோத் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தருண் பாரத் என்ற மராத்தி செய்தித்தாளின் ஆசிரியராகவும் இருந்தார். இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடிநிலை காலத்தில் கைது செய்யப்பட்டு நாசிக் சிறையில் அடைக்கப்பட்டார். பாரதிய ஜனதா கட்சி உருவான காலத்தில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்ப்பில் கட்சிப் பணிக்காக அனுப்பப்பட்டவர்களில் பிரமோத்தும் ஒருவர். தனது பணித்திறமையால், பல்வேறு மாற்றுக் கட்சியினரோடு இருந்த தொடர்பால் அவர் பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார்.

மஹாராஷ்டிர மாநில பாஜகவின் பொதுச் செயலாளர், கட்சியின் தேசிய செயலாளர், கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் என்று பல்வேறு பொறுப்புகள் அவரைத் தேடி வந்தது. இந்திரா கொலையானதைத் தொடர்ந்து நடைபெற்ற 1984ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்டார், ஆனால் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். 1996ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். அவரது சேவைகளை அங்கீகாரம் செய்யும் விதமாக பாஜக அவரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நான்கு முறை நியமித்தது.

1996ஆம் ஆண்டு முதல்முதலாக வாஜ்பாய்  அமைந்த பாஜக அரசில் பிரமோத் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1998ஆம் ஆண்டு முதலில் பிரதமரின் ஆலோசகராகப் பணியாற்றிய மகாஜன், பின்னர் செய்தித் தொடர்பு, உணவு பதனிடும் துறை, பாராளுமன்ற விவகாரத்துறை, நீர்வளம் மற்றும் தகவல் தொடர்பு ஆகிய துறைகளின் அமைச்சராகவும் இருந்தார். பின்னர் அவர் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பிரமோத் மகாஜன் பாஜகவின் முக்கிய தலைவர்களான வாஜ்பாய் மற்றும் அத்வானியின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தார். வாஜ்பாய் அவரை லக்ஷ்மணன் என்றே அழைப்பது வழக்கம்.

1995ஆம் ஆண்டு பாஜக சிவசேனாவோடு கூட்டணி வைத்து மஹாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டு பெரும் வெற்றியைப் பெற்றது. கூட்டணி அமையவும், தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை அமைப்பதிலும் பிரமோத்தின் பங்கு பாராட்டுதலுக்குரியது. 2003ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் மாநிலத் தேர்தலின் போது, அந்த மாநிலத்தின் பொறுப்பாளராக பிரமோத் பணியாற்றினார். அங்கும் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் "இந்தியா ஒளிர்கிறது" என்ற முழக்கத்தோடு பாஜக நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் அந்தத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் அளவிற்கு தேவையான வெற்றிகளை ஈட்ட முடியவில்லை. தோல்விக்கான பொறுப்பை மகாஜன் ஏற்றுக்கொண்டார்.

2006ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் நாள் பிரமோத் மகாஜன் அவர் வீட்டில் அவரது உடன்பிறந்த தம்பியால் சுடப்பட்டார். மிக அருகில் இருந்து வெளியான துப்பாக்கி குண்டுகளால் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சைகள் பலனளிக்காமல் பிரமோத் மே மாதம் 3ஆம் தேதி காலமானார்.

பிரமோத் மஹாஜனின் சகோதரி கணவர் கோபிநாத் முண்டேயும் பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். ப்ரமோதின் மகள் பூனம் மகாஜன் தற்போது பாஜகவின் இளைஞர் அணி தலைவியாக உள்ளார்.

விதி விளையாடாமல் இருந்திருந்தால், பிரதமர் பதவிக்கே வந்திருக்க வேண்டிய பிரமோத் மகாஜன் பிறந்தநாளில் கட்சிக்கான அவரது சேவையை ஒரே இந்தியா தளம் நன்றியோடு நினைவு கொள்கிறது.