சனி, 20 செப்டம்பர், 2025

செப்டம்பர் 20 - தோழர் பி ராமமூர்த்தி பிறந்தநாள்

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்  இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும்  
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை - நீங்கி  வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை 

இன்று உலகத்தின் சீண்டப்படாத சித்தாந்தமாக, பாரத தேசத்தில் பெருவாரியான மக்களால் கைவிடப்பட சித்தாந்தமாக இருக்கும் பொதுவுடமை சித்தாந்தம் சென்ற நூற்றாண்டில் உலகத்தின் மூன்றில் ஒரு பங்குக்கு மேலான நாடுகளில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஒன்றாகும். நேர்மையும் தியாகமும் பொருந்திய பலர் அந்த சித்தாந்தத்தின் தளகர்த்தார்களாக இருந்தனர். தமிழகத்தில் பிறந்து, பாரத நாட்டின் பொதுவுடமை சித்தாந்தத்தின் முக்கிய தலைவராக விளங்கிய தோழர் பி ராமமூர்த்தியின் பிறந்தநாள் இன்று.


1908ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வேப்பத்தூர் பஞ்சாபகேச சாஸ்திரி என்ற சம்ஸ்கிருத பண்டிதரின் மகனாகச் சென்னையில் பிறந்தவர். இவருக்கு மூன்று வயதாகும் போது பஞ்சாபகேச சாஸ்திரி காலமாகிவிட்டார். சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். இளம் வயதில் சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளில் மனதைப் பறிகொடுத்து பாரதி பக்தரானார்.
  
1920இல் மகாத்மா காந்தி இந்திய இளைஞர்கள் கல்வி நிலையங்களை விட்டு வெளியேறி சுதந்திரப் போரில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த போது, இவர் தனது படிப்பை நிறுத்திவிட்டு வட இந்தியா பயணமானார். வீட்டுக்குச் சொல்லாமல் வெளியேறி இவர் அலகாபாத் நகரத்தை அடைந்தார். வார்தா சென்று காந்திஜியைச் சந்தித்தார். அவருடைய ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டினார். அப்போது அங்கு இருந்த ராஜாஜி, இவரை ஊருக்குப் போய் படிப்பை முடித்துவிட்டு வா என்று திரும்ப அனுப்பி வைத்தார். ஊர் திரும்பிய ராமமூர்த்தி 1926இல் பள்ளி இறுதி வகுப்பு தேறினார். சென்னை மாநிலக் கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார். இவரது கவனம் அரசியலில் ஈடுபட்டதால் படிப்பு இவருக்குப் பிடிக்கவில்லை. மறுபடி இவர் வட இந்தியா சென்றார். காசியில் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார். மதன்மோகன் மாளவியா எனும் பெரும் காங்கிரஸ் தலைவர் தொடங்கிய இந்தப் பல்கலைக் கழகம் இவரது அரசியல் ஆர்வத்துக்கு இடமளித்தது.

பனாரஸ் பல்கலைக் கழகத்தில் படித்து முடித்த பின் ராமமூர்த்தி அயல்நாட்டுப் பொருட்களை பகிஷ்கரிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாத சிறை தண்டனை பெற்றார். 1932இல் சட்ட மறுப்பு இயக்கத்தை மகாத்மா காந்தி தொடங்கினார். அதில் ராமமூர்த்தி கலந்துகொண்டு ஒன்பது மாத சிறை தண்டனை பெற்றார்.

1929இல் லாஹூரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில், 1933இல் கல்கத்தா நகரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மகாநாட்டில், அதன் பின் பாட்னாவில் நடந்த அகில இந்திய காங்கிரசிலும் என்று பல்வேறு  கட்சியின் வருடாந்திர மாநாடுகளிலும் ராமமூர்த்தி கலந்து கொண்டார்.

காங்கிரசுக்குள் இருந்த இடதுசாரி சோஷலிச சிந்தனையாளர்களை ஒன்று திரட்டி ஜெயப்பிரகாஷ் நாராயண் ஒரு கூட்டம் நடத்தினார், அதில் இராமமூர்த்தி கலந்து கொண்டார். 1936இல் இரண்டாவது காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி மகாநாடு மீரட் நகரில் நடந்தது. அதில் ராமமூர்த்தி கலந்து கொண்டார். 1934இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. ஆகையால் அந்த கட்சி உறுப்பினர்கள் காங்கிரசுக்குள் காங்கிரஸ் சோஷலிஸ்ட் என்ற பெயரில் செயல்படத் துவங்கினர். சென்னை மாகாண காங்கிரஸ் சோஷலிஸ்ட் இயக்கத்தை ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். அந்த இயக்கம் சார்பில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கங்கள் உருவாகின. மெல்ல மெல்ல இவரது தொழிற்சங்க, அரசியல் பணி தமிழ்நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.

1937இல் இந்திய மாகாண சர்க்காருக்கு ஆங்காங்கே தேர்தல் நடந்தது. சென்னை மாகாண தேர்தலையொட்டி ஜவஹர்லால் நேரு சென்னை வந்தார். அவருடைய தேர்தல் கூட்டச் சொற்பொழிவை ராமமூர்த்தி மொழிபெயர்ப்பு செய்தார். அதற்காக அவர் கூட்டம் முடிந்த பின் கைது செய்யப்பட்டார். அந்தத் தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி பெரு வெற்றி பெற்றது. இங்கு ராஜாஜி தலைமையில் மந்திரிசபை அமைக்கப்பட்டது.

1937இல் இவர் காங்கிரசை விட்டு வெளியேறி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1939இல் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு சுபாஷ் சந்திர போசுக்கும் பட்டாபி சீதாராமையாவுக்கும் இடையே போட்டி. மகாத்மா காந்தி பட்டாபியை ஆதரித்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு ஆதரவாக ராமமூர்த்தி சென்னை மாகாணத்தில் ஆதரவு திரட்டினார்.

1940இல் கம்யூனிஸ்டுகள் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டனர். யுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ராமமூர்த்தி கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார். சென்னை சதி வழக்கு ((II): சென்னை சதி வழக்கு என்ற ஒன்று 1932இல் நடைபெற்றதுஇது இரண்டாவது சதி வழக்கு. வீட்டுக் காவலில் இருந்த ராமமூர்த்தி தப்பி தலைமறைவானார். அங்கிருந்தபடி இவர் கட்சிப் பணியாற்றி வந்தார். தலைமறைவான கம்யூனிச தோழர்களை  கண்காணித்த போலீஸ் அவர்களில் பலரை கைது செய்து சிறைக்கு அனுப்பியது. இவர்கள் மீது ஒரு சதி வழக்கு பதிவாகியது. இதில் பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைதானார்கள். .எஸ்.கே.ஐயங்கார், மோகன் குமாரமங்கலம், உமாநாத், ராமமூர்த்தி போன்றவர்கள் இதில் அடக்கம். 1941இல் இவர்கள் எல்லோரும் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்கள். பெல்லாரி சிறை கொடுமையான சிறையாக இருந்த போதிலும் அங்கு ராமமூர்த்தி மற்ற கைதிகளை உட்காரவைத்து மார்க்சிசம் பற்றிய வகுப்புகள் எடுத்து வந்தார்.

1941இல் ஜெர்மனியின் நாசி ஹிட்லர் சோவியத் யூனியன் மீது படையெடுத்தார். அது வரை ஏகாதிபத்திய யுத்தம் என்று வர்ணிக்கப்பட்ட யுத்தம் இப்போது மக்கள் யுத்தம் என்று கம்யூனிஸ்ட் கட்சியினரால் பிரகடனப் படுத்தப் பட்டது. இதையொட்டி இங்கிலாந்து நாடு ஜெர்மனிக்கு எதிராக நடத்தும் போருக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவு கொடுத்தனர். அதனால் கம்யூனிஸ்ட் கட்சியினர் அனைவரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

1946இல் கம்யூனிஸ்ட்டுகளை வெளியேற்ற காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது. 1946இல் ராமமூர்த்தி மதுரையில் மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்து போராடினார்.  மதுரை சதி வழக்கு என்று ஒன்றை இவர் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் தொடுத்தது. அதிலும் இவர் விடுதலையாகி விட்டார். சுதந்திரம் வரும் நேரம் இவரும் சுதந்திரமாக வெளிவந்தார். சுதந்திரத்துக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி சென்னை மாகாணத்தில் தடை செய்யப்பட்டது. ராமமூர்த்தி மறுபடியும் தலைமறைவானார். இவர் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டார்.

1952இல் முதல் சுதந்திர இந்திய தேர்தல். ராமமூர்த்தி மதுரை வடக்கிலிருந்து போட்டியிட்டு சிறையில் இருந்தபடி வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் காங்கிரசுக்கு சென்னை மாகாண சட்டசபையில் மெஜாரிடி கிடைக்கவில்லை. உடனே காங்கிரசார் ராஜாஜியை அழைத்து மந்திரிசபை அமைக்கச் சொன்னார்கள். அவரும் அமைத்து, சில எதிர் கட்சி உறுப்பினர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு அரசு செய்யலானார். பி.ராமமூர்த்திதான் எதிர் கட்சித் தலைவர். மாகாண முதல்வராக ராஜாஜியும், எதிர்கட்சி வரிசையில் ராமமூர்த்தி முதலான பிரபல கம்யூனிஸ்டுகளும், அந்தக் கால சட்டசபை நடவடிக்கைகளும், விவாதங்களும் போல இனி இருக்க முடியுமா? சந்தேகம்தான்.

1952இல் இவர் கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பொன்னி, வைகை என்று இரண்டு பெண்கள். பின்னர் பல சித்தாந்த போராட்டங்களுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தது. இவர் மார்க்சிஸ்ட் கட்சிக்குச் சென்றார். அங்கு தொழிற்சங்கம் அமைந்தது. சி..டி.யு. என்பது அது. அதன் தலைவர்களில் ஒருவரானார் ராமமூர்த்தி.


ஆரிய மாயையா - திராவிட மாயையா ? விடுதலை போராட்டத்தில் தமிழகம் என்று பி ராமமூர்த்தி ஒரு புத்தகத்தை எழுதி உள்ளார். விடுதலை போராட்ட காலத்தில் நடந்த பல்வேறு தகவல்களை இதில் காணலாம்.

முதிர்ந்த வயதின் காரணமாக இவர் 1987, டிசம்பர் 15 அன்று காலமானார்.

வியாழன், 18 செப்டம்பர், 2025

செப்டம்பர் 18 - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹிதயதுல்லா நினைவுநாள்

பல்வேறு நிறங்களும் மணங்களும் கொண்ட மலர்களைக் கொண்டு தொடுத்த அழகிய பூமாலைக்கு நிகரானது நமது தேசம். பல்வேறு மதங்களை, இனங்களை, மொழிகளைச் சேர்ந்த அறிஞர்கள் பலரால் உருவாகி, திருவாகி இருக்கும் தேசத்தில் சட்டத்துறையில் கல்வித்துறையிலும் தலைசார்ந்து விளங்கிய நீதிபதி ஹிதயதுல்லா அவர்களின் நினைவுநாள் இன்று.



ஹிதாயதுல்லாவின் குடும்ப முன்னோர்களே பெரும் படிப்பாளிகள், புகழ் வாய்ந்தவர்கள். அவரது தாத்தா முன்ஷி குதருதுல்லா வாரணாசியில் வசித்துவந்த வழக்கறிஞர். அவர் தந்தை கான் பகதூர் ஹபிப் முஹம்மது வில்லயதுல்லாஹ் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர். உருது மொழியில் புகழ்பெற்ற கவிஞர். இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றிய அவர் மத்திய சட்டசபை உறுப்பினராகப் பணியாற்றியவர். அவரது சகோதரர்கள் இக்ரமுல்லாஹ் மற்றும் அஹமதுல்லாஹ் ஆகியோர் இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றியவர்கள். இக்ரமுல்லாஹ் தேசப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செயலாளராக உயர்ந்தவர்.

தனது ஆரம்ப கல்வியை நாக்பூரில் உள்ள அரசு பள்ளியிலும் பின்னர் மோரிஸ் கல்லூரியிலும் முடித்த ஹிதயதுல்லா லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் திருத்துவ கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பெற்றார். பின்னர் அங்கேயே சட்டமும் பயின்றார்.

நாடு திரும்பிய ஹிதயதுல்லா நாக்பூர் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். அதோடு அவர் நாக்பூரில் உள்ள சட்ட பல்கலைக்கழகத்தில் சட்டவியல் மற்றும் முஸ்லீம் சட்டங்கள் பற்றிய துறைகளின் ஆசிரியராகவும் பணியாற்றினார். நாக்பூர் உச்ச நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராகவும் பின்னர் அட்வகேட் ஜெனெரலாகவும் நியமிக்கப்பட்டார். 1946ஆம் ஆண்டு நாக்பூர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஹிதயதுல்லா 1954ஆம் ஆண்டு நாக்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பின்னர் 1958ஆம் ஆண்டு நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் அதனைத் தொடர்ந்து 1968ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். மிக இளைய வயதில் அட்வகேட் ஜெனரல், மிக இளைய வயதில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நாட்டின் உச்சநீதிமன்றத்தின் முதல் முஸ்லீம் தலைமை நீதிபதி என்ற பெருமைகளும் இவருக்கு உண்டு.

1969ஆம் ஆண்டு நாட்டின் குடியரசு தலைவர் திரு சாகிர் ஹுசைன் திடீர் என்று மரணம் அடைய தற்காலிக தலைவராக அன்றய குடியரசு துணைத்தலைவர் வி வி கிரி பொறுப்பேற்றுக் கொண்டார். குடியரசு தலைவருக்கான தேர்தலில் போட்டியிட திரு கிரி தனது பதவியை ராஜினாமா செய்ய, நீதிபதி ஹிதயத்துல்லா 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 24 வரை குடியரசு தலைவராக பணியாற்றினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் 1970ஆம் ஆண்டு டிசம்பர் வரை பணியாற்றிய ஹிதயதுல்லா 1979ஆம் ஆண்டு முதல் 1984ஆம் ஆண்டு வரை குடியரசு துணைத்தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1982ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக அன்றய குடியரசு தலைவர் கியானி ஜெயில்சிங் அமெரிக்கா சென்ற போது, மீண்டும் குடியரசு தலைவராக பணியாற்றினார்.

நாட்டின் மிக உயர்ந்த பொறுப்புகளான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, குடியரசு துணை தலைவர், குடியரசு தலைவர் ஆகிய மூன்று பொறுப்புகளையும் வகித்த ஒரே இந்தியர் ஹிதயதுல்லா மட்டுமே. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைகளை மாற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கோகுல்நாத் எதிர் பஞ்சாப் அரசாங்கம் என்ற வழக்கில் அவர் எழுதிய தீர்ப்பு மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும்.

சட்டத்தில் மேன்மையுற்று விளங்கிய திரு ஹிதயதுல்லா கல்விப்பணியிலும் புகழ் பெற்று விளங்கினார். ன் எ நாக்பூர் சட்ட கல்லூரியில் பணியாற்ற அவர் அந்த துறையின் தலைவராகவும் இருந்தார். அதன் பின்னர் பல்வேறு சட்ட கல்லூரிகளில் சிறப்பு பேராசிரியராகவும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வேந்தராகவும் அவர் பல்வேறு காலகட்டங்களில் பணியாற்றினார். பாரத சாரணர் இயக்கம், பாரத செங்சிலுவை சங்கம் ஆகியவற்றின் அகில இந்திய தலைவராகவும் அவர் பணியாற்றினார்.

ஆங்கிலம், உருது, ஹிந்தி, பாரசீகம், பிரெஞ்சு, வங்காள மொழி மற்றும் சமிஸ்க்ரித மொழிகளையும் அவர் அறிந்து இருந்தார். சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான ராய்ப்பூரில் அமைந்துள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகம் அவர் பெயராலே அமைந்துள்ளது.

தனது எண்பத்தி ஆறாம் வயதில் 1992ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் நாள் ஹிதயதுல்லா காலமானார். நாட்டின் சேவைக்கு வழிபாடு முறை தடையல்ல  என்பதற்கும், தலைமைப் பீடங்களை அலங்கரிக்க எல்லோருக்கும் இங்கே சம உரிமையும் வாய்ப்பும் இருக்கிறது என்பதற்கும் ஹிதயதுல்லாவின் வாழ்க்கையே ஒரு சரியான எடுத்துக்காட்டு. 

புதன், 17 செப்டம்பர், 2025

செப்டம்பர் 17 - நவபாரதத்தின் நாயகன் நரேந்திர மோதி பிறந்தநாள்

எப்போதெல்லாம் பாரத நாட்டின் பாதையை முழுவதுமாக மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் மிகப்பெரும் தலைவர்கள் பிறப்பார்கள். காலங்கள்தோறும் கவிஞர்களாக, தத்துவ ஞானிகளாக, ஆச்சாரிய புருஷர்களாக, மன்னர்களாக, மஹாவீரர்களாக அவர்கள் பிறந்துகொண்டேதான் இருக்கிறார்கள். அதுபோல நாட்டின் பாதையை முழுவதுமாக மாற்றி அமைத்துக்கொண்டு இருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோதியின் பிறந்தநாள்  இன்று.



மிக எளிய, எந்தவிதமான அரசியல் பின்புலமும் இல்லாத குடும்பத்தில் பிறந்து, மிகச் சிறுவயதிலேயே ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கத்தில் இணைந்து, பின்னர் நாடெங்கும் அலைந்து திரிந்து இந்த நாட்டின் இயல்பான நிலையை நேரில் பார்த்து அறிந்துகொண்டு, நெருக்கடி நிலை காலத்தில் சர்வாதிகாரத்திற்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றி, சங்கத்தின் ஆணைக்கிணங்க பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி, படிப்படியாக உயர்ந்து குஜராத் மாநில முதல்வராக, அதன் பின்னர் பிரதமராக, உலக தலைவர்கள் எல்லோரும் மதிக்கும் ஆளுமையாக விளங்கும் பிரதமரின் வாழ்க்கையை நாம் எல்லோருமே அறிவோம். ஆனால் எந்த விதத்தில் மோதி மற்ற பிரதமர்களிடம் இருந்து, மற்ற அரசியல் தலைவர்களிடம் இருந்து வேறுபடுகிறார் ?

பாரத நாட்டின் பெருவாரியான அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் மேற்கத்திய கண்ணோட்டத்தில்தான் நாட்டின் பிரச்சனைகளை நோக்குகிறார்கள். பல ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்ட நாட்டுக்கு சில பிரத்தியேகமான சவால்கள் இருக்கும், அதற்கான தீர்வுகளை நமது பாரம்பரிய வேர்களில் இருந்து தேடுவதுதான் சரியாக இருக்குமே அன்றி, இறக்குமதி செய்யப்பட்ட சித்தாந்தங்கள் நமக்கான தீர்வைத் தராது. இதனை முழுவதுமாகப் புரிந்தவர் மோதி. அதற்கு பல ஆண்டுகள் ஒரு சந்நியாசி போல இந்த நாட்டை அவர் அலைந்து திரிந்து தரிசனம் செய்த அனுபவம் கை கொடுக்கிறது.

அரசாங்கத்தின் கைகள் தொடாத பகுதிகள் நாட்டில் பல உண்டு, பல மக்களுக்கு அவர்கள் பாதுகாப்பாக வாழ, நிம்மதியாக வருமானம் ஈட்ட  அரசு வழிவகை செய்து கொடுத்தால் போதும், மற்றவற்றை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். அதை சரியாக கண்டு கொண்டதால்தான் மோதி அடிப்படை வசதிகளை மக்களுக்கு அளிக்கும் திட்டங்களில் கவனம் செலுத்தினார். அனைவருக்கும் வங்கி கணக்கு உருவாக்குதல், வீடுகள் தோறும் கழிப்பறை வசதி, நாட்டில் எல்லா பகுதிகளுக்கும் மின்சார வசதி, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு உருளைகள் என்று மக்களின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரும் திட்டங்களை உருவாக்கினார். மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு உருவானதால், பல்வேறு நலத்திட்டங்களில் பொதுமக்களுக்கான பங்கு நேரடியாக அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஊழல் மிகப்பெரும் அளவு குறைக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்களை மயக்கும் பேச்சுவன்மை இயல்பாகவே மோதிக்கு அமைந்துள்ளது. பொதுக்கூட்டங்களாக இருந்தாலும் சரி, அல்லது மனதின் குரல் என்று பிரதமர் நாட்டு மக்களோடு வானொலியில் உரையாற்றும் தொடர் நிகழ்ச்சிகளாகட்டும், மிக இயல்பாக மக்களோடு இணைந்து ஒரு மூத்த சகோதரன் பேசுவது போலதான் தோன்றும். உள்ளத்தில் உண்மை உண்டானதால் வாக்கில் ஒளி உருவாகி அது மற்றவர்களுக்கும் தெரிகிறது.

அதிகாரத்தின் நிழலில் தனது உறவினர்களை நெருங்க விடாதது, பல்லாண்டு காலம் அதிகாரத்தில் இருந்தாலும் ஊழல் குற்றச்சாட்டின் கறை படியாமல் இருப்பது, அதிகார வர்க்கத்தில் ஊழலை குறைத்தது என்ற எண்ணம் மக்களும் உண்டானதால் தான், பிரதமர் கேட்டுக்கொண்ட உடன் சமையல் எரிவாயு உருளைக்கான மானியத்தை விட்டுக் கொடுத்ததாகட்டும், அல்லது உயர் மதிப்பு பணத்தாள்கள் செல்லாது என்று அறிவித்த பின்னர், பெரும் கேள்வி இல்லாமல் வங்கிகளில் வரிசையில் நின்றதாகட்டும் என்று அவரின் பல்வேறு முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்.

மீண்டும் மீண்டும் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கும், அதன் பின்னர் தீவிரவாதத்தை கண்டிக்கிறோம், இது கோழைத்தனமான தாக்குதல் என்று அரசின் அறிக்கை வெளியாகும், இந்த சூழலில் இருந்து தீவிரவாத தாக்குதல்களை பெருமளவு கட்டுப்படுத்தியும், ஒன்றுக்கு பத்து என பதிலடி கொடுத்ததும் என்று நடைபெற்ற நடவடிக்கைகள் பெருவாரியான மக்களின் ஆதரவை பிரதமருக்கு அளித்துள்ளது.

உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதில், பல்வேறு அயல்நாடுகளோடு உறவுகளை சீர்படுத்துவதில், அதோடு ஏதாவது இந்திய குடிமகன் வெளிநாட்டில் பிரச்சனைக்கு உள்ளானால், அவனை காப்பாற்றுவதில் என்று பல்வேறு தளங்களில் அரசு செயல்பட்டுக்கொண்டு வருகிறது. வழக்கமாக சுதந்திரத்தினத்தன்று செங்கோட்டையில் கொடி ஏற்றி எழுதிக் கொடுத்த உரைகளை பிரதமர் படிப்பதுதான் வழக்கம். ஆனால் ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் பங்குதார் கூட்டத்தில் அந்த நிறுவனத்தின் தலைவர் அளிக்கும் உரை போல, சென்ற ஆண்டு என்ன இலக்குகளை வைத்தோம், அதில் எதனை அடைந்தோம், எதனை அடையவில்லை, இதனால் கிடைத்த படிப்பினை என்ன, அடுத்த ஆண்டு எதனை நோக்கி நமது பயணம் இருக்கும் என்று ஒரு தொழில்முறையான அறிக்கை போல சமர்ப்பிப்பது என்பது மோதி கொண்டுவந்த பெரும் மாறுதல்.

மீண்டும் மீண்டும் எதிர்க்கட்சிகளும், பத்திரிகைகளும் அவர் கூறியதை எல்லாம் திரித்துக் கூறினாலும், அவர் கொண்டு வந்தார் என்பதாலேயே எல்லாவற்றையும் எதிர்த்தாலும், தனது நேர்மறை சிந்தனையால், செயலூக்கத்தால் அதனை எல்லாம் தாண்டிச் செல்கிறார் மோதி.

இயல்பாகவே மக்களிடம் உள்ள தாய்நாட்டைப் பற்றிய பெருமித்தத்தைத் தூண்டி, நாடு முன்னேற உழைக்கும் பிரதமருக்கு, சங்கத்தின் மூத்த பிரச்சாரகருக்கு ஒரே இந்தியா தளம் தனது நல்வாழ்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

வாழ்க பல்லாண்டு 

செவ்வாய், 16 செப்டம்பர், 2025

செப்டம்பர் 16 - இசைப் பேரரசி எம் எஸ் சுப்புலக்ஷ்மி பிறந்ததினம்

உலகின் வெவ்வேறு காலகட்டங்களில் காலத்தைத் தாண்டி நிற்கும் விற்பன்னர்கள் தோன்றுவார்கள். அப்படி கடந்த நூற்றாண்டில் கர்நாடக இசை உலகின் ஒப்பற்ற நட்சத்திரமாகத் தோன்றியவர் திருமதி எம் எஸ் சுப்புலக்ஷ்மி அவர்கள்.



1916ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் நாள் மதுரையைச் சார்ந்த வழக்கறிஞர் சுப்ரமணிய ஐயருக்கும் ஷண்முகவடிவு என்ற வீணை கலைஞருக்கும் மகளாகப் பிறந்தவர் எம் எஸ். இவரது பாட்டி அக்கம்மாள் வயலின் வாத்தியக் கலைஞர். குஞ்சமா என்பது எம் எஸ் அவர்களை உறவினர்கள் செல்லமாக அழைக்கும் பெயர்.

குடும்பத்தில் இசை என்பது சுவாசமாக இருந்தது, அது எம் எஸ்ஸுக்கு இயல்பாக பரிமளித்தது. மிகச் சிறுவயதிலேயே எம் எஸ் இசை கச்சேரிகளை நடத்தத் தொடங்கினார். அப்போதுதான் உருவாகிவந்த கிராமபோன் ரெகார்டுகளும், வானொலியும் அவரது இசையை பட்டி தொட்டிகளில் எல்லாம் கொண்டு சேர்த்தது. வாய்ப்பாட்டு மட்டுமல்ல எம் எஸ் வீணை வாசிப்பதிலும், பரத நாட்டியத்தில் நிபுணத்துவதோடு விளங்கினார். ஆனால் காலம் அவரை வாய்ப்பாட்டு இசையின் மகாராணியாக காட்டியது.

தாயார் ஷண்முகவடிவே எம் எஸ்ஸின் முதல் குரு. பின்னர் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், சேத்தூர் சுந்தரேச பட்டர், கடையநல்லூர் வெங்கடராமன் ஆகியோர் இவருக்கு பயிற்சி அளித்தனர். உச்சநீதிமன்ற நீதிபதி டி எல் வெங்கட்ராம ஐயர், பாபநாசம் சிவன், மைசூர் வாசுதேவாச்சாரியார், பண்டிட் நாராயணராவ் வியாஸ் ஆகியோர் எம் எஸ்ஸுக்கு பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தனர்.

1938ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் கே சுப்பிரமணியனின் சேவாசதனம் என்ற படத்தில் எம் எஸ் நடித்தார். சிறு பெண்களை வயதானவர்கள் மணந்து கொள்வதை கண்டித்து இந்தப் படம் எடுக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர் சாவித்ரி என்ற படத்தில் ஆண் வேடமிட்டு நாரதர் வேடத்தில் நடித்தார். மீரா என்ற படத்தில் மீராவாக நடித்தார். இதில் வரும் காற்றினிலே வரும் கீதம் என்ற பாடல் இன்றும் பிரபலமாக உள்ளது.

சதாசிவத்தை மணந்து திரையுலகை விட்டு வெளியேறி இசையுலகில் மட்டும் பயணிக்க முடிவு செய்தார் எம் எஸ். அவரது இசை உலகை இசைய வைத்தது. தனது இசை நிகழ்ச்சிகள் மூலம் பெரும் பணத்தையும் புகழையும் சம்பாதித்தார் எம் எஸ். புகழ் அவரோடு தங்கியது, பணம் முழுவதையும் பல்வேறு சேவைப் பணிகளுக்கு அளித்தார்.

ராஜாஜி, டி.கே.சிதம்பரநாத முதலியார், ராஜா சர் அண்ணாமலை செட்டியர், கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.சே.சண்முகம் செட்டியர் ஆகியோர் ஆரம்பித்த தமிழ் இசை இயக்கத்திற்கு பக்க பலமாக இருந்தார். பாரதியார், சுத்தானந்த பாரதியார், வள்ளலார் பாடல்களைப் பாடினார்.

1944ல் நான்கு இசை நிகழ்ச்சிகளை நடத்தி 2 கோடி நிதி திரட்டி காந்தியடிகளிடம் “கஸ்தூரிபாய் அறக்கட்டளைக்கு” அளித்தார். அறிவியில் ஆராய்ச்சி கல்வி, மருத்துவம், மற்றும் சமயத் தொண்டு ஆகியவற்றிற்கு நிதி உதவி அளித்தார்.

 23.10.1966ல் ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். 100க்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். உலக அமைதியை வலியுறுத்தி ராஜாஜி எழுதிய மே தி லார்ட் பர்கிவ் என்ற பாடலையும், சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் மைத்ரீம் பஜத உலக நன்மை பிரார்த்தனை ஸ்லோகத்தையும் பாடினார்.

மேலும் லண்டன், நியூயார்க், கனடா, கிழக்கு நாடுகள் ஆகியவற்றிலும் இசைக் கச்சேரி செய்துள்ளார். 1975ல் திருப்பதி தேவஸ்தானம் எம்.எஸ்.பாடிய வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தை ஒலிபரப்பியது. மேலும் ஆஸ்தான பாடகியாகவும் அங்கீகரித்தது.

பஜகோவிந்தம், சுப்ரபாதம், குறையொன்றும் இல்லை, ரகுபதிராகவ ராஜாராம், வைஷ்ணவ ஜனதே ஆகியவை எம்.எஸ். பாடியவற்றில் சிகரத்தை தொட்டவை.

நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது. இது தவிர எண்ணற்ற பட்டங்களும் விருதுகளும் மரியாதைகளும் அவருக்கு அளிக்கப்பட்டன. அவரால் பட்டங்கள் பெருமை அடைந்தன என்பது தேய்வழக்காக இருந்தாலும் எம் எஸ் அவர்களைப் பொறுத்தவரை அதுதான் உண்மை.

வாழ்க்கையின் பெரும்பகுதியை தனது கணவரின் வழிகாட்டுதலிலேயே கழித்த எம் எஸ் திரு சதாசிவம் இறந்த பிறகு பாடுவதை நிறுத்திக் கொண்டார். இசைப் பேரரசி 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இசையோடு கலந்தார். ஆனால் மனதை உருக்கும் அவரது இசை இன்னும் பல்லாண்டுகாலம் வாழ்ந்துகொண்டு இருக்கும்.

திங்கள், 15 செப்டம்பர், 2025

செப்டம்பர் 15 - சமகால சாணக்யன் சுப்ரமணியம் ஸ்வாமி பிறந்தநாள்

புகழ்பெற்ற பொருளாதார நிபுணர், பல்வேறு பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் பணி, தேர்ந்த ராஜதந்திரி, ஐம்பதாண்டு கால பாரத அரசியலில் தவிர்க்க முடியாத மனிதர், பெரும்பலம் வாய்ந்த அரசியல்வாதிகளை சட்டத்தின் மூலம் செல்லாக் காசாக மாற்றிய சட்ட நிபுணர், உலகம் முழுவதும் பரந்து விரிந்த தொடர்புகளும் செல்வாக்கும் கொண்ட மனிதர்  என்று பல்வேறு ஆளுமைகளின் மொத்த உருவம் திரு சுப்ரமணியம் ஸ்வாமியின் பிறந்தநாள் இன்று.



மதுரையை அடுத்த சோழவந்தான் பகுதியை தனது ஆதாரமாகக் கொண்ட சீதாராம சுப்ரமணியம் - பத்மாவதி தம்பதியரின் மகனாக 1939ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பிறந்தவர் சுப்ரமணியம் சுவாமி.  சீதாராம சுப்ரமணியம் இந்திய புள்ளியியல் துறையில் பணியாற்றிக் கொண்டு இருந்தார். மத்திய புள்ளியியல் நிலையத்தின் இயக்குனராகவும், இந்திய அரசின் புள்ளியியல் ஆலோசகராகவும் அவர் பணியாற்றியதால், ஸ்வாமியின் குடும்பம் டெல்லியில் வசிக்க வேண்டி இருந்தது. டெல்லி ஹிந்து கல்லூரியில் கணித பட்டப் படிப்பையும் அதன் பின்னர் கொல்கத்தா நகரில் உள்ள இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனத்தில் புள்ளியியல் துறையில் முதுகலைப் பட்டத்தையும் சுவாமி முடித்தார்.

இதனைத் தொடர்ந்து தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சுவாமி தொடங்கினார். அவரின் வழிகாட்டியாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் சைமன் கூஸ்நட்ஸ் அமைந்தார். தனது இருபத்தி ஆறாம் வயதுக்குள் பொருளாதார முனைவர் பட்டத்தையும் அதோடு குறிப்பிடத்தக்க பொருளாதார மேதையாகவும் சுவாமி அடையாளம் காணப்பட்டார். நோபல் பரிசு பெற்ற மேதை பால் சாமுவேல்சன் என்பவரோடு இணைந்து ஸ்வாமி எழுதிய குறியீட்டு எண்கள் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள் ஸ்வாமியை உலகமெங்கும் பிரபலப்படுத்தியது.

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக தனது பயணத்தை சுவாமி தொடங்கினார். அமர்த்தியா சென்னின் அழைப்பை ஏற்று டெல்லி பொருளாதார நிறுவனத்தில் பணி புரிய சுவாமி பாரதம் திரும்பினார். ஆனால் அன்றய அரசின் சோசலிச பொருளாதார கொள்கைகளை அவர் விமர்சித்த காரணத்தால், அந்தப் பணி அவருக்கு மறுக்கப்பட்டது. அதனால் டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பொருளாதார கணித துறையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஆனாலும் இரண்டாண்டுகளில் அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ஸ்வாமி மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். போராட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு சுவாமி அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டார்.

சுப்ரமணியம் ஸ்வாமியை பதவி நீக்கம் செய்து , அவரை தீவிர அரசியலில் ஈடுபட வைத்த பெருமை அன்றய பிரதமர் இந்திரா காந்தியையே சாரும். முதலில் ஜெயப்ரகாஷ் நாராயணனோடு இணைந்து சர்வோதயா இயக்கத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்த ஸ்வாமி, பின்னர் பொதுவாழ்வில் ஊழலை ஒழிக்க ஜெ பி தொடங்கிய இயக்கத்தின் முக்கிய தலைவராக உருவானார். 1974ஆம் ஆண்டு ஜனசங்கம் அவரை உத்திர பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபைக்கு அனுப்பியது.

அந்தகாலத்தில்தான் இந்திரா நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. பல்வேறு தலைவர்கள் தலைமறைவாக சர்வாதிகாரத்தை எதிர்த்து போராட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தனர். ஸ்வாமியும் தலைமறைவானார். பாராளுமன்றம் நடந்து கொண்டு இருந்த ஒரு நாளில் பாராளுமண்டத்திற்கு ஸ்வாமி நுழைந்தார், உரிமை பிரச்சனை ஒன்றை கிளப்பி விட்டு மீண்டும் மாயமாக மறைந்தார். அப்போது காவல்துறைக்கு அவர் ஒரு தேடப்படும் குற்றவாளி. இந்த தடாலடி செயல் இரும்பு பெண்மணி என்று பெயர் பெற்ற இந்திரா காந்தியையே நிலைகுலைய வைத்தது.

1977 ஆம் ஆண்டு நெருக்கடி நிலைமை விலக்கிக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் இந்திரா தோல்வியுற்றார். மும்பை வட கிழக்கு பாராளுமன்ற தொகுதியில் இருந்து ஸ்வாமி மக்களவைக்கு தேர்வானார். 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இதே தொகுதியில் இருந்து அவர் தேர்வானார். 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் இருந்தும், 1988 ஆம் ஆண்டு முதல் 1994 வரை உத்திரப்பிரதேசத்தில் இருந்து ஜனதா கட்சி சார்பில் ராஜ்யசபைக்கும் அவர் தேர்வானார். சந்திரசேகரின் அமைச்சரவையில் சட்ட மற்றும் வர்த்தக துறைகளின் அமைச்சராகவும் அவர் பணியாற்றினார்.

அப்போது அவர் வடிவமைத்த கொள்கைகளின் அடிப்படையில்தான் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த நரசிம்மராவ் அரசு பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்தது. நெடுங்காலம் ஜனதா கட்சியை நடத்திக்கொண்டு இருந்த சுப்ரமணியம் சுவாமி 2013 ஆம் ஆண்டு தனது கட்சியை பாரதிய ஜனதா கட்சியோடு இணைத்தார். 2016 ஆம் ஆண்டு பாஜக அவரை ராஜ்யசபா உறுப்பினராக நியமித்தது.

தனது நீண்ட அரசியல் வாழ்வில் பல்வேறு ஊழல்களை, அதிகார துஷ்பிரயோகங்களை ஸ்வாமி வெளிக்கொண்டு வந்துள்ளார்.  ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகள், இரண்டாம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீடுகளில் நடைபெற்ற முறைகேடுகள், நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் பங்குகளை முறைகேடாக சோனியா காந்தியும் அவர் மகன் ராகுல் காந்தியும் அடைந்தது ஆகியவை ஸ்வாமி முன்னெடுத்த முக்கியமான வழக்குகளாகும்.

பாரத அரசியல் வானில் அவரை மதிக்கலாம், வெறுக்கலாம் ஆனால் புறம்தள்ள முடியாத ஆளுமையாக விளங்கும் திரு சுப்ரமணியம் ஸ்வாமியின் எண்பதாவது பிறந்தநாள் இன்று. தனது வாழ்க்கையையே பலருக்கு படிப்பினையாக அமைத்திருக்கும் திரு ஸ்வாமிக்கு ஒரே இந்தியா தளம் தனது வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறது. 

வியாழன், 11 செப்டம்பர், 2025

செப்டம்பர் 11 - சர்சங்கசாலக் மோகன் பகவத்ஜி பிறந்தநாள்

அந்த கனவின் விதை கருவானது ஏறத்தாழ தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால். எல்லா வளமும் எல்லா திறமையும் இருந்தும் ஏன் பாரதம் மீண்டும் மீண்டும் அந்நியர் கைகளில் சிக்குகிறது ? இந்த நிலை இன்னும் ஓர் முறை நிகழாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனையின் விளைவாகப் பிறந்தது ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கம். பெரும் சிந்தனாவாதிகளும், செயல் வீரர்களும் தங்கள் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்து நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்து தேசிய புனர்நிர்மாண சேவையில் தங்களை ஆட்படுத்திக் கொண்டனர். சிறு விதை இன்று ஆலமரமாக வளர்ந்து நாட்டையும் பெருவாரியான மாநிலங்களையும் தனது ஆளுமைக்குள் கொண்டுவந்துள்ளது. பெரும் வெற்றி இன்னும் மிகப் பெரும் பொறுப்புகளையும் கடமைகளையும் சவால்களையும் முன்வைக்கிறது. அப்படியான காலத்தில் சங்கத்தை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கும் சர்சங்கசாலக் மோகன் பகவத்ஜி அவர்களின் பிறந்தநாள் இன்று.



1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சந்திராபூர் நகரில் மதுகர் ராவ் பகவத் - மாலினி தேவி தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் மோகன் பகவத். மதுகர் ராவ் பகவத் சங்கத்தின் ஆரம்பகால பிரச்சாரக்களில் ஒருவர். குஜராத் மாநிலப் பொறுப்பாளராக அவர் பணியாற்றினார். தாயார் மாலினி தேவி ராஷ்டிரிய சேவிகா சமிதியின் உறுப்பினர்.

தனது ஆரம்ப கல்வியை லோகமானிய திலக் வித்யாலயாவில் முடித்த மோகன் பகவத், கால்நடை மருத்துவத்வ பட்டத்தை நாக்பூர் நகரில் உள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் பெற்றவர். முதுகலை படிப்பில் சேர்ந்த பகவத் அதனை பாதியில் நிறுத்தி விட்டு சங்கத்தின் முழுநேர உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.

1975ஆம் ஆண்டு அவர் சங்கத்தில் இணைந்த சிறிது காலத்தில் நாட்டில் நெருக்கடி நிலையை இந்திரா பிரகடனம் செய்தார். சங்கம் தடை செய்யப்பட்டது. மோகன்ஜி தலைமறைவானார். சர்வாதிகாரத்தை எதிர்த்த போராட்டத்தை சங்கம் முன்னெடுத்தது. அதில் மோகன்ஜி பெரும் பங்காற்றினார்.

படிப்படியாக சங்கத்தின் பல்வேறு பொறுப்புகள் மோகன்ஜியைத் தேடி வந்தது. சங்கத்தின் அகில பாரத ஷைரிக் பிரமுக் மற்றும் அகில பாரத பிரச்சாரக் பிரமுக் ஆகிய பொறுப்புகளை மோகன்ஜி திறம்பட நிர்வகித்தார்.

2000ஆம் ஆண்டு அன்றய சர்சங்கசாலக் ராஜேந்திர சிங்ஜி  மற்றும் சர்காரியவாக் சேஷாத்ரிஜி ஆகியோர் தங்கள் உடல்நிலை காரணமாக விலகிக்கொள்ள சுதர்ஷன்ஜி சர்சங்கசாலக்காகவும் மோகன் பகவத்ஜி சர்காரியாவாக்காகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்னர் 2009ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் நாள் மோகன் பகவத்ஜி ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் சர்சங்கசாலக்காக நியமிக்கப்பட்டார்.

மோகன்ஜியின் வழிகாட்டுதலில் பரிவார் அமைப்புகள் புதிய உற்சாகத்தோடு செயல்படத் தொடங்கின. தேசத்தின் புனர்நிர்மாணப் பணிகளில் புது உத்வேகம் ஏற்பட்டது. 2014ஆம் ஆண்டு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் தனிப் பெரும்பான்மை பெற்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. 2025 ஆம் ஆண்டு தனது நூறாவது ஆண்டைக் கொண்டாட இருக்கும் சங்கத்தை அடுத்த கட்ட சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இருக்குமாறு மோகன் பகவத்ஜி வழி நடத்திக்கொண்டு உள்ளார்.

மானனீய சர்சங்கசாலக் மோகன் பகவத்ஜி அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது மனப்பூர்வமான வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறது. 

திங்கள், 1 செப்டம்பர், 2025

செப்டம்பர் 1 - பக்தி வேதாந்த பிரபுபாத ஸ்வாமி அவதார தினம்

பாரதநாடு உலகுக்கு அளித்த சித்தாந்தங்களில் பக்தியை ப்ரேமையை முன்னிறுத்தும் கௌடிய வைஷ்ணவ சித்தாந்தம் முக்கியமான ஒன்றாகும். சைதன்ய மஹாப்ரபுவால் செழுமை செய்யப்பட்ட இந்த சித்தாந்தத்தை உலகமெங்கும் எடுத்துச் சென்றவர் பக்தி வேதாந்த பிரபுபாத ஸ்வாமிகள். கண்ணனின் திருநாமத்தைப் பாடியும், ஆடியும் பாகவத புராணத்தையும் பகவத்கீதையை படித்தும், அதன்படி வாழ்ந்தும் ஆண்டவனை அடையலாம் என்பதே கௌடிய வைஷ்ணவ சித்தாந்தம். ஹரே கிருஷ்ணா இயக்கம் என்னும் இஸ்கான் மூலம் இந்த சித்தாந்ததை பரப்பியவர் பிரபுபாத ஸ்வாமிகள். 



கொல்கத்தா நகரின் தெற்குப் பகுதியில் கௌர் மோகன் டே - ரஜினி டே தம்பதியரின் மகனாக 1896ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் நாள் அவதரித்தவர் பிரபுபாத ஸ்வாமிகள். இவரின் பெற்றோர்கள் இவருக்கு இட்ட பெயர் அபய் சரண் என்பதாகும். கண்ணனிடம் சரணந்ததால் பயமற்றவன் என்பது இந்தப் பெயரின் பொருள். இவர் பிறந்தது ஜன்மாஷ்டமிக்கு அடுத்த தினம். அது கண்ணனின் தந்தையான நந்தகோபாலனை சிறப்பிக்கும் நந்தோஸ்தவ தினம். எனவே இவருக்கு நந்துலால் என்ற பெயரும் உண்டு. 

கொல்கத்தா நகரில் உள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் ஆங்கிலம், பொருளாதாரம் மற்றும் தத்துவ துறையில் 1920 ஆம் ஆண்டு தேறிய அபய சரண், விடுதலைப் போராட்டத்தில் காந்தியின் அறைகூவலை ஏற்று தனது பட்டத்தை வாங்காமல் நிராகரித்தார். தனது 22 ஆம் வயதில் அபய சரண் ராதாராணி தேவி என்பவரை திருமணம் செய்துகொண்டார். 

1922 ஆம் ஆண்டில் அபய சரண் தனது குருவைக் கண்டடைந்தார். கௌடிய வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்த பக்திசித்தானந்த ஸரஸ்வதி என்பவர் அபய சரணின் ஆன்மீக குருவாக அமர்ந்து சித்தாந்த விளக்கங்களைப் போதித்தார். கௌடிய வைஷ்ணவ சித்தாந்தத்தைப் பரப்ப Back to Godhead என்ற மாதப் பத்திரிகையை அபய சரண் நடத்த ஆரம்பித்தார். 

1947 ஆம் ஆண்டு கௌடிய வைஷ்ணவ அறிஞர்கள் இவரது புலமையைப் பாராட்டி பக்தி வேதாந்த என்ற பட்டத்தினை அளித்தனர். கண்ணன் வளர்ந்த விருந்தாவன் கிராமத்தில் பல ஆண்டுகள் தங்கி பாகவத புராணத்தை மொழிபெயர்த்து அதற்கான விளக்கவுரையை எழுதி வெளியிட்டார்.  1959 ஆம் ஆண்டு பக்தி பிரஜ்ஞான கேசவ் என்பவர் அபய சரணுக்கு முறையாக சன்யாசம் வழங்கினார். அது முதல் அவர் பிரபுபாதா என்று அழைக்கப்பட்டார். 

1965 ஆம் ஆண்டு தனது குருவின் ஆணைக்கு இணங்கி பக்தி வேதாந்த பிரபுபாத ஸ்வாமிகள் கிருஷ்ணனின் வழியை உலகமெங்கும் பரப்புவதற்காக அமெரிக்காவிற்கு பயணமானார். கையில் பணமோ அல்லது ஆதரிப்பாரோ இல்லாமல் அவர் பாஸ்டன் நகரை வந்தடைந்தார். பூங்காக்களிலும் சிறிய கூட்டங்களிலும் அவர் கீதையின் வழியில் வாழ்வது பற்றி பேசத் தொடங்கினார். சிறிது சிறிதாக மக்கள் இந்திய ஞானத்தின்பால் ஈர்க்கப்பட்டார்கள். இஸ்கான் எனும் International Society for Krishna Consciousness என்ற அமைப்பு 1966 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் இஸ்கானின் கோவில்கள் நிறுவப்பட்டன. பின்னர் இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரத்திலும் இஸ்கான் இயக்கம் பரவியது. அன்று பிரபலமாக இருந்த பீட்டில்ஸ் இசைக்குழுவைச் சார்ந்தவர்கள் இஸ்கான் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார்கள். நாம சங்கீர்த்தனமும், ரத யாத்திரையும் மேற்கத்திய மக்களை ஆத்மா ஆனந்தமயமானது, கடமையை பலனின் மீது பற்றில்லாமல் செய்வதுதான் உன்னதமான வழி என்பதை உணர வைத்தது. 

கிருஷ்ண பக்தியை உலகமெங்கும் பரப்பும் பணியில் பிரபுபாத ஸ்வாமிகள் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து பதினான்கு முறை உலகை வலம் வந்தார். அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாநிலத்தில் புதிய விருந்தாவன் என்ற பகுதி அமைக்கப்பட்டது. ஏறத்தாழ ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பல்வேறு கோவில்கள், கல்வி நிலையங்கள், குடியிருப்பு பகுதிகள் என்று கிருஷ்ண பக்தியை இது பரப்பி வருகிறது. 



என்பதற்கும் மேலான புத்தகங்களை பிரபுபாத ஸ்வாமிகள் எழுதி உள்ளார். வேதங்கள், உபநிதடங்கள், பாகவத புராணம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதற்கான விளக்க உரைகளை அவர் எழுதினார். பகவத்கீதை - உண்மை உருவில் என்று அவர் எழுதிய கீதைக்கான உரை முக்கியமான ஒன்றாகும். இதுவரை எண்பது மொழிகளில் இந்த உரை மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. 

தனது 81 ஆம் வயதில் 1977 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் நாள் பக்தி வேதாந்த பிரபுபாத ஸ்வாமிகள் கண்ணனின் திருவடியை அடைந்தார். 

எத்தனையோ மகான்கள் இந்த மண்ணில், அவர்கள் அனைவர்க்கும் எங்கள் வணக்கங்கள்.